என் மலர்
நீங்கள் தேடியது "ஜாதகம்"
- பொதுவாக ஒரு கிரகத்தின் பலம் என்பது ஆட்சி, உச்சம், நட்பு மூலத்திரிகோணம் என்ற ரீதியில் எடுத்துக் கொள்ளலாம்.
- ஒரு கிரகம் தன் சொந்த வீட்டிலோ நட்பு வீட்டிலோ உச்சமடைவது சாதாரண விஷயமாகும்.
ஒருவரின் குண நலன்களை பிரதிபலிப்பதில் ஒரு ஜாதகத்தில் செவ்வாயின் பங்கு அளப்பரியது செவ்வாய் வலுப்பெற்றவர்கள் பிடிவாதம், அகங்காரம், துணிச்சல், கர்வம், அவசர புத்தி, கலகம், அதீத காம உணர்வு நிறைந்தவராக இருப்பார்கள். அதே நேரத்தில் செவ்வாய் வலுப்பெற்று இருந்தால் மட்டுமே ஒருவருக்கு தைரியம், வீரியம், சொத்துக்கள் சேருதல், உடன் பிறந்த சகோதரர்களின் அன்பு, விவசாயம் கால்நடை வளர்ப்பு போன்றவற்றில் ஆதாயம் போன்ற சுப பலன்கள் நடக்கும்.செவ்வாய் பலம் குறைந்தால் பிரஷர், மாதவிடாய் கோளாறு, சொத்துக்கள் இல்லாத நிலை, ஏமாற்றம் போன்ற அசுபங்கள் அதிகமாக இருக்கும். எந்த கிரகமாக இருந்தாலும் அதன் மூலம் நன்மையும் தீமையும் உண்டு.
இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் ஒரு ஆதிபத்திய ரீதியாக நன்மை செய்தால் மற்றொரு ஆதிபத்திய ரீதியாக ஜாதகருக்கு ஏதாவது ஒரு பின்விளைவுகளை தரலாம். பலம் பெற்ற ஒரு கிரகத்தின் காரகத்துவத்தை ஜாதகர் எளிமையாக அடைய முடியும். பலம் இல்லாத கிரகத்தின் ஆதிபத்திய ரீதியான பலனை ஜாதகர் போராடி அடைவார்கள். அல்லது வாழ்நாள் லட்சியமாக கனவாகவே இருக்கும்.
பொதுவாக ஒரு கிரகத்தின் பலம் என்பது ஆட்சி, உச்சம், நட்பு மூலத்திரிகோணம் என்ற ரீதியில் எடுத்துக் கொள்ளலாம்.அத்துடன் ஒரு ஜாதகத்தில் செவ்வாயின் நட்சத்திரத்தில் ஏதாவது கிரகம் இருந்தாலும் அந்த தசா புத்தியில் ஜாதகருக்கு செவ்வாயால் ஏற்படக்கூடிய அனைத்து நன்மை தீமைகளும் நடக்கும். செவ்வாய் மகர ராசியில் 28 வது பாகையில் அவிட்டம் நட்சத்திரத்தில் உச்சமடைகிறார்.
ஒரு கிரகம் தன் சொந்த வீட்டிலோ நட்பு வீட்டிலோ உச்சமடைவது சாதாரண விஷயமாகும். தனது பகை வீட்டில் தனது சொந்த நட்சத்திரத்தில் ஒரு கிரகம் உச்சம் அடைவது செவ்வாயில் தைரியத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தும் அமைப்பாகும். மேலும் தற்போது கோட்ச்சாரத்தில் 16.1.2026 முதல் 23.2.2026 வரை மகரத்தில் உச்சம் பெறப் போகிறார். கடந்த வாரங்களில் சூரியன், சந்திரன் உச்சம் பெற்றால் என்ன பலன் தரும் என்ற கட்டுரையை பார்த்தோம் தற்போது செவ்வாய் உச்சம் பெற்றால் யாருக்கு நன்மை தரும் என்பதை இந்த வாரம் நாம் பார்க்கலாம்.
மேஷ லக்னத்திற்கு ராசி அதிபதி மட்டும் அஷ்டமாதிபதியான செவ்வாய் 10-ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறும்போது ஜாதகருக்கு செவ்வாய் திசை புத்தி காலகட்டங்களில் விபரீத ராஜயோகமான பலன்கள் நடக்கும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புகள் தேடி வரும். தொழில் ரீதியான சிந்தனை ஜாதகருக்கு மிகுதியாக இருக்கும், அரசியல் அரசாங்கம் அரசு சார்ந்த துறைகளில் ஆதாயம் மிகுதியாக இருக்கும் அவரே அஷ்டமாதிபதி என்பதால் ஒரு நல்லது நடந்தாலும் ஒரு அவச்சொல், அவமானம் ஒரு வம்பு, வழக்கு, அறுவை சிகிச்சை, வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய நோய், அல்லது கடன் இருந்தே தீரும்.
ரிஷப லக்னத்திற்கு 7, 12-ம் அதிபதியான செவ்வாய் ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும். ஜாதகருக்கு தந்தையின் வழியில் அதிக சொத்து கிடைக்கும். திருமணத்திற்கு பிறகு சொத்து சேர்க்கை உண்டாகும்.பூர்வ ஜென்மத்து வாழ்க்கை துணை இந்த ஜென்மத்திற்கும் வாழ்க்கை துணையாக வருவார். தம்பதிகள் ஓர் உயிர் ஈர் உடலாக வாழ்வார்கள். கூட்டுத் தொழில் ஆர்வம் அதிகமாக இருக்கும். பரம்பரை கூட்டுத் தொழிலில் ஜாதகர் பங்குதாரராக இருப்பார். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமண உறவு ஏற்படும். செவ்வாய் தசை, புத்தி நடப்பில் இருந்தால் வெளியூர் வெளிநாட்டில் வாழ்வார்கள் அல்லது அதிக வைத்தியம் செய்வார்கள்.
மிதுன லக்னத்திற்கு செவ்வாய் 6, 11-ம் அதிபதி என்பதால் உச்சம் பெறுவது சிறப்பல்ல. ஆறாமிடம் எனும் கடன், நோய் எதிரி ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் பெறும் போது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகமாகும். அதிர்ஷ்ட உயில் சொத்து, பணம், நகைகள், இன்சூரன்ஸ் காப்பீட்டு பணம் போன்றவைகள் கிடைக்கும். எதிரியை வெல்லக்கூடிய வலிமை உண்டாகும். அவரே லாப ஸ்தான அதிபதியாக இருப்பதால் செவ்வாய் சுப வலுப் பெற்றால் மிகப் பெரிய லாபம் கிடைத்து எவ்வளவு அதிகமான கடன் இருந்தாலும் விரைவில் தீர்ந்து விடும். செவ்வாயால் கடன், நோய் உருவாகினாலும் கடன், நோய் நிவர்த்தியாகும்.
கடக லக்னத்திற்கு செவ்வாய் 5, 10-ம் அதிபதி. செவ்வாய் இந்த லக்னத்திற்கு ஏக யோகாதிபதி என்பதால் ஜாதகருக்கு மிடுக்கான தோற்றம், ஆளுமைத் திறன் கூடும். தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். நண்பர்கள், தொழில் கூட்டாளி வாடிக்கையாளர்கள், வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டு.காதல் திருமணம் நடக்கும். உரிய வயதில் திருமணம் குழந்தை பேரு போன்ற நல்ல சம்பவங்கள் நடக்கும். கவுரவ பதவி உண்டு. ஜாதகருக்கு குலதெய்வமே குழந்தையாக பிறக்கும். குலதெய்வ இஷ்ட தெய்வம் வழிபாட்டில் ஜாதகருக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். அதிர்ஷ்டகரமான வாழ்க்கையை வாழ்க்கைத் துணை மூலமாக அனுபவிப்பார்கள். சிம்ம லக்னத்திற்கு 4,9-ம் அதிபதியான செவ்வாய் 6-ல் உச்சம் பெறுவதால் நிலையான நிரந்தரமான உத்தியோகம் உண்டு. தாய், தந்தை வழி உறவுகளின் அன்பு, அனுசரனை இருக்கும். தாய் வழி, தந்தை வழி பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். தீர்த்த யாத்திரை செல்லுதல், தானதர்மம் செய்தல் போன்ற பாக்கிய பலன்கள் நடக்கும். அரச உத்தியோகம், அரச பதவி போன்ற பாக்கிய பலன்கள் நடக்கும். விவசாயம், கால்நடை வளர்த்தல், பண்ணை தொழில், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் ஆர்வம் மிகுதியாக இருக்கும்.

'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
கன்னி லக்னத்திற்கு 3, 8-ம் அதிபதியான செவ்வாய் ராசிக்கு 5-ல் உச்சம் பெறுவதால் பூர்வீகம், குலதெய்வம், குழந்தை, அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஜாதகருக்கு மன உளைச்சல் இருக்கும். பாகப்பிரிவினையில் உடன் பிறந்தவர்களால் மனவருத்தம் ஏற்படும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் ஜாதகருக்கு செவ்வாய் தசை புத்தி காலங்களில் வரலாம். சிலருக்கு விபரீத ராஜ யோகமாக ஒரு விபரீதம் ஏற்பட்டு அதன் பிறகு அதிர்ஷ்ட சொத்து, உயில் பணம், காப்பீட்டு பணம் போன்ற வைகள் கிடைக்கலாம். அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு, உடன் பிறந்தவர்களுடன் சொத்துத் தகராறு, ஆவணங்கள் தொடர்பான பிரச்சினை, விபத்து, கண்டம், சர்ஜரி வம்பு, வழக்கு ஏற்படலாம்.
துலாம் லக்னத்திற்கு 2-ம் அதிபதியான செவ்வாய் ராசிக்கு 4-ல் உச்சம் பெறுவது மிக அதிர்ஷ்டமான யோகமான அமைப்பாகும். இளம் வயதில் காதல் திருமணம் நடக்கும். அல்லது உறவுகளில் வரன் வரும். சொத்துக்களால், கூட்டுத் தொழிலால், வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் சேரும். வாழ்க்கைத் துணை மூலமாக உபரி வருமானம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் மூலமாக ஜாதகரின் எண்ணங்கள் கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அளவுக்கு அதிகமாக நேசிப்பார்கள்.சில ஆண்கள் வீட்டோடு மாப்பிள்ளையாக சென்று விடுவார்கள்.
விருச்சிக லக்னத்திற்கு 1,6-ம் அதிபதியான செவ்வாய் ராசிக்கு 3-ல் உச்சம் பெறுவதால் ஜாதகரின் முயற்சி எளிதில் வெற்றி பெறும். உடன்பிறந்தவர்களின் அன்பும் அனுசரணையும் இருக்கும். ஒரு நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அதற்கு ஜாதரே காரணமாக இருப்பார். இடப்பெயர்ச்சி நடக்கும். மனதில் வெறுமை தேவையில்லாத கற்பனை பய உணர்வு நிரம்பும். ஞாபக சக்தி குறையும். கடன் தொல்லை அதிகரிக்கும். தேவையற்ற வழக்குகள் மற்றும் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் அதிர்ஷ்ட சொத்து, நகை, பணம், பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும்.
தனுசு லக்னத்திற்கு 5,12- அதிபதியான செவ்வாய் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உச்சம் அடைவார். வாக்கு வன்மை பெறும். குடும்ப உறுப்பினர்கள் இவர்களின் கருத்திற்கு மதிப்பு கொடுப்பார்கள். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள் தொழிலில் வல்லவர்களாக வலம் வருவார்கள். பேங்கிங், ஆடிட்டிங், டீச்சிங், ஐடி, போன்ற துறையில் இருப்பவர்களுக்கு இது வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் அமைப்பாகும். பூர்வீகம் குலதெய்வம் குழந்தை அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் இருந்தாலும் சில விரயங்களும் இருக்கும். சிலருக்கு வெளியூர் வெளி நாட்டில் சென்று குடியேறக்கூடிய அமைப்பு இருக்கும்.கண், பல் போன்றவற்றிற்கு சிகிச்சை செய்வீர்கள்.
மகர லக்னத்திற்கு 3,12-ம் அதிபதியான செவ்வாய் ராசியில் தனது சொந்த நட்சத்திரத்தில் உச்சம் அடைவதால் முன் கோபத்தால் சொந்த செலவில் தனக்கு தானே சூன்யம் வைத்துக் கொள்வார்கள். அடிக்கடி உத்தியோக மாற்றம் செய்வது, கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.சிறு சிறு நோய் தாக்கம் இருக்கும். கடனால் கவலை, எதிரிகளால், உயர் அதிகாரிகளால் மன சஞ்சலம் இருக்கும். ஜாமீன் சார்ந்த பிரச்சினை இருக்கும். சமாளிக்க முடியாத வீண் விரயங்கள் இழப்புகள் நஷ்டங்கள் வரலாம். வெளியூர் வெளிநாட்டு வாழ்க்கை இவர்களுக்கு வரமாக இருக்கும்.
கும்ப லக்னத்திற்கு 3,10-ம் அதிபதியான செவ்வாய் விரய ஸ்தானத்தில் ராசிக்கு பன்னிரண்டாம் இடமான விரய ஸ்தானத்தில் உச்சம் பெறுவது தொழில், உத்தியோக ரீதியான உயர்வை நிச்சயம் தரும். தொழில் உத்தியோகத்திற்காக அடிக்கடி வாழ்வியல் மாற்றம் தரும் நல்ல இடப் பெயர்ச்சி நடக்கும். ஞாபகசக்தி கூடும். உயில் எழுதுதல், உயிலில் மாற்றம் செய்தல், கடனை புதுப்பித்தல் போன்ற நல்ல நிகழ்வுகள் நடக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதாயம், ஆதரவு புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் ஒன்றுக்கு மேற்பட்ட வழியில் வந்து மனதை மகிழ்விக்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாக ஆதாயம் கிடைக்கும்
மீன லக்னத்திற்கு 2,9-ம் அதிபதியான செவ்வாய் 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவது உயர்வான யோகமாகும். குழந்தை பேறு, குல தெய்வ அனுகிரகம், பங்குச் சந்தை ஆதாயம், பிள்ளைகளுக்கு நல்ல உத்தியோகம், சுப விசேஷங்கள் நடக்கும். பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். அதிர்ஷ்டம் பேரதிர்ஷ்டமாகும். மூத்த சகோதரம், சித்தப்பா, இளைய மனைவி போன்ற உறவுகளால் ஆதாயம் உண்டு. வங்கி, ஆசிரியப்பணி, ஜோதிடம், நிதி நிர்வாகம், அரசியல், ஆன்மீகம் போன்ற பணிகளில் தனித் திறமையுடன் மிளிர்வார்கள்.
இதில் ஆர்வம் ஆதாயமும். அதிகமாகும். முன்னோர்கள் வழிச் சொத்து முறையாக கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு, தீர்த்த யாத்திரை செல்லுதல் முன்னோர்களுக்கு பித்ரு சாந்தி செய்தல் போன்ற நல்ல பலன்கள் நடக்கும்.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றால் மட்டுமே உரிய வயதில் திருமணம் நடக்கும். பெண்களுக்கு ஆண்மை, தைரியம், நிறைந்த குடும்பத்தை கட்டுக் கோப்பாக வழிநடத்தும் கணவர் கிடைப்பார். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தவராக இருப்பார்கள். செவ்வாய் பலம் குறைந்தால் உடன் பிறந்தவர்கள் கலகம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். சொத்து தொடர்பான சர்ச்சைகள் இருந்து கொண்டே இருக்கும். பெண்களுக்கு கணவரின் அன்பும், அனுசரனையும் இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
செல்: 98652 20406
- அந்த காலத்தில் ஜாதகங்கள் ஓலைச்சுவடியில் குறித்து வைக்கப்பட்டிருந்தன.
- அந்தக் காலத்தில் ஜோதிடர்கள் என்றாலே வயதானவர்களாக இருப்பதை பார்த்திருக்கிறோம்.
ஜாதகம் பார்க்க செல்பவர்கள் நல்ல நேரத்தில் ஜாதகம் பார்க்க விரும்புவதுண்டு. சிலர் ராகு காலம், எம கண்டம் போன்றவற்றை தவிர்ப்பார்கள். சிலர் மாலை 6 மணிக்கு மேல் ஜாதகம் பார்க்க விரும்புவதில்லை.
குறிப்பாக பலருக்கும் மாலை 6 மணிக்கு மேல் ஜாதகம் பார்க்கலாமா? என்ற சந்தேகம் இருக்கும். அது பற்றிய விளக்கத்தை இங்கே காண்போம்.
அந்தக் காலத்தில் ஜோதிடர்கள் என்றாலே வயதானவர்களாக இருப்பதை பார்த்திருக்கிறோம். மேலும் அக்காலத்தில் பல கிராமங்களில் மின் இணைப்புகளே கிடையாது. மின் விளக்கு இல்லாத வீடுகள் பல இருந்தன. அதோடு பழங்காலத்தில் ஓலைச்சுவடிகளில் தான் ஜாதகம் எழுதி வைத்திருப்பார்கள். மாலை நேரத்தில் ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கு வீட்டில் மின் விளக்கு இல்லாமல், மண்ணெண்ணெய் விளக்கோ அல்லது நல்லெண்ணெய் விளக்குகளின் ஒளிகளைக் கொண்டுதான் ஜாதகம் கணித்துச் சொல்வார்கள்.
இருட்டில் சாதாரணமாக நாம் எந்த வேலைகளையும் செய்ய மாட்டோம் அல்லவா? மின் விளக்கு வரும் வரை நாம் காத்திருக்கின்றோம். அப்படி இருக்கும் போது, நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் ஜாதகத்தை, சும்மா ஏனோ தானோ என்று பார்த்து விட முடியுமா?.
மேலும் அந்த காலத்தில் ஜாதகங்கள் ஓலைச்சுவடியில் குறித்து வைக்கப்பட்டிருந்தன. அதனை வயதான ஜோதிடர்கள் விளக்கொளியில் பார்க்கும்போது, தெளிவாக கணிக்க முடியாத சூழல் உருவாக வாய்ப்புள்ளது. அதாவது நம் எதிர்காலப் பலன்கள் சொல்லும் போதோ அல்லது திருமணப் பொருத்தம் பார்க்கும் போதோ, அது தவறாக போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எப்படி என்றால் ஓலைச்சுவடியில், புள்ளி இல்லாத எழுத்துக்களைக் கொண்டுதான் ஜாதகம் எழுதி வைத்திருப்பார்கள். (எழுத்தாணி கொண்டு ஓலைச்சுவடியில் புள்ளிவைத்தால் அது கிழிந்து விடும்). அதனால் இரவு நேரம் என்றால் சரியாக பார்த்து படிக்க இயலாது.
உதாரணமாக ஒரு ஜாதகத்தில் சுக்ரன் என்று இருப்பதை ஜோதிடர்கள் அந்த இருள் ஒளியில் சுக்ரனை, சூரியன் என்று படித்துவிட்டு பலன்களை மாற்றி கூறி ஜாதகர்களின் எதிர்காலத்தை மாற்றி பலன் உரைக்க வேண்டி வரும். அதுவே பகல் வேளை என்றால் தெளிவாக பார்த்து பலன்களை சொல்லிவிடலாம். இதன் காரணமாகத்தான் அந்த காலத்தில் இரவு பொழுதில் ஜாதகம் பார்க்க வேண்டாம் என்று ஒரு விதியை வழக்கத்தில் கொண்டு வந்துள்ளனர்.
ஆனால் தற்காலத்தில் அதுபோன்ற எந்த பிரச்சினையும் கிடையாது. ஏனெனில் இப்போது மின் வசதிகள் இருக்கிறது. மேலும் ஓலைச்சுவடிகளைப் போல் அல்லாமல், தற்போது கம்ப்யூட்டர், கைகளால் எழுதுவது என்று எதுவாக இருந்தாலும் புள்ளி வைத்து எழுகிறோம். இதனால் எழுத்துக்கள் தெளிவாகத்தெரியும். அந்த காலகட்டம்போல் இந்தக் காலத்தில் எந்த பிரச்சினைகளும் இல்லாததால் நாம் எளிதாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கூட ஜோதிடரிடம் அணுகி ஜாதகம் பார்க்க இயலும். எனவே, மாலை மற்றும் இரவு நேரங்களில் ஜாதகம் பார்க்கக் கூடாது என்ற மூட நம்பிக்கைகளை நாம் களைவது மிக முக்கியமானதாகும்.
இதே போன்று செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளின் போது ஜாதகம் பார்க்கக் கூடாது என்ற கருத்துக்களும் தவறானதாகும். திருமண சுப முகூர்த்தம், தொழில் தொடங்கும் நாள் மற்றும் நேரம், கல்வி கற்க ஆரம்பிக்கும் நாள், சாந்தி முகூர்த்தம் குறிப்பதற்காகத்தான் நாம் நல்ல நேரம் பார்க்க வேண்டுமே தவிர, இதுபோன்ற ஜாதகம் பார்ப்பதற்கெல்லாம் அது தேவையில்லை. ஆகவே இது போன்ற மூட நம்பிக்கைகளை நீக்கி விடுவது மிகவும் நல்லது.
'ஜோதிடச்சுடர்' ந.ஞானரதம்,
சென்னை.
- ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மண வாழ்க்கையை நிர்ணயிக்கும் இடம்.
- ஜோதிட ரீதியாக ஒருவரின் ஜாதகத்தை வைத்து பெற்றோரின் விருப்ப திருமணமா? ஜாதகரின் விருப்ப திருமணமா என்பதை எளிதாக கூற முடியும்.
மனித வாழ்வின் மிக முக்கிய அங்கமான திருமணத்தை பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம், சுய விருப்ப விவாகம் என இரண்டாக வகைப்படுத்ததலாம். ஜோதிட ரீதியாக ஒருவரின் ஜாதகத்தை வைத்து பெற்றோரின் விருப்ப திருமணமா? ஜாதகரின் விருப்ப திருமணமா என்பதை எளிதாக கூற முடியும்.
ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மண வாழ்க்கையை நிர்ணயிக்கும் இடம். ஐந்தாமிடம் காதலைக் குறிக்குமிடம். ஒன்பதாமிடம் மதம் மற்றும் இனத்தைப் பற்றிக் கூறுமிடம்.இந்த இடங்களும் இந்த இடத்தின் அதிபதிகளும் பலம் பெறுவதும் நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம்.
இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை ஆசை விருப்பம் காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும். ஒருவரின் ஜாதகத்தில் 2,5,7,11-ம் பாவகங்கள் சம்பந்தம் பெற்றால் நிச்சயம் காதல் திருமணம் நடைபெறும். ஏழாம் அதிபதியுடன் சுக்கிரன் செவ்வாய் சனி இணைந்திருந்தாலோ அல்லது ஏழாம் அதிபதியை சுக்கிரன் செவ்வாய் சனி பார்த்தாலோ காதல் திருமணம் நடைபெறும்.
ஒருவரின் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் அதன் அதிபதி, குரு பலம் குறைந்தால் கலப்பு திருமணம் நடைபெறும். ராகு கேது கிரகங்கள் பிற மதத்தினரை குறிக்கும். இந்த இரண்டு கிரகங்களும் ஐந்து, ஏழு அதிபதிகளுடன் தொடர்பு கொண்டிருப்பது இணைவது சுக்கிரனுடன் ராகு கேது இணைவது வேறு மதத்தினருடன் திருமணம் செய்யும் நிலை ஏற்படும்.
- சிலர் தங்களது வாழ்க்கையை சுறுசுறுப்பாக வைத்திருப்பார்கள்.
- அந்த அரிசியைப் பறவைகளுக்கு அல்லது பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டும்.
சந்திரன்
வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்கள் தீர்வதற்கு உங்கள் ராசியில் சந்திர பகவான் பலமாக இருக்க வேண்டும்.
திறமைகள் இருந்தாலும் சிலருக்கு வாய்ப்புகள் அமைவதில்லை. சிலருக்குத் திறமை இருந்தாலும் புத்திசாலித்தனம் இல்லாத காரணத்தினால் மந்தமாகவே இருப்பார்கள்.
சிலர் தங்களது வாழ்க்கையை சுறுசுறுப்பாக வைத்திருப்பார்கள். படித்த படிப்பிற்கு வேலை கிடைக்க வேண்டும் என்று எண்ணாமல் பணம் சம்பாதிக்க எறும்பு போல் வேலை செய்வார்கள்.
இப்படி சுறுசுறுப்பாக இருக்க அவர்களின் ஜாதகத்தில் சந்திர பகவான் பலமாக இருக்க வேண்டும்.
ஒருவரின் ஜாதகத்தில் சந்திர பகவானின் செயல்பாடுகள் கொண்டு மந்த நிலையும், சுறுசுறுப்பான நிலையும் நிர்ணயிக்கப்படுகிறது. மன உளைச்சல், விரக்தி போன்ற எல்லாவிதமான பிரச்னைகளுக்கும் பரிகாரம் உள்ளது.
சந்திர பகவானை வலுப்படுத்த வேண்டும்
ஒரு குடும்பத்தில் உணவிற்கான அடிப்படைத் தேவை அரிசி. இதை வீட்டில் எப்போதும் குறையாமல் வைத்துக்கொள்ள வேண்டும். முழுமையாகத் தீர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பிரச்னைகள் இருப்பவர்கள் கைப்பிடி அளவு அரிசியை எடுத்துக் கொண்டு சந்திர பகவானை மனதார வேண்டிக் கொள்ளவும். பின்னர் அந்த அரிசியைப் பறவைகளுக்கு அல்லது பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டும். இது பச்சரிசி ஆக இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.
இவ்வாறு செய்தால் உங்கள் ராசியில் இருக்கும் சந்திர பகவானின் பலம் அதிகமாகும். மேலும் சிக்கல்கள் அதிகமாக இருப்பவர்கள் சிவபெருமானை வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
கங்கை நதியின் தீர்த்தம் கிடைத்தால் அதனைத் தினமும் குளிக்கும் போது தண்ணீரில் கலந்து நீராடினால் சந்திர பகவானின் பலம் அதிகரிக்கும் என்பது ஐதீகமாகும். வாழ்க்கையில் இருக்கும் எல்லா பிரச்னைகளும் தீர்வதற்குச் சந்திர பகவானும் பலம் மிக முக்கியமாகும்.
மூன்றாம் பிறை தரிசனம்
மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும்.
காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.
ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துவிதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும். சந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன்,கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள அமைப்பு இருப்பவர்கள் சந்திர வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்.
மாங்கல்ய பலம் அதிகரிக்கும்
மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும்.
மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.
சந்திரன் இரவு வேளைக்கு அதிபதி என்பதால் இன்றைய தினம் இரவு சந்திரனை தரிசனம் செய்தால் மனக்குழப்பம் நீங்கும்.
பய உணர்வு மிகுதியாக உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் மாலை நேரத்தில் வெண்ணிற மலர்களால் சிவபெருமானையும், அம்பிகையையும் வழிபட வேண்டும். திருப்பதி ஏழுமலையானை திங்கட்கிழமைகளில் வழிபட மன குழப்பம் நீங்கும்.
- செவ்வாய்க்கு, “அங்காரகன்” என்றும் பெயர் உண்டு.
- பூமாதேவி அங்காரகனை வளர்த்ததால் செவ்வாய்க்கு “பூமி புத்திரன்” என்று பெயருண்டாயிற்று.
செவ்வாய்
செவ்வாய்க்கு, "அங்காரகன்" என்றும் பெயர் உண்டு. மங்கலன் எனவும் அழைப்பர் ஜாதகத்தில் மற்ற எல்லாக்கிரங்களையும் விட அதிக தோஷத்தை உண்டாக்குபவன் செவ்வாயே.
செவ்வாயின் தோற்றத்தைப் புராணங்கள் பின்வருமாறு கூறுகின்றன.
பரமசிவனின் வார்த்தைகளைக் கேட்காது, தனது தந்தையான தட்சனின் யாகத்திற்குச் சென்று அங்கு தனது கணவனுக்கு நேர்த்த அவமானத்தைக்கண்டு, வெகுண்டு, அந்த யாகத்தீயில் குதித்து மறைகிறாள் பார்வதி தேவி.
தேவியை பிரிந்து யோகத்திலிருந்த சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து வியர்வை உண்டாகிப் பூமியில் விழ, அங்காரகன் தோன்றினான்.
பூமாதேவி அங்காரகனை வளர்த்ததால் செவ்வாய்க்கு "பூமி புத்திரன்" என்று பெயருண்டாயிற்று. அங்காரகன் பெரும் தவம் செய்து, யோகாக்னியை உடலில் பெற்று கிரகங்களுக்குரியபதவியை அடைந்தான்.
தட்சனின் யாகத்தைக் கெடுத்து மூன்று உலகையும் அழிக்கத் தொடங்கிய வீரபத்திர மூர்த்தியைத் தேவர்கள் யாவரும்பணிந்துத் துதித்து வேண்ட, வீரபத்திரர் கோபம் நீங்கி சௌமியராக வேறு உருவம் கொண்டதாகவும், அவரே அங்காரகன் எனப்பட்டதாக மச்சபுராணம் கூறும்.
பரத்துவாச முனிவர் நீராட சென்றபோது ஒரு பெண்ணின் அழகில் மயங்கியதாகவும், அவர்களுக்குத் தோன்றியவரே அங்காரகன் எனவும்,
அவரைப் பூமாதேவி வளர்த்து, பரத்துவாசரிடமே சகலவித்தைகளும்பயிற்றுவித்தாள் எனவும் புராணம் கூறும்.
குஜன், தராசுதன், பெளமன் ஆகியன பூமாதேவியால் வளர்க்கப்பட்டவன் எனப்பொருள்படும்.
செவ்வாயும் முருகனும் ஒன்றே என்பர்.
- கல்வி தரும் கடவுளாக புதன் பகவான் உள்ளார்.
- புதனை வழிபடுவதால் நமது அகங்காரத்தினை அழித்துடு
புதன் பகவான்!
கல்வி தரும் கடவுளாக புதன் பகவான் உள்ளார்.
புதன் பகவான் விரதம் இருந்தால் கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகுவதோடு, புதன் பகவானுக்கு "சவும்யன்" என்ற பெயரும் உண்டு.
புதனை வழிபடுவதால் நமது அகங்காரத்தினை அழித்துடுவார்.
திருவெண்காடு திருத்தலம், நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம்.
மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது சீர்காழி. இங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சென்றால், திருவெண்காடு திருத்தலத்தை அடையலாம்.
புதன் எனும் சொல் புத்தி என்பதில் இருந்து வந்ததாகச் சொல்வர்.
சந்திரனின் மைந்தன் புதன் இருவரும் திருவெண்காடு தலத்தில் தவமிருந்து, சிவனாரின் அருளைப் பெற்று, தங்களின் பாவங்களையும் தோஷங்களையும் போக்கிக்கொண்டதாக விவரிக்கிறது ஸ்தல புராணம்.
புதனின் பகவானுக்கு உகந்தது:
நிறம் - பச்சை,
தானியம் - பச்சை பயறு,
நவரத்தினம் - மரகதம்,
உலோகம் - பித்தளை,
பருவம் - இலையுதிர் காலம்,
பஞ்ச பூதம் - நிலம் ஆகும்.
புத பகவான்-காயத்ரி மந்திரம்
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்;
எனும் மந்திரத்தைச் சொல்லி புதன் பகவானை வழிபட்டால் அனைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும் என்பது நம்பிக்கை. மேலும் புதன் பகவான் உச்சம் பெற்று ஆட்சி செய்யும் மாதமாக புரட்டாசி மாதமாகும்.
புதன் கிழமை அன்று நாராயணை வழிபட்டு பின்னர் நவக்கிரங்களை வணங்கி, பின் புதன் பகவானை வழிபட எல்லா நலன்களையும் பெற்று வாழலாம்.
நாம் வீட்டில் பூஜை செய்யும்போது 5 மண் விளக்கு ஏற்றி வழிபடுவதோடு, இஷ்ட தெய்வத்தை வணங்கி அதோடு பெருமாளை வழிபடலாம்.
மேலும் அந்த நாளில் பச்சை பயறு வேகவைத்து பசு மாட்டுக்கு கொடுப்பது நல்லது.
- குருவே சகலத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
- கானகத்தில் பெரிதான யானையும் கடலில் பெரியதான திமிங்கிலமும் குருவின் ஆதிபத்தியம் பெற்றவை.
வியாழன்-குருபகவான்
குரு பார்க்க கோடி நன்மை, குருவருள் இருந்தால்தான் திருவருளைப் பெறமுடியும் என்பார்கள்.
குருவே சகலத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
நம்மில் பலருக்கு குருபகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.
நவக்கிரக வரிசையில் வடக்கு பார்த்து அமர்ந்திருப்பவர் குரு பகவான். சிவ ஆலயத்தில் தெற்கு நோக்கி, சின்முத்திரை காட்டி அமர்ந்திருப்பவர் தட்சிணாமூர்த்தி.
இருவருமே ஞானத்தை அருளும் கடவுள் என்றாலும் வித்தியாசத்தினை உணர்ந்து அவரவருக்கு உரிய மந்திரம் சொல்லி வழிபட பரிபூரண அருள் கிட்டும்.
''நவகிரகங்களிலேயே மிகவும் விரும்பப்படுபவராகவும் இயற்கைச் சுபராகவும் திகழ்பவர் குரு பகவான் (வியாழன்)
அளவிலும் மற்ற கிரகங்களைவிட பெரிய கிரகமாகவும் முழுசுபராகவும் திகழ்பவர்.
கானகத்தில் பெரிதான யானையும் கடலில் பெரியதான திமிங்கிலமும் குருவின் ஆதிபத்தியம் பெற்றவை.
ஜோதிட சாஸ்திரத்தில் எந்த கிரகம்
கெட்டுப்போயிருந்தாலும் குருவோ சுக்கிரனோ இவர்கள் இருவரில் ஒருவர் நன்றாக இருந்தாலும் ஜாதகர் சோடை போகாமல் நன்றாக இருப்பார்.
குரு பலம் பெற்று இருந்தால் ஜாதகருக்கு குரு தசை நடக்கும்போது புகழடையச் செய்வார்.
குரு பகவான் தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம் ஆகிய ஆறு லக்னக்காரர்களுக்கும் யோகமான பலன்களைத் தருவார்.
குருவே தனக்காரகனாகவும் புத்திரக்காரகனாகவும் இருக்கிறார். சந்ததி விருத்திக்கும் இவரே காரணம்.
வாழ்வதற்குத் தேவையான பண வரவுக்கும் இவரே பொறுப்பாகிறார்.
மஞ்சள் நிறத்துக்கு அதிபதியாக இருப்பதால், குரு வலுத்திருப்பவர்கள் தங்கம் அதிகமுள்ளவர்களாகவும் செல்வந்தராகவும் இருப்பார்கள்.
- தேவர்களின் குரு பிரகஸ்பதி. அசுரர்களின் குரு சுக்கிராச்சார்யர்.
- சுக்கிர யோகம் அடித்தால் ஒருவர் குபேரனை மிஞ்சிய போக வாழ்க்கையை மேற்கொள்வர் என்கிறது சாஸ்திரம்.
சுக்கிரன்
தேவர்களின் குரு பிரகஸ்பதி. அசுரர்களின் குரு சுக்கிராச்சார்யர்.
இவரே சுக்கிர பகவானாகப் போற்றப்படுகிறார்.
சுக்கிர பகவானின் திசை கிழக்கு என்றும் சுக்கிரனின் அதிதேவதை இந்திராணி என்றும் பிரத்யதி தேவதை இந்திரன் என்றும் சுக்கிர பகவானை வணங்கி வழிபடுவதற்கு உரிய திருத்தலம் ஸ்ரீரங்கம் என்றும் ஜோதிட நூல்கள் விவரிக்கின்றன.
சுக்கிர பகவான் சுபமான யோககாரகன் எனப்படுவார். உலக வாழ்வில், எத்தனை சந்தோஷங்கள் தேவையோ, அவை அனைத்தையும் நமக்குத் தந்தருள்பவர் சுக்கிர பகவான்.
குறிப்பாக மகிழ்ச்சியான மணவாழ்க்கை, குழந்தைப்பேறு அளிப்பவர் சுக்கிரன்.
அதற்கு அடிப்படையான தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் தான்.
சுக்கிர யோகம் அடித்தால் ஒருவர் குபேரனை மிஞ்சிய போக வாழ்க்கையை மேற்கொள்வர் என்கிறது சாஸ்திரம்.
சுக்கிர பகவானுக்கு உரிய சுக்கிர வாரத்தில் சுக்கிர ஹோரையில், சுக்கிர பகவானை பிரார்த்திப்பதும் வழிபடுவதும் விசேஷமானது என்கிறது ஜோதிடம் சாஸ்திரம்.
சுக்கிர பகவான் காயத்ரி மந்திரம்:
ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனூர் அஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயத்!
என்கிற சுக்கிர பகவானின் காயத்ரியை ஜபித்து வருவது இன்னுமான பல பலன்களையும் யோகங்களையும் தந்தருளும்.
வெள்ளிக்கிழமை என்றில்லாமல், எந்தநாளில் வேண்டுமானாலும் சுக்கிர பகவான் காயத்ரியைச் சொல்லி வழிபடலாம்.
குறிப்பாக, ஒவ்வொரு நாளிலும் வருகிற சுக்கிர ஹோரை நேரத்தில் வீட்டில் அமர்ந்தபடி சுக்கிர பகவான் காயத்ரி சொல்லி வழிபடுவது, சகல சம்பத்துகளையும் வழங்கியருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
- சூரியபகவானுக்கும், சாயா தேவிக்கும் பிறந்த தெய்வக் குமாரனே சனி பகவான்.
- ஏழைக்கு அன்ன மிடுதலும், மாலையில் தீபம் ஏற்றுவதும் சனிபகவானுக்கு உகந்த வழிபாடுகளாகும்.
சனிபகவான்
சங்கடந்தீர்க்கும் சனிபகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தாதா
மாமன்னர்களையும் மகாபுருஷர்களையும் கூட விட்டுவைக்காத சக்தி வாய்ந்தவர் சனிபகவான்.
இவர் அவதார புருஷரான ஸ்ரீ கிருஷ்ணரையும் தனது ஏழரை வருட அதிகாரத்தில் படாதபாடு படுத்தி வைத்தவராவார்.
அனைத்துக் கிரகங்களுக்கும் அனேக வித சக்திகளை அளித்தருளும் சூரியபகவானுக்கும், சாயா தேவிக்கும் பிறந்த தெய்வக் குமாரனே சனி பகவான்.
காசியம்பதியில் சிவபெருமானைப் பூஜித்து அதன் பலனாக நவக்கிரகங்களில் ஒருவாரகத் திகழும் பேறு பெற்றவர் அவர்.
நன்மைகளானாலும், தீமைகளானாலும் உறுதியுடன் செய்பவர் என்பதால் அனைவருக்கும் அவரிடத்தில் அச்சம் அதிகம்.
எவரது ஜாதகத்தில் சனி பலம் மற்றும், சுமுகமான ஆதிபத்தியத்துடன் விளங்குகின்றாரோ, அந்த ஜாதகர்கள் நீண்ட ஆயுளையும், குறைவில்லாத ஜீவன பாக்கியத்தையும் பெற்று மகிழ்வார்கள்.
ஏழரை சனி, ஜென்ம சனி, அர்த்தாஷ்டக சனி, அஷ்டம சனி ஏற்படும் காலங்களில் திருநாள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் நீராடி அம்மையப்பனையும், சனீஸ்வரனையும் தரிசித்துவிட்டு வருதல் அளவற்ற நன்மை தரும்.
காகத்திற்கு தினமும் உணவளித்தலும், ஏழைக்கு அன்ன மிடுதலும், மாலையில் தீபம் ஏற்றுவதும் சனிபகவானுக்கு உகந்த வழிபாடுகளாகும்.
செய்தொழிலில் கடுமையாக உழைத்து, மிகப்பெரிய பதவிக்கு வரக்கூடிய ஆற்றலை சனி ஒருவராலேயே அளிக்க முடியும்.
துலாம், மகரம், கும்பம் அகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு சனி கிரகத்தினால் ஆயுள், ஆரோக்கியம், செய்தொழில் அகியவற்றில் விசேஷ நன்மைகளை செய்வார்.
ஜெனன கால ஜாதகத்தில் சனிபகவான் மேஷ ராசியில் நீச்சம் பெற்றோ அல்லது லக்கினத்திலிருந்து 4 அல்லது 7 அல்லது 8 ம் இடங்களில் இருப்பின்,
அவர்கள் கண்டிப்பாகத் தினமும் சனிபகவானையும், பித்ருக்களையும் இஷ்ட தெய்வத்தையும் பூஜித்தல் அவசியம்.
வேறு விதங்களில் சனிபகவான் அனுகூலமில்லாமல் இருந்தாலும் பரிகாரம் மிகவும் அவசியம்.
சனிபகவானால் ஏற்படக்கூடிய ஏழு வகை தோஷங்களுக்கு மட்டும் பரிகாரம் கிடையாது.
இந்த ஏழு தோஷங்களுக்கு தொழில், ஆயுள் அல்லது ஆரோக்கியம் அகியவற்றைக் கடுமையாக பாதிக்கும்.
மற்ற தோஷங்கள் அனைத்தும் பரிகாரத்திற்கு உட்பட்டவையே.
சனிபகவான் திருவுள்ளம் மகிழ்ந்த பரிகாரத் திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றில் மிகவும் சக்தி வாய்ந்தது, பிரசித்தி பெற்றது திருநாள்ளாறு ஆகும்.
வேத காலத்திலிருந்தே இந்த தர்ப்பாரண்யேஸ்வரர் சனிபகவானுக்கும் அருள் புரிந்த பேரருளாளர் ஆவார்.
இன்றும் சனி, தர்ப்பாரண்யேஸ்வரரைப் பூஜித்து வருவதாகப் புராண வரலாறுகள் கூறுகின்றன.
நைடத நாட்டின் மாமன்னான நளன் சனிபகவானையும், ஈஸ்வரனையும் பூஜித்துத் துன்பங்கள் விலகி, தன் மனைவி தமயந்தியுடன் இழந்த நாட்டையும், ஐஸ்வரியங்களையும் திரும்பப் பெற்று மகிழ்ந்த திருத்தலம் இது.
1.திருநாள்ளாறு சென்று, தர்ப்பாரண்யேஸ்வரர், அம்பிகை, சனிபகவான் மூலவரையும் தீபம் ஏற்றி தரிசித்துவிட்டு வரவும். (நளதீர்த்தத்தில் நீராடிய பின்பு தரிசித்தல் முறை)
2.பித்ரூ பூஜை, சனிபகவானுக்கு மிகவும் பிடித்த பூஜை அகும் என்று நாரத மகரிஷி கூறுவதாகப்புராண நூல்கள் கூறுகின்றன. பித்ருக்களுக்காகத் தினமும் காகத்திற்கு அன்னம் வைப்பதும் இதனை உறுதி செய்கிறது. காகம் சனியின் வாகனம் ஆகும்.
3.சனிக்கிழமைகளில் உபவாசம் இருந்து, மாலையில் சனிபகவானுக்காகத் திருக்கோவில் ஒன்றில் தீபம் ஏற்றி வருவது.
4.சனிக்கிழமைகளில் உடல் ஊனமற்றவர்கள், எளியவர்கள் ஆகியோருக்கு வஸ்திரம் அளித்தும், உணவு கொடுப்பது.
5.எள் கலந்த சாதம் ஏழைகளுக்கு அளிப்பது.
6.வீட்டில் சனிக்கிழமைகளில், மாலையில் தீபம் ஏற்றி வைப்பது.
7.தினமும் சனி துதியையும், சனி காயத்திரியையும் கூறி வருதல் (108 தடவைகள் கூறுவது உத்தமம்)
இவற்றில் எது செய்தாலும், சனிபகவானுக்குப் பிரியமானதே.
- தாத்தா - பாட்டியின் செயல்களே, பேரன் பேத்தி அனுபவிப்பார்கள்.
- மாயைகளுக்கு ராகு மற்றும் கேதுக்களின் பங்களிப்பு அதிகம் எனச் சொல்லலாம்.
ராகு-கேது
ராகு - கேது என்றாலே மக்களுக்கு ஏற்படக்கூடியது ஒரு பயமும் பதற்றமும் தான்.
ஆனால், ராகு - கேதுக்கள், இரு துருவங்களாக செயல்பட்டு பூர்வ புண்ணியத்தின் கர்ம வினைகளை, இடத்திற்கு அல்லது வயதிற்கு தகுந்தாற்போல் அதனுடைய பாவபலன்களை அப்படியே கொடுக்கும்.
தாத்தா - பாட்டியின் பிரதிபலிப்பே ஒரு மனிதனுடைய பூர்வ புண்ணியமாக கருதப்படுகிறது.
தாத்தா - பாட்டியின் செயல்களே, பேரன் பேத்தி அனுபவிப்பார்கள்.
தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், கர்ம வினைகள் குறிப்பிட்ட காலத்தில் நல்லவைகளையும், குறிப்பிட்ட காலத்தில் தீயவைகளையும், உணர்த்துவதிலும் உணர வைப்பதிலும் ராகு - கேதுக்களே முதன்மையானது.
ஒருவருடைய மன நிலையில் அகம் - புறம் சார்ந்த செயல்பாடுகளிலும் கூட ராகு - கேதுக்களின் பங்கு அதிகமுண்டு.
வெளிப்புற பொருட்கள் வாங்குவதில், ஏற்படக்கூடிய, எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகள், பேராசைகள் காரணத்தால், உடலின் புறப்பொருட்கள் மூலமாக தண்டனை அனுபவிப்பார். இதுவே ராகுவின் தன்மை, இது ஒரு மாயை.
உதாரணமாக, பேனா வாங்க வேண்டும் என்று மாணவனுக்கு ஆசை. ஆனால், பணம் அப்பாவிடம் கேட்டால் திட்டுவார் என்ற மனநிலை.
இந்த நிலைகளையும், ஒரே நேரத்தில், ஸ்தம்பித்து, ஒருவருடைய ஆசையையும், ஆசையினால் ஏற்படக்கூடிய நிகழ்வுகளையும், ஒப்பீடு செய்து, ஒரு குழப்ப நிலையை, ஏற்படுத்துவதில் இந்த ராகு - கேதுக்களின் பங்கு அதிகமுண்டு.
அகப்பொருளில், ஆத்ம நிலையை அடைய முயற்சிப்பதும், அதனால் ஏற்படக்கூடிய மன அழுத்தம், சித்தப் பிரமை நிலையை ஏற்படுத்தி, ஒரு மயக்க நிலையை கொண்டு வரும். இவை அனைத்தும் கேதுவின் தன்மையே.
இதுவும் கூட ஒரு மாயையின் வெளிப்பாடுதான்.
ஆக, புறத்தன்மை மற்றம் அகத்தன்மையிலும் ஏற்படக்கூடிய மாயைகளுக்கு ராகு மற்றும் கேதுக்களின் பங்களிப்பு அதிகம் எனச் சொல்லலாம்.
ராகு – கேது தோஷம் பற்றி
இன்றைய நவீன உலகத்தில், பல திருமண வாழ்க்கையில், ஜாதக குறிப்பில் ராகு கேது தோஷம் என குறிப்பிடப்படுள்ளது.
ராகு - கேது தோஷம் என்பது பொதுவாக, எதிர்பார்ப்புகள், இல்லாத ஒன்றை கற்பனையாக இருப்பதுபோல் எண்ணுதல், அதீத ஆசைப்படுதல் ஆகிய ஒரு மாய பிம்பம் போன்ற குணங்களை குறிப்பது ராகுவின் தன்மையாகவும்,
கேது என்பது எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத, மற்றவர்கள் அனுபவிப்பதை பார்த்து தன் மனதிற்குள் பொங்குதல், இருப்பதை உணராதது, தன்னிடம் உள்ள குறைகளை மட்டுமே காண்பது, மற்றவர்களுடன் ஒப்பிடுதல், இவை எதுவும் வெளியில் தெரியாமல் இருத்தல், தனக்குத் தானே சூன்யம் வைத்து கொள்ளுதல் போன்ற தன்மைகள் என குறிப்பிடலாம்.
பாரம்பரிய ஜோதிடத்தில் லக்னத்திலோ, இரண்டிலேயோ, ஏழிலேயோ, அல்லது 8-ல் இருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள, எதிர்பார்ப்பு இருக்க வேண்டாத இடத்தில் அதீத எதிர்பார்ப்பும்,
எதிர்பார்ப்பு இருக்க வேண்டிய இடத்தில் எதிர்பார்ப்பே இல்லாமலும், இந்த ராகு கேதுக்கள் திருமணத்தில் பங்களிப்பு அதிகமாக எடுத்துக் கொண்டு, தோஷமாக கருதப்படுகிறது.
ஆனால், எதிர்பார்ப்பு இருக்க வேண்டாத இடத்தில் எதிர்பார்ப்பு இல்லாமலும், எதிர்ப்பார்ப்பு இருக்க வேண்டிய இடத்தில் தேவையான அளவுக்கு எதிர்பார்ப்புடனும் இருந்தால், திருமண வாழ்வு சிறக்கும்.
உதாரணமாக, ஒரு ஆண் வரதட்சணையாக 100 சவரன் தங்க நகை வேண்டும் என பேராசைப்படுகிறான்.
அப்போது அந்த திருமணம் தடையாகிறது. ஒரு ஜாதகர், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், நல்ல வரன் அமைந்தால் போதும் என்பதால், எதிர்பாலினர் ஆணிடமோ பெண்ணிடமோ ஏதோ குறை உள்ளது என்ற சந்தேகத்திற்கு ஆளகிறார்கள்.
அதுவே மிகப் பெரிய தடையாகிறது. ஆக, பேராசையும், சந்தேகமும் ராகு கேதுக்களுடைய தன்மையாக மிகப் பெரிய தடையை ஏற்படுத்துகிறது.
ஆனால், இன்றைய வளர்ச்சியின் காரணத்தால், திருமண பொருத்தத்தில் ராகு கேதுக்களின் பங்களிப்பு அதிகமாக இருப்பதால், பல ஆண்கள் மற்றும் பெண்களின் திருமண வாழ்க்கை ஒரு கேள்வி குறியாகவே உள்ளது.
ஒருவர் கேட்ட கேள்வி, "ஜென்ம லக்னத்தில் ராகு கேது இருப்பதால், தோஷம் என்று சொன்னார்கள், ஆனால், திருமணம் தகுந்த காலத்தில் நடந்து, திருமண வாழக்கை நன்றாகவே இருக்கிறார்களே,
மேலும் வேறு ஒருவருடைய, ஜாதகத்தில் ராகு கேது தோஷமே இல்லை, ஆனால் திருமண வாழ்க்கை எதிர்பார்த்த மாதிரி நல்லவிதமாகவும் இல்லை, அது எப்படி, எதனால்" என்று கேட்டார்.
அப்படி, திருமணமாகி பிரச்சினையான ஜாதகமும் இருக்கிறது. அதற்கு ராகு கேதுவின் தாக்கம் தான் காரணம், என்றே தவறான புரிதலில் இருக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்து, சரியான புரிதலுடன் இருக்க வேண்டியது மிக அவசியம்.
ஜென்ம லக்னத்தில், ராகுவோ, கேதுவோ லக்னத்தில் இருந்தால், ராகு கேது தோஷத்தால், திருமணம் பாதிக்கும் என்ற கூற்று நிலவி வருகிறது. ஆனால் அது உண்மையல்ல.
கிரகங்கள் கொடுத்து கொண்டேதான் இருக்கும். அதை வாங்குவதற்கான, நம்பிக்கை இல்லாமையும், பொறுமை இல்லாமையும், இயலாமையும்தான் ஒரு காரணிகளாக ஒரு மனிதனுடைய வாழ்க்கையை பாதிப்புக்குள்ளாக்குகிறது எனலாம்.
உதாரணமாக, நன்றாக படிக்கக் கூடிய மாணவனை, உனக்கு புரியாது மற்றும் உனக்கு முடியாது, நீ அடி முட்டாள் என்று திரும்ப திரும்ப சொல்லும்போது,
அந்த மாணவன் மன அளவிலும் உடல் அளவிலும், சோர்வு தன்மையும், மறதியும், தன்னை ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாக்கிக்கொண்டு விளங்குவதையும்,
அதே வகுப்பில் ஒரு சராசரி குழந்தையை உன்னால் முடியும், நீ முயற்சி செய், கண்டிப்பாக உன்னால் வெற்றி பெற முடியும் என்று சொல்லும் போது, மிகப் பெரிய புத்திசாலியாவதையும் பார்க்கலாம்.
இந்த நிகழ்வில், ராகு - கேது பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை பார்ப்போம்.
நல்லவித எண்ணங்களாலும், வார்த்தைகளாலும் ஒருவரை நல்லவராகவும், திட்டும் போது கெட்டவராகவும் எதிரியாகவும் மனம் பாவிக்கும்.
அதேபோல்தான், இந்த ராகு கேதுக்கள், கொடுக்கமாட்டார், துன்புறத்துவார், கஷ்டங்களை கொடுப்பார் என்று கிரகங்களை சொல்லும் போது, இந்த எதிர்மறையான வார்த்தைகளும், எண்ணங்களும் ஒருவர் மனங்களில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துமோ, அதே போல் கிரகங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மக்களின் அதிருப்திக்கு காரணம் அவர்களுடைய எதிர்பார்ப்பின் அளவுகோலே. ஆனால், ராகு கேதுக்கள் அதீத யோகத்தை தரக் கூடியவர்களே.
- வியாழனுக்குரிய சிவத்தலம்-ஆலங்குடி வைணவத்தலம்-ஆழ்வார் திருநகரி
- அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும்.
நவ திருத்தலங்கள்
சூரியன்
சிவத்தலம் -சூரியனார் கோயில்
வைணவத்தலம்-திருவைகுண்டம்
சுக்கிரன்
சிவத்தலம்-கஞ்சனூர்
வைணவத்தலம்-தென் திருப்போரை
புதன்
சிவத்தலம்-திருவெண்காடு
வைணவத்தலம்-திருப்புளியங்குடி
செவ்வாய்
சிவத்தலம்-வைதீஸ்வரன்
வைணவத்தலம்-திருக்கோளூர்
கேது
சிவத்தலம்-கீழப்பெரும் பள்ளம்
வைணவத்தலம்-இரட்டை திருப்பதி
சனி
சிவத்தலம்-திருநள்ளாறு
வைணவத்தலம்-திருக்குளந்தை
வியாழன்
சிவத்தலம்-ஆலங்குடி
வைணவத்தலம்-ஆழ்வார் திருநகரி
சந்திரன்
சிவத்தலம்-திங்களூர்
வைணவத்தலம்-வரகுணமங்கை
ராகு
சிவத்தலம்-திருநாகேசுவரம்
வைணவத்தலம்-இரட்டை திருப்பதி
எத்தனை சுற்று சுற்றுவது?
நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும்.
அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாக சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும்.
அது எத்தனை சுற்று தெரியுமா?
சூரியன்10 சுற்றுகள்
சுக்கிரன்6 சுற்றுகள்
சந்திரன்11 சுற்றுகள்
சனி8 சுற்றுகள்
செவ்வாய்9 சுற்றுகள்
ராகு4 சுற்றுகள் அடிப்பிரதட்சிணம்
புதன்5, 12, 23 சுற்றுகள்
கேது 9 சுற்றுகள்
வியாழன்3, 12, 21 சுற்றுகள்
- வளர்பிறை அஷ்டமியில் இந்த பூஜையை செய்வதால் நிம்மதியாக வாழலாம்.
- பைரவருக்கு ஏலக்காய் மாலை செலுத்தலாம்.
பிரச்சனைகளை தீர்க்கும் ஞாயிற்றுக்கிழமை காலபைரவர் வழிபாடு
ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் அல்லது ராகு காலத்தில் ருத்திர அபிஷேகம், மிளகு வடை மாலை சாற்றி ஒரு பூசணி மிளகு தீபம் அல்லது மற்ற பழங்களில் மிளகு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் பாக்கியம் கிட்டும்.
ஜாதக கர்ம வினைகள் அகலும், காரியத்தடைகள் நீங்கும், நினைத்தது கைகூடும், எதிரி வசியமாவார், மறைமுக எதிரிகளும் பைரவரை பூஜிப்பதால் மறைந்து விடுவார்கள்.
கடன் தொல்லை தீர
கடன் வாங்கி வட்டி, அசல் கட்ட இயலாதவர்கள் ஞாயிறு ராகு காலத்தில் காலபைரவருக்கு முந்திரி பருப்பு மாலை கட்டி, செந்தாமரை பூ அணிவித்து, கேரட் அல்வா, கோதுமை அரிசி பலகாரம், அவல், கேசரி, சிவப்பு ஆப்பிள் படையலிட்டு, புனுகு சாற்றி வெண்பொங்கல் நைவேத்யமிடவும்.
ஒரு தலைவாழை இலை வைத்து அதன் மீது நெல் 1 படி பிரப்பி அதன் மீது ஒரு தலைவாழை இலை வைத்து பச்சரிசி 1 படி குங்குமம் சிறிதளவு மஞ்சள்பொடி, நெய் கலந்து பரப்பி அதைச்சுற்றிலும் ஐந்து எண்ணெய், சிறிதளவு மஞ்சள்தூள் கலந்து முப்பது பழங்களில் மிளகு தீபம் ஏற்றி ஸ்ரீ சொர்ண பரைவரை வழிபடலாம்.
இந்த வழிபாட்டை செய்யும் போதுபைரவி தேவி காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து, ஸ்ரீபைரவரை ஒன்பது வாரம் தொடர்ந்து அஷ்டோத்திர அர்ச்சனை செய்து வழிபட செல்வ செழிப்பைப்பெறலாம்.
பணம் குவியும், அஷ்ட ஐஸ்வர்யமும் பெறலாம்.
பெரிய பழங்களில் தீபம் ஏற்ற முடியவில்லை என்றால் சிறிய பழங்களில் ஏற்றலாம். அல்லது சிறிய வெங்கல கிண்ணத்தில் முப்பது மிளகைத்தூள் செய்து தீபம் ஏற்றலாம் அல்லது ஒரு பூசணியில் மிளகு தீபம் ஏற்றலாம்.
இந்த விசேஷ பரிகாரத்தை மாதம் ஒரு முறை வரும் ஜனம அல்லது த்ரிஜன்ம நஷத்திரம் அன்றும் செய்வது சாலச்சிறந்தது.
மற்றும் பவுர்ணமியும், வளர்பிறை அஷ்டமி நாளிலும் இந்தப் பூஜையை செய்வதால் நிம்மதியாக வாழலாம்.
நமது கவலைகள் பிரச்சினைகள், ஏக்கங்கள், சோகங்கள், இப்படி அனைத்தையும் போக்குவதற்கு ஓர் அரிய உபாயம் இந்த பூஜை.
ஸ்ரீ ஸ்வர்ணபைரவர் மந்திரம் ஜபிக்கும்போது, ஏலக்காய் சிறிதளவு குங்குமம், மஞ்சள், நெய் கலந்து முத்துக்களால்பைரவர் திருவடியில் அர்ச்சனை செய்யலாம்.
பைரவருக்கு ஏலக்காய் மாலை செலுத்தலாம். ஒரு பிடி ஏலக்காயை பைரவர் பாதத்தில் வெற்றிலை மேல் வைக்கலாம் கடன் தீர்ந்து பலன் உடனே கைகூடும்.






