என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special articles"

    • சில அமைப்புகள் ஒரு ஜாதகத்தில் இருந்தால் நிச்சயமாக அந்த ஜாதகர் தனவானாக தர்ம பிரபுவாக கோடீஸ்வரனாக வாழ்வார்கள்.
    • பிறவியில் ஏழையாக இருந்தாலும் அதீத பொருளாதார வளர்ச்சி உண்டு.

    ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது புத்தரின் வாக்காகும். ஆனாலும் ஆசைப்படாத மனிதர்களே உலகத்தில் இருக்க முடியாது. 50 ரூபாய் சம்பாதிப்பவர்களுக்கு ஐந்தாயிரம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை வரும். வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆசையும் விருப்பங்களும் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். ஒருவரின் ஆசையும் விருப்பமும் நிறைவுபெறுமா? என்பதை ஒரு ஜாதகத்தில் 11-ம் மிடமான லாப ஸ்தானத்தின் மூலமே அறிய முடியும். ஒருவர் தன் வாழ்வில் விரும்பிய அனைத்தையும் அடைய லாப ஸ்தானம் உதவ வேண்டும். எந்த ஒரு பாவக பலனை ஒரு ஜாதகர் அடைய விரும்புகிறாரோ அந்த பாவகத்திற்கு 11-ம்மிடம் சுபத்துவமாக இயங்கினால் மட்டுமே ஜாதகருக்கு கைமேல் பலன் கிடைக்கும். உதாரணமாக ஒரு ஜாதகரின் செல்வாக்கு, புகழ், அந்தஸ்து கவுரவம், தோற்றப் பொலிவு, வாழ்க்கை நிலை போன்றவற்றை லக்ன பாவகத்தின் மூலமே அறிய முடியும்.

    லக்ன பாவத்திற்கு லாப ஸ்தானமான 11-ம்மிடம் வலிமையாக செயல்பட்டால் மட்டுமே ஜாதகருக்கு செல்வாக்கு, புகழ், அந்தஸ்து கவுரவம், போன்றவைகள் நிலைத்து நிற்கும். ஒருவரது விருப்பங்கள் லட்சியங்கள் கனவுகள் ஆசைகள், பலவிதமான வழிகளில், லாபங்கள், செல்வ செழிப்பு, நல்ல வருமானம் நிலை, பலமொழி தேர்ச்சி ஆகியவற்றை கூறுவது 11-ம்மிடமான லாப ஸ்தானமாகும். 11-ம் பாவக பலன்களை ஒருவர் பரிபூரணமாக அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு லாப ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் அதற்கான கொடுப்பினை பதியப்பட்டு இருக்க வேண்டும். அதாவது ஒன்பதாம் இடம் என்பது ஜாதகரின் பாக்கியஸ்தானம்.

    ஜாதகரின் முன்னோரும் ஜாதகரும் கடந்து வந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்து இருந்தால் இந்த ஜென்மத்தில் ஜாதகர் செல்வந்தராக பல தொழில் வித்தகராக வாழ முடியும். அதேபோல் ஒருவருக்கு குழந்தை பிராப்தம் இல்லை எனில் 5-ம், 9-ம்மிடத்தையும் குருவின் நிலையையும் பார்க்க கூடாது. இந்த 5,9-ம் பாவகம் மூலம் பூர்வ புண்ணிய ஸ்தானப்படி. பாக்கிய ஸ்தான பலப்படி இந்த ஜாதகருக்கு குழந்தை பாக்கியத்தை அனுபவிக்க கூடிய கொடுப்பினை உள்ளதா என்பதை அறிய முடியும். ஆனால் வீரியம் (3ம் பாவகம்) இருந்தால் மட்டுமே 5-ம்மிடம் எனும் பூர்வ புண்ணிய பலப்படி குழந்தை பிறக்கும். 5-ம் பாவகத்திற்கு லாப ஸ்தானம் 3-ம்மிடம் சிறப்பாக இயங்கினால் ஜாதகர் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். பல்வேறு சூட்சுமங்களையும் அடக்கியது ஜோதிடம். கீழ்கண்ட சில அமைப்புகள் ஒரு ஜாதகத்தில் இருந்தால் நிச்சயமாக அந்த ஜாதகர் தனவானாக தர்ம பிரபுவாக கோடீஸ்வரனாக வாழ்வார்கள்.

    11-ம் அதிபதி சர ராசியில் நின்றால் தடையில்லாத பண வரவு இருக்கும். 11-ம் அதிபதி ஸ்திர ராசியில் நின்றால் லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் மாத வருமானம் அல்லது வருட வருமானமாக இருக்கும்.

    11-ம் அதிபதி உபய ராசியில் நின்றால் வரக் கூடிய வருமானம் நிலையற்றதாக இருக்கும். 11-ம் அதிபதியின் சாரத்தில் ஏதாவது ஒரு கிரகம் நின்றால் ஜாதகருக்கு உபரியான சரளமான பணப்புழக்கம் உண்டு.

    11-ம் பாவகத்தை ஏதாவது ஒரு கிரகம் பார்த்தாலும் நின்றாலும் தேவைக்கு அதிகமாக பணம் வரும். 11-ம் பாவக அதிபதி யோகியின் நட்சத்திரத்தில் இருந்தால் சிறப்பான பொருளாதாரம் உண்டு.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

     

    11-ம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்றால் தொடர்ச்சியாக நல்ல வருமானம் வந்து கொண்டே இருக்கும். 11-ம்மிடத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்ற கிரகம் நின்றாலும் தாராளமான தனவரவு இருக்கும்.

    கிரகச் சேர்க்கையை பொருத்தவரை 11-ம்மிடமான லாப ஸ்தானத்திற்கு குரு+சுக்ரன், குரு+சந்திரன், சனி + சுக்ரன், சனி + குரு சேர்க்கை சம்பந்தம் இருந்தால் ஜாதகருக்கு பொருளாதாரத்தில் மேன்மையான பலன்கள் உண்டாகும். ஒருவருக்கு சுய ஜாதக ரீதியான பணம் வரக்கூடிய அமைப்பு இல்லை என்றால் கோட்ச்சார கிரகங்கள் 11-ம் மிடமான லாபஸ்தானத்திற்கு சம்பந்தம் வரும்போது பணவரவை ஏற்படுத்தி தரும்.

    ஒரு கேந்திராதிபதியும் ஒரு திரிகோணாதி பதியும் சேர்ந்து 11-ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றால் அதன் தசா புத்தி காலங்களில் ஜாதகருக்கு அதிகப்படியான பணம் வரும். இதில் 11ம் மிடம் பாதகஸ்தானமாக இருந்தால் தேவைக்கு அதிகமாக பணம் இருந்தாலும் ஜாதகரால் அதை பயன்படுத்த முடிவதில்லை. அது ஜாதகரைச் சார்ந்தவர்களுக்கே பெரும்பான்மையாக பயன்படும்.

    9-ல் குரு 11-ல் சுக்கிரன் ஜாதகர் மிகப்பெரிய தனவானாக இருப்பார். தன அதிபதி 11-ல் நின்றால் ஜாதகர் எப்பொழுதும் பணம் சம்பாதித்துக் கொண்டே இருப்பார்.

    ஒருவர் எந்த ராசியாக இருந்தாலும் லக்னத்திற்கும் தனஸ்தானத்திற்கும் முன்பின் ராசிகளில் சுப கிரகங்கள் இருந்தால் வாழ்நாள் முழுவதும் உபரி லாபம் கிடைத்துக் கொண்டே இருக்கும். பல்வேறு வகையில் தனபிராப்தி, சொத்து சேருதல், எதிர்பாராத அசுர வளர்ச்சி, திடீர்யோகம், உழைப்பில்லாத செல்வம், உயில் சொத்து, பினாமி பணம், சொத்து பல வகையில் வருவாய், லாபம் போன்றவற்றை குறிப்பது 11-ம் மிடமான லாப ஸ்தானம்.

    ஒரு ஜாதகத்தில் லாபாதிபதி சாரத்தில் அதிக கிரகம் இருக்கலாம். 11-ம் அதிபதியின் நட்சத்திர சாரத்தில் பலம் பெற்ற கிரகம் நின்றால் ஜாதகர் அதிர்ஷ்டப்பிறவி. கூட்டுக் குடும்பத்தில் சித்தப்பா, மூத்த சகோதரருடன் வசதியான கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வாழ்வார்கள்.

    அவர்களால் லாபமும், அதிர்ஷ்டமும் உண்டாகும். கோடீஸ்வர யோகம், சமுதாய அந்தஸ்து, அரசியல் ஆர்வம், அதிகாரம், கவுரவம் உண்டு. குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில் நடத்துவார்கள். கூட்டுத் தொழில் வெற்றி தரும். தொட்டதெல்லாம் பொன்னாகும். அதிகமான ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கும். சிலருக்கு இரண்டாவது குடும்பம் அமைந்த பிறகு பண வரவு அதிகமாகும். ஜாதகருக்கு பணம் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் லாபம் தரும். சிறுவயதிலேயே வருமானம் ஈட்டத் துவங்குவார்கள். வங்கித் தொழில், வட்டித் தொழில், பைனான்ஸ், சீட்டு பிடித்தல் போன்றவற்றில் நல்ல ஆதாயம் உண்டு. பேச்சை ழூலதனமாக கொண்ட தொழிலில் சாதனை படைப்பார்கள். அடுத்தவர் பிரச்சினையை தீர்த்து வைப்பவர். தன் சுய சம்பாத்தியத்தில் வீடு, வாகனம், சொத்து சுகம் போன்ற வசதிகளை அடைவார்கள். ஜாதகருக்கு மூத்த சகோதரத்தால், சித்தப்பாவால் ஆதாயம் உண்டு. பிறவியில் ஏழையாக இருந்தாலும் அதீத பொருளாதார வளர்ச்சி உண்டு.

    லாப ஸ்தான அதிபதியின் நட்சத்திர சாரத்தை எந்த கிரகமும் பெறவில்லை எனில் பொது வாழ்க்கையில் பிரச்சினைகள், ஏமாற்றங்கள் வரும். தீய சகவாசத்தால் பெயர் கெடும். எவ்வளவு சம்பாதித்தாலும் இவர்களால் பணத்தை சேமித்து வைக்கவே முடியாது. பொருளாதாரத்தில் தன் நிறைவற்ற நிலையைத் தரும்.

    இருதார யோகமும் லாப ஸ்தானமும் ஒரு காலத்தில் இலை மறைவு காய் மறைவாக நடந்த இரண்டாம் திருமணங்கள் அல்லது சட்டத்திற்கு உட்படாத மறைவான திருமண வாழ்க்கை இருந்து வந்தது. தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் வெகு சாதாரணமாகிவிட்டது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற மரபு மறைந்துவிட்டது.

    இதற்குக் காரணம் சமூக சீர்கேடா அல்லது ஜாதகமா என்று ஆய்வு செய்தால் சமூகச் சீர்கேடு தான் என்பது என்னுடைய கருத்து. சுமார் 20 வருடங்களுக்கு குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் பெரியவர்களின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள். தற்போது ஆண் பெண் இருவரும் படித்து வேலைக்கு செல்வதால் சுய முடிவு எடுத்து தமது வாழ்க்கை சீரழிவதற்கு தாமே காரணமாகிறார்கள்.

    7-ம் அதிபதிக்கு லாப ஸ்தான சம்பந்தம் இருந்தால் தம்பதிகள் திரண்ட சொத்து, ககம் நிரம்பியவர்கள். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயமும் அனுகூலமும் கிடைக்கும். செல்வம், செல்வாக்கு நிரம்பிய வாழ்க்கை துணை உண்டு. வருமானம் எந்த வழியில் வருகிறது என்று உணர முடியாத வகையில் குபேர சம்பத்து கிடைக்கும். பெரும்பாலும் கூட்டுக் குடும்பமாக வாழ்வார்கள். நல்ல வசதியான வாழ்க்கைத் துணை அமையும். அல்லது திருமணத்திற்கு பிறகு பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். நிலையான பொருளாதார வளர்ச்சி வீடு, வாகன யோகம் உண்டு. வாழ்க்கைத் துணை மற்றும் நண்பர்களுடன் இணைந்து கூட்டுத் தொழிலில் ஈடுபடுவார்கள்.

    நல்ல வாடிக்கையாளர்கள் அமைவார்கள். ஏழாமிடம் பலம் குறைந்தால் இருதார யோகத்தைத் தந்து விடும். சிலருக்கு இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு பொருளாதார வளர்ச்சி உண்டாகும். சிலருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு இரண்டாம் திருமணம் நடக்கும். பொதுவாக 7,11 சம்பந்தம் உள்ளவர்கள் ஊருக்கு ஒன்று, உல்லாசத்திற்கு ஒன்று என்று தான் வாழ்கிறார்கள். இதற்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் எத்தனை திருமணம் நடத்தாலும் திருமண வாழ்க்கை நரகமாகவே இருக்கும். ஊரார் மத்தியில் நன்றாக வாழ்வது போல் தோன்றினாலும் வெறுமையே மிஞ்சும்.

    ஒரு ஜாதகத்தில் 7,11-ம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றால் இருதார யோகம் உண்டாகும்.

    7-ம் அதிபதி பலம் குறைந்து 11-ம் அதிபதி வலுப்பெறும் போது வெகு சுலபமாக மறு திருமணத்திற்கு அழைத்துச் செல்லும். 2,7-ம் அதிபதிகள் 11-ம் பாவகத்தோடு சம்பந்தம் பெறுதல்,11-ம் அதிபதி 2,7-ம் பாவகத்தோடு சம்பந்தம் பெறுவது, வலுவான தார தோஷம் ஆகும்.

    11-ம் பாவகத்திற்கு திரிகோணதிபதிகள் சம்பந்தம் பெறும் போது சட்டப்படியான மறுமணமாகவும், அசுப மற்றும் லக்ன பாவிகள் சம்பந்தம் பெறும் போது சட்டத்திற்கு புறம்பான உறவும் ஏற்படுகிறது.

    11-ல் இரண்டுக்கு மேற்பட்ட கிரகங்கள் அமர்ந்தாலும் 1, 11-ம் அதிபதிகள் பரிவர்த்தனை பெறும் போது இரு தாரம் ஏற்படுகிறது.

    7-ம் அதிபதிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெண் கிரகம் சம்பந்தம் பெறுவது இரண்டுக்கும் மேற்பட்ட திருமணத்தை கூட தரும். கூட்டுத் தொழிலும் லாப ஸ்தானமும் நான்காவது உப ஜெய ஸ்தானம் 11-ம் பாவகம். 3-ம் பாவகத்திற்கு பாக்கிய ஸ்தானம் 11-ம் பாவகம். 10-ம் பாவகத்திற்கு தன ஸ்தானம் 11-ம் பாவகம். லாப ஸ்தானம் பலம் பெற்றால் பல தொழில் வித்தகர்கள். அண்ணன், தம்பி என குடும்பமே முன்னேற்றத்திற்காக முயற்சி செய்வார்கள். கூட்டுக் குடும்பமாக இருந்து தொழில் முயற்சியில் வெற்றி பெற்றவர்களுடைய ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கும்.

    தேவைக்கு அதிகமாக பணம் பொன், பொருள் உள்ளவர்கள் ஜாதகத்தில் 11ம் மிடமான லாப ஸ்தானம் வலிமையாக இயங்கும். ஒரு சிலர் குறுகிய காலத்தில் பணம், புகழ், அந்தஸ்து, வெற்றி பெறுவது 11-ம் அதிபதியின் தசை புக்தி காலங்களில் மட்டுமே என்றால் அது மிகையாகாது. கூட்டுத் தொழிலுக்கு உகந்த கிரக அமைப்பு. பொருளாதார அந்தஸ்து மிகுந்தவர்கள். பொதுச் சேவையில் ஆர்வம் அதிகம். அரசாங்க, அரசியல் ஈடுபாடு, ஆதாயம் அதிகம் உண்டு.

    ஒரு ஜாதகத்தில் 11-ம்மிடமான லாப ஸ்தானம் பலம் பெற்று இருந்தால் தீராத நோய், தீர்க்க முடியாத கடன், வழக்கு போன்றவற்றிற்கு பரிகாரம் பலன் தரும். வாழ்க்கையில் வெற்றி பெற 11-ம் இடம் பலம் பெற வேண்டும். 11-ம்மிடமான லாபஸ்தானம் பலம் குறைந்தால் வாழ்க்கை நித்திய கண்டம் பூரண ஆயுளாகவே இருக்கும்.

    மனிதனாக பிறந்தவர்கள் அனைவரின் பூர்வ புண்ணிய பலத்திற்கு ஏற்பத்தான் பணம் வரும். தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் விதி பயனுக்கு மீறிய பலன் யாருக்கும் நடக்கப்போவது இல்லை. எனவே அவரவரின் ஜாதகத்தில் 11-ம் பாவகத்திற்கு ஏற்ப திட்டமிட்டு நடந்து கொண்டால் வாழ்க்கை பயணம் இனிமையாக இருக்கும். சுய ஜாதக ரீதியாக 11-ம்மிடம் வலிமை இல்லாதவர்கள் வியாழக்கிழமை குபேரனை வழிபாடு செய்வதால் மேன்மையான பலன்களை பெற முடியும்.

    செல்: 98652 20406

    • உணவுக்குப் பிறகு குளிர்ந்த நீர் பருகக் கூடாது
    • புரதமிக்க காலை உணவு

    எது நடந்தாலும் அது உங்கள் மனதினை பாதிக்கும்படியாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

    * பிறரது முறையற்ற செயல்கள் அவர்கள் குணத்தினை காட்டுகின்றது. அது உங்களுடையது அல்ல.

    * எல்லோரும் நம்மைப் போலவே இருப்பார்கள் என்று எண்ணாதீர்கள்.

    * நீங்கள் சில இடங்களில் ஒதுக்கப்பட்டால் அது உங்கள் மதிப்பினை குறைக்காது.

    * ஒருவருக்கு அவரவர் மன நிம்மதியே முக்கியம்.

    * மவுனமாய் இருப்பது தவறாகாது.

    * எல்லோருக்கும் நம்மை பிடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

    * பிறர் உங்களைப் பற்றி என்ன நினைக்கின்றார் என்று ஏன் எடை போடுகின்றோம்.

    * அழிவுப்பூர்வமான சிந்தனைகளில் மூழ்கக் கூடாது.

    நீங்கள்

    * நாள் முழுவதும் வீட்டின் அறையின் உள்ளேயே அடைந்து கிடக்கின்றீர்களா?

    * நாள் முழுவதும் அதிகம் நகராது உட்கார்ந்தோ, படுத்தோ இருக்கின்றீர்களா?

    * சம்பாதிப்பதனை விட அதிகம் செல வழிக்கின்றீர்களா?

    * பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

    * பிறருடன் உங்களை ஒப்பிட்டு வருந்துகின்றீர்களா? இந்த மேற்கூறிய அறிகுறிகள் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதனைக் காட்டுகின்றது.

    இதனை மாற்றி மகிழ்ச்சியாக இருக்க

    * தினமும் சிறிது நேரம் வீட்டை விட்டு வெளியில் வாருங்கள்

    * நடை பயிற்சி, உடற்பயிற்சி செய்யுங்கள்.

    * தேவையானதிற்கு மட்டும் செலவழியுங்கள்.

    * பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள்.

    * 5 நிமிடமாவது தினம் ஓடுங்கள், படியுங்கள், எழுதுங்கள்.

    * உங்கள் சுற்று சூழ்நிலை, உங்கள் பழக்க வழக்கங்கள், உங்கள் நண்பர்கள், உங்கள் பொழுது போக்குகள் இவற்றினை வைத்தே உருவாகுகின்றது.

    Gut Feeling: இதனை உள்ளுணர்வு. என்று சொல்லலாம். திடீரென தோன்றும். யோசிக்காமல், ஆராயாமல் வேகமாக வரும் உள்ளுணர்வு பல முக்கியமான, ஆபத்தான தருணங்களில் இது ஒரு வழி காட்டியே. பலருக்கு ஏதோ வயிற்றில் சங்கடம், படபடப்பு என வெளிப்படுத்தும் நன்மையோ, தீமையோ அறிகுறியாய் உணர்த்துவது.

    தியானம், யோகா, முறையான உணவு பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த உள்ளுணர்வு அதிகம் இருக்கும். ஆன்மீகத்தில் இந்த உணர்வினை ஆன்மாவோடு தொடர்பு உடையது என்பர்.

    உங்களிடம் நீங்களே பொய் சொல்வதிைன நிறுத்துங்கள் என்று ஒரு புத்தகம் உள்ளது. அதில் சில வரிகளைப் பார்ப்போம்.

    நான் இன்னமும் கூடுதலாக, மிகச் சரியாக இருந்தால் தான் மற்றவர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று தன்னைத் தானே குறை சொல்வது தீராத மன உளைச்சலை உண்டாக்கும். வாழ்வில் முன்னேற்றம் தேவை என்ற உண்மையினை இவர்கள் உணர வேண்டும்.

    * 'எனக்கு நேரமே இல்லை' இது பொதுவில் அநேகர் சொல்வதுதான். சிலருக்கு இது உண்மையானதாக இருக்கலாம். ஆனால் பலருக்கு தன் சக்தி, கவனம் இதனை முறையாக செலவழிக்காததால் ஏற்படும் குறைபாடுதான் இது. கவனம், சக்தி இதனை சீராக செலவழித்தால் நேரமில்லை என்று நாம் சொல்ல மாட்டோம்.

    * நான் இந்த பொறுப்பை ஏற்க வேலையைச் செய்ய தகுதி இல்லாதவன் என்று அநேகருக்கு மனதில் இந்த எண்ணம் வேரூன்றி இருப்பதால் சில முயற்சிகளைப் பற்றி சிந்திக்காது கூட இருப்பார்கள்.

    நம்மை நாம் ஆய்ந்து அளவிடுவது சரியே. ஆனால் பல நேரங்களில் குறைத்து மதிப்பிட்டு ஒரு வட்டத்தினை விட்டு வெளிவர மறுக்கின்றோம்.

     

    * என்னால் மாற முடியாது. மாற்றிக் கொள்ள முடியாது என்பதும் நாம் அடிக்கடி கேட்கும் பொதுவான வார்த்தைகள். சிறு விஷயங்களில் கூட மாற முயற்சிக்காத இவர்கள் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்பவர்கள் தான்.

    இவ்வாறு அநேக செய்திகள் இதில் உள்ளன. நான் படித்த சிலவற்றினை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். சிந்தித்துப் பார்ப்போமே.

    பலர் எதற்கெடுத்தாலும்அதிக கவலைப் படுவார்கள். இவர்களை மாற்றுவது மிக கடினமாக இருக்கும். இவர்கள் தானே தன்னை மாற்றிக் கொள்ள அல்லது அதிகம் கவலைப்படாமல் இருக்க சில முயற்சிகளை செய்ய வேண்டும்.

    * முறையான தூக்கமின்மை கவலையின் தாக்கத்தினை அதிகப்படுத்தும். தினம் 8 மணி நேர தூக்கம் என்பது அவசியம்.

    * காபி, டீ பானங்கள் உடல் பாதிப்பினை ஏற்படுத்தி கவலையின் அழுத்தத்தினைக் கூட்டும்.

    * சக்திக்கு மீறிய மிக அதிக உழைப்பு உடல், மனம் இரண்டினையும் பாதிக்கும்.

    * சர்க்கரை அதிகம் சேர்ப்பது, உயர் சர்க்கரை, குறைந்த சர்க்கரை இவை மன பதட்டத்தினையும் ஏற்படுத்தும்.

    * ஆல்கஹால்- இதனால் ஏற்படும் உடல் நலக்ேகடு எண்ணற்றது. கூடவே இவர்கள் எப்போதும் மனநல பாதிப்புடன் இருப்பார்கள்.

    * மேற்கூறியதே புகைப்பிடிப்பவர்களுக்கும் பொருந்தும்.

    * உடற்பயிற்சி செய்யாதவர்கள் காரணமின்றி கவலையுடன் இருப்பர்.

    * அதிகமாக 'டயட்'டில் இருக்கிறேன் என்ற பெயரில் மிகக்குறைந்த கலோரி, சத்தில்லா உணவு என எடுத்துக் கொள்பவர்கள் எப்போதும் சோர்வாகவும், கவலையுடனும் இருப்பார்கள்.

    * மிக அதிகம் டி.வி., செல்போன் என மூழ்குபவர்கள் மனமகிழ்ச்சி இன்றி வாழ்வில் ஏதோ இழந்தது போல் இருப்பார்கள்.

    * ஒமேகா-3 உடலில் தேவையான அளவு சேராதபோது ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் இல்லாது இருப்பர்.

    * வைட்டமின் 'டி' சத்து குறைபாடாலும் மனச்சோர்வு, உடல் சோர்வு, கவலை என ஏற்படும்.

    * ஆழ் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்.

    * 20 நிமிட சூரிய ஒளி அவசியம்

    * 20 நிமிடமாவது போனில் இருந்து தள்ளி இருக்க வேண்டும்.

    * 20 நிமிடங்களாவது சுறுசுறுப்பாய் நடக்க வேண்டும்.

    * புரதமிக்க காலை உணவு

    * வெதுவெதுப்பான நீர் காலையில் அருந்துதல்

    * கண் பயிற்சி ஆகியவைகளை கடைப் பிடிப்பது உடல் ஆரோக்கியத்தினை கூட்டுவதோடு கவலைப்படும் குணத்தினையும் வெகுவாய் குறைக்கும்.

    மேலும்

    * காபியினை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது

    * கிரீன் டீ இரவில் குடிக்கக் கூடாது

    * சக்தி பானம் என அடிக்கடி குடிக்க வேண்டாம்.

    * மது எப்பொழுதும் வேண்டாம். உடற் பயிற்சி செய்தவுடன் சிலர் மது பருகுகின்றனர். இது மிகவும் தீங்கானது.

    * உணவுக்குப் பிறகு குளிர்ந்த நீர் பருகக் கூடாது

    இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    வாழ்வில் பல துறைகளில் உள்ள பிரபலங்களைப் பார்த்து அதைப்போல் தானும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதுண்டு. அவர்களின் தோற்றம், கம்பீரம், ஸ்டைல், நடை, உடை, பேச்சு என பல விஷயங்களில் இவர்கள் ஈர்க்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் வாழ்வின் போராட் டங்களை கவனிக்கத் தவறி விடுகின்றார்கள். அவர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்கள் இவர்கள் கண் களுக்குத் தெரிவதில்லை.

    * அவர்கள் யாரும் புரிந்து கொள்வதில்லை. மாறாக எடை மட்டுமே போடுகின்றார்கள்.

    * அவர்களுக்கு பிரச்சினையே இல்லை என்று நினைக்கின்றார்கள்.

    * பிறரின் பொறுமை அவர்களை படுத்தும்பாடு கொஞ்ச நஞ்சமில்லை.

    * 24 மணி நேரமும் அவர்கள் கண்காணிக்கப் படும்போது அவர்கள் மனமும் சோர்வடையும்.

    * தேவையில்லாமல் அதிக வெளிச்சம் அவர்கள் மீது விழுகின்றது.

    * எப்போதும் 'ஷோ கேஸ்' பொம்மை போல் சிரித்தபடி பொலிவாக இருக்க வேண்டும்.

    * உண்மையான நண்பர்கள் அரிது

    * தன் சோகங்கள், வேதனைகள் வெளியே தெரியாது வாழ வேண்டும்.

    * நிம்மதி, மகிழ்ச்சி என்பது புத்தகத்தில் காணும் சொல்லாகி விடும்.

    * அவர்களுக்கும் 'மனம்' என்ற ஒன்று இருக்கின்றது.

    * ஆக இவர்களைப் பற்றிய கற்பனைகள் வேண்டாம்.

    உங்களால் மேடையில் கோர்வையாக இரண்டு வரிகள் பேச முடியுமா? நெருப்பு வெய்யிலில் தொடர் பயணம் செய்ய முடியுமா? வயிறு, வாயினை கட்டி உடலை கட்டுப்கோப்பாக வைத்திருக்க முடியுமா? சிந்தியுங்கள்.

    மாறாக நாள் ஒன்றுக்கு 3 மணி நேரம் கவனம் சிதறாத வழியில் உங்கள் வாழ்வினை முன்னேற்றிக் கொள்ளுங்கள்.

    லட்சியத்தினை அடைய விரும்புபவர்கள் செய்யும் சில தீர்க்கமான முடிவுகள்

    * எதெல்லாம் அவர்களது கவனத்தினை திசை திருப்புகின்றதோ அதனை முதலில் 'லிஸ்ட்' எடுக்கின்றனர். ஒவ்வொன்றாக கடும் முயற்சி செய்து அவைகளை நீக்குகின்றனர். முடியவில்லை என்ற சாக்குபோக்கே கிடையாது.

    * உடல் ஆரோக்கியத்திற்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். உடல் உறுதி, தன்னம்பிக்கை இவை இரண்டும் வாழ்க்கை முழுவதும் அவசியம் என்பதனை அறிந்து வைக்கின்றனர்.

    * தனக்கு இருக்கும் ஏதேனும் பலவீனத்தினை நன்கு உணர்ந்து அதனை குழி தோண்டி புதைக்கின்றனர்.

    * குறுக்கு வழியில் வெற்றிகள் அடைய எப்போதும் நினைக்க மாட்டார்கள்.

    * எளிதில் மனதளவில் காயப்படாத உறுதி கொண்டவர்கள்.

    * தனிமை அவர்களை பாதிப்பதில்லை.

    * நல்ல உதாரணமான உயர் மனிதர்களை மனதில் பதிய வைக்கின்றனர்.

    * வேலை செய்வதை 10 யானை செய்வது போல் செய்வார்கள். நல்ல முடிவுக்காக மிக பொறுமையாக காத்திருப்பார்கள்.

    * நல்ல தரமான, திறமை மிக்க மனிதர்களின் அறிவுரையினை மட்டுமே ஏற்பார்கள்.

    * தனது தீர்மானங்களை தானே முடிவெடுக்கும் திறன் இவர்களிடம் உண்டு.

    * தன் சுற்றுப்புற சூழ்நிலையினை சீராக தானே அமைத்துக் கொள்வார்கள்.

    * டி.வி., செல்போன் இவற்றில் கண்டிப்பாக மூழ்க மாட்டார்கள்.

    * எதிலும் ஒரு கட்டுப்பாடு அவர்களிடம் இருக்கும்

    * வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அவர்களை ஆக்கிரமித்து இருக்கும்.

    • ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி பத்தாம் இடத்தில் நின்றால் ஜாதகர் சுயமாக உழைத்து தொழிலை வளர்ப்பார்.
    • தசாம்ச லக்னத்தில் ராகு இருந்தால் ஜாதகரின் தொழிலில் நிலையற்ற தன்மை இருக்கும்.

    ஒரு மனிதனை சமுதாயத்தில் தலைசிறந்த குடிமகனாக உயர்த்துவது அவருடைய தொழிலாகும். சாதாரண மனிதன் முதல் சாதனை மனிதன் வரை அனைவரும் ஜீவிக்க தொழில் அல்லது உத்தியோகம் வேண்டும்.

    ஒரு ஜாதகத்தில் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தின் மூலம் ஒருவரின் தொழில் பிராப்தம் பற்றி அறிய முடியும். ஒரு ஜாதகத்தில் பத்தாமிடத்தில் நிற்கும் கிரகம் ஜாதகருக்கு வாழ்க்கையில் மேன்மையை தரும். ஒன்பதாமிடமான கொடுப்பினை ஸ்தானத்திற்கு இரண்டாம் இடமாக பத்தாமிடம் வருகிறது. அதாவது ஒருவருக்கு என்ன கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதன் மூலமாகவே ஒருவர் ஜீவனம் நடத்துவார். முன்னோர்கள் நல்ல பலன்கள் சேர்த்து வைத்திருந்தால் ஜாதகருக்கு எளிய உழைப்பில் அதிக வருமானம் கிடைக்கும். முன்னோர்கள் பாவம் சேர்த்து வைத்திருந்தால் கடின உழைப்பில் கஷ்ட ஜீவனம் நடத்துவார்கள். பத்தாம் இடத்தில் எத்தகைய கிரகம் வேண்டும் என்றாலும் இருக்கலாம். பத்தில் ஒரு பாவியாக இருக்க வேண்டும் என்று தான் ஜோதிடம் கூறுகிறது.

    பத்தாமிடத்தை தொழில் ஸ்தானம் என்று மட்டும் கூற முடியாது. கர்மம் செய்ய புத்திரன் உண்டா என்று சொல்லக்கூடிய ஸ்தானமும் பத்தாமிடம் தான். பத்தில் ஒரு கிரகம் நின்றால் நிச்சயமாக ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் உண்டு. ஒரு ஜாதகத்தில் 5, 9ம் அதிபதிகள் பலம் பெறாவிட்டாலும் பத்தாமிடம் வலுப்பெற்றால் ஜாதகருக்கு இறுதி காரியம் செய்ய குழந்தை பிறக்கும். இதில் ஒரு விந்தையான விஷயம் என்னவென்றால் பத்தாம் இடமான தொழில் ஸ்தானம் மூலம் பல கோடி சம்பாதிப்பவர்கள் புத்திர பாக்கியத்திற்காக மருத்துவ உதவியை நாடுகிறார்கள்.

    பத்தாமிட பலவீனத்தால் நிலையான தொழில் உத்தியோகம் இல்லாதவர்களுக்கு பெயர் சொல்ல மழலை செல்வம் அதிகமாக இருக்கிறது. பெற்ற பிள்ளைகளை காப்பாற்ற வழி வேண்டி கடவுளை நோக்கி ஒரு கூட்டம் செல்கிறது. சம்பாதித்த சொத்தை அனுபவிக்க அடுத்த தலைமுறை உருவாக வேண்டும் என்று ஒரு பிரிவினர் ஆன்மீகத்தையும் மருத்துவத்தையும் நோக்கி செல்கிறார்கள்.

    கால பகவானின் கணக்கை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. மனிதனாகப் பிறந்தவர்கள் உயிர் காரகத்துவ ரீதியான பலனை அனுபவிக்க வேண்டும் என்றால் பொருள் காரகத்துவத்தை இழப்பார்கள். அதே நேரத்தில் பொருள் காரத்துவத்தை அதிகப்படியாக ஒருவர் அனுபவித்தால் அவருக்கு பயந்து உறவுகள் எட்ட நிற்பார்கள். ஒட்டி உறவாட மாட்டார்கள். அல்லது உறவுகள் பணம் கேட்பார்கள் என்று பயந்து உறவுகளிடம் பழக மாட்டார்கள். இன்று பணமா பாசமா என்று பட்டிமன்றம் நடத்தி வாதிடும் வகையில் உலகம் உள்ளது. பதவியும் செல்வமும் ஒரு காலகட்டத்தில் உயர்ந்தும் மற்றொரு கால கட்டத்தில் குறைந்தும் சந்திரன் போல் வளர்ந்தும் தேயும் தன்மை கொண்டது. இது ஒரு பக்கம் இருந்தாலும் இன்று நாம் எடுத்துக் கொண்ட தலைப்பு தொழிலை பற்றியதாகும் என்பதால் அதைப் பார்க்கலாம்.

     

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

    தொழில்

    ஒரு காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரே தொழில் செய்தனர். பெரும்பான்மையானவர்கள் குலத்தொழிலையே நம்பி வாழ்ந்தார்கள். ஆனால் தற்போது ஒருவர் வாழ்க்கையில் முன்னேற அரசாங்கமும் வங்கிகளும் நிதி உதவி அதிகமாக வழங்குகிறது. நிதி உதவி பெற்று தொழில் தொடங்க பல இளைய தலைமுறையினர் முன்வருகிறார்கள். தொழில் தொடங்கும் அனைவரும் வெற்றியை நிலை நாட்டுவதில்லை. அதேபோல் ஒருவருடைய தொழிலை முதலீடு அடிப்படையான தொழில்கள் முதலீடு இல்லாத தொழில்கள் என்று இரண்டு விதமாக பிரிக்கலாம். சிலருடைய ஜாதக அமைப்பு படி முதலீடு செய்யக்கூடிய தொழில்கள் நல்ல வருமானத்தை பெற்று தரும். ஒரு சிலருடைய ஜாதக அமைப்பு முதலீடு இல்லாத தொழில்கள் அதிகப்படியான வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

    முதலீடும் அடிப்படையான தொழில்

    எட்டாம் பாவகம் என்பது முதலீடு. தனது பிற்கால வாழ்விற்காகவும் தனது சந்ததியினருக்காகவும் சேர்த்து வைக்கும் அனைத்தும் முதலீடு. இதிலும் ஒரு சூட்சம ரகசியம் உள்ளது. ஒருவர் அதிக முதலீட்டில் தொழில் செய்தாலும் எட்டாம் பாவக வலிமை வேண்டும். போட்ட முதலீடு பத்திரமாக வீடு வந்து சேர்ந்தால் எட்டாம் பாவகம் வலிமை. தொழில் முதலீட்டை ஒருவர் இழந்தால் எட்டாம் பாவகம் வீக். ஜோதிடத்தில் பல்வேறு சூட்சமங்கள் உள்ளது. பத்தாமிடம் என்பது தொழில் ஸ்தானம். பத்தாமிடத்திற்கு லாப ஸ்தானம் எட்டாமிடமாகும். ஒரு ஜாதகத்திற்கு பலன் சொல்ல பாரம்பரிய முறைப்படி பல்வேறு முறைகள் உள்ளது. மல்டி மில்லியனர்கள் ஜாதகத்தில் எட்டாமிடம் வலுவாக இருப்பதால் அவர்களின் முதலீடுகள் பலமடங்காக பெருகுகிறது. பெரும் பணக்காரர்களின் வாழ்க்கையும் , முதலீடும் யாரும் அறிய முடியாத வண்ணம் மறைபொருளாக ரகசியமாக இருக்கும். 5.10 சம்பந்தம் இருந்தால் அரசு உத்தியோகம், அரசியல் பதவி, அரசு வகை ஆதாயம் உண்டு. புகழ், அந்தஸ்து, கவுரவம் என ஒரு மனிதன் வாழ்நாளில் அனுபவிக்க வேண்டிய அனைத்து சுப பலன்களும் தேடி வரும்.

    முதலீடு இல்லாத தொழில்கள்

    லக்னாதிபதி, பத்தாம் அதிபதியை விட ஆறாம் பாவகம் வலுத்தால் முதலீடு இல்லாத தொழில்கள் அல்லது பேச்சை மூலதனமாகக் கொண்ட தொழில்கள் அல்லது உத்தியோகமே சிறப்பான பலனைத் தரும். பேச்சை மூலதனமாக கொண்ட, முதலீடு இல்லாத தொழில், ஆலோசனை தொழில் புத்தியைத் தீட்டி சம்பாதிப்பார்கள். பேங்கிங், ஆடிட்டிங், டீச்சிங், மார்க்கெட்டிங், ஜோதிடம், புரோகிதம் போன்ற துறையில் வாழ்வாதாரம் உயரும். சவாலான செயல்களைக் கூட நேர்த்தியாக செய்து முடித்து வெற்றி வாகை சூடுவார்கள். பட்டம், பதவி போன்ற அதிகார அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகொடுக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கால, நேரத்தை வீணடிக்காமல் உழைப்பார்கள்.

    ராசி சக்கரம்

    ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி பத்தாம் இடத்தில் நின்றால் ஜாதகர் சுயமாக உழைத்து தொழிலை வளர்ப்பார்.

    ஜாதகரின் சிந்தனைகள் தொழில் பற்றியதாகவே இருக்கும். அவர்களின் மூச்சுக்காற்று கூட தொழில் எண்ணம் மிகுதியாக இருக்கும். அதே நேரத்தில் பத்தாம் அதிபதி லக்னத்தில் அமர்ந்தால் தொழில் வாய்ப்புகள் ஜாதகரை தேடிச் செல்லும். தொழிலைத் தேடி ஜாதகர் செல்ல வேண்டிய தேவை இல்லை. தொழில் சார்ந்த அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஜாதகருக்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும். 1, 5, 9 என்னும் திரிகோணங்கள் ஒரு ஜாதகத்தில் வலுத்தால் உழைத்து 30 முதல் 50 வயதிற்குள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். 1, 4, 7,10 எனப்படும் கேந்திரம் வலுத்தால் 25- 40 வயதுக்குள் வாழ்க்கையில் செட்டிலாக தேவையான அனைத்து பொருளாதாரத்தையும் தொழில் மூலமாக சம்பாதிப்பார். 2,5,8,11 எனும் பண பரஸ்தானம் பலம் பெற்றால் 20-30 வயதுக்குள் பொருளாதாரத்தில் தன்னிறைவு தொழில் மூலமாக உண்டாகும்.

    சனிபகவான்

    கால புருஷ பத்தாம் அதிபதி சனிபகவானே ஒருவரின் தொழிலை நிர்ணயம் செய்கிறார். ஒரு ஜாதகத்தில் பத்தாம் அதிபதியும் சனி பகவானும் லக்னமும், லக்னாதிபதியும் என்ற நிலைக்கு ஏற்பவே தொழிலில் ஒருவர் வெற்றி பெற முடியும். பத்தாம் பாவகம் வலிமையாக இருந்து சனிபகவான் வலிமையாக இல்லாவிட்டால் சுமாரான வருமானம் வரும். நல்ல வருமானம் தரக்கூடிய வகையில் தொழிலை வழி நடத்த தெரியாது.

    ஒரு ஜாதகரின் அனைத்து கர்மாவும் சனிகிரகத்திலேயே பதியப்பட்டு இருக்கிறது. சனிபகவான் தன் பணியை திறம்படச் செய்ய ராகு கேதுக்கள் உதவியாக இருப்பார்கள். வினையூக்கி கிரகங்களான ராகு கேதுக்கள் சனி கிரகத்தில் பதிவாகி இருக்கும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப பலன் வழங்குவார்கள்.

    சந்திரன்

    ஒரு ஜாதகத்தின் பிரதானமான பலன்களை எடுத்துரைப்பது விதியெனும் லக்னமாக இருந்தாலும் விதியால் ஏற்படும் வினைகளைத் தீர்ப்பது மதியெனும் சந்திரனாகும். ஆக விதிக்கு துணையாக இருப்பது மதி எனும் சந்திரனாகும். எழுதப்பட்ட கர்மா விதிப்படி தான் நடக்கும் என்றாலும் விதியால் ஏற்படப் போகும் விளைவுகளை உணரும் உள்ளுணர்வைத் தருவதும் சந்திரன் தான். ஜனன கால ஜாதகத்தில் தொழில் காரகனாகிய சனி சிறப்பாக இருந்தாலும் ஒருவர் தன் தொழிலை திறம்பட நிர்வகிக்க மதியாகிய சந்திரனின் வலிமை மிக அவசியம். சந்திரன் சுப வலிமை பெற்றவர்கள் தனது சிந்திக்கும் திறனால், உள்ளுணர்வால் தொழிலில், வாழ்வில் ஏற்படப் போகும் அனைத்து ஏற்ற இறக்கங்களையும் உணர்ந்து செயல்படுவார்கள்.

    சுய ஜாதகத்தில் லக்னத்திற்கு 6,8,12ல் சந்திரன் மறையக் கூடாது. சந்திரன் மறைந்தவர்கள் தனது சுய முதலீட்டை இழப்பார்கள். தொழிலால் பெரிய நன்மையை அடைய முடியாது.

    தசாம்சம் டி10

    இவை எல்லாவற்றிற்கும் மேலாக டி10 எனும் தசாம்ச வர்க்கசக்கரத்தின் மூலம் ஒருவரின் தொழில் அமைப்பை தெளிவாக விரிவாக அறிந்து கொள்ள முடியும். ராசி சக்கரம் உணர்த்தும் மேலோட்டமான பலனை விட தசாம்ச சக்கரம் மூலம் அறியும் தொழிலுக்கான பலன் தெள்ளத் தெளிவாக இருக்கும். 30 பாகைகள் கொண்ட ஒரு ராசி சக்கரத்தை பத்து சம பங்காக பிரிக்கும்போது ஒரு பங்கிற்கு மூன்று பகை வரும்.

    இதன் மூலம் ஒருவரின் சரியான தொழில் நிலை வகிக்கும் பதவி செயல்திறன் ஆகியவற்றை அறியலாம். ஒரு ஜாதகத்தில் ஜீவனம் எனும் தொழில் நிலையை அறிய 1,10-ம் பாவக ஆய்வு மிக முக்கியம். அதேபோல் தசாம்ச சக்கரத்தில் 1,10-ம் பாவக அதிபதிகளைக் கொண்டு தொழிலை நிர்ணயிக்கலாம். ராசி சக்கரத்தினை விட மிக தெள்ள தெளிவாக தொழிலை நிர்ணயிக்கலாம். தசாம்ச சக்கரத்தில் 1,10 பாவகத்தில் நிற்கும் கிரகங்களில் எந்த கிரகம் வலிமை உள்ளதாக உள்ளதோ அந்த கிரகத்தின் தொழில் ஜாதகர் செய்வார்.

    தசாம்ச சக்கரத்தின் லக்னாதிபதி பலம் பெற்றால் தொழிலில் ஸ்திரத்தன்மை இருக்கும். ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் பலன் கொடுக்கக் கூடிய தொழில் அமையும்.

    ராசி சக்கரத்தின் பத்தாம் அதிபதியும் சனிபகவானும் தசாம்ச சக்கரத்தில் சுபவலிமை பெற்றால் ஜாதகத்தின் தொழில் மூலமாக பலருக்கு வேலை கொடுப்பார். தசாம்ச லக்னத்தில் ராகு இருந்தால் ஜாதகரின் தொழிலில் நிலையற்ற தன்மை இருக்கும். அல்லது பேராசையால் குறுக்கு வழியில் செல்வார். தசாம்ச சக்கரத்தில் சூரியன் பலம் பெற்ற ஜாதகருக்கு நிர்வாகத் திறமை உண்டு. அரசியல் ஈடுபாடு அரசாங்க ஆதரவு உண்டு. சூரியன் பலம் குறைந்தால் தொழிலுக்கு அரசாங்க ஆதரவு கிடைக்காது. நிலையற்ற வருமானம் இருக்கும். நிர்வாக திறமை இருக்காது. தசாம்ச சக்கரத்தில் சனி வலுவாக இருந்தால் ஜாதகரின் தொழிலுக்கு உதவியான வேலையாட்கள் கிடைப்பார்கள்.

    தசாம்ச சக்கரத்தில் சந்திரன் வலுவாக இருந்தால் ஜாதகருக்கு தெளிவான மனநிலை இருக்கும். எத்தகைய சூழ்நிலையிலும் தன்னை முழுமையாக தொழிலில் ஈடுபடுத்திக் கொள்வார். தசாம்ச சக்கரத்தின் 10-ம் இடத்தைக் கொண்டு ஒருவரின் கர்மாவை பற்றியும் கர்மவினை பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். மனிதராய் பிறந்த அனைவரும் ஏதாவது ஒரு தொழில் அல்லது வேலை செய்து வாழ வேண்டும் என்பது விதி. மேலே கூறப்பட்ட அனைத்து நிலைகளிலும் ஒருவரின் ஜாதகம் பலம் பெற்றால் பணத்திற்காக ஜாதகர் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பணம் ஜாதகருக்காக வேலை செய்யும்.

    மேலே கூறிய நிலைகளில் சில குறைபாடுகள் இருந்தால் பணத்திற்காக ஜாதகர் வாழ்நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டும்.

    பரிகாரம்: சுய ஜாதக ரீதியான பத்தாம் பாவக வலிமை குறைவால் டி10 எனும் தசாம்சம் பலம் குறைந்தால் சனிக்கிழமை காலபைரவரை வழிபடுவதன் மூலம் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

    • மருந்துகள் முறையாய் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது அவசியம்.
    • உடல் இயக்க குறைவு, உறுப்புகள் செயலிழப்பு ஏற்படலாம்.

    இன்றைய கால கட்டத்தில் அன்றாடம் எல்லோரும் உடலில் ஏதோ ஒரு சிறிய பாதிப்போ அல்லது பெரிய பாதிப்புடனோ உள்ளனர். தலைவலி, சைனஸ், மூட்டுவலி, முதுகு வலி, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகளை தன் குடும்ப உறுப்பினர்போல் அதனுடன் கைகோர்த்து வாழ்ந்து வருபவர்கள் ஏராளம். ஆனால் அநேகர்

    * உடல் ரீதியான பல பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.

    * காய்ச்சல் வந்து விட்டாலே உடல் சோர்ந்து விடும்.

    * உடல் வலி, மூட்டு வலி என்று சொல்லாதவர்கள் மிகக்குறைவே.

    * எளிதில் பலவீனப்பட்டு இருப்பார்கள்.

    * உணவு சாப்பிட பிடிக்காத உணர்வு இருக்கும்.

    * இதுவே மன அழுத்தத்தினையும், கவலையையும் கொடுத்து விடும்.

    * தூக்கத்தில் தொந்தரவு இருக்கும்

    * செய்ய வேண்டிய வேலைகள் மறந்து போகும்.

    * சிகிச்சைக்கு பின் உடல்தேறுவதற்கு காலம் பிடிக்கும்,

    * சிலருக்கு மருத்துவமனை, இடைவிடாத கவனிப்பு அவசியம் தேவை என்ற சூழ்நிலை ஏற்படலாம்.

    * சிலருக்கு நோய் முழுமையாக குணமடையாது இருக்கலாம்.

    * மருந்துகள் முறையாய் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது அவசியம்.

    * குடும்ப ஆதரவு அவசியம்.

    * நோயின் தீவிரத்தன்மைக்கேற்ப அவசர சிகிச்சை தேவைப்படலாம்.

    * உடல் இயக்க குறைவு, உறுப்புகள் செயலிழப்பு ஏற்படலாம்.

    * ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம்.

    * சுகாதார பராமரிப்பு அவசியம்.

    * நோயின் வகையையும், நிலைமையையும் பார்க்க வேண்டும்.

    * பரம்பரை வகை பாதிப்புகள் இருக்கலாம்.

    * உடல்நிலை பற்றிய விழிப்புணர்வு அவசியம்.

    * மருத்துவ பரிசோதனைகள் அவசியம்.

    * வல்லுநர்கள் ஆலோசனை தேவைப்படலாம்.

    * அத்தியாவசிய உதவிகள் அவசியம்.

    * ஆரம்ப நிலையிலேயே கவனிப்பது நல்லது.

    * மருத்துவமனை அருகிலேயே இருப்பது நல்லது.

    * நிரந்தர கண்காணிப்பு தேவைப்படலாம்.

    * தடுப்பூசிகள் அவசியம்.

    * அறுவை சிகிச்சை அவசியப்படலாம்.

    * பேச்சு குறையலாம்.

    * பயிற்சிகள் தேவை.

    * நோய் எதிர்ப்பு சக்தி வேண்டும்.

    ஆக ஒரு நோய் பாதிப்பு என்பது சாதாரண விஷயமல்ல. இந்த உடலோடு விடாமல் போராடினால்தான் ஆரோக்கியம் பெற முடியும். அதற்கான விழிப்புணர்வுடன், வழி முறைகளை பின்பற்றுவது அவசியம் ஆகும்.

    உடல் நலம் பற்றி மேலும் சில செய்திகளை பார்ப்போம்

    * மிகவும் மனச்சோர்வு இருக்கும்போது ஒரு கப் காபி உதவும். ஒரு கப் மட்டும் போதும். அடிக்கடி பருகுவதையும் அதையே பழக்கமாக்கிக் கொள்வதும் வேண்டாம்.

    * அமெரிக்காவின் இருதய ஆராய்ச்சி நிறுவனம் ஒரு செல்லப் பிராணி வைத்துக் கொள்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் குறைகின்றது. இருதய பாதிப்பு குறைகின்றது என்று கூறியுள்ளது.

    கமலி ஸ்ரீபால்


     

    * ஸ்ட்ரெஸ் அதிகமானால் இருதய பாதிப்பு கூடுகின்றது. சர்க்கரை நோய் பிரிவு, 2 பாதிப்பு வரவும் வாய்ப்புகள் அதிகம். காரணம் உடலில் கார்டினால் அளவு அதிகமாவது தான்.

    * மனித மூக்கு 50 ஆயிரம் வகை வாசனைகளை உணர முடியும்.

    * நல்ல உடற்பயிற்சி நல்ல தூக்கத்தினை தரும்.

    * முறையான தூக்கமின்மை நோய் எதிர்ப்பு சக்தியினை கெடுக்கும்.

    ரத்த அழுத்தம், இருதய ஆரோக்கியத்தினையும் பாதிக்கும்.

    சில அறிகுறிகளை சற்றும் காலதாமதிக்காமல் உடனடியாக கவனிக்க வேண்டும்

    * நெஞ்சில் வலி, நெஞ்சில் அழுத்தம்.

    * மூச்சு வாங்குதல், ஆஸ்துமா, இருமல்.

    * திடீரென வேகமாக எடை குறைதல்.

    * திடீரென பொறுக்க முடியாத தலைவலி.

    * திடீரென தடுமாறி குளறி பேசுதல்.

    * கை, கால்களில் குறும்பு, திடீரென மரத்து போகுதல்.

    * பார்வை தெளிவின்மை.

    * சிறுநீர், கழிவுப் பொருள் வெளியேற்றத்தில் ரத்தம்.

    * அடிக்கடி வயிற்று வலி.

    * தொடர்ந்து அதிக ஜுரம்.

    * சக்தியின்மை, தொடர்ந்து சோர்வு.

    இந்த அறிகுறிகளை அலட்சியமாக விட்டு விடாமல் உடனடியாக கவனிக்க வேண்டும்.

    நமக்கு நன்மை பயப்பவர்களை எந்நாளும் நாம் காயப்படுத்தக் கூடாது

    * யாரிடம் இருக்கும் பொழுது நீங்கள் பத்திரமாக, கவலை இன்றி உணருகின்றீர்களோ. அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * நீங்கள் நீங்களாகவே இருக்கலாம். உங்கள் செயல்களை எடை போட்டு பாருங்கள்.

    * யார் உங்களை புரிந்து கொண்டு உங்களுக்கு உதவியாய் இருக்க முயற்சி செய்கின்றார்களோ அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * யாரை உங்களால் முழுமையாக நம்ப முடியுேமா அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்களுக்காக அன்பு, அக்கறையை யார் முழுமையாக கொடுக்கிறார்களோ அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்களுக்கு கொடுக்கும் வாக்குகளை யார் நிறைவேற்றுகின்றார்களோ அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்கள் கருத்துக்கு யார் முதல் முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * வார்த்தை, செயல் மாறாது இருப்பவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்கள் பேச்சை யார் முழு கவனத்துடன் கேட்கின்றார்களோ. அவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்கள் நியாயமான கனவு, லட்சியங்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்களை ஊக்கப்படுத்துபவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்களுடன் உபயோகமாக முன்னேற்றமான வழியில் நேரம் செலவழிப்பவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * தவறு செய்து விட்டால் மன்னிப்பு கேட்பவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்களுக்குரிய எல்லைகளில் தலையீடு செய்யாதவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்களுடன் மனம் விட்டு உண்மையாய் பேசுபவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * உங்களுடன் இருக்கும் பொழுது மகிழ்ச்சியாய் இருப்பவர்களை காயப்படுத்தாதீர்கள்.

    * நீங்கள் மகிழ்ச்சி அடைந்தால் அவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.

    இப்படிப்பட்டவர்கள் 99 சதவீதம் உங்கள் பெற்றோர்கள்தான். அவர்களை எந்நாளும் எந்த நேரத்திலும் கைவிடக்கூடாது.

    இப்படிப்பட்ட பல பெற்றோர்கள் இன்று பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டு மனஉளைச்சலுக்கு ஆளாகி நோய் வாய்பட்டு காலம் தள்ளுகின்றனர். இவர்கள் இனியாவது அவர்கள் பிள்ளைகளால் நன்கு கவனிக்கப்பட வேண்டும்.

    குடும்ப மருத்துவர்

    சிலரின் ஒரு பொதுவான குறை என்ன வென்றால் ஒரு சின்ன உடல்நல கோளாறு என்றாலும் நிறைய பரிசோதனைகள் செய்து செலவு வைத்து விடுகின்றார்கள் என்பதுதான். சில சின்ன அறிகுறிகள் உடனடியாக கவனிக்கப் படாவிட்டால் ஆபத்தில் கூட கொண்டு விடலாம். இதுவும் நிகழ்ந்து கொண்டுதானே இருக்கின்றது. ஆகவேதான் 'குடும்ப மருத்துவர்' என்று இருந்தால் உங்களுக்கு அநேக நன்மைகள் நடக்கும். அவருக்கு உங்கள் உடல் ஆரோக்கியம், பாதிப்பு என்பது நன்கு தெரியும்.

    அமைதியாய் சிறு அறிகுறிகளுடன் ஒருவரைத் தாக்கும் பெரிய பாதிப்புகளை பாருங்கள்.

    'மாரடைப்பு' - இது முதியோர்கள், பெண்கள், சர்க்கரை நோய் பாதிப்பு உடையவர்களுக்கு ஏற்படும். இதன் அறிகுறிகள் சில நேரங்களில் ஜீரண கோளாறு, சோர்வு என்று சிறிதாக தெரியும். இதனால் பாதிப்பு ஏற்பட்டவர்களே கவனமின்றி இருந்து விடலாம். ஆனால் சிறுவேலை செய்தாலும் அதிக சோர்வு, ஓய்வில் கூட மூச்சு வாங்குதல், வயிற்றுவலி, வயிற்று பிரட்டல், ஜீரணமின்மை, தலைசுற்றல், தூக்கமின்மை, சர்க்கரை நோய் பாதிப்பு என இருந்தால் உடனடியாக உங்கள் குடும்ப மருத்துவரை அணுகுங்கள்.

    * அடிக்கடி கிருமி, பூஞ்சை பாதிப்பு. கை, கால்களில் குறுகுறுப்பு இவை இருந்தால் உங்கள் டாக்டர் சர்க்கரைநோய் பரிசோதனையை செய்வார்.

    * உடல் சதா அரிப்பு, வறண்ட சருமம், கால், கணுக்கால் வீக்கம், கண்ணை சுற்றிய உப்பிசம், நுரைத்த சிறுநீர், பசியின்மை போன்றவை இருந்தால் சிறுநீரக பரிசோதனை செய்யப்படும்.

    மேலும் சில பாதிப்புகளை குறிப்பிடலாம். ஆனால் அது அச்சத்தினை தரக் கூடாது என்பதற்காக எந்த சிறு அறிகுறியினையும் அலட்சியம் செய்யாது குடும்ப மருத்துவரை அணுகுங்கள் என்று வலியுறுத்தப்படுகின்றது.

    இவைகளை நாம் அன்றாட உணவில் அடிக்கடி பயன்படுத்துகின்றோமா?

    முட்டை: இன்று அசைவ உணவு உண்பவர்கள் மற்றும் சைவ உணவு உண்ணும் பலரும் உணவில் இதனை சேர்த்துக் கொள்கின்றனர்.

    சிறந்த புரத சத்து கொண்டது. இதன் மஞ்சள் கருவில் உள்ள சத்து கண் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றது. எடை குறைக்க விரும்புபவர்களுக்குக் கூட இது பரிந்துரைக்கப்படுகின்றது.

    பருப்பு வகைகள்: புரதம், நார்சத்து, போலேட், இரும்புசத்து கொண்டது. செரிமானம் எளிதானது. சுண்டல் வகைகள் எளிதாக சமைக்க முடியும். வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது. குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அவசியமானது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இருதயம், ரத்த ஓட்டம் சீராக இயங்க உதவுவது.

    புரோகலி: வைட்டமின் 'சி', 'கே' சத்து நிறைந்தது. நார் சத்து கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

    பூண்டு: இது நம் நாட்டு சமையல் முறையில் அதிகம் சேர்க்கப்படுவது மிக நல்ல செயல். உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். கெட்ட கொழுப்பு கட்டுப்படும். இருதய ஆரோக்கியம் கூடும். கிருமிகள் அழியும்.

    வால்நட்: தினமும் இதனை 2 அல்லது 3 உண்பது மிகச் சிறந்தது. சில சில மாறுதல்கள் உணவில் ஏற்படும் பொழுது சிறந்த நன்மைகள் கூடும்.

    • வாழ்க்கையின் இன்ப - துன்பங்களை உணர்ந்தவன் மட்டுமல்ல; அனுபவித்து அறிந்தவன் நான்.
    • தெய்வம் என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதித்தால் அதுவே போதும்.

    "லதாவுக்கும் எனக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற இருக்கிறது" என்று ரஜினிகாந்த் அறிவித்தார்.

    1981 பிப்ரவரி 25-ந்தேதி மாலை 4 மணிக்கு, நிருபர்களை திடீரென்று ரஜினி அழைத்தார். சில நிமிடங்களுக்கெல்லாம் நிருபர்கள் பெருந்திரளாகக் கூடி விட்டனர்.

    நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    7 மாதங்களுக்கு முன்பே, ரஜினிகாந்த் - லதா திருமணம் என்ற செய்தியை வெளியிட்ட ஒரே பத்திரிகை "தினத்தந்தி" தான். ரகசியமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருந்த இந்தச் செய்தியை, "தினத்தந்தி" வெளியிட்டது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அந்தச் செய்தி "தினத்தந்தி"யில் வெளிவந்ததும், லட்சக்கணக்கான எனது ரசிகர்களிடம் இருந்து பல கடிதங்கள் வந்தன. பட அதிபர்களும், நடிகர்களும் 'போன்' செய்து. 'இது உண்மையா என்று கேட்டார்கள். சற்று பொறுத்திருக்கும்படி கூறினேன்.

    அந்தச் செய்தி இன்று உண்மையாகி, எல்லோரும் பாராட்டும் விதமாக அமைந்தது பற்றி பெருமைப்படுகிறேன்." இவ்வாறு கூறிய ரஜினிகாந்த், அங்கிருந்த தினத்தந்தி நிருபருடன் கை குலுக்கினார்.

    தொடர்ந்து அவர் கூறியதாவது:-

    "லதாவுடன் எனது காதல் கனிந்து, கடவுள் அருளால் திருமணம் நடைபெறுகிறது. இது எப்படி என்பது பற்றி, என் அன்பு ரசிகர்களுக்கு சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.

    வாழ்க்கையின் இன்ப - துன்பங்களை உணர்ந்தவன் மட்டுமல்ல; அனுபவித்து அறிந்தவன் நான். முதுகில் தழும்பேற மூட்டைசுமந்து, 'மில்லி' அடித்து வாழ்க்கையின் மேடு- பள்ளங்கள் அனைத்தையும் உணர்ந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். என் வாழ்க்கையில் பெரும் திருப்பம் நிகழ்ந்தது. பிரபல நடிகை சவுகார் ஜானகியின் வீட்டில் தான். 7 மாதங்களுக்கு முன் அங்கு, டைரக்டர் பாலசந்தர் சாரின் "தில்லு முல்லு" படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அதில் நான் நடித்துக் கொண்டிருந்தேன்.

    பகல் ஒரு மணி இருக்கும். எத்திராஜ் கல்லூரி மாணவிகள் சிலர் வந்தனர். அவர்களில், என் முன்னால் வந்து, தன்னை அறிமுகம் செய்து கொண்டவர் லதா. "மிஸ்டர் ரஜினி! நான் கல்லூரி மாணவி. எங்கள் கல்லூரியின் சிறப்பு இதழுக்கு, உங்களை பேட்டி காண வந்திருக்கிறேன். சம்மதமா?" என்று கேட்டார். நான் சம்மதித்தேன். பேட்டி தொடர்ந்தது. சுவையான, அறிவுபூர்வமான கேள்விகள் பலவற்றை லதா கேட்க கேட்க, நானும் என் பாணியில் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.

     

    லதா திடீரென்று "மிஸ்டர் ரஜினி காந்த்! உங்கள் திருமணம் எப்போது?" என்று கேட்டார். "குடும்பப் பாங்கான பெண் எப்போது கிடைக்கிறாளோ, அப்போதுதான் திருமணம்" என்று பதிலளித்தேன். லதா மீது கண்களைப் பதித்தபடி. இப்படிச் சொன்னால் எப்படி! விளக்கமாகச் சொல்லுங்கள்!" என்றார் லதா. "உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். உங்களை மாதிரி ஒரு பெண் கிடைத்தால் நான் கல்யாணம் செய்து கொள்வேன்" என்றேன்.

    நாணத்தால் லதாவின் முகம் சிவந்து விட்டது. என் வாழ்க்கையில் ஒளிவு - மறைவு இல்லை. உண்மை பேசி வாழ விரும்புகிறேன். என் மனமார, எவருக்கும் துரோகம் செய்ய மாட்டேன். அதனால்தான் மனம் திறந்து, "என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமா?" என்று லதாவிடம் கேட்டேன். தொடர்ந்து, இதுபற்றி ஒய்.ஜி.மகேந்திரனிடம் பேசினேன். லதாவிடமும், லதாவின் பெற்றோரிடமும் மகேந்திரன் பேசினார். அவர்களின் சம்மதம் கிடைத்தது.

    அதன் பிறகு நானும் லதா வீட்டுக்கு சென்று அவர் பெற்றோர்களிடம் பேசினேன். 'திருமணத்துக்கான ஏற்பாடுகளை எல்லாம் நானே செய்கிறேன். அதுவரை வெளியே யாருக்கும் தெரிய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்.

    நான் பெங்களூர் சென்று என் அண்ணனிடம் லதா பற்றி கூறினேன். முதலில் அவர் அதிர்ச்சி அடைந்தார். 'அந்தப் பெண் நம்ம சாதி இல்லேன்னு சொல்றே. மராத்தியில் கிடைக்காத பெண்ணா உனக்கு மதராசில் கிடைக்கப்போகுது?" என்று கேட்டார். 'நான் நல்லா இருக்கணும்னு நீங்க விரும்பினா, லதாவை மணந்து கொள்ள எனக்கு அனுமதி கொடுங்க' என்று சொல்லி விட்டு வந்தேன்.

    பிறகு என் அண்ணன், சென்னைக்கு வந்தார். லதாவைப் பார்த்து விட்டு, சம்மதம் தெரிவித்தார். லதா மட்டும், "உங்களை மணந்து கொள்ளமாட்டேன் என்று கூறியிருந்தால், என் மனம் தாங்கியிருக்காது. ஏனென்றால் ஒரு பொருளின் மீது ஆசை கொண்டால் அதை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறி கொண்டவன் நான். சம்யுக்தையை பிருதிவிராஜன் தூக்கிச் சென்றது போன்ற நிலைமை ஏற்பட்டிருக்கும். அதற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது.

    திருமணத்துக்காக 7 மாதம் காத்திருந்தேன். அதற்குக் காரணம் உண்டு. எனது மனைவியின் குணநலன்கள் எப்படி? என் குணத்தையும், மனதையும் அறிந்து நடந்து கொள்வாளா? அவளது நடை, உடை, பாவனை எப்படி என்பதை எல்லாம் அறிந்து கொள்ள விரும்பினேன். அதற்குத்தான் 7 மாதம் பிடித்தது.

    என் மனைவி லதாவுக்கு சங்கீத ஞானம் உண்டு. நன்றாகப் பாடுவாள். அவள் விரும்பினால் சினிமாவில் பின்னணி பாடலாம். நடிக்க விரும்பினால் கூட நடிக்கலாம். நான் தடை சொல்லமாட்டேன். என்னோடு ஜோடியாக நடிக்க விரும்பினால்கூட, நான் நடிக்கத் தயார்!

    பெண்கள் என்பவர்கள் வீட்டில் கணவன் காலடியில் நெளியும் புழுவோ, பூச்சியோ அல்ல. பெண்களுக்கு சுதந்திரம் தேவை, அந்த சுதந்திரத்தை நான் முழுமையாகத் தருவேன. "

    இவ்வாறு ரஜினி கூறினார்.

    திருமணம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, ரஜினிகாந்த் அதிரடியாக பதில் அளித்து, பரபரப்பு உண்டாக்கினார்.

    தன் திருமணம் 26-2-1981 அன்று திருப்பதியில் நடைபெற இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ரஜினிகாந்த், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து கூறியதாவது:-

    "எனது திருமணத்துக்கு அழைப்பிதழ் அச்சிடப்படவில்லை. என்னோடு நெருங்கிப் பழகிய, என் முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்தவர்களைக்கூட, "வாருங்கள்! என் திருமண கோலத்தைக் கண்ணாரக் கண்டு ஆசீர்வதியுங்கள்" என்று அழைக்கவில்லை.

    இதற்குக் காரணம் என்ன? அழைப்பிதழ் அச்சடித்து, குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு வீடு வீடாகச் சென்று கொடுப்பது, தபால், தந்தி, ரேடியோ வசதிகள் இல்லாத அந்தக் காலத்துக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்தக் காலத்தில் அது எதற்கு? என்னைப்போன்ற ஒரு நடிகனுக்குத் திருமணம் என்றால், அடுத்த நிமிடமே மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக நவீன வசதிகள் இருக்கின்றன. அதனால் அழைப்பிதழ் அச்சடிக்கவில்லை.

    என் திருமணத்துக்கு உடன் பிறந்தவர்கள் தவிர, வேறு எவரையும் அழைக்கவில்லை. வயது முதிர்ந்த என் தந்தையிடம் கூட, மானசீகமாகத்தான் வாழ்த்து பெற்று இருந்தேன். கண்டக்டராக நான் பெங்களூரில் பணியாற்றினேனே! அப்போது என்னுடன் பழகி, என்னுடன் உண்டு உறங்கிய சில பஸ் கண்டக்டர்களை மட்டும் திருமணத்துக்கு அழைத்திருக்கிறேன்.

    தெய்வத்தின் சந்நிதானத்தில் என் திருமணம் நடைபெறுகிறது. தெய்வம் என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதித்தால் அதுவே போதும். ரஜினி, தன் வீட்டில், வெறும் மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலியைத்தான் நான் லதா கழுத்தில் கட்டப்போகிறேன்.

    தாலி கட்டுவது என்பது வெறும் சடங்கு. ஆனால், தெய்வத்தை சாட்சியாக வைத்துக் கொண்டு, மனச்சாட்சிக்கு பயந்து, ஒருத்தி கழுத்தில் கயிற்றைக் கட்டுவதே உண்மையான திருமணம். இன்று நான் இருக்கும் நிலையில் 4 ஆயிரம் பேர் என்ன. லட்சம் பேருக்கு அறுசுவை உணவு வழங்கி திருமணத்தை சிறப்பாக செய்ய முடியும்.

    ஆனால், கோடீசுவரன் என்றாலும், திருமண விழாவுக்கு பணத்தை விரயம் செய்வதை நான் வெறுக்கிறேன். பசி அறியாதவர்கள் என் திருமணத்துக்கு வந்து விருந்துண்டு போவதைவிட, பசித்தவர்களுக்கு சோறு போட நினைக்கிறேன். எனவே, சென்னையில் உள்ள சில அனாதை விடுதிகளில் உள்ளவர்களுக்கு சீருடையுடன் உணவும் வழங்க ஏற்பாடு செய்திருக்கிறேன்.

    இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

    திருப்பதியில் நடந்த ரஜினி-லதா திருமணம் பற்றி நாளை பார்க்கலாம்.

    • ரஜினியுடன் லட்சுமி, ஸ்ரீபிரியா, சுருளிராஜன், டெல்லிகணேஷ் உள்பட பலர் நடித்திருந்தனர்.
    • படத்தில் ரஜினிக்கு முரட்டு இளைஞன் வேடம்.

    ரஜினி-லதா 1980-ம் ஆண்டு மத்தியில் காதல் ஜோடியாக சிறகடித்து பறந்துக் கொண்டிருந்தனர். தினமும் அவர்கள் போனில் பேசிக் கொள்வார்கள். நேரம் கிடைக்கும் போது சேர்ந்து விழாக்களுக்கு செல்வதை வழக்கத்தில் வைத்திருந்தனர். 3.7.1980-ல் வெளியான "காளி" படத்தின் முதல் காட்சியை அவர்கள் இருவரும் சேர்ந்து பார்த்தனர்.

    இப்படி காதலில் ரஜினி தீவிரமாக இருந்தாலும் படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தினார். அந்த சமயத்தில் அவரிடம் முக்தா சீனிவாசன் இயக்கிய "பொல்லாதவன்" படமும், ஏ.வி.எம். நிறுவனத்தின் "முரட்டுக் காளை" படமும் கைவசம் இருந்தன. அதில் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பொல்லாதவன் படப்பிடிப்பு சென்னை, பெங்களூர், சிம்லா நகரங்களில் படமாக்கப்பட்டது.

    முதலில் இந்த படத்துக்கு எரிமலை என்று பெயர் வைத்திருந்தனர். பிறகு சென்டிமெண்ட் காரணமாக அந்த படத்தின் பெயரை பொல்லாதவன் என்று மாற்றி இருந்தனர். அந்த படத்தில் ரஜினியுடன் லட்சுமி, ஸ்ரீபிரியா, சுருளிராஜன், டெல்லிகணேஷ் உள்பட பலர் நடித்திருந்தனர். படத்தில் ரஜினிக்கு முரட்டு இளைஞன் வேடம்.

    எஸ்டேட் ஒன்றில் வேலைக்கு செல்லும் லட்சுமி, ரெயிலில் வரும்போது பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் ஒரு மர்ம மனிதனை பார்த்து விடுவார். அவர் பற்றிய தகவல்களை பின்னணியாகக் கொண்டு பொல்லாதவன் படம் தயாரிக்கப்பட்டு இருந்தது.

    பொல்லாதவன் படத்தின் பெரும்பாலான காட்சிகள் மைசூர் பகுதிகளில் படமாக்கப் பட்டன. இதற்காக ரஜினி, ஸ்ரீபிரியா, லட்சுமி ஆகியோர் பெங்களூரில் தங்கியிருந்து படப்பிடிப்புக்கு சென்று வந்தனர். பெங்களூரில் இருந்து காரில் புறப்படும்போது லட்சுமியிடம் ரஜினி ஒவ்வொரு பகுதியாக காட்டி அங்கெல்லாம் தான் சிறுவயதில் சுற்றி அலைந்ததை தெரிவித்தார்.

    ஒரு இடத்தை சுட்டிக்காட்டி அங்கு கூலி வேலை செய்ததை நினைவுப்படுத்தினார். அந்த கூலி வேலைக்கு தினமும் 3 ரூபாய் கிடைத்ததையும் ரஜினி சொன்ன போது லட்சுமிக்கும், ஸ்ரீபிரியாவுக்கும் பிரமிப்பாக இருந்தது. ஒரு தடவை பெங்களூரில் லட்சுமி நடித்து வெளியான படத்தை பார்க்க கூலி வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில் 15 ரூபாய் முன்பணம் வாங்கிக் கொண்டு சென்றதை கூறினார்.

    ரஜினி சிறுவயதில் கஷ்டப்பட்டதை எதையும் மறைக்காமல் சொன்னதை பார்த்து லட்சுமிக்கு மேலும் வியப்பாக இருந்தது. இந்த படத்தின் "அதோ வாரான்டி வாரான்டி.... வில் ஏந்தி ஒருத்தன்...." பாடல் காட்சி காஷ்மீரில் படமாக்கப்பட்டது. அங்குள்ள ஏரியில் படமாக்கப்பட்டபோது ஒளிப்பதிவாளர் கர்ணனின் மோதிரம் தண்ணீருக்குள் தவறி விழுந்து தொலைந்து போனதை அறிந்து ரஜினி வருத்தப்பட்டார்.

    தமிழ்நாட்டுக்கு திரும்ப டெல்லிக்கு வந்ததும் அவர் கர்ணனை அழைத்துச் சென்று அதே போன்று ஒரு மோதிரம் வாங்கிக் கொடுத்து அவரை மகிழ்ச்சிப்படுத்தினார். இதைப் பார்த்து முக்தா சீனிவாசனும், அவரது குடும்பத்தினரும் ரஜினியின் பெருந்தன்மையை நினைத்து ஆச்சரியப்பட்டனர்.

    1980-ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று வெளியான பொல்லாதவன் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற "நான் பொல்லாதவன்... பொய் சொல்லாதவன்..." என்ற பாடல் அவரது ரசிகர்களிடம் அமோக ஆதரவை பெற்றது. இந்த பாடலை ரஜினிக்காகவே சிறப்பான வரிகளை அமைத்து கண்ணதாசன் எழுதி இருந்தார். அந்த பாடல் வரிகளை பார்த்தாலே அது உங்களுக்கு தெரியும்....

    நான் பொல்லாதவன்....

    பொய் சொல்லாதவன்...

    என் நெஞ்சத்தில்

    வஞ்சங்கள் இல்லாதவன்...

    வீண் வம்புக்கும்

    சண்டைக்கும் செல்லாதவன்

    கை கட்டி, வாய்மூடி, யார் முன்னும்

    நான் நின்று ஆதாயம் தேடாதவன்,

    அந்த ஆகாயம் போல் வாழ்பவன்…

    வானத்தில் வல்லூறு வந்தாலே கோழிக்கும்

    வீரத்தை கண்டேனடி…

    ஞானத்தை பாதிக்கும்

    மானத்தை சோதித்தால்

    நான் என்ன செய்வேனடி…

    நானுண்டு வீடுண்டு வாழ்வுண்டு நாடுண்டு

    என்றேதான் வாழ்ந்தேனடி

    நாளாக நாளாக தாளாத கோபத்தில்

    நான் வேங்கை ஆனேனடி...

    இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக

    இதுபோல ஆனேனடி…- என்ற அந்த பாடலில் ரஜினியின் ஆட்டம் ரசிகர்களை கவர்ந்தது.

    இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி நடித்து வந்த "முரட்டுக்காளை" படமும் தமிழக ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. முரட்டுக்காளை படத்தில் நடிப்பதற்காக ரஜினிக்கு ஏ.வி.எம். நிறுவனத்தின் அதிபர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் 3 மடங்கு அதிக சம்பளம் கொடுத்தார். அது மட்டுமின்றி 9453 என்ற எண் கொண்ட வெளிநாட்டு கார் ஒன்றையும் பரிசாக வழங்கினார்.

    முள்ளும் மலரும் படத்துக்கு ரூ.35 ஆயிரம், பைரவி படத்துக்கு ரூ.50 ஆயிரம் சம்பளம் வாங்கிய ரஜினிக்கு முரட்டுக்காளை படத்தில் நடித்ததற்கு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைத்தது. பஞ்சு அருணாசலம் கதை, வசனம், பாடல்கள் எழுதிய அந்த படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார்.

    கிராமத்து கதை கொண்ட இந்த படத்தில் ரஜினி ஏழை இளைஞனாக நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக ரதி நடித்திருந்தார்.

    கிராமத்தில் வாழும் பண்ணையார் தனது முரட்டுக் காளையை யார் அடக்குகிறார்களோ அவர்களுக்கு தனது தங்கையை திருமணம் செய்து கொடுப்பதாக அறிவிப்பார். ரஜினி அந்த காளையை அடக்கி விடுவார். ஆனால் பண்ணையார் தங்கையை திருமணம் செய்ய மறுப்பார். அதன் பிறகு நடப்பதுதான் கதை.

    175-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனி இடம் பெற்று இருந்த ஜெய்சங்கர் முதல் முதலாக இந்த படத்தில் பண்ணையாராக வில்லன் வேடத்தில் நடித்தார். இந்த படத்தின் பணிகள் தொடங்கிய போது ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் மரணம் அடைந்தார். என்றாலும் படஅதிபர் ஏ.வி.எம்.சரவணன் பொறுப்பேற்று இந்த படத்தின் பணிகளை சிறப்பாக மேற்கொண்டார்.

    இதனால் உற்சாகம் அடைந்த ரஜினி இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். பஞ்சு அருணாசலமும், எஸ்.பி.முத்துராமனும் ரஜினியை நன்கு உணர்ந்தவர்களாக இருந்த தால் முரட்டுக்காளை படத்தில் அவரை எந்த அளவுக்கு வித்தியாசப்படுத்தி காட்ட முடியுமோ அந்த அளவுக்கு காட்டினார்கள்.

    அதனால்தான் ஓடும் ரெயில் மீது ஜெய்சங்கரும், ரஜினியும் சண்டை போடும் காட்சிகளில் கூட ரஜினி டூப் போடாமல் தானே நடித்து முடித்தார். இந்த படத்தில் பஞ்சு அருணாசலம் எழுதி இளையராஜா இசையமைத்த பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. குறிப்பாக "பொதுவாக என் மனசு தங்கம்..." பாடல் பட்டிதொட்டிகளில் எல்லாம் அனல் பறக்கும் வகையில் இருந்த தோடு ரசிகர்களின் விருப்பப் பாடலாகவும் அமைந்தது.

    அந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் ரஜினிக்காகவே பஞ்சுஅருணாசலம் எழுதியதாகும். ரஜினியுடன் பழகி அவரது வாழ்க்கையை முழுமையாக அறிந்து வைத்திருந்த பஞ்சு அருணாசலம் அதையெல்லாம் அந்த பாடலில் கொட்டி இருந்தார். அந்த பாடலை பார்த்தாலே அது உங்களுக்கு தெரியவரும்....

    அண்ணனுக்கு ஜே…

    காளையனுக்கு ஜே…

    பொதுவாக என் மனசு தங்கம்…

    ஒரு போட்டியின்னு

    வந்து விட்டா சிங்கம்…

    பொதுவாக என் மனசு தங்கம்…

    ஒரு போட்டியின்னு

    வந்து விட்டா சிங்கம்…

    உண்மைய சொல்வேன்…

    நல்லத செய்வேன்…

    வெற்றிமேல் வெற்றி வரும்…

    ஆடுவோம் பாடுவோம்

    கொண்டாடுவோம்…

    ஆ… ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே…

    முன்னால சீறுது மயிலக்காளை…

    பின்னால பாயுது மச்சக்காளை…

    முன்னால சீறுது மயிலக்காளை… ஆ…

    பின்னால பாயுது மச்சக்காளை…

    அடக்கி ஆளுது முரட்டுக்காளை…

    முரட்டுக்காளை… முரட்டுக்காளை…

    நெஞ்சுக்குள் பயமும் இல்ல…

    யாருக்கும் அச்சம் இல்ல…

    வாராதோ வெற்றி என்னிடம்…

    விளையாடுங்க உடல் பலமாகுங்க…

    பொறந்த ஊருக்கு புகழை சேறு…

    வளந்த நாட்டுக்கு பெருமை தேடு…

    பொறந்த ஊருக்கு புகழை சேறு…

    வளந்த நாட்டுக்கு பெருமை தேடு…

    நாலுபேருக்கு நன்மைசெய்தா…

    கொண்டாடுவார் பண்பாடுவார்…

    என்னாலும் உழைச்சதுக்கு…

    பொன்னான பலன் இருக்கு…

    ஊரோட சேர்ந்து வாழுங்க…

    அம்மன் அருள் சேரும்…

    இனி நம்ம துணையாகும்…

    ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்… ஹே…

    ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே…

    இந்த பாடலால் முரட்டுக்காளை படம் வெள்ளி விழா படமாக மாறியது. அதன் பிறகு தீ, கழுகு ஆகிய படங்களில் ரஜினி கவனம் செலுத்தினார். அப்போது லதாவை திருமணம் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டதாக நினைத்தார். உடனடியாக ரஜினி அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதுபற்றிய ருசிகர தகவல்களை நாளை காணலாம்.

    • ரஜினியை பொருத்தவரை சில விஷயங்கள் மனதுக்குள் தோன்றும்போது மிகச் சரியாக இருக்கும் என்று நம்புவார்.
    • லதாவுக்கும் ரஜினியை பார்த்த முதல் பார்வையிலேயே காதல் மலர்ந்து இருந்தது.

    சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு லதா மீது முதல் பார்வையில் ஏற்பட்ட காதல் புனிதமாக மாறியது. லதாவை பார்த்து அவர் மெய்மறந்து போய் இருந்தார். அவரையே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் ரஜினி மனதுக்குள் ஆழமாக உருவானது.

    சினிமா உலகில் அவர் எத்தனையோ நடிகைகளை பார்த்து இருக்கிறார். அவர்களில் சில நடிகைகள் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பி இருக்கிறார்கள். அதுபோல பொதுவாழ்வில் எத்தனையோ பெண்களை அவர் கடந்து வந்து இருக்கிறார். அவர்களிலும் சிலர் ரஜினியை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தது உண்டு.

    ஆனால் யாரும் அவர் மனதில் முழுமையான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கல்லூரி மாணவி லதா மட்டுமே ரஜினி மனதில் அந்த அரிய தாக்கத்தை அன்று ஏற்படுத்தினார். தனக்கு மனைவியாக வரும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்று ரஜினி ஏற்கனவே கனவு கண்டு கொண்டு இருந்தார்.

    அவரது அந்த கனவை நூறு சதவீதம் பூர்த்தி செய்யும் வகையில் லதா பொருத்தமாக இருந்தார். எனவேதான் லதா தனக்கு மனைவியாக வந்தால் தனது வாழ்வு இனிமையாக இருக்கும் என்று ரஜினிக்கு மனதில் தோன்றியது.

    ரஜினியை பொருத்தவரை சில விஷயங்கள் மனதுக்குள் தோன்றும்போது மிகச் சரியாக இருக்கும் என்று நம்புவார். லதா மீதான காதலும் அவருக்கு அப்படித்தான் அடித்தளம் அமைத்து இருந்தது. ஆனால் மாணவி லதாவிடம் தனது காதலை எப்படி சொல்வது என்ற தவிப்பு ரஜினியிடம் ஏற்பட்டது.

    தனது மனதுக்குள் உருவாகி இருக்கும் காதலை லதா உணரும் வகையில் சொல்ல வேண்டும். ஆனால் நேரடியாக சொல்ல முடியாது. எப்படி சொல்வது என்று யோசித்தார். லதா தன்னிடம் அடுத்து ஏதாவது ஒரு கேள்வி கேட்கும்போது அதையே தனக்கு சாதகமாக மாற்றி காதலை சொல்லி விட வேண்டியதுதான் என்று மனதுக்குள் முடிவு செய்துக்கொண்டார்.

    அந்த சமயத்தில் சொல்லி வைத்தது போல லதா ஒரு கேள்வியை ரஜினியை பார்த்து கேட்டார். "மிஸ்டர் ரஜினிகாந்த் நான் முன்பு கேட்ட கேள்விக்கு குடும்பப்பாங்கான பெண் கிடைத்தால் திருமணம் செய்துக் கொள்வேன் என்று சொன்னீர்கள். குடும்பப் பாங்கான பெண் என்றால் என்ன அர்த்தம்? எங்களுக்கு அதுபற்றி புரியவில்லை. நீங்களே அதை கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?" என்று லதா யதார்த்தமாக கேட்டார்.

    இதை கேட்டதும் ரஜினிக்கு வானத்தில் மிதப்பது போல் இருந்தது. லதாவிடம் இருந்து தனக்கு சாதகமாக இப்படி ஒரு கேள்வி வரும் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. இந்த வாய்ப்பை தவற விட்டுவிடக் கூடாது என்று நினைத்தார். லதா கேட்ட லட்டு மாதிரியான அந்த கேள்வியை "லபக்" என்று பிடித்துக் கொண்டார்.

    ரஜினி சிரித்துக்கொண்டே லதாவை பார்த்து, "குடும்பப் பாங்கான பெண் என்றால் அழகாக இருக்க வேண்டும். கம்பீரமாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் மென்மையானவராகவும் இருக்க வேண்டும். அதோடு புத்திகூர்மை கொண்டவராகவும் செயல்பட வேண்டும். அதாவது உன்னை மாதிரி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நான் உடனே திருமணம் செய்து கொள்வேன்" என்றார்.

    ரஜினி சொன்ன இந்த பதிலால் லதா உள்பட 4 மாணவிகளும் அரண்டுப் போனார்கள். அந்த அறை அப்படியே நிசப்தமாக மாறியது. மாணவிகள் 4 பேருக்கும் வார்த்தை வெளியில் வரவில்லை. லதாவுக்கு வெட்கத்தால் முகம் சிவந்தது. அவர் முகம் லேசாக புன்னகைக்கு மாறி கண்களில் குறு...குறுப்பு தோன்றியது.

    ஆனால் பதில் சொல்ல முடியாமல் அவரது பார்வை தரைக்கு சென்றது. அடுத்து என்ன செய்வது என்று அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ரஜினியை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தவித்த லதா அடுத்த நிமிடம் அந்த அறையில் இருந்து எழுந்து வெளியே சென்று விட்டார். அவரை தொடர்ந்து மற்ற மாணவிகளும் எழுந்து சென்று விட்டனர்.

    லதா கம்பீரமாக நடந்து செல்வதை ரஜினி ரசித்துப் பார்த்தார். இந்த பெண் யார்? என்று தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று யோசித்தபடியே தனது ஓய்வு அறைக்கு செல்வதற்காக நடந்தார். அப்போது அங்கே நடிகை சவுகார்ஜானகி வந்து கொண்டு இருந்தார். அவரிடம், "அம்மா இப்போது 4 பெண்கள் வந்தார்கள் அல்லவா? அதில் சிவப்பாக, சுறுசுறுப்பாக இருந்த பெண் யார் என்று உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்டார்.

    அதற்கு சவுகார்ஜானகி, "எந்த பெண்?" என்று கேள்வி எழுப்பினார். உடனே ரஜினி தூரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த லதாவை சுட்டிக்காட்டினார். லதாவைப் பார்த்ததும் சவுகார்ஜானகி, "இந்தப் பெண்ணா.... எனக்கு நன்றாக தெரியும். அவள் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மனைவியின் தங்கை" என்றார்.

    இதைக் கேட்டதும் ரஜினிக்கு உற்சாகம் ஆகி விட்டது. ஒய்.ஜி.மகேந்திரன் மூலம் தனது காதலை தெரிவித்து திருமணம் பற்றி பேசலாம் என்று தீர்மானித்தார். அதன்படி ஒய்.ஜி.மகேந்திரனை நேரில் சென்று சந்தித்தார். வழக்கமான நலம் விசாரிப்பு முடிந்த பிறகு சினிமா பற்றி இருவரும் சில விஷயங்கள் பேசினார்கள். அதன்பிறகு ரஜினி ஒய்.ஜி.மகேந்திரனிடம், "நான் லதாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும். நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும்" என்று கூறினார்.

    அதைக் கேட்டதும் ஒய்.ஜி.மகேந்திரன் விழுந்து.... விழுந்து... சிரித்தார். "என்னப்பா நீ.... லதாவையா திருமணம் செய்யப் போகிறாய். அவர் உன்னைவிட ரொம்ப மூத்தவர் ஆயிற்றே" என்றார். அதற்கு ரஜினி, "நீங்கள் புரிந்து கொண்டுதான் பேசுகிறீர்களா? நான் எந்த லதாவை சொல்கிறேன் என்று உங்களுக்கு தெரியுமா?" என்றார்.

    ஒய்.ஜி.மகேந்திரனுக்கு குழப்பமாகி விட்டது. "எந்த லதா? எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்து இருக்கிறாரே. அவரைத்தானே சொல்கிறீர்கள்" என்றார். அதற்கு ரஜினி, "இல்லை. நான் சொல்வது உங்கள் மனைவியின் தங்கை லதா" என்று பளிச்சென கூறினார். இதை கேட்டதும் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது.

    குடும்பத்தில் அனைவரிடமும் பேசி விட்டு சொல்வதாக தெரிவித்தார். அன்று மாலை வீட்டுக்கு சென்றதும் ஒய்.ஜி.மகேந்திரன் தனது மனைவி சுதாவிடம் அனைத்தையும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கடலூரில் இருந்த லதாவின் பெற்றோர் ரங்காச்சாரி-அலமேலுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்னைக்கு விரைந்து வந்தனர்.

    முதலில் ரங்காச்சாரிக்கு இந்த திருமணத்தில் தயக்கமாக இருந்தது. நிறைய கேள்விகளை அவர் கேட்டார். ரஜினிகாந்த் அய்யங்காரா? அவர் என்ன படித்து இருக்கிறார்? நடிகராக இருக்கிறாரே சரியாக வருமா? என்று கேள்வி எழுப்பினார். பிறகு லதாவிடம் பேசி மனதை மாற்றலாம் என்று நினைத்தார்.

    ஆனால் லதாவுக்கும் ரஜினியை பார்த்த முதல் பார்வையிலேயே காதல் மலர்ந்து இருந்தது. ரஜினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மன உறுதி அவரிடமும் காணப்பட்டது. அவர் தனது தந்தையிடம், "நான் ரஜினியை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். அதே அளவுக்கு அவரும் என்னை நேசிக்கிறார். அவரிடம் சில கெட்டப் பழக்கங்கள் இருக்கலாம். சென்னையில் தனிமையாக இருப்பதால் அந்த சூழ்நிலை அப்படி உருவாக்கி இருக்கிறது. எல்லாம் சரியாகி விடும்" என்றார்.

    அதன் பிறகு லதாவை யாரும் சமரசம் செய்யவில்லை. இதையடுத்து ரங்காச்சாரி குடும்பத்தினர் ரஜினியை சந்தித்து பேசினார்கள். ரஜினி பற்றி ரங்காச்சாரி சில விஷயங்களை விசாரித்து அறிந்து இருந்தார். எனவே அவர் லதாவை திருமணம் செய்து கொடுக்க சம்மதித்தார்.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த ரஜினி பெங்களூருக்கு சென்று தனது அண்ணன் சத்தியநாராயண ராவிடம் லதா பற்றி கூறினார். இதைக் கேட்டதும் சத்திய நாராயண ராவுக்கும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. மராத்தி வம்சத்தில் கிடைக்காத பெண்ணா மதராசில் கிடைத்து விடப்போகிறார் என்றார்.

    ஆனால் ரஜினி தனது காதலில் உறுதியாக இருந்தார். இதனால் சத்திய நாராயணராவ் சென்னை வந்து லதாவையும், அவரது குடும்பத்தினரையும் நேரில் பார்த்தார். பிறகு அவரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். இவையெல்லாம் 1980-ம் ஆண்டு ஜூன், ஜூலையில் மிகமிக ரகசியமாக நடந்தன.

    ஆனால் ரஜினிக்கும், எத்திராஜ் கல்லூரி மாணவி லதாவுக்கும் காதல் மலர்ந்து இருப்பதை தினத்தந்தி நிருபர் கண்டுபிடித்து விட்டார். லதா பற்றிய தகவல்களை தினத்தந்தி நிருபர் சேகரித்தார். அப்போது இரு குடும்பத்தினரும் திருமணத்துக்கு சம்மதித்து இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து ரஜினிகாந்துக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என்ற செய்தி தினத்தந்தியில் ஆகஸ்டு மாதம் வெளியானது. மணமகள் கல்லூரி மாணவி லதா என்றும் மற்ற தகவல்களும் விரிவாக எழுதப்பட்டு இருந்தன. தினத்தந்தியில் இந்த செய்தி வெளியான தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    திரையுலக பிரமுகர்களும் ஆச்சரியம் அடைந்தனர். தினத்தந்தியில் வந்து இருக்கும் செய்தி உண்மையா? என்று ரஜினிக்கு போன் செய்து விசாரித்தனர். தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் கடிதம் எழுதி லதா பற்றி கேட்டனர். ஆனால் ரஜினி யாருக்கும் எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காத்தார். அவர் தன் கைவசம் இருந்த பொல்லாதவன், முரட்டுக்காளை படப்பிடிப்புகளில் தீவிரம் காட்டினார். அந்த 2 படங்களும் ரஜினிக்கு சில படிப்பினைகளை கொடுத்தன. அதுபற்றி நாளை பார்க்கலாம்.

    • கல்லூரி மலருக்கான கட்டுரை என்பதால் ஒய்.ஜி.மகேந்திரனும் ரஜினியிடம் பேசி பேட்டி கொடுக்க கேட்டுக் கொண்டார்.
    • பங்களாவின் முதல் தளத்தில் உள்ள ஒரு அறையில் ரஜினி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.

    சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும்-லதாவுக்கும் இடையே மலர்ந்த காதல் தெய்வீகமானது. இப்படி ஒரு காதல் தங்களுக்குள் உருவாகும் என்று நிச்சயமாக அவர்கள் இருவருமே நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள். ஏதோ ஒரு தெய்வீக சங்கல்பம்தான் அவர்களை இணைத்தது.

    ரஜினி தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக மாறி இருந்த அந்தக் கால கட்டத்தில் லதா சென்னை எத்திராஜ் கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தார். அவரது தந்தை ரங்காச்சாரி, தாய் அலமேலு.

    ரங்காச்சாரியின் பூர்வீகம் கடலூர். அவர் சென்னை நுங்கம்பாக்கம் லேக்வியூ அவென்யூவில் அலமேலுவுடன் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார். அவருக்கு ஒரு மகன். 2 மகள்கள் பிறந்தனர்.

    மகன் பெயர் ரவி ராகவேந்திரா, மூத்த மகள் சுதா, இளைய மகள் லதா. மகன்-மகள்கள் மூவரையும் சென்னையில் உள்ள பிரபலமான பள்ளியில் படிக்க வைத்தனர். படித்துக் கொண்டே சுதாவும், லதாவும் பாட்டு கற்றுக் கொண்டனர். பள்ளிகள் அளவில் நடக்கும் பாட்டு போட்டிகளில் அவர்கள் வெற்றி பெற்று பெருமை சேர்த்தனர்.

    சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் இசைக்குழு நடத்திய நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் இசைக்குழுவுக்கு ஒரு தடவை பாடகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் ரங்காச்சாரியின் மூத்த மகள் சுதா தேர்வானார். அவரது குரல் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு மிகவும் பிடித்துப் ேபானது.

    ஒரு கட்டத்தில் சுதாவுக்கும், ஒய்.ஜி.மகேந்திரனுக்கும் இடையே நட்பு காதலாக மாறியது. இருவர் வீட்டிலும் பெரியவர்கள் பேசி திருமணத்தை முடித்தனர். இந்த காலக் கட்டத்தில் பணி நிறைவு பெற்று ரங்காச்சாரியும், அலமேலுவும் சென்னையை காலி செய்து விட்டு கடலூர் சென்று விட்டனர்.

    மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விட்டதால் ரவி ராகவேந்திராவையும், லதாவையும் மூத்த மகள் சுதா கண்காணிப்பில் ரங்காச்சாரி விட்டு சென்று இருந்தார். சுதா வீடு அருகிலேயே ரவி ராகவேந்திராவும், லதாவும் தனியாக இருந்தனர். லதா அங்கிருந்த படியே எத்திராஜ் கல்லூரிக்கு சென்று வந்தார்.

    கல்லூரியில் பாட்டு போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டி என்று அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு புகழ் பெற்றார். அவருக்கு தோழி வட்டாரம் உருவாகி இருந்தது. அதில் உமா, சந்திரா, சுனிதா ஆகிய 3 பேர் இருந்தனர்.

    தோழிகள் 4 பேரும் கல்லூரியில் தனித்துவத்துடன் வலம் வந்தனர். எந்த போட்டியாக இருந்தாலும் இந்த 4 தோழிகளும் சேர்ந்து கலக்குவதை வழக்கத்தில் வைத்து இருந்தனர். இதனால் 4 தோழிகள் பற்றிய பேச்சு கல்லூரியில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த 4 பேரும் அடிக்கடி நிறைய விஷயங்களை மனம் விட்டு பேசுவது உண்டு. அப்போது அவர்களுக்குள் ஒருநாள் ஒரு முடிவு எடுத்துக் கொண்டனர். வாழ்க்கையில் திருமணம் செய்துக் கொள்ள கூடாது. சமூக சேவைக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து இருந்தனர்.

    இந்த நிலையில் கல்லூரி இறுதி ஆண்டு என்பதால் அவர்களுக்கு கல்லூரி மலருக்காக சிறப்பு கட்டுரைகள் தயாரிக்கும் பணி ஒதுக்கி கொடுக்கப்பட்டது. அதன்படி லதாவுக்கும், அவரது தோழிகளுக்கும் சினிமா நட்சத்திரம் யாரையாவது பேட்டி கண்டு கட்டுரை எழுதி தரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

    எந்த நடிகரிடம் பேட்டி எடுக்கலாம் என்று 4 தோழிகளும் தங்களுக்குள் விவாதித்த போது ரஜினியிடம் பேட்டி எடுத்தால் நன்றாக இருக்கும் என்று ஒருமித்த கருத்து உருவானது. லதாவின் அக்கா சுதாவின் கணவர் ஒய்.ஜி.மகேந்திரன் நடிகர் என்பதாலும், அவர் ரஜினியுடன் சேர்ந்து படங்களில் நடித்து இருப்பதாலும் அவர் மூலம் ரஜினியை தொடர்பு கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

    கல்லூரி மலருக்கான கட்டுரை என்பதால் ஒய்.ஜி.மகேந்திரனும் ரஜினியிடம் பேசி பேட்டி கொடுக்க கேட்டுக் கொண்டார். இதையடுத்து 1980-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒருநாளில் 4 மாணவிகளையும் வரச்சொல்லுமாறு ரஜினி கூறி இருந்தார். முதல் நாள் லதாவும் அவரது தோழிகளும் படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற போது ரஜினியை சந்தித்து பேட்டி காண இயலவில்லை.

    இதையடுத்து சென்னை செனடாப் சாலையில் உள்ள பிரபல நடிகை சவுகார்ஜானகியின் வீட்டில் நடக்கும் படப்பிடிப்பு சமயத்தில் சந்திக்கலாம் என்று ரஜினி உறுதியளித்து இருந்தார். அந்த சமயத்தில் சவுகார்ஜானகி வீட்டில் பாலச்சந்தர் இயக்கத்தில் தில்லுமுல்லு படம் தயாரிக்கப்பட்டு வந்தது. அந்த படத்துக்கான படப்பிடிப்பு மும்முரமாக அன்று நடந்துக் கொண்டிருந்தது.

    பங்களாவின் முதல் தளத்தில் உள்ள ஒரு அறையில் ரஜினி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்த அந்த படத்தின் குறிப்பிட்ட காட்சியில் ஒரே டேக்கில் ரஜினி நடித்து முடித்தார். அடுத்த காட்சிக்கான படப்பிடிப்புக்கு கருவிகள் வேறு இடத்துக்கு மாற்றும் பணிகள் நடந்த சமயத்தில் ரஜினி ஓய்வெடுக்க தனது அறைக்கு புறப்பட்டார்.

    அப்போது அவரது உதவியாளர் வந்து, "எத்திராஜ் கல்லூரி மாணவிகள் உங்களை பேட்டிக்காண வந்து இருக்கிறார்கள். கீழ் தளத்தில் அவர்களை உட்கார வைத்து இருக்கிறேன்" என்றார். அதை கேட்டதும் ரஜினி, சரி 10 நிமிடத்தில் வந்து விடுகிறேன் என்று கூறி சென்றார். அடுத்த சில நிமிடங்களில் ஓய்வு அறையில் இருந்து வெளிேய வந்த அவர் கீழ் தளத்தில் மாணவிகள் இருக்கும் இடத்துக்கு வந்தார்.

    அவர் வருவதை லதாவும், அவரது தோழிகளும் பார்த்தனர். ரஜினியை கண்டதும் 4 பேரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். ரஜினியும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு 4 பேரையும் ஒவ்வொருவராக பார்த்தார். லதாவை பார்த்ததும் அவரது கண்கள் அப்படியே நிலைக்கொண்டது போல ஆகி விட்டது.

    லதாவின் அழகிய கண்கள், மனதை கொள்ளைக் கொள்ளும் அழகு, மென்மையான பேச்சு, இனிமையான பார்வை, புன்னகை முகம் ஆகியவற்றை கண்டு ரஜினி தன்னையே மெய்மறந்துப் போனார். ஸ்டைலாக தலையை முன்பக்கம் சாய்த்து அதே வேகத்தில் பின் பக்கமாக ஒரு வெட்டுவெட்டி தலைமுடியை தள்ளி விட்டபடி சிரித்துக் கொண்டே "சொல்லுங்க" என்றார்.

    மாணவிகள் 4 பேரும் தங்களை அறிமுகம் செய்தனர். ஒரு மாணவி லதாவை சுட்டிக் காட்டி, "இவள் பெயர் லதா" என்று கூறினார். அதை கேட்டதும் ரஜினிக்கு மனதுக்குள் இன்ப அலை வீசியது. அவரது பார்வை லதா மீது மட்டுமேதான் இருந்தது. இது லதாவுக்கு முதலில் என்னவோ போல் இருந்தது. அவருக்குப் பேச்சு வரவில்லை.

    எப்போதும் அதிரடியாக கலகலப்பாகப் பேசும் லதா வாய்மூடி மவுனமாக இருந்தார். அவரது முகம் வெட்கத்தில் மூழ்கி இருந்தது. அவருக்கே இது ஆச்சரியமாக இருந்தது.

    அப்போது ரஜினி கேள்விகளை கேளுங்கள் என்றார். லதாவின் தோழிகள் கேள்விகளை கேட்கத் தொடங்கினார்கள். ரஜினியும் அதற்கான பதிலை சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் அவரது கண்கள் மட்டும் லதாவையே சுற்றி... சுற்றி... வந்தன.

    சில கேள்விகளுக்கு பிறகு லதா ஒரு கேள்வியை எடுத்து வீசினார். "உங்களுக்கு மனைவியாக வரப்போகும் பெண்ணிடம் எத்தகைய குணங்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்" என்று லதா கேள்வி எழுப்பினார்.

    லதாவின் குரலை கேட்டதும் ரஜினிக்கு உடம்பே ஜில்லென்று குளிர்ந்தது போல் ஆகி விட்டது. என்னவோ தெரியவில்லை. அந்த குரலை கேட்டதுமே ரஜினி சொக்கிப் போனார். அவர் மனது அவரிடம் இல்லை. லதா மீது இருந்தது. இந்த பெண் நமக்கு மனைவியாக வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ரஜினியின் உள்மனம் மின்னல் வேகத்தில் சொல்லிக் கொண்டே இருந்தது.

    அந்த சமயத்தில்தான் லதா இப்படி ஒரு கேள்வியை கேட்டு இருந்தார். நாம் மனதுக்குள் நினைத்தது போலவே இந்த பெண் கேள்வி கேட்கிறாரே? என்று ரஜினிக்குள் இன்ப அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்பட்டது. ஆனால் அவர் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் ஸ்டைலாக கால் மேல் கால் போட்டுக் கொண்டு பதில் சொல்ல ஆரம்பித்தார்.

    அவர் சிரித்துக் கொண்டே, "எனக்கு மனைவியாக வருபவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஏற்கனவே நான் மனதுக்குள் முடிவு செய்து விட்டேன். என்னிடம் அன்பாக இருக்க வேண்டும். என்னை அக்கறையோடு கவனித்துக் கொள்ள வேண்டும். குடும்பப்பாங்கான பெண்ணாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.

    ரஜினியின் இந்த பதில் லதாவுக்கு திருப்தியாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். அவர் தலையை அசைத்துக் கொண்டே புன்னகைப் பூத்தார். அதை கண்டதும் ரஜினிக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் லதாவை தொடர்ந்து ஊடுருவி ஆழமாக பார்த்தார்.

    அவர் கண்களை அகற்றவே இல்லை. அப்படி ஒரு ஆழமான பார்வையை அவர் லதா மீது பாய்த்துக் கொண்டிருந்தார். ஒரு பெண்ணை நாம் இப்படி வைத்தக் கண் வாங்காமல் பார்க்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி ரஜினியிடம் கொஞ்சமும் இல்லை. ஏனெனில் அவர் அந்த நிமிடத்தில் இருந்தே லதாவை மனதார காதலிக்க தொடங்கி இருந்தார்.

    அவரது கூர்மையான பார்வை லதாவை நிலைகுலைய செய்தது. என்ன இவர் இப்படி நம்மை குறு...குறு...வென பார்த்துக் கொண்டே இருக்கிறாரே என்று படபடப்பு ஏற்பட்டது. லதாவின் தோழிகளும் இதை கவனிக்க தவறவில்லை. அவர்கள் ரஜினியிடம் வேறு சில கேள்விகளை கேட்கத் தொடங்கினார்கள். அந்த சூழலை பயன்படுத்தி தனது காதலை தெரிவிக்க ரஜினி முடிவு செய்தார். ராகவேந்தரின் வழிகாட்டுதலோ, என்னவோ லதா கேட்ட ஒரு கேள்வி ரஜினி எதிர்பார்த்தது போல அமைந்து இருந்தது. அதற்கு ரஜினி அளித்த பதிலை நாளை பார்க்கலாம்.

    • ஒரு ஜாதகத்தின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பல்வேறு விதமான நல்ல தீய பலன்களின் தொகுப்பு இருக்கும்.
    • ஒரே நேரத்தில் பிறந்த அனைவரின் வாழ்க்கையும் ஒன்று போல் இருக்காது.

    "எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்க வேண்டும் என்பது பழமொழி" அதாவது ஒரு செயலை எப்படி திட்டமிட்டாலும், அதற்கான வாய்ப்புகள் அமைய வேண்டும். அதாவது ஒரு செயலைச் செய்ய முயற்சிப்பது மட்டுமே போதாது, அது நிறைவேறச் சரியான நேரமும், காலமும் இருந்தால் மட்டுமே செயலாக்கம் பெறும். எப்படி திட்டமிட்டுச் செயல்பட்டாலும், சில சூழ்நிலைகளில் வெற்றி என்பது ஜாதகரின் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. செயலைச் செய்வதற்கான முயற்சியை எடுப்பதுடன், அதற்கான விதி அமைப்பு இருந்தால் மட்டுமே அந்த முயற்சி வெற்றி பெறும். இதை ஜோதிட ரீதியாக விதி கொடுப்பினை என்று சொல்லலாம். ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் விதிப்படி அதாவது கொடுப்பினை, படித்தான் இருக்கும். இதுதான் நிதர்சனமான அனுபவப் பூர்வமான உண்மையாகும். இதைத் தான் ஜோதிடம் ராசி, லக்னம் விதி, மதி என்று கூறுகிறது. இதை விதி, தலையெழுத்து, கொடுப்பினை, புண்ணியம் என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

    ஜோதிடம் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்கள் தலைவிதி என்று கூறுகிறார்கள். ஒருவர் பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரக நிலையை கொண்டு விதி கொடுப்பினையை தெளிவாக அறிய முடியும்.

    ஒரு ஜாதகத்தின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பல்வேறு விதமான நல்ல தீய பலன்களின் தொகுப்பு இருக்கும். அந்தத் தொகுப்பின்படி இந்த பிறவியில் ஜாதகர் என்ன அனுபவிக்கப் போகிறார் என்பதை கூறுவது ஒன்பதாமிடமாகும்.

    ஒருவர் என்ன பலனை அனுபவிக்க வேண்டும் என்ற விதி ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்திலேயே உள்ளது. பாக்கிய ஸ்தானத்தில் இல்லாத ஒரு பலனை இந்த ஜென்மத்தில் ஜாதகர் அனுபவிக்க முடியாது. ஒருவர் குறிப்பிட்ட வருமானம் பெற வேண்டும் என்ற விதி அவருடைய ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே அதை நடைமுறைப்படுத்த முடியும். இதை மேலும் புரியும் படி கூறினால் ஒரு நாளில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஜனனம் நிகழ்கிறது. ஒரே நேரத்தில் பிறந்த அனைவரின் வாழ்க்கையும் ஒன்று போல் இருக்காது. இது அவரவரின் தாத்தா பாட்டி முன்னோர்கள் பெற்றோர்கள், ஜாதகர் செய்த பாவ புண்ணிய செயல்களுக்கு ஏற்பவே இருக்கும்.

    கடந்து வந்த ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே இந்த ஜென்மம் இருக்கும். ஒருவர் செல்வ செழிப்பான பெற்றோருக்கு பிறந்து அனைத்து விதமான யோகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற அமைப்பு இருந்தால் அதை கடவுளே நினைத்தால் கூட மாற்றி அமைக்க முடியாது. கொடுப்பினையில் பதிவாகாத ஒரு சம்பவம் இந்த ஜென்மத்தில் நடக்காது. கடந்த ஜென்மத்தில் ஒருவர் புண்ணிய பலன்கள் அதிகம் சேர்த்து வைத்திருந்தால் இந்த ஜென்மத்தில் பொருளாதார சிரமம் கடன், வறுமை இருக்காது. நல்ல வீடு வாகன யோகம் உண்டு. பெற்றோர்களின் அன்பும் ஆசிர்வாதமும் நிரம்பி இருக்கும்.

    எத்தகைய சூழ்நிலையிலும் பிறரை எதிர்பாராமல் தனது மற்றும் தன்னை சார்ந்தவர்களின் தேவையை நிறைவு செய்யும் வலிமை பெற்றவர்கள். நிலையான நிரந்தரமான வருமானம் தரக்கூடிய தொழில் உத்தியோகம் உண்டு. தொட்டது துலங்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஜாதகரைத் தேடி வந்து கொண்டே இருக்கும்.

    ஐ.ஆனந்தி

     

    குல தெய்வ அருள் கடாட்சம், தெய்வ அனுகிரகம் முன்னோர்களின் நல்லாசிகள் நிரம்ப பெற்றவர்கள். கவுரவப் பதவி, பூர்வீகச் சொத்தால் ஆதாயம், நிச்சயம் உண்டு. ஜாதகர் புத்தி சாதுர்யம் நிரம்பியவராக இருப்பார். ஜோதிட ரீதியாக விதி மற்றும் கொடுப்பினையை அறிய லக்னம் எனும் லக்னாதிபதி, 5ம்மிடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானம், 9ம்மிடம் எனும் பாக்கிய ஸ்தானத்தின் மூலமே அறிய முற்படுவார்கள். இதன் மூலம் 10 முதல் 20 சதவீதம் வரையான பிராப்தம் எனும் விதி மற்றும் கொடுப்பினையை அறிய முடியும்.

    ஆனால் ஒரு ஜாதகத்தில் நவகிரகங்கள் அமர்ந்துள்ள நட்சத்திர பாதாச்சாரத்தின் மூலமே ஒரு ஜாதகரின் கொடுப்பினையை தெள்ளத் தெளிவாக கூற முடியும். இந்த முறைகளை தான் இன்றளவும் கிராமப்புறங்களில் வசிக்கும் ஜோதிடர்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் நட்சத்திரச் சாரத்தில் ஏதாவது ஒரு கிரகமாவது நின்றால் அந்தக் குறிப்பிட்ட கிரகம் நின்ற பாவக, காரக பலன்களையும் மற்றும் அந்த குறிப்பிட்ட கிரகம் எந்தெந்த பாவகங்களுக்கு ஆதிபத்தியம் பெறுகிறதோ அந்த பாவக, காரக பலன்களையும் ஜாதகர் தன் வாழ்வில் நிச்சயமாக அனுபவிக்க விதி, கொடுப்பினை உதவும்.

    ஒரு கிரகத்தின் நட்சத்திர சாரத்தில் எந்த ஒரு கிரகமும் இல்லை என்றால் அந்தக் குறிப்பிட்ட கிரகத்தின் பாவக, காரக பலன்களையும் மற்றும் அந்த குறிப்பிட்ட கிரகம் எந்த பாவங்களுக்கு ஆதிபத்தியம் பெறுகிறதோ அந்த பாவக, காரக பலன்களையும் ஜாதகர் தன் வாழ்நாளில் அனுபவிப்பதற்கு வாய்ப்பில்லை. விதி, கொடுப்பினை இல்லை எனலாம். ஒரு குறிப்பிட்ட கிரகம் எந்த நட்சத்திரத்தில் நிற்கிறதோ அந்த நட்சத்திர நாதன் ராசி கட்டத்தில் எந்த பாவத்தில் நிற்கிறதோ அந்த பாவக, காரக பலன்களையும் அந்த நட்சத்திரநாதன் எந்தெந்த பாவகங்களுக்கு ஆதிபத்தியம் வகிக்கிறாரோ, அந்த பாவக பலன்களையும் ஜாதகர் அந்த குறிப்பிட்ட கிரகத்தின் தசா புத்தி காலங்களில் அனுபவிப்பார்

    ஒரு ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் எனும் 9ம்மிடம் மூலமே ஒரு மனிதன் உயர்வானதை அடைய முடியும். பூர்வ புண்ணிய ஸ்தானப் படி அனுபவிக்க வேண்டிய அனைத்து பாக்கிய பலன்களும் இந்த பாவகத்தில் பதிவாகி இருக்கும். மனிதர்களாய் வாழும் காலத்தில் தனது விருப்பங்களை ஆசைகளை அடைய உதவும் ஸ்தானமாகும். அந்த ஒன்பதாம் இடத்தில் சுய ஜாதகத்தில் நல்ல அமைப்பு இருந்தால், அவர் அதிர்ஷ்டசாலியாக மாறுகிறார். எண்ணியதை அடைந்து விடுகிறார். ஒன்பதில் அசுப கிரகங்களின் சம்பந்தம் இருக்கப் பிறந்தவர்கள் தடுமாறுகிறார், போராடுகிறார், அந்த இலக்கை அடைவதற்கு அதிகமாக கஷ்டப்படுகிறார்.

    இதுதான் "ஜோதிட ரகசியம். அத்துடன் உன்னைப் பெற்ற தந்தையார்? உன் உடம்பில் உள்ள டி.என்.ஏ.வை யாரிடம் இருந்து நீ கிடைக்கப்பெற்றாய்? உன் குலம், ஜாதி, மதம் எது? புண்ணிய பலத்தால் உன்னைப் பெற்றாரா? பாவ பலத்தால் உன்னைப் பெற்றரா? உன்னால் உன் தந்தை கவுரவம் கிடைக்கப் பெறுவாரா? அல்லது உன் தந்தையால் நீ கவுரவம் கிடைக்கப் போகிறாயா? முன்னோர்களின் சொத்துக்கள் உழைப்பால் வந்ததா? அல்லது அநீதியாக வந்ததா? அந்த சொத்து, சுகத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவனா? உன் பிறப்பின் நோக்கம் என்ன? நான் ஏன் பிறந்தேன் போன்ற அனைத்து கேள்விகளுக்கும் விடை தரும் பாவகம்.

    ஒரு ஜாதகத்தில் 9-ம் அதிபதி நட்சத்திர சாரத்தில் அதிக கிரகங்கள் இருப்பது மிக மிக நன்மை தரும் அமைப்பாகும். 9ம் அதிபதி நட்சத்திர சாரத்தில் கிரகம் இருப்பவர்களுக்கு பாக்கிய பலன்கள் மிகுதியாக நடக்கும். நல்ல ஒழுக்கமும், சமயோசித புத்தியும் உள்ளவராக இருப்பார்.நீண்ட ஆயுள், ஆரோக்கியம் உள்ளவராக இருப்பார். தந்தைவழி யோகத்தை முழுமையாக அனுபவிப்பார்கள். தான் வசிக்கும் ஊரில் மதிப்பும், மரியாதையும் மிக்கவராகவும் குலத் தொழில் புரிபவர்களாக இருப்பார்கள். சிறிய உழைப்பில் பெரிய வருமானம் உண்டு. குரு தீட்சை பெற்றவர்கள். தந்தை, தந்தை வழி முன்னோர்கள் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உள்ளவராக இருப்பார்கள் கோவில் கட்டி கும்பாபிசேகம் செய்தவர்கள், செய்பவர்கள். கோவில் சார்ந்த திருப்பணி வேலைகளுக்கு தான தர்மம் வழங்கி முன்னின்று செயல்படுவார்கள். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள். உயர்கல்வி வெளியூர் அல்லது வெளிநாட்டில் படிப்பார்கள்.

    லவுகீக உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் உண்டாகும். 9-ம் அதிபதிக்கு 1, 5 சம்பந்தம் பெற்றால் வம்சாவளியாக தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என வாழும் குடும்பம். இவர்களும் இவர்களுடைய வம்சாவளியும் குடும்ப கவுரவத்தை கட்டி காப்பார்கள்.

    லக்கினாதிபதியும், ஒன்பதாம் இடத்து அதிபதியும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தால் ஜாதகன் எல்லா விதத்திலும் அதிர்ஷ்டம் உள்ளவனாக இருப்பான். 9ம் அதிபதி 5ல் இருந்தால் குழந்தைகளால் முன்னேற்றம். உயிர்கல்வி, தந்தை வழி சொத்தை அனுபவித்தல், அரசு பதவி, குலதெய்வ கடாட்சம், அரசு பதவி, ஆலயங்களை உருவாக்குதல் போன்ற பாக்கியங்கள் கிடைக்கப் பெறும்.

    9ம் அதிபதி 9ல் இருந்தால் அதிகமான அதிர்ஷ்டம், ஒழுக்கம், அழகு, தந்தைக்கு தீர்க்கமான ஆயுள், உடன் பிறப்புகளால் இன்பம், தான தர்மம் செய்யும் பாக்கியம், மங்காத புகழ் கிடைக்கும். புண்ணிய பலத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெற்றவர்கள். 9ம் அதிபதி 6,8,12ல் மறையாமல் ஆட்சியோ, உச்சமோ, நட்போ பெற்றிருந்தால் ஜாதகரின் வாழ்நாள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். 9ம் அதிபதி 6ல் இருந்தால் முன்னோர் சொத்தினால் கடன், முன்னோர் சொத்து இழப்பு, எதிரி தொல்லை, புகழுக்கு பங்கம், முன்னேற்ற குறைவு, புத்திர தோஷம் ஏற்படும். 9ம் அதிபதி 8,12ல் இருந்தால் அதிர்ஷ்ட குறைவு, விரையச் செலவு, ஏழ்மை, சொத்து பறி போதல், துரதிர்ஷ்டம் அதிக மாகும். தந்தை மகன் ஒற்றுமை இருக்காது. பலவிதமான துன்பங்களை அனுபவிக்க நேரும்.

    9-ம் அதிபதி நட்சத்திர சாரத்தில் எந்த கிரகமும் இல்லை எனில் ஜாதகருக்கு தான தர்ம குணங்கள் இருக்காது. ஜாதகர் தந்தை மற்றும் தந்தை வழி தந்தை சம்பாதித்த சொத்துக்களை விரையம் செய்வார். சேமிப்பும் சிக்கனமும் இருக்காது. ஊதாரித்தனமாக செலவு செய்பவராக இருப்பார். கடினமாக உழைத்தாலும் வாழ்வில் பெரிய வெற்றி, முன்னேற்றம் இருக்காது. வாழ்க்கையில் விரக்தியும், வெறுப்பும் உள்ளவராக இருப்பார். பூர்வீகத்தில் வசித்தால் மேன்மை இருக்காது. வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை நன்மை தரும். ஜாதகருக்கு தந்தையின் அன்பு கிடைக்காது. நிம்மதியான உறக்கம் இருக்காது. பெற்றோர்களுக்கு அவப்பெயரை தேடி வைப்பவர். குல கவுரவத்திற்கு பங்கம் ஏற்படுத்துவர். ஜாதகரின் பெற்றோர்கள் தங்கள் இறுதிக் காலம் வரை பெற்ற பாவத்திற்காக படியளப்பார்கள்.

    பெற்றவர்களுக்கு அவரால் எந்த பயனும் இருக்காது. பாரம்பரியத்தை கடைபிடிக்க தவறுவார்கள். முன்னோர்களின் நல்லாசி குறைவுபடும். தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர்களுடன் சண்டை சச்சரவு மிகுதியாக இருக்கும். இரண்டு திருமணம் உண்டு. சிலர் குடும்பத்தை விட்டு குறுகிய காலம் பிரிந்து வாழ்வார்கள். தலையெழுத்தை மாற்றக்கூடிய ஒன்றா? நிச்சயமாக மாற்றலாம் ஆனால் அதற்குரிய வழி முறையினை உணர்ந்து கடக்க வேண்டும். ஒரு ஜீவனில் உள்ள ஆசைகளே தலையெழுத்திற்கு காரணமாக அமைகிறது. ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானம் பலம் குறைந்து 8-ம் பாவகம் பலம் பெற்றால் இறை பக்தியில் சுயநலம் மிகுதியாக இருக்கும். ஜீவன் தனது ஆசைகளை மறந்து, துறந்து ஞானத்தை அடைவதற்கு பதிலாக இறைவனை சுய நலமாக வழிபடும். இறை ஞானத்தை அடைய முடியாமல் லவுகீக மாயையில் ஆன்மா சிக்கி தலையெழுத்தை அதிகப்படுத்தும்.

    ஆகவே இந்தப் பெரும் பிரச்சினைக்கு தீர்வு தூய பக்தியுடன் தொண்டு, சேவை செய்து பகவானின் திருநாமத்தை உச்சரிக்க தலையெழுத்து மாறும். இந்து தர்ம கோட்பாடுகளை நன்கு பயின்று தலையெழுத்தினை மாற்றிக் கொள்ள முடியும். ஒருவரின் செயல்களே தலையெழுத்தை நிர்ணயிப்பதால் செயல்களைப் பற்றி தெளிவாக அறிதல் தலையெழுத்தை வெல்வதற்கு உதவியாக அமையும்.

    பரிகாரம்

    ஒன்பதாம் பாவகம் என்பது, ஏற்கனவே சேர்த்த கர்மாவின் பலன்களை பாக்கியமாக அனுபவிக்கிறோம் என்பதால் ஒன்பதாமிடம் சுபத் தன்மை பெற்று இருக்க வேண்டும். ஒன்பதாமிடம் அசுபத்தன்மை, பகை, நீசம், அஸ்தங்கம், வக்ரம் பெற்றவர்கள் முன்னோர்களை முறையாக வழிபட வேண்டும்.

    செல்: 98652 20406

    • ரஜினி அரசு வேலையில் இருக்கிறார் என்று சொல்லப்பட்டதும் நிறைய மணப்பெண்ணின் ஜாதகங்கள் வந்தன.
    • ரஜினி சில படங்களில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினி பெங்களூரில் சிவாஜி ராவ் என்ற பெயரில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தபோது நடந்த சம்பவம் இது....

    ரஜினிக்கு அந்த கண்டக்டர் வேலையை அவரது 2-வது அண்ணன் நாகேஸ்வரராவ் தனது உறவினர் மூலம் பெற்றுக் கொடுத்து இருந்தார். ரஜினிக்கு அரசு வேலை கிடைத்ததும் மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

    கண்டக்டர் பணியில் அவருக்கு மாதம் 300 ரூபாய் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது. தினமும் 1 ரூபாய் பேட்டா வழங்கப்படும் என்றும் பெங்களூர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சொன்ன போது ரஜினி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    தனது எதிர்கால வாழ்க்கைக்கு இந்த சம்பளம் போதும் என்று ரஜினி நினைத்தார். அதனால்தான் அவரால் கண்டக்டர் பணியை மிக மிக ஜாலியான மனநிலையில் செய்ய முடிந்தது. 10ஏ பஸ்சில் அவரது கண்டக்டர் பணி புது, புது ஸ்டைல்களுடன் புகழ் பெற்றதாக மாறியது.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த ரஜினியின் தந்தை ரனோஜிராவ் தனது மகனுக்கு உரிய வயதில் திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்று நினைத்தார். இதுபற்றி அவர் ரஜினியிடம் சொன்ன போது ரஜினிக்கு சற்று தயக்கம் ஏற்பட்டது. இப்போது என்ன அவசரம் என்று கேட்டார்.

    முதலில் அதை யதார்த்தமாக எடுத்துக் கொண்ட ரனோஜிராவ் அடுத்த சில வாரங்களில் ரஜினிக்கு உடனே பெண் பார்த்து திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ரஜினி தயங்கியபோது, "டேய் இப்போதுதான் அரசாங்க வேலைக்கு போக ஆரம்பித்து விட்டாயே? மாதம் தோறும் உனக்கு பணம் வருகிறது. எனவே தைரியமாக திருமணம் செய்து கொள்" என்றார்.

    அதன் பிறகுதான் ரஜினிக்கு சரி திருமணம் செய்து கொள்ளலாம் என்ற மனநிலை லேசாக உருவானது. மணப்பெண் தேடட்டுமா? என்று ரனோஜிராவ் கேட்டபோது ரஜினியால் உறுதியான பதிலை சொல்ல முடியவில்லை. இப்போது என்ன அவசரம் என்று மீண்டும் கேட்டார்.

    அதற்கு ரனோஜிராவ் திருமணத்தை எந்த காலத்திலும் தள்ளிப்போடக் கூடாது. அதை உரிய பருவத்தில் செய்து விட வேண்டும். நான் உனக்கு மணப்பெண் தேட ஆரம்பித்து விட்டேன் என்றார்.

    தந்தையிடம் காணப்பட்ட உறுதியை பார்த்த ரஜினி அதன் பிறகு திருமணத்துக்கு மறுப்பு சொல்லவில்லை. இதையடுத்து ரனோஜிராவ், மூத்த அண்ணன் சத்தியநாராயணராவ், இளைய அண்ணன் நாகேஸ்வரராவ் உள்பட குடும்பத்தில் உள்ள அனைவரும் ரஜினிக்கு மணப்பெண் தேட ஆரம்பித்து விட்டனர்.

    நிறைய உறவினர்கள், ஜோதிடர்கள் மற்றும் நண்பர்கள் வட்டாரங்களில் ரனோஜிராவ் தாமாக முன் சென்று ரஜினியின் ஜாதகத்தை கொடுத்து மணமகள் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினார். ரஜினி அரசு வேலையில் இருக்கிறார் என்று சொல்லப்பட்டதும் நிறைய மணப்பெண்ணின் ஜாதகங்கள் வந்தன.

    அதில் பெரும்பாலானவற்றை ரனோஜிராவ் கழித்து விட்டார். பல ஜாதகங்கள் இருவருக்கும் பொருத்தம் இல்லை என்று கழிக்கப்பட்டது. நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு பெங்களூர் அருகே ஒரு சிறிய கிராமத்தில் உள்ள பெண்ணின் ஜாதகம் ரஜினி ஜாதகத்துடன் பொருத்தமாக இருந்தது.

    ரனோஜிராவ் அந்த குடும்பம் பற்றி தீவிரமாக விசாரித்தார். அந்த குடும்பத்தினர் தங்களை போலவே கெயிக்வாட் பரம்பரையில் மிக சிறப்பாக வாழ்ந்து இருந்தது தெரிய வந்தது. இதனால் அந்த குடும்பத்துடன் சம்பந்தம் வைத்துக் கொள்ளலாம் என்று ரஜினியின் தந்தை ரனோஜிராவுக்கு விருப்பமாக இருந்தது.

    ஆனால் பெங்களூருக்கு அருகே கிராமத்தில் உள்ள பெண்ணை நேரில் திருமணம் செய்வதா? என்று ரஜினிக்கு தீவிர யோசனையாக இருந்தது. அந்த பெண்ணை அவரால் ஏற்கவும் இயலவில்லை. அதே சமயத்தில் புறக்கணிக்கவும் இயலவில்லை. எந்த முடிவும் எடுக்க முடியாமல் மனதுக்குள் தவித்தப்படி மவுனமாக இருந்தார்.

    ஆனால் ரனோஜிராவும், சத்திய நாராயணராவும் விடவில்லை. ரஜினியை வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை பார்க்க அழைத்து சென்றனர். பெண் உனக்கு பிடித்து இருந்தால் திருமணம் ஏற்பாடு செய்யலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம் என்று கூறினார்கள்.

    இதனால் அவர்களுடன் ரஜினி பெண் பார்க்க சென்றார். வழக்கம் போல பெண் பார்க்கும் படலம் நடந்தது. அந்த பெண்ணைப் பார்த்ததும் ரஜினி மனம் பல்டி அடித்து விட்டது. அவர் மனதில் மாற்றம் ஏற்பட்டது. அவருக்கு அந்தப் பெண்ணை உண்மையிலேயே மிகவும் பிடித்து போய் விட்டது.

    அந்த பெண் ரொம்ப குண்டாகவும் இல்லை ஒல்லியாகவும் இல்லை. இளம் வயதுக்குரிய சரியான உடல் அமைப்புடன் இருந்தார். தங்க நிறமாக காணப்பட்டார். முகத்தில் லட்சுமி கடாட்சம் தாண்டவம் ஆடியது. மராத்தியை பூர்வீகமாக கொண்ட கெயிக்வாட் இன பெண்கள் எப்படி இருப்பார்களோ அதே முக களையுடன் காணப்பட்டார்.

    அந்த பெண்ணை பார்த்ததும் ரஜினி அப்படியே சரண்டர் ஆகி விட்டார். பெண்ணின் பெயர் என்ன என்று கேட்கச் சொன்னார். அந்த பெயரை கேட்டதும் ரஜினிக்கு "ஆயிரம் தாமரை மொட்டுக்களே... வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே, இங்கிரண்டு ஜாதி மல்லிகை..." என்ற உணர்வுடன் மனம் குதூகல மானது. அதற்குப் பிறகு அவருக்கு வார்த்தைகள் வரவில்லை. பஸ் புறப்பட டபுள் விசில் கொடுப்பது போல எனக்கு பெண் பிடித்து விட்டது என்று இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் தனது சம்மதத்தைத் தெரிவித்தார்.

    இந்த பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என்று ரஜினியால் நேரடியாக தந்தையிடம் சொல்ல இயலவில்லை. வெட்கம் அவரைத் தடுத்தது. எனவே மணப்பெண் வீட்டு முன் அறையில் சகஜமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்த தனது 2 அண்ணன்களிடமும் ரஜினி ஜாடைமாடையாக தனது விருப்பத்தை சொன்னார். அவரது மூத்த அண்ணன் சத்திய நாராயணராவிடம் இந்த பெண்ணையே பேசி முடித்து விடலாம் என்றார்.

    அதற்கு சத்தியநாராயண ராவ் சிரித்துக் கொண்டே "சரி அப்பாவிடம் சொல்கிறேன்" என்றார். ரனோஜிராவுக்கு மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருந்தது. அந்த குடும்பத்திேலயே பெண்ணை பேசி முடித்து விடவேண்டியதுதான் என்று தீர்மானித்தார்.

    என்றாலும் நாகரீகம் கருதி உடனடியாக தனது முடிவை சொல்லாமல் பெங்களூருக்கு சென்றதும் எங்களது முடிவை சொல்லி அனுப்புகிறோம் என்று கூறி விட்டு புறப்பட்டார். ரஜினி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார்.

    அடுத்த நாளே பெண் பார்க்க சென்ற விஷயத்தை போக்குவரத்து கழக நண்பர்களிடம் சொல்லி மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார். அன்றைய தினம் முழுக்க அவர் மனதில் அந்த பெண்தான் ஆக்கிரமித்து இருந்தார். மறுநாளும் அந்த பெண் பற்றிய கனவிலேயே அன்றைய நாள் கழிந்தது.

    3-வது நாள் தங்கள் குடும்பத்து சம்மதத்தை தெரிவிக்க ஏற்பாடு செய்வார்கள் என்று ரஜினி ஆவலோடு இருந்தார். அந்த சமயத்தில் அந்த பெண்ணின் வீட்டில் இருந்து ஒரு மூத்த உறவினர் ஒருவர் வந்தார். அவர் ரனோஜிராவிடம் ரொம்ப தயங்கி... தயங்கி... பேச்சை ஆரம்பித்தார்.

    "பையனை (ரஜினியை) எங்களுக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. பெரியவர்கள் எல்லோருக்கும் சம்மதம்தான். ஆனால் பெண் கொஞ்சம் தயங்குகிறாள். அவளுக்கு உங்களையும் உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் மிகவும் பிடித்து இருக்கிறது. நீங்கள் நடந்து கொண்ட விதம் அவளுக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது.

    ஆனால் பையனைதான் அவள் வேண்டாம் என்கிறாள். பையன் கறுப்பாக இருப்பதாக சொல்கிறாள், குண்டாக இருப்பதாகவும் நினைக்கிறாள். எனவே வேறு பையனை பாருங்கள் என்று சொல்லி விட்டாள். எங்களால் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள்" என்றார்.

    அந்த பெரியவர் சொன்னதை பக்கத்து அறையில் இருந்து ரஜினி கேட்டுக் கொண்டிருந்தார். அவரது மனது சுக்குநூறாக உடைந்தது. அந்த சமயத்திலேயே அவர் மனதுக்குள் ஒருவித வைராக்கியம் எழுந்தது.

    திருமணம் செய்தால் நல்ல கலரான, சிவப்பான பெண்ணைதான் திருமணம் செய்ய வேண்டும் என்று மனதுக்குள் சபதமே எடுத்துக் கொண்டார். அது அவருக்குள் ஒரு உறுதியான மனநிலையை உருவாக்கி இருந்தது. சில நாட்களிலேயே அவர் மனதை தேற்றிக்கொண்டார்.

    பிறகு கண்டக்டர் பணியில் கவனம் செலுத்த தொடங்கினார். ஆனால் இறை அருளால் அவரது வாழ்க்கை பயணம் கண்டக்டர் பணியில் இருந்து கலையுலக பயணத்துக்கு மாறியது. அவர் நினைத்தது போலவே திருமண வாழ்க்கையும் அமைந்தது. அவர் ஆசைப்பட்டது போலவே நல்ல நிறம் கொண்ட லதா அவருக்கு மனைவியாக வாய்த்தார்.

    ஆனால் லதா அவருக்கு மனைவியாக அமைந்தது எல்லாமே தெய்வ செயலால் நடந்தது போலவே இருந்தது. 1980-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு ரஜினி சில படங்களில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு படம் தில்லுமுல்லு.

    அந்த படத்துக்கான படப்பிடிப்பு சென்னையில் பிரபல நடிகை சவுகார் ஜானகி வீட்டில் நடந்தது. அங்குதான் ரஜினியும், லதாவும் சந்தித்தனர். ராமனும், சீதையும் முதன் முதலில் ஒருவரை ஒருவர் கண்டபோது ஏற்பட்ட காதல் பார்வையை, "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்" என்று கம்பர் மிகச் சிறப்பாக எழுதி இருப்பார். அதே போன்றுதான் ரஜினியும் லதாவும் இருந்தனர். இருவரும் நோக்கினார்கள். உடனே காதல் மலர்ந்தது. அந்த ருசிகரத்தை நாளை பார்க்கலாம்.

    • ஊரு முருங்கைக் காய் உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
    • மருத்துவர் அறிவுரை பெற்றே நடைமுறைப்படுத்த வேண்டும்.

    மனித உடலானது பல்வேறு பணிகளை செய்து நமது அன்றாட வாழ்வை நடத்தி வருகிறது. இந்த உடலை இயக்குவதற்கு பல்வேறு உடல் பாகங்கள் பயன்பட்டு வருகின்றன. இந்த உடல் பழுதில்லாமல் சீராக செயல்பட சில உணவுமுறைகள் அவசியமாகும்...

    இதெல்லாம் சாப்பிடுகிறீர்களா...?

    கீரை, தயிர், புரோக்கலி, பூண்டு, பாதாம், இஞ்சி, எலுமிச்சை, காலிபிளவர், குடை மிளகாய், கேரட், தக்காளி, பட்டை இவையெல்லாம் அன்றாட உணவில் சேர்த்தால் தொப்பை குறைய வழி வகுக்கும்.

    சில பழக்கங்கள் உங்கள் குடல் ஆரோக்கியத்தினை அமைதியாகக் கொன்றுவிடும்.

    கருப்பு காபி நல்லதுதான். அதற்காக காலை உணவினைத் தவிர்த்து வெறும் வயிற்றில் கருப்பு காபி குடிப்பது வயிற்றில் ஆசிட் உருவாக்கும். வயிற்றின் உள்ளே அரித்து விடும்.

    கலோரி சத்து குறைந்த, புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொண்டு அதன் பின்னர் கருப்பு காபி குடிக்கலாம்.

    எல்லா எண்ணைகளும் அநேகமாக விதைகளில் எடுக்கப்பட்டது தான். இவை குடலை பாதித்து உடலில் வீக்கத்தினை ஏற்படுத்தும்.

    நெய், ஆலிவ் எண்ணை, தேங்காய் எண்ணையினை அளவாக சேர்த்து கொள்வது நல்லது.

    சர்க்கரை தவிர்க்கப்படலாம். பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். தூக்கம் போதுமான அளவு இல்லாவிட்டால் பாதிப்பிற்கு குறைவே இருக்காது.

    அதிக சுறுசுறுப்பற்ற வாழ்க்கை தற்கொலைக்கு சமம்.

    பப்பாயா: சற்று நகர்புறத்தினைத் தாண்டினால் வீட்டுக்கு வீடு பப்பாயா மரம் பார்க்க முடிகின்றது. பழங்கள் தரையில் கொட்டி கிடக்கின்றன. இதன் அருமையினை இன்னமும் உணராது இருக்கின்றனர்.

    மலச்சிக்கல் நீக்கும். நோய் எதிர்ப்பு சக்திக் கூடும். முகம் பொலிவு பெறும். ஒரு சிறு கப் அளவு அன்றாடம் எடுத்துக் கொள்ளலாமே.

    புரோகலி, கேரட், தக்காளி, வெள்ளரி, அன்னாச்சி நம் ஊரில் கிடைக்கும். இவைகளை அடிக்கடி உணவில் சேர்த்தாலே குடல் நன்கு இருக்கும்.

    நம்ம ஊரு முருங்கைக் காய் உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முருங்கை கீரையினை வாங்காத நாடே இல்லை எனலாம். இந்தியாவிற்கு முருங்கை ஒரு பொக்கிஷம். உலக அளவில் 25 சதவீதம் நம் நாட்டில் இருந்துதான் ஏற்றுமதி ஆகிறது என குறிப்பிடப்படுகிறது. இதில் பாலை விட கூடுதலாக நான்கு மடங்கு கால்சியம், 3 மடங்கு அதிக பொட்டாசியம், 2 மடங்கு புரதம் என்று உள்ளது. தினம் இரண்டு கைப்பிடி கீரையினை ஏதாவது பதார்த்தத்தில் சேர்த்தால் போதும். அநேக குறைபாடுகள் நீங்கும்.

    இயற்கை நமக்கு உதவிக் கொண்டேதான் இருக்கிறது

    * மூட்டுகள் பலம் பெற அடிக்கடி சிலதுண்டுகள் அன்னாச்சி பழம் எடுத்துக் கொள்ளலாம்.

    * கண் என்றாலே கேரட் என்று குழந்தை கூட சொல்லிவிடும்.

    * ரத்த சோகைக்கு மாதுளை பழம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    * கணையம் பலம் பெற சில வேக வைத்த சர்க்கரை வள்ளி துண்டுகளை எடுத்து வரலாம்.

    * இருதய பலம் பெற மருத்துவர் அறிவுரை பெற்று தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வயிற்றில், அஜீரணமா? உப்பிசமா? நமக்குதான் இஞ்சி இருக்கே.

    * மூளை சிறப்பாய் இயங்க 3.4 வால்நட் அன்றாடம் எடுத்துக் கொள்ளலாம்.

    * கல்லீரல் சீர்பட-100 மில்லி பீட்ரூட் ஜூஸ் அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.

    * நுரையீரல் உறுதிக்கு கருப்பு திராட்சை உதவும்.

    சில உறுப்புகளுக்கு பிடிக்காத உணவுகள்

    கல்லீரல்: மது, புகை கூடவே கூடாது.

    இருதயம்: உடல் பருமன், கெட்ட கொழுப்புகளை நீக்கிவிட வேண்டும்.

    சிறுநீரகம்: உப்பு அதிகம் கூடாது. ஊறுகாய், அப்பளம், சிப்ஸ், நொறுக்குத் தீனி இவைகளை தவிர்த்து விடுங்கள்.

    குடல்: பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்துவிடலாம். சர்க்கரை உணவுகள் வேண்டாம்.

    கணையம்: சர்க்கரை உணவுகளுக்கு 'நோ'

    நுரையீரல்: வறுத்த, பொரித்த உணவுகள் வேண்டாம்.

    கமலி ஸ்ரீபால்


     

    எதை தவிர்ப்பது, எதை எடுத்துக் கொள்வது? விகிதாசார உணவு என்று சொல்லப்படுகின்றது. பல உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் அவை அனைத்தும் எல்லோருக்கும் ஒத்துக் கொள்கின்றது என்ற கூற முடியாது. குறிப்பாக சில உடல்நல, குடல் நல கோளாறுகள் இருக்கும்போது சில உணவுகள் வயிறு உப்பிசம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, காற்று, ஒவ்வாமை, பசியின்மை, வயிற்று வலி என பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். அதில் சில உணவுகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.

    பால்-பால் சார்ந்த உணவுகள்

    சிலருக்கு ஒவ்வாமையினை ஏற்படுத்தலாம். உணவை செரிக்க இயலாதபோது மேற்கூறிய அறிகுறிகள் ஏற்படலாம். ஆராக்கியமான உணவுப் பாதையில் சிறு குடல் லக்டேஸ் என்ற என்சைமை உருவாக்கி லக்டோஸ் சர்க்கரையினை உடைத்து செரிமானத்திற்கு உதவுகின்றது. சிலருக்கு இந்த லக்டோஸ் உடலில் உறிஞ்சப்படாமல் பெருங்குடலுக்கு செல்கின்றது. அங்குள்ள பாக்டீரியாவால் இது உடைபட்டு காற்று உருவாகின்றது. பிறகு காற்று, உப்பிசம், வலி, வயிற்றுப் போக்கு என வெளியேறுகின்றது.

    பால்-பால் சார்ந்த உணவுகள் எலும்பின் பலத்திற்கு கால்சியம், வைட்டமின் டி என தந்து உதவுபவை. புரதச்சத்து கொண்டவை. எனவே டாக்டர் அவரவர் உடல்நிலைக்கேற்ப இதன் அளவை குறைத்து கொடுக்க முயற்சிப்பார். சிலருக்கு தயிர் ஒத்துக் கொள்ளும். இருப்பினும் மருத்துவர் ஆலோசனை பெற்று செயல்படுவது ஆரோக்கியம் அளிக்கும்.

    பொரித்த உணவுகள், அதிக கொழுப்பு உள்ள உணவுகள்

    * கொழுப்பு உணவு அதிக நேரம் வயிற்றில் தங்கி ஆசிட்டை அதிகப்படுத்தி வலி, எரிச்சல், எதிர்ப்பு போன்ற பிரச்சினைகளை உருவாக்கும். வயிறு உப்பிசம், காற்று உருவாகும். கடும் வயிற்றுப்போக்கும் ஏற்படலாம்.

    * இவ்வகை உணவுகளுக்குப் பதிலாக குறைந்த கொழுப்புடைய அசைவ உணவுகள், கிரில், பேக்கிங் முறையில் சமைக்கலாம். கொட்டை வகை, விதை வகை, ஆலிவ் எண்ணை இவற்றினை அளவாக சேர்க்கலாம். மீன் உணவு எடுத்துக் கொள்ளலாம்.

    * சிலருக்கு முட்டைகோஸ், புரோகலி, முள்ளங்கி போன்றவை ஒத்துக்கொள்ளாது. இவை நல்ல நார்சத்து, வைட்டமின்கள் கொண்டவை. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை.

    * பொதுவில் இதனை அடியோடு நீக்காமல் அளவு குறைத்து நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம்.

    * சிலருக்கு உப்பு சேர்த்த ஸ்நாக்ஸ், சிப்ஸ் போன்றவையும் கேக், குக்கிஸ், துரித உணவுகள், குளிர் பானங்கள் இவை ஒத்துக் கொள்ளாது. பல பிரச்சினைகளை தரும். உண்மையில் இவைகளை அடியோடு நீக்கி விடுவது நல்லது.

    * பழங்கள், காய்கறிகள், முழு தானிய உணவுகள், நார்சத்து உணவுகளே நல்லது. தீர்வும் ஆகும்.

    பருப்பு வகைகள்

    சிலருக்கு பருப்பு கலந்த உணவு உடனடியாக வயிறு உப்பிசம் கொடுக்கும். செரிக்காது. அவைகளின் அதிக நார்சத்து, ஒலிகோ சாக்கரைட் என்ற ஒருவித கார்போஹைடிரேட் செரிமானத்தை கடினமாக்குகின்றது. அதிலும் ஏற்கனவே ெசரிமான பிரச்சினை உள்ளவர்களுக்கு கூடுதல் படுத்துகின்றது. ஆகவே தான் நம் முன்னோர்கள் சரியான அளவிலேயே பருப்பினை சேர்த்த உணவினைத் தயாரித்தார்கள்.

    சோயா, கடலைப் பருப்பு வகைகளை குறைத்துக் கொள்ளலாம். அல்லது தவிர்க்கலாம். பயத்தம் பருப்பு பயன்படுத்தலாம். இட்லி அநேகருக்கு நன்கு ஒத்துக் கொள்கின்றது.

    * காபி, டீ போன்றவை பலருக்கு அசிடிடி பிரச்சினையை ஏற்படுத்தும். இவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று புரதசத்து, திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

    * காரசாரமான மசாலா உணவு ஏற்படுத்தும் பிரச்சினைகளை அநேகர் அறிவர். புதினா, கொத்தமல்லி, சீரகம், சோம்பு, அன்னாசி பூ, பட்டை, ஏலக்காய், இஞ்சி இைவ குடல் ஆரோக் கியத்திற்கு நன்கு உதவும்.

    மது, புகை இவை ஒத்துக் கொள்ளவில்லை என்று கவலைப்பட வேண்டாம். அடியோடு ஒதுக்கி விடலாமே. எதனையும் மருத்துவர் அறிவுரை பெற்றே நடைமுறைப்படுத்த வேண்டும்.

    வாழ்க்கை கற்று தரும் பாடங்கள்

    வாழ்க்கையே பாடம்தான். இதனை மற்றவர் அனுபவங்கள் மூலமும் நம் அனுபவம் மூலமும் கற்றுக் கொண்டுதான் இருக்கின்றோம். நான் படித்த சிலரின் அனுபவ பாடங்களை உங்கள் முன் பகிர்ந்து கொள்கிறேன்.

    * வாழ்க்கை ஒன்றும் ஆஹா, ஓஹோ என்று இல்லை. இருப்பினும் அநேகர் சொல்வது பரவாயில்லை. ஓடுது என்பதுதான்.

    * சந்தேகமா இருக்கா! அடுத்த நகர்வை சற்று கம்மியா நிதானமா செய்யுங்க.

    * முதுமை வரும் பொழுதுதான் தெரியும். வாழ்க்கை எவ்வளவு சிறியது என்று. இதில் மற்றவரை வெறுப்பதிலேயே காலத்தினை வீணடிக்க வேண்டாம்.

    * உலகில் யாருக்கும் உங்களைப் பற்றி மட்டுமே பேசவும், நினைக்கவும் நேரம் கிடையாது. ஆகவே வாழ்வினை ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

    * எல்லா வாக்குவாதங்களிலும் நீங்களே ஜெயித்தவராக இருக்க முடியாது. உங்கள் ஒப்புதல் இன்மையைக் கூறினாலே போதும்.

    * அந்தந்த மாத செலவுகளை அந்த மாதமே முடித்து விட வேண்டும்.

    * ஓய்வு கால தேவைக்காக சம்பாதிக்க ஆரம்பித்த முதல் மாதத்தில் இருந்து ஆரம்பித்து விடுவீர்கள்.

    * கடந்த கால வலிகளோடு அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதை வைத்து நிகழ் காலத்தினை குழப்பிக் கொள்ள வேண்டாமே.

    * பிறரோடு உங்களை ஒப்பிட வேண்டாம். அவர்கள் என்னவெல்லாம் கஷ்டப்படுகின்றார்கள் என்பது யாருக்குத் தெரியும்.

    * வாழுவதற்காக பிசியாகுங்கள்.

    * உங்கள் மகிழ்ச்சிக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு.

    * அதிகம் மனதில், வாழ்க்கையில் வலி ஏற்படுத்தியவர்களைக் கூட மனதார மன்னிக்க முயற்சி செய்யுங்கள்.

    * அதிசயங்கள் நடக்கலாம். நம்புங்கள். மூழ்கி விடாதீர்கள்.

    * காலம் எல்லாவற்றினையும் ஆற்றும்.

    * முதுமை வரும் பொழுது நாமே நம் வேலைகளை செய்து கொள்ள ஆசைப்படுகின்றனர்.

    * கேட்டால் மட்டுமே கிடைக்கின்றன.

    • தமிழகத்தில் உள்ள பெரிய பட நிறுவனங்கள் மட்டுமே ரஜினி அருகில் செல்ல முடிந்தது.
    • ரஜினியின் இந்த முடிவு தமிழ் திரை உலகையே மிரள வைத்தது.

    எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், முடிவு எடுக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு 3 அம்சங்கள் முக்கியமாக இருக்க வேண்டும். ஒன்று தெளிந்த மனம். மற்றொன்று நிதானம். மூன்றாவது ஆழ்ந்த நம்பிக்கை.

    இந்த மூன்று குணமும் ஒருமித்த நிலைக்கு வரும்போது அதிரடி முடிவுகளை கூட அனாசயமாக அரை நொடியில் எடுத்து விட முடியும். நமது வேத நூல்களும், புராணங்களும் இதுபற்றி ஏராளம் கூறி உள்ளன.

    மகாபாரதத்தை யார் ஒருவர் ஆழ்ந்து படித்து, சிந்தித்துப் பார்த்து இருக்கிறாரோ, அவருக்கு அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரம் பற்றியும், அந்த கதாபாத்திரங்கள் எடுக்கும் முடிவுகள் பற்றியும் நிச்சயமாக தெரிந்து இருக்கும். ஒரு வரியில் சொல்வது என்றால் பற்றும், பாசமும் முடிவு எடுக்கும் திறனுக்கு எதிரானது என்பது மகாபாரதத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் காட்டப்பட்டுக் கொண்டே இருக்கும்.

    அதோடு எந்த இடத்தில் எப்படி முடிவு எடுக்க வேண்டும்? எந்த இடத்தில் எப்படி முடிவு எடுக்கக் கூடாது என்பதையும் மகா பாரதம் நமக்கு காட்டுகிறது. துரியோதனன் செய்த தவறுகளை தடுக்க அவனது தந்தை திரிதராஷ்டிரன் முடிவு எடுக்காமல் பாசத்தில் கிடந்தான். அதுவே அவனது வம்சம் அழிய அடிப்படையாக இருந்தது.

    குந்திக்கு குழந்தை பிறந்ததை கேட்டதும் காந்தாரி ஆத்திரத்தில் முடிவுகள் எடுத்தாள். இதனால் அவளுக்கு பிறந்த கவுரவர்களான 100 குழந்தைகளும் வெறுப்புணர்வு கொண்டவர்களாக வளர்ந்தனர்.

    பீஷ்மர் பதட்டத்தில் முடிவுகள் எடுத்து அவஸ்தைப்பட்டார். சகுனி எடுத்த முடிவுகள் துரியோதனனை வீழ்ச்சிக்கு கொண்டு சென்றது.

    நல்ல முடிவு என்பது மற்றவர்கள் தலையீடு இல்லாமல், குழப்பமான மனநிலையில் இல்லாமல் இருக்கும் போது தான் கிடைக்கும். எனவே எந்த ஒரு விஷயத்திலும் நாம் உணர்வுப்பூர்வமாக முடிவு எடுக்கறோமா, அறிவுப்பூர்வமாக முடிவு எடுக்கிறோமா என்பதுதான் முக்கியமானது.

    சூப்பர் ஸ்டார் ரஜினி இதெல்லாம் தெரியாதவரா? சிறு வயதிலேயே அவர் தாயாரிடம் அதிகம் கேட்டது மகாபாரத கதைகள்தான். ராமகிருஷ்ணா மடம் பள்ளியில் படித்த போதும் அவருக்குள் மகாபாரத நிகழ்வுகள் ஆழமாக பதியவைக்கப்பட்டன.

    அதன் பலனாகத்தான் 1979-ம் ஆண்டு கமலுடன் சேர்ந்து நடிக்காமல் இனி தனியாக நடிக்க வேண்டும் என்ற முடிவை அவரால் முழு மனதுடன் எடுக்க முடிந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டு மற்றவர்களை திடீரென தாக்கிய பிறகு அடுத்த சில நிமிடங்களில் அமைதி பெற்று இயல்பு நிலைக்கு திரும்பியதும் சில நல்ல முடிவுகளை அவரால் தன்னிச்சையாக எடுக்க முடிந்தது.

    1980-ம் ஆண்டு மனநல பாதிப்பு சுவடே இல்லாமல் புது மனிதனாக அவர் இயங்கத் தொடங்கிய போது அதிரடியாக மற்றொரு முடிவை எடுத்தார். அது.... தன்னை நாடி வந்த நூற்றுக்கணக்கான படத் தயாரிப்பாளர்களை சிறப்பாக கையாண்ட விதம்தான். பெரும்பாலான படத் தயாரிப்பாளர்கள், ரஜினி எவ்வளவு பணம் கேட்டாலும் கொட்டி கொடுக்கத் தயாராக இருந்தனர்.

    "நீங்கள் நடிப்பதாக தேதி கொடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டால் மட்டும் போதும், மற்ற விஷயங்கள் அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்றனர். அத்தகைய படத் தயாரிப்பாளர்களை ரஜினி கண்ணை மூடிக் கொண்டு நிராகரித்தார்.

    தன்னையும், தனது பெயரையும் மூலதனமாக வைத்துக் கொண்டு லட்சம், லட்சமாக பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் தன்னைச் சுற்றி வருகிறார்கள் என்பதை ரஜினி புரிந்து கொண்டார். அதோடு புதிய தயாரிப்பாளர்கள் எவ்வளவு வசதியுடையவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு படத்தை குறித்த காலத்தில் வெளியிட செய்யும் திறன் இருக்குமா? என்ற சந்தேகமும் ரஜினிக்குள் எழுந்தது.

    இதையடுத்து அவர் புதிய பட அதிபர்களை ஒட்டு மொத்தமாக நிராகரித்து அதிரடி முடிவு எடுத்தார். ரஜினி எடுத்த இந்த முடிவை அறிந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன், நாகேஷ், சிவக்குமார் உள்பட திரையுலக பிரமுகர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அதோடு தமிழ் திரை உலகிலும் பரபரப்பு ஏற்பட்டது.

    அடுத்து ரஜினி இன்னொரு முடிவு எடுத்தார். இனி கைவசம் 10 படங்கள், 12 படங்கள் என்று வைத்திருக்கக் கூடாது. நிம்மதி இல்லாமல் போய் விடும். எனவே மூன்று அல்லது நான்கு படங்களை மட்டுமே கைவசம் வைத்துக் கொண்டு நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

    இதைத் தொடர்ந்து ரஜினி எடுத்த அடுத்த முடிவு மிகப்பெரிய ஹைலைட்டாக அமைந்தது. அதாவது தனக்கான சம்பளத்தை தானே நிர்ணயிக்க வேண்டும் என்ற முடிவாகும். படங்களில் நடிக்க தனக்குரிய சம்பளத்தை வேறு ஒருவர் முடிவு செய்யக்கூடாது என்பதில் அவர் உறுதியான மன நிலைக்கு வந்தார்.

    ரஜினி எடுத்த இந்த புதிய முடிவுகளால் அவரைத் தேடி வரும் படத் தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை சல்லடை போட்டு சலித்து எடுத்து விட்டது போல குறைந்தது. தன்னை கதாநாயகனாக முன் நிறுத்தி, படம் எடுத்து, அந்த படத்தை வெற்றி பெற செய்கிற தகுதியும், திறமையும் யாருக்கு உள்ளதோ அவர்களுக்கு மட்டுமே கால்ஷீட் கொடுப்பது என்று முடிவு செய்தார்.

    1980-ல் அவரது செயல்பாடுகள் அனைத்தும் அத்தகைய படத் தயாரிப்பாளர்கள் யார்-யார் இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்வதிலேயே இருந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரிய பட நிறுவனங்கள் மட்டுமே ரஜினி அருகில் செல்ல முடிந்தது.

    ரஜினியும் அதைத்தான் எதிர் பார்த்து காத்திருந்தார். தனக்கு எந்த விதத்திலும் தொந்தரவு கொடுக்காத கோடீஸ்வர முதலாளிகளுக்கே இனி தன் கால்ஷீட் தரப்படும் என்று துணிச்சலாக வெளிப்படையாக அறிவித்தார்.

    ரஜினியின் இந்த முடிவு தமிழ் திரை உலகையே மிரள வைத்தது. இந்த முடிவால் ரஜினியிடம் இருந்து வந்த மன அழுத்தம் கணிசமான அளவுக்குக் குறைந்தது. பில்லாவின் இமாலய வெற்றிக்குப் பிறகு வந்த தேவர் பிலிம்சின் அன்புக்கு நான் அடிமை படம் சுமாராக ஓடியது.

    அதன் பிறகு மகேந்திரன் இயக்கத்தில் "ஜானி" என்ற படத்தில் ரஜினி நடித்தார். இந்த படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடம். கதாநாயகியாக ஸ்ரீதேவி நடித்தார். ரஜினியும், ஸ்ரீதேவியும் போட்டி போட்டு நடித்தனர். இந்த படம் தயாரிப்பில் இருந்த போது, ரஜினியும் ஸ்ரீதேவியும் காதலிப்பதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்றெல்லாம் கிசுகிசுக்கள் பரவியது.

    இதுகுறித்து டைரக்டர் மகேந்திரன் தினத்தந்திக்கு அளித்த பேட்டியில் அழகாக குறிப்பிட்டிருந்தார். அந்த பேட்டி வருமாறு:-

    ரஜினி புகழின் உச்சத்துக்கு வந்து கொண்டிருந்தபோது ஒரு நடிகையை விரும்பினார். அதுபற்றி என்னிடம் கருத்து கேட்டார். நானும் அந்த நடிகை உங்கள் மனைவியாக வந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். ஆனால் அந்த நடிகை வீட்டின் கிரகபிரவேசத்துக்கு சென்று இருந்த நேரத்தில் திருமண பேச்சை தொடங்கலாம் என்று நினைத்தபோது மின்சாரம் போய் விட்டது. இதனால் அவர் அந்த நடிகையை திருமணம் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்வுக்கு பிறகு தனது தத்து தாய் ரெஜினாவிடமும் ரஜினி கருத்து கேட்டார். ஆனால் அவரோ "உன் விருப்பப்படி செய்" என்று சொன்னார். இதனால் திரையுலகில் தன்னை விரும்பிய நடிகையை ரஜினி திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்து மாறினார். இந்தக்கால கட்டத்தில் அவர் நடித்து வெளியான "எல்லாம் உன் கைராசி" படம் வெற்றி பெறவில்லை.

    ஆனால் அதற்கு பிறகு வந்த "பொல்லாதவன்" 100 நாட்கள் ஓடியது. அதன் பிறகு ஏ.வி.எம். தயாரிப்பில் வெளிவந்த "முரட்டுக் காளை" 150 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. அந்த படத்தில் ரஜினி கதாநாயகனாகவும், ஜெய்சங்கர் வில்லனாகவும் நடித்து இருந்தனர். முரட்டுக்காளை படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாள் ஜெய்சங்கர் காலில் விழுந்து ரஜினி ஆசி பெற்றது பரபரப்பாக பேசப்பட்டது.

    ரஜினிக்கு ஜோடிக்கு ரதி நடித்தார். இந்த படத்தில்தான் ரஜினியுடன் ஒய்.ஜி.மகேந்திரனும் சேர்ந்து நடித்து இருந்தார். இந்த படத்தின் வெற்றி ஏ.வி.எம். நிறுவனத்துக்கு மிகப்பெரிய பலனை கொடுத்தது. இதனால் பட அதிபர் ஏ.வி.எம். சரவணன் ரஜினியை புகழ்ந்து பேசினார்.

    அவர் கூறுகையில், "ரஜினி எதையும் வெளிப்படையாக பேசுபவர். கஷ்டப்பட்ட காலத்தில் சிறு பொய் கூட அவர் சொன்னது கிடையாது. வசதி வந்த பிறகும் அவர் பொய் பேசாமல் வாழ்ந்தார். அடுத்தவர் மனம் நோகும்படி நடக்கக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார்.

    முரட்டுக்காளை படத்தில் ஜெய்சங்கர் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்ட போது ரஜினி அவரிடம் மிக மிக பணிவாக நடந்து கொண்டார். 150 படங்களில் கதாநாயனாக நடித்த ஜெய்சங்கருக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். படத்தின் விளம்பரங்களில் அவருக்குரிய முக்கியத்துவத்தை கொஞ்சமும் குறைத்து விடாதீர்கள் என்று பல தடவை கூறினார். இது ஒன்றே ரஜினியின் சிறந்த குணத்துக்கு உதாரணம்" என்றார்.

    முரட்டுகாளை படம் வெற்றி ரஜினிக்கு புதிய அந்தஸ்தை கொடுத்து இருந்தது. அப்போது அவருக்கு வயது 30. அவருக்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. கஷ்டப்பட்ட காலத்தில் தன்னை ஒரு பெண், "இவர் கறுப்பாக இருக்கிறார். இந்த மாப்பிள்ளை வேண்டாம்" என்று சொன்னது அவர் மனதுக்குள் மீண்டும் மீண்டும் வந்து போனது.

    எனவே நல்ல சிவப்பான பெண்ணைதான் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். ரஜினியை நிராகரித்த பெண் பற்றிய ருசிகர தகவல்களை நாளை பார்க்கலாம்.

    ×