search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Spirituality"

    • சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோவில்.
    • முருகன் பாதமும், அருகில் சிவலிங்கமும் உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் சிவகிரி என்னும் ஊரில் உள்ள மலை மீது அமைந்திருக்கிறது, பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில். சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவிலின் மூலவராக 'பால சுப்பிரமணியர்' உள்ளார். உற்சவரின் திருநாமம், முத்துக்குமாரர் என்பதாகும். இவ்வாலய தீர்த்தமாக சரவணப் பொய்கை உள்ளது.

    சூரபத்மனை அழித்த பிறகு தெய்வானையை மணப்பதற்காக, முருகப்பெருமான் திருப்பரங்குன்றம் புறப்பட்டார். அப்போது முருகனை தரிசனம் செய்ய வேண்டி அகத்திய முனிவர் இந்த மலையில் தவம் செய்து கொண்டிருந்தார்.

    அவருக்கு தரிசனம் அளித்த முருகப்பெருமான், அகத்தியரின் விருப்பப் படியே இந்த மலை மீதும் வாசம் செய்தார். பின்னாளில் இம்மலை மீது ஆலயம் எழுப்பப்பட்டது. இங்கு பாலகராக முருகப்பெருமான் காட்சியளிக்கிறார்.

    எனவே இவர் 'பாலசுப்பிரமணியர்' என்று பெயர் பெற்றார். அகத்தியருக்கு முருகன் காட்சி தந்த இடத்தில் பாத மண்டபம் இருக்கிறது. இங்கு முருகன் பாதமும், அருகில் சிவலிங்கமும் உள்ளது.

    பாதகமான கிரக அம்சங்களை எதிர்கொள்பவர்கள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணத்திற்காக இங்கு வழிபாடு செய்கிறார்கள். பக்தர்கள் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர்.

    பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள், அந்த பிரச்சினைக்கு காரணமான கிரகத்திற்கு உரிய நாளில் இங்குள்ள முருகனை வழிபட்டு சென்றால், நல்ல பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


    இங்கு முருகப்பெருமான் தனது ஜடாமுடியையே, கிரீடம் போல சுருட்டி வைத்த கோலத்தில் காட்சி தருகிறார். இது முருகப்பெருமானின் அரிய வடிவம் ஆகும்.

    கிரகப் பிரச்சினை உள்ளவர்கள், ராசி சின்னங்களுடன் ஒரு உலோகத் துண்டை (தகடு), முருகப்பெருமானின் பாதத்தில் வைக்கிறார்கள். இதன்மூலம் பக்தர்களின் கிரக சம்பந்தமான பிரச்சனைகள் அகலும் என்பது ஐதீகம்.

    மலைகள் மற்றும் நீர் வளங்களால் சூழப்பட்ட இயற்கை எழில் மிகுந்ததாக, இந்த மலைக் கோவில் திகழ்கிறது. பாலசுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ள குன்று 'சக்தி மலை' என்று அழைக்கப்படுகிறது. இடதுபுறம் சிவன் மலை உள்ளது.

    சிவனுக்கும், சக்திக்கும் இடையில் சோமாஸ்கந்த வடிவத்தில் இங்குள்ள முருகன் காட்சி தருகிறார். முருகன் சன்னிதியின் வலதுபுறம் சுந்தரேஸ்வரரும், இடதுபுறம் அன்னை மீனாட்சியும் உள்ளனர்.

    பங்குனி பிரம்மோற்சவத்தில் உற்சவரான முத்துக்குமாரர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார். திருவிழாக் காலங்களில் மூன்று நாட்கள் மட்டுமே முருகப்பெருமானின் ஊர்வல தரிசனம் கிடைக்கும். மற்ற நாட்களில் கோவிலுக்குள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.

    இவ்வாலயத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, சண்டிகேஸ்வரி, பைரவர், நவக்கிரகங்கள், சனி பகவான், அஷ்டபுஜ துர்க்கை மற்றும் இடும்பன் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. முருகப்பெருமானின் கருவறை கோஷ்டத்தில் பிரம்மா மற்றும் சண்டிகேஸ்வரரின் எதிரே லிங்கோத்பவருக்கு தனிச் சன்னிதி உள்ளது.

    மலையின் நடுவில் காளி அன்னை சன்னிதி உள்ளது. காலையிலும், மாலையிலும் முதல் பூஜை இந்த காளியம்மனுக்குத்தான் செய்யப்படுகிறது. அதன் பிறகுதான் முருகப்பெருமானுக்கு வழிபாடு நடைபெறும்.

    பவுர்ணமி தினங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இக்கோவிலில் உள்ள முருகப்பெருமான் நவக்கிரக முருகனாக போற்றப்படுகிறார். இங்கு உள்ள விநாயகருக்கு 'அனுக்ஞை விநாயகர்' என்று பெயர்.


    பங்குனி பிரம்மோற்சவம், ஐப்பசியில் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், மாசி மகம் ஆகியவை இந்த கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழாக்கள் ஆகும். திருச்செந்தூர் கோவிலில் செய்யப்படும் முறைப்படியே, இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன.

    பொதுவாக கந்தசஷ்டி விழா 6 நாட்கள் நடைபெறும். ஆனால் இந்த ஆலயத்தில் 11 நாட்கள் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 11-வது நாளில் முருகப்பெருமானுக்கு முடிசூட்டு விழா நடைபெறும்.

    அப்போது அரியணையில் முருகனை அமரச் செய்து, தங்க கிரீடம் அணிவித்து, அரச அதிகாரத்தை குறிக்கும் செங்கோல் கொடுக்கப்படும். பின்னர் அரச அங்கியில் முருகன் வீதி உலா வருவார். இதனை 'பட்டினப் பிரவேசம்' என்று சொல்வார்கள்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    மதுரையில் இருந்து குற்றாலம் செல்லும் வழித்தடத்தில் 108 கி.மீ. தொலைவில் சிவகிரி உள்ளது. ராஜபாளையத்தில் இருந்தும் தென்காசிக்கு பேருந்து வசதி உள்ளது. அந்த பேருந்துகள் சிவகிரி வழியாகத்தான் செல்லும். சிவகிரி பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் கோவில் அமைந்துள்ளது.

    • பச்சைப் பட்டினி விரதம் கடந்த 9-ந் தேதி தொடங்கியது.
    • அம்மனே 28 நாட்கள் பச்சைப் பட்டினி விரதம் இருப்பது தனிச்சிறப்பு.

    திருச்சியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் காவிரியின் வடகரையில் அமைந்திருக்கிறது, சமயபுரம். பிரசித்திபெற்ற இந்த திருத்தலத்தில் சமயபுரம் மாரியம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    மகாவிஷ்ணு எடுத்த அவதாரத்தில் ஒன்று, கிருஷ்ண அவதாரம். இந்த அவதாரத்தின்போது தேவகியின் பிள்ளையாக கிருஷ்ணரும், யசோதையின் பிள்ளையாக மாயா தேவியும் பிறந்தனர். இறையருளால் அவர்கள் இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    தேவகியின் பிள்ளையை கொல்வதற்காக வந்த கம்சன், குழந்தையை தூக்க முயன்றபோது, அந்தக் குழந்தை தன் உண்மையான உருவத்தைக் காட்டி நின்றது. மகாசக்தியாக தோன்றிய அந்த அன்னையின் எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் இருந்தன.

    அந்த தேவியே 'மகாமாரி'. இந்த அன்னைதான் மக்களால் மாரியம்மனாக பூஜிக்கப்படுவதாக புராணம் சொல்கிறது.

    திருவரங்கம் அரங்கநாத சுவாமியின் திருக்கோவிலில் தான், சமயபுரம் மாரியம்மன் திருமேனி இருந்ததாம். அந்த அன்னை உக்கிரமாக இருந்ததால், அப்போது இருந்த ஜீயர் சுவாமிகள் அம்மனின் திருவுருவத்தை மற்றொரு இடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்தார்.


    திருவரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் இருந்து அன்னையின் திருமேனியை எடுத்துக் கொண்டு வடக்கு நோக்கிச் சென்றவர்கள், இளைப்பாறுவதற்காக திருமேனியை ஓரிடத்தில் வைத்தனர். அந்த இடம்தான், சமயபுரம் ஆகும்.

    பிறகு அதனை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து தற்போதுள்ள மாரியம்மன் கோவில் அமைந்துள்ள கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்து விட்டுச் சென்றனர்.

    அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டு அக்கம்பக்கத்தில் இருந்த கிராம மக்களைக் கூட்டிவந்து அதற்கு 'கண்ணனூர் மாரியம்மன்' என்று பெயரிட்டு வழிபடத் தொடங்கினர்.

    விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து, கண்ணனூரில் முகாமிட்டார். அப்போது மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோவில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்.

    அதன்படி அவர்கள் வெற்றிபெற்றதால், விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் 1706-ல் அம்மனுக்குத் தனியாக கோவில் அமைத்ததாக வரலாற்று சான்று கூறுகின்றன.

    சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோவில்தான், இன்று 'சமயபுரம் மாரியம்மன்' ஆலயமாக சிறப்புற்று விளங்குகிறது.


    ஆலய அமைப்பு

    இந்த ஆலயம், ஆகம விதிப்படியும், சிற்ப சாஸ்திரத்தின்படியும் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் முகப்பில் நீண்ட பெரு மண்டபம் உள்ளது. இதனை 'பார்வதி கல்யாண மண்டபம்' என்கிறார்கள்.

    மூன்று திருச்சுற்றுகளைக் கொண்டது இந்த ஆலயம். கிழக்கே சன்னிதித் தெருவில் விநாயகர் கோவிலும், தெற்கில் முருகன் கோவிலும், தேரோடும் வீதியின் வடக்கே மற்றொரு விநாயகர் கோவிலும் உள்ளன.

    மேற்கில் ராஜகோபால சுவாமி அருள்பாலிக்கிறார். இத்திருக்கோவிலின் தல விருட்சமாக வேப்ப மரம் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் இம்மரம், தற்போது திருக்காப்பு விண்ணப்பச் சீட்டை விண்ணப்பிக்கும் இடமாகத் திகழ்கிறது.

    இரண்டாம் திருச்சுற்றில் விநாயகர் சன்னிதி, நவராத்திரி மண்டபம், அபிஷேக அம்மன் சன்னிதி, யாகசாலை, தங்கரத மண்டபம் உள்ளன. இரண்டாம் திருச்சுற்று முடிவடைந்து உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம் காணப்படும்.

    அதைத் தொடர்ந்து மாவிளக்கு மண்டபம் இருக்கிறது. கருவறைக்குச் செல்லும் வாசலின் இருபுறமும் துவார சக்திகளின் சுதை சிற்பம் உள்ளன. வலதுபுறம் கருப்பண்ணசாமி சன்னிதி உள்ளது.

    கருவறைக்கும், மாவிளக்கு மண்டபத்துக்கும் இடைப்பட்ட பகுதிகள் மகா மண்டபம் மற்றும் அர்த்த மண்டபம் என்று அழைக்கப்படுகின்றன.

    கருவறையை சுற்றி ஒரு பிரகாரம் உள்ளது. இங்கே விமானத்தின் அதிஷ்டான பகுதியை ஒட்டி ஒரு தொட்டி அமைக்கப்பட்டு, அதில் நீர் நிரப்பப்பட்டுள்ளது. அம்மனின் உக்கிரத்தை தணிப்பதற்காகவும், அம்பாளின் கருவறை குளிர்ச்சியாக இருப்பதற்காகவும் இந்த தொட்டி அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

    கருவறையின் இடது புறம் உற்சவ அம்மனின் சன்னிதி உள்ளது. இத்திரு மேனிக்கு நாள்தோறும் சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த உற்சவ அம்மனுக்கு தினமும் 6 கால பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

    காலை 7.30 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு செய்யப்படும் அபிஷேக தீர்த்தம், வடக்குப் பிரகாரத்தில் பக்தர்கள் மீது தெளிக்கப்படுகிறது. இதனால் அம்மை நோய் கண்டவர்கள் மற்றும் உடல்நலக் குறைவு உள்ளவர்கள் நோயின் தாக்கத்தில் இருந்து விரைவில் நலம் பெறுவர் என்பது நம்பிக்கை.


    கருவறையில் சமயபுரம் மாரியம்மன் மாறுபட்ட கோலத்தில் அருள்கிறார். மூலவரின் திருவுருவம் மரத்தால் செய்யப்பட்டது. ஆனால் அதன்மேல் சுதை வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பது புதுமையான ஒன்று.

    தங்க ஜடா மகுடம், நெற்றியில் வைரப்பட்டை, வைர கம்மல், மூக்குத்தி, கண்களில் கருணை நிறைந்த பார்வையும் கொண்டிருக்கும் மாரியம்மன், தன்னுடைய இடது கரங்களில் கபாலம், மணி, வில், பாசம், வலது கரத்தில் கத்தி, சூலம், அம்பு மற்றும் உடுக்கை ஆகியவற்றை தாங்கியுள்ளார்.

    இடது காலை மடக்கி வைத்து, வலது காலை தொங்கவிட்ட நிலையில் சுகாசனத்தில் அமர்ந்து பக்தர்களின் குறைகளை நீக்கி அருள்கிறாள், இந்த மாரியம்மன்.

    இந்த ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா, பூச்சொரிதல், சித்திரை பெருந்திருவிழா, புரட்டாசியில் நவராத்திரி பெருவிழா ஆகியவை முக்கியமான திருவிழாக்கள் ஆகும். தை மாதத்தில் 11 நாட்கள் தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது.

    பத்தாம் திருநாளில் திருவரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இருந்து மாரியம்மன் சீர் பெறுதல் வைபவம் நடைபெறும். மாசி மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்குப் பூச்சொரிதல் நடைபெறுகிறது.

    மகிஷாசுரனை வதம் செய்த பாவம் தீரவும், தன் கோபம் அடங்கவும் தவம் செய்து, பச்சைப் பட்டினி விரதம் இருந்து சாந்த சொரூபியாக மாறிய மாரியம்மனுக்கான திருவிழா இது.

    வருடந்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை பக்தர்களுக்காக அம்மனே 28 நாட்கள் பச்சைப் பட்டினி விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தனிச்சிறப்பு ஆகும்.

    உலக மக்களின் நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது இருக்கவும், சகல சவுபாக்கியங்கள் கிடைக்கவும் இந்த பச்சைப்பட்டினி விரதம் இருக்கிறார், சமயபுரம் மாரியம்மன்.

    சமயபுரத்தில் வழக்கமாக அம்பாளுக்கு தினம் தோறும் 6 கால பூஜையில், 6 விதமான தளிகையும் நைவேத்தியமாக வைக்கப்படும். சமைத்த உணவுப் பொருட்களை தான் 'தளிகை' என்று சொல்வார்கள்.

    ஆனால் அம்மன் பச்சைப் பட்டினி விரதம் இருக்கும் 28 நாட்களும், அம்பாளுக்கு சமைத்த உணவுகள் எதுவும் படைக்கப்படாது. இந்த 28 நாட்களிலும் இளநீர், பானகம், உப்பில்லாத நீர்மோர், துள்ளுமாவு, கரும்பு, பழ வகைகள் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.

    இந்த ஆண்டுக்கான பச்சைப் பட்டினி விரதம் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. இந்த விரதம் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி வரை உள்ளது. இந்த இடைப்பட்ட நாளில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடை பெறும்.

    • 20-ந்தேதி சஷ்டி விரதம்.
    • இன்று திருப்பரங்குன்றம் ஆண்டவர் திருக்கல்யாணம்.

    18-ந்தேதி (செவ்வாய்)

    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் திருக்கல்யாணம்.

    * மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி உற்சவம் ஆரம்பம்.

    * காங்கேயம் முருகப்பெருமான் லட்சதீபக் காட்சி.

    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி பிரபையிலும் தாயாருடன் புறப்பாடு.

    * சமநோக்கு நாள்.

    19-ந்தேதி (புதன்)

    * நத்தம் மாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா, புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்,

    20-ந்தேதி (வியாழன்)

    * சஷ்டி விரதம்.

    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் பவனி.

    * திருவாரூர் தியாகராஜர் பவனி.

    * சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.

    * சமநோக்கு நாள்.

    21-ந்தேதி (வெள்ளி)

    * திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் காலை சிம்ம வாகனத்திலும், இரவு சேஷ வாகனத்திலும் பவனி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

    * சமநோக்கு நாள்.

    22-ந்தேதி (சனி)

    * திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.

    * காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், திருவரங்கம் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்,

    * கீழ்நோக்கு நாள்.

    23-ந்தேதி (ஞாயிறு)

    * மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி கண்ட பேரண்ட பட்சி ராஜ அலங்காரம்.

    * திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் பூந்தேரில் பவனி.

    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை சூர்ணாபிஷேகம், இரவு சுவாமி புன்னை மரம், தாயார் அலங்காரப்படி சட்டத்தில் பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    24-ந்தேதி (திங்கள்)

    * திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் வண்டலூர் சப்பரத்திலும், இரவு தங்க குதிரை வாகனத்திலும் பவனி.

    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலையில் வெண்ணெய்த்தாழி சேவை.

    * மேல்நோக்கு நாள்.

    • சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
    • நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பொங்கல் பெருவிழா மாலை பூக்குழி விழா.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு பங்குனி-4 (செவ்வாய்க் கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தி இரவு 8.40 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம்: சுவாதி மாலை 4.32 மணி வரை பிறகு விசாகம்

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். காங்கேயம் ஸ்ரீ முருகப் பெருமான் லட்ச தீபக்காட்சி. நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பொங்கல் பெருவிழா மாலை பூக்குழி விழா. திருவாரூர் தியாகேசர் பவனி. மன்னார்குடி ஸ்ரீ ராஜகேபால சுவாமி உற்சவம் ஆரம்பம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. காரைக்கால் அம்மையார் குரு பூஜை. ஆறுமுக மங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநா யகர் காலை சிறப்பு அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்த நாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன் றத்தூர், கந்தகோட்டம் கோவில்களில் சிறப்பு அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். திருமாலி ருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-ஆசை

    மிதுனம்-தனம்

    கடகம்-பக்தி

    சிம்மம்-இரக்கம்

    கன்னி-கண்ணியம்

    துலாம்- முயற்சி

    விருச்சிகம்-உயர்வு

    தனுசு- உண்மை

    மகரம்-சாந்தம்

    கும்பம்-பரிசு

    மீனம்-நலம்

    • ஒப்பிலியப்பன் கோவில் 108 திவ்ய தேச தலங்களில் ஒன்றாகும்.
    • பங்குனி பெருவிழா 12 நாட்கள் சிறப்பாக நடை பெறுவது வழக்கம்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் 108 திவ்ய தேச தலங்களில் ஒன்றாகும். இத்தலம் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட கோவிலாகும்.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி பெருவிழா 12 நாட்கள் சிறப்பாக நடை பெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.


    முன்னதாக உற்சவர் பூமாதேவி உடனாய பொன்னப்பர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

    தொடர்ந்து, கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பட்டாட்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கருடாழ்வார் சின்னம் வரையப்பெற்ற கொடி ஏற்றப்பட்டது.

    இதனை யொட்டி மூலவர் ஒப்பிலியப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்-தாயார் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெறும்.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 25-ந்தேதியும், தொடர்ந்து, அஹோராத்ர புஷ்கரணியில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், உற்சவர் திருமஞ்சனம், அன்னப் பெரும்படையல், புஷ்பயாகம், விடையாற்றி புறப்பாடுடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    • சிவபெருமான் அக்னி குளத்திலே குளித்தார்.
    • சிவனார் இங்கு வந்து தங்கிய இரவு தான் மகாசிவராத்திரி

    சிவபெருமானுக்கும் பிரம்மாவிற்கும் ஏற்பட்ட சண்டையில் பிரம்மாவின் சிரசு சிவனின் கையிலே கபாலமாக மாறியது. அதை ஏந்திய நிலையில் பித்து பிடித்தவராக கிளம்பி அகிலமெல்லாம் அலைந்து திரிந்தார் சிவபெருமான்.

    கபாலம் நீங்காத நிலையில் உள்ள சிவபெருமான் தண்டகாருண்யம் வழியாக செஞ்சி மாநகர் வந்து சேர்ந்தார். செஞ்சியிலே உள்ள மக்கள் கபாலம் நீங்க சங்கரனுக்கு 32 வித அபிஷேகங்களெல்லாம் செய்தார்கள். அப்போதும் அது நீங்கவில்லை.

    அந்த அபிஷேக நீர் சென்றதை தான் சங்கராபரணி ஆறு என்று சொல்லுகின்றார்கள். செஞ்சியிலே உள்ள மக்கள் பலரும் தாங்கள் மலையனூர் சென்றால் கையிலே உள்ள கபாலம் நீங்கி விடும் என்று சொல்ல, அதை கேட்ட சிவபெருமான் அப்போதே மலையனூர் செல்ல வேண்டும் என்ற ஆர்வ மிகுதியால் உடனே மலையனூருக்கு வந்து சேர்ந்தார்.


    சிவபெருமான் அக்னி குளத்திலே குளித்தார். சிலநாட்கள் இங்கே தங்கியிருந்தால் தமது உடல்நிலை நன்றாகும் என்று நினைத்தார். மேலும் இங்கே நடப்பதை பார்க்கும் போது பலவகையிலே நம்பிக்கை ஏற்பட்டது. பிறகு பிச்சை எடுத்தார். அதை கபாலம் சாப்பிட்டது. சுடலைக்கு சென்று சாம்பலை உண்டார். அவருடைய பசியும் தீர்ந்தது.

    சிவனாரின் கண்ணுக்கு மட்டும் தெரியும்படி மாயவன் மாய மாளிகை ஒன்றை ஏற்படுத்தினார். மாளிகையை கண்ட சிவபெருமான் அங்கே போய் உறங்கலாமே என்று எண்ணி, மாளிகையின் வாசலிலே போய் நின்று, ''அம்மணி! பிச்சை! பர்வதா! பிச்சை! அன்னதாய்! அம்மணி!'' என்று பலமுறை குரல் கொடுத்தார்.

    அந்த குரல் கேட்டவுடன் பார்வதி தேவியார் துடித்து போனார். வந்திருப்பது தன் கணவர் என்று தெரிந்து கொண்டார். பிறகு வெளியே வந்து பார்த்தார். ''சுவாமி! சற்று பொறுங்கள் நான் கொடுக்கன் குப்பம் சென்று இப்போது தான் வந்தேன். உடனே சமையல் செய்து போடுகிறேன். சற்று அமருங்கள்!'' என்று சொல்லி வடக்கு வாயிற்படியில் திண்ணையிலே அமரச் செய்தார். அவரும் திண்ணையிலே போய் அமர்ந்தார்.

    உள்ளே சென்ற பார்வதி தேவியார் பிறகு விநாயகரை அழைத்து, ''மகனே! நீ இவரை கவனமாக நின்று பார்த்துக் கொள்ள வேண்டும். இவர் மனநிலை சரியில்லாத நிலையில் இருக்கிறார். நீ உட்கார்ந்திருந்தால் உறங்கிவிடுவாய். அதனால் உனக்கு நிற்க சக்தி கொடுக்கிறேன். நீ நின்று காவல் செய்!'' என்றாள். விநாயகரும் காவல்காத்து நின்றார். அவர் தான் வடக்கு வாயிற்படி மேற்புறம் நிற்கும் சக்தி விநாயகர்.


    திண்ணையிலே அமர்ந்திருக்கும் சிவனாருக்கு உறக்கம் வந்தது. அமர்ந்திருந்த திண்ணையிலே படுத்துறங்கிவிட்டார்.

    சிவனார் இங்கு வந்து தங்கிய இரவு தான் மகாசிவராத்திரி என்று எல்லோராலும் கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் சிறிது நேரம் உறங்கிவிட்டு தாகம் எடுக்க நீர் வேண்டி மயானத்திற்கு சென்றார்.

    உள்ளே சென்ற பார்வதி தேவியார் ஆபத்சகாயரான விஷ்ணுவையும் லட்சுமியையும் இப்பொழுது வரவேண்டும் என்று வேண்டினாள். எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று கூப்பிடுவதால் கோபாலனையே, இங்கே விநாயகர் பெருமானாக அமர்த்தியுள்ளார். அவர்தான் மேற்கு வாயிற்படியில் வடபுறம் அமர்ந்திருக்கும் கோபால விநாயகராவார்.

    பார்வதி தேவியார் அழைப்பை ஏற்று விஷ்ணுவும் லட்சுமியும் உடனே வந்தார்கள். அவர்களிடம் அன்னையார், ''என் கணவன் கையிலிருக்கும் சுபாலம் நீங்க சீக்கிரம் ஒருவழி சொல்லுங்கள்'' என்றார்.

    இதற்கு பகவான் விஷ்ணு, ''பார்வதி மகாலட்சுமியிடத்திலே உள்ள அட்சய பாத்திரத்தின் உதவியால் அறுசுவை உணவுகளை தயார் செய்து அந்த பிரம்ம கபாலத்திற்கு போடவேண்டும். அப்படி போடும்போது, உணவுகளை மூன்று உருண்டைகளாகச் செய்து, முதல் இரண்டு உருண்டைகளை கபாலத்திலே போட வேண்டும். மூன்றாவது உருண்டையை இறைக்க வேண்டும். மற்றவைகளை நான் சொல்வது போல நீ செய்ய வேண்டும் என்றார்.

    உடனே அட்சய பாத்திரத்தின் உதவியால் அறுசுவை உணவுகள் தயார் செய்யப்பட்டது. அவற்றை எடுத்துக் கொண்டு கிழக்குவாசல் வழியாக காவல் தெய்வமான பாவாடைராயன் வீரபத்திரனுடன் பார்வதி அமாவாசை இரவு நடுநிசியிலே சென்றாள். அவர்களை பாதுகாக்க விஷ்ணுவும் உடன் சென்றார்.


    சிவனார் மயானத்திலே எலும்புகளை கடித்து நீர் உறிஞ்சிக் கொண்டிருந்தார். அந்த இடத்திற்கு பார்வதி தேவியார் வந்து சேர்ந்தார். சிவனாரின் கையிலே உள்ள கபாலத்திற்கு முதல் உணவு உருண்டையை போட்டார். கபாலம் பசிமிகுதியால் சாப்பிட்டது. இரண்டாவது உணவு உருண்டையை போட்டார். அதையும் ருசிமிகுதியால் சாப்பிட்டது.

    விஷ்ணுவின் ஆலோசனைப்படி 3-வது உருண்டையை போடுவது போல பாவனை செய்தாள் பிரம்ம கபாலம் அதை சாப்பிட ஏங்கி நின்றது. அது ஏங்கி நிற்பதை பார்வதி பார்த்து விட்டாள். போடுவது போல பாவனை செய்து தூக்கி இறைத்தாள்.

    ருசி மிகுதியாக இருக்கவே கபாலம் பிரம்மன் கொடுத்த சாபத்தையும் மறந்து சிவபெருமானை விட்டுவிட்டு உணவுகளை பொறுக்கித் தின்றது. இந்த நிகழ்ச்சியைத்தான் அகிலமெங்கும் மயானசூறை என்று கொண்டாடுகிறார்கள்.

    • அன்னைக்கு மேல்மலையனூர் ஆலயமே தலைமை ஆலயமாகும்.
    • மூலவர் சுயம்பு புற்று மண்ணால் உருவானவள்.

    1. அங்காளபரமேஸ்வரிக்கு நாட்டின் பல இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன என்றாலும், அன்னைக்கு மேல்மலையனூர் ஆலயமே தலைமை ஆலயமாகும்.

    2. மூலவர் சுயம்பு புற்று மண்ணால் உருவானவள். அங்காளம்மன் 4 திருக்கரங்களுடன் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறாள்.

    3.நான்கு கரங்களில் உடுக்கை, சூலம், கிண்ணம், கத்தி உள்ளது. தலைக்கு பின்னால் தீப்பிழம்பு உள்ளது.

    4. இடது காலை மடித்து, வலது காலை தொங்கவிட்டு, காலுக்கு அடியில் கபாலம் உள்ளது. ஐந்து தலை நாகத்தின் கீழ் அன்னை அருளாட்சி புரிகிறாள்.

    5. கோவிலுக்கு 4 நுழைவு வாயில்கள் உள்ளன. பக்தர்கள் வடக்கு நுழை வாயிலை பிரதான நுழைவு வாயிலாக பயன்படுத்தி வருகின்றனர்.


    6. கோபால விநாயகர் தென்பகுதியில் அமைந்துள்ள பெரியாயி சன்னதி கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சுடுகாடு மற்றும் ஏரிக்ரையில் அமர்ந்துள்ள துர்கையம்மன் ஆலயம் போன்றவைகளாகும்.

    7. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே அங்காளம்மன் புற்றாக அமர்ந்ததாக நம்பப்படுகிறது. இப்புற்றானது அளவில் பெரியதாக உள்ளது.

    8. இக்கோவிலில் இரண்டுகால பூஜை நடைபெறுகிறது. அப்படி நடைபெறும் போது அவ்வபோது இப்புற்றில் அம்மன் வடிவமாக நாகத்தை பலர் பார்த்ததாக சொல்லப்படுகிறது.

    9. பூஜையின் போது சக்தி வாய்ந்த புற்று மண்னை பூஜை தண்ணீரில் கலந்து பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள்.

    10. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பூஜையில் கலந்துக் கொண்டு புற்றுமண் கலந்த நீரை அருந்தினால் புத்திரபாக்கியம் கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.

    11. கோவிலின் தெற்கு பகுதியில் மல்லாந்து படுத்து பெரிய உருவமாக பெரியாயி அருள் புரிகிறாள்.

    12. பெரியாயி அம்மனை வழிபடும் பக்தர்களுக்கு தீய சக்திகள் விலகுவதுடன் வேண்டியது கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    13. சிவபெருமானுக்கே பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கிய இடமாக கருதப்படும் சுடுகாடானது மயானக் கொள்ளை நடைபெறும் பகுதியாகும்.

    14. இந்த இடத்தில் வழிபடும் பக்தர்களுக்கு பிடித்திருக்கும் அனைத்து பிணிகளும் நீங்கி அம்மன் அருளால் நலம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.


    15. அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும். பவுர்ணமி தினங்களில் ஆலயம் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்படுகிறது.

    16. சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. அம்மனை குலதெய்வமாக வழிபடுவோர், பொங்கல் வைத்து படையலிட்டு வேண்டுகின்றனர்.

    17.வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் கோவில் உட்பிரகாரத்தில் ஆடு மாடு மற்றும் கோழிகளை வடக்கு வாசலில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் சுற்றி விடப்படுகிறது.

    18.ஆண்டுதோறும் திருவிழாவில் புதிய தேரில் அன்னையை அமர வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள்.

    19.எங்கெல்லாம் அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளதோ அங்கெல்லாம் மயானக் கொள்ளை விழா வெகு சிறப்பாக நடைபெறும்.

    20. மாசி மாதம் மயானக் கொள்ளை திருவிழா பெரிய அளவில் நடக்கும். பக்தர்கள் தானியங்களைக் கொண்டு வந்து உணவு சமைத்து அம்மனுக்கு அர்ப்பணிக்கின்றார்கள்.


    21. மயானத்தில் அன்னையை ஆராதிக்கின்றார்கள், பலர் சாமி ஆடிக்கொண்டே செல்வார்கள். காண்போர் வியக்கும் வண்ணம் பூஜை செய்கிறார்கள்.

    22.இதனால் ஏவல், பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகள் விலகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாது நம்பிக்கையாக உள்ளது.

    • இன்று சங்கடஹர சதுர்த்தி. சுபமுகூர்த்த தினம்.
    • திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு பங்குனி-3 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திருதியை இரவு 6.38 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: சித்திரை நண்பகல் 2 மணி வரை பிறகு சுவாதி

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சங்கடஹர சதுர்த்தி. சுபமுகூர்த்த தினம். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருச்சி உச்சிப்பிள்ளையார் ஸ்ரீ மாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீ முக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீ வெயிலு கந்த விநாயகப் பெருமான் கோவில்களில் காலை ஹோமம், அபிஷேகம், வழிபாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நட்பு

    ரிஷபம்-பொறுமை

    மிதுனம்-அன்பு

    கடகம்-உதவி

    சிம்மம்-உவகை

    கன்னி-பதவி

    துலாம்- ஆதாயம்

    விருச்சிகம்-பரிசு

    தனுசு- இன்பம்

    மகரம்-ஆர்வம்

    கும்பம்-கடமை

    மீனம்-பயணம்

    • பக்தர்கள் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • இன்று கோவில் வளாகத்தில் ஏராளமான திருமணங்கள் நடந்தது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.

    இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இன்று விடுமுறை தினம் மற்றும் சுப முகூர்த்த நாள் என்பதால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மட்டுமல்லாது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (ஞாயிற்றுக் கிழமை) கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சி கால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    சுப முகூர்த்தம் நாள் என்பதால் இன்று கோவில் வளாகத்தில் ஏராளமான திருமணங்கள் நடந்தது.

    இன்று காலை 9.15 மணிக்கு திடீரென சாரல் மழை பெய்தது. பக்தர்கள் சாரல் மழையில் நனைந்தவாறு கடலில் புனித நீராடினர்.

    • சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன அலங்கார சேவை.
    • திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு பங்குனி-2 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவிதியை மாலை 4.35 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம்: அஸ்தம் காலை 11.27 மணி வரை பிறகு சித்திரை

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த நாள். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன அலங்கார சேவை. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு. நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பால்குடக் காட்சி. வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் பவனி. காரமடை ஸ்ரீ அரங்கநாதர் வசந்த உற்சவம். திருவாரூர் ஸ்ரீ தியாகராஜப் பெருமானுக்கு உற்சவம் ஆரம்பம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி யம்மன் ஊஞ்சலில் காட்சி. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீவாஞ்சியநாத சுவாமிக்கு அபிஷேகம். சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-பெருமை

    மிதுனம்-ஆதரவு

    கடகம்-நட்பு

    சிம்மம்-உதவி

    கன்னி-பாராட்டு

    துலாம்- அன்பு

    விருச்சிகம்-பக்தி

    தனுசு- போட்டி

    மகரம்-தெளிவு

    கும்பம்-உவகை

    மீனம்-ஆக்கம்

    • இன்று பவுர்ணமி. ஹோலிப் பண்டிகை.
    • ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-29 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சதுர்த்தசி காலை 11.39 மணி வரை பிறகு பவுர்ணமி

    நட்சத்திரம்: பூரம் (முழுவதும்)

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று பவுர்ணமி. ஹோலிப் பண்டிகை. சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கஜேந்திர மோட்சம். திருவொற்றியூர் ஸ்ரீ சிவபெருமான் மகிழடி சேவை. குடந்தை ஸ்ரீ சக்கரபாணி ஸப்தாவர்ணம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பாடு. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் திருமலைராஜன் பட்டிணம் எழுந்தருளல். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திரு மஞ்சன சேவை. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பரிசு

    ரிஷபம்-சுபம்

    மிதுனம்-மேன்மை

    கடகம்-நற்செயல்

    சிம்மம்-தனம்

    கன்னி-உழைப்பு

    துலாம்- உழைப்பு

    விருச்சிகம்-நலம்

    தனுசு- பெருமை

    மகரம்-நன்மை

    கும்பம்-வாழ்வு

    மீனம்-பயணம்

    • தேர் எட்டு ரத வீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது.
    • 11-ம் திருவிழாவான நாளை தெப்ப உற்சவம் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் மாசி பெரும் திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்கள் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் திருவிழா அன்று குடவருவாயில் தீபாராதனை நடந்தது. 7-ம் திருவிழா அன்று சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் ஏற்றத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    8-ம்திருவிழா அன்று காலையில் சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா, மதியம் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடந்தது.


    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. முதலில் விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு எட்டு ரதவீதிகளில் சுற்றி வந்து நிலையம் சேர்ந்தது. பின்னர் பெரிய தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

    தேரை மாலைமுரசு நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் மாலைமுரசு நிர்வாக இயக்குநர் கதிரேசன் ஆதித்தன், தலைமை நீதித்துறை நடுவர் வசித்குமார்,திருச்செந்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி, திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் வரதராஜன், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோவில் தக்கார் கருத்தப்பாண்டி நாடார், தமிழ்நாடு வணிகர் சங்க மாநில தலைவர் காமராசு நாடார், திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் ரமேஷ், தி.மு.க. விவசாய அணி மாநில துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் திருப்பதி மற்றும் குமரேச ஆதித்தன், ரெங்கநாத ஆதித்தன், டாக்டர் பால சுப்பிரமணிய ஆதித்தன், சிவநேச ஆதித்தன், முருகன் ஆதித்தன், ராஜன் ஆதித்தன், ராஜேந்திர ஆதித்தன், சிவபாலன் ஆதித்தன், சுப்பிரமணிய ஆதித்தன், சரவண ஆதித்தன், ஜெயந்திர ஆதித்தன், ராதாகிருஷ்ணன் ஆதித்தன், தங்கேச ஆதித்தன், ராமானந்த ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், பகவதி ஆதித்தன், சண்முகானந்த ஆதித்தன், குமாரர் ராமசாமி ஆதித்தன், சேகர் ஆதித்தன், எஸ்.எஸ்.ஆதித்தன், எஸ்.ஆர்.எஸ். சபேச ஆதித்தன், ஹெக்கேவார் ஆதித்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தேர் எட்டு ரத வீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது. பின்னர் தெய்வானை அம்பாள் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு எட்டு ரத வீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பியது விண்ணை பிளந்தது.


    11-ம்திருவிழாவான நாளை (வியாழக்கிழமை) தெப்ப உற்சவம் நடக்கிறது. நாளை இரவு 10 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    12-ம்திருவிழாவான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சுவாமி மஞ்சள் நீராட்டு கோலத்துடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் திருவிழா மண்டபம் வந்து அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் ஆகி சுவாமி,அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

    ×