என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஜினி"

    • வாழ்க்கையின் இன்ப - துன்பங்களை உணர்ந்தவன் மட்டுமல்ல; அனுபவித்து அறிந்தவன் நான்.
    • தெய்வம் என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதித்தால் அதுவே போதும்.

    "லதாவுக்கும் எனக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற இருக்கிறது" என்று ரஜினிகாந்த் அறிவித்தார்.

    1981 பிப்ரவரி 25-ந்தேதி மாலை 4 மணிக்கு, நிருபர்களை திடீரென்று ரஜினி அழைத்தார். சில நிமிடங்களுக்கெல்லாம் நிருபர்கள் பெருந்திரளாகக் கூடி விட்டனர்.

    நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    7 மாதங்களுக்கு முன்பே, ரஜினிகாந்த் - லதா திருமணம் என்ற செய்தியை வெளியிட்ட ஒரே பத்திரிகை "தினத்தந்தி" தான். ரகசியமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருந்த இந்தச் செய்தியை, "தினத்தந்தி" வெளியிட்டது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அந்தச் செய்தி "தினத்தந்தி"யில் வெளிவந்ததும், லட்சக்கணக்கான எனது ரசிகர்களிடம் இருந்து பல கடிதங்கள் வந்தன. பட அதிபர்களும், நடிகர்களும் 'போன்' செய்து. 'இது உண்மையா என்று கேட்டார்கள். சற்று பொறுத்திருக்கும்படி கூறினேன்.

    அந்தச் செய்தி இன்று உண்மையாகி, எல்லோரும் பாராட்டும் விதமாக அமைந்தது பற்றி பெருமைப்படுகிறேன்." இவ்வாறு கூறிய ரஜினிகாந்த், அங்கிருந்த தினத்தந்தி நிருபருடன் கை குலுக்கினார்.

    தொடர்ந்து அவர் கூறியதாவது:-

    "லதாவுடன் எனது காதல் கனிந்து, கடவுள் அருளால் திருமணம் நடைபெறுகிறது. இது எப்படி என்பது பற்றி, என் அன்பு ரசிகர்களுக்கு சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.

    வாழ்க்கையின் இன்ப - துன்பங்களை உணர்ந்தவன் மட்டுமல்ல; அனுபவித்து அறிந்தவன் நான். முதுகில் தழும்பேற மூட்டைசுமந்து, 'மில்லி' அடித்து வாழ்க்கையின் மேடு- பள்ளங்கள் அனைத்தையும் உணர்ந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். என் வாழ்க்கையில் பெரும் திருப்பம் நிகழ்ந்தது. பிரபல நடிகை சவுகார் ஜானகியின் வீட்டில் தான். 7 மாதங்களுக்கு முன் அங்கு, டைரக்டர் பாலசந்தர் சாரின் "தில்லு முல்லு" படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அதில் நான் நடித்துக் கொண்டிருந்தேன்.

    பகல் ஒரு மணி இருக்கும். எத்திராஜ் கல்லூரி மாணவிகள் சிலர் வந்தனர். அவர்களில், என் முன்னால் வந்து, தன்னை அறிமுகம் செய்து கொண்டவர் லதா. "மிஸ்டர் ரஜினி! நான் கல்லூரி மாணவி. எங்கள் கல்லூரியின் சிறப்பு இதழுக்கு, உங்களை பேட்டி காண வந்திருக்கிறேன். சம்மதமா?" என்று கேட்டார். நான் சம்மதித்தேன். பேட்டி தொடர்ந்தது. சுவையான, அறிவுபூர்வமான கேள்விகள் பலவற்றை லதா கேட்க கேட்க, நானும் என் பாணியில் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.

     

    லதா திடீரென்று "மிஸ்டர் ரஜினி காந்த்! உங்கள் திருமணம் எப்போது?" என்று கேட்டார். "குடும்பப் பாங்கான பெண் எப்போது கிடைக்கிறாளோ, அப்போதுதான் திருமணம்" என்று பதிலளித்தேன். லதா மீது கண்களைப் பதித்தபடி. இப்படிச் சொன்னால் எப்படி! விளக்கமாகச் சொல்லுங்கள்!" என்றார் லதா. "உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். உங்களை மாதிரி ஒரு பெண் கிடைத்தால் நான் கல்யாணம் செய்து கொள்வேன்" என்றேன்.

    நாணத்தால் லதாவின் முகம் சிவந்து விட்டது. என் வாழ்க்கையில் ஒளிவு - மறைவு இல்லை. உண்மை பேசி வாழ விரும்புகிறேன். என் மனமார, எவருக்கும் துரோகம் செய்ய மாட்டேன். அதனால்தான் மனம் திறந்து, "என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமா?" என்று லதாவிடம் கேட்டேன். தொடர்ந்து, இதுபற்றி ஒய்.ஜி.மகேந்திரனிடம் பேசினேன். லதாவிடமும், லதாவின் பெற்றோரிடமும் மகேந்திரன் பேசினார். அவர்களின் சம்மதம் கிடைத்தது.

    அதன் பிறகு நானும் லதா வீட்டுக்கு சென்று அவர் பெற்றோர்களிடம் பேசினேன். 'திருமணத்துக்கான ஏற்பாடுகளை எல்லாம் நானே செய்கிறேன். அதுவரை வெளியே யாருக்கும் தெரிய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்.

    நான் பெங்களூர் சென்று என் அண்ணனிடம் லதா பற்றி கூறினேன். முதலில் அவர் அதிர்ச்சி அடைந்தார். 'அந்தப் பெண் நம்ம சாதி இல்லேன்னு சொல்றே. மராத்தியில் கிடைக்காத பெண்ணா உனக்கு மதராசில் கிடைக்கப்போகுது?" என்று கேட்டார். 'நான் நல்லா இருக்கணும்னு நீங்க விரும்பினா, லதாவை மணந்து கொள்ள எனக்கு அனுமதி கொடுங்க' என்று சொல்லி விட்டு வந்தேன்.

    பிறகு என் அண்ணன், சென்னைக்கு வந்தார். லதாவைப் பார்த்து விட்டு, சம்மதம் தெரிவித்தார். லதா மட்டும், "உங்களை மணந்து கொள்ளமாட்டேன் என்று கூறியிருந்தால், என் மனம் தாங்கியிருக்காது. ஏனென்றால் ஒரு பொருளின் மீது ஆசை கொண்டால் அதை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறி கொண்டவன் நான். சம்யுக்தையை பிருதிவிராஜன் தூக்கிச் சென்றது போன்ற நிலைமை ஏற்பட்டிருக்கும். அதற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது.

    திருமணத்துக்காக 7 மாதம் காத்திருந்தேன். அதற்குக் காரணம் உண்டு. எனது மனைவியின் குணநலன்கள் எப்படி? என் குணத்தையும், மனதையும் அறிந்து நடந்து கொள்வாளா? அவளது நடை, உடை, பாவனை எப்படி என்பதை எல்லாம் அறிந்து கொள்ள விரும்பினேன். அதற்குத்தான் 7 மாதம் பிடித்தது.

    என் மனைவி லதாவுக்கு சங்கீத ஞானம் உண்டு. நன்றாகப் பாடுவாள். அவள் விரும்பினால் சினிமாவில் பின்னணி பாடலாம். நடிக்க விரும்பினால் கூட நடிக்கலாம். நான் தடை சொல்லமாட்டேன். என்னோடு ஜோடியாக நடிக்க விரும்பினால்கூட, நான் நடிக்கத் தயார்!

    பெண்கள் என்பவர்கள் வீட்டில் கணவன் காலடியில் நெளியும் புழுவோ, பூச்சியோ அல்ல. பெண்களுக்கு சுதந்திரம் தேவை, அந்த சுதந்திரத்தை நான் முழுமையாகத் தருவேன. "

    இவ்வாறு ரஜினி கூறினார்.

    திருமணம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, ரஜினிகாந்த் அதிரடியாக பதில் அளித்து, பரபரப்பு உண்டாக்கினார்.

    தன் திருமணம் 26-2-1981 அன்று திருப்பதியில் நடைபெற இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ரஜினிகாந்த், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து கூறியதாவது:-

    "எனது திருமணத்துக்கு அழைப்பிதழ் அச்சிடப்படவில்லை. என்னோடு நெருங்கிப் பழகிய, என் முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்தவர்களைக்கூட, "வாருங்கள்! என் திருமண கோலத்தைக் கண்ணாரக் கண்டு ஆசீர்வதியுங்கள்" என்று அழைக்கவில்லை.

    இதற்குக் காரணம் என்ன? அழைப்பிதழ் அச்சடித்து, குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு வீடு வீடாகச் சென்று கொடுப்பது, தபால், தந்தி, ரேடியோ வசதிகள் இல்லாத அந்தக் காலத்துக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்தக் காலத்தில் அது எதற்கு? என்னைப்போன்ற ஒரு நடிகனுக்குத் திருமணம் என்றால், அடுத்த நிமிடமே மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக நவீன வசதிகள் இருக்கின்றன. அதனால் அழைப்பிதழ் அச்சடிக்கவில்லை.

    என் திருமணத்துக்கு உடன் பிறந்தவர்கள் தவிர, வேறு எவரையும் அழைக்கவில்லை. வயது முதிர்ந்த என் தந்தையிடம் கூட, மானசீகமாகத்தான் வாழ்த்து பெற்று இருந்தேன். கண்டக்டராக நான் பெங்களூரில் பணியாற்றினேனே! அப்போது என்னுடன் பழகி, என்னுடன் உண்டு உறங்கிய சில பஸ் கண்டக்டர்களை மட்டும் திருமணத்துக்கு அழைத்திருக்கிறேன்.

    தெய்வத்தின் சந்நிதானத்தில் என் திருமணம் நடைபெறுகிறது. தெய்வம் என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதித்தால் அதுவே போதும். ரஜினி, தன் வீட்டில், வெறும் மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலியைத்தான் நான் லதா கழுத்தில் கட்டப்போகிறேன்.

    தாலி கட்டுவது என்பது வெறும் சடங்கு. ஆனால், தெய்வத்தை சாட்சியாக வைத்துக் கொண்டு, மனச்சாட்சிக்கு பயந்து, ஒருத்தி கழுத்தில் கயிற்றைக் கட்டுவதே உண்மையான திருமணம். இன்று நான் இருக்கும் நிலையில் 4 ஆயிரம் பேர் என்ன. லட்சம் பேருக்கு அறுசுவை உணவு வழங்கி திருமணத்தை சிறப்பாக செய்ய முடியும்.

    ஆனால், கோடீசுவரன் என்றாலும், திருமண விழாவுக்கு பணத்தை விரயம் செய்வதை நான் வெறுக்கிறேன். பசி அறியாதவர்கள் என் திருமணத்துக்கு வந்து விருந்துண்டு போவதைவிட, பசித்தவர்களுக்கு சோறு போட நினைக்கிறேன். எனவே, சென்னையில் உள்ள சில அனாதை விடுதிகளில் உள்ளவர்களுக்கு சீருடையுடன் உணவும் வழங்க ஏற்பாடு செய்திருக்கிறேன்.

    இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

    திருப்பதியில் நடந்த ரஜினி-லதா திருமணம் பற்றி நாளை பார்க்கலாம்.

    • ரஜினியுடன் லட்சுமி, ஸ்ரீபிரியா, சுருளிராஜன், டெல்லிகணேஷ் உள்பட பலர் நடித்திருந்தனர்.
    • படத்தில் ரஜினிக்கு முரட்டு இளைஞன் வேடம்.

    ரஜினி-லதா 1980-ம் ஆண்டு மத்தியில் காதல் ஜோடியாக சிறகடித்து பறந்துக் கொண்டிருந்தனர். தினமும் அவர்கள் போனில் பேசிக் கொள்வார்கள். நேரம் கிடைக்கும் போது சேர்ந்து விழாக்களுக்கு செல்வதை வழக்கத்தில் வைத்திருந்தனர். 3.7.1980-ல் வெளியான "காளி" படத்தின் முதல் காட்சியை அவர்கள் இருவரும் சேர்ந்து பார்த்தனர்.

    இப்படி காதலில் ரஜினி தீவிரமாக இருந்தாலும் படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தினார். அந்த சமயத்தில் அவரிடம் முக்தா சீனிவாசன் இயக்கிய "பொல்லாதவன்" படமும், ஏ.வி.எம். நிறுவனத்தின் "முரட்டுக் காளை" படமும் கைவசம் இருந்தன. அதில் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பொல்லாதவன் படப்பிடிப்பு சென்னை, பெங்களூர், சிம்லா நகரங்களில் படமாக்கப்பட்டது.

    முதலில் இந்த படத்துக்கு எரிமலை என்று பெயர் வைத்திருந்தனர். பிறகு சென்டிமெண்ட் காரணமாக அந்த படத்தின் பெயரை பொல்லாதவன் என்று மாற்றி இருந்தனர். அந்த படத்தில் ரஜினியுடன் லட்சுமி, ஸ்ரீபிரியா, சுருளிராஜன், டெல்லிகணேஷ் உள்பட பலர் நடித்திருந்தனர். படத்தில் ரஜினிக்கு முரட்டு இளைஞன் வேடம்.

    எஸ்டேட் ஒன்றில் வேலைக்கு செல்லும் லட்சுமி, ரெயிலில் வரும்போது பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் ஒரு மர்ம மனிதனை பார்த்து விடுவார். அவர் பற்றிய தகவல்களை பின்னணியாகக் கொண்டு பொல்லாதவன் படம் தயாரிக்கப்பட்டு இருந்தது.

    பொல்லாதவன் படத்தின் பெரும்பாலான காட்சிகள் மைசூர் பகுதிகளில் படமாக்கப் பட்டன. இதற்காக ரஜினி, ஸ்ரீபிரியா, லட்சுமி ஆகியோர் பெங்களூரில் தங்கியிருந்து படப்பிடிப்புக்கு சென்று வந்தனர். பெங்களூரில் இருந்து காரில் புறப்படும்போது லட்சுமியிடம் ரஜினி ஒவ்வொரு பகுதியாக காட்டி அங்கெல்லாம் தான் சிறுவயதில் சுற்றி அலைந்ததை தெரிவித்தார்.

    ஒரு இடத்தை சுட்டிக்காட்டி அங்கு கூலி வேலை செய்ததை நினைவுப்படுத்தினார். அந்த கூலி வேலைக்கு தினமும் 3 ரூபாய் கிடைத்ததையும் ரஜினி சொன்ன போது லட்சுமிக்கும், ஸ்ரீபிரியாவுக்கும் பிரமிப்பாக இருந்தது. ஒரு தடவை பெங்களூரில் லட்சுமி நடித்து வெளியான படத்தை பார்க்க கூலி வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில் 15 ரூபாய் முன்பணம் வாங்கிக் கொண்டு சென்றதை கூறினார்.

    ரஜினி சிறுவயதில் கஷ்டப்பட்டதை எதையும் மறைக்காமல் சொன்னதை பார்த்து லட்சுமிக்கு மேலும் வியப்பாக இருந்தது. இந்த படத்தின் "அதோ வாரான்டி வாரான்டி.... வில் ஏந்தி ஒருத்தன்...." பாடல் காட்சி காஷ்மீரில் படமாக்கப்பட்டது. அங்குள்ள ஏரியில் படமாக்கப்பட்டபோது ஒளிப்பதிவாளர் கர்ணனின் மோதிரம் தண்ணீருக்குள் தவறி விழுந்து தொலைந்து போனதை அறிந்து ரஜினி வருத்தப்பட்டார்.

    தமிழ்நாட்டுக்கு திரும்ப டெல்லிக்கு வந்ததும் அவர் கர்ணனை அழைத்துச் சென்று அதே போன்று ஒரு மோதிரம் வாங்கிக் கொடுத்து அவரை மகிழ்ச்சிப்படுத்தினார். இதைப் பார்த்து முக்தா சீனிவாசனும், அவரது குடும்பத்தினரும் ரஜினியின் பெருந்தன்மையை நினைத்து ஆச்சரியப்பட்டனர்.

    1980-ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று வெளியான பொல்லாதவன் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற "நான் பொல்லாதவன்... பொய் சொல்லாதவன்..." என்ற பாடல் அவரது ரசிகர்களிடம் அமோக ஆதரவை பெற்றது. இந்த பாடலை ரஜினிக்காகவே சிறப்பான வரிகளை அமைத்து கண்ணதாசன் எழுதி இருந்தார். அந்த பாடல் வரிகளை பார்த்தாலே அது உங்களுக்கு தெரியும்....

    நான் பொல்லாதவன்....

    பொய் சொல்லாதவன்...

    என் நெஞ்சத்தில்

    வஞ்சங்கள் இல்லாதவன்...

    வீண் வம்புக்கும்

    சண்டைக்கும் செல்லாதவன்

    கை கட்டி, வாய்மூடி, யார் முன்னும்

    நான் நின்று ஆதாயம் தேடாதவன்,

    அந்த ஆகாயம் போல் வாழ்பவன்…

    வானத்தில் வல்லூறு வந்தாலே கோழிக்கும்

    வீரத்தை கண்டேனடி…

    ஞானத்தை பாதிக்கும்

    மானத்தை சோதித்தால்

    நான் என்ன செய்வேனடி…

    நானுண்டு வீடுண்டு வாழ்வுண்டு நாடுண்டு

    என்றேதான் வாழ்ந்தேனடி

    நாளாக நாளாக தாளாத கோபத்தில்

    நான் வேங்கை ஆனேனடி...

    இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக

    இதுபோல ஆனேனடி…- என்ற அந்த பாடலில் ரஜினியின் ஆட்டம் ரசிகர்களை கவர்ந்தது.

    இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி நடித்து வந்த "முரட்டுக்காளை" படமும் தமிழக ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. முரட்டுக்காளை படத்தில் நடிப்பதற்காக ரஜினிக்கு ஏ.வி.எம். நிறுவனத்தின் அதிபர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் 3 மடங்கு அதிக சம்பளம் கொடுத்தார். அது மட்டுமின்றி 9453 என்ற எண் கொண்ட வெளிநாட்டு கார் ஒன்றையும் பரிசாக வழங்கினார்.

    முள்ளும் மலரும் படத்துக்கு ரூ.35 ஆயிரம், பைரவி படத்துக்கு ரூ.50 ஆயிரம் சம்பளம் வாங்கிய ரஜினிக்கு முரட்டுக்காளை படத்தில் நடித்ததற்கு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைத்தது. பஞ்சு அருணாசலம் கதை, வசனம், பாடல்கள் எழுதிய அந்த படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார்.

    கிராமத்து கதை கொண்ட இந்த படத்தில் ரஜினி ஏழை இளைஞனாக நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக ரதி நடித்திருந்தார்.

    கிராமத்தில் வாழும் பண்ணையார் தனது முரட்டுக் காளையை யார் அடக்குகிறார்களோ அவர்களுக்கு தனது தங்கையை திருமணம் செய்து கொடுப்பதாக அறிவிப்பார். ரஜினி அந்த காளையை அடக்கி விடுவார். ஆனால் பண்ணையார் தங்கையை திருமணம் செய்ய மறுப்பார். அதன் பிறகு நடப்பதுதான் கதை.

    175-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனி இடம் பெற்று இருந்த ஜெய்சங்கர் முதல் முதலாக இந்த படத்தில் பண்ணையாராக வில்லன் வேடத்தில் நடித்தார். இந்த படத்தின் பணிகள் தொடங்கிய போது ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் மரணம் அடைந்தார். என்றாலும் படஅதிபர் ஏ.வி.எம்.சரவணன் பொறுப்பேற்று இந்த படத்தின் பணிகளை சிறப்பாக மேற்கொண்டார்.

    இதனால் உற்சாகம் அடைந்த ரஜினி இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். பஞ்சு அருணாசலமும், எஸ்.பி.முத்துராமனும் ரஜினியை நன்கு உணர்ந்தவர்களாக இருந்த தால் முரட்டுக்காளை படத்தில் அவரை எந்த அளவுக்கு வித்தியாசப்படுத்தி காட்ட முடியுமோ அந்த அளவுக்கு காட்டினார்கள்.

    அதனால்தான் ஓடும் ரெயில் மீது ஜெய்சங்கரும், ரஜினியும் சண்டை போடும் காட்சிகளில் கூட ரஜினி டூப் போடாமல் தானே நடித்து முடித்தார். இந்த படத்தில் பஞ்சு அருணாசலம் எழுதி இளையராஜா இசையமைத்த பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. குறிப்பாக "பொதுவாக என் மனசு தங்கம்..." பாடல் பட்டிதொட்டிகளில் எல்லாம் அனல் பறக்கும் வகையில் இருந்த தோடு ரசிகர்களின் விருப்பப் பாடலாகவும் அமைந்தது.

    அந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் ரஜினிக்காகவே பஞ்சுஅருணாசலம் எழுதியதாகும். ரஜினியுடன் பழகி அவரது வாழ்க்கையை முழுமையாக அறிந்து வைத்திருந்த பஞ்சு அருணாசலம் அதையெல்லாம் அந்த பாடலில் கொட்டி இருந்தார். அந்த பாடலை பார்த்தாலே அது உங்களுக்கு தெரியவரும்....

    அண்ணனுக்கு ஜே…

    காளையனுக்கு ஜே…

    பொதுவாக என் மனசு தங்கம்…

    ஒரு போட்டியின்னு

    வந்து விட்டா சிங்கம்…

    பொதுவாக என் மனசு தங்கம்…

    ஒரு போட்டியின்னு

    வந்து விட்டா சிங்கம்…

    உண்மைய சொல்வேன்…

    நல்லத செய்வேன்…

    வெற்றிமேல் வெற்றி வரும்…

    ஆடுவோம் பாடுவோம்

    கொண்டாடுவோம்…

    ஆ… ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே…

    முன்னால சீறுது மயிலக்காளை…

    பின்னால பாயுது மச்சக்காளை…

    முன்னால சீறுது மயிலக்காளை… ஆ…

    பின்னால பாயுது மச்சக்காளை…

    அடக்கி ஆளுது முரட்டுக்காளை…

    முரட்டுக்காளை… முரட்டுக்காளை…

    நெஞ்சுக்குள் பயமும் இல்ல…

    யாருக்கும் அச்சம் இல்ல…

    வாராதோ வெற்றி என்னிடம்…

    விளையாடுங்க உடல் பலமாகுங்க…

    பொறந்த ஊருக்கு புகழை சேறு…

    வளந்த நாட்டுக்கு பெருமை தேடு…

    பொறந்த ஊருக்கு புகழை சேறு…

    வளந்த நாட்டுக்கு பெருமை தேடு…

    நாலுபேருக்கு நன்மைசெய்தா…

    கொண்டாடுவார் பண்பாடுவார்…

    என்னாலும் உழைச்சதுக்கு…

    பொன்னான பலன் இருக்கு…

    ஊரோட சேர்ந்து வாழுங்க…

    அம்மன் அருள் சேரும்…

    இனி நம்ம துணையாகும்…

    ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்… ஹே…

    ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே…

    இந்த பாடலால் முரட்டுக்காளை படம் வெள்ளி விழா படமாக மாறியது. அதன் பிறகு தீ, கழுகு ஆகிய படங்களில் ரஜினி கவனம் செலுத்தினார். அப்போது லதாவை திருமணம் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டதாக நினைத்தார். உடனடியாக ரஜினி அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதுபற்றிய ருசிகர தகவல்களை நாளை காணலாம்.

    • ரஜினியை பொருத்தவரை சில விஷயங்கள் மனதுக்குள் தோன்றும்போது மிகச் சரியாக இருக்கும் என்று நம்புவார்.
    • லதாவுக்கும் ரஜினியை பார்த்த முதல் பார்வையிலேயே காதல் மலர்ந்து இருந்தது.

    சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு லதா மீது முதல் பார்வையில் ஏற்பட்ட காதல் புனிதமாக மாறியது. லதாவை பார்த்து அவர் மெய்மறந்து போய் இருந்தார். அவரையே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் ரஜினி மனதுக்குள் ஆழமாக உருவானது.

    சினிமா உலகில் அவர் எத்தனையோ நடிகைகளை பார்த்து இருக்கிறார். அவர்களில் சில நடிகைகள் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பி இருக்கிறார்கள். அதுபோல பொதுவாழ்வில் எத்தனையோ பெண்களை அவர் கடந்து வந்து இருக்கிறார். அவர்களிலும் சிலர் ரஜினியை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தது உண்டு.

    ஆனால் யாரும் அவர் மனதில் முழுமையான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கல்லூரி மாணவி லதா மட்டுமே ரஜினி மனதில் அந்த அரிய தாக்கத்தை அன்று ஏற்படுத்தினார். தனக்கு மனைவியாக வரும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்று ரஜினி ஏற்கனவே கனவு கண்டு கொண்டு இருந்தார்.

    அவரது அந்த கனவை நூறு சதவீதம் பூர்த்தி செய்யும் வகையில் லதா பொருத்தமாக இருந்தார். எனவேதான் லதா தனக்கு மனைவியாக வந்தால் தனது வாழ்வு இனிமையாக இருக்கும் என்று ரஜினிக்கு மனதில் தோன்றியது.

    ரஜினியை பொருத்தவரை சில விஷயங்கள் மனதுக்குள் தோன்றும்போது மிகச் சரியாக இருக்கும் என்று நம்புவார். லதா மீதான காதலும் அவருக்கு அப்படித்தான் அடித்தளம் அமைத்து இருந்தது. ஆனால் மாணவி லதாவிடம் தனது காதலை எப்படி சொல்வது என்ற தவிப்பு ரஜினியிடம் ஏற்பட்டது.

    தனது மனதுக்குள் உருவாகி இருக்கும் காதலை லதா உணரும் வகையில் சொல்ல வேண்டும். ஆனால் நேரடியாக சொல்ல முடியாது. எப்படி சொல்வது என்று யோசித்தார். லதா தன்னிடம் அடுத்து ஏதாவது ஒரு கேள்வி கேட்கும்போது அதையே தனக்கு சாதகமாக மாற்றி காதலை சொல்லி விட வேண்டியதுதான் என்று மனதுக்குள் முடிவு செய்துக்கொண்டார்.

    அந்த சமயத்தில் சொல்லி வைத்தது போல லதா ஒரு கேள்வியை ரஜினியை பார்த்து கேட்டார். "மிஸ்டர் ரஜினிகாந்த் நான் முன்பு கேட்ட கேள்விக்கு குடும்பப்பாங்கான பெண் கிடைத்தால் திருமணம் செய்துக் கொள்வேன் என்று சொன்னீர்கள். குடும்பப் பாங்கான பெண் என்றால் என்ன அர்த்தம்? எங்களுக்கு அதுபற்றி புரியவில்லை. நீங்களே அதை கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?" என்று லதா யதார்த்தமாக கேட்டார்.

    இதை கேட்டதும் ரஜினிக்கு வானத்தில் மிதப்பது போல் இருந்தது. லதாவிடம் இருந்து தனக்கு சாதகமாக இப்படி ஒரு கேள்வி வரும் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. இந்த வாய்ப்பை தவற விட்டுவிடக் கூடாது என்று நினைத்தார். லதா கேட்ட லட்டு மாதிரியான அந்த கேள்வியை "லபக்" என்று பிடித்துக் கொண்டார்.

    ரஜினி சிரித்துக்கொண்டே லதாவை பார்த்து, "குடும்பப் பாங்கான பெண் என்றால் அழகாக இருக்க வேண்டும். கம்பீரமாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் மென்மையானவராகவும் இருக்க வேண்டும். அதோடு புத்திகூர்மை கொண்டவராகவும் செயல்பட வேண்டும். அதாவது உன்னை மாதிரி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நான் உடனே திருமணம் செய்து கொள்வேன்" என்றார்.

    ரஜினி சொன்ன இந்த பதிலால் லதா உள்பட 4 மாணவிகளும் அரண்டுப் போனார்கள். அந்த அறை அப்படியே நிசப்தமாக மாறியது. மாணவிகள் 4 பேருக்கும் வார்த்தை வெளியில் வரவில்லை. லதாவுக்கு வெட்கத்தால் முகம் சிவந்தது. அவர் முகம் லேசாக புன்னகைக்கு மாறி கண்களில் குறு...குறுப்பு தோன்றியது.

    ஆனால் பதில் சொல்ல முடியாமல் அவரது பார்வை தரைக்கு சென்றது. அடுத்து என்ன செய்வது என்று அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ரஜினியை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தவித்த லதா அடுத்த நிமிடம் அந்த அறையில் இருந்து எழுந்து வெளியே சென்று விட்டார். அவரை தொடர்ந்து மற்ற மாணவிகளும் எழுந்து சென்று விட்டனர்.

    லதா கம்பீரமாக நடந்து செல்வதை ரஜினி ரசித்துப் பார்த்தார். இந்த பெண் யார்? என்று தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று யோசித்தபடியே தனது ஓய்வு அறைக்கு செல்வதற்காக நடந்தார். அப்போது அங்கே நடிகை சவுகார்ஜானகி வந்து கொண்டு இருந்தார். அவரிடம், "அம்மா இப்போது 4 பெண்கள் வந்தார்கள் அல்லவா? அதில் சிவப்பாக, சுறுசுறுப்பாக இருந்த பெண் யார் என்று உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்டார்.

    அதற்கு சவுகார்ஜானகி, "எந்த பெண்?" என்று கேள்வி எழுப்பினார். உடனே ரஜினி தூரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த லதாவை சுட்டிக்காட்டினார். லதாவைப் பார்த்ததும் சவுகார்ஜானகி, "இந்தப் பெண்ணா.... எனக்கு நன்றாக தெரியும். அவள் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மனைவியின் தங்கை" என்றார்.

    இதைக் கேட்டதும் ரஜினிக்கு உற்சாகம் ஆகி விட்டது. ஒய்.ஜி.மகேந்திரன் மூலம் தனது காதலை தெரிவித்து திருமணம் பற்றி பேசலாம் என்று தீர்மானித்தார். அதன்படி ஒய்.ஜி.மகேந்திரனை நேரில் சென்று சந்தித்தார். வழக்கமான நலம் விசாரிப்பு முடிந்த பிறகு சினிமா பற்றி இருவரும் சில விஷயங்கள் பேசினார்கள். அதன்பிறகு ரஜினி ஒய்.ஜி.மகேந்திரனிடம், "நான் லதாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும். நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும்" என்று கூறினார்.

    அதைக் கேட்டதும் ஒய்.ஜி.மகேந்திரன் விழுந்து.... விழுந்து... சிரித்தார். "என்னப்பா நீ.... லதாவையா திருமணம் செய்யப் போகிறாய். அவர் உன்னைவிட ரொம்ப மூத்தவர் ஆயிற்றே" என்றார். அதற்கு ரஜினி, "நீங்கள் புரிந்து கொண்டுதான் பேசுகிறீர்களா? நான் எந்த லதாவை சொல்கிறேன் என்று உங்களுக்கு தெரியுமா?" என்றார்.

    ஒய்.ஜி.மகேந்திரனுக்கு குழப்பமாகி விட்டது. "எந்த லதா? எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்து இருக்கிறாரே. அவரைத்தானே சொல்கிறீர்கள்" என்றார். அதற்கு ரஜினி, "இல்லை. நான் சொல்வது உங்கள் மனைவியின் தங்கை லதா" என்று பளிச்சென கூறினார். இதை கேட்டதும் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது.

    குடும்பத்தில் அனைவரிடமும் பேசி விட்டு சொல்வதாக தெரிவித்தார். அன்று மாலை வீட்டுக்கு சென்றதும் ஒய்.ஜி.மகேந்திரன் தனது மனைவி சுதாவிடம் அனைத்தையும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கடலூரில் இருந்த லதாவின் பெற்றோர் ரங்காச்சாரி-அலமேலுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்னைக்கு விரைந்து வந்தனர்.

    முதலில் ரங்காச்சாரிக்கு இந்த திருமணத்தில் தயக்கமாக இருந்தது. நிறைய கேள்விகளை அவர் கேட்டார். ரஜினிகாந்த் அய்யங்காரா? அவர் என்ன படித்து இருக்கிறார்? நடிகராக இருக்கிறாரே சரியாக வருமா? என்று கேள்வி எழுப்பினார். பிறகு லதாவிடம் பேசி மனதை மாற்றலாம் என்று நினைத்தார்.

    ஆனால் லதாவுக்கும் ரஜினியை பார்த்த முதல் பார்வையிலேயே காதல் மலர்ந்து இருந்தது. ரஜினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மன உறுதி அவரிடமும் காணப்பட்டது. அவர் தனது தந்தையிடம், "நான் ரஜினியை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். அதே அளவுக்கு அவரும் என்னை நேசிக்கிறார். அவரிடம் சில கெட்டப் பழக்கங்கள் இருக்கலாம். சென்னையில் தனிமையாக இருப்பதால் அந்த சூழ்நிலை அப்படி உருவாக்கி இருக்கிறது. எல்லாம் சரியாகி விடும்" என்றார்.

    அதன் பிறகு லதாவை யாரும் சமரசம் செய்யவில்லை. இதையடுத்து ரங்காச்சாரி குடும்பத்தினர் ரஜினியை சந்தித்து பேசினார்கள். ரஜினி பற்றி ரங்காச்சாரி சில விஷயங்களை விசாரித்து அறிந்து இருந்தார். எனவே அவர் லதாவை திருமணம் செய்து கொடுக்க சம்மதித்தார்.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த ரஜினி பெங்களூருக்கு சென்று தனது அண்ணன் சத்தியநாராயண ராவிடம் லதா பற்றி கூறினார். இதைக் கேட்டதும் சத்திய நாராயண ராவுக்கும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. மராத்தி வம்சத்தில் கிடைக்காத பெண்ணா மதராசில் கிடைத்து விடப்போகிறார் என்றார்.

    ஆனால் ரஜினி தனது காதலில் உறுதியாக இருந்தார். இதனால் சத்திய நாராயணராவ் சென்னை வந்து லதாவையும், அவரது குடும்பத்தினரையும் நேரில் பார்த்தார். பிறகு அவரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். இவையெல்லாம் 1980-ம் ஆண்டு ஜூன், ஜூலையில் மிகமிக ரகசியமாக நடந்தன.

    ஆனால் ரஜினிக்கும், எத்திராஜ் கல்லூரி மாணவி லதாவுக்கும் காதல் மலர்ந்து இருப்பதை தினத்தந்தி நிருபர் கண்டுபிடித்து விட்டார். லதா பற்றிய தகவல்களை தினத்தந்தி நிருபர் சேகரித்தார். அப்போது இரு குடும்பத்தினரும் திருமணத்துக்கு சம்மதித்து இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து ரஜினிகாந்துக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என்ற செய்தி தினத்தந்தியில் ஆகஸ்டு மாதம் வெளியானது. மணமகள் கல்லூரி மாணவி லதா என்றும் மற்ற தகவல்களும் விரிவாக எழுதப்பட்டு இருந்தன. தினத்தந்தியில் இந்த செய்தி வெளியான தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    திரையுலக பிரமுகர்களும் ஆச்சரியம் அடைந்தனர். தினத்தந்தியில் வந்து இருக்கும் செய்தி உண்மையா? என்று ரஜினிக்கு போன் செய்து விசாரித்தனர். தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் கடிதம் எழுதி லதா பற்றி கேட்டனர். ஆனால் ரஜினி யாருக்கும் எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காத்தார். அவர் தன் கைவசம் இருந்த பொல்லாதவன், முரட்டுக்காளை படப்பிடிப்புகளில் தீவிரம் காட்டினார். அந்த 2 படங்களும் ரஜினிக்கு சில படிப்பினைகளை கொடுத்தன. அதுபற்றி நாளை பார்க்கலாம்.

    • கல்லூரி மலருக்கான கட்டுரை என்பதால் ஒய்.ஜி.மகேந்திரனும் ரஜினியிடம் பேசி பேட்டி கொடுக்க கேட்டுக் கொண்டார்.
    • பங்களாவின் முதல் தளத்தில் உள்ள ஒரு அறையில் ரஜினி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.

    சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும்-லதாவுக்கும் இடையே மலர்ந்த காதல் தெய்வீகமானது. இப்படி ஒரு காதல் தங்களுக்குள் உருவாகும் என்று நிச்சயமாக அவர்கள் இருவருமே நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள். ஏதோ ஒரு தெய்வீக சங்கல்பம்தான் அவர்களை இணைத்தது.

    ரஜினி தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக மாறி இருந்த அந்தக் கால கட்டத்தில் லதா சென்னை எத்திராஜ் கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தார். அவரது தந்தை ரங்காச்சாரி, தாய் அலமேலு.

    ரங்காச்சாரியின் பூர்வீகம் கடலூர். அவர் சென்னை நுங்கம்பாக்கம் லேக்வியூ அவென்யூவில் அலமேலுவுடன் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார். அவருக்கு ஒரு மகன். 2 மகள்கள் பிறந்தனர்.

    மகன் பெயர் ரவி ராகவேந்திரா, மூத்த மகள் சுதா, இளைய மகள் லதா. மகன்-மகள்கள் மூவரையும் சென்னையில் உள்ள பிரபலமான பள்ளியில் படிக்க வைத்தனர். படித்துக் கொண்டே சுதாவும், லதாவும் பாட்டு கற்றுக் கொண்டனர். பள்ளிகள் அளவில் நடக்கும் பாட்டு போட்டிகளில் அவர்கள் வெற்றி பெற்று பெருமை சேர்த்தனர்.

    சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் இசைக்குழு நடத்திய நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் இசைக்குழுவுக்கு ஒரு தடவை பாடகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் ரங்காச்சாரியின் மூத்த மகள் சுதா தேர்வானார். அவரது குரல் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு மிகவும் பிடித்துப் ேபானது.

    ஒரு கட்டத்தில் சுதாவுக்கும், ஒய்.ஜி.மகேந்திரனுக்கும் இடையே நட்பு காதலாக மாறியது. இருவர் வீட்டிலும் பெரியவர்கள் பேசி திருமணத்தை முடித்தனர். இந்த காலக் கட்டத்தில் பணி நிறைவு பெற்று ரங்காச்சாரியும், அலமேலுவும் சென்னையை காலி செய்து விட்டு கடலூர் சென்று விட்டனர்.

    மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விட்டதால் ரவி ராகவேந்திராவையும், லதாவையும் மூத்த மகள் சுதா கண்காணிப்பில் ரங்காச்சாரி விட்டு சென்று இருந்தார். சுதா வீடு அருகிலேயே ரவி ராகவேந்திராவும், லதாவும் தனியாக இருந்தனர். லதா அங்கிருந்த படியே எத்திராஜ் கல்லூரிக்கு சென்று வந்தார்.

    கல்லூரியில் பாட்டு போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டி என்று அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு புகழ் பெற்றார். அவருக்கு தோழி வட்டாரம் உருவாகி இருந்தது. அதில் உமா, சந்திரா, சுனிதா ஆகிய 3 பேர் இருந்தனர்.

    தோழிகள் 4 பேரும் கல்லூரியில் தனித்துவத்துடன் வலம் வந்தனர். எந்த போட்டியாக இருந்தாலும் இந்த 4 தோழிகளும் சேர்ந்து கலக்குவதை வழக்கத்தில் வைத்து இருந்தனர். இதனால் 4 தோழிகள் பற்றிய பேச்சு கல்லூரியில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த 4 பேரும் அடிக்கடி நிறைய விஷயங்களை மனம் விட்டு பேசுவது உண்டு. அப்போது அவர்களுக்குள் ஒருநாள் ஒரு முடிவு எடுத்துக் கொண்டனர். வாழ்க்கையில் திருமணம் செய்துக் கொள்ள கூடாது. சமூக சேவைக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து இருந்தனர்.

    இந்த நிலையில் கல்லூரி இறுதி ஆண்டு என்பதால் அவர்களுக்கு கல்லூரி மலருக்காக சிறப்பு கட்டுரைகள் தயாரிக்கும் பணி ஒதுக்கி கொடுக்கப்பட்டது. அதன்படி லதாவுக்கும், அவரது தோழிகளுக்கும் சினிமா நட்சத்திரம் யாரையாவது பேட்டி கண்டு கட்டுரை எழுதி தரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

    எந்த நடிகரிடம் பேட்டி எடுக்கலாம் என்று 4 தோழிகளும் தங்களுக்குள் விவாதித்த போது ரஜினியிடம் பேட்டி எடுத்தால் நன்றாக இருக்கும் என்று ஒருமித்த கருத்து உருவானது. லதாவின் அக்கா சுதாவின் கணவர் ஒய்.ஜி.மகேந்திரன் நடிகர் என்பதாலும், அவர் ரஜினியுடன் சேர்ந்து படங்களில் நடித்து இருப்பதாலும் அவர் மூலம் ரஜினியை தொடர்பு கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

    கல்லூரி மலருக்கான கட்டுரை என்பதால் ஒய்.ஜி.மகேந்திரனும் ரஜினியிடம் பேசி பேட்டி கொடுக்க கேட்டுக் கொண்டார். இதையடுத்து 1980-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒருநாளில் 4 மாணவிகளையும் வரச்சொல்லுமாறு ரஜினி கூறி இருந்தார். முதல் நாள் லதாவும் அவரது தோழிகளும் படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற போது ரஜினியை சந்தித்து பேட்டி காண இயலவில்லை.

    இதையடுத்து சென்னை செனடாப் சாலையில் உள்ள பிரபல நடிகை சவுகார்ஜானகியின் வீட்டில் நடக்கும் படப்பிடிப்பு சமயத்தில் சந்திக்கலாம் என்று ரஜினி உறுதியளித்து இருந்தார். அந்த சமயத்தில் சவுகார்ஜானகி வீட்டில் பாலச்சந்தர் இயக்கத்தில் தில்லுமுல்லு படம் தயாரிக்கப்பட்டு வந்தது. அந்த படத்துக்கான படப்பிடிப்பு மும்முரமாக அன்று நடந்துக் கொண்டிருந்தது.

    பங்களாவின் முதல் தளத்தில் உள்ள ஒரு அறையில் ரஜினி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்த அந்த படத்தின் குறிப்பிட்ட காட்சியில் ஒரே டேக்கில் ரஜினி நடித்து முடித்தார். அடுத்த காட்சிக்கான படப்பிடிப்புக்கு கருவிகள் வேறு இடத்துக்கு மாற்றும் பணிகள் நடந்த சமயத்தில் ரஜினி ஓய்வெடுக்க தனது அறைக்கு புறப்பட்டார்.

    அப்போது அவரது உதவியாளர் வந்து, "எத்திராஜ் கல்லூரி மாணவிகள் உங்களை பேட்டிக்காண வந்து இருக்கிறார்கள். கீழ் தளத்தில் அவர்களை உட்கார வைத்து இருக்கிறேன்" என்றார். அதை கேட்டதும் ரஜினி, சரி 10 நிமிடத்தில் வந்து விடுகிறேன் என்று கூறி சென்றார். அடுத்த சில நிமிடங்களில் ஓய்வு அறையில் இருந்து வெளிேய வந்த அவர் கீழ் தளத்தில் மாணவிகள் இருக்கும் இடத்துக்கு வந்தார்.

    அவர் வருவதை லதாவும், அவரது தோழிகளும் பார்த்தனர். ரஜினியை கண்டதும் 4 பேரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். ரஜினியும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு 4 பேரையும் ஒவ்வொருவராக பார்த்தார். லதாவை பார்த்ததும் அவரது கண்கள் அப்படியே நிலைக்கொண்டது போல ஆகி விட்டது.

    லதாவின் அழகிய கண்கள், மனதை கொள்ளைக் கொள்ளும் அழகு, மென்மையான பேச்சு, இனிமையான பார்வை, புன்னகை முகம் ஆகியவற்றை கண்டு ரஜினி தன்னையே மெய்மறந்துப் போனார். ஸ்டைலாக தலையை முன்பக்கம் சாய்த்து அதே வேகத்தில் பின் பக்கமாக ஒரு வெட்டுவெட்டி தலைமுடியை தள்ளி விட்டபடி சிரித்துக் கொண்டே "சொல்லுங்க" என்றார்.

    மாணவிகள் 4 பேரும் தங்களை அறிமுகம் செய்தனர். ஒரு மாணவி லதாவை சுட்டிக் காட்டி, "இவள் பெயர் லதா" என்று கூறினார். அதை கேட்டதும் ரஜினிக்கு மனதுக்குள் இன்ப அலை வீசியது. அவரது பார்வை லதா மீது மட்டுமேதான் இருந்தது. இது லதாவுக்கு முதலில் என்னவோ போல் இருந்தது. அவருக்குப் பேச்சு வரவில்லை.

    எப்போதும் அதிரடியாக கலகலப்பாகப் பேசும் லதா வாய்மூடி மவுனமாக இருந்தார். அவரது முகம் வெட்கத்தில் மூழ்கி இருந்தது. அவருக்கே இது ஆச்சரியமாக இருந்தது.

    அப்போது ரஜினி கேள்விகளை கேளுங்கள் என்றார். லதாவின் தோழிகள் கேள்விகளை கேட்கத் தொடங்கினார்கள். ரஜினியும் அதற்கான பதிலை சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் அவரது கண்கள் மட்டும் லதாவையே சுற்றி... சுற்றி... வந்தன.

    சில கேள்விகளுக்கு பிறகு லதா ஒரு கேள்வியை எடுத்து வீசினார். "உங்களுக்கு மனைவியாக வரப்போகும் பெண்ணிடம் எத்தகைய குணங்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்" என்று லதா கேள்வி எழுப்பினார்.

    லதாவின் குரலை கேட்டதும் ரஜினிக்கு உடம்பே ஜில்லென்று குளிர்ந்தது போல் ஆகி விட்டது. என்னவோ தெரியவில்லை. அந்த குரலை கேட்டதுமே ரஜினி சொக்கிப் போனார். அவர் மனது அவரிடம் இல்லை. லதா மீது இருந்தது. இந்த பெண் நமக்கு மனைவியாக வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ரஜினியின் உள்மனம் மின்னல் வேகத்தில் சொல்லிக் கொண்டே இருந்தது.

    அந்த சமயத்தில்தான் லதா இப்படி ஒரு கேள்வியை கேட்டு இருந்தார். நாம் மனதுக்குள் நினைத்தது போலவே இந்த பெண் கேள்வி கேட்கிறாரே? என்று ரஜினிக்குள் இன்ப அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்பட்டது. ஆனால் அவர் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் ஸ்டைலாக கால் மேல் கால் போட்டுக் கொண்டு பதில் சொல்ல ஆரம்பித்தார்.

    அவர் சிரித்துக் கொண்டே, "எனக்கு மனைவியாக வருபவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஏற்கனவே நான் மனதுக்குள் முடிவு செய்து விட்டேன். என்னிடம் அன்பாக இருக்க வேண்டும். என்னை அக்கறையோடு கவனித்துக் கொள்ள வேண்டும். குடும்பப்பாங்கான பெண்ணாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.

    ரஜினியின் இந்த பதில் லதாவுக்கு திருப்தியாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். அவர் தலையை அசைத்துக் கொண்டே புன்னகைப் பூத்தார். அதை கண்டதும் ரஜினிக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் லதாவை தொடர்ந்து ஊடுருவி ஆழமாக பார்த்தார்.

    அவர் கண்களை அகற்றவே இல்லை. அப்படி ஒரு ஆழமான பார்வையை அவர் லதா மீது பாய்த்துக் கொண்டிருந்தார். ஒரு பெண்ணை நாம் இப்படி வைத்தக் கண் வாங்காமல் பார்க்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி ரஜினியிடம் கொஞ்சமும் இல்லை. ஏனெனில் அவர் அந்த நிமிடத்தில் இருந்தே லதாவை மனதார காதலிக்க தொடங்கி இருந்தார்.

    அவரது கூர்மையான பார்வை லதாவை நிலைகுலைய செய்தது. என்ன இவர் இப்படி நம்மை குறு...குறு...வென பார்த்துக் கொண்டே இருக்கிறாரே என்று படபடப்பு ஏற்பட்டது. லதாவின் தோழிகளும் இதை கவனிக்க தவறவில்லை. அவர்கள் ரஜினியிடம் வேறு சில கேள்விகளை கேட்கத் தொடங்கினார்கள். அந்த சூழலை பயன்படுத்தி தனது காதலை தெரிவிக்க ரஜினி முடிவு செய்தார். ராகவேந்தரின் வழிகாட்டுதலோ, என்னவோ லதா கேட்ட ஒரு கேள்வி ரஜினி எதிர்பார்த்தது போல அமைந்து இருந்தது. அதற்கு ரஜினி அளித்த பதிலை நாளை பார்க்கலாம்.

    • அதன் பின்னரே ரஜினிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
    • திரைப்பட விமர்சகராகவும் இருந்துள்ளார்.

    இயக்குனர் கே. பாலச்சந்தர் ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்தியதை அனைவரும் அறிவர். ஆனால் ரஜினியை ஒரு நடிகராக மெருகேற்றியவர் கோபாலி.

    தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக நடத்தப்பட்ட, திரைப்படப் பயிற்சி கல்லூரியில் ரஜினி படித்த சமயம், அங்கு நடிப்பு பயிற்சி கற்றுக்கொடுக்கின்ற ஆசிரியராக கோபாலி பணியாற்றினார்.

    கே.பாலச்சந்தர் திரைப்பட பயிற்சிக் கல்லூரிக்கு வந்த போது தனது மாணவர் ரஜினியை கோபாலி அவருக்கு அறிமுகப்படுத்தினார். அதன் பின்னரே ரஜினிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

    கோபாலி, இந்தியன் எக்ஸ்பிரஸ், தூர்தர்ஷன் ஆகியவற்றிலும் பணியாற்றி உள்ளார். மேலும் திரைப்பட விமர்சகராகவும் இருந்துள்ளார்.

    இந்நிலையில் வயது மூப்பு காரணமாக கோபாலி சென்னையில் இன்று காலை காலமானார். ரஜினிகாந்த் நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து இறுதிமதியாதை செலுத்தினார். 

    • ரஜினி அரசு வேலையில் இருக்கிறார் என்று சொல்லப்பட்டதும் நிறைய மணப்பெண்ணின் ஜாதகங்கள் வந்தன.
    • ரஜினி சில படங்களில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினி பெங்களூரில் சிவாஜி ராவ் என்ற பெயரில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தபோது நடந்த சம்பவம் இது....

    ரஜினிக்கு அந்த கண்டக்டர் வேலையை அவரது 2-வது அண்ணன் நாகேஸ்வரராவ் தனது உறவினர் மூலம் பெற்றுக் கொடுத்து இருந்தார். ரஜினிக்கு அரசு வேலை கிடைத்ததும் மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

    கண்டக்டர் பணியில் அவருக்கு மாதம் 300 ரூபாய் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது. தினமும் 1 ரூபாய் பேட்டா வழங்கப்படும் என்றும் பெங்களூர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சொன்ன போது ரஜினி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    தனது எதிர்கால வாழ்க்கைக்கு இந்த சம்பளம் போதும் என்று ரஜினி நினைத்தார். அதனால்தான் அவரால் கண்டக்டர் பணியை மிக மிக ஜாலியான மனநிலையில் செய்ய முடிந்தது. 10ஏ பஸ்சில் அவரது கண்டக்டர் பணி புது, புது ஸ்டைல்களுடன் புகழ் பெற்றதாக மாறியது.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த ரஜினியின் தந்தை ரனோஜிராவ் தனது மகனுக்கு உரிய வயதில் திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்று நினைத்தார். இதுபற்றி அவர் ரஜினியிடம் சொன்ன போது ரஜினிக்கு சற்று தயக்கம் ஏற்பட்டது. இப்போது என்ன அவசரம் என்று கேட்டார்.

    முதலில் அதை யதார்த்தமாக எடுத்துக் கொண்ட ரனோஜிராவ் அடுத்த சில வாரங்களில் ரஜினிக்கு உடனே பெண் பார்த்து திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ரஜினி தயங்கியபோது, "டேய் இப்போதுதான் அரசாங்க வேலைக்கு போக ஆரம்பித்து விட்டாயே? மாதம் தோறும் உனக்கு பணம் வருகிறது. எனவே தைரியமாக திருமணம் செய்து கொள்" என்றார்.

    அதன் பிறகுதான் ரஜினிக்கு சரி திருமணம் செய்து கொள்ளலாம் என்ற மனநிலை லேசாக உருவானது. மணப்பெண் தேடட்டுமா? என்று ரனோஜிராவ் கேட்டபோது ரஜினியால் உறுதியான பதிலை சொல்ல முடியவில்லை. இப்போது என்ன அவசரம் என்று மீண்டும் கேட்டார்.

    அதற்கு ரனோஜிராவ் திருமணத்தை எந்த காலத்திலும் தள்ளிப்போடக் கூடாது. அதை உரிய பருவத்தில் செய்து விட வேண்டும். நான் உனக்கு மணப்பெண் தேட ஆரம்பித்து விட்டேன் என்றார்.

    தந்தையிடம் காணப்பட்ட உறுதியை பார்த்த ரஜினி அதன் பிறகு திருமணத்துக்கு மறுப்பு சொல்லவில்லை. இதையடுத்து ரனோஜிராவ், மூத்த அண்ணன் சத்தியநாராயணராவ், இளைய அண்ணன் நாகேஸ்வரராவ் உள்பட குடும்பத்தில் உள்ள அனைவரும் ரஜினிக்கு மணப்பெண் தேட ஆரம்பித்து விட்டனர்.

    நிறைய உறவினர்கள், ஜோதிடர்கள் மற்றும் நண்பர்கள் வட்டாரங்களில் ரனோஜிராவ் தாமாக முன் சென்று ரஜினியின் ஜாதகத்தை கொடுத்து மணமகள் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினார். ரஜினி அரசு வேலையில் இருக்கிறார் என்று சொல்லப்பட்டதும் நிறைய மணப்பெண்ணின் ஜாதகங்கள் வந்தன.

    அதில் பெரும்பாலானவற்றை ரனோஜிராவ் கழித்து விட்டார். பல ஜாதகங்கள் இருவருக்கும் பொருத்தம் இல்லை என்று கழிக்கப்பட்டது. நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு பெங்களூர் அருகே ஒரு சிறிய கிராமத்தில் உள்ள பெண்ணின் ஜாதகம் ரஜினி ஜாதகத்துடன் பொருத்தமாக இருந்தது.

    ரனோஜிராவ் அந்த குடும்பம் பற்றி தீவிரமாக விசாரித்தார். அந்த குடும்பத்தினர் தங்களை போலவே கெயிக்வாட் பரம்பரையில் மிக சிறப்பாக வாழ்ந்து இருந்தது தெரிய வந்தது. இதனால் அந்த குடும்பத்துடன் சம்பந்தம் வைத்துக் கொள்ளலாம் என்று ரஜினியின் தந்தை ரனோஜிராவுக்கு விருப்பமாக இருந்தது.

    ஆனால் பெங்களூருக்கு அருகே கிராமத்தில் உள்ள பெண்ணை நேரில் திருமணம் செய்வதா? என்று ரஜினிக்கு தீவிர யோசனையாக இருந்தது. அந்த பெண்ணை அவரால் ஏற்கவும் இயலவில்லை. அதே சமயத்தில் புறக்கணிக்கவும் இயலவில்லை. எந்த முடிவும் எடுக்க முடியாமல் மனதுக்குள் தவித்தப்படி மவுனமாக இருந்தார்.

    ஆனால் ரனோஜிராவும், சத்திய நாராயணராவும் விடவில்லை. ரஜினியை வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை பார்க்க அழைத்து சென்றனர். பெண் உனக்கு பிடித்து இருந்தால் திருமணம் ஏற்பாடு செய்யலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம் என்று கூறினார்கள்.

    இதனால் அவர்களுடன் ரஜினி பெண் பார்க்க சென்றார். வழக்கம் போல பெண் பார்க்கும் படலம் நடந்தது. அந்த பெண்ணைப் பார்த்ததும் ரஜினி மனம் பல்டி அடித்து விட்டது. அவர் மனதில் மாற்றம் ஏற்பட்டது. அவருக்கு அந்தப் பெண்ணை உண்மையிலேயே மிகவும் பிடித்து போய் விட்டது.

    அந்த பெண் ரொம்ப குண்டாகவும் இல்லை ஒல்லியாகவும் இல்லை. இளம் வயதுக்குரிய சரியான உடல் அமைப்புடன் இருந்தார். தங்க நிறமாக காணப்பட்டார். முகத்தில் லட்சுமி கடாட்சம் தாண்டவம் ஆடியது. மராத்தியை பூர்வீகமாக கொண்ட கெயிக்வாட் இன பெண்கள் எப்படி இருப்பார்களோ அதே முக களையுடன் காணப்பட்டார்.

    அந்த பெண்ணை பார்த்ததும் ரஜினி அப்படியே சரண்டர் ஆகி விட்டார். பெண்ணின் பெயர் என்ன என்று கேட்கச் சொன்னார். அந்த பெயரை கேட்டதும் ரஜினிக்கு "ஆயிரம் தாமரை மொட்டுக்களே... வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே, இங்கிரண்டு ஜாதி மல்லிகை..." என்ற உணர்வுடன் மனம் குதூகல மானது. அதற்குப் பிறகு அவருக்கு வார்த்தைகள் வரவில்லை. பஸ் புறப்பட டபுள் விசில் கொடுப்பது போல எனக்கு பெண் பிடித்து விட்டது என்று இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் தனது சம்மதத்தைத் தெரிவித்தார்.

    இந்த பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என்று ரஜினியால் நேரடியாக தந்தையிடம் சொல்ல இயலவில்லை. வெட்கம் அவரைத் தடுத்தது. எனவே மணப்பெண் வீட்டு முன் அறையில் சகஜமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்த தனது 2 அண்ணன்களிடமும் ரஜினி ஜாடைமாடையாக தனது விருப்பத்தை சொன்னார். அவரது மூத்த அண்ணன் சத்திய நாராயணராவிடம் இந்த பெண்ணையே பேசி முடித்து விடலாம் என்றார்.

    அதற்கு சத்தியநாராயண ராவ் சிரித்துக் கொண்டே "சரி அப்பாவிடம் சொல்கிறேன்" என்றார். ரனோஜிராவுக்கு மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருந்தது. அந்த குடும்பத்திேலயே பெண்ணை பேசி முடித்து விடவேண்டியதுதான் என்று தீர்மானித்தார்.

    என்றாலும் நாகரீகம் கருதி உடனடியாக தனது முடிவை சொல்லாமல் பெங்களூருக்கு சென்றதும் எங்களது முடிவை சொல்லி அனுப்புகிறோம் என்று கூறி விட்டு புறப்பட்டார். ரஜினி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார்.

    அடுத்த நாளே பெண் பார்க்க சென்ற விஷயத்தை போக்குவரத்து கழக நண்பர்களிடம் சொல்லி மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார். அன்றைய தினம் முழுக்க அவர் மனதில் அந்த பெண்தான் ஆக்கிரமித்து இருந்தார். மறுநாளும் அந்த பெண் பற்றிய கனவிலேயே அன்றைய நாள் கழிந்தது.

    3-வது நாள் தங்கள் குடும்பத்து சம்மதத்தை தெரிவிக்க ஏற்பாடு செய்வார்கள் என்று ரஜினி ஆவலோடு இருந்தார். அந்த சமயத்தில் அந்த பெண்ணின் வீட்டில் இருந்து ஒரு மூத்த உறவினர் ஒருவர் வந்தார். அவர் ரனோஜிராவிடம் ரொம்ப தயங்கி... தயங்கி... பேச்சை ஆரம்பித்தார்.

    "பையனை (ரஜினியை) எங்களுக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. பெரியவர்கள் எல்லோருக்கும் சம்மதம்தான். ஆனால் பெண் கொஞ்சம் தயங்குகிறாள். அவளுக்கு உங்களையும் உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் மிகவும் பிடித்து இருக்கிறது. நீங்கள் நடந்து கொண்ட விதம் அவளுக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது.

    ஆனால் பையனைதான் அவள் வேண்டாம் என்கிறாள். பையன் கறுப்பாக இருப்பதாக சொல்கிறாள், குண்டாக இருப்பதாகவும் நினைக்கிறாள். எனவே வேறு பையனை பாருங்கள் என்று சொல்லி விட்டாள். எங்களால் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள்" என்றார்.

    அந்த பெரியவர் சொன்னதை பக்கத்து அறையில் இருந்து ரஜினி கேட்டுக் கொண்டிருந்தார். அவரது மனது சுக்குநூறாக உடைந்தது. அந்த சமயத்திலேயே அவர் மனதுக்குள் ஒருவித வைராக்கியம் எழுந்தது.

    திருமணம் செய்தால் நல்ல கலரான, சிவப்பான பெண்ணைதான் திருமணம் செய்ய வேண்டும் என்று மனதுக்குள் சபதமே எடுத்துக் கொண்டார். அது அவருக்குள் ஒரு உறுதியான மனநிலையை உருவாக்கி இருந்தது. சில நாட்களிலேயே அவர் மனதை தேற்றிக்கொண்டார்.

    பிறகு கண்டக்டர் பணியில் கவனம் செலுத்த தொடங்கினார். ஆனால் இறை அருளால் அவரது வாழ்க்கை பயணம் கண்டக்டர் பணியில் இருந்து கலையுலக பயணத்துக்கு மாறியது. அவர் நினைத்தது போலவே திருமண வாழ்க்கையும் அமைந்தது. அவர் ஆசைப்பட்டது போலவே நல்ல நிறம் கொண்ட லதா அவருக்கு மனைவியாக வாய்த்தார்.

    ஆனால் லதா அவருக்கு மனைவியாக அமைந்தது எல்லாமே தெய்வ செயலால் நடந்தது போலவே இருந்தது. 1980-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு ரஜினி சில படங்களில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு படம் தில்லுமுல்லு.

    அந்த படத்துக்கான படப்பிடிப்பு சென்னையில் பிரபல நடிகை சவுகார் ஜானகி வீட்டில் நடந்தது. அங்குதான் ரஜினியும், லதாவும் சந்தித்தனர். ராமனும், சீதையும் முதன் முதலில் ஒருவரை ஒருவர் கண்டபோது ஏற்பட்ட காதல் பார்வையை, "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்" என்று கம்பர் மிகச் சிறப்பாக எழுதி இருப்பார். அதே போன்றுதான் ரஜினியும் லதாவும் இருந்தனர். இருவரும் நோக்கினார்கள். உடனே காதல் மலர்ந்தது. அந்த ருசிகரத்தை நாளை பார்க்கலாம்.

    • சங்ககாரா வழிநடத்தலில் ராஜஸ்தான் அணி கடந்த 4 சீசன்களில் 2 முறை பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.
    • குமார் சங்ககாராவை தலைமை பயிற்சியாளராக ராஜஸ்தான் ராயல்ஸ் மீண்டும் நியமித்துள்ளது.

    இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககரா மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    2021 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் தனது பயணத்தை தொடங்கிய சங்ககரா வழிநடத்தலில் சஞ்சு சாம்சன் தலைமையிலான அணி கடந்த நான்கு சீசன்களில் இரண்டு முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

    இருப்பினும் 2024 உலகக்கோப்பை வெற்றிக்கு இந்திய அணியை வழிநடத்திய பயிற்சயாளர் ராகுல் டிராவிட் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளரானார்.

    ஆனால் சஞ்சு சாம்சனுடன் ஏற்பட்ட பகைமை வதந்திகளை தொடர்ந்து அண்மையில் ராகுல் டிராவிட் தனது பயிற்சியாளர் பதவியை துறந்தார்.

    இதனால் 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்த மீண்டும் குமார் சங்ககாராவையே தலைமை பயிற்சியாளராக ராஜஸ்தான் ராயல்ஸ் நியமித்துள்ளது.

    தலைமை பயிற்சியாளராக சங்ககாரா நியமிக்கப்பட்டதற்கு சிறப்பு AI வீடியோவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட்டுள்ளது.

    ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் காரில் இருந்து இறங்கி மாஸாக நடந்து காட்சியை AI மூலமாக சங்ககாரா நடந்து வருவது போல எடிட் செய்துள்ளனர். ஹுகும் பாடலின் இந்தி வெர்சனை இந்த எடிட் வீடியோவிற்கு பயன்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

    • தமிழகத்தில் உள்ள பெரிய பட நிறுவனங்கள் மட்டுமே ரஜினி அருகில் செல்ல முடிந்தது.
    • ரஜினியின் இந்த முடிவு தமிழ் திரை உலகையே மிரள வைத்தது.

    எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், முடிவு எடுக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு 3 அம்சங்கள் முக்கியமாக இருக்க வேண்டும். ஒன்று தெளிந்த மனம். மற்றொன்று நிதானம். மூன்றாவது ஆழ்ந்த நம்பிக்கை.

    இந்த மூன்று குணமும் ஒருமித்த நிலைக்கு வரும்போது அதிரடி முடிவுகளை கூட அனாசயமாக அரை நொடியில் எடுத்து விட முடியும். நமது வேத நூல்களும், புராணங்களும் இதுபற்றி ஏராளம் கூறி உள்ளன.

    மகாபாரதத்தை யார் ஒருவர் ஆழ்ந்து படித்து, சிந்தித்துப் பார்த்து இருக்கிறாரோ, அவருக்கு அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரம் பற்றியும், அந்த கதாபாத்திரங்கள் எடுக்கும் முடிவுகள் பற்றியும் நிச்சயமாக தெரிந்து இருக்கும். ஒரு வரியில் சொல்வது என்றால் பற்றும், பாசமும் முடிவு எடுக்கும் திறனுக்கு எதிரானது என்பது மகாபாரதத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் காட்டப்பட்டுக் கொண்டே இருக்கும்.

    அதோடு எந்த இடத்தில் எப்படி முடிவு எடுக்க வேண்டும்? எந்த இடத்தில் எப்படி முடிவு எடுக்கக் கூடாது என்பதையும் மகா பாரதம் நமக்கு காட்டுகிறது. துரியோதனன் செய்த தவறுகளை தடுக்க அவனது தந்தை திரிதராஷ்டிரன் முடிவு எடுக்காமல் பாசத்தில் கிடந்தான். அதுவே அவனது வம்சம் அழிய அடிப்படையாக இருந்தது.

    குந்திக்கு குழந்தை பிறந்ததை கேட்டதும் காந்தாரி ஆத்திரத்தில் முடிவுகள் எடுத்தாள். இதனால் அவளுக்கு பிறந்த கவுரவர்களான 100 குழந்தைகளும் வெறுப்புணர்வு கொண்டவர்களாக வளர்ந்தனர்.

    பீஷ்மர் பதட்டத்தில் முடிவுகள் எடுத்து அவஸ்தைப்பட்டார். சகுனி எடுத்த முடிவுகள் துரியோதனனை வீழ்ச்சிக்கு கொண்டு சென்றது.

    நல்ல முடிவு என்பது மற்றவர்கள் தலையீடு இல்லாமல், குழப்பமான மனநிலையில் இல்லாமல் இருக்கும் போது தான் கிடைக்கும். எனவே எந்த ஒரு விஷயத்திலும் நாம் உணர்வுப்பூர்வமாக முடிவு எடுக்கறோமா, அறிவுப்பூர்வமாக முடிவு எடுக்கிறோமா என்பதுதான் முக்கியமானது.

    சூப்பர் ஸ்டார் ரஜினி இதெல்லாம் தெரியாதவரா? சிறு வயதிலேயே அவர் தாயாரிடம் அதிகம் கேட்டது மகாபாரத கதைகள்தான். ராமகிருஷ்ணா மடம் பள்ளியில் படித்த போதும் அவருக்குள் மகாபாரத நிகழ்வுகள் ஆழமாக பதியவைக்கப்பட்டன.

    அதன் பலனாகத்தான் 1979-ம் ஆண்டு கமலுடன் சேர்ந்து நடிக்காமல் இனி தனியாக நடிக்க வேண்டும் என்ற முடிவை அவரால் முழு மனதுடன் எடுக்க முடிந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டு மற்றவர்களை திடீரென தாக்கிய பிறகு அடுத்த சில நிமிடங்களில் அமைதி பெற்று இயல்பு நிலைக்கு திரும்பியதும் சில நல்ல முடிவுகளை அவரால் தன்னிச்சையாக எடுக்க முடிந்தது.

    1980-ம் ஆண்டு மனநல பாதிப்பு சுவடே இல்லாமல் புது மனிதனாக அவர் இயங்கத் தொடங்கிய போது அதிரடியாக மற்றொரு முடிவை எடுத்தார். அது.... தன்னை நாடி வந்த நூற்றுக்கணக்கான படத் தயாரிப்பாளர்களை சிறப்பாக கையாண்ட விதம்தான். பெரும்பாலான படத் தயாரிப்பாளர்கள், ரஜினி எவ்வளவு பணம் கேட்டாலும் கொட்டி கொடுக்கத் தயாராக இருந்தனர்.

    "நீங்கள் நடிப்பதாக தேதி கொடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டால் மட்டும் போதும், மற்ற விஷயங்கள் அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்றனர். அத்தகைய படத் தயாரிப்பாளர்களை ரஜினி கண்ணை மூடிக் கொண்டு நிராகரித்தார்.

    தன்னையும், தனது பெயரையும் மூலதனமாக வைத்துக் கொண்டு லட்சம், லட்சமாக பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் தன்னைச் சுற்றி வருகிறார்கள் என்பதை ரஜினி புரிந்து கொண்டார். அதோடு புதிய தயாரிப்பாளர்கள் எவ்வளவு வசதியுடையவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு படத்தை குறித்த காலத்தில் வெளியிட செய்யும் திறன் இருக்குமா? என்ற சந்தேகமும் ரஜினிக்குள் எழுந்தது.

    இதையடுத்து அவர் புதிய பட அதிபர்களை ஒட்டு மொத்தமாக நிராகரித்து அதிரடி முடிவு எடுத்தார். ரஜினி எடுத்த இந்த முடிவை அறிந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன், நாகேஷ், சிவக்குமார் உள்பட திரையுலக பிரமுகர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அதோடு தமிழ் திரை உலகிலும் பரபரப்பு ஏற்பட்டது.

    அடுத்து ரஜினி இன்னொரு முடிவு எடுத்தார். இனி கைவசம் 10 படங்கள், 12 படங்கள் என்று வைத்திருக்கக் கூடாது. நிம்மதி இல்லாமல் போய் விடும். எனவே மூன்று அல்லது நான்கு படங்களை மட்டுமே கைவசம் வைத்துக் கொண்டு நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

    இதைத் தொடர்ந்து ரஜினி எடுத்த அடுத்த முடிவு மிகப்பெரிய ஹைலைட்டாக அமைந்தது. அதாவது தனக்கான சம்பளத்தை தானே நிர்ணயிக்க வேண்டும் என்ற முடிவாகும். படங்களில் நடிக்க தனக்குரிய சம்பளத்தை வேறு ஒருவர் முடிவு செய்யக்கூடாது என்பதில் அவர் உறுதியான மன நிலைக்கு வந்தார்.

    ரஜினி எடுத்த இந்த புதிய முடிவுகளால் அவரைத் தேடி வரும் படத் தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை சல்லடை போட்டு சலித்து எடுத்து விட்டது போல குறைந்தது. தன்னை கதாநாயகனாக முன் நிறுத்தி, படம் எடுத்து, அந்த படத்தை வெற்றி பெற செய்கிற தகுதியும், திறமையும் யாருக்கு உள்ளதோ அவர்களுக்கு மட்டுமே கால்ஷீட் கொடுப்பது என்று முடிவு செய்தார்.

    1980-ல் அவரது செயல்பாடுகள் அனைத்தும் அத்தகைய படத் தயாரிப்பாளர்கள் யார்-யார் இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்வதிலேயே இருந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரிய பட நிறுவனங்கள் மட்டுமே ரஜினி அருகில் செல்ல முடிந்தது.

    ரஜினியும் அதைத்தான் எதிர் பார்த்து காத்திருந்தார். தனக்கு எந்த விதத்திலும் தொந்தரவு கொடுக்காத கோடீஸ்வர முதலாளிகளுக்கே இனி தன் கால்ஷீட் தரப்படும் என்று துணிச்சலாக வெளிப்படையாக அறிவித்தார்.

    ரஜினியின் இந்த முடிவு தமிழ் திரை உலகையே மிரள வைத்தது. இந்த முடிவால் ரஜினியிடம் இருந்து வந்த மன அழுத்தம் கணிசமான அளவுக்குக் குறைந்தது. பில்லாவின் இமாலய வெற்றிக்குப் பிறகு வந்த தேவர் பிலிம்சின் அன்புக்கு நான் அடிமை படம் சுமாராக ஓடியது.

    அதன் பிறகு மகேந்திரன் இயக்கத்தில் "ஜானி" என்ற படத்தில் ரஜினி நடித்தார். இந்த படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடம். கதாநாயகியாக ஸ்ரீதேவி நடித்தார். ரஜினியும், ஸ்ரீதேவியும் போட்டி போட்டு நடித்தனர். இந்த படம் தயாரிப்பில் இருந்த போது, ரஜினியும் ஸ்ரீதேவியும் காதலிப்பதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்றெல்லாம் கிசுகிசுக்கள் பரவியது.

    இதுகுறித்து டைரக்டர் மகேந்திரன் தினத்தந்திக்கு அளித்த பேட்டியில் அழகாக குறிப்பிட்டிருந்தார். அந்த பேட்டி வருமாறு:-

    ரஜினி புகழின் உச்சத்துக்கு வந்து கொண்டிருந்தபோது ஒரு நடிகையை விரும்பினார். அதுபற்றி என்னிடம் கருத்து கேட்டார். நானும் அந்த நடிகை உங்கள் மனைவியாக வந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். ஆனால் அந்த நடிகை வீட்டின் கிரகபிரவேசத்துக்கு சென்று இருந்த நேரத்தில் திருமண பேச்சை தொடங்கலாம் என்று நினைத்தபோது மின்சாரம் போய் விட்டது. இதனால் அவர் அந்த நடிகையை திருமணம் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்வுக்கு பிறகு தனது தத்து தாய் ரெஜினாவிடமும் ரஜினி கருத்து கேட்டார். ஆனால் அவரோ "உன் விருப்பப்படி செய்" என்று சொன்னார். இதனால் திரையுலகில் தன்னை விரும்பிய நடிகையை ரஜினி திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்து மாறினார். இந்தக்கால கட்டத்தில் அவர் நடித்து வெளியான "எல்லாம் உன் கைராசி" படம் வெற்றி பெறவில்லை.

    ஆனால் அதற்கு பிறகு வந்த "பொல்லாதவன்" 100 நாட்கள் ஓடியது. அதன் பிறகு ஏ.வி.எம். தயாரிப்பில் வெளிவந்த "முரட்டுக் காளை" 150 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. அந்த படத்தில் ரஜினி கதாநாயகனாகவும், ஜெய்சங்கர் வில்லனாகவும் நடித்து இருந்தனர். முரட்டுக்காளை படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாள் ஜெய்சங்கர் காலில் விழுந்து ரஜினி ஆசி பெற்றது பரபரப்பாக பேசப்பட்டது.

    ரஜினிக்கு ஜோடிக்கு ரதி நடித்தார். இந்த படத்தில்தான் ரஜினியுடன் ஒய்.ஜி.மகேந்திரனும் சேர்ந்து நடித்து இருந்தார். இந்த படத்தின் வெற்றி ஏ.வி.எம். நிறுவனத்துக்கு மிகப்பெரிய பலனை கொடுத்தது. இதனால் பட அதிபர் ஏ.வி.எம். சரவணன் ரஜினியை புகழ்ந்து பேசினார்.

    அவர் கூறுகையில், "ரஜினி எதையும் வெளிப்படையாக பேசுபவர். கஷ்டப்பட்ட காலத்தில் சிறு பொய் கூட அவர் சொன்னது கிடையாது. வசதி வந்த பிறகும் அவர் பொய் பேசாமல் வாழ்ந்தார். அடுத்தவர் மனம் நோகும்படி நடக்கக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார்.

    முரட்டுக்காளை படத்தில் ஜெய்சங்கர் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்ட போது ரஜினி அவரிடம் மிக மிக பணிவாக நடந்து கொண்டார். 150 படங்களில் கதாநாயனாக நடித்த ஜெய்சங்கருக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். படத்தின் விளம்பரங்களில் அவருக்குரிய முக்கியத்துவத்தை கொஞ்சமும் குறைத்து விடாதீர்கள் என்று பல தடவை கூறினார். இது ஒன்றே ரஜினியின் சிறந்த குணத்துக்கு உதாரணம்" என்றார்.

    முரட்டுகாளை படம் வெற்றி ரஜினிக்கு புதிய அந்தஸ்தை கொடுத்து இருந்தது. அப்போது அவருக்கு வயது 30. அவருக்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. கஷ்டப்பட்ட காலத்தில் தன்னை ஒரு பெண், "இவர் கறுப்பாக இருக்கிறார். இந்த மாப்பிள்ளை வேண்டாம்" என்று சொன்னது அவர் மனதுக்குள் மீண்டும் மீண்டும் வந்து போனது.

    எனவே நல்ல சிவப்பான பெண்ணைதான் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். ரஜினியை நிராகரித்த பெண் பற்றிய ருசிகர தகவல்களை நாளை பார்க்கலாம்.

    • பில்லா படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடல் அவரது யதார்த்தமான நிலையையும் ரசிகர்களுக்கு காட்டியது.
    • சில கன்னட புத்தகங்களை இன்றும் கூட அவர் மனம் திறந்து பேசுவது உண்டு.

    சூப்பர் ஸ்டார் ரஜினி மீது கவிஞர் கண்ணதாசனுக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் இருந்தது. ரஜினியின் வாழ்க்கையையும், குணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் அவர் பாடல்கள் எழுதினார். இதனால் அவர் மீது ரஜினியும் மிகுந்த பாசம் வைத்து இருந்தார்.

    1975-ம் ஆண்டு ரஜினி நடித்த முதல் படமான "அபூர்வ ராகங்கள்" படத்தில் கண்ணதாசன் எழுதிய "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துக்குள் எத்தனை கேள்வி காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்-வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்" என்ற பாடலில் அந்த படத்தின் மொத்த கதையையும் சொல்லி இருந்தார்.

    இந்த பாடலை கேட்டு அர்த்தத்தை தெரிந்துக் கொண்ட ரஜினி பிரமித்துப் போனார். கவிஞர் கண்ணதாசனை பிரமிப்பாக பார்த்தார். அதன் பிறகு கண்ணதாசனின் ஒவ்வொரு வரிகளையும் ரஜினி கூர்மையாக கவனித்து அதை தன் மனதுக்குள் வாங்கிக் கொண்டார். கண்ணதாசனையும் அடிக்கடி சந்தித்து பேச தொடங்கினார்.

    அந்தக் காலகட்டத்தில் கண்ணதாசன் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிக் கொண்டே "ராணி" வார இதழ் உள்பட 7 வார இதழ்களுக்கு 7 நாட்களுக்கு 7 விதமான தொடர்கதைகளையும் எழுதி வந்தார். இதை அறிந்த ரஜினி ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போனார்.

    கண்ணதாசனின் எழுத்துக்களை தேடி தேடி படித்தார். அர்த்தமுள்ள இந்து மதம் அவரை மிகவும் உருக வைத்தது. இந்த சமயத்தில் பஞ்சு அருணாசலமும் ரஜினிக்கு நிறைய பாடல்கள் எழுத ஆரம்பித்தார். அவரும் ரஜினிக்கு ஏற்ப வரிகளை தனது பாடல்களில் கொண்டு வந்தார்.

    1977-ம் ஆண்டு வெளியான "புவனா ஒரு கேள்விக்குறி" படத்தில் இடம் பெற்ற "ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள ஒரு ராணியும் இல்லை வாழ ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை அந்தரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுகிறேன் நாளும்" பாடல் ரஜினிக்காகவே பஞ்சு அருணாசலம் எழுதியது போல் இருந்தது.

    1978-ம் ஆண்டு வெளியான "முள்ளும் மலரும்" படத்தில் "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்" பாடல் தேசிய விருது பெற்றது. அந்த படத்தில் கங்கைஅமரன் எழுதிய "ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை" என்ற பாடல் ரஜினியின் குணத்தை நூறு சதவீதம் பிரதிபலித்தது. இந்த பாடல் அந்தக்கால கட்டத்தில் அரசியல் ரீதியாகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    "தப்பு தாளங்கள்" படத்தில் கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல், "அட என்னடா பொல்லாத வாழ்க்கை இதுக்குப்போய் அலட்டிக்கலாமா" என்று தொடங்கும். இந்த பாடலை ரஜினி வரிக்கு வரி ரசித்தார். அந்த பாடலின் கடைசி சரணத்தில் "நான் செய்தேன் தப்புத்தண்டா வேற வழி ஏதும் உண்டா ஊருக்குள்ளே யோக்கியனை கண்டா ஓடிப் போயி என்னிடம் கொண்டா" என்று எழுதி இருப்பார். இந்த வரிகள் ரஜினியே மனம் திறந்து சொன்னது போல அவரது ரசிகர்கள் ரசித்தனர்.

    1979-ம் ஆண்டு வெளியான "நினைத்தாலே இனிக்கும்" படத்தில் கண்ணதாசன் எழுதிய "சம்போ சிவ சம்போ" என்று தொடங்கும் பாடலை இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனே ரஜினிக்காக பாடி இருந்தார். அந்த பாடலில் "அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள். போனார்கள். தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு. அப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே எப்பாதை போனாலும் இன்பத்தைத் தள்ளாதே" என்ற வரிகள் வரும்.

    இந்த வரிகளை ரஜினி திரும்ப... திரும்ப... பல தடவை சொல்லிக் கொண்டே இருந்தார். கண்ணதாசனிடமே அவர், "இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுசார். இதுதான் நான். இதுதான் என் வாழ்க்கை என்பது போல இந்த பாட்டு இருக்கிறது" என்று கூறினார். எந்த அளவுக்கு அவர் மனதுக்குள் ஆன்மீகத்தை வைத்து இருந்தாரோ அதே அளவுக்கு மனதை சுதந்திரமாக சமநிலையில் வைத்து இருந்தார். அதனால்தான் அவருக்கு இந்த பாட்டு பிடித்து இருந்ததாக அந்தக் காலகட்டத்தில் பலரும் கூறினார்கள்.

    இதற்கு பிறகுதான் ரஜினியின் உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டு இருந்தது. அவரை மேம்படுத்தும் வகையில் பில்லா படம் அமைந்தது. அந்த படத்தில் இடம் பெற்ற 2 பாடல்கள் ரஜினியின் வாழ்க்கையை பிரதிபலிப்பது போல கவிஞர் கண்ணதாசன் வரிகளை அமைத்து இருந்தார்.

    அதில் ஒரு பாடல் வருமாறு:-

    நாட்டுக்குள்ள எனக்கொரு ஊருண்டு

    ஊருக்குள்ள எனக்கொரு பேருண்டு

    என்னைப் பத்தி ஆயிரம் பேரு

    என்னென்ன சொன்னாங்க

    இப்பென்ன செய்வாங்க

    நாலு படி மேலே போனா

    நல்லவனை விடமாட்டாங்க

    பாடுபட்டு பேரை சேர்த்தா

    பல கதைகள் சொல்லுவாங்க

    யாரு சொல்லி என்ன பண்ண

    நானும் இப்ப நல்லாயிருக்கேன்

    உங்களுக்கும் இப்ப சொன்னேன்

    பின்னால பார்க்காத

    முன்னேறு முன்னேறு

    ஆளுக்கொரு நேரமுண்டு

    அவுகவுக காலமுண்டு

    ஆயிரம்தான் செஞ்சாக்கூட

    ஆகும்போது ஆகுமண்ணே

    மூடனுக்கும் யோகம் வந்தா

    மூணுலகம் வணக்கம் போடும்

    நம்பிக்கையை மனசுல வச்சு

    பின்னால பார்க்காத முன்னேறு முன்னேறு

    -இந்த பாடல் ரஜினி குணமாகி மீண்டு விட்டதை உறுதிப்படுத்தியது போல் அமைந்தது.

    பில்லா படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடல் அவரது யதார்த்தமான நிலையையும் ரசிகர்களுக்கு காட்டியது. அந்த பாடல்....

    மை நேம் இஸ் பில்லா...

    வாழ்க்கை எல்லாம்...

    மை நேம் இஸ் பில்லா

    வாழ்க்கை எல்லாம்

    நானும் பாக்காத ஆளில்லே

    போகாத ஊரில்லே அய்யா

    நல்ல நண்பன் இல்லை என்றால்

    எங்கு போனாலும் விட மாட்டேன்

    நானாகத் தொட மாட்டேன்

    அய்யா... ஹா... ஹோ

    ஆ... பூப் போன்ற பெண்ணோடு ஆட்டம்

    ஆனாலும் சிலர் மீது நோட்டம்

    என் வாழ்க்கை அழகான தோட்டம்

    இன்பங்கள் என்றாலே நாட்டம்

    பொன்னோடும் பொருளோடும்

    எப்போதும் நண்பர்கள் கூட்டம்

    என் மீது பாய்வோர்கள்

    யாராக இருந்தாலும் ஓட்டம்

    பொன்னோடும் பொருளோடும்

    எப்போதும் நண்பர்கள் கூட்டம்

    என் மீது பாய்வோர்கள்

    யாராக இருந்தாலும் ஓட்டம்

    நீரோட்டம் போல் எந்தன் ஆசை

    தேரோட்டம் போல் எந்தன் வாழ்க்கை

    ஹா... போராட்டம் இல்லாத பாதை

    எல்லாமே சுகமான போதை

    நான் கொண்டு வந்தேனா

    நீ கொண்டு வந்தாயா செல்வம்

    ஹ ஹ ஹ

    நாளென்ன பொழுதென்ன

    நாள்தோறும் விளையாடி வாழ்வோம்

    நான் கொண்டு வந்தேனா

    நீ கொண்டு வந்தாயா செல்வம்

    நாளென்ன பொழுதென்ன

    நாள்தோறும் விளையாடி வாழ்வோம்

    மை நேம் இஸ் பில்லா

    வாழ்க்கை எல்லாம்

    நானும் பாக்காத ஆளில்லே

    போகாத ஊரில்லே அய்யா

    நல்ல நண்பன் இல்லை என்றால்

    எங்கு போனாலும் விட மாட்டேன்

    நானாகத் தொட மாட்டேன் அய்யா...

    -இந்த பாடல் பட்டித்தொட்டி எங்கும் முழங்கி ரஜினியின் அந்தஸ்தை மேலும் உயர்த்தியது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக "ஆறிலிருந்து அறுபதுவரை" பட வெற்றி விழாவில் கண்ணதாசனின் கால்களில் விழுந்து ரஜினி ஆசி பெற்றுக் கொண்டார்.

    1981-ம் ஆண்டு கண்ணதாசன் மறையும் வரை ரஜினிக்காக அவர் மேலும் சில பாடல்கள் தனித்துவமாக எழுதியது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் சினிமா வாழ்க்கை முடிந்துப் போனது என்று கூறப்பட்ட சூழலில் அவர் மீண்டும் விஸ்வரூபம் எடுத்ததற்கு கண்ணதாசனின் பாடல்கள்தான் அடித்தளம் அமைத்துக் கொடுத்தன.

    கண்ணதாசனின் எழுத்துக்களை வரிக்குவரி ரசித்த ரஜினி அவர் கொடுத்த உற்சாகம் காரணமாக தமிழில் வெளியாகி உள்ள பல புத்தகங்களை தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தார். ரஜினிக்கு ஏற்கனவே புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அதற்கு காரணம் சிறு வயதில் பெங்களூர் ராமகிருஷ்ணா மடம் பள்ளியில் அவருக்குள் விதைக்கப்பட்ட விதை என்றே சொல்லலாம்.

    அவர் இளைஞராகி கண்டக்டராக பணிக்கு சேர்ந்த பிறகும் சினிமாவுக்கு வந்த பிறகும் அவரது படிக்கும் ஆர்வம் கொஞ்சமும் குறையவில்லை. பெங்களூரில் இருந்தவரை அவர் கன்னடத்தில் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை வாங்கி படிக்க தவறியது இல்லை. சில கன்னட புத்தகங்களை இன்றும் கூட அவர் மனம் திறந்து பேசுவது உண்டு.

    சென்னைக்கு வந்து தமிழில் பேசவும், படிக்கவும் கற்றுக்கொண்ட பிறகு ரஜினி நிறைய தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசிக்க தொடங்கினார். ஜெயகாந்தன், ரா.கி. ரங்கராஜன், கண்ணதாசன், அகிலன் எழுதிய கதைகளை விரும்பி படித்தார். கல்கியை தனது குரு என்றே அவர் சொல்வார். அந்த அளவுக்கு தமிழ் நாவல்களை விரும்பி படித்துள்ளார்.

    ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகம் எழுதினால் அது தெளிந்த நீரோடையாக வாசகர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் சிறப்பாக அமைய வேண்டும் என்று ரஜினி பல மேடைகளில் பேசியது உண்டு. அவரது அந்த எதிர்பார்ப்பு தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள் மூலம் அவருக்கு நிறையவே கிடைத்தது.

    இதன் காரணமாக ரஜினிக்குள் முடிவு எடுக்கும் திறமை உருவானது. அந்த திறமை ரஜினியின் வாழ்க்கையை உச்சத்துக்கு கொண்டு போகும் வகையில் அதிரடியாக மாற்றியது. அதுபற்றி நாளை பார்க்கலாம்.

    • டெல்லியில் நடந்த ஒரு சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கி இருந்தது.
    • எல்லா தியேட்டர்களிலும் நல்ல லாபம் கிடைத்தது.

    சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கையில் 1979-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரையிலான 5 மாதம் அவருக்கு மறக்க முடியாத ஒன்றாக மாறியது. டைரக்டர் பாலச்சந்தர் குறிப்பிட்டது போல அதை ரஜினியின் இருண்ட காலம் என்றே இப்போதும் சொல்கிறார்கள். ஆனால் அந்த இருண்ட நாட்களில் வாழ்க்கையின் யதார்த்தங்கள் அனைத்தையும் ரஜினி முழுமையாக உணர்ந்தார்.

    அதனால்தான் ஜூன் மாதம் அவர் முழுமையாக குணம் அடைந்ததும் ஜூலையில் இருந்து அவரது செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் சிறப்பான மாற்றங்கள் ஏற்பட தொடங்கின. இதன் காரணமாக 1980-ம் ஆண்டு ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட்டது.

    அந்த ஆண்டு அவர் பில்லா (26.1.1980), ராம் ராபர்ட் ரகீம் (தெலுங்கு 31.5.1980), அன்புக்கு நான் அடிமை (4.6.1980), காளி (3.7.1980), மாயதாரி கிருஷ்ணடு (தெலுங்கு 19.7.1980), நான் போட்ட சவால் (7.8.1980), ஜானி (15.8.1980), காளி (தெலுங்கு 19.9.1980), எல்லாம் உன் கைராசி (9.10.1980), பொல்லாதவன் (6.11.1980), முரட்டுக்காளை (20.12.1980) ஆகிய 11 படங்களில் நடித்தார். 1979-ல் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ரஜினி தனக்கு ஏற்பட்ட பக்குவம் காரணமாக படங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கி இருந்தார்.

    இதனால் 1980-ல் அவர் நடித்த படங்கள் எல்லாம் அனைத்து தியேட்டர்களிலும் ஓகோ... ஓகோ என்று ஓடியது. அந்த ஆண்டின் தொடக்கமே ரஜினிக்கு பூத்து குலுங்குவதாக அமைந்தது.

    அதற்கு காரணம் நடிகரும், தயாரிப்பாளருமான பாலாஜி. அவருக்கு ரஜினியை வைத்து ஒரு உண்மை கதையை படமாக்க வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. அந்தக் கால கட்டத்தில் டெல்லியில் நடந்த ஒரு சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கி இருந்தது.

    டெல்லியில் 1978-ம் ஆண்டு பில்லா-ரங்கா என்ற 2 ரவுடிகள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள் கடத்தல் போன்ற அட்டகாசங்களில் ஈடுபட்டு வந்தனர். அந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி சனிக்கிழமை அவர்கள் இருவரும் இந்திய கடற்படை கேப்டன் சோப்ராவின் மகள் 17 வயது கீதா, மகன் 15 வயது சஞ்சய் ஆகிய இருவரையும் காரில் கடத்தி சென்றனர்.

    கீதாவும், சஞ்சய்யும் நன்றாக பாடக்கூடியவர்கள். அவர்கள் இருவரும் டெல்லி வானொலி நிலையத்தில் அடிக்கடி பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது உண்டு. அப்படி அவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தபோதுதான் பில்லா- ரங்காவால் கடத்தப்பட்டனர்.

    சிறுமி கீதாவை பாலியல் பலாத்காரம் செய்த இருவரும் மிக கொடூரமாக கொலையும் செய்தனர். அதுபோல அவளது தம்பி சஞ்சய்யையும் துடிக்க துடிக்க கொலை செய்தனர். ஓடும் காரில் இந்த கொடூரக் கொலைகள் நடந்தன. இந்த கொலை இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி பில்லா-ரங்கா இருவரையும் கைது செய்தனர்.

    விசாரணைக்கு பிறகு அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 1982-ம் ஆண்டு அவர்கள் இருவரும் டெல்லி திகார் ஜெயிலில் தூக்கில் போடப்பட்டனர். அவர்கள் செய்த இரட்டை கொலை 1979-ல் தினமும் அனல் பறக்க பரபரப்பான தகவல்க ளுடன் பேசப்பட்டது.

    இதனால் இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஆனால் நிறைய மாற்றங்கள் செய்து ேதவைக்கும் அதிகமாக மசாலாக்கள் சேர்த்து "பில்லா" என்ற பெயரிலேயே படத்தை தயாரிக்க நடிகர் பாலாஜி முடிவு செய்தார். இதற்காக அவர் ரஜினியை சந்தித்து பேசினார். அப்போது அவர் பில்லா வேடத்தில் நடித்தால் உங்களது முழுமையான ஆக்ஷன் திறமையை வெளியில் காட்ட முடியும் என்றார்.

    இதைக் கேட்டதும் ரஜினிக்கு ஆர்வம் வந்தது. எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை என்று கூறி உடனடியாக அவர் பில்லா படத்தில் நடிக்க சம்மதித்தார். மிகப்பெரிய கொலைக்காரரான பில்லா பெயரில் நடிப்பதற்கு ரஜினி கொஞ்சமும் தயக்கம் காட்டவில்லை.

    ஆனால் பாலாஜியை பலரும் பயம் காட்டினார்கள். உண்மை கதையை மாற்றி படம் எடுக்கிறாய். கவனமாக இரு என்றனர். சிலர் அவரிடம், "ரஜினியை வைத்து படம் தயாரிக்கிறாய். அவர் கடைசி வரை நடித்து தருவாரா? அவருக்கு மனநலம் பாதிப்பு மீண்டும் வந்து விட்டால் உன்னால் படத்தை முடிக்க முடியுமா? அந்த இழப்பில் இருந்து உன்னால் மீண்டு வரமுடியுமா? என்றெல்லாம் கேட்டனர்.

    இதை கேட்ட பாலாஜிக்கு உண்மையிலேயே பயம் வந்து விட்டது. ரஜினியை வைத்து படம் தயாரிக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் ஏற்பட்டது. அந்த குழப்பத்தை தீர்த்துக் கொள்ள கவிஞர் கண்ணதாசன் வீட்டுக்கு சென்றார். கண்ணதாசனிடம் தனது மனதில் உள்ளதை எல்லாம் நடிகர் பாலாஜி கொட்டினார். இதைக் கேட்டதும் கண்ணதாசன் அனைத்தையும் புரிந்து கொண்டார். அவர் பாலாஜியிடம், "நீ எதற்கும் கவலைப்படாதே? ரஜினியை வைத்து படம் தயாரிப்பதில் பின் வாங்க வேண்டாம். நான் இந்த படத்துக்காக வித்தியாசமான முறையில் பாடல் எழுதி தருகிறேன். கவலை வேண்டாம்" என்றார்.

    கண்ணதாசன் உற்சாகம் கொடுத்ததும் பாலாஜியிடம் இருந்த குழப்பமும், தவிப்பும் நீங்கியது. தைரியமாக அவர் பில்லா படத்தை தயாரிக்க தொடங்கினார்.

    பில்லா படத்தின் கதைப்படி ரஜினி (வில்லன்) சர்வதேச கடத்தல்காரனாக இருக்கிறார். அவரை எப்படியும் கைது செய்தே தீர வேண்டும் என்று சென்னை போலீஸ் அதிகாரி பாலாஜி (அலெக்சாண்டர்)சபதம் எடுக்கிறார். ஒருநாள் சர்வதேச போலீஸ் அதிகாரி மேஜர் சுந்தரராஜன் சென்னை வருகிறார்.

    சென்னையில் உலகம் முழுக்க உள்ள பிரபலமான கடத்தல்காரர்கள் ஒன்று கூடி பேசுகிறார்கள். அவர்களை சுற்றி வளைத்து கைது செய்யலாம் என்று அவர் அங்கு செல்கிறார். இந்த நிலையில் பில்லாவின் கூட்டாளியாக இருந்த ஜானி என்பவன் தனது காதலி பிரவீனாவுடன் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயற்சி செய்கிறான்.

    அவனை பில்லா சுட்டுக் கொல்கிறான். இதனால் பில்லாவை பழிவாங்க பிரவீனா கொள்ளைக்காரியாக மாறி பில்லாவின் கூட்டத்துக்குள் நுழைகிறாள். பில்லாவை சிக்க வைக்க அவள் செய்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அவளையும் பில்லா கொல்கிறான். இதற்கிடையே பில்லாவால் கொல்லப்பட்ட ஜானியின் தங்கையும் (ஸ்ரீபிரியா) பில்லாவை பழிவாங்க அந்த கூட்டத்துக்குள் வருகிறாள்.

    அவளிடம் பில்லா மனதை பறிகொடுக்கிறார். அதை பயன்படுத்தி அவள் பில்லாவை போலீசில் சிக்க வைக்கிறாள். போலீஸ் துப்பாக்கியால் சுட்டதில் பில்லா செத்துப் ேபாகிறான். இதைப் பார்த்த போலீஸ் அதிகாரி பாலாஜி புதிய திட்டம் போடுகிறார். சர்வதேச கும்பலை பிடிப்பதற்காக பில்லா கொலையை மறைக்கிறார்.

    பில்லா போன்றே இருக்கும் கழைக்கூத்தாடி ராஜப்பாவை உருவ மாற்றம் செய்து பில்லாவாக நடிக்க வைக்கிறார். அப்போதுதான் சர்வதேச கடத்தல் கும்பலுக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் தலைவராக இருப்பது தெரிகிறது. அந்த அதிகாரியை ராஜப்பா பிடித்து கொடுத்து விட்டு ஸ்ரீபிரியாவை திருமணம் செய்து கொள்வதுடன் படம் முடிகிறது. பில்லா படம் தமிழகத்தில் திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் சக்கைப்போடு போட்டு வசூலை வாரிக் குவித்தது. எல்லா தியேட்டர்களிலும் நல்ல லாபம் கிடைத்தது. அது மட்டுமின்றி சில தியேட்டர்களில் 260 நாட்களுக்கு மேல் ஓடி புதிய சாதனைையயும் படைத்தது.

    ரஜினி நடிக்க வந்த 5 ஆண்டுகளில் பில்லா படம் போல எந்த படமும் ஓடியது இல்லை. இது ரஜினியின் வாழ்க்கையிலும் ஒருபுதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. ரஜினியை மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்துக்கு இந்த படம் கொண்டு சென்றது. அது மட்டுமின்றி ரஜினி நடித்தால் நிச்சயம் அதிக லாபம் கிடைக்கும் என்ற புதிய பாதையையும் இந்த படம் உருவாக்கியது.

    ரஜினிக்கே இது ஆச்சரியமாக இருந்தது. இதுபற்றி அவர் அளித்த ஒரு பேட்டியில், "ரஜினி அவ்வளவுதான் என்று எல்லோரும் சொன்னார்கள். ரஜினியின் இமேஜ் போய் விட்டது என்றெல்லாம் வதந்தி பரப்பினார்கள். ஆனால் அதையே நான் எனது பலமாக மாற்ற முடிவு செய்தேன். என்னைப் பற்றி என்னென்ன குறைகள் சொன்னார்களோ அந்த மாதிரி வேடங்களாக பார்த்து நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

    குடிகாரனாக.... ரவுடியாக.... கொலைகாரனாக... பைத்தியக்காரனாக.... நடித்தேன். கதாநாயகன் வேடம் கிடைக்காவிட்டாலும் மாற்று வேடங்களில் நடிக்க நினைத்தேன். ஆனால் பில்லா படத்தில் எனது நடிப்பை மக்கள் ஒத்துக் கொண்டார்கள். பில்லா நல்லா ஓடுகிறது என்றதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்த படம் எதனால் ஓடுகிறது என்பதை தெரிந்துக் கொள்ள தியேட்டருக்கு சென்றேன்.

    ஆனால் எனக்கு எதுவுமே கண்டுபிடிக்க முடியவில்லை. மக்களை புரிந்துக் கொள்ள முடியவில்லை. என் மீது அவர்கள் காட்டும் பாசம் பிரமிக்க வைத்தது" என்றார்.

    ஆனால் பில்லா படத்தில் ரஜினிக்காக கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது என்பதே உண்மை. அது மட்டுமல்ல ரஜினியின் சிறப்பையும், அந்தஸ்தையும் கண்ணதாசன் பாடல்கள் மேம்படுத்தியது. அதற்கு காரணம் ரஜினி மீது கவிஞர் கண்ணதாசன் வைத்திருந்த தனி அன்புதான். கண்ணதாசனுக்கும், ரஜினிக்கும் இருந்த அந்த நட்பு பற்றி நாளை பார்க்கலாம்.

    • ‘அவர்கள்’ படத்தில் ரஜினியின் நெகடிவ் நடிப்பு மிக வித்தியாசமாக அமைந்திருந்தது.
    • ரஜினி தயாரிக்கும் படத்தில் நானும், நான் தயாரிக்கும் படத்தில் ரஜினியும் நடிப்போம்.

    ரஜினியை பல தடவை கமல் பாராட்டி பேசி உள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டி.....

    'கமலுக்கும் ரஜினிக்கும் ஆகாது. ஒருவரை ஒருவர் விழுங்கப் பார்க்கிறார்கள் என்று எங்களது எதிரிகள் சிலர், எங்களுக்குள் கோள் மூட்டி விடப்பார்த்தனர். ஆனால் எங்களது நட்பு சினிமா அந்தஸ்தை மீறி நிற்பதாகும். அந்த உயரத்திற்கு வந்து எங்களை, எங்கள் நட்பை யாரும் எதுவும் செய்துவிட முடியாது.

    'அபூர்வ ராகங்கள்' தொடங்கி எங்கள் நட்பு வளர்ந்தது. 'அவர்கள்' படப்பிடிப்பு முடிந்த நேரத்தில் ரஜினியிடம், "தொடர்ந்து ஸ்டைல் நடிப்பையே தந்து கொண்டிருக்கிறீர்களே, கொஞ்சம் கேரக்டர் நடிப்பிலும் கவனம் செலுத்தினால் என்ன?" என்று கேட்டேன்.

    ரஜினி அமைதியாக என்னிடம், "கமல், நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள். எனக்கு 'ஸ்டைல்' நடிப்புத்தான் சரி" என்றார். இப்படி அவரது பதில் எதுவும் நேரிடையாகத்தான் வரும். 'சுற்றி வளைத்து' பேசுவது என்பதே அவரிடம் கிடையாது.

    'அவர்கள்' படத்தில் ரஜினியின் நெகடிவ் நடிப்பு மிக வித்தியாசமாக அமைந்திருந்தது. அவரும் அதைச் சிறப்பாகச் செய்திருந்தார். அப்போதுதான் அவரிடம் 'அவர்கள்' நடிப்பைச் சுட்டிக் காட்டி மேற்கண்ட கேள்வியைக் கேட்டேன்.

    'நினைத்தாலே இனிக்கும்' படப்பிடிப்பு சிங்கப்பூரில் நடந்தது. தினமும் படப்பிடிப்பு முடிந்தபின் ரஜினி ஊர் சுற்றக் கிளம்பி விடுவார். தான் சுற்றுவது போதாதென்று என்னையும் துணைக்கு அழைப்பார். எனக்கு மறுநாள் படப்பிடிப்புக்காக காலையிலேயே எழுந்தாக வேண்டும் என்பதற்காக தயங்கு வேன். 'அட, சும்மா வாங்க, சிங்கப்பூருக்கு எதுக்கு வந்திருக்கோம்' என்று அழைத்து செல்வார்.

    சுற்றிவிட்டு எங்கள் இருப்பிடம் திரும்ப நள்ளிரவு 2 மணிக்கு மேல் ஆகிவிடும். ரஜினியுடன் நீண்ட நேரம் இரவில் சுற்றுவது எனக்கு சரிப்பட்டு வரவில்லை.

    அதனால் ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து விடுவேன். அவர் நள்ளிரவு தாண்டி அதிகாலை 3 மணிக்கும், 4 மணிக்கும் வருவார். மறுநாள் காலை 7 மணிக்கெல்லாம் படப் பிடிப்புக்குத் தயாராக வேண்டும் என்ற கவலையே இருக்காது.

    மறுநாள் காலையில் முந்தய இரவு விழித்திருந்த அசதியும் ரஜினியிடம் தெரியாது. பாலச்சந்தர் சார் இரவு 9 மணிக்கு தூங்கி, காலை 5 மணிக்கே தயாராகி விடுவார். படப்பிடிப்பு தளத்திற்கு வந்தாரென்றால் காட்சியைத் தயார் செய்ய அரை மணி நேரமாகும். இந்த இடைவெளியை நானும், ரஜினியும் வீணாக்குவதில்லை.

    சிங்கப்பூரிலுள்ள பூங்கா, சாலைப் பகுதிகளில் சிமெண்ட் சாய்மானங்கள் இருக்கும். நான் ஒரு பக்கம் ரஜினி வேறொரு பக்கம் இருக்க சாத்தியப்படாது. டைரக்டர் அழைக்கும்போது எழுந்து ஓட வேண்டுமே.

    அதற்காக ஓரே இடத்தில் இருவரும் ஒருவரது தோள்மீது ஒருவர் தலை சாய்த்தபடி தூங்குவோம். ஓரே காரில் பயணம் செய்யும்போதும் விமான நிலையத்திலும்.... என்று கிடைத்த இடங்களில் இப்படித் தூங்கித்தான் ஓய்வெடுப்போம். இதை எத்தனை பேர் நம்புவீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் உண்மை.

    நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும்போது தயாரிப்பாளர்கள் எங்கள் இருவருக்குமே ஒரு குறிப்பிட்ட சம்பளத்தைக் கொடுத்து விடுவதை எண்ணிப் பார்த்தோம்.

    தனித்தனியாக படம் செய்தால் அதைவிட அதிகமாகவே சம்பளம் பெற முடியும் என்று உணர்ந்தோம். அதனால் சேர்ந்து நடிப்பதற்கு தற்காலிகமாக முடிவு கட்டுவது என்று சோபா ஒன்றில் அமர்ந்து பேசி தீர்மானித்தோம். எங்கள் தீர்மானம் சரியாகவே இருந்தது.

    இருவரும் மீண்டும் சேர்ந்து நடிப்பது எப்போது என்ற கேள்விகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ரஜினி தயாரிக்கும் படத்தில் நானும், நான் தயாரிக்கும் படத்தில் ரஜினியும் நடிப்போம்.

    எங்களுக்கு இன்னும் வயது இருக்கிறது. வலிமை இருக்கிறது. எங்கள் சினிமா அந்தஸ்து உச்சத்தில் இருக்கும்போது இருவரும் நிச்சயம் இணைந்து நடிப்போம்.

    ஒரு விருந்தில் நானும் ரஜினியும் கலந்து கொண்டோம். அதில் எங்களுக்குள் கைகலப்பு வருமளவில் சிறு மோதல் ஏற்பட்டது. ஜெய்சங்கர் குறுக்கே புகுந்து விலக்கி இருவரையும் சமாதானம் செய்தார். அதனாலேயே ஜெய் சாரை எங்கள் இருவருக்கும் பிடிக்கும்.

    இந்த சம்பவம் நடந்த மறுநாள் நான் வாகினி ஸ்டூடியோவில் இருந்தேன். என்னைப் பார்க்க ரஜினி வந்தார். என் கையை அழுத்தமாகப் பிடித்தார். சாரி.... நேத்து நடந்ததை மறந்துடுங்க..." என்றார். எனக்கு வெட்கமாகிவிட்டது. அவரது பெருந்தன்மை என்னைச் சுட்டது.

    சினிமாவைப் பொறுத்தவரை நாங்கள் கடுமையாகப் போட்டி போட்டு மோதுவோம். ஒரு சமயம் நான் பெரிய வெற்றியாக வெடித்தால், அவர் அடுத்து அதைவிடப் பெரிய வெற்றியாக வெடித்து சிதறுவார். அதைப் பார்த்து அதைவிட வெற்றி பெற வேண்டும் என்று நான் முயலுவேன். எங்கள் போட்டி எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும், நட்பில் எங்களுக்குள் எந்த மாற்றமும் இல்லை.

    ஒருவரை ஒருவர் விமர்சிப்பதிலும் நாங்கள் பின் வாங்கியதில்லை. அது மட்டுமின்றி எங்கள் தவறுகளையும் நாங்கள் விமர்சிக்க பயந்ததில்லை. அந்த தைரியம் எங்களுக்கு மட்டுமே உண்டு. இந்த மனப்பாங்கு வேறு எந்த இந்திய நடிகர்களிடமும் காண முடியாதது என்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன்.

    ஒரு சமயம் ரஜினியிடம் உள்ள பழக்கம் ஒன்றைச் சுட்டிக் காட்டி திருத்திக் கொள்ளும்படி சொன்னேன். அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டு "பொறுத்துப் பாருங்கள்" என்றவர் சில நாட்களிலேயே அந்தப் பழக்கத்தை நிறுத்திக் கொண்டார். அதுதான் ரஜினி.

    இவ்வாறு கமல் கூறினார்.

    ரஜினிகாந்த் உடல் நலமும், மன நலமும் பாதிக்கப்பட்டிருந்த காலக் கட்டத்தை 'இருண்ட காலம்' என்று டைரக்டர் கே.பாலச்சந்தர் குறிப்பிட்டார்.

    ரஜினிகாந்தின் திரை உலகப் பிரம்மாவான டைரக்டர் பாலச்சந்தர், ரஜினிக்கு அந்த கறுப்பு நாட்களில் ஏற்பட்ட குழப்பத்தைப் பற்றியும், நரம்புத் தளர்ச்சி பற்றியும் அப்போது கூறியவை வருமாறு:-

    நினைத்தாலே இனிக்கும் படத்தின் டப்பிங் ஏ.பி.என் தியேட்டரில் நடந்து கொண்டிருந்தது. ரஜினிகாந்த் டப்பிங் பேச மறுப்பதாக என் உதவி டைரக்டர் கண்மணிசுப்பு, எனக்கு போன் செய்தார். நான் உடனே அங்கு சென்று ரஜினியை தனியே அழைத்து, "ஏன் டப்பிங் பேச மறுக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

    'கால் முடமானவனை ஓடச்சொல்லி வேடிக்கை பார்ப்பது ஆறறிவு படைத்த மனிதன் செய்கிற வேலையா? உடல் நலம் குன்றி இருக்கும் ஒரு மனிதனிடம் வேலை வாங்குவது நியாயமா?' என்று சொன்னார்.

    இப்படியெல்லாம் ரஜினி என்னிடம் பேச மாட்டார். மனநிலை சரியில்லாமல்தான், இப்படியெல்லாம் பேசுகிறார் என்று புரிந்து கொண்டேன். உடனே டப்பிங்கை கேன்சல் செய்துவிட்டு, டாக்டர் ஆர்.எஸ். ராஜகோபால் அவர்களிடம் ரஜினியை அழைத்துச் சென்றேன்.

    இடைவிடாத உழைப்பால் ரஜினிக்கு அதிக அளவில் ரத்த அழுத்தம் இருப்பதாக டாக்டர் கூறினார். ஓய்வெடுத்துக் கொள்ளும்படி டாக்டர் அறிவுறுத்தினார். வெலிங்டன் மருத்துவமனையில் சேர்த்து கண்டிப்பாக ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொன்னதால், ரஜினியை அங்கு உடனே அட்மிட் செய்தேன். தினம் காலையிலும் மாலையிலும் சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்தேன். அவர் அங்கே இருப்பது யாருக்கும் தெரியாமல் வைக்கப்பட்டது.

    ஐ.வி.சசி அவர்கள் கமல்ஹாசனையும், ரஜினியையும் வைத்து 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' என்ற திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். ஷாட் ரெடியானதும் ரஜினியை உடை மாற்றிக்கொள்ளச் சொல்லி இருக்கிறார்கள். ரஜினி மறுத்துவிட்டார். எல்லோரும் போய் கேட்டிருக்கிறார்கள். யார் சொல்லியும் அவர் கேட்கவில்லை. கமல்ஹாசனும், நூற்றுக்கணக்கான ஜூனியர் ஆர்டிஸ்ட்களும் காத்திருக்கிறார்கள்.

    டைரக்டர் ஐ.வி. சசிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. எனக்கு போன் செய்தார். நானும் உடனே போனேன். ரஜினியை மேக்கப் அறையில் சந்தித்தேன். 'ஏன் ரஜினி. டிரஸ் போட்டுக்க வேண்டாமா? ஷாட் ரெடியா இருக்குல்ல' என்று நான் சற்று அதட்டிச் சொல்வது போல் சொன்னதும், டிரஸ் போட ஆரம்பித்தார்.

    இந்தக் காலகட்டத்தில்தான் நடிகை ஸ்ரீபிரியா என் வீட்டிற்கு வந்தார். 'சார், உங்கள் ஒருவரால்தான் ரஜினிகாந்தைச் சரியான பாதைக்குத் திருப்ப முடியும். ஒரு நல்ல நடிகரை தமிழ்த் திரைக்கு அளித்தீர்கள். ரஜினி காந்தின் இழப்பைத் தடுக்க நீங்கள்தான் முயற்சி எடுக்கவேண்டும்" என்று மனம் விட்டுப் பேசினார்.

    'கதை முடிந்தது' என்று பலர் முடிவுரை எழுதிக்கொண்டிருந்த போது, அது தொடர் கதை ஆகவேண்டும் என்று விரும்பும் ஒரு நல்ல உள்ளமும் இருக்கிறதே என்று அறிந்ததும் என் கண்களில் நீர் திரையிட்டது.

    மேஜர் சுந்தரராஜன், பாலாஜி, நாகேஷ் ஆகியோரோடு கலந்தாலோசித்து, விஜயா நர்சிங் ஹோமில் ரஜினியை சேர்த்தோம். டாக்டர் செரியனின் கண்காணிப்பில் 15 நாள் பரிபூரணமாக ஓய்வெடுத்துக் கொண்டதால் நலம் பெற்றார், ரஜினிகாந்த்.

    ரஜினிகாந்த் போன்ற கலைஞர்களை 20, 25 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் காண முடியும். கைநழுவ இருந்த ஒரு கலைஞனை, திரைப்பட உலகம் திரும்பப் பெற்றதில் நான் பூரிப்பும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.'

    இவ்வாறு பாலச்சந்தர் கூறினார்.

    இதைப் பார்த்த படத் தயாரிப்பாளரும், நடிகருமான பாலாஜிக்கு ரஜினியை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அவர் ரஜினியை சந்தித்துப் பேசினார். நாட்டையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தின் பெயரில் படமாக்கப் போவதாக கூறினார். அதைக் கேட்டதும் ரஜினி கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் பாலாஜி சொன்ன படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாரா என்பதை நாளைப் பார்க்கலாம்.

    • அனைத்தும் தமிழக ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக மாறியது.
    • பாரதிராஜாவும், ரஜினியும் அந்த உரையாடலில் பல தகவல்களை வெளியிட்டனர்.

    1979-ம் ஆண்டு ஜூன் மாதம் ரஜினி நன்கு குணமாகி இயல்பு நிலைக்கு திரும்பியதும் அவரை மையப்படுத்தி அனைத்துப் பத்திரிகைகளும் போட்டி போட்டு செய்திகள் வெளியிட்டன. சினிமா இதழ்களில் ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுத்து பரபரப்பு தகவல்கள் வெளியானது.

    அவை அனைத்தும் தமிழக ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக மாறியது. குறிப்பாக ரஜினி ஒவ்வொரு பேட்டியிலும் தன்னைப் பற்றி யதார்த்தமாக பேசியதை தமிழக ரசிகர்கள் மிகவும் ரசித்தார்கள். போலியாக நடிக்காமல் உள்ளதை உள்ளபடி சொல்கிறார் என்று புகழ்ந்தனர்.

    நாளடைவில் இதுவே ரஜினிக்கு தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது. இதனால் சினிமா இதழ்களில் ரஜினி பற்றிய தகவல்கள் தவறாமல் இடம் பிடித்தன. ஒரு பிரபல சினிமா இதழ் டைரக்டர் பாரதிராஜாவையும், ரஜினியையும் சந்தித்து உரையாட வைத்து சிறப்பு இதழே வெளியிட்டது.

    பாரதிராஜாவும், ரஜினியும் அந்த உரையாடலில் பல தகவல்களை வெளியிட்டனர். அவர்களது உரையாடல் வருமாறு:-

    பாரதிராஜா: வில்லனை மக்கள் ரசித்தது உங்களை பார்த்துதான். ஆனால் கடந்த சில மாதங்களாக உங்களது செயல்பாடுகளால் பலவிதமாக பேசப்பட்டது. என்றாலும் மக்கள் மத்தியில் அது சின்ன சலனத்தைக் கூட ஏற்படுத்த–வில்லை. அதற்கு முக்கிய காரணம் உங்களிடம் அது மாதிரியான தவறான போக்கு இல்லை என்பதை தமிழக மக்கள் முழுவதுமாக உணர்ந்திருந்ததுதான்.

    இன்னும் சொல்வதென்றால் உங்களுடைய புகழ் இப்போது மேலும் அதிகமாகி விட்டது. அது தவிர பட உலகில் இருக்கிறவர்களுக்கும் உங்களிடம் ஒரு மென்மையான போக்கு இருந்தது. அதுதான் உங்களை காப்பாற்றியது என்று நினைக்கிறேன்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    ரஜினி: ஆமாம். உண்மைதான். அந்த சமயத்தில் என்கூட நடிச்சவங்க மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். என் சூழ்நிலை தெரியாமல் நான் என்னையும் அறியாமல் என்னென்னவோ செய்து இருக்கிறேன். சில பேர் முகத்தில் துப்பி இருக்கிறேன். அதையெல்லாம் அவர்கள் பொறுத்துக் கொண்டது நான் வணங்கிய தெய்வங்களின் அனுக்கிரகம் என்றுதான் சொல்வேன். நான் செய்த தவறுகளை நினைத்துப் பார்த்தால் எனக்கு என்னவோ போல் இருக்கிறது.

    எனக்கு என்னையும் மீறி என்னவோ நடந்து விட்டது. எனக்கு சில பேர் சூனியம் வைத்து விட்டார்கள் என்று சொன்னார்கள். எப்படியோ மீண்டு விட்டேன்.

    பாரதிராஜா: நீங்கள் ஒரு தடவை ஜப்பானோ, சிங்கப்பூரோ போய் விட்டு வந்தீங்களாமே... அதற்குப்பிறகுதான்....

    ரஜினி: ஜப்பான் இல்லை. அய்யப்ப சாமிக்கு மாலை போட்டு சபரிமலைக்கு போய் விட்டு வந்த பிறகு பாம்பே போனேன். அங்கேயே என்னிடம் சில மாறுதல்கள் இருந்தன. அதை நான் அப்போதே உணர ஆரம்பித்தேன். சென்னைக்கு திரும்பியதும் அந்த பாதிப்பு அதிகமானது.

    அப்போதெல்லாம் ஒரு மணி வரைக்கும் குடிப்பேன். அப்புறம் தூக்கம் வராது. ஸ்கூட்டரில் மெரினா கடற்கரை... அங்க இங்கன்னு சுத்துவேன். அதன் பிறகு அதிகாலை 3 மணி, 4 மணிக்கு வீட்டுக்கு வருவேன். மீண்டும் மது குடிப்பேன். 5 மணிக்கு ஒரு மாதிரி இருக்கும். தூங்கப் போவேன்.

    காலை 6 மணிக்கு ஷூட்டிங்கிற்கு கார் வந்து விடும். உடனே குளிச்சிட்டு புறப்பட்டு விடுவேன். தூக்கமே கிடையாது. அதுக்கு மேல ஜரிதா பீடா வேற போடுவேன். இந்த நிலையில் சிங்கப்பூருக்கு நினைத்தாலே இனிக்கும் படப்பிடிப்புக்கு சென்றேன். அங்கே 6 மாசம் இருந்ததில் எல்லாம் ஓவரா போய் விட்டது.

    அதன் பிறகு 40 நாள் விரதம். அது முடிந்ததும் திரும்பியும் வெறி வந்த மாதிரி சாப்பிட ஆரம்பித்தேன். அது மட்டுமில்லே... இரவு பகலாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். பிப்ரவரியில் என் உடல்நிலை கெட ஆரம்பித்தது. மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலையில் ரொம்ப மோசமாகி விட்டது.

    நான் மதுரையில் ஐதராபாத்தில் எல்லாம் என்ன செய்தேன் என்று எனக்குத் தெரியாது. மதுரையில் சிவாஜி சாருக்கு நடந்த பாராட்டு விழாவுக்கு மேடைக்கு எப்படி போனேன் ... என்ன பேசினேன்... ஒன்றும் ஞாபகம் இல்லை.

    நான் பெல்ட்டால் எல்லாம் அடித்தேன் என்று சொன்னார்கள். அதுமாதிரி சோழா ஓட்டலில் கலாட்டா, சபையர் தியேட்டர்லே கலாட்டா செய்ததாக சொன்னார்கள். அப்போதெல்லாம் யாரையாவது அடித்து விட்டால் அதுக்காக வருத்தப்பட மாட்டேன். 'அடிச்சிட்டேன்'னு பெருமைபட்டுக் கொள்வேன்.

    பாரதிராஜா: உங்க இடத்தில் வேறு ஒரு நடிகர் இருந்து இருந்தால் காணாமல் போய் இருப்பார். அவர்களுடைய மார்க்கெட் சிதறி போய் இருக்கும். பொதுவாக தமிழக ரசிகர்கள் நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் நன்கு உற்றுப்பார்ப்பார்கள். இந்த விஷயத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்.

    ரஜினி: ஆமாம் சார்... இதை நான் அப்போதே நினைத்து பார்ப்பது உண்டு. எனது செயல்பாடுகளால் என்னுடைய சினிமா வாய்ப்புகள் பாதிக்கும் என்றே நினைத்தேன். ஆனால் தமிழக மக்கள் என்னை புரிந்துக் கொண்டார்கள். என்னை அவர்கள் நம்பினார்கள்.

    என்றாலும் கதாநாயகனாக நடிப்பதை விட்டு விட்டு முழுக்க முழுக்க வில்லன் மாதிரி இருக்கிற படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன். ராமரை விட்டு விட்டு ராவணன் கதையை ஆரம்பிக்க வேண்டியதுதானே!

    பாரதிராஜா: ஆனால் எப்போதும் பஞ்சு அருணாசலம் உங்களுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டே இருக்கிறார். பலர் உங்களைப் பற்றி தப்பாக பேசிக்கிட்டு இருந்த சமயங்களில் நான் பஞ்சுவை சந்தித்துப் பேசி இருக்கிறேன். அவர் உங்கள் பக்கம்தான் பேசுவார்.

    ஒரு தடவை அவர் என்னிடம் 'நான் ரஜினியோட ரொம்ப பழகி இருக்கிறேன். அவரது குணம் இது அல்ல' என்றார். உங்களுக்கும் பஞ்சுவுக்கும் ஒரு நல்ல நட்புணர்வு இருக்கிறது.

    பஞ்சுவினுடைய புவனா ஒரு கேள்விக்குறி-யில் உங்களை திரையுலகில் புதிய பாதையில் அவர் மாற்றி விட்டு விட்டார். அதன் பிறகு காயத்ரி, பிரியா, ஆறிலிருந்து அறுபது வரை எல்லாமே பெரிய சக்சஸ் என்பது மட்டுமில்லை. உங்களுக்கும் பெரிய பெயரும் வாங்கிக் கொடுத்து இருக்கிறது.

    எம்.ஆர்.ராதாவுக்கு பிறகு வில்லனை மக்கள் ரசித்தது உங்கள் ரூபத்தில்தான். 16 வயதினிலே படத்துக்காக நாம் சேர்ந்து இருந்த போது எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். உங்க வேலையைத் தவிர வேறு எதிலும் நீங்கள் தலையிட்டது இல்லை. அதன் பிறகு நாம் அடிக்கடி சந்தித்துக் கொள்ள வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.

    ஒரு தடவை ஒரு விருந்தில் நமக்குள் லேசான உரசல் ஏற்பட்டது. அது ஏன் என்று தெரியவில்லை. நீங்கள் அதிக மது குடித்து இருந்ததால் அப்படி ஆகி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

    ரஜினி: அன்று விருந்தில் நான் இருந்த சூழ்நிலை அப்படி. அன்று சிலரால் நான் ஏதேதோ பேசி விட்டேன். எனக்கு நன்றாகத் தெரியும். தப்பு என் மேல்தான். இதுபற்றி பேச உங்களுக்கு நான் 3, 4 தடவை போனில் தொடர்பு கொண்டேன். நீங்கள் கிடைக்கவில்லை.

    பாரதிராஜா: அந்த விஷயத்தை அன்றே நான் மறந்து விட்டேன். அதான் என் குணம். நான் முதல் முறையாக எங்கே உங்களை சந்தித்தேன் என்று தெரியுமா?

    ரஜினி: 'அவர்கள்' பட ஷூட்டிங்கின்போது ஒரு மாடியில் தானே...

    பாரதிராஜா: இல்லை. அதுக்கு முன்னாடி சிவசுப்ரமணியம் பூஜையில் உங்களைப் பார்த்தேன். பூஜை நடந்துகிட்டிருக்கு. ஓரத்தில் அமைதியாக உட்கார்ந்து இருந்தீங்க. படத்தில் பார்ப்பதற்கும், நேரில் பார்ப்பதற்கும் கொஞ்சம் வித்தியாசம் இருந்தது.

    ரஜினி: ஆமாம். அப்போது நான் மிகவும் ஒல்லியாக இருந்தேன். இப்போது கொஞ்சம் மாறி இருக்கிறேன்.

    பாரதிராஜா: '16 வயதினிலே' படம் முடிந்து ஒரு நாள் நாம் பேசிக்கொண்டிருந்த போது உங்க திறமையை நீங்க காட்டணும்னு நீங்களே சொல்லி இருக்கீங்க. நடிகர்கள் நடிச்சி 5 படங்கள் வந்து 3 படம் ஓடினால் கூடப் போதும். ஆனால் எங்க நிலை அப்படி இல்லை. படம் ஓடாவிட்டால் விமர்சிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதனால் ஒரே நேரத்துல 4, 5 படம் பண்ண முடியவில்லை.

    ரஜினி: 'இமேஜ்' வந்தாலே பிரச்சினைதான். இமேஜ் வரவேண்டும் என்று கஷ்டப்படுகிறோம். வந்த பிறகு அதைக் காப்பாற்றி கொள்ள போராடுகிறோம். சினிமாவை நாம் தொழிலாக நினைத்தால் ரொம்ப சிரமப்படுவோம். சினிமாவை அனுப வித்து வாழ்க்கையை கொண்டு போனால் போதும். அதற்கு பிறகு நாம் சாதித்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர்கள் உரையாடல் நடந்தது.

    டைரக்டர் பாலச்சந்தர், கமல் இருவரும் ரஜினி முழுமையாக குணம் அடைந்து மீண்டதை வரவேற்று பேட்டியளித்தனர். அவர்கள் இருவரும் என்ன சொன்னார்கள் என்பதை நாளைக் காணலாம்.

    ×