என் மலர்
இந்தியா

13 முறை இந்தியா வந்த பாகிஸ்தான் ஏஜென்ட்: காங்கிரஸ் மீது ஹிமந்தா பிஸ்வா சர்மா பகீர் குற்றச்சாட்டு
- அசாம் பா.ஜ.க முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வ சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.
- மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவரது வருகை நடைபெற்றது.
அசாமை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.கருண் கோகாய் இவரது மனைவி எலிசபெத். இவருக்கும் பாகிஸ்தான் ஏஜெண்டு அலிதவுகீர் ஷேக்குக்கும் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க ஏற்கனவே குற்றம்சாட்டியது.
இந்தநிலையில் தருண் கோகாய் மனைவியுடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட பாகிஸ்தான் ஏஜெண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 13 முறை இந்தியா வந்ததாக அசாம் பா.ஜ.க முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வ சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பாகிஸ்தானை சேர்ந்த அலிதவுகீர் ஷேக் சுற்றுச் சூழல் ஆர்வலர் அல்ல. அவர் சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.
2010 முதல் 2013 வரை காங்கிரஸ் ஆட்சியின்போது அலிதவுகீர் 13 முறை இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்பட்டார். அவர் அனைத்து கூட்டங்களிலும் இந்தியாவை விமர்சித்தார். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவரது வருகை நடைபெற்றது.
மேலும், தருண் கோகாய் மனைவி எலிசபெத்தும் இந்தியாவின் அதிகார மையத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். அனைத்து விசாக்களும் காங்கிரஸ் ஆட்சியின்போது வழங்கப்பட்டன.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அவர் இந்தியாவுக்கு வருவதை நிறுத்திவிட்டார். அவர் இந்தியா வந்தபோது பாகிஸ்தான் அதிகாரிகளையும் தன்னுடன் அழைத்து வந்தார்.
காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், எம்.பி.யும் இதில் சம்பந்தப்பட்டு இருக்கும்போது இந்தக் குற்றச்சாட்டு மேலும் தீவிரமாகிறது. அசாம் புலனாய்வு குழு இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரத்தை மத்திய அரசு நிறுவனம் விசாரிக்க வேண்டும் என்று மாநில அரசு கருதுகிறது. இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
மத்திய அரசிடம் சாதகமான பதில் வந்தவுடன் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






