என் மலர்
அசாம்
- தண்டவாளத்தில் யானைகள் கூட்டம் இருப்பதைக் கண்டதும், ரெயில் ஓட்டுநர் அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தினார்.
- விபத்து குறித்து வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுகாத்தி:
மிசோரம் மாநிலம் சாய்ரங்கில் இருந்து புதுடெல்லிக்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இன்று அதிகாலை அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சுமார் 126 கி.மீ தொலைவில் சென்று கொண்டிருந்தது.
அப்போது தண்டவாளப் பகுதியில் யானைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தன. வேகமாக வந்த ரெயில் யானைகள் மீது மோதியது. இந்த விபத்தில் 8 யானைகள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. ஒரு குட்டி யானை படுகாயம் அடைந்தது. தகவல் அறிந்த மீட்பு குழுவினர் உடனடியாக வந்து படுகாயம் அடைந்த குட்டி யானைக்கு சிகிச்சை அளித்தனர்.
மேலும் இந்த விபத்தில் சில ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன. ஆனால் ரெயிலில் பயணம் செய்தவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படவில்லை. விபத்து நடந்த பகுதிக்கு நிவாரண ரெயில்கள் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் விரைந்தனர். யானைகள் வழித்தடமாக குறிப்பிடப்படாத இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தண்டவாளத்தில் யானைகள் கூட்டம் இருப்பதைக் கண்டதும், ரெயில் ஓட்டுநர் அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தினார். எனினும், யானைகள் மீது மோதியதால் ரெயில் தடம் புரண்டது. ரெயில் தடம் புரண்டதாலும், யானையின் உடல் பாகங்கள் தண்டவாளங்களில் சிதறிக் கிடந்ததாலும், அசாம் மற்றும் வடகிழக்கின் பிற பகுதிகளுக்கான ரெயில் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இந்த விபத்து குறித்து வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேஜ்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் ஜூனியர் வாரண்ட் அதிகாரியாக பணியாற்றினார்.
- முக்கியமான தகவல்களை அவர்களுக்கு அனுப்புவதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஒருவரை அசாம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தேஜ்பூரில் உள்ள பாட்டியா பகுதியைச் சேர்ந்த குலேந்திர சர்மா நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குலேந்திர சர்மா 2002 இல் விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்றார். முன்னதாக தேஜ்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் ஜூனியர் வாரண்ட் அதிகாரியாக பணியாற்றினார். ஓய்வுக்குப் பிறகு, அவர் சிறிது காலம் தேஜ்பூர் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார்.
இந்நிலையில் சிறிது காலமாக குலேந்திர சர்மாவை கண்காணித்து வந்த போலீசார், முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு அவரை கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் பாகிஸ்தான் உளவு நிறுவனத்துடன் தொடர்புடையவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கியமான தகவல்களை அவர்களுக்கு அனுப்புவதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அவரது மொபைல் போன் மற்றும் மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களிடம் சில சந்தேகத்திற்கிடமான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர் சில தரவுகளை நீக்கியிருக்கலாம் என்று போலீசார் நம்புகின்றனர்.
விசாரணை முடிந்த பின்னரே உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று சோனித்பூர் டிஎஸ்பி ஹரிசரண் பூமிஜ் கூறினார்.
- பாரம்பரிய சடங்குகள் இன்றி நடந்த இந்த திருமணத்தில் இருவரும் அரசியலமைப்பு மீது உறுதிமொழி எடுத்தனர்.
- இதன்மூலம் மொத்தம் 18 யூனிட்கள் ரத்தம் சேகரிக்கப்பட்டன.
ஒடிசாவின் பெர்ஹாம்பூரைச் சேர்த்தவர் ப்ரீத்திபன்னா மிஸ்ரா (40). இவர் தெலுங்கானாவில் ஐதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆந்திராவின் காக்கிநாடாவை சேர்ந்த பானு தேஜா (43) பெங்களூரில் பணியாற்றி வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் ஐதராபாத்தில் ஒரு நிகழ்வில் சந்தித்து காதலித்த நிலையில் நேற்று முன் தினம் அவர்கள் திருமணம் பெர்ஹாம்பூரில் நடைபெற்றது.
பாரம்பரிய சடங்குகள் இன்றி நடந்த இந்த திருமணத்தில் இருவரும் அரசியலமைப்பு மீது உறுதிமொழி எடுத்து திருமணம் செய்து கொண்டனர்.
இதன்பின் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ரத்த தான முகாமில் ரத்த தானம் செய்தனர். திருமணத்துக்கு வனத்திருந்த உறவினர்களும் ரத்த தானம் செய்தனர். இதன்மூலம் மொத்தம் 18 யூனிட்கள் ரத்தம் சேகரிக்கப்பட்டன.
ஒடிசாவில் அரசியலமைப்பின் மீது உறுதிமொழி எடுத்து தம்பதியினர் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
- அசாமில் பலதார மணத்தை தடைசெய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
- இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
சண்டிகர்:
வடகிழக்கு மாநிலத்தில் பலதார மணம் மற்றும் பலதார மண நடைமுறைகளைத் தடைசெய்து நீக்குவதை நோக்கமாகக் கொண்ட சர்ச்சைக்குரிய அசாம் பலதார மண தடை மசோதா, 2025 அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா இனி ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, இஸ்லாம் பலதார மணத்தை ஊக்குவிக்க முடியாது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் நீங்கள் ஒரு உண்மையான முஸ்லிமாக இருக்க வாய்ப்பு கிடைக்கும். இந்த மசோதா இஸ்லாத்திற்கு எதிரானது அல்ல. உண்மையான இஸ்லாமிய மக்கள் இந்தச் சட்டத்தை வரவேற்பார்கள். துருக்கி போன்ற நாடுகளும் பலதார மணத்தை தடை செய்துள்ளன. பாகிஸ்தானில் ஒரு நடுவர் மன்றம் உள்ளது என தெரிவித்தார்.
இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
- அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்தார்.
- சுபின் கார்கின் இசைக்குழு உறுப்பினர் சேகர் ஜோதி கோஸ்வாமி மற்றும் சக பாடகர் அமிர்தபர்வ மஹந்தா உட்பட நான்கு பேரை அசாம் போலீசார் கைது செய்தனர்.
அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த சுபீன் கார்க்.
கடந்த செப்டம்பர் 19 அன்று சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் செய்யும்போது சுபின் உயிரிழந்தார். இருப்பினும் அவரின் இறப்பில் மர்மம் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக விசாரணை செய்ய அசாம் அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சுபின் கார்கின் இசைக்குழு உறுப்பினர் சேகர் ஜோதி கோஸ்வாமி மற்றும் சக பாடகர் அமிர்தபர்வ மஹந்தா உட்பட நான்கு பேரை அசாம் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே ஜூபீன் கார்க்கின் மரணம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி சட்டமன்றத்தில் தீர்மானத்தை தாக்கல் செய்தது.
அப்போது பேசிய அசாமில் ஆளும் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, இது ஒரு தற்செயலான சம்பவம் அல்ல, மாறாக ஒரு கொலை என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் சுபின் கார்க் மரணத்தில் சந்தேகம் இல்லை என சிங்கப்பூர் காவல்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- முதல் டெஸ்டில் பாதியில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் வெளியேறினார்.
- இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படுகிறார்.
கவுகாத்தி:
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. 124 ரன் என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
முதல் டெஸ்டில் கழுத்து வலியால் பாதியில் வெளியேறிய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 2-வது டெஸ்டில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. இந்திய அணி கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் டெஸ்டில் சந்தித்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்டில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களம் இறங்குகிறது. வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.
டெஸ்டில் தோற்றாலோ அல்லது டிராவில் முடிந்தாலோ இந்திய அணி தொடரை இழக்கும் என்பதால் வெற்றிக்காக இந்தியா கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டிங்கில் கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், துருவ் ஜூரெல் ஆகியோரும் ஆல்-ரவுண்டர் வரிசையில் ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோரும் உள்ளனர்.
பந்துவீச்சில் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் உள்ளனர்.
பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி கடந்த போட்டியில் வெற்றி பெற்றதால் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அந்த அணியில் மார்க்ராம், டோனி டி ஜோர்ஜி, ரிக்கல்டன், மார்கோ ஜான்சன், முல்டர்,ஸ்டெப்ஸ், ஹார்மர், கேசவ் மகராஜ் ஆகியோர் உள்ளனர்.
கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா அணி உள்ளது. டிரா செய்தாலே தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றிவிடும். எனவே கடைசி டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
- 12 மாநிலங்களுக்கு அறிவிக்கப்படும்போது அசாம் மாநிலத்திற்கு மட்டும் அறிவிக்கப்படவில்லை.
- தற்போது அசாமில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்பட 12 மாநிலங்களில் SIR மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஒரு மாதத்திற்குள் வாக்காளர்கள் SIR படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அதேவேளையில் அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கும் அசாம் மாநிலத்தில் ஏன் SIR பணி மேற்கொள்ள உத்தரவிடவில்லை என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் சிறப்பு திருத்தம் (Special Revision) மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வீடு வீடாக சென்று நவம்பர் 22-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை வாக்காளர்கள் பெயர் சரிபார்க்கப்படும். டிசம்பர் 27-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 10-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது.
- 33 ஆயிரம் நியாய விலைக்கடைகளில் இந்த திட்டம் தொடங்கியது.
- 2.45 கோடி பேர் இந்த திட்டத்தால் பயனடைவர்.
மானிய விலையில் பருப்பு, சர்க்கரை, உப்பு வழங்கும் திட்டத்தை அசாம் மாநில அரசு இன்று தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் "மைசூர் பருப்பு ஒரு கிலோ 68 ரூபாய், சர்க்கரை ஒரு கிலோ 38 ரூபாய், உப்பு ஒரு கிலோ 10 ரூபாய். இது சாத்தியமா? ஆம். அசாமில் இது சாத்தியம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இந்த விலை ஜனவரி மாதத்தில் இருந்து மேலும் குறையும் எனக் குறிப்பிட்டுள்ளார். அந்தியோதயா என்பது எங்களுடைய இலக்கு. நோக்கம். ரேசன் கார்டு வைத்திருப்பவர்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்காக நாங்கள் புதிய அளவு கோலை உருவாக்கியுள்ளோம். 100 ரூபாய்க்கு ஒரு கிலோ பருப்பு, சர்க்கரை, உப்பு கிடைக்கும். இவைகள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
33 ஆயிரம் நியாய விலைக்கடையில் இந்த திட்டம் தொடங்கியது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.-க்கள் இந்த தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 2.45 கோடி பேர் இந்த திட்டத்தால் பயனடைவர் என அரசு தெரிவித்துள்ளது.
நவம்பர், டிசம்பர் மாதத்தில் ஒரு கிலோ மைசூர் பருப்பு ரூபாய் 69-க்கும், சர்க்கரை ரூபாய் 38-க்கும், உப்பு ரூபாய் 10-க்கும் வாங்கிக் கொள்ள முடியும். ஜனவரி மாதத்தில் இருந்து ஒரு கிலோ மைசூர் பருப்பு ரூபாய் 60-க்கும், சர்க்கரை ரூபாய் 30-க்கும், உப்பு ரூபாய் 10-க்கும் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சமாதியில் பிரார்த்தனை செய்தாலும் அமைதி இருக்காது.
- சட்டவிரோத மியாக்கள் நான் முதல்வராக இருக்கும்வரை பதற்றத்தை கொண்டிருக்க வேண்டும்.
அசாம் மாநில முதல்வராக இருக்கும் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, மாநிலம் முழுவதும் ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்தும் பணி தொடரும், நான் முதல்வராக இருக்கும் வரை மியாக்கள் நிம்மதியாக இருக்க முடியாது.
இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறுகையில் "வெளியேற்றுதல் தொடரும். இன்று கூட பிஸ்வானாத் மாவட்டத்தில் உள்ள பெஹாலி பகுதியில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நான் முதல்வராக இருக்கும் வரை, சட்டவிரோத மியாக்கள் அமைதியாக இருக்க முடியாது.
சமாதியில் பிரார்த்தனை செய்தாலும் அமைதி இருக்காது. சட்டவிரோத மியாக்கள் நான் முதல்வராக இருக்கும்வரை பதற்றத்தில் இருக்க வேண்டும். நான் அங்கு இல்லையென்றால், அது வேறு விஷயம்.
நவம்பர் 25ஆம் தேதி தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடரின்போது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்வது தடை என்ற புதிய சட்டசம் கொண்டு வரப்பட இருக்கிறது. யாராவது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தால் அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும்" என்றார்.
மியா என்பது அசாமில் பெங்கால் மொழி பேசும் முஸ்லிம்களை அழைக்கும் இழிவான சொல். பெங்காலி பேசாத முஸ்லிம்கள் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியர்கள் என பொதுவாக அடையாளம் காணப்படுகின்றன.
- கர்நாடக மாநிலங்களுக்கு வரும் முதலீடுகளை குஜராத், அசாமுக்கு திருப்புவதாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு.
- செமிகண்டக்டர் போன்ற பெரிய நிறுவனங்களை அமைப்பதற்கான திறன் இல்லை என பிரியங்க் கார்கே கூறியதாக குற்றச்சாட்டு.
கர்நாடக மாநில அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் மகனுமான பிரியங்க் கார்கே செய்தி சேனலில், கர்நாடகாவில் முதலீடு செய்ய இருந்த நிறுவனங்கள் குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக மத்திய அரசு மீது குற்றம்சாட்டினார்.
அப்போது, செமிகண்டக்கர் உற்பத்தி போன்ற பெரிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான திறன் வடகிழக்கு மாநிலங்களில் இல்லை எனக் கூறியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரியங்க் கார்கே மீது வழக்கு தொடர இருப்பதாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறுகையில் "பிரியங்க் கார்கே முதல் தர முட்டாள். அசாம் இளைஞர்களை அவர் இழிவுப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சி இதுவரை அவருக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.
அசாம் மக்களுக்கு கல்வி அறிவு இல்லை. போட்டியான இளைஞர்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இது அசாம் இளைஞர்களை இழிவுப்படுத்துவதாகும். இதனால் அவர் மீது வழக்கு தொடர்வது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
- சான்றிதழ் அளிப்பதற்காக அவர் ரூ.10 லஞ்சம் பெற்றுள்ளார்.
- அவருக்கு நாடு முழுவதும் உள்ள 9 நிலச் சொத்துகள் மற்றும் 20 அடுக்குமாடி குடியிருப்புகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அசாமில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் ஆணையத்தின் (NHIDCL) அதிகாரியை லஞ்ச புகாரில் சிபிஐ கைது செய்துள்ளது.
மைஸ்னம் ரிட்டன் குமார் சிங் அசாமின் தலைநகர் கவ்ஹாத்தியில் உள்ள NHIDCL மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.
அசாமில் டெமோவ் முதல் மோரன் புறவழிச் சாலை வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-37-ஐ நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணியை மேற்கொண்ட ஒரு தனியார் நிறுவனத்திடம் பணி நீட்டிப்பு மற்றும் பணி நிறைவுச் சான்றிதழ் அளிப்பதற்காக அவர் ரூ.10 லஞ்சம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் சிபிஐ சோதனையில் அதிகாரியிடமிருந்து ரூ. 2.62 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான, நாடு முழுவதும் உள்ள 9 நிலச் சொத்துகள் மற்றும் 20 அடுக்குமாடி குடியிருப்புகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆடம்பர வாகனங்கள் வாங்கியதற்கான ஆவணங்களையும் சிபிஐ பறிமுதல் செய்துள்ளது.
இந்த வழக்கில், கொல்கத்தாவைச் சேர்ந்த அந்த தனியார் நிறுவனத்தின் பிரதிநிதியான மோகன் லால் ஜெயின், பினோத் குமார் ஜெயின் என்பவரும் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று கவ்ஹாத்தியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
- திருமலை திருப்பதி தேவஸ்தானபோர்டு சேர்மன் தலைமையிலான குழு அசாம் சென்றிருந்தது.
- கவுகாத்தியில் கோவில் கட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானபோர்டு சேர்மன் பி.ஆர். நாயுடு தலைமையிலான குழு நேற்று அசாம் சென்று, அம்மாநில முதல்வரான ஹிமாந்தா பிஸ்வா சர்மாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது.
அசாம் தலைநகர் கவுகாத்தியில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவில் கட்டுவது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தியதாக, முதலமைச்சர் அலுவலகம் செய்து வெளியிட்டுள்ளது.






