என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP"

    • சீன கம்யூனிஸ்ட் கட்சி குழுவினர் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர்.
    • சீனக்குழுவினர் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபாலேவை சந்தித்துப் பேசினர்.

    புதுடெல்லி:

    சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குழுவின் சர்வதேச துறையின் துணை மந்திரி சன் ஹையன் தலைமையிலான குழு டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்குச் சென்றது. அங்கு பா.ஜ.க. பொதுச் செயலாளர் அருண்சிங் தலைமையிலான குழுவுடன் ஆலோசனை நடத்தியது. மேலும் சீன குழுவினர் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபாலேவையும் சந்தித்துப் பேசினர்.

    இந்நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கேரா கூறியதாவது:

    சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பா.ஜ.க, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கு இடையே மூடிய அறைக்குள் நடந்த சந்திப்பின் போது பேசப்பட்டது என்ன என்பது குறித்து பகிரங்கமாக வெளியிட வேண்டும்.

    மத்திய அரசு சாராத ஆர்எஸ்எஸ் அமைப்பை அரசு கொள்கையைக் கட்டுப்படுத்த அனுமதிக்கப்படக் கூடாது.

    எந்தவொரு அரசியல் கட்சியும் வேறொரு நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல் கட்சியுடன் சந்திப்பதில் அல்லது உரையாடலில் ஈடுபடுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

    பல ஆண்டுகளாக, சீனாவுடன் காங்கிரஸ் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக பாஜ கூச்சலிட்டு வந்தது. இப்போது அவர்களே மூடிய அறைக்குள் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இதுபோன்ற கூட்டங்களின்போது மீண்டும் மீண்டும் சீன மீறல்கள் குறித்த பிரச்சனையை பா.ஜ.க. எழுப்புகிறதா? லடாக் எல்லையிலும், எல்லை கட்டுப்பாட்டு பகுதியிலும் 2020க்கு முந்தைய நிலையை மீட்டெடுப்பது பற்றி அவர்கள் பேசுகிறார்களா? எல்லைக் கட்டுப்பாடு அருகே சீன ராணுவ கட்டுமானம் மற்றும் கிராமங்களை கட்டுவது அதிகரித்து வருகிறதே?

    உண்மையில், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாஜவின் 'லால் சலாம்' ஆகிவிட்டன. மோடி அரசில் நமது பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை கடுமையாக சமரசம் செய்யப்பட்டுள்ளன.

    இந்தியாவின் தேசிய நலன்களை சேதப்படுத்துவது பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கையின் சாராம்சமாகிவிட்டது.

    சீன வெளியுறவு மந்திரி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை போலவே, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த அவர்கள் தலையிட்டதாகக் கூறினார். ஆனால் இந்த விவகாரத்தில் மோடி முழுமையான மவுனத்தைக் கடைப்பிடித்து வருகிறார்.

    மோடி சீன கம்யூனிஸ்ட் குழுவை பா.ஜ.க. அலுவலகத்திற்கு அழைத்துள்ளார். பா.ஜ.க, சீன கம்யூனிஸ்ட் குழுவுடன் தொடர்ச்சியான உறவைப் பேணி வருகிறது என தெரிவித்தார்.

    • 45 வயதான நிதின் நபின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
    • ஐந்து முறை எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    பாஜக-வின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா இருந்து வருகிறார். இவரது பதிவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் மாற்று தலைவர் தேர்வு செய்யப்படாமல் உள்ளது. பீகார் மாநிலத்தில் இருந்து 5 முறை எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிதின் நபி கடந்த ஆண்டு பாஜக-வின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அக்கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 19-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

    இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றால், ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார். இல்லை என்றால், பாஜக தலைமையகத்தில் தேர்தல் நடைபெறும்.

    நிதின் நபி (வயது 45), மறைந்த முன்னாள் பாஜக தலைவர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. நபின் கிஷோர் பிரசாத் சின்ஹா மகன் ஆவார். நிதின் நபின், சித்தாந்த ரீதியாக ஆழமான வேரூன்றியவரும், அமைப்புக்கு முழுமையாக அர்ப்பணிப்பு கொண்டவருமான ஒரு ஆற்றல்மிக்க தலைவர் என்று பாஜக கருதுகிறது. மேலும், இவர் ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து வந்தவர்.

    ஜே.பி. நட்டா 2019-ம் ஆண்டு பாஜக-வின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். அமித் ஷாவின் தேசிய தலைவர் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், 2020 ஜனவரியில் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

    • பாஜக மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது" என்று விஜய் சௌதாய்வாலே தெரிவித்தார்.
    • "சீனா தனது சொந்த நிலப்பரப்பில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளது. இதில் மற்ற நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.

    சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு டெல்லியில் உள்ள பாஜக தேசியத் தலைமையகத்திற்கு நேற்று வருகை தந்தனர்.

    பாஜக தலைமையகத்தில் வைத்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறையின் துணை அமைச்சர் சுன் ஹையான் தலைமையிலான குழுவினரும், பாஜக சார்பில் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் மற்றும் வெளியுறவுத் துறை பொறுப்பாளர் விஜய் சௌதாய்வாலே ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    "பாஜக மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது" என்று விஜய் சௌதாய்வாலே தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

    2018-ல் ராகுல் காந்தி சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ரகசிய ஒப்பந்தம் செய்ததாக பாஜக குற்றம் சாட்டியிருந்தது. அதே நேரத்தில் எல்லையில் சீன ஆக்கிரமிப்பு குறித்துப் பிரதமர் மௌனம் காப்பதாகக் காங்கிரஸ் விமர்சித்தது.

    இத்தகைய சூழலில், எல்லையில் 20 இந்திய வீரர்கள் சீன ராணுவத்தால் கொல்லப்பட்ட 2020 கல்வான் தாக்குதலுக்கு பிறகு பாஜக - சீன கம்யூனிஸ்ட் கட்சி இடையே நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இதனிடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ள ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சீனாவுக்கு தான் சொந்தம் என அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் இன்று தெரிவித்துள்ளதும் தெரிவித்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே ஏற்பட்ட எல்லை ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சீனாவிற்கு வழங்கப்பட்டது.

    சீனா இந்தப் பள்ளத்தாக்கில் நிரந்தர சாலைகள் மற்றும் ராணுவத் தளவாட கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது.

    இது காரகோரம் மலைத்தொடருக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. இதனால் இந்திய வெளியுறவுத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங், "சீனா தனது சொந்த நிலப்பரப்பில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளது. இதில் மற்ற நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.

    1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படியே இப்பகுதி சீனாவிற்கு வழங்கப்பட்டது. எனவே அது அது சட்டப்பூர்வமானது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பது, வரலாற்று உண்மைகளை மறைக்கும் முயற்சி" என்று தெரிவித்தார். 

    நேற்று சீன கம்யூனிஸ்ட் கட்சியினர் பாஜக தலைமையகம் வருகை, இன்று ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு தங்களுக்கு சொந்தம் என சீனா கூறியுள்ளது ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் தரப்பிலும், சமூக வலைத்தளங்களிலும் கருத்துக்கள் பரவி வருகின்றன. 

    மகாராஷ்டிராவின் சரத் பாவர் தேசியவாத காங்கிரஸ் முக்கிய தலைவர் சுப்ரியா ஸ்ரீநாடே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜம்மு காஷ்மீரின் ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கை சீனா தனது பிராந்தியமாக அறிவித்துள்ளது.

    கடந்த சில நாட்களாக சீனா இங்கு சிபிஇசி திட்டத்தின் பெயரில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. லடாக்கிற்குப் பிறகு, சீனா எப்படி இங்கு நுழைந்தது?

    சீனா இவ்வளவு அத்துமீறல்களில் ஈடுபடுகிறதா? பாஜக தலைவர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் சந்திப்பு நடத்துகிறார்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.

    • சில கட்சிகள் தேர்தலுக்காக இலவசங்களை வாரி வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
    • மின்சாரம் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டால், எதிர்காலத்தில் மின்வெட்டு தவிர்க்க முடியாததாகிவிடும்.

    தற்காலிக இலவசங்களை வழங்குவதை விட மக்களைச் சுயமாக முன்னேற்றுவதற்கே பிரதமர் மோடி முன்னுரிமை அளிப்பதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

    அண்மையில் குஜராத்தில் நடந்த பொருளாதார மாநாட்டில் பேசிய அவர், சில கட்சிகள் தேர்தலுக்காக இலவசங்களை வாரி வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால், அத்தகைய அரசியல் நீண்ட காலப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும்.

    பிரதமர் மோடி ஒருபோதும் தேர்தலுக்காகவோ அல்லது வாக்குகளுக்காகவோ தற்காலிகமான இலவச வாக்குறுதிகளை அளிப்பதில்லை.

    அதற்குப் பதிலாக, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதையே அவர் இலக்காகக் கொண்டுள்ளார்.

    உதாரணமாக சூர்யாகர் திட்டத்தின் கீழ், சூரிய சக்தி பேனல்களை நிறுவுவதற்கு நுகர்வோர் சில செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கும்.

    அத்தகைய திட்டங்களில் மக்களின் தனிப்பட்ட பங்களிப்பு இருக்க வேண்டும். அரசாங்கம் எல்லாவற்றையும் செய்யும் என்று மக்கள் எதிர்பார்க்கக்கூடாது, அரசாங்கத்தை முழுமையாக நம்பியிருக்கக்கூடாது.

    ஒரு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட, அரசாங்க ஆதரவுடன், குடிமக்களின் பங்களிப்பும் அவசியம். மின்சாரம் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டால், எதிர்காலத்தில் மின்வெட்டு தவிர்க்க முடியாததாகிவிடும் " என்று தெரிவித்தார். 

     

    • தேர்தல் நேரத்தில் மட்டுமே சில தலைவர்களின் குரல் உயர்கிறது.
    • பாஜக ஆட்சியில் மாநகராட்சியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாலம் திட்டத்தைச் செலவு கணக்கில் 7 கோடி ரூபாயாக உயர்த்தியது

    மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணியில் உள்ள பாஜக - அஜித் பவார் தலைமையிலான என்சிபி இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

     ஆளும் கூட்டணியில் ஒன்றாக இருந்தாலும், எதிர்வரும், மும்பை, புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் மாநகராட்சித் தேர்தலில் பாஜக ஓரணியாகவும் மற்றும் அஜித் பவார் என்சிபி, இந்தியா கூட்டணியில் உள்ள சரத் பாவர் என்சிபியுடன் கூட்டணி வைத்து எதிராணியாகவும் போட்டியிடுகின்றன.

    இந்நிலையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய பஜகவை சேர்ந்த மகாராஷ்டிர முதல்வர் பட்நாவிஸ், "தேர்தல் நேரத்தில் மட்டுமே சில தலைவர்களின் குரல் உயர்கிறது. அஜித் தாதா வெறும் பேச்சிலேயே நேரத்தை வீணடிக்கிறார், ஆனால் நான் களத்தில் வேலை செய்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

    பட்நாவிஸின் கருத்துக்குப் பதிலளித்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், "நான் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை, அரசின் தோல்விகளை மட்டுமே சுட்டிக்காட்டுகிறேன்.

    சின்ச்வாட் மாநகராட்சியில் பாஜக செய்த ஊழல்கள் மற்றும் தவறுகளைச் சொல்வது விமர்சனம் ஆகாது" என்று கூறினார்.

    மேலும், பாஜக ஆட்சியில் பிம்ப்ரி-சின்ச்வாட் மாநகராட்சியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாலம் திட்டத்தைச் செலவு கணக்கில் 7 கோடி ரூபாயாக உயர்த்தியது உட்படப் பல முறைகேடுகளை அஜித் பவார் கூறியுள்ளார். ஒரு மாநிலத்தின் துணை முதல்வர், முதல்வரின் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டு வைப்பது பேசுபொருளாகி உள்ளது. 

    • திமுகவின் ஊழல், குடும்ப அரசியல், மற்றும் போலி மத அரசியல் மக்கள் மனதில் தீராத வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
    • சனாதன நாகரிகச் சிந்தனையில் வேரூன்றிய எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்வோம்

    பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின், 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கோவை வந்தார். இன்று 2-வது நாளாக அவர் கோவையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ள அவர், 

    'சனாதன பண்பாட்டிற்கு ஒரு மகத்தான, பெருமைமிக்க வரலாறு உள்ளது. அதற்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு உண்மையிலேயே ஒப்பற்றது. இந்தியாவின் ஆன்மா உலகத்திடம் உரையாடிய புண்ணிய பூமி. 1892 ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் உள்ள கடற்கரைப் பாறையில் சுவாமி விவேகானந்தர் மேற்கொண்ட தியானம், ஒரு ஆன்மிக சாதனை மட்டுமல்ல; அது இந்திய மறுமலர்ச்சியின் பிரகடனமாகும். இங்கிருந்தே அவர் தேசத்தின் எழுச்சிக்கான உறுதியை எடுத்துக் கொண்டு, சனாதன சிந்தனையை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றார்.

    இன்று பிரதமர் மோடியும், தமிழ் மொழிக்கும், தமிழ் பண்பாட்டிற்கும் உலகளாவிய அங்கீகாரத்தை வழங்கி வருகிறார். காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகள், நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது மூலம் தமிழர் பெருமையை நிலைநாட்டியது , திருக்குறளின் போதனைகளையும், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கருத்துகளையும் தேசிய சிந்தனையுடன் இணைப்பது ஆகியவற்றின் மூலம், தமிழின் பெருமை இமாலய உச்சத்தை எட்டியது.

    பிரதமர் தலைமையில், ராமர் கோயில், காசி விஸ்வநாதர் வழித்தடம், சோமநாத், மத்திய பிரதேசத்தின் மகாகால் லோக் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களின் மூலம், இந்தியா ஒரு முழுமையான மத-பண்பாட்டு மறுமலர்ச்சியை கண்டுள்ளது. இது பாரதத்தின் பண்டைய ஆன்மிக இறையான்மையும் தேசிய விழிப்புணர்வையும் மீட்டெடுப்பதில் ஒரு சகாப்தம் படைக்கும் தருணமாகும்.

    ஆனால் அதே சமயம், தமிழ்நாட்டின் இந்த மகத்தான பாரம்பரியம், திமுக ஆட்சியின் கீழ் அவமதிக்கப்படுகிறது. தமிழ் கடவுளான முருகனுக்கு தீபம் ஏற்றுதல் முதல் இந்து நம்பிக்கைகளை சிதைப்பது வரை, சனாதன வேள்விகள் தொடர்ந்து கேலி செய்யப்படுகின்றன. ஊழல், குடும்ப அரசியல், மற்றும் போலி மத அரசியல் மக்கள் மனதில் தீராத வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    ராமசேதுவை எதிர்த்ததன் மூலம் காங்கிரஸ் தன் வீழ்ச்சிக்கான விதைகளை விதைத்தது போல, கோயம்புத்தூரின் புனித மண்ணிலிருந்து நான் உறுதியாக கூறுகிறேன்—சனாதன மரபுகளை தொடர்ந்து இகழும் திமுகவின் அரசியல் வீழ்ச்சி இம்மண்ணிலிருந்து துவங்கும்.

    ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழ்நாடு விடுபட்டு, நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி; வளர்ச்சி, பொறுப்புள்ள ஆட்சி, மற்றும் சனாதன நாகரிகச் சிந்தனையில் வேரூன்றிய எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்வோம்..! வாழ்க தமிழ்நாடு..! வளர்க பாரதம்..! " எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • உள்ளூர் பிரச்சனையை கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும்
    • சனாதன தர்மம், காசி தமிழ் சங்கம், ராமருக்கு எதிராக செயல்பட்ட விரோத சக்தியை முழுமையாக தோற்கடிக்க வேண்டும்

    பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின், 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கோவை வந்தார். இன்று 2-வது நாளாக அவர் கோவையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இன்று காலை நிதின்நபின், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டில் நடந்த நம்ம ஊரு மோடி பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டார்.

    பொதுமக்களுடன் சேர்ந்து அவர் உற்சாகமாக பொங்கலிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். விழாவையொட்டி அங்கு ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள் நடந்தது. ஆட்டம்- பாட்டத்துடன் பொங்கல் விழா நடந்தது. முன்னதாக கோவை முதலிபாளையத்தில் கோவை கோட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், நிதின் நபின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    'பா.ஜ.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் பணியால் பீகார், குஜராத், மத்திய பிரதேசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்று உள்ளோம். இங்கு கோவை மண்டலத்துக்கு உட்பட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த 39 சட்டசபை தொகுதியில் உள்ள பொறுப்பாளர்கள் கூட்டம் நடக்கிறது. இங்கு 80 சதவீதம் பூத் சிறப்பாக கட்டமைக்கப்பட்டு உள்ளது. இது நமக்கான வெற்றியை அளிக்கும்.

    ஆபரேஷன் சித்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து உள்ளோம். இந்த தேர்தலில் உங்களின் பணியால் தி.மு.க.வை தோற்கடிப்போம். வெற்றியை நினைத்து அலட்சியமாக இருக்கக் கூடாது. விவேகானந்தர் கூறியது போல இலக்கை அடையும் வரை பணியாற்ற வேண்டும். சனாதன தர்மம், காசி தமிழ் சங்கம், ராமருக்கு எதிராக செயல்பட்ட விரோத சக்தியை முழுமையாக தோற்கடிக்க வேண்டும். இந்து விரோத சக்தியை முறியடிக்க வேண்டும்.

    பிரதமர் மோடி தலைமையில் பெண்கள் பலத்தை அதிகரிக்க பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்ற சட்டம் கொண்டு வந்து இருக்கிறோம். தமிழ்நாடு பெண்களின் முன்னேற்றம், மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தி.மு.க. அரசின் பிரதான தோல்வியை கையில் எடுத்து பிரசாரம் செய்ய வேண்டும். தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான கருத்துகளை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இந்த ஆட்சியை வீழ்த்த வேண்டும். நாம் உள்ளூர் பிரச்சனையை கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்." இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-

    'பா.ஜ.க. கூட்டணி வலுவிழந்து இருப்பதாகவும், பலர் வெளியேறுவதாகவும் தொடர்ந்து என்னிடம் நிருபர்கள் கேள்வி கேட்டு வந்தனர். இந்நிலையில், கூட்டணியில் தற்போது பா.ம.க. இணைந்து அவர்களுக்கான பதிலை அளித்துள்ளது. பொங்கல் முடிந்த பிறகு மேலும் சில கட்சிகள் கூட்டணிக்கு வர இருக்கிறது. தி.மு.க.வில் உள்ள கூட்டணிகள் வெளியேறும். அடுத்த 80 நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

    பா.ஜ.க. கட்சியின் ஆணி வேராக பூத் கமிட்டி உள்ளது. இன்று முதல் தேர்தல் முடியும் வரை ஒவ்வொரு பூத் கமிட்டி பொறுப்பாளர்களும், சிறப்பாக வேலை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் பூத் கமிட்டி நிறைவாக உள்ளது. இது மிக முக்கியமான தேர்தல். கடந்த 2021 தேர்தலில் சரிவு வந்தது. அதுபோல வரும் தேர்தலில் நடந்துவிடக் கூடாது. கொங்கு மண்டலம் பா.ஜ.க.வின் எக்கு கோட்டை என்பதை நிருபிக்க வேண்டும்.'

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காங்கிரஸ் கட்சி கரைந்து வரும் கட்சி.
    • தேசிய ஜனநாயக கூட்டணி மிகப் பெரிய வெற்றி அடையும்.

    தமிழக பா.ஜ.க துணை தலைவர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

    நாட்டின் ஆத்மாவாக இருப்பவர் மகாத்மா என்பதை எல்லோரும் அறிவோம். காங்கிரஸ் கட்சி அரசின் திட்டங்களுக்கு சோனியா குடும்ப பெயரை மட்டுமே சூட்டி பெருமைப்படுகிறது. ஆனால் பிரதமர் மோடி எந்த திட்டமாக இருந்தாலும் சரி, பிரதம மந்திரி திட்டம் என்றுதான் அறிவித்து வருகிறார். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தையும் 125 நாட்களாக அதிகரித்து உள்ளார்.

    அதைப்பற்றி எல்லாம் காங்கிரஸ்காரர்கள் பேச மாட்டார்கள். நாட்டுக்காக உழைத்த எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் வல்லபாய் படேல், வ.உ.சிதம்பரனார் என்று பலரை சொல்லலாம். அவர்களின் பெயர்களை எல்லாம் வைக்க சொல்லி போராடலாமே.

    இது மக்களை ஏமாற்றுவதற்காக காங்கிரஸ் நடத்தும் போராட்டம். நாட்டில் இப்போது மக்கள் விரும்பாத கட்சியாக காங்கிரஸ் கட்சி மாறிவிட்டது.

    எனவே அவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. நாட்டில் காங்கிரஸ் ஆட்சியின்போது தான் மிகப்பெரிய ஊழல் அரங்கேறியது. மிக கொடூரமான தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன. இன்று நாடு அமைதியாக இருக்கிறது. உலகம் முழுவதும் இந்தியாவுக்கு மோடி பெருமை சேர்த்து உள்ளார்.

    காங்கிரஸ் கட்சி கரைந்து வரும் கட்சி. இப்போது கூடுதல் தொகுதிகள் கேட்பதாக தகவல்கள் வருகிறது. அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் எல்லாம் ஜெயிப்போம் என்று சொல்ல முடியுமா? தேர்தல் நேரத்தில்தான் தி.மு.க. மக்களைப் பற்றி யோசிப்பது போல் பாசாங்கு காட்டுவார்கள்.

    ஆசிரியர்கள் போராட்டம், தூய்மை பணியாளர்கள் போராட்டம், அரசு ஊழி யர்கள் போராட்டம், டாக்டர்கள் போராட்டம் என்று பலரும் தங்கள் உரிமைகளுக்காக போராடுகிறார்கள். அவர்களைப் பற்றி எல்லாம் இதுவரை யோசிக்காத தி.மு.க. தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றப் பார்க்கிறது.

    தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான குடும் பங்கள் மாதந்தோறும் ரேஷன் கடைகளில் சென்று பொருட்கள் வாங்குகின்ற னர். ஆனால் இப்போது தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் அவர்களைப் பற்றி யோசிப்பது போல் வெளிக் காட்டுவதற்காக பணத்தை கொடுத்து ஏமாற்றப் பார்க்கிறார்கள்.

    ஆனால் இந்த முறை மக்கள் ஏமாறமாட்டார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி மிகப் பெரிய வெற்றி அடையும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொங்கு மண்டலத்திற்கு தேசிய செயல் தலைவர் வருகை புரிந்து இருப்பது கூடுதல் உற்சாகத்தையும் பலத்தையும் கொடுத்துள்ளது.
    • சமத்துவ பொங்கல் என்று இல்லாத ஒன்றை முதலமைச்சர் கொண்டாடி வருகிறார்.

    கோவையில் இன்று நடந்த நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் பங்கேற்ற வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அவர் கூறியதாவது:-

    நம்முடைய பண்டிகைகள் பாரத நாட்டின் கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்த நிகழ்வு ஆகும். முதன்முறையாக நம்ம ஊரு மோடி பொங்கல் நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் உற்சாகத்தோடு கலந்து கொண்டார்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு எந்த விதமான இந்துக்களின் பண்டிகைகளுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவிப்பதில்லை.

    பொங்கல் பண்டிகையின்போது மட்டும் சமத்துவ பொங்கல் என்ற ஒன்றை கொண்டாடுகிறார். அனைத்து பானைகளிலும் பஞ்சை வைத்து சிறுபான்மையினருடன் சேர்ந்து சமத்துவ பொங்கல் என்று இல்லாத ஒன்றை முதலமைச்சர் கொண்டாடி வருகிறார்.

    சிறுபான்மையின மக்கள் அவர்களது மதப் பண்டிகையை கொண்டாடுவார்கள். அதை நாங்கள் மதிக்கிறோம். வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் தமிழகத்திலேயே இல்லாத ஒன்றாக பொங்கல் பண்டிகையை கொண்டாடாதவர்களுடன் சேர்ந்து இந்து மக்களை ஏமாற்றுவதற்காக சமத்துவ பொங்கல் விழாவை முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்.

    பிரதமர் மோடி விரைவில் தமிழகம் வர உள்ளார். அதன்பின்னர் தேர்தல் பணிகள் வேகமெடுக்கும். கொங்கு மண்டலத்திற்கு தேசிய செயல் தலைவர் வருகை புரிந்து இருப்பது கூடுதல் உற்சாகத்தையும் பலத்தையும் கொடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    த.வெ.க. தலைவர் விஜய், டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜர் ஆவதற்காக கூடுதல் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு வழக்கமாக பாதுகாப்பு கேட்பது என்பது ஒரு நடைமுறை. ஆனால் நிச்சயமாக கரூரை விட நல்ல பாதுகாப்பு டெல்லியில் வழங்கப்படும் என வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.

    • பாஜக அமைச்சர் கபில் மிஸ்ரா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலானது.
    • மத உணர்வுகளைத் தூண்டிவிடுதல் மற்றும் போலித் தகவல்களைப் பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    டெல்லி சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் அதிஷி ஆற்றிய உரையின் ஒரு பகுதியை டெல்லி பாஜக அமைச்சர் கபில் மிஸ்ரா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலானது.

    அதில் அதிஷி சீக்கிய குரு தேக் பகதூரை அவமதித்ததாகக் கூறி கண்டனம் வலுத்தது. டெல்லி மற்றும் பஞ்சாப் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

    இதற்கிடையே அதிஷியின் உரையை எடிட் செய்து அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அந்த வீடியோ பரப்பப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி புகார் அளித்தது.

    பஞ்சாபில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மத உணர்வுகளைத் தூண்டிவிடுதல் மற்றும் போலித் தகவல்களைப் பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் டெல்லி பாஜக அமைச்சர் கபில் சர்மா மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வீடியோவின் உண்மைத்தன்மையைக் கண்டறிய தடயவியல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.   

    • முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பு அரசியல் நீண்ட காலம் நீடிக்காது என்றார்.
    • அசாதுதீன் ஒவைசியின் கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது, இந்தக் கூட்டத்தில் எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி பேசியதாவது:

    பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் மட்டுமே அந்நாட்டின் பிரதமர் அல்லது அதிபராக முடியும். ஆனால், சட்டமேதை அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்டம், இந்த நாட்டின் எந்தவொரு குடிமகனும் பிரதமர், முதல்-மந்திரி அல்லது மேயர் ஆக முடியும் என தெளிவாகக் கூறுகிறது.

    இறைவனின் அருளால் ஒரு நாள் வரும், அப்போது நானும், இந்த தலைமுறையும் இருக்க மாட்டோம். ஆனால், ஹிஜாப் அணிந்த ஒரு மகள் இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்பார். முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பு அரசியல் நீண்ட காலம் நீடிக்காது என தெரிவித்தார்.

    இந்நிலையில், அசாதுதீன் ஒவைசியின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.

    இதுதொடர்பாக, பா.ஜ.க. எம்.பி. அனில் போன்டே கூறுகையில், ஒவைசியின் பேச்சு பொறுப்பற்றது. எந்த ஒரு பெண்ணும் அடிமைத் தனத்தை விரும்புவதில்லை. முஸ்லிம் பெண்களே ஹிஜாப் அணிவதற்கு எதிராக இருக்கிறார்கள். ஈரான் போன்ற நாடுகளிலும் பெண்கள் இதற்கு எதிராகப் போராடி வருகின்றனர் என குறிப்பிட்டார்.

    • வாக்காளர்கள் பாஜக-வை ஆட்சிக்கு கொண்டு வர வாக்களிக்க தயாராகி வருகின்றனர்.
    • கேரளாவில் இந்த முறை ஆச்சரியங்கள் நிகழ வாய்ப்புள்ளது.

    பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் கேரளாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்க மாநிலங்களுடன் வருகிற மார்ச்- ஏப்ரல் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.

    இந்த நிலையில், கேரளாவில் பாஜக கூட்டணி அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் என பாஜக தலைவர் சோபா சுரேந்திரன் தனது நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான ஒரே வழி இதுதான் என்று கருதுவதால், வாக்காளர்கள் பாஜக-வை ஆட்சிக்கு கொண்டு வர வாக்களிக்க தயாராகி வருகின்றனர்.

    மத்தியில் உள்ள பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. அரசாங்கம் பெரும் வேகத்தில் செயல்பட்டு வரும் நிலையில், மாநிலத்தில் உள்ள இடதுசாரி அரசாங்கம் அதே வேகத்தை நிர்வாகத்தில் வெளிப்படுத்த தவறிவிட்டது. கேரளாவில் இந்த முறை ஆச்சரியங்கள் நிகழ வாய்ப்புள்ளது. பா.ஜ.க. கட்சி தலைமைச் செயலகத்தில் நுழைய மக்கள் தயாராகிவிட்டனர். அது நடந்தால், மாநிலத்தில் என்டிஏ-வின் இரட்டை எஞ்சின் அரசாங்கம் ஆட்சிக்கு வரும்.

    மாநிலத்தில் இரட்டை என்ஜின் அரசாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாநிலம் பெறும் ஆதாயங்கள் குறித்து மக்களிடம் விளக்கமாக எடுத்துக் கூறுவோம். கேரளாவில் என்டிஏ அரசாங்கத்தை அமைப்பதும், அம்மாநிலத்தில் ஒரு முதலமைச்சர் வேட்பாளரை முன்னிறுத்துவதும் பாஜகவின் நோக்கமாகும்.

    இவ்வாறு சோபா சுரேந்திரன் தெரிவித்தார்.

    ×