search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special articles"

    • ஞானம் அடைவதற்கு நிறையத் தோன்றும் கேள்விகளும்கூடப் படிக்கட்டுகள் ஆகலாம்.
    • நன்றின்பால் வாழ்க்கையைச் செலுத்தி உய்வடையச் செய்யும்.

    ஞானத்தின் தன்மைகள் அறிய அறிவுத் தாகத்தோடு காத்திருக்கும் அன்பின் வாசகர்களே! வணக்கம்!.

    ஞானம் என்பது நாம் அன்றாடம் வாசிப்புக்களாலும், ஆலோசனைகளாலும், ஆராய்ச்சிகளாலும் பெறுகிற அறிவுக்குச் சற்றுக் கூடிய நிலை ஆகும். இதனைப் 'பேரறிவு' என்று தூய தமிழில் கூறலாம். 'மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்று வள்ளுவப் பெருந்தகை வலியுறுத்திக் குறிப்பிடும் 'அறிவு' இந்த ஞான நிலையையே ஆகும். "யார் சொன்னார்கள் என்பதை வைத்தோ, அல்லது சொல்லப்படும் பொருளின் தரத்தை வைத்தோ பொத்தாம் பொதுவாக ஒரு முடிவுக்கு வந்து விடாதே!; எதை யார் சொன்னாலும் உன்னிடமுள்ள உண்மை அறிவுகொண்டு, அதாவது சொந்த அறிவுகொண்டு ஆழ்ந்திருக்கும் மெய்ப்பொருளைக் காண முற்படு!" என்பதே வள்ளுவப் பெருமகனார் பயன்படுத்த வற்புறுத்தும் 'ஞான நிலை' ஆகும்.

    ஞானம் என்பது அன்றாட அறிவுக்கும் மேம்பட்ட 'பேரறிவு நிலை' என்றால், அதனைக் கைவரப்பெறுவதற்கு அறிவின் முதிர்ந்த முயற்சிகளில் ஈடுபட வேண்டுமோ? என்று சிலருக்கு ஐயம் வரலாம். ஞானம் என்பது ஞானியருக்கு மட்டுமே வசப்படுகிற சங்கதி; அதனைப் பெறுவதற்குத் துறவு நிலையை மேற்கொள்ள வேண்டுமோ? அல்லது காடு மலைகளுக்குச் சென்று துறவிகளைச் சந்தித்து அவர்களிடம் ஞானம் கற்றுவர வேண்டுமோ? என்றெல்லாம்கூடக் கேள்விகள் தோன்றலாம். ஞானம் அடைவதற்கு நிறையத் தோன்றும் கேள்விகளும்கூடப் படிக்கட்டுகள் ஆகலாம்.

    ஞானம் என்பது, இவருக்கு வரும்!; இவருக்கு வராது! என்கிற இன வர்ண பேதங்கள் கிடையாது; இந்த வயதில்தான் வரும்!; இந்தப் படிப்பில் தான் வரும் என்கிற காலக் கட்டாயங்களும் கிடையாது; இளம் வயதிலேயே பக்திஞானம் முற்றப்பெற்ற திருஞானசம்பந்தரும் நம் வரலாற்றில் உண்டு; அவரது காலத்திலேயே, பழுத்த வயதில் தொண்டு செய்து ஞானம் அடைந்த திருநாவுக்கரசு பெருமானின் வரலாறும் நமக்குத் தெரியும்.. ஞானம் என்பது ஒருவரிடமுள்ள அறிவும் அனுபவமும் ஒருங்கிணைந்து உளவியலில் ஏற்படுத்துகின்ற உன்னத நிலை ஆகும். அந்த அறிவும் அனுபவமும் சொந்த நிலையில் பெற்றவையாக இருக்கலாம்; அல்லது காண்பன, கற்பன வாயிலாகப் பெற்றவையாகவும் இருக்கலாம். எல்லாருக்கும் அறிவிருக்கலாம்; எல்லாருக்கும் அனுபவமும் இருக்கலாம்; ஆயினும் எல்லாரும் ஞானி ஆகிவிட முடியாது. பெற்றுள்ள அறிவையும் அனுபவத்தையும் கொண்டு அவற்றை வாழ்வியலில் எப்படிக் கடைப்பிடித்துக் கையாளுகிறோம் என்பதைப்பொறுத்தே ஞானம் வெளிப்பட்டு நிற்கும். பாலில் இருந்து நெய் எடுப்பதுபோல இதற்குப் பக்குவப் படிநிலைகள் உண்டு.

    வாழ்வில் பலதுறைகள் உள்ளன; ஆனால் எல்லாத்துறைகளிலும் ஒட்டுமொத்த ஞானம் பெற்றோர் எண்ணிக்கை என்பது மிகமிகக் குறைவு. ஒவ்வொரு துறையில் ஒவ்வொருவர் ஆழ்ந்த நுட்பங்கள் கற்றவராகவும் சிறப்பறிவு உடையவராகவும் திகழும்போது, அவர் ஆழ்ந்த ஞானம் மிக்கவர் என்று கொண்டாடப்படுவார். ஒருவர் தான் சார்ந்துள்ள ஓவியம், நாட்டியம், பாட்டு, நாடகம், இசை போன்ற துறைகளில் சிறந்து விளங்கினால் அவரை நாம் 'கலை ஞானம் மிக்கவர்' என்று பாராட்டுகிறோம். அறிவியல் துறையில் சிறந்திருப்போரை 'அறிவியல் ஞானம் மிக்கோர்' என்றும், ஆழ்ந்த பொருள்கள் குறித்து ஆழமாக எழுதுவோரையும் பேசுவோரையும் 'விஷய ஞானம் உள்ளவர்' என்றும் குறிப்பிட்டுச் சொல்வோம். அந்த வகையில் இசை ஞானி, கலை ஞானி, அரசியல் ஞானி, விஞ்ஞானி, மெய்ஞானி எனப் பல ஞானியர் உண்டு. தத்துவத்தில், கல்வியில், ஆன்மிகத்தில் சிறந்திருக்கும் தன்மை, தத்துவ ஞானம், கல்வி ஞானம், கேள்வி ஞானம், ஆத்ம ஞானம் போன்ற பல்வேறு பொருண்மைகளில் விதந்து பாராட்டப் படுகின்றன.

    எதை எடுத்துக்கொண்டாலும் அதில் நேர்த்தியான ஈடுபாட்டையும், ஆழ்ந்த நுட்பங்களையும் வெளிப்படுத்தி நிற்பதே ஞானம். ஞானம் என்பது விஷயங்களின் துல்லியத்தை வெளிப்படுத்துவதும் கண்டறிவதும் மட்டுமல்ல; அந்த அறிவில் ஆழ்ந்திருக்கும் உண்மையினை உணரச் செய்வதும் ஆகும். இத்தகு ஞானம் அடைவதற்குப் பல படிநிலைப் பயிற்சிகளில் நாம் பக்குவப்பட்டிருக்க வேண்டும். ஞானம் என்பது பொருள்களை அறியும் அறிவு மட்டுமல்ல; பொருள்களுக்கு அப்பாலுள்ள அர்த்தப்பாடுகளையும் உணர்ந்து அறிவதும் ஆகும்.

    சுந்தர ஆவுடையப்பன்

    ஒரு துறவி ஒரு காட்டில் ஓர் ஆசிரமம் அமைத்துச் சீடர்களுடன் வாழ்ந்து வந்தார். ஒருநாள் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அழைத்து, " அதோ அங்கே தொலைவில் நகரத்தில் ஓர் அரண்மனை தெரிகிறதே அங்கு சென்று ஞானம் கற்று வா!" என்று கூறினார். " குருவே! முற்றும் துறந்த துறவியும் ஞானியுமான உங்களிடம் கற்க முடியாத ஞானத்தையா நான் அங்கு அரண்மனைக்குச் சென்று கற்று வரப் போகிறேன்?" என்று எதிர்க்கேள்வி கேட்டார் சீடர். "நான் சொன்னதைச் செய்!; அங்கே அந்த நாட்டு அரசனிடம் நீ ஞானம் கற்று வரலாம்! "என்றார் துறவி. அப்படி அந்த அரசன் ஞானியாக இருந்திருந்தால் துறவியாக அல்லவா மாறியிருப்பான்; அரசனாக இருக்க மாட்டானே! என்று யோசித்துக் கொண்டே காட்டிலிருந்து அரண்மனை நோக்கி நடந்தார் சீடர்.

    சீடர் அரண்மனையை அடையும்போது நன்றாக இருட்டிவிட்டது; உள்ளே அரசரைக் காணச் சென்றால், வழிநெடுகக் குடியும் விருந்துமாகக் குதூகலமாக இருந்தது அரண்மனை. அரசரைப் பார்த்துத், தன்னை வனத்திலுள்ள துறவி அனுப்பி வைத்திருப்பதாகவும், சில நாள்கள் அரண்மனையில் விருந்தினனாகத் தங்க அனுமதிக்க வேண்டுமென்றும் கூறினார் சீடர். இளந்துறவியை வணங்கிய அரசர், அமைச்சரை அழைத்து, சீடர் தங்குவதற்குரிய அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு உத்தரவிட்டார். வசதிமிக்க அந்த அரண்மனையில், அன்றிரவு வேண்டா வெறுப்புடன் தங்கினார் இளந்துறவி.

    காலை விடிந்ததும், இளந்துறவி தங்கியிருந்த அறைக்கு வந்த அரசர், அவரை வணங்கி, "வாருங்கள் துறவியாரே அருகேயுள்ள ஆற்றிற்குச் சென்று நீராடிவிட்டு வரலாம்" என்று அழைத்தார். அரசரும் துறவியும் அரண்மனையை விட்டு வெளியே வந்து ஆற்றை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, திரும்பி அரண்மனையைப் பார்த்த அரசன் இளந்துறவியையும் திரும்பிப் பார்க்குமாறு கூறினான். அங்கே அரண்மனை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

    "ஐயோ! அரண்மனை தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறதே! "என்று பதறிப்போய்க் கதறினார் இளந்துறவி. எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் அரசன் இளந்துறவியைப் பார்த்து "அரண்மனை எரிவதற்கு நீங்கள் ஏன் இப்படிப் பதறுகிறீர்கள்?" என்று கேட்டான். " ஐயா என்னுடைய ஒரே ஒரு காவி ஆடையை அரண்மனையில் விட்டுவிட்டு வந்துவிட்டேன்!; இந்நேரம் அந்தத் துணி எரிந்து போயிருக்குமே!; அதற்காகப் பதறுகிறேன்" என்று கூறிய இளந்துறவி, அரசனைப் பார்த்து, " அது சரி! நானாவது என்னுடைய அந்தக் கந்தல் காவி உடைக்காகப் பதறுகிறேன்! ஆனால் ஒட்டுமொத்த அரண்மனைக்கும் சொந்தக்காரனாகிய அரசன், நீ எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் இருக்கிறாயே! அது எப்படி?" என்று கேட்டான்.

    சிரித்துக்கொண்டே அரசன் பதில் சொன்னான், " ஐயா இளந்துறவியே! என்னைப் பொறுத்தவரை, அது 'அரண்மனை என்றால் அரண்மனை!' அவ்வளவுதான். இங்கு 'நான் என்பது எப்போதும் நான் மட்டுமே!'. இரண்டையும் ஒன்றாக்கிக் குழப்பிக்கொள்ளும் பழக்கமோ, ஒன்றின்மீது பற்று வைத்து ஆசையில் திளைத்து, பிறகு இழப்பில் பரிதவிக்கும் வழக்கமோ என்னிடத்தில் எப்போதும் இல்லை!" என்று உறுதியாகத் தெரிவித்தான் அரசன். " பெற்றேன்! ஞானம் பெற்றேன்! இந்த அரசனிடமிருந்து ஞானம் பெற்றேன்!. துறவில் சிறந்து காட்டில் வாழும், வேறு எந்த ஞானியரிடமிருந்தும் பெற முடியாத ஆத்ம ஞானத்தை இல்லற வாசியாக நாட்டை ஆளும் இந்த அரசனிடமிருந்து இப்போது பெற்றேன்!" என்று கூறிக்கொண்டே காட்டை நோக்கி ஓடத் தொடங்கிவிட்டார் இளந்துறவி.

    எல்லாப் பற்றையும் விட்டொழித்த அந்த இளந்துறவி, துறவின் அடையாளமாகத் தன்னிடமிருந்த ஒற்றைக் காவியுடை மீது கொண்டிருந்த பற்றை அழிக்க முடியாதபோது, அரண்மனை அழிந்தபோதும், பற்றொழித்த நிலையில் பதறாமல் நின்ற அரசன் பெரும் ஞானியல்லவா?.

    "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

    அதனின் அதனின் இலன்"

    என்பது வள்ளுவத்தின் ஞானப் பெருக்கல்லவா? ஆசையே துன்பத்திற்கு அடித்தளம்; அந்த ஆசை அகற்றலே! பற்றை ஒழித்தலே ஞானத்தின் திறவுகோல்!. பொருள்களினாலேயே துன்பங்கள் பெருகுகின்றன என்றால், அவற்றின்மீதான விருப்பங்களையும் ஆசைகளையும் நீக்கி விட்டாலே இன்பப் பெருக்குதானே! அதுவே ஞானப் பெருக்கும்தானே!. உண்மையான ஞானம், காடுகளில் தனித்திருந்து பெறுவதைவிட, மனிதரோடு மனிதராய்ச் சமூகத்தில் கலந்திருந்து பெறுவதே ஆகும். இன்னும் சொல்லப்போனால் மனிதரோடு மனிதராய்ச் சகித்திருந்து பெறுவதும் ஆகும். அந்த வகையில் மகாத்மா காந்தியடிகள் விடுதலைப்போரில் தவமிருந்து பெற்ற ஞானம், அகிம்சை, சகிப்புத் தன்மை, சத்தியாக்கிரகம் ஆகியவை தானே!.

    எல்லாவற்றையும் காட்சி அளவையில் கண்டு, மூளைக்கும், மனத்திற்கும் அனுப்பி, பொருள்கள் குறித்த கருத்துருக்களை உருவாக்கிக் கொள்ள நமக்கு கண்கள் உதவுகின்றன. அறிந்துகொண்டு அறிவு பெறும் இந்த இரண்டு கண்களுக்கு அப்பால், ஒவ்வொரு மனிதரும் மூன்றாவது கண்ணாய் ஞானக்கண் பெற வேண்டும் என்கின்றோம். அதுவே நீதியின் கண்ணாகச் சமுதாயம் காக்கும்.

    புராணக் கண்ணோட்டத்தில் சிவனுக்கு மூன்றாவது கண்ணாக நெற்றிக்கண்ணும் இருப்பதனால் அவன் முக்கண்ணன் என்று போற்றப்படுகின்றான். கடவுளுக்கு மட்டுமல்ல; கடவுளின் படைப்பான மனிதருக்கும் முக்கண் தேவை; அந்த மூன்றாவது கண்ணே ஞானக்கண்.

    அது வேண்டுதல் வேண்டாமை இல்லாத நிலையில் எல்லாரையும் சமமாகப் பார்த்து, பேதங்களற்று மனிதம் போற்றுகிற மகத்தான செயலைச் செய்யும். உண்மையைத் தவிர வேறு எப்பக்கமும் சாயாது, எவர்மீதும், எப்பற்றையும் வைக்காது, நன்றின்பால் வாழ்க்கையைச் செலுத்தி உய்வடையச் செய்யும்.

    ஞானம் என்பது செருக்கை ஏற்படுத்தாது; உலகிலுள்ள ஞானத்தையெல்லாம் ஒப்பிடு கையில் நம்மிடமுள்ளது ஒரு ஞானமே இல்லை என்று அடங்கிப்போகக் கற்பிக்கும். தமக்கு மட்டுமே ஆக்கம் விளைகிற செயல்களை விடுத்து, ஒட்டுமொத்த மானுடமே வளம்பெறும் வகையில் செயல்களில் ஈடுபடும். பாரபட்சம் இல்லாமல் அனைவரிடமும் அன்பைப் போதிக்கும் அறிவுநிலையே ஞான நிலை ஆகும்.

    தொடர்புக்கு 9443190098

    • கதிரவனின் முதலாளியாகும் எண்ணத்திற்கு பச்சைக்கொடி காட்டினார்கள்.
    • நல்ல நண்பர்கள் ஒருபோதும் தன் நண்பர்களுக்கு இடைஞ்சல் தரும் எதையும் செய்ய மாட்டார்கள்.

    விதி எப்பொழுதும் எளிய மனிதர்களின் வாழ்க்கையில் விளையாடி வேடிக்கை காட்டுவதில் பெருமை கொள்கிறது. காலம் எல்லாவற்றையும் கலைத்துப் போடும் ஒரு கருவி. சிலர் காலத்தோடு கைகோர்த்துக்கொண்டு கலைத்தவற்றை சரி செய்து கொண்டு வாழ்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் காலத்தோடு போராடத் திறனின்றி மனம் உடைந்து போய் கோழைத்தனமான முடிவுகளை எடுத்து விடுகிறார்கள். நெருக்கடிகளில் நிதானத்தை இழந்து விடுகிறார்கள். கதிரவனின் வாழ்க்கையையும் காலம் புரட்டிப் போட்டது.

    கதிரவன் வேலை பார்த்த அந்தத் தனியார் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி இழுத்து மூடப்பட்டதும் நிலைகுலைந்து போனான். மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பிக்கொண்டிருந்த அவனுக்கு வேலை இல்லாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கையில் இருந்த சொற்பப் பணத்தை வைத்து ஒரு மாதம் குடும்பத்தை நடத்த முடிந்தது.

    "வேறு எங்காவது வேலை கிடைக்குமா?" என்று முயற்சி செய்ய அவன் ஏனோ விரும்பவில்லை.

    " நாற்பத்தி ஐந்து வயதுக்கு மேல் ஆகிவிட்டது இனிமேல் எங்கே சென்று வேலை தேடுவது?" என்ற தயக்கத்தில் இருந்தான். கவுரவமான ஒரு வேலையில் இருந்து விட்டோம். இப்பொழுது அது இல்லை என்றாகிவிட்டது. இனிமேல் யாரிடம் போய் அடிமைத்தனமாக இருப்பது சொந்தமாகவே தொழில் ஒன்றைத் தொடங்கலாம் என்ற முடிவுக்கு வந்தான். அவனுடைய நெருங்கிய நண்பர்களும் "அதுதான் சரி. அப்பொழுதுதான் நீ வாழ்க்கையில் முன்னுக்கு வரமுடியும். மாதச் சம்பளம் மட்டும் வாங்கி நீ ஒருபோதும் பெரியவனாக முடியாது" என்று அவனை உற்சாகப்படுத்தினார்கள். அவர்கள் தொழில் நடத்துவதில் ஏற்படக்கூடிய லாப நஷ்டங்களை சொல்லாமல் நிறைகளை மட்டுமே சொன்னார்கள். கதிரவனின் முதலாளியாகும் எண்ணத்திற்கு பச்சைக்கொடி காட்டினார்கள்.

    நண்பர்களின் இலவச அறிவுரைகளால் கதிரவனுக்கும் முதலாளி ஆகும் ஆசை வந்தது. நண்பர்களே அவனுக்கு ஒரு தொழிலையும் தேர்ந்தெடுத்துச் சொன்னார்கள். நல்ல நண்பர்கள் ஒருபோதும் தன் நண்பர்களுக்கு இடைஞ்சல் தரும் எதையும் செய்ய மாட்டார்கள். கதிரவனைச் சுற்றி இருந்த நண்பர்கள் தங்களின் ஆதாயத்திற்காகச் சொன்ன சில ஆலோசனைகளை கதிரவன் அப்படியே நம்பி அவர்கள் சொல் கேட்டான். தொழில் தொடங்குவது பற்றி தன் மனைவியிடம் ஒருபோதும் கதிரவன் கலந்தாலோசிக்கவில்லை.

    தொழில் தொடங்க முதலீட்டுக்கு சில லட்சங்கள் தேவைப்பட்டது. மனைவியின் நகைகளை விற்று கொஞ்சம் பணம் சேர்த்தான். பற்றாக்குறைக்கு அவனுடைய நண்பர்கள் சொன்ன இடத்தில் வட்டிக்குக் கடன் வாங்கினான். அனுபவம் இல்லாத தொழில் ஒன்றைத் தொடங்கினான். முதலில் ஓரளவுக்கு வருமானம் வந்தது. நண்பர்கள் சேர்ந்து கொண்டனர். செலவுகளும் அதிகமானது.

    ஆரம்பத்தில் அவனுக்கு கை கொடுத்த அந்தத் தொழில் இரண்டு வருடங்களாகப் பெருத்த நஷ்டத்தையே கொடுத்தது. போலியான நண்பர்கள் அவனை விட்டு விலகினர். அவன் வேலைக்குச் சென்று மாதச் சம்பளம் வாங்கி குடும்பம் நடத்திய பொழுது கிடைத்த நிம்மதி இப்பொழுது அவனிடமிருந்து பறிபோனது. வீட்டிற்கும் வாடகை கொடுக்க முடியாத நிலைமை. பல மாதங்களாக வீட்டு வாடகை பாக்கி இருப்பதால் வீட்டு உரிமையாளரும் அவனை நெருக்கிக் கொண்டிருந்தார். வாங்கிய கடனுக்கு வட்டி கூடக் கொடுக்க முடியாத நிலைமை. கடன் சுமையையும் அதனால் ஏற்பட்ட மனச்சுமையையும் இறக்கி வைப்பதற்கு என்ன வழி என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தான். கடன் வட்டியும் முதலுமாக பத்து லட்சத்தைத் தாண்டியது. கடன் கொடுத்தவர் கதிரவனை நெருக்கிக் கொண்டிருந்தார். கடந்த மூன்று மாத காலமாக எவ்வளவோ சாக்குபோக்குச் சொல்லிச் சமாளித்தான்.

    கடன் கொடுத்தவர் இப்பொழுது விடுவதாக இல்லை. "இன்னும் ஒரு வாரத்திற்குள் பணத்திற்கு வழி செய்யவில்லையென்றால் வீட்டிற்கு வந்து கத்துவேன். வழக்குப் போட்டு உன்னையும் உன் குடும்பத்தையும் ஜெயிலுக்கு அனுப்புவேன்" என்று எச்சரித்தது இன்னும் கண் முன்னே நின்று கொண்டே இருந்தது.

    அந்த நினைப்பே சட்டென்று உள்ளே ஆழமான வலியை ஏற்படுத்தியது. உறக்கம் கொள்ள முடியாத வலி. தன்னையும் மறந்து தூங்கினாலும் எழுந்தவுடன் தொடரும் வலி. ஒரு வாரமாகச் சரியான தூக்கமும் சாப்பாடும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

    பொ.வைரமணி

    கடன் கொடுத்தவர் கெடு முடிந்தது. நாளை காலை கடன் கொடுத்தவர் நிச்சயம் வீட்டுக்கு வந்து கடனைக் கேட்டு சத்தம் போடுவார். அப்படி அவர் வீட்டிற்கு வந்து கத்தினால் மானம் மரியாதை எல்லாம் பறி போய்விடும். வெளியில் எப்படித் தலை காட்டுவது? குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் அசிங்கமாகப் போய் விடுமே! எப்படி சமாளிக்கப் போகிறேன் தெரியவில்லையே? தூக்கம் இன்றி தவித்துக் கிடந்தான் கதிரவன்.

    குழப்பத்தில் இருந்தவனுக்கு அறிவு புரண்டது. உணர்வு குலைந்து போனது. கலங்கி? போயிருந்த அவனுக்கு கடன் தொல்லையிலிருந்து விடுபட ஒரு வழி தான் தெரிந்தது. குடும்பத்தோடு விஷம் குடித்துச் சாவது ஒன்றே வழி என்ற முடிவுக்கு வந்தான். அன்று காலை வெளியே சென்றவன் இரவு வீட்டிற்கு திரும்பினான்.

    தனக்கும், மகன், மகள், மனைவி, ஆகியோருக்கும் ஓட்டலில் உணவு வாங்கிக் கொண்டு வந்தான். அதில் கலந்து சாப்பிடுவதற்கு விஷப்பாட்டிலையும் வாங்கிக் கொண்டு வந்தான்.

    வீட்டிற்கு வந்தவன் மகனையும், மகளையும் அருகே உட்கார வைத்துக் கண்கள் கலங்கப் பேசினான்.

    "குடும்பத்தோடு விசம் குடிச்சு சாவது ஒன்றே வழி. மானத்தக் காப்பாத்த இதத் தவிர எனக்கு வேற ஒண்ணும் தெரியல. தயவு செஞ்சு என் பேச்சக் கேளுங்க. என்னை மன்னிச்சிருங்க" என்று கதறினான்.

    அவனுடைய முடிவை அவனுடைய மனைவியும் கண்ணீரோடு ஏற்றுக்கொண்டாள்.

    இருந்தாலும் அவளுடைய உள் மனது பிள்ளைகளை நினைத்து துடித்தது. எந்தத் தவறும் செய்யாமல் இந்த சின்ன வயதிலேயே ஏதுமறியாமல் இந்தப் பிள்ளைகளும் சாகப் போகிறதே என்று நினைத்து வேதனைப்பட்டாள். கண்ணீரோடு மகனையும் மகளையும் கட்டி அணைத்தபடி அழுது கொண்டிருந்தாள்.

    கதிரவன் தன் பிள்ளைகள் இருவரிடமும் கடன் தொல்லையிலிருந்து விடுபட இது ஒன்றுதான் வழி. நாம நாலு பேரும் குடும்பத்தோடு விஷம் குடித்துச் சாவோம் என்று சொல்லியதை கேட்டதும் அவனுடைய பதினேழு வயது மகள் அவனைப் பார்த்துக் கேட்டாள்.

    "ஏம்பா இது மாதிரி சாகுறது தான் உங்க முடிவா?"

    "ஆமாம்மா. இத விட்டா எனக்கு வேற வழி தெரியல. நாளைக்குக் காலையில விடிஞ்சதும் கடன்காரன் வந்தா நம்ம மானம் மரியாத எல்லாம் கெட்டுப் போகும்" "வியாபாரத்துல உங்களுடைய கவனக்குறைவால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு நாங்களும் அம்மாவும் எப்படிப்பா பொறுப்பாக முடியும்? தொழில் எப்படி நஷ்டமானது? என்ன செய்தீர்கள்? அப்படின்னு கூட எங்களுக்கு தெரியாதே அப்பா! நாங்க மூணு பேரும் ஏம்பா விஷம் குடிச்சு சாகனும்? இது நியாயமாப்பா? கடனைத் திருப்பிக் கொடுக்காம சாவுறது கடன்காரர்களுக்கு நீங்க செய்யுற பெருத்த துரோகம் இல்லையா?"

    "அவ்வளவு பெருந்தொகைய நா எப்படிப் புரட்ட முடியும்?" என்றான் கதிரவன்.

    "ஏம்பா முடியாது? தொழில மூடுங்க. ஏதாவது வேலைக்குப் போங்க. அம்மாவையும் ஏதாவது வீட்டு வேலைக்கு அனுப்புங்க. எல்லோருமாச் சேர்ந்து கஷ்டப்படுவோம். உழைப்போம். மானம் மரியாதையைக் காப்பாத்தணும்னா நேர்மையா ஏதாவது ஒரு வேல செஞ்சு கடனக் கட்டலாமே! மாசா மாசம் கொஞ்சம் கொஞ்சமா பணம் தந்துடுறேன்னு கடன் கொடுத்தவர்கிட்ட அவகாசம் கேட்டிருக்கலாமே! தொழிலில் நஷ்டம்னா வேல செஞ்சு கொடுக்கலாமேப்பா! நீங்க சொல்லுற இழப்பு பத்து லட்சம் வெறும் நம்பர்ல ஏற்பட்ட இழப்புப்பா. அத மீண்டும் எப்படியும் சம்பாதிக்க முடியும். ஆனா நம் வீட்டு மெம்பரை இழந்துட்டா அத எப்படிச் சம்பாதிப்பது? போனா போனதுதானேப்பா"கதிரவனின் மகள் உருக்கமாகச் சொன்னாள்.

    "அதெல்லாம் முடியாதும்மா. இனி எங்கே வேல கெடைக்கப் போகுது?" என்று விரக்தியில் சொன்னான்.

    "அப்படின்னா நீங்க செத்துப்போங்கப்பா. எங்க மூணு பேரையும் ஏன் விஷம் குடிக்கச் சொல்லி வற்புறுத்துறீங்க. நீங்க பண்ணுன தப்புக்கு வாழ வேண்டிய நாங்க ஏன் சாகணும்?" கதிரவனின் மகள் சற்று கோபமாகவே பேசினாள்.

    "கடன்காரன் உங்களைச் சும்மா விட மாட்டான். துன்புறுத்துவான்" என்று கதிரவன் விரலை நீட்டிச் சொன்னான்.

    "நீங்க கடன் வாங்கினீங்க. தொழில் தொடங்குறத பத்தி அம்மாக்கிட்ட கூட ஒரு வார்த்த நீங்க கேட்கல.யார் யாரோ சொல்றாங்கன்னு அவங்க சுயநலத்துக்காக சொன்ன தொழில நீங்க ஆரம்பிச்சிங்க. உங்களோட கவன குறைவுல பணத்தை இழந்தீங்க. இதுக்கு நாங்க எப்படி பொறுப்பாக முடியும்?"

    "நீ சின்ன புள்ள தானே. நா சொல்லுறது உனக்குப் புரியாது. கடன்காரன் இதையெல்லாம் பாக்க மாட்டான். குடும்பத்துல இருக்கிற எல்லாரையும் தான் நெருக்குவான்" என்று கதிரவன் தன் மகளைப் பார்த்துச் சொன்னான்.

    "அப்படி ஒரு நெலம வந்தா உங்கள் கடனை நா ஏத்துக்குறேன்ப்பா. இந்த வருஷம் படிப்பு முடிஞ்சதும் ஏதாவது ஒரு கடையிலாவது வேல செஞ்சு எத்தனை வருஷமானாலும் கடனை நா அடைக்கிறேன். கடன் கொடுத்தவரிடம் நா கெஞ்சி மன்றாடி அவகாசம் கேட்டுக்குறேன். உங்களுக்கு ஒண்ணு தெரியுமாப்பா? வாழ முடியலையே அப்படின்னு எந்த ஒரு பறவையும் எந்த ஒரு விலங்கும் தற்கொலை பண்ணிக்கிறதில்ல. எல்லாம் தெரிஞ்ச மனுஷன் தான் தற்கொலைங்கிற முடிவுக்குப் போறான். நீங்க வேணும்னா செத்துப் போங்கப்பா. நானாவது இவ்வளவு தூரம் உங்கக்கிட்ட இதப் பத்திச் சொல்றேன். தம்பியப் பாருங்க பாவம் அவனுக்கு விஷயம் என்னான்னு கூட தெரியாம முழிக்கிறான். எங்கள கட்டாயப்படுத்தாதீங்கப்பா" என்று கண்கள் கலங்க கதிரவனின் மகள் சொன்னாள்.

    "மறுபடியும் சொல்றேன். நீ சின்னப் புள்ளத் தனமாத்தான் பேசுற"

    "எதுப்பா சின்னப் புள்ளத்தனம்? நா சின்ன புள்ளையா இருந்தாலும் எனக்கு மனசுல தைரியம் இருக்கு. நா கோழை இல்ல. மனசுல உரம் உள்ளவங்க வீழ்ச்சி அடைஞ்சாலும் தரையில தூக்கி வீசினாலும் சுவத்துல எறிஞ்ச பந்து மாதிரி மீண்டும் மீண்டும் எந்திருச்சு வருவாங்க. கோழைகள்தாம்பா தரையில உருட்டி விட்ட கல்லைப் போல விழுந்து கெடப்பாங்க. உங்களுக்கு மனசுல உரம் இல்ல. நீங்க வேண்டுமானால் செத்துப் போங்க. எங்கள விஷம் குடிக்கச் சொல்லி வற்புறுத்தாதீங்க" ஆத்திரத்தோடும் அழுகையோடும் அவனுடைய மகள் பேசினாள்.

    மகள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த கதிரவனுக்கு முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது. உடம்பெல்லாம் வியர்த்து வழிந்தது. அவர்கள் மூன்று பேரையும் சில வினாடிகள் கண்களைச் சிமிட்டாமல் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கு மேல் அவன் அவர்களிடம் எதுவும் பேசவில்லை. விஷப் பாட்டிலைக் கையில் எடுத்துக் கொண்டான். விறுவிறுவென்று கொல்லைப் பக்கம் சென்றான். அருகேயிருந்த மண்வெட்டியை எடுத்துப் பள்ளம் தோண்டினான். விஷப்பாட்டிலை திறந்து அதிலிருந்த விஷத்தை ஊற்றி மண்ணைத் தள்ளிப் புதைத்து விட்டு வீட்டிற்குள் வந்தான். வந்தவன் தீர்க்கமான தெளிவான முகத்துடன் மிகவும் கம்பீரமாகச் செல்போனை எடுத்துத் தனக்குக் கடன் கொடுத்தவரை அழைத்தான்.

    • “அய்யா சிவ, சிவ அரகரா அரகரா” என்ற ஒரே மந்திரத்துள் சிவனையும், மாலையும் அடக்கி ‘ஒருவனே தேவன்’ என்ற ஒப்பற்ற நெறியினை சுவாமிகள் ஓங்கி ஒலிக்கச் செய்தார்.
    • ஆணும் பெண்ணுமாய்க் கூடி, தானதர்மம் செய்து தழைத்து வாழ்ந்திடுமாறு கேட்டுக்கொண்டார்.

    சுவாமிகள் புதிய சமயத்தையோ, புதிய கோட்பாட்டையோ, ஏற்படுத்தவில்லை. மேலும், எந்த ஒரு குறிப்பிட்ட தெய்வத்தையும் வணங்கிடுமாறோ, சமய ஆசாரங்கள் செய்திடுமாறோ வற்புறுத்தவில்லை. அவரது சித்தாந்தத்தில் இறைவன் 'தர்மம்' என்ற கோவிலில் உறைகின்றான். அவரது சமயமெல்லாம் 'ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பதில்' தான் அடங்கிக் கிடந்தது. மனிதன் தன் குறை நீக்கத்திற்கும் நிறைநலம் பெறுவதற்கும் இன்றியமையாத சமயத்தை, மனிதனை நெறிப்படுத்தி அவன் உள்ளத்தைப் பக்குவப்படுத்தும் சாதனமாக சுவாமிகள் கருதியமையால், தாழக்கிடப்பாரையெல்லாம் தற்காத்துக் கொள்ளும் வழியாக எண்ணினார். அவ்வழியே இறைவனை அடைவதான உன்னத வாழ்க்கைநெறி என்பதையும் நன்கு உணர்த்தினார். இரப்போரை ஆதரித்து வாழும் வாழ்க்கை முறையே அவர் புகட்டிய சமய வாழ்வின் உயிர்நாடியாக அமையலாயிற்று.

    'கடவுள் ஒருவரே' என்பதில் எல்லாச் சமயங்களும் கொள்கை அளவில் ஒன்றுபட்ட போதிலும் 'அந்த' ஒரே கடவுள் யார்? என்பதில்தான் அவைகளுக்குள்ளே பல்வேறுபட்ட கருத்துகள் எழலாயின. வைணவத்தில் திருமாலும், சைவத்தில் சிவனும், இஸ்லாமில் அல்லாவும், கிறிஸ்தவத்தில் இயேசுவுமென இறை நாயகர்கள் ஏற்றப்பட்டு 'பிறவிப் பெருங்கடலை' நீந்த வெவ்வேறு மார்க்கங்கள் ஏற்படலாயின. ஒவ்வொரு மார்க்கத்திலும் பல்வேறான நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும், சடங்குகளும் இணைந்தன.

    சமய நம்பிக்கைகளை மையமாக கொண்டு ஏராளமான புனைந்துரைகள் உருவாக்கப்பட்டன. பல்வேறு பிரிவினை பேதங்களை கற்பித்த சமயங்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு, மக்கள் பெருமளவில் மாண்டு போன துயர சம்பவங்கள் வரலாற்றின் பக்கங்களில் மட்டுமல்லாது, இன்றைய நாளிலும் காணக்கூடியதாய் உள்ளது.

    சமுதாயத்திற்கு நன்னெறி புகட்டப்போகிறோம் என புறப்பட்ட சமயங்கள் சகிப்புத் தன்மையும், சமத்துவ நோக்கமும் தம்முள் இல்லாத காரணத்தால் பேரரசுகளை போன்று ஒன்றையொன்று மேலாண்மை செலுத்துவதில் போட்டியை தங்களுக்குள்ளே வளர்த்துக் கொண்டன; சேவை செய்ய வேண்டியவை செருக்கினை வளர்த்துக் கொண்டன; அன்பைச் காட்ட வேண்டியவை ஆணவத்தைக் காட்டலாயின; சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டியவை சச்சரவுகளை வளர்க்கலாயின.

    மானிட ஒருமைப்பாட்டை ஊக்குவிக்க வேண்டியவை வேறுபாடுகளை உண்டாக்கின. தனிமனித முன்னேற்றத்திற்காகப் போராட வேண்டியவை தன்னிலையை உயர்த்திடலாயின.

    மனிதனுள் மறைந்துள்ள தெய்வீகப் பண்புகளை வெளிப்படுத்த வேண்டியன, தீவிரவாத வெறிச்செயல் மூலம் மனிதனை மனிதன் மாய்க்கும் மறப்பண்பினை உசுப்பி விட்டன. எனவே, ஒரே பரம்பொருளை மையமாக கொண்டு தோன்றிய சமயங்கள் யாவும் வேறுபாடுகளை வளர்த்து, சமுதாயத்துக்குள்ளே எதிர் வினைகளை ஏற்படுத்திடலாயின.

    தென்பொதிகை தென்றலென சமுதாய வானில் இன்னிசை பாடவேண்டியன முகாரி ராகத்தை ஆங்காங்கே எழுப்பிக் கொண்டிருந்தன. இந்த சமயங்களின் சல்லாபங்களை தான் சுவாமிகள்

    "நீ பெரிது நான் பெரிது

    நிச்சயங்கள் பார்ப்போமென்று

    வான்பெரிது அறியாமல்

    மாள்வார் வீண்வேதமுள்ளோர்

    ஒருவேதம் தொப்பி

    உலகமெல்லாம் போடுவென்பான்

    மற்றொரு வேதம் சிலுவை

    வையமெல்லாம் போடுவென்பான்

    குற்றம் உரைப்பான்

    கொடுவேதக்காரனவன்

    ஒருவருக்கொருவர்

    உனக்கெனக்கென்றே தான்

    உறுதியழிந்து ஒன்றிலும்

    கை காணாமல்

    குறுகி வழிமுட்டிக்

    குறை நோவு கொண்டுடைந்து

    மறுகித் தவித்து மாள்வார்கள்

    வீண் வேதமுள்ளோர்"

    என இடித்துரைத்தார். பல்வேறு சமயங்களை சார்ந்தவர்கள் சண்டையிட்டு மாள்வதுடன், சமயங்களுக்கு வெளியே உள்ளவர்கள் கூடக் குற்றம் உரைத்து உறுதியழிந்து போவதையும் எடுத்துரைத்தார்.

    சமுதாயத்தில் நிலவிய சமயப் பிரிவுகளையும் அவற்றின் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு சுவாமிகள் 'ஒரே கடவுள் என்ற கொள்கையை அறிவுறுத்தினார். பல தெய்வ வழிபாட்டில் மக்கள் திருப்தி காணவோ, மனஅமைதி பெறவோ இயலாது என்பதனை தெளிவுற உணர்ந்த சுவாமிகள் இறைஒருமையினை மக்களுக்கு உணர்த்தினார்.

    "மண்ணிலே பிறக்கவும்

    வழக்கலா துரைக்கவும்

    எண்ணிலாத கோடி தேவரென்ன

    துன்ன தென்னவும்

    கண்ணிலே மணியிருக்கக் கண்

    மறைந்தவாறு போய்

    எண்ணில் கோடி தேவரு மிதின்

    கணவரி ழப்பதே"

    என்று கூறுகின்ற அளவிற்கு சமயவாதிகள் தத்தம் சமயத்தையே உயர்வானதென அரற்றித் திரிந்த காலத்தில், விஷ்ணு, சிவன், பிரம்மன், சக்தி அனைத்தும் தன்னுள் அடக்கம் என சுவாமிகள் தெளிவுப்படுத்தினார். விஞ்சை பெற்ற வேளையில்

    "சிவனும் நீ நாதனும் நீ திருமாலும் நீ

    தவமும் நீ வேதனும் நீ"

    என்று வைகுண்டருக்குள் அனைத்தும் அடங்கியுள்ள நிலையைத்தான் அகிலம் வெளிப்படுத்துகின்றது.

    சுவாமிகள் தன்னை நாடி வந்தோரிடத்து போதித்தருளுகையில்,

    "வைகுண்டருக்கே பதறி

    வாழ்வதல்லாமல்

    பொய்கொண்ட மற்றோர்க்குப் புத்தி

    அயர்ந்து அஞ்சாதுங்கோ"

    என்று அறிவுறுத்தினார்.

    "தாணுமால் வேதன் தற்பரனார்

    ஆணையதாய் ஒன்றில் அடங்குவதே"

    என்று அத்வைத தத்துவம் அகிலத்தில் உணர்த்தப்படுகின்றது.

    "அய்யா சிவ, சிவ அரகரா அரகரா" என்ற ஒரே மந்திரத்துள் சிவனையும், மாலையும் அடக்கி 'ஒருவனே தேவன்' என்ற ஒப்பற்ற நெறியினை சுவாமிகள் ஓங்கி ஒலிக்கச் செய்தார். மேலும், ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு மறுக்கப்பட்ட சிவன், மால் வழிபாட்டை ஒன்றாக இணைத்து புதிய வழிபாட்டு நெறியினை வகுத்து அய்யா ஒரு புரட்சியினை அமைதியாக அரங்கேற்றம் செய்தார்.

    அரும்பெறல் யாக்கையைப் பெற்றதின் பெரும்பயன் வறியார்க்கீந்து மகிழ்வதற்காகவே ஆகும். சமண, சாக்கிய சமயங்கள், அன்னதானம், அபயதானம், மருத்துவதானம், சாஸ்திரதானம் என நால்வகை தானங்களை வலியுறுத்தின. மண்ணுயிர்க்கெல்லாம் உண்டியும், உடையும், உறையுளும் அளிப்பதனை அறமாக மணிமேகலை போற்றியது. உண்டி கொடுத்தோரை உயிர் கொடுத்தோராகவே தமிழ்கூறும் நல்லுலகு பாராட்டியது. பின்னாளில் சுவாமி விவேகானந்தரும் 'ஏழை மக்களே நாம் வழிபடும் கடவுள், இடையறாது ஏழைகளைப் பற்றியே எண்ணுங்கள், அவர்களுக்காகவே உழையுங்கள். அங்ஙனம் அவர்களுக்காக யார் உள்ளம் கசிந்துருகி கண்ணீர் வடிக்கிறார்களோ அவர்களே மகாத்மாக்கள்' எனப் புகட்டினார்.

    அன்பின் வழியதாக உயிர்நிலையைக் கண்ட சுவாமிகள் தர்மத்தை உயர்நெறியாகக் கண்டார். நாடிவந்த மக்களிடம் தர்மமிட்டு வாழ்ந்திடுமாறு அறிவுறுத்தினார். 'தர்மமே வாழும் சக்கரங்கள்' எனச் சுருங்க கூறி வாழ்வின் முழுப்பொருளும் தர்மத்துள் அடங்குவதாக உரைத்தார்.

    "அன்போர்க்கு மீயு

    வழிபோவோர்க்கு மீயு

    சகலோர்க்கு மீயு

    வலியோர்க்கு மீயு

    மெலியோர்க்கு மீயு"

    என தன்னால் இயன்றவரை கிடைக்கும் சந்தர்ப்பங்களை நழுவவிடாது, எல்லோர்க்கும் ஈந்து இசைபட வாழுமாறு அறிவுறுத்தினார். எனினும் எளியோர்க்கீயும் பண்பினை போற்றினார். எனவே தான்

    "தாழக் கிடப்பாரை தற்காப்பதுவே

    தர்மம்"

    என வரையறை செய்து, தன்னை விடத் தாழ்ந்துள்ளோரை பேணி உயர் நிலைக்கு கொண்டு வருதலையே தர்மம் என விளக்கம் அளித்தார். தர்மம் வழங்குகையில் உண்மை அன்புடையோராய் இரப்போர்க்கு இரங்கிடும் இளகிய மனத்தராய் வாடிய முகம் மலர்ச்சியுறும் வண்ணம், தான் கொடுப்பது சிறிதெனினும் அகமும் முகமும் மலர

    "இரப்போர் முகம் பார்த்து ஈவதுவே

    நன்று"

    என விளக்கினார். அங்ஙனம் இரப்பாரைக் கை கொண்டோரே எனை ஏற்றவர் ஆவர் எனத் தெளிவுறுத்தினார். நல்லவர் இட்ட தர்மம் நாள்தோறும் பெருகும் ஆற்றல் மிக்கது எனவும், அழிக்க நினைத்தாரையே அழித்துவிடும் வல்லமை உடையது' எனவும் எடுத்துரைத்தார். ஆணும் பெண்ணுமாய்க் கூடி, தானதர்மம் செய்து தழைத்து வாழ்ந்திடுமாறு கேட்டுக்கொண்டார். பரம்பொருளை அடைவதற்கான வழி தர்மம் ஒன்றே என்று அவர் கூறினார். அதனை அடுத்த தொடரில் காண்போம்.

    • ஞானம் அடைந்த நிலையில் தான் நமது வாழ்க்கை அர்த்தம் உள்ள வாழ்க்கையாக உள்ளது.
    • ஞானம் பற்றிய பலவிதமான கதைகள் உள்ளன.

    மனித வாழ்வின் மாபெரும் இலக்கு தான் ஞானம் அடைதல்.

    " உண்மையில் நாம் அனைவரும் ஞானம் அடைந்த பிறகு தான் வாழவே ஆரம்பிக்கிறோம்", என்று மஹாராஷ்டிரா ஞானி நிசர்க தத்த மகாராஜ் கூறுகிறார்.

    ஞானம் அடையாத வரையிலும் நடைபெறும் நம்முடைய வாழ்க்கை அனைத்தும் வாழ்க்கையே கிடையாது என்று அவர் கூறுகிறார்.

    ஞானம் அடைந்த நிலையில் தான் நமது வாழ்க்கை அர்த்தம் உள்ள வாழ்க்கையாக உள்ளது.

    ஞானம் அடைவது என்றால் என்ன?

    நமது தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவிலிருந்து போன் செய்தார்: "அய்யா ஞானம் அடைவதாக இருந்தால் நாற்பது வயதுக்குள் ஞானம் அடையவேண்டும் என்று கூறுகிறார்களே அப்படிதானா?"

    "ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்?" என்று அவரிடம் கேட்டபோது அவர், "ஞானம்

    அடையும்போது தலையில் ஒரு இடி இறங்கியது போல் இருக்குமாம். நாற்பது வயதைக் கடந்தவர்களால் அதனைத் தாங்க முடியாதாம்" என்று கூறினார்.

    "நாற்பது வயதைக் கடந்துவிட்டால் ஒரு இடி தாங்கியை வைத்துக் கொள்ளுங்கள்! " என்று அவரிடம் விளையாட்டாகக் கூறினோம்.

    இப்படி ஞானம் பற்றிய பலவிதமான கதைகள் உள்ளன.

    என்னுடைய சொந்த வாழ்க்கையில் என்னுடைய கவனம் பதினெட்டாவது வயதில் ஆன்மிகத்தை நோக்கித் திரும்பியது.

    நான் வசித்து வந்தது ஒரு சிறிய கிராமம். அந்த காலத்தில், செல்போன், டிவி என்று எவையும் கிடையாது.

    ராமகிருஷ்ண பரமஹம்சரது உபதேச மஞ்சரி என்ற பழைய நூல் ஒன்று மட்டும் எங்கள் வீட்டில் இருந்தது. ஆன்மிகம் சம்பந்தமாக அவருடைய கருத்துகள் மட்டுமே எனக்கு அறிமுகம் ஆயின.

    இறைவனிடம் பக்தி செய்யவேண்டும், இறைவனை நினைத்து தியானம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

    தியானத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதெல்லாம் தெரியாது. ஏதோ எனக்குத் தெரிந்தபடி தியானம் செய்து பார்ப்பேன்.

    என்னைச் சுற்றிலும் இறைவனே நிறைந்திருப்பது போல் எண்ணிக் கொண்டு தியானம் செய்வேன்.

    அப்படி செய்யும் தியானங்கள் கூட ஒரு விதமன அமைதியைக் கொடுக்கும். நாட்கள் செல்லச் செல்ல ஆன்மிகம் சார்ந்த நண்பர்களின் அறிமுகம் கிடைத்தன. ஞானிகள் பலருடைய கருத்துகளும் தெரியவந்தன. இதனால் எனது ஆன்மிக முயற்சிகள் தீவிரமடைய ஆரம்பித்தன.

    ஆன்மிகம் சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபடும் போது நமது மனம் ஒருவிதமான ஆனந்த அனுபவத்துக்குப் போய்விடும். அந்த அனுபவம் சில நாட்களில், நாள் முழுவதும் இருக்கும். பிறகு அது நம்மை விட்டுப் போய் விடும்.

    சில சமயங்களில் அந்த அனுபவங்கள் இரண்டு மூன்று நாட்கள் கூட நீடித்திருக்கும். பிறகு அது நம்மை விட்டுப் போய் விடும்.

    இப்படி வந்து வந்து போய்க் கொண்டிருக்கும் ஆனந்த அனுபவம் நிரந்தரமாக நம்மிடமே தங்கிவிட்டால் அதுதான் ஞானம்.

    இப்படிதான் நாங்கள் நண்பர்கள் அனைவருமே எண்ணிக் கொள்வோம். ஒவ்வொரு ஞானிகளும் இதையே உபதேசிப்பதாக எங்களுக்குத் தோன்றியது.

    ஸ்ரீ பகவத்

    எங்களுடைய முயற்சி தொடர்ந்தது. அவ்வப்போது நல்லவிதமான அனுபவங்களும் கிடைத்து வந்தன. ஆனால் ஞானத்தை நோக்கிய எங்களுடைய தேடல்கள் ஒரு முடிவுக்கு வராமல், தொடர்கதையாகவே இருந்து வந்தன.

    எங்களுடைய முயற்சி என்றுதான் நிறைவு பெறும்? என்றுதான் நாங்கள் ஞானம் அடைவது?

    ஜே.கிருஷ்ணமூர்த்தி எனும் ஞானியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவருடைய நூல்கள் ஆரம்பகால சொற்பொழிவுகள் மற்றும் பிற்கால சொற்பொழிவுகள் என இரண்டு வகையாக வெளிவந்துள்ளன.

    அவர் தனது ஆரம்பகால சொற்பொழிவுகளில் இவ்வாறு கூறுவார்: "நீங்கள் ஒரு திராட்சையை உருவாக்க வேண்டுமானால் நீங்கள் முதலில் திராட்சை விதையை தோட்டத்தில் விதைக்க வேண்டும். அது முளைத்து செடியாக வளரும். பிறகு பூக்கும், காய்க்கும். அதன் பின்னரே திராட்சை பழம் உங்களுக்குக் கிடைக்கும்...

    "ஆனால் எனது சொற்பொழிவைக் கேட்க நீங்கள் வரும் போது நீங்கள் திராட்சை விதையோடு மட்டும் வந்தால் போதும். கூட்டத்தின் முடிவில் நீங்கள் திராட்சைப் பழத்துடன் திரும்பிச் செல்லலாம்!"

    ஞானம் அடைவது அவ்வளவு சுலபம் என்பது போல் கூறுவார்.

    பிறகு அவர் தமது பிற்கால சொற்பொழிவுகளில் இவ்வாறு கூறுவார்: "நானும் உங்களிடம் அறுபது வருடங்களாகப் பேசி வருகிறேன். நீங்களும் கேட்டு வருகிறீர்கள். ஆனால் மாற்றம் எதுவுமே உங்களிடம் ஏற்பட்டதாக தெரியவில்லை."

    ஞானம் அடைவது சுலபமானதா அல்லது கடினமானதா? எவ்வளவு காலம் தான் முயற்சி செய்ய வேண்டும் ? அரசு விடுமுறை நாட்களில் தியானம் செய்வதற்காக, நண்பர்களுடன் மலைப் பிரதேசங்களுக்கு நாங்கள் செல்வதுண்டு. ஒரு முறை மேற்கு தொடர்ச்சி மலையில் கடனா நதியை ஒட்டியிருக்கும் அத்ரி மகரிஷி ஆஸ்ரமத்துக்குப் போயிருந்தோம்.

    போகும் வழியில் மலைப் பாதையில் மலைக்குகை ஒன்று இருந்தது. முஸ்லிம்கள் அதனை தர்காவாக்கி வழிபாடு செய்து வந்தனர். அந்த குகையில் முஸ்லிம் துறவி ஒருவர் வந்திருந்து தியானம் செய்வதாகக் கூறினார்கள்.

    'நாமும் தியானம் செய்கிறோம்; அவரும் தியானம் செய்கிறார். நாம் இங்கு தங்கியிருக்கும் காலத்தில் அவரும் வந்தால் சந்தித்துப் பேசலாமே ' என்று நாங்கள் பேசிக் கொண்டோம்.

    ஆனால் அன்று இரவே அந்த முஸ்லிம் துறவி எங்களைப் பற்றி கேள்விப்பட்டு நாங்கள் இருக்கும் இடத்துக்கே வந்து விட்டார்.

    அவர் என்னைப் பார்த்து, "இரவு எத்தனை மணிக்குத் தூங்குவீர்கள்?" என்று கேட்டார்.

    அது செல்போன் எதுவும் இல்லாத காலம்.

    "இரவு ஒன்பது மணிக்கெல்லாம் படுத்துவிடுவோம்" என்று கூறினேன்.

    அவர் மிகவும் ஆதங்கப்பட்டார்:

    "அய்யய்யோ! ஒன்பது மணிக்கே படுத்து விடுவீர்களா? இரவில் நாம் தூங்கவே கூடாது. இரவு தான் விழித்திருந்து தவம் செய்ய வேண்டும்!"

    அவர் பேசிக்கொண்டு இருந்துவிட்டுப் போய்விட்டார்.

    தூக்கம் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. அவர் சொல்லி விட்டாரே என்று தூங்கவும் பயமாக இருந்தது. பிறகு ஒரு வழியாக தூங்கி விட்டோம்.

    இது போல் இன்னும் ஒரு சம்பவம். திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள ஒரு ஜீவசமாதி ஆலயம் எனது பொறுப்பில் இருந்து வந்தது. வழக்கமாக பூஜை செய்து வருபவர் ஒரு முறை விடுப்பில் சென்றிருந்தார். அங்கு தங்கி இருந்த எண்பது வயதுள்ள சாது ஒருவரை பூஜை செய்ய வைத்திருந்தோம்.

    ஓய்வு நேரத்தில் அவருடைய ஆன்மிக அனுபவங்களைக் கேட்டோம்.

    அவரும், "ஞானத்தைத் தேடி நான் எனது பதினாறாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன். நான் போகாத கோயில்களும் கிடையாது; ஆசிரமங்களும் கிடையாது. அது போல் நான் பார்க்காத ஞானிகளும் கிடையாது. எனக்கும் எண்பது வயது ஆகிவிட்டது. இன்னும் அந்த ஞானம் எனக்குக் கிடைத்தபாடில்லை. எப்போதுதான் அது எனக்குக் கிடைக்கும் என்பதும் எனக்குத் தெரியவில்லை" என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

    அதைக்கண்டு எங்களுக்கு பரிதாபம் எதுவும் ஏற்படவில்லை. மாறாக, ஒரு விதமான பயம்தான் எங்களுக்கு ஏற்பட்டது.

    பதினெட்டாவது வயதில் ஆரம்பித்த என்னுடைய பயணம் முடிவடைய இன்னும் நான் எவ்வளவு காலம் பாடுபடவேண்டுமோ தெரியவில்லையே என்ற பயம்தான் ஏற்பட்டது.

    ராமகிருஷ்ணருடைய படத்தைப் பார்த்து இருக்கிறீர்களா? ஒரு வித பரவச நிலையில் இருப்பது போன்றே அவருடைய புகைப்படங்கள் எல்லாம் காணப்படும்.

    வந்து வந்து போய்க் கொண்டிருக்கும் அந்தப் பரவச நிலை நிரந்தரமாக நம்மோடு தங்கிவிடுமேயானால் அது தான் ஞானம் என்பது என்னுடைய கருத்து. அதனை அடையவே தேடு தேடென்று தேடிக் கொண்டிருந்தேன். பதினெட்டாவது வயதில் ஆரம்பித்த எனது தவ முயற்சிகள், இருபத்து ஒன்பது வருட போராட்டத்திற்குப் பிறகு எனது நாற்பத்து ஏழாவது வயதில் பூர்த்தி அடைந்தது.

    எந்தவொரு நிரந்தரமான பரவசநிலையைத் தேடி, படாத பாடுபட்டு வந்தேனோ, அந்தப் பரவச நிலை என்னை ஆட்கொண்டுவிட்டது.

    இருபத்து நான்கு மணி நேரமும் பரவசநிலைதான். தூங்கும் போது கூட அந்தப் பரவச நிலையும் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.

    அந்தப் பரவச நிலையானது, ஒரு நாள் இரண்டு நாட்கள் மட்டும் அல்ல, வருடம் முழுவதும் இயங்கியது.

    ஒவ்வொரு விநாடியிலும் ஆனந்த போதையில் மிதந்து கொண்டிருந்தேன்.

    அந்த போதை உணர்வை என்னால் மட்டுமே உணரமுடியும். என்னோடு தொடர்பு கொள்பவர்களால் எனது அனுபவ நிலையை உணர முடியாது.

    அக்காலத்தில் நான் வழக்குரைஞராக பணியாற்றி வந்தேன். இந்த அனுபவத்தின் காரணமாக எனது பணிகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

    ஆன்மிகத்தின் உச்சநிலையான ஞானத்தை அடைந்து விட்டோம் என்ற திருப்தி ஏற்பட்டது. ஆன்மிக ஆய்வுகளில் கரை கண்ட நமது நண்பர்களும் நான் அடைந்த ஞானத்தை உறுதி செய்து அங்கீகரித்தனர்.

    வாழ்க்கை என்றால் ஆயிரமாயிரம் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்.

    ஆனால் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் எள் அளவு கூட என்னைப் பாதிக்கவில்லை.

    எனது ஆனந்த அனுபவங்களே கவசமாக இருந்து என்னைக் காவல் காத்தன.

    இதுதான் ஞானமா?

    தொடர்புக்கு வாட்ஸப் - 8608680532

    • கல்லூரிக்குச் சென்ற பின்பு நிறைய போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் கிட்டின.
    • வெளியூர்களில் மட்டுமல்ல, நாம் வசிக்கின்ற ஊர்களிலும் பொய் புரட்டு பித்தலாட்டம் அவலட்சணமான செயல்கள் எல்லாமே உண்டு.

    'கடந்த காலத்தின் தவறுகளைச் சரிசெய்வது சாத்தியமற்றது. ஆனால், அவற்றினால் கிடைத்த அனுபவத்தின் மூலம் நாம் பயனடையலாம்'.

    -ஜார்ஜ் வாஷிங்டன்

    ஒவ்வொரு நாளும் வாழ்க்கை நமக்குப் பல பாடங்களைக் கற்றுத் தருகின்றது. கற்றுக்கொண்டு யாரும் வாழ்க்கையைத் தொடங்குவதில்லை, அன்றாட வாழ்க்கையிலிருந்தே நாம் கற்றுக் கொள்கின்றோம்.

    குழந்தைப் பருவத்திலிருந்தே 'கற்றல்' தொடங்கிவிடுகிறது. அன்றாட அனுபவங்கள் அரிய உண்மைகளை நமக்கு உணர்த்துகின்றன. வீட்டிலிருந்து கடைவீதிக்குச் சென்று வருவதற்குள் எத்தனையோ காட்சிகளைப் பார்க்கின்றோம்.

    முடித்திருத்தகத்தில் காத்திருக்கும் நேரத்தில், நம் செவிகளுக்குப் பல கதைகள் கிடைக்கின்றன. வீட்டு வாசலில் கீரைக் கூடையை இறக்கிவைத்துவிட்டு நிற்கும் கிழவியிடம், கீரை வாங்கும் சில நிமிட நேரத்திற்குள் அவள் தன் பாடுகளைக் கூறிவிடுகிறாள்.

    பூங்காக்களிலும் பொழுதுபோக்குக் கூடங்களிலும் காதலர்கள் ஜோடி ஜோடியாய்க் கைகோத்துத் திரிகின்றனர். ஒரு ஐஸ்கிரீம் வாங்கி இருவரும் ருசிக்கின்றனர்; ரசிக்கின்றனர். வாய்ப்புக் கிடைக்காதவனுக்கோ ஏக்கம்.

    ஒருவன் தன் தொழிலில் தான் அடைந்த நஷ்டத்தைச் சொல்லிப் புலம்புகின்றான். அவனுக்கு ஆறுதல் சொல்கின்றவன், அவன் கஷ்டங்களை எல்லாம் கதைபோல் கேட்கின்றான்.

    கேட்பதிலும் பார்ப்பதிலும் பெறுகின்ற அறிவு ஒருவகை; பட்டறிவதால் பெறுகின்ற ஞானம் தனிவகை.

    பள்ளிப் பருவத்திலேயே கவிதை எழுதத் தொடங்கிய எனக்கு, இலக்கியப் போட்டிகளில் பங்கேற்பதிலும் பரிசுகளைப் பெறுவதிலும் ஓர் அலாதி பிரியம்.

    கல்லூரிக்குச் சென்ற பின்பு நிறைய போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் கிட்டின. பல்வேறு கல்லூரிகளில் நடைபெற்ற கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பெற்ற பரிசுகள் ஏராளம்.

    அப்போது, சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ஓர் இலக்கிய மாத இதழ், மாணவர்களுக்கான ஒரு கவிதைப் போட்டியை அறிவித்திருந்தது. அதற்கான தலைப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும், உடனடியாகக் கவிதை எழுதி அஞ்சல் செய்து விட்டேன்.

    ஒரு மாதம் கழித்து, என் பெயரில் கல்லூரி முகவரிக்கு அந்தப் பத்திரிகை அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. பிரித்துப் பார்த்த போது எனக்கு இன்ப அதிர்ச்சி. என் கவிதை முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், சென்னையில் நடைபெறும் விழாவில் அதற்கான பரிசு வழங்கப்பட உள்ளதாகவும் அதில் தகவல் இருந்தது. விழா நாள், தேதி, நேரம் ஆகியவற்றுடன், எனக்கு முறையான அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது.

    குறித்த நாளில் நெல்லையிலிருந்து சென்னைக்குப் பயணமானேன். செலவுக்குப் போதுமான பணம் தந்து, என் பெற்றோர் ரயில் நிலையம் வரை வந்து என்னை வழியனுப்பி வைத்தனர். சென்னைக்கு அதுதான் என் முதல் பயணம்.

    மறுநாள் காலை சென்னை எழும்பூர் வந்து இறங்கியதும், அங்கு கண்ட ஜனத்திரளும் பரபரப்பும் என்னை வியப்பில் ஆழ்த்தின. நான் என் சூட்கேஸை தூக்கிக்கொண்டு வெளியே வரவும், ஆட்டோ டிரைவர்கள் வேகமாக என்னை நெருங்க, அவர்களில் ஒருவன் என் சூட்கேஸை வலுக்கட்டாயமாகப் பற்றிக்கொண்டு, 'எங்கப்பா போகணும்' என்றான்.

    'லா்டஜூக்கு' என்றேன் தயக்கத்துடன்.

    'எந்த லாட்ஜ்?'

    'ஏதாவது...'

    'சரி, வா...'

    பிராட்வேயில் ஒரு லாட்ஜ் முன் என்னை இறக்கிவிட்டான். அவனிடம் பேரம் பேச எனக்குத் தெரியவில்லை. கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டேன். அந்த லாட்ஜ் பொறுப்பாளர் என்னை ஏற இறங்கப் பார்த்தார். கடிதத்தைக் காட்டினேன். பின்னர்தான் சம்மதித்தார். மூன்று நாட்களுக்கு அறை எடுத்தேன்.

    மறுநாள் விழா. எனவே, அன்று பகல் முழுவதும் சென்னையில் சில முக்கிய இடங்களைக் கண்டு களித்தேன். மாலையில் மூர் மார்க்கெட் செல்ல ஆசைப்பட்டு, ஆட்டோவில் அங்கு சென்றேன். வெளியூர்க்காரன் என்பதைத் தெரிந்துகொண்ட அந்த ஆட்டோகாரனும், என்னிடம் மிக அதிகமாகவே வாங்கிக் கொண்டான்.

    மூர் மார்கெட்டிற்குள் நுழைந்தபோது எனக்கு ஒரே ஆச்சரியம். எத்தனை எத்தனைக் கடைகள்! ஊசி பாசி, புடவை, துணிமணி, டேப் ரிக்கார்டர், பிரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின் காஸ்மெடிக்ஸ் டாய்ஸ்... அப்பப்பா அங்கு இல்லாத பொருட்களே இல்லை. வேடிக்கை பார்த்தபடி நடந்து கொண்டிருந்தபோது, நன்கு பழக்கமானவனைப்போல் ஒருவன் சிரித்துக்கொண்டு என் முன்னே வந்து நின்றான். அவன் கையில் ஒரு 'ஷர்ட் பிட்' இருந்தது.

    'வா சார்... ஷர்ட் பிட் பாக்குறியா?' என்றான்.

    'இல்ல, வேண்டாம்' என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். அவன் என்னைத் தொடர்ந்தான்.

    'சும்மா பாரு சார்... புடிச்சா வாங்கு' என்று சொல்லி, என் கையில் அந்த 'ஷர்ட் பிட்'டை தினித்துவிட்டான்.

    அவன் சொன்னதுக்காக பார்த்துவிட்டு, அதனை அவனிடம் திருப்பிக் கொடுத்தேன். 'ஏம்ப்பா?' என்றான். 'வேண்டாம்' என்றேன். அவன் முகம் கடுகடுப்பானது.

    'ஏய் இன்னா... பொருள தொட்டு வாங்கிக்கினு காசு குடுக்காம போயிடுவியா... இருநூறு எடு' என்று அவன் சொல்ல, வேறு நாலுபேர் அங்கு வந்துவிட்டனர்.

    'இன்னாத்துக்கு வம்பு. நூத்தம்பது குடுத்துட்டு எடுத்துக்கினு போ' என்றான் அவர்களில் ஒருவன்.

    அந்தக் கும்பலிடமிருந்து தப்பிக்க எனக்கு வழி தெரியவில்லை. எனது பேன்ட் பாக்கெட்டுகள் மற்றும் சட்டைப்பை ஆகியவற்றில் பணம் வைத்திருந்தேன். எதில் எவ்வளவு என்று தெரியாமல், வலதுபுற பேன்ட் பாக்கெட்டிலிருந்து மெல்ல பணத்தை எடுக்கவும் வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு நகர்ந்தான் அவன். மற்ற நால்வரும் கலைந்து சென்றனர். முப்பது ரூபாய்கூட பெறாத அந்த ஷர்ட் பிட்டிற்கு முந்நூறு ரூபாயைப் பறிகொடுத்து நின்றேன். 'போதுமடா சாமி' என்று மூர் மார்க்கெட்டில் இருந்து வெளியேறி, சில பத்திரிகைகளை வாங்கிக்கொண்டு, ஆட்டோ பிடித்து லாட்ஜூக்கு சென்றுவிட்டேன். இங்கு எல்லா இடங்களிலும் ஏமாற்றுவதற்கென்றே ஒரு கூட்டம் திரிகிறதே என்பதை எண்ணி மனம் சங்கடப்பட்டது.

     

    கவிஞர் தியாரூ, 9940056332

    மறுநாள், அந்தப் பத்திரிகை வளாகத்தில் பரிசளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கவிதைப் போட்டிக்கான முதல் பரிசினை மேடையில் பெற்றபோது பெருமிதமாக இருந்தது.

    விழா முடிந்து லாட்ஜ் அறைக்கு வந்தேன். பொழுது போகவில்லை. அதே சாலையில் அங்குமிங்குமாகச் சிறிது நேரம் நடந்தேன். பக்கத்தில் இருந்த ஒரு ஓட்டலில் இரவு உணவை முடித்துவிட்டு லாட்ஜூக்கு வந்தபின், 'சினிமாவுக்குப் போய்வரலாமே' என்ற எண்ணம் வந்தது. அப்போது இரவு ஒன்பது மணி இருக்கும்.

    அங்கிருந்து நடக்க ஆரம்பித்தேன். சற்றுத் தொலைவில் ஒரு தியேட்டர். அந்தத் தியேட்டரில் பத்து மணிக் காட்சி, படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது பன்னிரெண்டரை மணி. பைக்குகளில் வந்திருந்தவர்கள் விருட் விருட் என்று போய்விட்டனர். நடந்து வந்தவர்களும் ஒருசில நிமிடங்களில் வெவ்வேறு திசைகளில் சென்றுவிட்டனர். நான்மட்டும் தனியாளாய்...பயம் உந்தித் தள்ள வேக வேகமாக நடந்தேன். என்னைத் தவிர வேறு யாருமே இல்லை. பதற்றத்தில் பயம் அதிகமானது. மங்கலான தெருவிளக்கு விட்டுவிட்டு எரிந்தது.

    எப்படியோ லாட்ஜை நெருங்கிவிட்டேன். ஓட்டமும் நடையுமாய்க் கிட்ட வந்தபோது - லாட்ஜூக்கு சற்று முன்னதாக, சிதிலமடைந்து பயனற்றுக் கிடந்த பிளாட்பாரத்தின் ஓரத்தில் கண்ட காட்சி என்னைத் தூக்கிவாரிப் போட்டது. அந்தரங்க விஷயம் அங்கே வெளியரங்கமாய் நடந்து கொண்டிருந்தது.

    யாரோ ஒருவன் யாரோ ஒருத்தியுடன், உல்லாசத்தின் உச்சத்தில் இயங்கிக் கொண்டிருந்தான். எனக்கு வியர்த்துக் கொட்டியது. தடதட என்று ஓடிச் சென்று லாட்ஜ் கதவைத் தட்டினேன். தூக்கத்திலிருந்து எழுந்து வந்து கதவைத் திறந்த லாட்ஜ் பொறுப்பாளருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

    'எதுவும் சொல்லாம கொள்ளாம வெளியே போய்ட்டு நடுச்சாமத்துல வந்து நிக்கிறியே... எவனாவது அடிச்சிப்போட்டுப்போனா என்ன பண்ணுவே. இந்த மாதிரி விளையாட்டெல்லாம் இங்க வச்சிக்காத' என்று சொல்லிவிட்டுப் படுக்கச் சென்றுவிட்டார்.

    நான் என் அறைக்குச் சென்றபின்னும், எனக்குள் பதற்றம் தணியவில்லை. 'இப்படிகூட தெருவில் நடக்குமா! இது என்னடா ஊரு... மானங்கெட்ட பொழைப்பால்ல இருக்கு'. கண்ட காட்சியினால் ஏற்பட்ட அதிர்ச்சியோ கிளர்ச்சியோ, வெகுநேரம் வரை தூங்க முடியவில்லை.

    காலையில் எழுந்ததும் வெளியே வந்து, ஆட்கள் புளங்காத அந்த பிளாட்பாரத்தைப் பார்த்தேன். மூட்டை முடிச்சுகளுடன் கந்தலான அழுக்கு விரிப்பின்மேல், ஒரு பிச்சைக்காரி படுத்திருந்தாள்.

    என் முதல் சென்னைப் பயணம் மிக மிக வித்தியாசமான அனுபவங்களை எனக்குத் தந்தது. அவற்றிலிருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. முன்பின் தெரியாத இடங்களுக்குச் செல்கின்ற போதும், சம்பந்தமே இல்லாமல் சிரித்துக்கொண்டு நம்மை நெருங்கி வருகின்றவர்களை எதிர்கொள்கின்ற தருணங்களிலும் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

    வெளியூர்களுக்குப் பயணிக்கும்போது, கையிருப்பை ஒரே இடத்தில் வைக்கக்கூடாது. பேன்ட் உள்பாக்கெட், வெளி பாக்கெட், மணிபர்ஸ், சூட்கேஸ் என்று பலவற்றில் பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும். தங்கியிருக்கும் இடத்தை விட்டு, இரவு ஒன்பது மணிக்குமேல் தனிநபராக எங்கும் செல்லக் கூடாது.

    கடைவீதிகளில் நடக்கும்போது, 'வெளியூர் வாசி' என்பதைக் காட்டிக்கொண்டால், ஏமாற்றிப் பறிப்பதற்கென்றே அங்கே ஒருசிலர் இருப்பார்கள். விபரம் தெரியாதவன்போல் பேந்தப் பேந்த விழித்துக்கொண்டு நின்றால், அடுத்த நிமிடமே எவனோ ஒருவன் நம் தோளில் ஏறி உட்கார்ந்து கொள்வான்.

    வெளியூர்களில் மட்டுமல்ல, நாம் வசிக்கின்ற ஊர்களிலும் பொய் புரட்டு பித்தலாட்டம் அவலட்சணமான செயல்கள் எல்லாமே உண்டு. எனினும், உள்ளூரென்றால் உதவிக்குக் குடும்பத்தினர் நண்பர்கள் எனப் பலர் நமக்கு இருப்பார்கள். ஆனால், பழக்கமில்லாத வெளியூர்களில் நமக்கு நாம்தானே பாதுகாப்பு. எனவேதான், கூடுதல் கவனமும் சாதுர்யமும் அவசியமாகின்றன.

    எல்லோருக்கும் அனுபவங்கள் ஏற்படுகின்றன. பல விஷயங்களைக் கேட்டு, பல விஷயங்களைச் செய்து பார்த்து, இனியும் அதைச் செய்வதா வேண்டாமா, செய்தால் என்ன பலன், செய்யாமலிருந்தால் என்ன நன்மை என்று தெரிந்து கொள்கின்றோம். நல்லவற்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும். ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் காரியங்களில் இருந்து விலகிவிட வேண்டும்.

    வாழ்வில் எல்லாமே அனுபவங்கள்தான்; பாடங்கள்தான். அனுபவங்களைப் பெறுவதற்காகவே தவறான செயல்களில் ஈடுபடுவது, வாழ்வை அழிவிற்குள் கொண்டு செல்லும். எதிர்பாராமல் ஏற்படுகின்ற மோசமான அனுபவங்களில் இருந்து, நாம் விழிப்புணர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் நமக்கும், நம்மைச் சார்ந்திருப்போர்க்கும் நம்பகமான பாதுகாப்பு.

    • சுற்றும் முற்றும் பார்த்தாள், அவள் இருக்கும் காரைத் தவிர வேறு கார்களோ ஆட்களோ இல்லை.
    • ரிலாக்ஸ் டீ ஸ்டாலில் இருந்த டிவியில் மூவரும் உன்னிப்பாய் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

    "டேவிட், நான் திவ்யா பேசுறேன்" என்ற குரல் கேட்ட அந்த நொடியில் இருந்து சரியாய் இருபது நிமிடங்களுக்கு முன்... திவ்யா மயக்கத்தில் இருந்து கண்விழித்தாள். ஏதோ தூக்கத்தில் இருந்து எழுந்தது போல் ஒரு மாதிரியான மங்கலாகவே எல்லாம் தெரிந்தது. உஸ்ஸ் என்ற காற்றின் சத்தமும் வண்டிகள் விரைந்து செல்லும் ரோட்டின் டயர் ஒலிகள் கேட்க... மெதுவாய் காட்சிகள் புலப்பட ஆரம்பித்தது.

    அது ஒரு ரோடு, அதுவும் ஊருக்கு வெளிப்புற ரோடு. மெதுவாய் காரின் ரோடு பார்க்கும் முன் பக்க கண்ணாடி வழியாய் பார்த்தாள். எதிரே இருந்த ஒரு காபி கடையில் இருவர் காபி குடித்தபடியே தம் அடித்துக் கொண்டு இருந்தனர். சுற்றும் முற்றும் பார்த்தாள், அவள் இருக்கும் காரைத் தவிர வேறு கார்களோ ஆட்களோ இல்லை.

    "நான் எப்படி இங்க... இந்த வண்டியில லாரியில தானே ஏறினோம். ஆமா டேவிட் எங்கே என்னை விட்டுட்டு எங்கபோனாரு? இவன்க ரெண்டு பேரு யாரு? லாரில தானே ஏறினோம் ? அப்போ லாரி எங்க? அந்த டிரைவர் மனோகர் எங்க...?

    யோசிக்க யோசிக்க ஒவ்வொன்றாய் திவ்யாவுக்குப் புலப்பட ஆரம்பித்தது. வண்டி ரிப்பேர் ஆச்சு... மனோகர் வந்தான்... மெக்கானிக்கை கூப்பிட லாரில ஏறினோம்... மனோகர் ஜூஸ் கொடுத்தான்... தூங்கிட்டேன்... இல்ல மயங்கிட்டேன்... அப்போ...டேவிட்டை எங்கேயோ இறக்கிவிட்டு என்னை மட்டும் மனோகர் கடத்தி இருக்கான்.

    இடையிலே வண்டிய மாத்தி கூட்டி போறாங்க... இவன்க யாரு? எதுக்கு என்னை கடத்துறாங்க? என்று யோசித்தபடியே அந்த டீக்கடையின் போர்டை கவனித்தாள்.

    "ரிலாக்ஸ்" டீ ஸ்டால் மனதில் பதிய வைத்தாள். போர்ட்டில் உள்ள ஊர் பெயர் பக்கத்தில் உள்ள எல்லாத்தையும் டக்டக்கென்று மனதில் பதிய வைத்தாள். பதட்டமில்லாமல் யோசித்தாள்... "இப்போது நான் என்ன செய்யவேண்டும்...?" யெஸ் முதலில் டேவிட்டை தொடர்பு கொள்ள வேண்டும் எப்படி - யோசித்தபடியே காருக்குள் கண்களால் துழாவினாள்.

    டிரைவர் சீட்டிற்கு அருகே கியர் அருகில் அந்த சார்ஜரில் ஒரு செல்போன் சார்ஜ் ஆகிக்கொண்டு இருந்தது. "மயங்கி இருக்கேன் என நினைச்சு போனை தைரியமா சார்ஜ் போட்டு போயிருக்கானுங்க..."

    அவர்களை பார்த்தாள். இவள் மயக்கத்தில் தானே இருக்கிறாள் என்ற தைரியத்தில் போனை விட்டுட்டு போய் இருக்கிறார்கள். மெதுவாய் கை நீட்டி போனை எடுக்கப் போனவள் குரல் கேட்டு திடுக்கிட்டாள். சடாரென்று கையை இழுத்து மீண்டும் தலை சாய்த்து மயங்கி இருப்பது போல் பாவனை செய்ய ஆரம்பித்தாள்.

    "இன்னுமாடா டீ சாப்பிடுறீங்க... வாங்கடா டயம் ஆகுது" டிரைவர் சீட்டில் ஏறியவன் கூப்பிட... "தோ" வந்துட்டோம்பா... இருவரும் வந்து வண்டியில் ஏறி கதவு அடைக்கும் சத்தம் கேட்டது... வண்டி கிளம்பியது. அப்போது ஏறியவர்களில் ஒருத்தன் "நிறுத்து... நிறுத்து..." என கத்தவும்... வண்டியை நிறுத்தி என்னடா?' என டிரைவர் சீட்டில் இருந்தவன் எரிச்சலாய் கேட்டான்...

    அந்த டீக்கடையில இருக்குற டிவியில பாருங்க, இந்த பொண்ணோட போட்டோ போட்டு நியூஸ் போகுது... வாங்க என்னன்னு பார்ப்போம்... மூவரும் இறங்கி கதவை அடைத்து போன சில வினாடிகள் கழித்து திவ்யா கண் திறந்து பார்த்தாள்...

    அந்த ரிலாக்ஸ் டீ ஸ்டாலில் இருந்த டிவியில் மூவரும் உன்னிப்பாய் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தனர். டிவியில் போட்டோ காட்டப்படுவது இங்கிருந்து பார்க்கும்போது திவ்யாவுக்கும் தெரிந்தது. இதுதான் சமயம் என போன் எடுத்து டயல் செய்தாள். அந்த போனை தான் டேவிட் எடுத்தான். அப்போது தான் இவள், "டேவிட் நான் திவ்யா பேசுறேன்" என்றாள். "சொல்லு திவ்யா... எங்க இருக்க...எதுவும் ஆகலியே"

    இயக்குநர் A. ெவங்கடேஷ்

    "நான் ஆல்ரைட் டேவிட்... என்னை காணோம்னு டிவி நியூஸ் ஓடுது..."

    "ஆமா... போலீஸ் கொடுத்து இருக்காங்க...சரி சொல்லு நீ எங்கே இருக்க?"

    "டேவிட் இடம் கரெக்ட்டா தெரியல... ஆனா ரோட்டோர ஒரு டீக்கடை... பேரு ரிலாக்ஸ் டீ ஸ்டால்... இடம் குத்துப் பட்டி சந்திப்புனு போர்டுல போட்டிருக்கு... என்னை எதுக்கு கடத்துனாங்கன்னு தெரியல...."

    திவ்யா பேசிக் கொண்டு இருக்கும் போதே அவர்கள் காரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    "டேவிட் அவங்க மறுபடி வராங்க. நான் கட் பண்றேன்..." போனை ஆன் பண்ணி டயல் செய்த நம்பரை அவசர அவசரமாய் "டெலிட்" செய்தாள்.

    போனை மறுபடியும் இருந்த இடத்திலேயே சார்ஜில் போட்டு மீண்டும் அதே பொசிசனில் மயங்கியது போல் இருந்துகொண்டாள்.

    அவர்கள் மூவரும் வண்டியில் ஏறி அமர்ந்தார்கள். "நல்லவேளை கார் தள்ளி நின்னதாலே காருக்குள்ளே இருக்கிற இவளை டீக்கடைக்காரன் பாக்கலை -

    ஒருவன் சொன்னான், டிவியில நியூஸ் போறத பார்த்தா "இவளை இப்படியே மயக்கமான நிலையில் பின்சீட்டில் உக்கார வச்சு கூட்டிப் போறது சரியில்ல..."

    'யாராச்சும் இவளை அடையாளம் கண்டுட்டா சிக்கல்தான்' - இன்னொருவன் கூறினான்.

    'ம்... என்ன பண்ணலாம்' நாம போகவேண்டிய இடம் ஜஸ்ட் ஒருமணி நேரம்தான். ஆனாலும் அந்த ஒருமணி நேரம் ரிஸ்க்தான்...மூன்றாமவன் யோசித்தான்.

    'படுபாவிங்க என்ன பண்ணபோறான்களோ' திவ்யா நினைத்து முடிக்கவும்... ஒருவன் சொன்னான் "பேசாம இவ கைய... கால... கட்டி... வாயில துணியை வெச்சு அடைச்சி டிக்கியிலே, தூக்கிப் போட்டுட்டா"

    திவ்யா உள்ளுக்குள் அதிர்ந்தாள்...

    "ஆமால்ல... ஒருமணி நேரம் தான டிக்கியிலேயே கிடக்கட்டும்" நமக்கும் இவளை யாரும் பார்க்காம இருக்கணும்னா அதான் பாதுகாப்பு..." பேசியவன் இறங்கிப் போகும் சத்தமும் அவன் டிக்கியைத் திறக்கும் சத்தமும் கண்மூடி இருந்த திவ்யாவுக்கு கேட்டது...

    அப்போது டிரைவர் பக்கத்து சீட்டில் உள்ளவன் படபடப்பாய் சொன்னது."யேய் சார்ஜில் போட்டுப் போன என் போன் பொசிஷன் மாறி இருக்கு. நான் இப்படி வெச்சுட்டு போகலியே..."

    மயக்கத்துல இருக்கவ போன எப்படி எடுப்பா? டிரைவர் சீட்டில் உள்ளவன் கேட்டான்.

    "ஒருவேளை போன்ல யாருக்கோ தகவல் சொல்லிட்டு நாம வர்றதை பார்த்ததும் மயங்கி இருக்கிற மாதிரி நடிக்கிறாளோ?''

    "அவ்வளவுதான் கண்டுபிடிச்சுட்டான்க...இனி இருந்தால் ஆபத்து" என எண்ணி காரின் கதவைத் திறந்து மின்னல் வேகத்தில் ஒடத் துவங்கினாள்..

    'ஏய் பிடி-பிடி-' மூவரும் துரத்த ஆரம்பித்தனர்...

    டீ கடைக்காரன் அவர்கள் துரத்திப் போவதை எட்டிப் பார்த்தான்...

    போலிஷ் ஸ்டேஷன்.

    "நீங்க சொன்ன ஸ்பாட்தான், உங்களுக்கு திவ்யா போன் பண்ணின செல்போன் நம்பர ஜிபிஎஸ் சிம் காட்டுது... வாங்க உடனே கிளம்பலாம்...ஏற்கெனவே அந்த லொகேஷனுக்கு பக்கத்துல இருக்கிற ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லி லோக்கல் போலிஷ் டீமும் போய்கிட்டு இருக்காங்க... கமான் லெட்ஸ் கோ..."

    இன்ஸ்பெக்டர் அழகர் ஜீப்பில் ஏற, பின்னாடி வேனில் டேவிட், நண்பர்கள், மொத்த குடும்பமும் ஏறியது... பெருமாள் தான் வந்த காரில் அவர்களை பின்தொடர்ந்தான். வண்டியை ஒட்டியபடியே பெருமாள் தன செல்போன்ல இருந்து யாருக்கோ டயல் செய்தான்.

    ரிலாக்ஸ் டீ ஸ்டால்...

    போலீஸ் ஜீப் நின்றது. கடையில் இருந்தவன் போலீசை பார்த்ததும் வெலவெலத்து எழுந்து நின்றான். எப்பவோ வர்ற, போற லாரி,கார், பஸ்சில் வருகிறவர்களுக்கு டீ, காபி , பிஸ்கெட், வித்து பிழைப்பை ஓட்டுற என் கடைக்கு முன்னால போலீசா - அவன் வெறித்த பார்வையில், முகம் வெளிறி... ஜீப்பில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்டரை பார்த்து என்னங்க ஐயா வேணும்? என கேட்டான்...

    "யோவ், மேலூர் ஸ்டேஷன்ல இருந்து தகவல் வந்துச்சி.. ஒரு பொண்ணை மூனு பேரு கடத்திட்டு போறாங்கன்னு இங்க இருந்துதான் அந்த பொண்ணு அவ புருஷனுக்கு தகவல் கொடுத்து இருக்கா. அடையாளத்துக்கு உன் கடை பேரை தான் சொல்லி இருக்கா. அப்படி சந்தேகப்படுகிற மாதிரி யாரையாவது பாத்தியா?" இன்ஸ்பெக்டர் குரலில் விசாரணையை விட மிரட்டல் அதிகம் இருந்தது.

    "இல்லிங்கய்யா அப்படி யாரும் வரலையே" கடைக்காரன் அப்பாவியாய் சொன்னான்... உன் பேரு என்னய்யா?'

    "பழனிங்க"

    "இங்க பாரு பழனி, போலீசு கிட்ட பொய் சொன்னாலோ பார்த்ததை மறைச்சாலோ பிரச்சனை வரும்னு தெரியுமா தெரியாதா?"

    "சத்தியமா அப்படி யாரையும் பாக்கலைங்கோ..."

    "கடையிலே டிவி வெச்சிருக்க, நியூஸ் பார்க்க மாட்டியா"

    "இல்லிங்கயா எப்பவும் பாட்டுத்தாங்கய்யா ஓடும். காபி, டீ குடிக்க வர்றவங்க பாட்டுதான் போடச் சொல்லுவாங்கய்யா..."அப்பட்டமாய் அழகாய் பொய் சொன்னான் பழனி.

    "உன் கடையை தானே ஸ்பாட் பண்ணி அந்த பொண்ணு சொல்லி இருக்கு?" பழனி திகைத்தான்... அவன் பார்வையின் திருட்டுத்தனத்தை செகண்டில் புரிந்து கொண்ட இன்ஸ்பெக்டர் "பொளேர் "என்று ஒரு அறை விட, கடைக்குள் தெறித்து விழுந்தான் பழனி.

    "கான்ஸ்டபிள்ஸ், போய் அவனை தூக்குங்கய்யா..." இரண்டு கான்ஸ்டபிள்கள் கடைக்கு உள்ளே போய் வீழ்ந்து கிடந்த பழனியை தூக்கி அவன் கைகளை தோளோடு பற்றி வெளியே கொண்டுவந்தனர்.

    "ஐயா அடிக்காதீங்கய்யா... உண்மையைச் சொல்லிடுறேன். ஆமாய்யா மூனுபேரு ஒரு பெண்ணோட ஜீப்பில வந்தாங்க..." அவர்கள் வந்ததில் இருந்து திவ்யாவை துரத்திட்டு போனது வரை வரிவிடாமல் மூச்சிரைக்க சொல்லிமுடித்தான் பழனி.

    "இவ்வளவு நடந்திருக்கு அப்புறம் ஏண்டா பொய் சொன்னே?"

    "அந்த பொண்ண துரத்திட்டு போனவன்களில் கார் எடுத்துட்டு போக ஒருத்தன் மட்டும் திரும்ப வந்தான். அவன்தான்யா பத்தாயிரம் கொடுத்தான். யார் கேட்டாலும் எதையும் சொல்லக் கூடாது. சொன்னா கொன்னுடு வேன்னு மிரட்டினான். அதான்யா பயந்து .."

    "அவன்க எந்தப்பக்கமா போனாங்க?" அதோ அந்தப்பக்கமா...

    பழனி காட்டிய திசை புதர் மண்டிய இடம்... அதற்கு அந்தப்புறம் ஒரே மரமும் செடியுமாய் காடுதான் தெரிந்தது.

    "ஆமாய்யா காட்டுக்குள்ளேதான் பொண்ணு ஓடுச்சு..."

    "திரும்ப வந்து கார எடுத்தவன் காரோடவா காட்டுக்குள்ளே போனான்?" - இன்ஸ்பெக்டர் மடக்கினார்...

    "இல்லிங்க... கார எடுத்தவன் இந்த ரோட்டுல போயி அப்படிக்கா இடதுபக்கம் திருப்பிகிட்டு ரோட்ல போனான்..."

    "கார் நம்பர் கவனிச்சியா?"

    "இல்லிங்க காசு வாங்கினதாலே எதையும் குறிக்கணும்னு தோணலை"

    "உன்னை மாதிரி ஆட்களாலே தான் குற்றங்களே பெருகுது... யோவ் கான்ஸ்டபிள் இவனை ஜீப்ல ஏத்து"

    "ஐயா வேணாங்கய்யா விட்டுடுங்க அய்யா" பழனி கதற கதற போலீஸ் கான்ஸ்டபிள் அவனை ஜீப்பில் ஏற்றினார்... அப்போதுதான் வந்து நின்ற மூன்று வண்டிகளையும் கவனித்தார்...

    (தொடரும்)

    E-Mail: director.a.venkatesh@gmail.com / வாட்ஸப்: 7299535353

    • அன்பு, பாசம் போன்ற உணர்வுகளின் அடையாளம்தான் கரும்பு. அன்பும் பாசமும் ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும்.
    • தனக்கு மிகவும் பசிக்கிறது என்று சொல்லி, ஒரே ஒரு கரும்பு தருமாறு வியாபாரியிடம் கேட்டார்.

    பந்த பாச உணர்வைத் தூண்டுபவன் மன்மதன். கரும்பு வில்லைப் பயன்படுத்தி அம்பு எய்து ஆண்-பெண் ஆகியோருக்கு இடையே ஈர்ப்பைத் தோற்றுவிப்பவன். காதல் தெய்வமான மன்மதன் ரதிதேவியின் கணவன்.

    இந்த உலகம் தொடர்ந்து நடைபெறுவதற்கு மன்மதனின் பணி இன்றியமையாதது. அவனால் தான் உலகில் வம்ச விருத்தி உண்டாகிறது.

    மன்மதனுடைய கரும்பு வில்லின் நாண், கயிற்றால் ஆனதல்ல. தொடர்ச்சியான வண்டுகளின் வரிசைதான் மன்மதன் வில்லின் நாணாக இருக்கிறது.

    அந்த நாணிலிருந்து ஐந்து மலர்களை அம்புகளாக்கி மனிதர்கள் மேல் சூட்சுமமாக எய்கிறான் அவன். தாமரை, அசோகம், குவளை, மாம்பூ, முல்லை ஆகிய ஐந்து மலர்கள்தான் மன்மதனின் அம்புகள்.

    கரும்பு வில்லில், வண்டு நாணை இழுத்து, மலர் அம்புகளைப் பொருத்தி அவன் எய்தால் யாராயிருந்தாலும் பந்த பாசங்களுக்கு ஆட்பட வேண்டியதுதான்.

    மன்மதனின் கரும்பு வில்லிலிருந்து புறப்படும் கணையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. மன்மதனைப் பற்றிச் சொல்லும்போது `காமன் எல்லோருக்கும் காமன்!` எனத் தமிழும் ஆங்கிலமும் கலந்து சிலேடை நயத்தோடு சொல்வார் வாரியார் சுவாமிகள்.

    ஒரே ஒருவரிடம் மட்டும் மன்மதனின் ஆற்றல் பலிக்கவில்லை. சூரபத்மனை வதம் செய்ய ஒரு பிள்ளை பிறக்க வேண்டும் என்பதால், பரமசிவன்மேல் தன் கரும்பு வில்லைக் கொண்டு மலர்க் கணைகளை மன்மதன் எய்ய வேண்டும் என வேண்டினார்கள் தேவர்கள்.

    அவர்கள் சொன்னபடியே மலர் அம்புகளைப் பரமசிவனை நோக்கி எய்தான் மன்மதன். சிவபெருமான் அதனால் தம்முடைய தவம் கலைக்கப்பட்டார்.

    யார் தன் தவத்தைக் கலைத்தது எனக் கடும் சீற்றத்துடன் நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்தார். அவ்வளவுதான். அவர்மேல் மலர்க்கணை தொடுத்த மன்மதன் எரிந்து போனான் என்கிறது சிவபுராணம்.

    பிறகு ரதிதேவி வேண்டியதன் பேரில் ரதியின் கண்ணுக்கு மட்டும் மன்மதன் தெரிவான் என்றும் மற்றவர் கண்ணுக்குத் தெரியமாட்டான் என்றும் வரம் கொடுத்தார் சிவன்.

    அதனால்தான் மன்மதன் இப்போது யார் கண்ணுக்கும் தெரியாமல் பலர்மேல் மலர் அம்பு எய்து தன் பணியை நிகழ்த்திக் கொண்டிருக்கிறான்.

    பொதுவாக தோற்றவர் கையிலுள்ள ஆயுதம், வென்றவர் கைக்கு வருவது நடைமுறை வழக்கம். அந்த வழக்கப்படியே தோற்றுப்போன மன்மதனின் கரும்பு வில் சிவனின் கைக்கு வந்துவிட்டது. அதை, தான் வாங்கித் தன் கரத்தில் வைத்துக் கொண்டாள் அன்னை காமாட்சி.

     

    அன்பு, பாசம் போன்ற உணர்வுகளின் அடையாளம்தான் கரும்பு. அன்பும் பாசமும் ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும். கட்டுமீறிச் சென்றால் துன்பம்தான். அதை உணர்த்தவே அன்னை தன் கையில் கரும்பை வைத்திருக்கிறாள்.

    மன்மதனின் கரும்பு காமத்தைத் தூண்டக் கூடியது. அன்னை காமாட்சி தேவியின் கையில் உள்ள கரும்பு தன்னை வழிபடுபவர்களின் மனத்திலிருந்து காமத்தை அகற்றக் கூடியது.

    இதுதான் மன்மதன் கையில் இருந்த கரும்பிற்கும் காமாட்சி கையில் உள்ள கரும்பிற்குமான முக்கிய வேறுபாடு.

    `காமாட்சியை வழிபட்டால், தேவியின் திருக்கரத்தில் உள்ள கரும்பின் கருணையால் நாம் காம உணர்வை வெல்வோம். காம தகனம் செய்த சிவபெருமானின் மனைவி நம் உள்ளத்தில் உள்ள காமத்தைத் தகனம் செய்துவிடுவாள்.` என்கிறார் வாழ்நாளெல்லாம் காஞ்சி காமாட்சியை வழிபட்ட காஞ்சிப் பரமாச்சாரியார்.

    `கரும்பாயிரம் பிள்ளையார் கோயில்` என்றொரு கோயில் கும்பகோணத்தில் உண்டு. அங்கே உறையும் விநாயகரின் திருநாமம்தான் `கரும்பாயிரம் பிள்ளையார்` என்பது. அவருக்கு அப்படியொரு பெயர் வந்ததற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.

    கரும்பு வியாபாரி ஒருவன் தன் வண்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்புகளை ஏற்றிக்கொண்டு வந்தான். அவன் விநாயகர் கோயில் எதிரே வரும்போது அவன்முன் ஒரு சிறுவனாய்த் தோன்றினார் விநாயகர்.

    யானை முகத்தை உடைய அவருக்கு யானைகள் விரும்பிச் சாப்பிடும் கரும்பைத் தானும் சாப்பிட வேண்டும் என ஆசை வந்துவிட்டது. தனக்கு மிகவும் பசிக்கிறது என்று சொல்லி, ஒரே ஒரு கரும்பு தருமாறு வியாபாரியிடம் கேட்டார்.

    அவர் யாரென்று அறியாத வணிகன், அனைத்தும் உப்புக் கரிக்கும் என்று சொல்லி அவரை ஏமாற்றிவிட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு சென்று விட்டான்.

    `சிறுவன் மேல் இரக்கமில்லையே உனக்கு? நீ சொன்னபடியே, உன் வண்டியில் உள்ள ஆயிரம் கரும்பும் உப்புக் கரிக்கட்டும்!` எனக் கூறிவிட்டு அருகிலுள்ள கோவிலில் சென்று மறைந்துவிட்டான் சிறுவன்.

    அடுத்த கணமே ஆயிரம் கரும்பும் தித்திக்காமல் உப்புக் கரிக்கத் தொடங்கியது. வாயில் போட்டால் உப்புக் கரிக்குமானால், அந்தக் கரும்பு எப்படி வியாபாரம் ஆகும்? ஒரு கரும்பைக் கூட வாங்குவார் இல்லை.

    வணிகன் தவற்றை உணர்ந்தான். சிறுவன் கேட்டபோது கரும்பு கொடுக்காதது தப்புத்தான் எனவும் தன்னை இறைவன் மன்னிக்க வேண்டும் எனவும் உள்ளம் உருகி வேண்டினான்.

    அன்றிரவு விநாயகர் அவன் கனவில் தோன்றினார். அவனை மன்னித்தார். ஏழைகளுக்கு இரங்கவேண்டும் என்று அவனுக்கு நீதி புகட்டினார்.

    அவன் வேண்டியபடி, மறுபடி ஆயிரம் கரும்பும் தித்திக்கும் என அருளினார். பின் கனவிலிருந்து மறைந்துபோனார்.

    மறுநாள் கண்விழித்து எழுந்த வணிகன் கனவை நினைத்து நினைத்து நெகிழ்ந்தான். தன் வண்டியில் உள்ள ஒரு கரும்பை எடுத்துக் கடித்துப் பார்த்தான்.

    அது சாதாரணமாய்க் கரும்பு தித்திக்கும் தித்திப்பை விடப் பல மடங்கு கூடுதலாய்த் தித்தித்தது. பிறகென்ன, கரும்புகள் விறுவிறுவென்று விற்றுப் போயின.

    ஆயிரம் கரும்பையும் விநாயர் தித்திக்கச் செய்த கதை இதுதான் என்கிறது கரும்பாயிரம் பிள்ளையார் கோயில் பற்றி வழிவழியாக வழங்கும் தலபுராணக் கதை.

     

    பட்டினத்தார் கையில் ஒரு கரும்பு உண்டு. அந்தக் கரும்பு பற்றி, கரும்பைப் போலவே இனிப்பான ஒரு கதையும் உண்டு.

    பட்டினத்தாருக்கும் முன்பாகவே அவரது சீடர் பத்திரகிரியாருக்கு திருவிடைமருதூரில் இறையருளால் முக்தி கிடைத்துவிட்டது. பத்திரகிரியார் இறைஜோதியில் கலந்ததைக் கண்ணால் கண்டார் பட்டினத்தார்.

    `என் சீடனுக்கே முக்தி கிட்டி விட்டதே ஐயனே! எனக்கு எப்போது முக்தி கிட்டும்?` என உள்ளம் உருகச் சிவபெருமானை வேண்டினார்.

    சிவபெருமான் அவர்முன் தோன்றி, அவர் கையில் ஒரு கரும்பைக் கொடுத்தார்.

    `இந்தக் கரும்பைத் தாங்கியவாறு திருத்தல யாத்திரை நிகழ்த்து. ஒவ்வொரு திருத்தலத்திலும் மேற்புற நுனியைக் கடித்துப் பார். எந்தத் திருத்தலத்தில் இந்தக் கரும்பின் மேற்புறம் இனிக்கிறதோ அங்கு உனக்கு முக்தி அருளப்படும்.` என அருளினார்.

    பட்டினத்தார் கையில் கரும்போடு திருவெண்காடு, சீர்காழி உள்ளிட்ட பல திருத்தலங்களுக்குச் சென்றார். ஒவ்வொரு திருத்தலத்திலும் தான் கையில் ஏந்தியிருந்த கரும்பின் நுனியைக் கடித்துப் பார்த்தார். அங்கெல்லாம் நுனிக்கரும்பு இனிக்கவில்லை.

    ஏக்கத்தோடு பல திருத்தலங்களுக்குச் சென்ற பட்டினத்தார், சென்னை அருகே திருவொற்றியூர் வந்தபோது கரும்பின் நுனி தித்தித்தது. அதுவே தாம் முக்தியடைய இருக்கும் திருத்தலம் என்பதைப் பட்டினத்தாரின் உள்மனம் உணர்ந்து கொண்டது.

    அங்கிருந்த சிறுவர்களுடன் விளையாடலானார் அவர். அவர்களைத் தன்னைக் கூடையால் மூடும்படி வேண்டிக் கொண்டார். அவர்கள் அவ்விதமே மூடினார்கள்.

    ஆனால் அந்தக் கூடையிலிருந்து அல்லாமல் வேறோர் இடத்தில் தோன்றினார் அவர். பல சித்திகள் பெற்ற சித்தராயிற்றே அவர்? சிறுவர்கள் திகைத்தார்கள்.

    ஓடோடிப் போய் அங்கும் அவரைக் கூடையால் மூடினார்கள். இப்படியான விளையாட்டு பலமுறை நடந்தது.

    இறுதியில் ஒரு கூடையால் மூடப்பட்ட அவர், சிவலிங்கமாக மாறிச் சிவனுடன் கலந்தார். அந்தக் கூடையைத் திறந்துபார்த்த சிறுவர்கள் திகைத்தார்கள்.

    அவர்கள் ஓடோடிப் போய்த் தங்கள் பெற்றோரிடம் இந்த அதிசயத்தைத் தெரிவிக்க, பின்னர் திருவொற்றியூரில் அந்த இடத்தில் சமாதி தோற்றுவிக்கப்பட்டது.

    கரும்பிலிருந்து எடுக்கப்படும் சாறு கருப்பஞ்சாறு எனப்படுகிறது. அதன் தித்திப்பு புகழ்பெற்றது.

    மாணிக்க வாசகரின் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் வள்ளலார். மாணிக்க வாசகர் எழுதிய `திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்` என்று சொல்வதுண்டே?

    அப்படிப்பட்ட உள்ளத்தை உருக்கும் மாணிக்கவாசகரின் வாசகங்களைத் தான் கலந்து பாடும்போது கருப்பஞ்சாற்றில் தேனையும் பாலையும் கலந்ததுபோல் இனிமை உண்டாகிறது என மணிவாசகரைப் புகழ்ந்து பாடியுள்ளார் வள்ளலார்.

    `வான்கலந்த மாணிக்க வாசக! நின்

    வாசகத்தை

    நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்

    சாற்றினிலே

    தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ்

    சுவைகலந்து

    ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல்

    இனிப்பதுவே!`

    பொங்கல் பண்டிகையில் கரும்பு முக்கிய இடம் வகிக்கிறது. கரும்பில்லாமல் யாரும் பொங்கலைக் கொண்டாடுவதில்லை. கரும்பின் விளைச்சலும் பொங்கலை ஒட்டியேதான் தை மாதத்தில் நிகழ்கிறது.

    `கரும்பு தின்னக் கூலி வேண்டுமா?` என்றொரு பழமொழி உண்டு. கரும்பு இனிக்கக் கூடியது. அந்த இனிப்புக்காகவே அதைத் தின்னலாம். அப்படியிருக்க அவ்விதம் தின்பதற்குக் கூலி வேறு வேண்டுமா என்ன?

    ஒரு செயலைச் செய்வதே மனத்திற்கு மகிழ்ச்சி தருகிறபோது அதைச் செய்வதற்கு எதற்குக் கூலி என்பதை விளக்க வந்த பழமொழி இது.

    நம் ஆன்மிகத்தில் கரும்புச் செய்திகள் நிறைய உண்டு. நமது ஆன்மிகமே நினைக்க நினைக்க நெஞ்சமெல்லாம் தித்திக்கும் கரும்பு தானே?

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    • நல்லிணக்கமும் மரியாதையும் மட்டுமே நல்ல உறவுகளை கட்டமைக்க வழிகாட்டும்.
    • தமிழகம் பல ஆயிரம் நூற்றாண்டுகள் வரலாறு கொண்டது.

    வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு வாழ்வதைக்காட்டிலும், ஒரு நல்ல குறிக்கோளுடன், ஒரு நல்ல அடையாளத்தை உருவாக்கவும் முயல்வதே நிலையான நிம்மதிக்கான வழி.

    இயற்கையோடு இயற்கையாக இணைந்து வாழ்ந்த ஆதிமனிதன், வீடு, வாசல், சொத்து, பணம், காசு என எதுவுமின்றி கவலையில்லாமல் வாழ்ந்தான். கூட்டுக் குடும்பமாக ஒன்றிணைந்து வாழ்ந்தவர்கள் சோதனைகளை நேருக்குநேர் எதிர்கொண்டவர்கள்.

    இயற்கையை பஞ்ச பூதங்களென பகுத்துவைத்து தங்கள் ஐம்புலன்களின் துணைகொண்டு அவற்றோடு இணைந்து வாழ்ந்து சாதனை புரிய கற்றுக்கொண்டவர்கள் நம் முன்னோர்கள்!

    ஆக்கப்பூர்வமான எண்ணங்கள், சுய மரியாதை என்றெல்லாம் சிந்தித்துவிட்டு நம்முடைய வாழ்க்கையின் கடினமான பொழுதுகளை கையாள்வதில் சரியான பயிற்சியின்றி கிடைத்தற்கரிய இந்த மனிதப் பிறவியை முழுமையடையச் செய்வதை கோட்டைவிட்டு விடுகிறோம்.

    வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்ற உணர்ச்சி, அறிவு என்னும் இந்த இரண்டிற்கும் இடையிலான போராட்டமே வாழ்க்கை. இது எல்லாக் காலத்தும் பொருந்தும்.

    சங்க காலம் தொட்டு இன்றைய நவீன காலம்வரை மனிதர்களின் மனம் ஒன்றுபோல் இருப்பதில்லை. ஒவ்வொருவரின் மன நிலையிலும் பல்வேறு வேறுபாடுகளும், மாற்றங்களும் நிரந்தரம் என்பதும் உண்மை.

    முழுமையான வாழ்க்கை என்பது கடினமான பொழுதுகளையும் கூட அரவணைத்துச் செல்வதுதான் என்பதற்கான ஆதாரங்களாக வரலாற்று சம்பவங்களும் இருக்கின்றன.

    நல்லிணக்கமும் மரியாதையும் மட்டுமே நல்ல உறவுகளை கட்டமைக்க வழிகாட்டும். இந்த நல்லிணக்கம் என்பது இனம் சார்ந்து, உறவு சார்ந்து, நாடு சார்ந்து மட்டுமே வருவதில்லை. இவை அனைத்தையும் கடந்து காதல் என்ற ஒன்று தலைகாட்ட ஆரம்பிக்கும்போது அது எத்தகையத் தடைகளையும் உடைத்துக்கொண்டு நல்லிணக்கத்தையும், தன்னைச் சார்ந்தவர்களின் நன்மைக்கும் உத்தரவாதமாகிவிடுகிறது. இயற்கையே இதற்கு முற்றிலுமாக துணையாக நிற்கின்றது.

    அத்தகைய சக்தி வாய்ந்த காதல் ஒரு நாட்டையே உருவாக்குவதோடு, இந்த உலகிற்கே ஒரு முன்னுதாரணமாகி விடுவதும் கண்கூடு. இது இன்று நேற்று அல்ல. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நடக்க ஆரம்பித்துவிட்டது என்பதற்கு இந்த புதினமே ஆதாரம்.

    வரலாறு பேசும் இந்த காதல் கதை உலகில் பலரும் ஆவலுடன் அலசி ஆராயும் ஒரு ஆவணமாகிக் கொண்டிருக்கின்றது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கி.மு. 48-ல், ஒரு 16 வயது இளம்பெண், அகண்ட தமிழகத்திலிருந்து தம் காதலனைத் தேடி கடல் கடந்து வெகு தொலைவு, கயா எனும் கொரிய நாட்டிற்குச் சென்றாள். 157 வயது வரை வாழ்ந்து அந்த நாட்டையே பொருளாதாரத்தில் மிக உயர்வான நிலைக்கு இட்டுச் சென்றதோடு தாம் பிறந்த மண்ணிற்கும் தன்னுடைய நன்றியை அதிகமாகவேச் செலுத்தியுள்ளார் செம்பவளம் என்ற அந்தப் பெண்.

    எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வரலாற்றை திரை போட்டு மறைக்கவோ அல்லது முற்றிலும் அழிக்கவோ முடியாது. அதற்கான ஆதாரம்தான் இன்று புற்றீசல் போல கிளம்பியிருக்கும் இந்த வரலாற்று ஆதாரங்கள். இந்த வரலாறு சார்ந்து ஏற்கனவே ஒரு சில நூல்கள் எழுதியுள்ள நிலையில் இதையே ஒரு புதினம் வடிவில் எழுதி மக்களிடம் எளிதாகக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

    ஆரம்ப கால கடல் வணிகத்திற்கு முக்கியம் வாய்ந்த, சுவையான திருப்பங்கள் நிறைந்த இந்த வரலாற்று புதினம் உறுதியாக அனைவரும் விரும்பத்தக்க வகையில் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    எல்லாம் காதலுக்காக

    கதாநாயகிகளும் கதாநாயகர்களும்

    தலைவர்களும் தலைவிகளும்!

    உன் தலை சாய்ந்திருந்ததோ

    இயற்கையின் மடியில்,

    விழித்தெழு நாட்டை ஆள்வதற்கான

    இனிமையான ஈர்ப்புச் சக்தியோடு..

    சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் காலநிலை மாற்றம், உணவுத் தேடல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட மனித குழுக்கள், போகிற போக்கில் ஆங்காங்கே தங்கி விவசாயம் மற்றும் கருவிகளை உற்பத்தி செய்து தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு நதிக்கரைகளில் தங்கிவிட்டன. அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தின் காலநிலை, உணவு உள்ளிட்ட புறக்காரணிகள் அவர்களுக்கு தனித்த அடையாளங்களை உருவாக்கியதோடு அவர்கள் உருவாக்கிய மொழியும் இணைந்த வகையில் தனித்த இனமாக உருவாகினார்கள்.

    கற்காலத்தின் முடிவில் மனித நாகரிகம் அடுத்தக் கட்டமாக உலோகக் கால நாகரிகத்தில் (Iron Age Civilization) அடியெடுத்து வைத்த ஆதி மனிதர்கள் நாகரிக மனிதர்களாக பிரகாசமடைகிறார்கள்.

    கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன் கற்களால் செய்யப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தியவர்கள் பின் நேரடியாக இரும்புக் காலத்திற்கு வந்தவர்கள் அகண்ட தமிழகத்தின் நாயகர்கள். ஆனால் உலகின் ஏனைய மக்கள் பொற்காலம், செம்புக்காலம் என்று கடந்தபின்னரே இரும்புக்கால நாகரிகத்தில் நுழைந்ததையும் வரலாறு விளக்குகின்றது. இதையே, கி.மு. 10,000- – கி.மு. 4,000 வரையான புதிய கற்காலம் என்றும் வகைப்படுத்தியுள்ளனர்.

    அந்த வகையில் அகண்ட தமிழகத்தின் வாழ்வியலில் இரும்பு என்ற ஒரு உலோகம் அறிமுகமாகி அவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பன்மடங்கு உயர்த்திய ஒரு காலம் என்றால் அது கி.மு. 500 என்ற அளவில் இருக்கலாம் என்பதை நம் தொல்லியல் ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. சங்க இலக்கியங்களின் உறுதுணை இதற்கு வளமான சான்றாகி நிற்கின்றன.

    இரும்பைக் கண்டறிந்த ஆதி தமிழர்கள் அதனை வைத்து உலைக்களம் அமைத்து கருவிகளும், ஆயுதங்களும் செய்யும் கலையைக் கற்றனர். தொழில் வளம் பெருக ஆரம்பித்தவுடன் வெளி நாட்டவர்களின் கவனமும் பெற்றனர். அவற்றில் பண்டைய ரோம், எகிப்தியம் நாடுகள் கவர்ந்தி ழுக்கப்பட்டதன் முடிவாக இரும்பும், எக்கும் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் பெறுகிறார்கள். இதனால் இவர்களின் வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயருகிறது. பண்டமாற்று முறையில் பல்வேறு பொருட்களையும் பெற்று தங்கள் வாழ்வாதாரத்தையும் பெருக்கிக் கொண்டனர் என்பதற்கு தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கப்பெற்ற பொருட்களே சான்றாதாரங்கள்.

    இரும்பைத் தொடர்ந்து பொன், மணிக்கற்கள், வைடூரியங்கள் என இயற்கை வளங்களிலும் திளைத்திருந்திருக்கிறோம் என்பதையும் அறிய முடிகின்றது.

    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், அகண்ட தமிழகத்தின் ஆய் நாட்டின் வணிகர்கள் சூதுபவள வணிகத்துக்கான கடல் பாதையைத் தென்கொரியாவின் கயா நாடு வரை விரிவுபடுத்தினர்.

    தமிழகம் பல ஆயிரம் நூற்றாண்டுகள் வரலாறு கொண்டது. தமிழகத்தின் பொதிகை மலைப் பகுதியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆயித்துறை என்ற துறைமுகம்தான் அயுத்தா என அழைக்கப்பட்டுள்ளது எனத் தமிழக ஆய்வாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

    தமிழகத்தின் தென் பகுதியில் இருக்கும், மிகச் சிறப்பு வாய்ந்த மலைதான், தமிழ் வளர்த்த பொதியமலை. அகத்திய முனிவர் வாழ்ந்த, அந்தப் பொதிகை மலைக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அது கடையேழு வள்ளல்களுள் ஒருவரான ஆய் அண்டிரன் ஆட்சி செய்த மலை.

     

    பவளசங்கரி, 63743 81820

    பொதுவாக ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் புகுத்தப்பட்ட இரும்பின் தொழில்நுட்பம் மனித வளர்ச்சியின் முக்கியக் காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கொரியாவின் இரும்புக் கனிமத்தைக் கொண்டு கொரியர்கள் இரும்பை உருவாக்கவும் இரும்புக் கருவிகள் செய்யவும் தேவையான திறனையும் வல்லமையையும் தமிழகத்தை சேர்ந்த ஆய்கொங்கு வணிகர்கள் கயாவில் உருவாக்கினர்.

    நேர்மையும் அறநெறி பிறழாக் கொள்கையும் கொண்ட குறுநில இளவரசனைத் தேர்வு செய்து அரசனாக்கி அவர்களின் இளவரசியை அம்மன்னனுக்கு மணமுடித்து ஒரு புதிய அரசாட்சி அமைய உதவினர்.

    ஆதிக்குடிகளாக வாழ்ந்த பல்வேறு பிரிவினரையும் ஒன்றுபடுத்தி ஒரு சிற்றரசை உருவாக்கினர். தங்களின் வாழ்வியலையும் தமிழ் புத்த சிந்தனையையும் அம்மக்களுக்கு அறிமுகப்படுத்தினர்.

    அந்த வகையில் கயா எனும் அந்நாட்டில் கிடைத்த இரும்புக் கனிமத்தை இரும்பாக்கும் செயல்முறையைக் கற்றுக் கொடுத்து ஒரு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தினர். தமிழ் புத்தம் கயா நாட்டின் முதல் அரசியால் போற்றி வளர்க்கப்பட்டு கயா ஏற்றத் தாழ்வில்லாத ஒரு ஒப்பற்ற சமுதாயமாக உருவாகி அந்த அரசியின் ஆட்சி கொரியாவை முற்போக்குச் சிந்தனை மிக்க நாடாக மாற்றியது.

    பொற்கால ஆட்சி நடந்த கயாவின் வாழ்வியல் தென்கொரியாவில் இருந்த பல குறுநில அரசுகளுக்கும் பரவியது. சில்லாவின் படையெடுப்பு, பிற நாடுகளின் ஆதிக்கம் அழுத்தம் உலகப் போரின் தாக்கம் எனப் பல்வேறு காரணங்களால் ஏழ்மையில் சிக்கித் தவித்த அந்நாடு மீண்டும் சிலிர்த்தெழுந்து செல்வ வளம் கொழிக்கும் நாடாக மாறிய நிலையில் தங்கள் இனத்தின் முன்னேற்றத்துக்கான முதல் வித்தை விதைத்தவர் அயலகத்திலிருந்து வந்த ஒரு பெண் என்று பெருமையுடன் கொண்டாடி மகிழ்கின்றனர். ஒருகாலத்தில் பன்னாட்டுக் கடல் வணிகத்தில் தடம் பதித்துத் தங்கள் முத்திரையை பதித்துப் பிற்காலத்தில் தங்கள் அடையாளத்தைத் தொலைத்து நிற்கும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு முன்னேற்றப் பாதையில் பயணிக்க ஊக்குவிக்கும் ஒரு உந்து சக்தியாக இந்த இளவரசியின் வரலாறு விளங்கும் என்பது திண்ணம்..!

    (தொடரும்)

    • ஐ.வி.எஃப். முறைக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு வெற்றி விகிதம் தான் உண்டு.
    • 30 வயதான பெண்களுக்கு இயற்கையான கருத்தரிப்பு திறன் 15 முதல் 20 சதவீதம் இருக்கும். இதுவே 35 வயது பெண்களுக்கு 10 முதல் 12 சதவீதம் தான்.

    இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் திருமணம் செய்யும் வயது அதிகரித்து வருகிறது. மேலும் குழந்தை பேறு பெறுவதையும் அவர்கள் தள்ளிப்போடுவது பொதுவாக இருக்கிறது. வயது கூடக்கூட அவர்களுக்கு கருத்தரிக்கிற வாய்ப்பு குறைகிறது. எனவே வயதாகும் பெண்கள் குழந்தை பேறு விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதுபோல ஐ.வி.எப். முறையிலும் குறிப்பிட்ட வயது வரைதான் குழந்தை பேறு பெற முடியும்.

    ஆனால் இன்றும் சில பெண்கள், டாக்டரிடம் வரும்போது, நாங்கள் இப்போது குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்பார்கள். அவர்கள் திருமணம் செய்தது 35 வயதாக இருக்கும், 38 வயதில் என்னிடம் வருவார்கள். திருமணமாகி 3 வருடம் குழந்தை பெறுவதை தள்ளிப்போட்டு வருகிறோம் என்று சொல்வார்கள்.

    அவர்களிடம் எப்போது குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று இருக்கிறீர்கள் என கேட்டால், இப்போது இல்லை டாக்டர், இன்னும் 2 வருடம் கழித்துதான் என்பார்கள். இருந்தாலும் உங்களிடம் ஒரு அபிப்பிராயம் கேட்டுவிட்டு போகலாம் என்று வந்திருக்கிறேன் என்று சொல்கிற பெண்கள் மற்றும் தம்பதியினரின் எண்ணிக்கை அதிகம்.

    குழந்தை பேறு விஷயத்தில் ஆண்களின் வயதும் முக்கியம்:-

    இதில் ஆண்களின் வயதும் ஒரு முக்கியமான விஷயம் என்பதை கவனிக்க வேண்டும். ஆண்களுக்கு வயது கூடும்போது அவர்களின் விந்தணுக்களில் உள்ள டி.என்.ஏ.யில் மாறுபாடு வரலாம். வயதாகும்போது பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் விந்தணுக்களில் டி.என்.ஏ. மாற்றங்கள் ஏற்படும். இதனால் அந்த கரு உருவாகும்போது, கருவில் சில குறைபாடுகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு.

    பொதுவாக கர்ப்பப்பையில் கரு ஒட்டி வளரும் தன்மை குறையும். கர்ப்பப்பையில் கரு ஒட்டி வளரும் தன்மை குறைவதற்கு முக்கியமான காரணம், அந்த குரோமோ சோமில் குரோமடிக்ஸ் என்பது இருக்கும். அந்த குரோமட்டிக்ஸ் மற்றும் கர்ப்பப்பையில் உள்ள டீலொமியஸ் என்கிற சில விஷயங்கள் விரிவடையும் அல்லது சுருக்கம் அடையும். மேலும் டி.என்.ஏ.யில் நிறைய மாற்றங்கள் ஏற்படும்.

     

    மேலும் அந்த கருமுட்டைகளில் ஸ்பிண்டில் செல் காம்ப்ளக்ஸ் இருக்கும். அது தான், கருமுட்டையின் கருவாக்கும் திறன், கரு உருவான பிறகு கர்ப்பப்பையில் ஒட்டி வளரும் தன்மை ஆகியவற்றுக்கு வழி வகுக்கிறது.

    ஆனால் வயதான பிறகு இவை எல்லாமே குறைவாகிறது. அதனால் தான் கரு ஒட்டி வளரும் தன்மை குறைகிறது.

    இதனால் தான் பெண்களை பொருத்தவரைக்கும் கருத்தரிப்பதற்கு வயது என்பது மிகவும் முக்கியமானதாகும். வயது கூடிய பெண்களுக்கு கருத்தரிக்கிற வாய்ப்புகள் குறைவு. இருந்தாலும் இப்போது வயதான பிறகு குழந்தை பேறு சிகிச்சைக்கு வருவது அதிகரித்து வருகிறது.

    மேம்பட்ட தாய்வழி வயது அதிகரிப்பு:-

    அட்வான்ஸ்ட் மெட்டர்னல் ஏஜ் (மேம்பட்ட தாய்வழி வயது) என்கிற சரித்திரத்தை பார்த்தால் 1990 காலகட்டங்களில் 30 வயதுக்கு மேல் 35 வயது என்று சொல்வோம். ஆனால் இப்போது உள்ள காலகட்டத்தில் 40 வயதில் குழந்தை பேறு பெறுகிறவர்கள் ஒரு சதவீதம் இருக்கிறார்கள்.

    கருத்தரித்த பெண்கள் 80 ஆயிரம் பேரை ஆய்வு செய்தபோது, 40 வயதில் கருத்தரித்தவர்கள் இந்தியாவில் ஒரு சதவீதம் இருக்கிறார்கள். 80 ஆயிரம் பேரில் ஒரு சதவீதம் என்றால் கிட்டத்தட்ட ஏராளமானோர் வயதான பிறகு அதற்கான சிகிச்சை மூலம் கருத்தரிக்கிறார்கள், குழந்தை பேறு பெறுகிறார்கள்.

     

    எனவே குழந்தை பேறு பெறுவதற்கு வயது கூடுதல் என்பது அதிகரித்து வருகிறது. இது தவிர்க்க முடியாத உண்மை.

    எனவே இன்றைய காலகட்டத்தில் அட்வான்ஸ்ட் மெட்டர்னல் வயது என்பதை 35 வயது முதல் 40 வயது வரை என்று குறிக்கிறோம். 40 முதல் 45 வயது வரை என்பது வெரி அட்வான்ஸ்ட் மெட்டர்னல் வயது ஆகும். 45 வயதில் குழந்தை பேறு பெற விரும்புவதை எக்ஸ்ட்ரீம் வான்ஸ்ட் மெட்டர்னல் வயது என்று சொல்கிறோம்.

    குழந்தை பேறு சிகிச்சையில் எழும் கேள்விகள்:-

    இதுபோன்று வயது அதிகரித்தவர்களுக்கான சிகிச்சை முறைகள் என்ன? இவர்கள் எப்படி குழந்தை பேறு பெற முடியும்? குழந்தை பேறு பெறுவதற்கு இவர்களுக்கு என்னென்ன வழிமுறைகள் இருக்கிறது? இவர்கள் என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஏராளமான கேள்விகள் எழுகிறது. இதை பெண்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    35 வயதில் பெண்கள் மருத்துவரிடம் வருகிறார்கள். அவர்களில் சிலர், டாக்டர் நான் குழந்தை பேறு விஷயத்தை தள்ளி போட வேண்டும் என்று நினைக்கிறேன் என்பார்கள். சிலர் நான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் என்பார்கள். அட்வான்ஸ்ட் மெட்டர்னல் வயதில் வரும் பெண்களுக்கு சினைப்பை இருப்பு சோதனையை (ஓவரியன் ரிசர்வ் டெஸ்ட்) முழுமையாக செய்ய வேண்டும். அதற்கு சில பரிசோதனைகள் இருக்கிறது. அந்த பரிசோதனைகளை சரியாக செய்ய வேண்டும். அந்த பரிசோதனைகளை முறையாக செய்யும் போது அவர்களின் கருத்தரிக்கும் திறன் எந்த அளவு இருக்கிறது என்பதை நிர்ணயிக்கிறோம். அவர்களின் கருத்தரிக்கும் திறன் குறைவாகும் போது என்னென்ன வழிமுறைகளை செய்யலாம் என்பதை தெளிவாக திட்டமிட வேண்டும்.

    எனவே ஒரு தம்பதியாக சிகிச்சை பெற வரும் போது, கண்டிப்பாக கணவன், மனைவி இருவருக்கும் இந்த விஷயங்களை பற்றி தெளிவான விளக்கம் தேவைப்படும். ஏனென்றால் நிறைய பேர் ஐ.வி.எப். செய்தால் குழந்தைபேறு கிடைத்து விடும் என்று நினைக்கிறார்கள்.

    ஐ.வி.எப். முறையில் குழந்தை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், ஐ.வி.எப். என்பது முழுமையான தீர்வு அல்ல. ஐ.வி.எப். முறைக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு வெற்றி விகிதம் தான் உண்டு. ஏனென்றால் முட்டை இருந்தால் தானே கருவை உருவாக்க முடியும்.

    முட்டை குறைவானால் எப்படி கருவை உருவாக்க முடியும்? இந்த மாதிரியான விஷயங்களை அவர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

    ஏனென்றால் பல நேரங்களில் இவர்கள் இதை சரியாக புரிந்து கொள்ளாததால், டாக்டர் இதுபற்றி எனக்கு யாருமே சொல்லவில்லையே, இது தெரிந்திருந்தால் நான் இதற்கு முன்பே சிகிச்சைக்கு வந்திருப்பேனே என்று சொல்கின்ற பெண்களின் எண்ணிக்கை இன்றும் அதிகம். எனவே அவர்களுக்குரிய நடைமுறை உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

    இதனால் தான் வயது அதிகரித்த நிலையில் குழந்தை பேறு சிகிச்சைக்காக வரும் பெண்களுக்கு விளக்கமாக சொல்கிறோம். அவர்களுக்கு கருத்தரிக்கிற வாய்ப்பு குறைவு, அவர்களின் கருவாக்கும் திறன் குறைவு, உருவாகும் கருவில் குறைபாடுகள் வரலாம், கர்ப்பகாலத்தில் வரும் பிரச்சனைகளும் வயது கூடும்போது அதிகமாகிறது.

    குறிப்பாக சர்க்கரை வியாதி, உப்பு சத்து, ரத்த அழுத்தம், இருதய பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை ஆகியவை அதிகரிக்கிறது. இதனால் குறை பிரசவம், நஞ்சு செயல்பாடுகளில் குறைவு, நஞ்சில் வருகிற பிரச்சனைகள் ஆகியவை எல்லாம் வயதாகும்போது அதிகமாகிறது.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    வயது வாரியாக பெண்களின் இயற்கையான கருத்தரிப்பு திறன்:-

    30 வயதான பெண்களுக்கு இயற்கையான கருத்தரிப்பு திறன் 15 முதல் 20 சதவீதம் இருக்கும். இதுவே 35 வயது பெண்களுக்கு 10 முதல் 12 சதவீதம் தான்.

    38 வயதாகும் போது 10 சதவீதத்துக்குள் குறைந்து விடும். 40 வயது பெண்களுக்கு இயற்கையான கருத்தரிப்பு திறன் 5 சதவீதம் மட்டுமே. மேலும் அவர்களுக்கு சிசேரியன் போன்ற பிரசவகால பிரச்சனைகளும் அதிகமாகிறது.

    வயது அதிகரித்த பெண்கள் எந்த நிலையில் குழந்தை பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள், எவ்வளவு நாள் தள்ளிப்போடுகிறார்கள், அவர்களின் ஆரோக்கியம் என்ன நிலையில் இருக்கிறது என்பதை பொருத்து என்னென்ன சிகிச்சை முறைகளை அவர்கள் கடைபிடிக்கலாம் என்று தெளிவாக விளக்கங்கள் சொல்லும்போது, அதை திறந்த மனதுடன் அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.

    ஏனென்றால் பல நேரங்களில் 45 வயதில் கருமுட்டையே இல்லாமல் வருவார்கள், எனது முட்டையில் கருத்தரிக்க வையுங்கள் என்று சொல்வார்கள். ஏன் இவ்வளவு நாள் வரவில்லை என்று கேட்டால் ஐ.வி.எப். செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன், 45 வயதில் குழந்தை பிறக்கும் என்று சொன்னார்கள் என்பார்கள்.

     

    ஆனால் அவர்கள் சிகிச்சைக்கு வரும்போது அவர்களிடம் முட்டையே இருக்காது. எனவே முட்டையை தானமாக பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்வோம். அப்போது தானம் பெறுவதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவர்களுக்கு இல்லையென்றால் எப்படி 45 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்? இந்த மாதிரியான நடைமுறை உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.

    இந்த வகையில் அட்வான்ஸ்ட் மெட்டர்னல் வயதில் பெண்களின் கருத்தரிக்கும் திறனை பொருத்து, எவ்வளவு சாத்தியக்கூறுகள் உள்ளது? வெற்றி விகிதம் எவ்வளவு? என்ன சிகிச்சை சிறந்தது? இதில் எவ்வளவு குறைபாடுகள் வரும்? கர்ப்பகால பிரச்சனைகள் என்ன என்பதை புரிய வைத்து கவுன்சிலிங் செய்வது மிக முக்கியமான ஒன்றாகும். எனவே அட்வான்ஸ்ட் மெட்டர்னல் வயது என்பது கருத்தரிப்புக்கு சிக்கலான விஷயம். இதனை மருத்துவராக எப்படி அணுகுகிறோம் என்கிற விளக்கங்களையும், இந்த மாதிரியான தம்பதியர் வரும்போது என்னென்னவெல்லாம் செய்யலாம் என்பதையும் அடுத்த வாரம் பார்க்கலாம்.

    • அனுஷம் என்றால் சமஸ்கிருதத்தில் வெற்றி என்று பொருள்.
    • தாமரை போல் எப்பொழுதும் அன்று மலர்ந்த மலராக அழகிய தோற்றப் பொழிவுடன் இருப்பார்கள்.

    27 நட்சத்திரங்களில் 17-வது நட்சத்திரம் அனுஷம். இந்த நட்சத்திரம் செவ்வாய் பகவானின் மற்றொரு வீடான விருச்சிக ராசியில் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். அனுஷம் என்றால் சமஸ்கிருதத்தில் வெற்றி என்று பொருள். இதற்கு அனுராதா என்ற பெயரும் உண்டு. இந்த நட்சத்திரம் வானில் பனை மரம், குடை அல்லது தாமரை போல் தெரியும். இதன் தமிழ் பெயர் பனை .இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை லஷ்மி இதன் வசிப்பிடம் அழிந்த காடுகள்.

    அனுஷம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

    தாமரை போல் எப்பொழுதும் அன்று மலர்ந்த மலராக அழகிய தோற்றப் பொழிவுடன் இருப்பார்கள். அமைதியானவர்கள். சிந்தித்து செயல் ஆற்றுவதில் வல்லவர்கள். ஆன்ம பலம் ஆளுமைத் தன்மை, நிர்வாகத்திறன், சுய கெளரவம், கம்பீரத் தோற்றம் நிறைந்தவர்கள். புகழ், முன்னேற்றம், அந்தஸ்து அனைத்தும் தேடி வரும். பேச்சும், பழக்கமும், கம்பீரமான உடலமைப்பும் மற்றவர்களை எளிதில் கவரும் வகையில் இருக்கும். எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை தீமைகளை முன்பே அறியும் உள்ளுணர்வு கொண்டவர்கள். தெய்வ பக்தி நிறைந்தவர்கள். பிறருக்கு உதவும் குணம் நிரம்பியவர்கள். அனைவராலும் விரும்பப்படுபவர்கள். பொருளாதாரம், குடும்ப வாழ்க்கையில் தன்னிறைவு உண்டு. அரசருக்கு உரிய அந்தஸ்துடன் வாழ்வார்கள். ராஜபோக வாழ்க்கை வாழ்நாள் முழுவதும் உண்டு. சொந்த வாழ்க்கையை விட பொது வாழ்க்கையில் அதிக ஆர்வம் இருக்கும். கதை, கவிதை கட்டுரை எழுதுவதில் அதிக ஈடுபாடு இருக்கும். அரசியல் ஆதாயம் உண்டு.

    தந்தையின் ஆதரவு உண்டு. ஏதாவது ஒரு துறையில் நிச்சயம் முன்னேற்றம் உண்டு. சில காலம். குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ நேரும். புதிய நாகரிக முறைகளை குற்றம் கூறுவார்கள். பழைய நாணயங்கள், கலைப்பொருள்கள் ஆகியவற்றைச் சேகரிக்க விரும்புவார்கள். அதனால் பழமைவாதிகள் என்ற பட்டமும் உண்டு. பேச்சு, குணம், மன வலிமை, கல்வியில் சிறந்து விளங்குதல் என சிறப்பாக வாழ்வார்கள். இக்கட்டான சூழ்நிலையிலும் நேர்வழியிலிருந்து தடம் மாறாமல் இருப்பார்கள்.

    கல்வி

    பிறக்கும் போது சனி தசா என்பதால் ஆரம்ப கல்வி சற்று மந்த தன்மையுடன் இருக்கும். பள்ளியில் சரியாக படிக்காத பலர் கல்லூரி வாழ்க்கை புதன் தசாவில் சாதனை மாணவர்களாக மாறுவார்கள். கெமிக்கல், பயோ கெமிஸ்ட்ரி, பரிசோதனை செய்யும் லேப் பற்றிய படிப்பு, இயந்திரங்கள் தொடர்பான படிப்புகள், ரேடி யாலஜி, ஸ்கேனிங் தொடர்பான படிப்புகள், தகவல் தொழில் நுட்பம், அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர், பல் மருத்துவர், காவல்துறை , ஆயுதப் பயிற்சி, விளையாட்டுத் துறை, ராணுவம். என்ஜினியரிங், புவியியல், வண்டி வாகனம் சார்ந்த படிப்புகள். விவசாயம், சீருடை பணிகள் சார்ந்த கல்விகள் அடங்கும்.

    தொழில்

    திர புத்தியும் புத்திசாலித்தனமும் அதிகமாக இருப்பதால் பெரிய அளவில் வியாபாரம் செய்வார்கள் அல்லது பெரிய நிறுவனங்களை நிறுவி அதில் பலரை வேலைக்கு அமர்த்துவார்கள். ஆடிட்டர், கணக்காளர் போன்ற துறைகளில் சாதிப்பவர்கள். வங்கி அதிகாரி, பதிப்பகம், எழுத்துத்துறை, கணித மேதை, ஆராய்ச்சியாளர், விஞ்ஞானிகள், புதுவித மருந்துகளை கண்டுபிடித்தல், தூதரகப் பணி, தகவல் தொழில் நுட்பம், சங்கேத வார்த்தை நிபுணர், பண்டைய மொழி ஆராய்ச்சி, அரசியல், அரசு சார்ந்த தொழில் உத்தி யோகங்கள் அமையும்.

    தர்ம ஸ்தாபனங்கள், கோவில் நிர்வாகம், ஊர்த் தலைமை போன்றவற்றில் கெளரவப் பதவி உண்டு. மேலும் ஹிப்னாடிசம், மந்திரம் தந்திரம் செய்தல், ஜோதிடம், உளவு பார்த்தல், புகைப்படக்கலை, சினிமா, இசை மற்றும் கலை தொடர்பான தொழில், கவுன்சிலிங், சைக்காலஜி, அறிவியல், எண்கணிதம், கணிதவியல், நிர்வாகம் தொடர்பான பணிகள், தொழிற்சாலை நடத்துதல், சுற்றுலா துறை தொடர்பான பணிகள் சிறப்பாக இருக்கும்.

    தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும். குடும்ப உறவுகளின் ஆதரவு உண்டு. தொட்டது துலங்கும். தாராள தன வரவு இருந்து கொண்டே இருக்கும். திரண்ட சொத்து உண்டு. பேச்சுத் திறமையால் அனைவரையும் கவர்வதில் வல்லவர்கள். பூர்வீகத்தில் வாழும் வாய்ப்பு குறைவு. பூர்வீக சொத்துக்கள் இருந்தாலும் தனது சொந்த உழைப்பினாலும், முயற்சியாலும் வீடு, வாகனம் ஆகியவற்றை வாங்குவார்கள். பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். பல சமயங்களில் பிறருக்காகவே உழைப்பார்கள். வாழ்க்கைத் துணையுடன் நல்ல புரிந்துணர்வு உண்டு. அன்பு, பாசம் நிறைந்த குடும்பத்தை உருவாக்குவார்கள். இளமைக் காலத்தில் சிறு துன்பங்களை சந்திக்க வேண்டிய நிலைமையில் இந்தாலும், 20 வயதில் இருந்து செல்வமும் செல்வாக்கும் வந்து சேரும்.

    தசா பலன்கள்

    சனி தசா: இது ஜென்ம தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 19.

    பிறந்த கால தசா இருப்பிற்கு ஏற்ப சனி தசாவின் கால அளவு மாறுபடும்.

    தந்தைக்கு தொழில் மந்தம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, மனக்கஷ்டம் ஏற்படும். சிறு வயதில் குழந்தை பருவத்தில் வெப்ப நோய், ஜீரணக் கோளாறு, பார்வை குறைபாடு, தண்ணீர் கண்டம், வீசிங் தொந்தரவு இருக்கும். மஞ்சள் காமாலை, எலும்பில்லாத உறுப்புகளில் அடிக்கடி தொந்தரவு இருக்கும்.

    ஐ.ஆனந்தி

    புதன் தசா: இது சம்பத்து தாரையின் தசாவாகும். இதன் தசா ஆண்டுகள் 17 வருடம். திருமணம், குழந்தை என சுப விசேஷங்கள் தொடரும். வாழ்க்கை வசந்த காலமாக இருக்கும். அரசாங்க ஆதரவு, சுகபோக வாழ்க்கையுண்டு. அதன் மூலம் பெரும் புகழும் செல்வமும் அடைவார்கள். உடல் ஆரோக்கியத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

    பூர்வீகச் சொத்துகளுடன் சுயமாகவும் சொத்து சேர்ப்பார்கள். கற்ற கல்வி பயன் தரும்.

    கேது தசா: இது மூன்றாவதாக வரக்கூடிய விபத்து தாரையின் தசாவாகும். இதன் தசா ஆண்டு 7 வருடம். சாண் ஏறினால் முழம் சறுக்கும். முயற்சிக்கு தகுந்த முன்னேற்றம் இருக்காது. பலருடைய விரோதமும் எதிர்ப்பும் இருக்கும். திடீர் ஏற்றம் அல்லது எதிர்பாராத இறக்கம் அமையும். தன் சக்திக்கு மீறிய காரியத்தில் ஈடுபட்டு மன வேதனை அடைவார்கள், இவர்களின் உழைப்பு பிறருக்கே பயன்படும்.

    சுக்ர தசா: இது நான்காவதாக வரக்கூடிய சாதக தாரையின் தசாவாகும். பிறப்பு கால சனி தசா குறைந்த வருடமாக இருக்க பிறந்தவர்களுக்கு இது பொற்காலமாக இருக்கும். வாழ்வில் அடைய வேண்டிய அனைத்து இன்பங்களையும் அடைவார்கள். பலர் சுய திறமையால் வாழ்க்கையில் முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பார்கள். கடன்களால், எதிரிகளால் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். திரண்ட சொத்து, பணம், நகை என பெரிய சாம்ராஜியத்தை உருவாக்குவார்கள்.

    சுய ஜாதக ரீதியாக திருமண தடை உள்ளவர்களுக்கு இந்த காலத்தில் திருமணம் நடக்கும். சிலருக்கு மறுவிவாகம் நடக்கும். நவீன வசதிகளுடன்கூடிய வீடு. புதுப் புது வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.

    சூரிய தசா: இது ஐந்தாவதாக வரக் கூடிய பிரத்யக் தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் ஆறு ஆண்டுகள். அனுபவ அறிவு அதிகம் இருக்கும். சற்று முன்கோபம் வரும்.

    சிறு சிறு வாக்கு வாதங்கள் செய்து கொண்டே இருப்பார்கள்.

    கொள்கையில் பிடிவாதம் அதிகரிக்கும். சில நேரங்களில் கோபத்தில் கடுமையாகப் பேசிவிட்டு, பிறகு அதற்காக வருந்துவார்கள்.

    சமூக சேவை செய்வதில் ஆர்வம் கூடும். வயோதிகம் காரணமாக சிறு சிறு உடல் நல பாதிப்புகள் இருக்கும்.

    சந்திர தசா: இது ஆறாவதாக வரக் கூடிய சாதக தாரையின் தசாவாகும்.

    எப்போதும் சுறுசுறுப்பாக எதையாவது செய்தபடியே இருப்பார்கள். எதிலும் பிடிவாத குணம் அதிகமாகும். காலம் தாழ்த்திய சாதக தாரையின் தசா என்பதால் நல்ல வாழ்வாதாரம் இருந்தால் கூட பெரியதாக எதையும் அனுபவிக்க முடியாது. பேரன், பேத்தி பிள்ளைகளின் சுப விசேஷம் என வாழ்க்கை சுமூகமாக இருக்கும். ஆனால் மனதில் இனம் புரியாத சோகம் மற்றும் வெறுமையுடன் வாழ்வார்கள்.

    அனுஷம் நட்சத்திரத்தின் சிறப்புகள்

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் தான் நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள்.பல்வேறு சிறப்பு அம்சங்கள் இவரின் ஜாதகத்தில் நிறைந்துள்ளதால் இவர் உலகப் புகழ் பெற்றுள்ளார். உலகெங்கும் அவரது புகழ் பரவி அந்தஸ்து கவுரவம் உயர்ந்து கொண்டே செல்கிறது.

    அதனால் தான் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் வெற்றி மழையில் நனைந்து வருகிறார்.

    இவரது ஜென்ம நட்சத்திரமான அனுஷத்தின் தாரை வடிவமான தாமரை சின்னமும் வெற்றிக்கு உதவி செய்கிறது.

    கால புருஷ லக்னமான மேஷத்திற்கு விருச்சகம் எட்டாவது வீடாகும். எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானம். பெண்ணிற்கு

    மாங்கல்ய ஸ்தானம் எனப்படும். உடலில் கழிவு உறுப்புகளைக் குறிக்கும் இடம். இந்த நட்சத்திரத்தில் விவாகம், ருது சாந்தி, சாந்தி முகூர்த்தம்,கர்ப்பதானம் செய்யலாம். முதன் முதலில் அரைஞான் கட்டலாம்..

    கிரகப்பிரவேசம் செய்வதற்கு கிரக ஆரம்பம் செய்வதற்கு உகந்த நாளாகும்.

    இந்த நட்சத்திரம் நாளில் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பரை வழிபட்டால் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும். ஆயுள் விருத்தியாகும். ஆரோக்கியம் சீராகும். எதிரிகள் தொல்லை குறையும். அபிச்சார தோஷங்கள் விலகும் ஆயுதம் பயில ஆயுதப் பிரயோகம் செய்யவும் உகந்த நாளாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை அடைய விரும்புபவர்கள் இந்த நட்சத்திரம் வரும் நாளில் பைரவரை வழிபட்டு புதிய முயற்சிகளைத் துவங்கலாம்.

    நட்சத்திர பட்சி: வானம்பாடி

    யோகம்: சித்தி

    நவரத்தினம் : நீலம்

    உடல் உறுப்பு:வயிறு

    திசை: மேற்கு

    பஞ்சபூதம்: நெருப்பு

    அதிதேவதை: லட்சுமி

    நட்சத்திர மிருகம்: பெண் மான்

    நட்சத்திர வடிவம்: குடை, தாமரை

    சம்பத்து தாரை : கேட்டை, ரேவதி, ஆயில்யம்

    சேம தாரை : பூராடம், பரணி, பூரம்

    சாதக தாரை: திருவோணம், ரோகிணி, அஸ்தம்

    பரம மிக்ர தாரை: விசாகம், பூரட்டாதி, புனர்பூசம்

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் தாமரை மலரில் அமர்ந்த நிலையில் உள்ள மகாலட்சுமியை வழிபட செல்வச் செழிப்பு மிகுதியாகும்.

    நம்முடன் வாழ்ந்து மறைந்த மகான் ஸ்ரீ காஞ்சி மகானை அனுசம் நட்சத்திரத்தில் வழிபட்டால் பிறவிப் பயன் நீங்கி சுபிட்சம் உண்டாகும். ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும் சாதக தாரையான 6-வது நட்சத்திர நாளில் குடை தானம் வழங்குவது மேன்மையான பலன் தரும்.

    செல்: 98652 20406

    • கருவறைக்குள் இருக்கும் முருகப் பெருமானை சுட்டிக்காட்டி, “இவர்தான் தமிழ்க் கடவுள் முருகர்” என்றனர்.
    • யோகம் என்பது தியானம் அல்லது தவம் செய்து இறைவனை வழிபட்டு பலன் பெறுவதாகும்.

    திருச்செந்தூர் முருகப்பெருமான் தலம் ஆதிகாலத்தில் சந்தன மலையும், சந்தன மரங்களும் நிரம்ப பெற்றதாக இருந்தது. அந்த காலக்கட்டத்தில் அருகில் உள்ள கொற்கை, காயல் நகரங்கள் மிகச்சிறந்த துறைமுக நகரங்களாக திகழ்ந்தன.

    சங்க காலத்தில் கிரேக்கம் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து வியாபாரம் செய்வதற்காக வெளிநாட்டவர்கள் இந்த துறைமுகங்களுக்கு வருவது உண்டு. அவர்கள் தமிழகத்தில் அபரிமிதமாக கிடைத்த மிளகு, கிராம்பு, சந்தனம் ஆகியவற்றை விரும்பி வாங்கி சென்றனர்.

    அதோடு தமிழக கடலோர பகுதிகளில் கிடைத்த முத்துக்கள், சங்குகள் ஆகிய வற்றையும் அதிகளவில் தங்கள் நாட்டுக்கு வாங்கிச் சென்றனர். அப்படி வரும் வெளி நாட்டவர்களை நமது நாட்டில் "மிலேச்சர்கள்" என்று சொல்வது உண்டு. இந்த மிலேச்சர்கள் சங்க காலத்தில் தென் தமிழக மக்களோடு மிகவும் நெருங்கி பழகினார்கள்.

    சில மிலேச்சர்கள் தமிழக மன்னர்களுடன் மிகவும் நட்புடன் இருப்பது உண்டு. அந்த மிலேச்சர்களை தமிழக மன்னர்களில் சிலர் தங்களது மெய்காவலர்களாக நியமித்ததாகவும் வரலாற்று குறிப்புகள் உள்ளன. இத்தகைய சிறப்புடைய மிலேச்சர்களில் சிலர் தமிழ்நாட்டில் வரைமுறை மீறி நடந்தது உண்டு.

    அத்தகைய ஒரு மிலேச்சன் மூலம் ஒரு தடவை திருச்செந்தூர் முருகன் அற்புதமான ஒரு திருவிளையாடலை நடத்தி காண்பித்தார். அந்த திருவிளையாடல் மூலம் திருச்செந்தூர் தலம் மோட்சத்தை தரக்கூடிய சாயுச்சிய பதவி தரும் தலம் என்ற சிறப்பை பெற்றது. இந்த உண்மை நிகழ்வு பல்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கிய அந்த மிலேச்சன் ஒரு தடவை திருச்செந்தூர் ஆலயத்துக்கு வந்தான். அந்த கால கட்டத்தில் சந்தன மலை அடிவாரத்தில் திருச்செந்தூர் முருகன் ஆலயம் அமைந்து இருந்தது. திருச்செந்தூர் ஆலயத்தில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை பார்த்ததும் அவனுக்குள் அவற்றை சூறையாடி தனது நாட்டுக்கு எடுத்துச் சென்று விட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

    வியாபாரியாக வந்து கொள்ளையனாக மாறிய அவன் திருச்செந்தூர் ஆலயத்தின் முன்னே நின்று நோட்டமிட்டான். அங்கு வந்த பக்தர்கள் சிலரிடம் உள்ளே என்னென்ன இருக்கிறது? என்று கேட்டான். அப்போது பக்தர்கள் அவனை ஆலயத்துக்குள் அழைத்துச் சென்றனர்.

    கருவறைக்குள் இருக்கும் முருகப் பெருமானை சுட்டிக்காட்டி, "இவர்தான் தமிழ்க் கடவுள் முருகர்" என்றனர். அதற்கு அந்த மிலேச்சன் முருகர் பற்றிய கூடுதல் தகவல்கள் கேட்டான். உடனே பக்தர்கள், "சுயஜோதி வடிவமாக இருக்கும் பரமசிவன் தனது நெற்றில் கண்ணில் இருந்து உருவாக்கியவர்தான் இந்த முருகர். மக்களை தொல்லை செய்த சூரபத்மனையும், அவனது ஆட்களையும் சம்ஹாரம் செய்வதற்காக இந்த முருகனின் அவதாரம் நிகழ்ந்தது. அவருக்கு தேவசேனாதிபதி என்பது உள்பட பல பெயர்கள் இருக்கிறது" என்று பெருமையோடு சொன்னார்கள்.

    இதை கேட்ட மிலேச்சனுக்கு முருகப்பெருமானின் உடலில் கிடந்த அணிகலன்கள்தான் கண்களை கவர்ந்தன. இந்த முருகனிடம் கேட்டால் என்னவெல்லாம் தருவார் என்று அந்த மிலேச்சன் சற்று ஆணவத்துடனும், அலட்சியத்துடனும் கேட்டான்.

    அதற்கு பக்தர்கள், "திருச்செந்தூர் முருகனை மனமுருக வணங்கினால் நினைப்பது நடக்கும். வாழ்வில் துன்பத்தை நீக்கி இன்பத்தை தருவார். இந்த பிறவியில் சகல செல்வங்களையும் தந்து ஆட்கொள்வார்" என்றனர்.

    இதைக் கேட்டதும் மிலேச்சனுக்கு பக்தி வரவில்லை. அழகு முருகனின் சிலையை ஆபரணங்களுடன் கடத்திச் செல்ல வேண்டும் என்றே நினைத்தான். அதற்காக அவன் நாடகம் ஆடினான். இந்த முருகர் என்னை எப்படி தடுக்கிறார் பார்ப்போம் என்று வாளை ஓங்கியபடி கருவறைக்குள் ஓடினான்.

    முருகர் சிலையை வெட்டி சிதைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்ற அவன் வந்த வேகத்தில் கால் தடுமாறி கீழே விழுந்தான். முருகனின் கமலபாதத்தில் அவனது தலை வேகமாக மோதியது. அடுத்த வினாடி அவனது உயிர் பிரிந்தது. அவனது உடல் முருகப்பெருமானை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவது போல கிடந்தது. அவனது உயிர் பறிக்கப்பட வேண்டும் என்பது அன்றைய விதியாகும். இதற்காகவே எமதர்மராஜாவும் தனது பாசக்கயிற்றுடன் தயாராக வந்தார். அந்த மிலேச்சனை பாசக்கயிற்றில் கட்டி அழைத்துச் செல்ல முயற்சி செய்தார்.

    அப்போது முருகப்பெருமான் அதிரடியாக எமதர்மராஜனை தடுத்து நிறுத்தினார். இதைக் கண்டதும் எமதர்மராஜா அதிர்ச்சி அடைந்தார். முருகப்பெருமான் சின்முத்திரையாக ஜொலிப்பதை கண்டு பரவசம் ஆனார். கையெடுத்து கும்பிட்டு முருகனை வணங்கினார்.

    "எனது அகஇருளை போக்கும் சுடர்மணியே" என்று முருகனை எமதர்மன் போற்றி பாடினான். முருகன் அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தார். அதன் பிறகே எமதர்மராஜாவுக்கு நிம்மதி வந்தது. அவர் முருகப்பெருமானிடம், "இவனது உயிரை கவர்ந்து செல்லவே இங்கு தயாராக வந்து இருக்கிறேன்" என்றார்.

    அதற்கு முருகப்பெருமான், "இந்த உலகில் சொல்ல முடியாத அளவுக்கு பாவங்கள் செய்தவர்களும் இந்த தலத்துக்கு வந்து விட்டால் அவர்களது பாவம் விலகி விடும். அதுவும் எனது காலடி நிழலில் சரண் அடைந்து விட்டால் அவர்களுக்கு சாயுச்சிய பதவி எனும் மோட்சம் வழங்கப்படும். அதன்படி இந்த மிலேச்சன் மோட்சம் பெற்று விட்டான்" என்றார்.

    இதை கேட்டதும் எமதர்மன் நிலை தடுமாறினான். அடுத்து என்ன செய்வது புரியாமல் நின்று கொண்டு இருந்தான். அவனிடம் முருகப்பெருமான் மீண்டும், "இவன் எனது காலடியில் விழுந்ததால் சகல பாவங்களும் நீங்கி மோட்சத்துக்கு சென்று விட்டான். இந்த தலமானது தேவர் உள்பட அனைவரும் வணங்கி பலன் பெறக்கூடிய தலமாகும்" என்றார்.

    இதை கேட்டதும் எமதர்மனுக்கு புரிந்தது. திருச்செந்தூர் தலத்தில் முருகப்பெருமானை சரண் அடைந்தவர்களை அணுக கூடாது என்று முடிவு செய்தான். முருகப் பெருமானை வழிபட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றான்.

    இந்த நிகழ்ச்சியை வியாச முனிவர் தனது மகன் சுகபிரம்ம மகரிஷிக்கு தெரிவித்தார். இதை முனிவர்கள் அனைவரும் கேட்டறிந்தனர். அவர்களிடம் வியாச முனிவர் ஒரு கருத்தை வலியுறுத்தி கூறினார். "யாருக்கு மோட்சம் எனும் சாயுச்சிய பதவி வேண்டுமோ அவர்கள் திருச்செந்தூர் தலத்துக்கு சென்று முருகனை சரண் அடைந்தாலே போதும்" என்றார்.

    பொதுவாக இறைவனை அடைவதற்கான வழிகளாக சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கையும் நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். சரியை என்பதும் கோவில்களுக்கு செல்வது, பூஜைகள் என்பதாகும். கிரியை என்பது மந்திரம் சொல்லி வழிபடுவதாகும்.

    யோகம் என்பது தியானம் அல்லது தவம் செய்து இறைவனை வழிபட்டு பலன் பெறுவதாகும். ஞானம் என்பது இவை அனைத்துக்கும் மேலான நிலையில் அமைதியான மனநிலையுடன் இறைவனை வணங்கி அவருடன் ஒன்றிணைவதாகும்.

    இந்த நான்கையும் யார் ஒருவர் முழுமையாக கடைபிடிக்கிறார்களோ அவர்களுக்கு முக்தி எனும் மோட்சம் எளிதில் கிடைக்கும். இறைவறை அடைவதற்கு உடைய முக்தி நிலைகள் நான்கு வகைகளாக இருப்பதை நமது முன்னோர்கள் வரையறுத்துள்ளார்கள்.

    சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகிய நான்கும்தான் இறைவனை அடைவ தற்கான முக்தி பாதைகளாகும். இதில் சாலோகம் என்பது இறைவன் இருக்கும் இடத்தில் அவனோடு சேர்ந்து வாழ்வதை குறிக்கும். சாமீபம் என்பது இறைவனுக்கு பக்கத்தில் அமர்ந்து நெருக்கமாக வாழ்வதை குறிக்கும்.

    சாரூபம் என்பது இறைவனின் பிரதிநிதியாகவே வாழும் உன்னத நிலையை எட்டுவதாகும். இறைவனுக்கு செய்யப்படும் அனைத்தும் இந்த முக்தியை எட்டியவர்களுக்கும் கிடைக்கும்.

    ஆனால் சாயுச்சியம் என்பது இறைவனோடு இரண்டற கலந்து விடுவதாகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் முருகன் தரும் சாயுச்சிய பலம் காரணமாக முருகனோடு இரண்டற கலந்து விடலாம். இந்த பலனை தரும் ஒரே முருகன் தலம் திருச்செந்தூர் ஆலயம் என்பது புராணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. எனவே முருகனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கும் பக்தர்கள் திருச்செந்தூர் முருகனை சரண் அடைய வேண்டும்.

    இதை உணர்த்த தான் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே முருகப்பெருமான் திருவிளையாடல் நடத்தினார். இதே போன்று இன்னொரு திருவிளையாடலை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை பார்க்கலாம்.

    • உண்மையிலேயே அப்படிப்பட்ட மான் குட்டிகள் அருகில் வந்து அதை தொட்டு தடவி கொடுத்து மகிழும் வாய்ப்பும் ஜப்பானில் எனக்கு கிடைத்தது.
    • அமைதி நினைவு அருங்காட்சியகம் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

    மான் குட்டியே...

    புள்ளி மான் குட்டியே

    உன்மேனிதான்

    ஒரு பூந்தொட்டியே....

    என்ற பாடலை கேட்டு ரசித்து இருப்போம். நிஜத்தில் மான் குட்டியை அருகில் சென்று பார்த்து ரசித்து இருப்போமா?

    பெரும்பாலும் அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. ஒரு வேளை பூங்காக்களிலோ, மிருக காட்சி சாலைகளிலோ அந்த வாய்ப்பு கிடைத்தாலும் நாம் அருகில் சென்றதும் அந்த புள்ளி மான்கள் துள்ளி ஓடிவிடும்.

    துள்ளி ஓடும் மான்களை பார்த்தாலே வாவ்... எவ்வளவு அழகாக இருக்கிறது. இந்த மான்கள். நம் அருகில் வந்தால்... அதை தொட்டு பார்த்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்று ஏங்கி இருப்போம்.

    உண்மையிலேயே அப்படிப்பட்ட மான் குட்டிகள் அருகில் வந்து அதை தொட்டு தடவி கொடுத்து மகிழும் வாய்ப்பும் ஜப்பானில் எனக்கு கிடைத்தது.

    நம்மூரில் ஆட்டு குட்டிகள், நாய் குட்டிகள் எங்கு பார்த்தாலும் நடமாடும். கூப்பிட்டால் நம் அருகில் வரவும் செய்யும். அதைப் போலதான் ஜப்பானில் ஹிரோஷிமா அருகில் உள்ள மியாஜிமா என்ற நகரில் எங்கு பார்த்தாலும் மான்கள் சுற்றிக்கொண்டிருக்கும். அதை பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது.

    மெல்ல மெல்ல நடந்து மான்கள் அருகில் சென்றேன்.

    ஆனால் என்னை பார்த்து அந்த மான்கள் ஓடவில்லை. தொட்டேன். ஆசையில் தடவினேன். ம்கூம்... நகரவில்லை. அதன் அருகில் இருந்து புகைப்படமும் எடுத்து கொண்டேன். மானை அருகில் சென்று தொட்டு பார்த்தது இதுவே முதல் தடவை பார்ப்பதற்கு அழகாகவும், தொட்டு பார்த்தால் மிருதுவாகவும் சூப்பராக இருந்தது. அதனால் தான் மான்களை எல்லோருக்கும் பிடிக்கிறது.

    அதனால் தான் கவிஞர்களும் மான்களின் அழகில் மயங்கி பாடல் எழுதுகிறார்கள் என்று நினைத்து கொண்டேன்.

    ஹிரோஷிமா...

    முதல் முறையாக அந்த நகரத்தை பார்க்க சென்றேன். இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான நகரம் என்று வரலாற்றில் படித்து இருக்கிறேன். எனவே எப்படியாவது அந்த நகரத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போது அந்த நகரத்தில் நின்று கொண்டிருக்கிறேன்.

    ஹிரோஷிமாவுக்கு செல்பவர்கள் பார்க்க வேண்டிய இடம் அங்கு கட்டமைக் கப்பட்டிருக்கும் அருங்காட்சியகம் தான்.


    அமைதி நினைவு அருங்காட்சியகம் என்று பெயர் வைத்துள்ளார்கள். உள்ளே சென்றதும் அங்கு காட்சி படுத்தப்பட்டுள்ள பொருட்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அணு குண்டு கதிர்வீச்சு பேரழிவின் ஆறாத வடுக்களை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.

    கொத்து கொத்தாக மாண்ட மக்கள் விட்டுச் சென்ற உடமைகள், அந்த பேரழிவின் புகைப்பட காட்சிகளில் இடம் பெற்றுள்ளன.

    அணுகுண்டு வீச்சுக்கு முன்பிருந்த ஹிரோஷிமா நகரத்தையும் அந்த பேரழிவையும் பார்க்கும் போது எப்படி இருந்த அழகிய நகரம் இப்படி சிதைத்து உருக்குலைந்து போயிருக்கிறதே என்று நடுக்கத்துடன் பார்க்க வைக்கிறது.

    அந்த அணுகுண்டு வீசப்பட்ட போது அதில் இருந்து வெளியேறிய கதிர் வீச்சுகள் கருமை நிறத்தில் வந்ததாகவும் உடனே ஏற்பட்ட தாகத்தால் வாயை திறந்த படி அங்குமிங்கும் ஓடியிருக்கிறார்கள். கதிர் வீச்சின் தாக்கத்தை தாக்கு பிடிக்க முடியாமல் அங்கு மிங்கும் ஓடியவர்கள் அதை சுவாசிக்க சுவாசிக்க செத்து விழுந்திருக்கிறார்கள்.

    ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்த ஒருவர் உடல் முழுவதும் அரிக்கப்பட்டு அவர் அமர்ந்து இருந்ததற்கான அடையாளம் மட்டும் கருமையாக இருந்து இருக்கிறது.

    அதை அப்படியே சேகரித்து காட்சிபடுத்தி இருக்கிறார்கள்.

    குண்டு வீச்சின் வெப்பத்தால் மரம், கல், உலோகம், கண்ணாடி ஆகியவை எந்த மாதிரி பாதிப்புகளை சந்தித்தது என்பதும் கட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    மனிதர்களின் சதைகள் வெந்து போனதும், கட்டிடங்கள் நெருப்பு பிழம்புகள் போல பழுத்து இருந்ததையும் புகைப்படங்களாக காட்சி படுத்தி இருக்கிறார்கள்.

    பொதுவாக அருங்காட்சியகங்களை பார்த்தால் சுகமான நினைவுகளுடன் வெளியே வருவார்கள். ஆனால் இந்த காட்சி அரங்கத்தை பார்த்தால் சோகமான கனத்த இதயத்துடன் தான் வெளி வர முடிகிறது. இனி இப்படி ஒரு போர் வரக்கூடாது என்பதே இதை பார்ப்பவர்களின் பிரார்த்தனையாக இருக்கும். இவை அமைந்து இருப்பது ஒரு பூங்காவில் மிகப்பெரிய அரங்கத்தில். ஆனால் வெளியே நகரத்தில் பாதிப்புகள் எதுவும் தெரியவில்லை. மிகப்பிரமாண்டமாக அந்த நகரத்தை மீண்டும் கட்டி எழுப்பி இருக்கிறார்கள்.

    பாதிப்பு காட்சிகளையும் இப்போது மீட்கப்பட்டுள்ள அந்த நகரத்தின் அழகிய தோற்றத்தையும் பார்க்கும் போது இதற்காக எவ்வளவு உழைத்து இருப்பார்கள் என்பதை யூகிக்க முடிகிறது.

    இவ்வளவு பேரழிவையும் தாங்கி, தாண்டி எழுந்து ஒரு முன்னணி நாடாக ஜப்பான் உயர்ந்து நிற்பதை பார்க்கும் போது அந்த மக்களின் கடுமையான உழைப்பின் மீது மிகப்பெரிய மரியாதை வருகிறது.

    ஜப்பானின் இந்த முன்னேற்றத்தை பார்த்து தான் கவிஞர் கண்ணதாசன் அன்றே பாடினார். 'சின்னஞ்சிறிய ஜப்பான் நாடு என்ன முன்னேற்றம் காலை எழுந்ததும் ஆணும்-பெண்ணும் என்ன துடிதுடிப்பு. காலும், கையும் எந்திரம் போலே என்ன சுறு சுறுப்பு...' என்று...!

    பத்து நாட்கள் நான் ஜப்பானில் இருந்ததை அறிந்ததும் ரசிகர்கள் முக நூல்கள் வாயிலாக தேடியிருக்கிறார்கள். அதை பார்த்து ரொம்ப ஆச்சரியப்பட்டேன். இன்றும் ஜப்பான் ரசிகர்கள் கொண்டாடும் மீனாவாக உங்கள் மீனா இருக்கிறேன் என்பதை நிமனைத்தாலே பெருமையாக இருக்கிறது.

    மலையாள நட்சத்திரங்களுடன் இணைந்து ஐக்கிய அரவு நாடுகளில் நடத்தப்பட்ட கலக்கல் கலை நிகழ்ச்சிகள்...

    மறக்க முடியாத அந்த நினைவுகளை அடுத்த வாரம் பகிர்கிறேன்...

    (தொடரும்)...