என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UN"

    • காசாவில் தொடர்ந்து, திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அழிவு, அந்தப் பகுதி வாழத் தகுதியான இடமாக மாற்றுகிறது.
    • காசாவின் ஒட்டுமொத்த மக்களும் கடுமையான, பல பரிமாண வறுமையை எதிர்கொள்கிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.

    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் பாலஸ்தீன பிரதேசத்தின் பொருளாதாரத்தை அழித்து அதன் இருப்பையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

    போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப 70 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவாகும் என்றும், அதை முடிக்க பல தசாப்தங்கள் ஆகலாம் என்றும் ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (UNCTAD) வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

    அந்த அறிக்கையில், காசாவில் நடந்த போரும், அந்தப் பிரதேசத்தின் மீது விதிக்கப்பட்ட தடைகளும் பாலஸ்தீனப் பொருளாதாரத்தை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளன.

    காசாவில் தொடர்ந்து, திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அழிவு, அந்தப் பகுதி வாழத் தகுதியான இடமாகவும், சமூக ரீதியாக மீண்டும் கட்டியெழுப்பப்படவும் முடியுமா என்பதில் கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காசாவின் ஒட்டுமொத்த மக்களும் கடுமையான, பல பரிமாண வறுமையை எதிர்கொள்கிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.

    மேலும், 2023-24 ஆம் ஆண்டில் காசாவின் பொருளாதாரம் 87% சுருங்கியது என்றும், காசாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் 161 டாலர் ஆக இருந்தது என்றும், இது உலகளவில் மிகக் குறைவு என்றும் அறிக்கை கூறியுள்ளது.

    பாலஸ்தீன சுகாதார அமைச்சக புள்ளிவிவரங்களின்படி கடந்த 2 ஆண்டுகளில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 69,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    இதற்கிடையே கடந்த மாதம் ஏற்பட்ட போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் கடந்த 44 நாட்களில் 500 க்கும் அதிகமான முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

    • தைவானை சீண்டினால் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஜப்பான் பிரதமர் எச்சரித்தார்
    • ஜப்பானுக்கு தங்களுடைய மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என சீனா அறிவுறுத்தியது.

    அண்டை நாடான தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியென கூறி போர் விமானங்களை பறக்கவிட்டும், போர் கப்பல்களை களம் இறக்கி சீனா அச்சுறுத்தி வருகிறது.

    ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி, தைவானை சீண்டினால் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தார். இதனால் வெகுண்டெழுந்த சீனா, ஜப்பானின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் அந்த நாட்டிற்கு தங்களுடைய மக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் மேலும் அறிவுறுத்தியது.

    இந்நிலையில், தைவான் விவகாரத்தில் ராணுவ தாக்குதல் நடத்த ஜப்பான் துணிந்தால், உறுதியான பதிலடி கொடுப்போம் என எச்சரிக்கை விடுத்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோவுக்கு சீனா கடிதம் எழுதியுள்ளது.

    தைவானை கைப்பற்ற சீனா, ராணுவ நடவடிக்கை எடுத்தால் அதற்கு எதிராக எதிர்வினை ஆற்றுவோம் என ஜப்பான் பிரதமர் தகைச்சி கூறியிருந்த நிலையில், அந்த கருத்துக்கள் ராணுவ அச்சுறுத்தலுக்கு சமம் என கவலை தெரிவித்து ஐநாவிடம் சீனா முறையீடு செய்துள்ளது. 

    • நகரங்களின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.
    • ஒரு சதுர கிலோமீட்டருக்கு சுமார் 27,000 பேர் வசிக்கின்றனர்.

    2025 இல் உலகின் மிக அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.

    பட்டியலில் முதல் பத்து நகரங்களில் 4 இந்திய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.

    டாப் 10 நகரங்கள் பட்டியலில், 4 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி ஒரு சதுர கிலோமீட்டருக்கு சுமார் 27,000 பேர் வசிக்கும் மும்பை நகரம் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

    அடுத்தடுத்த இடங்களில் காங்கோவின் Kasai-Oriental, Beni, பாகிஸ்தான் தலைநகர் கராச்சி, சூரத், ஹாங்காங்கின் Tamar, காங்கோவின் Kinshasa, சோமாலியா தலைநகர் Muqdisho அகமதாபாத், பெங்களூரு ஆகிய நகரங்கள் உள்ளன.

    அதேநேரம் இந்திய அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட 10 நகரங்களின் பட்டியலில் முறையே, மும்பை, சூரத், அகமதாபாத், பெங்களூரு, கல்யாண், அலிகார், பிரயாக்ராஜ், ஸ்ரீநகர், புது டெல்லி, கான்பூர் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டின் நகரங்கள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. 146 கோடி பேருடன் இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது குறிப்பிடத்தக்கது.   

    • காசாவில் பாதுகாப்பை வழங்க சர்வதேச நிலைப்படுத்தல் படையை அங்கீகரித்தல்.
    • டிரம்பால் மேற்பார்வையிடப்படும் அமைதி வாரியம் என்ற இடைக்கால அதிகாரத்தை அங்கீகரித்தல்.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு பல்வேறு அம்சங்கள் அடங்கிய திட்டத்தை அறிவித்தார். இதை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

    காசாவின் திட்டத்தில் பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது முதற்கட்ட கோரிக்கையாகும். இதை இரு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்L உயிரோடு இருந்த 20 இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.

    இந்த நிலையில் காசாவின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால திட்டத்திற்கான டொனால்டு டிரம்பின் திட்டத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பான ஐ.நா, தீர்மானத்தை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஏற்றுக் கொண்ட நிலையில், ஹமாஸ் நிராகரித்துள்ளது.

    போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் பாதுகாப்பை வழங்க சர்வதேச நிலைப்படுத்தல் படையை அங்கீகரித்தல், டொனால்டு டிரம்பால் மேற்பார்வையிடப்படும் அமைதி வாரியம் என்ற இடைக்கால அதிகாரத்தை அங்கீகரித்தல் மற்றும் ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசிற்கான சாத்தியமான எதிர்கால பாதையை திட்டமிடல் ஆகியவற்றை உள்ளடக்கிய தீர்மானத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு சபை ஒப்பதல் அளித்துள்ளது.

    இது தொடர்பாக நேதன்யாகு கருத்து தெரிவிக்கையில் "டிரம்பின் திட்டம் அமைதி மற்றும் செழிப்புக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில் அது காசாவை முழுமையாக ராணுவ மயமாக்குதல், ஆயுதக் குறைப்பு மற்றும் தீவிரமயமாக்கலை வலியுறுத்துகிறது" என்றார்.

    அரசு சாரா ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை நிரந்தரமாக நீக்குதலை சர்வதேச நிலைப்படுத்தல் படை உறுதிப்படுத்தும். இது சர்வதேச சட்டத்திற்கு இணங்க தனது ஆணையை நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பயன்படுத்த படைக்கு அதிகாரம் அளிக்கிறது. ஐ.நா. மொழியில் இது ராணுவ சக்தியைப் பயன்படுத்துவதாகும். இந்த தீர்மானம் பாலஸ்தீன மக்களின் அரசியல் மற்றும் மனிதாபிமான கோரிக்கைகள் மற்றும் உரிமைகளின் அளவைப் பூர்த்தி செய்யவில்லை.

    எந்தவொரு சர்வதேசப் படையும் ஐ.நா.வின் மேற்பார்வையின் கீழ் இருக்க வேண்டும் என்றும், போர் நிறுத்தத்தை கண்காணிக்க காசாவின் எல்லைகளில் மட்டுமே நிறுத்தப்பட வேண்டும் என்றும், பாலஸ்தீன அமைப்புகளுடன் (institutions) பிரத்தியேகமாக செயல்பட வேண்டும் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

    பாலஸ்தீன ஆணையம் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளது. உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஐ.நா. மற்ற அரசு நாடுகளுடன் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

    ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், ஜோர்டான், துருக்கி இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.

    • UNICEF அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் பெருமை அடைகிறேன்
    • உலகின் 190 நாடுகளில் செயல்பட்டு வரும் UNICEF, சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு உரிமைகள் குழந்தைகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய பணியாற்றி வருகிறது.

    தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ்.

    இவர் ஐக்கிய நாடுகள் சபையில் குழந்தைகள் நல நிதியமான UNICEF உடைய இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்த கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ``குழந்தைகள் தான் நமது மிகப்பெரிய எதிர்க்கால நம்பிக்கை, அவர்கள் மீது அன்பு செலுத்தி சிறந்தவர்களாக உருவாக்குவதற்கு தேவையான அடித்தளத்தை மேம்படுத்த வேண்டியது நமது கடமை.

    UNICEF இந்தியா அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் பெருமை அடைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    உலகின் 190 நாடுகளில் செயல்பட்டு வரும் UNICEF, சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு உரிமைகள் குழந்தைகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய பணியாற்றி வருகிறது. இதற்கு முன்னரும் UNICEF இந்தியாவின் தூதர்களாக பல திரைப் பிரபலங்கள் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

    • திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞரான பி. வில்சன் உரையாற்றினார்.
    • 1960களில் இந்திய பெண் மருத்துவ அதிகாரிகள் காங்கோவில் பணியாற்றினர்

    ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி நிறுவல் ஆணையம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஐ.நா பொதுச்சபை ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் 2005 ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த அமைதி நிறுவல் ஆணையத்தின் தூதர் மட்டக் கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்று திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞரான பி. வில்சன் உரையாற்றினார்.

    இந்தியா சார்பில் உரையாற்றிய பி. வில்சன் கூறியதாவது:-

    மாண்புமிகு தலைவர் அவர்களே, வணக்கம்.

    1. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 1325ன் 25ஆம் ஆண்டு நினைவுநாளை ஒட்டி இன்றைய நிகழ்வை ஒருங்கிணைத்ததற்காக, அமைதி நிறுவல் ஆணையத்தின் தலைமை ஜெர்மனிக்கு இந்தியா தனது பாராட்டுகளை தெரிவிக்கின்றது.

    பெண்கள் சமத்துவத்திற்காக நமீபியா அமைச்சரும், ஐ.நா. மகளிர் அமைப்பின் நிறைவேற்று இயக்குநரும், மற்றும் மற்ற உரையாளர்களும் தங்களது ஆழமான கருத்துகளையும், பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு (WPS) திட்டத்தை மேலும் வலுப்படுத்த உதவும் மதிப்புமிக்க பங்களிப்புகளையும் வழங்கியதற்காக நன்றி தெரிவிக்கிறோம்.

    2. ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதிப்படை நடவடிக்கைகளுக்கான முன்னணி பங்களிப்பாளர்களில் ஒன்றாக இருக்கும் இந்தியா, அமைதியை உருவாக்குவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் பெண்களின் முழுமையான மற்றும் சமமான பங்கேற்பு இன்றியமையாதது என்பதை வலியுறுத்துகிறது. அமைதிக்காப்பு மற்றும் அமைதிநிறுவல் மீதான எங்கள் அர்ப்பணிப்பு, தேசிய உரிமை மற்றும் பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு(WPS) நோக்கங்களின் கொள்கைகளுடன் இணைந்துள்ளது.

    3. இந்தியாவின் அமைதிக்காப்பு பாரம்பரியத்தை தனித்துவமாக ஆக்கும் அம்சம் எங்கள் பங்களிப்பின் அளவில் மட்டும் இல்லை, நிலைத்த அமைதிக்கான இன்றியமையாத செயற்பாட்டாளர்களாக பெண்களை முன்கூட்டியே அடையாளம் கண்டது என்பதிலும் இருக்கிறது.

    பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 1325 பிறக்கும்முன்பே, 1960களில் இந்திய பெண் மருத்துவ அதிகாரிகள் காங்கோவில் பணியாற்றினர். இது, ஐ.நா. அமைதிப்படை நடவடிக்கைகளில் பெண்கள் பங்கேற்ற முதன்மையான நிகழ்வுகளில் ஒன்றாகவும் பதிவாகிறது. இது ஒரு குறியீட்டு நடவடிக்கை மட்டுமல்ல; மாறாக, பெண்களின் பார்வை, திறன்கள், மற்றும் அவர்களின் பங்கு பயனுள்ள அமைதிக்காப்பு மற்றும் அமைதி நிறுவலிற்கு அத்தியாவசியமானவை என்பதைக் கண்கூடாக அங்கீகரிக்கிறது.

    4. 2007 ஆம் ஆண்டு, இந்தியா ஐ.நா.வின் முதல் முழு பெண்கள் கொண்ட காவல் படை பிரிவை (Formed Police Unit) லைபீரியாவிற்கு அனுப்பியது. இந்த முன்னோடியான முயற்சி, அந்நாட்டின் உள்ளூர் பெண்களை தங்கள் தேசிய காவல் மற்றும் பாதுகாப்பு சேவைகளில் சேர ஊக்குவித்தது. இன்று, இந்திய பெண்கள் அமைதிப்படை வீராங்கனைகள் காங்கோ ஜனநாயகக் குடியரசு, அப்யேய் மற்றும் தென் சூடான் ஆகிய இடங்களில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் சமூகங்களுடன் நம்பிக்கையை உருவாக்குவதிலும், பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பை வலுப்படுத்தவும் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.

    5. இவ்வாறான பணியமர்வுகளின் மூலம், அமைதிக்காப்பு மற்றும் அமைதிநிறுவலில் பெண்கள் வழங்கும் நேர்மையான பங்களிப்பு மற்றும் தாக்கத்தை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது. பெண்கள், சமூகங்களில் நம்பிக்கையை உருவாக்கி, குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நம்பிக்கையை அளிக்கின்றனர். மிக முக்கியமாக, அவர்கள் பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்கொள்ளவும், அமைதிக்கான வழிமுறைகள் சமூகத்தின் அனைத்து பிரிவுகளின் தேவைகள் மற்றும் பார்வைகளை பிரதிபலிக்கவும் உதவுகின்றனர். அத்துடன், மோதல் நிலப்பரப்புகளில் உள்ள பெண்களுக்கு, அவர்களும் தலைவர்களாகவும், அமைதி நிறுவர்களாகவும் ஆக முடியும் என்பதற்கான உதாரணமாக திகழ்கின்றனர்.

    6. தேசிய அளவில், பெண்கள் முன்னேற்றத்திலிருந்து பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் என்ற இந்தியாவின் பயணம், எங்கள் சமூகத்தின் ஒவ்வொரு துறையையும் மாற்றியுள்ளது. இன்று, அடிப்படை மட்டத்தில் 14 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக பணியாற்றுகின்றனர். மேலும், 23க்கும் மேற்பட்ட இந்திய மாநிலங்களும் ஒன்றிய பிரதேசங்களும், உள்ளூராட்சி மன்றங்களில் 50 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கி உள்ளன. இது, சமூக ஒற்றுமை மற்றும் ஒன்றிணைந்த ஆட்சி ஒன்றை ஒன்று பூர்த்தி செய்யும் அம்சங்கள் என்பதை வலியுறுத்துகிறது.

    7. இந்தியா, பெண்களுக்கான திறன் மேம்பாட்டு முயற்சிகளில், குறிப்பாக உலக தெற்கு நாடுகளிலிருந்து வரும் அமைதிப்படைப் பணியாளர்களுக்காக, தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. புது டெல்லியில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதிக்காப்பு மையம் (Centre for United Nations Peacekeeping), இன்று பாலின உணர்வுமிக்க பயிற்சிகளுக்கான உலகத் தரம் வாய்ந்த மையமாக உருவெடுத்துள்ளது. அது, பெண்கள் அமைதிப்படை வீராங்கனைகளுக்காக முக்கிய பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தி, அவர்களுக்கு இயக்கத்திட்டமிடல், பொதுமக்கள் பாதுகாப்பு, பாலியல் சுரண்டல் மற்றும் வன்முறைத் தடுப்பு, பாலின உணர்வுமிக்க தலைமைத்துவம் போன்ற துறைகளில் அத்தியாவசிய பயிற்சிகளை வழங்குகிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில், இந்தியா உலக தெற்கு நாடுகளிலிருந்து பெண்கள் அமைதிப்படை வீராங்கனைகளுக்காக நடத்தப்பட்ட முதல் வகையான சர்வதேச மாநாட்டை நடத்தி வரலாறு படைத்தது.

    8. எதிர்காலத்தை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு (WPS) திட்டத்தின் மீதான இந்தியாவின் அர்ப்பணிப்பு அசைக்க முடியாததாக உள்ளது. இந்தியா தனது கூட்டு நாடுகளுடன், குறிப்பாக உலக தெற்கு நாடுகளிலுள்ளவர்களுடன், தனது அறிவு, பயிற்சி, மற்றும் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொண்டு, பொதுவான சவால்களுக்கு கூட்டாக தீர்வுகளை உருவாக்குவதில் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

    • காஷ்மீர் மக்கள் தாங்கள் எந்த நாட்டுடன் இணைய வேண்டும் என்று ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்ய வேண்டும் என்று கோரினார்.
    • பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மற்றும் பாதுகாக்கும் ஒரு நாடு பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருப்பது வருந்தத்தக்கது

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் ஒடுக்குமுறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஐநா சபையில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.

    நேற்று ஐ.நா.வின் 80வது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பி. ஹரிஷ் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "ஜம்மு காஷ்மீர் மக்கள் இந்திய அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள்ளும் ஜனநாயக மரபுகளின்படியும் தங்கள் அடிப்படை உரிமைகளைப் அனுபவிக்கின்றனர். இருப்பினும், இந்த அரசியலமைப்பு, ஜனநாயகம் உள்ளிட்ட கருத்துக்கள் பாகிஸ்தானுக்கு முற்றிலும் பரிச்சயமற்றவை என்பதை நாங்கள் அறிவோம்.

    பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பிரதேசங்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாகிஸ்தானின் இராணுவ ஆக்கிரமிப்பு, ஒடுக்குமுறை மற்றும் வளங்களை சுரண்டுவதற்கு எதிராக அங்குள்ள மக்கள் வெளிப்படையாக கிளர்ச்சி செய்து வருகின்றனர்" என்று தெரிவித்தார். 

    கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி, 1948 ஆம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, காஷ்மீர் மக்கள் தாங்கள் எந்த நாட்டுடன் இணைய வேண்டும் என்று ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்ய பாகிஸ்தான் பிரதிநிதி கோரினார்.

    இதற்கு பதிலளித்த இந்திய பிரதிநிதி ஹரிஷ், அந்த தீர்மானத்தின்படி பொது வாக்கெடுப்பு நடப்பதற்கு முன், பாகிஸ்தான் முதலில் காஷ்மீரின் தான் ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து தன்னுடைய இராணுவத்தையும், பொதுமக்களையும் முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும்.

    ஆனால் அந்த நிபந்தனையை இதுவரை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை. எனவே பொது வாக்கெடுப்பு கோரும் தீர்மானம் பற்றி இப்போது பேசுவது காலாவதியாகிவிட்டது." என்று தெரிவித்தார்.

    முன்னதாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்று டெல்லியில் நடந்த ஐ.நா.வின் 80வது ஆண்டு நினைவு முத்திரை வெளியீட்டு விழாவில் பேசுகையில், பயங்கரவாதத்தை ஊக்குவித்து பாதுகாக்கும் ஒரு நாடு பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருப்பது வருந்தத்தக்கது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.   

    • காசாவில் உள்ள 94% மருத்துவமனைகள் மற்றும் 90% பள்ளிகள் அழிக்கப்பட்டுள்ளன.
    • வேளாண் நிலங்களில் 98.5% இப்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பாலஸ்தீன நகரமான காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவை மதிப்பீடு செய்து ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அறிக்கைபடி, இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவின் 80% கட்டிடங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.

    மொத்த சேத மதிப்பு 4.5 டிரில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 373.5 டிரில்லியன்) ஆகும்.

    கடந்த இரண்டு ஆண்டுகளில் காசாவில் இடிபாடுகள் உள்ளிட்ட 51 மில்லியன் டன் குப்பைகள் குவிந்துள்ளன. இவற்றை அகற்ற மட்டும் ரூ.99.6 டிரில்லியன் செலவாகும்.

    போரினால் ஏற்பட்ட இடிபாடுகளை முழுமையாக அகற்ற 10 ஆண்டுகள் ஆகலாம். மேலும், காசாவின் வளமான நிலப்பரப்பை மீட்டெடுக்க 25 ஆண்டுகள் வரை ஆகலாம்.

    குப்பைகளை அகற்றுவதற்கான உபகரணங்கள் கிடைப்பதில் உள்ள சிரமங்களே மறுகட்டமைப்புக்கு நீண்ட காலம் எடுக்கக் காரணம்.

     இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவில் உள்ள 94% மருத்துவமனைகள் மற்றும் 90% பள்ளிகள் அழிக்கப்பட்டுள்ளன.

    காசாவின் 2.3 மில்லியன் மக்கள்தொகையில் 90% பேர் வீடற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். பாதிக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொள்கின்றனர். காசாவின் 80% பகுதி இராணுவ மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    காசாவில், 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. போருக்கு முன் பயிரிடப்பட்ட நிலங்களில், தற்போது 232 ஏக்கர் மட்டுமே சாகுபடி செய்யக்கூடியதாக உள்ளது. அதாவது, வேளாண் நிலங்களில் 98.5% இப்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

     வளமான மண் இல்லாதது உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. போருக்கு முன்பு காசா தனது மொத்த ஏற்றுமதியில் 32% ஸ்ட்ராபெர்ரிகள், 28% தக்காளி மற்றும் 15% வெள்ளரிகளை ஏற்றுமதி செய்து வந்தது.

    இஸ்ரேலியத் தாக்குதல்கள் 83% பாசனக் கிணறுகளை அடைத்துள்ளன. வெடிபொருட்கள் மற்றும் இரசாயனங்கள் காரணமாக காசாவின் மண்ணில் ரசாயன அளவு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

    ஒட்டுமொத்தமாக இந்த போரினால் ஏற்பட்ட சமூகம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என்று ஐ.நா. அறிக்கை எச்சரித்துள்ளது.

    இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 66,158 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐநா முன்னதாக தெரிவித்திருந்தது.

    ஐநாவின் சுயாதீன விசாரணை கமிஷன் காசாவில் இஸ்ரேல் செய்து வருவது இனப்படுகொலை என வரையறுத்துள்ளது.

    இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் இன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்பது குறித்து எகிப்தில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அடுக்கியது.
    • சிறுபான்மையினரை துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் ஒரு நாடு எப்படி மனித உரிமைகள் குறித்து மற்றவர்களுக்கு போதிக்க முயலுகிறது.

    ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 60-வது கூட்டம் ஜெனிவா நகரில் நடந்தது. இந்த கூட்டத்தில் நடந்த விவாதத்தின்போது இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அடுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கூட்டத்தில் இந்திய தூதர் முகமது ஹூசைன் பேசியதாவது:-

    சிறுபான்மையினரை துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் ஒரு நாடு எப்படி மனித உரிமைகள் குறித்து மற்றவர்களுக்கு போதிக்க முயலுகிறது. இதை இந்தியா மிகவும் முரண்பாடாக கருதுகிறது. பாகிஸ்தான் தங்கள் சொந்த மண்ணில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதை நிறுத்த வேண்டும். பாகிஸ்தான் தனது சொந்த உள்நாட்டு தோல்வியை புறக்கணித்து சர்வதேச மன்றங்களை பயன்படுத்தி இந்தியா மீது அவதூறு செய்ய மீண்டும், மீண்டும் முயற்சி செய்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களை மேம்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்மாக கருதப்படும்.
    • ரஷியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக வாக்களித்தன.

    அணுசக்தி திட்டங்களை கைவிட மறுக்கும் ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

    2015 ஆம் ஆண்டு உலக வல்லரசுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. ஆனால் ஒப்பந்த விதிகளை மீறியதற்காக, அதே ஒப்பந்தத்தில் இடம்பெற்ற "ஸ்னாப்பேக்" (Snapback) என்ற அம்சம் மூலம் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதாவது இந்த ஒப்பந்தம் செய்வதற்கு முன் ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் 10 வருடங்கள் கழித்து மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன.

    தற்போது அமலுக்கு வந்துள்ள இந்திய தடையால் ஈரானின் வெளிநாட்டுச் சொத்துகள் முடக்கப்படும், ஆயுத விற்பனை ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும், மேலும் அதன் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களை மேம்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்மாக கருதப்படும்.

    முன்னதாக ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிப்பதற்காக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கொண்டு வந்த வரைவு தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளின் வாக்கெடுப்புக்காக முன் வைக்கப்பட்டது.

    ரஷியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் எதிராக வாக்களித்தன. இரண்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, வரைவுத் தீர்மானம் தோல்வி அடைந்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதை ஆறு மாதங்கள் தாமதப்படுத்த கோரி நேற்று ரஷியா மற்றும் சீனா கொண்டு வந்த வரைவு தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது. இதைத்தொடர்ந்து இன்று (செப்டம்பர் 28) முதல் தடைகள் அமலுக்கு வந்தன.

    ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் ஈரானுக்கு இந்த தடைகள் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் தங்கள் மீது தடை விதிக்க ஐநாவுக்கு உரிமை இல்லை என்றும் இந்த தடைகளால் தங்களுக்கு எந்த பொருளாதார பாதிப்புகளும் இருக்காது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. 

    • பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
    • ஐ.நா. கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிகள் இரண்டும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

    அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச்சபையில் 80-வது அமர்வு பொதுவிவாதம் நடந்து வருகிறது. இதில் பல்வேறு நாட்டு தலைவர்கள் பேசி வருகிறார்.

    இதில் இந்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் பேசினார்.

    அவர் பேசியதாவது, சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தியா பயங்கரவாதத்தின் சவாலை எதிர்கொண்டு உள்ளது. உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக எங்கள் அண்டை நாடு உள்ளது.

    பல தசாப்தங்களாக, முக்கிய சர்வதேச பயங்கரவாதத் தாக்குதல்கள் அந்த ஒரு நாட்டில் இருந்து தான் வருகின்றன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மிகச் சமீபத்திய உதாரணம் கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டது ஆகும்.

    பயங்கரவாதத்திற்கு எதிராக தனது மக்களைப் பாதுகாக்கும் உரிமையை இந்தியா பயன்படுத்தியது. மேலும் பயங்கரவாத தாக்குதல் அமைப்பாளர்களையும் குற்றவாளிகளையும் நீதியின் முன் நிறுத்தியது.

    பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். நமது உரிமைகளை வலியுறுத்தும் அதே வேளையில், அச்சுறுத்தல்களையும் நாம் உறுதியாக எதிர்கொள்ள வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்ப்பது ஒரு முன்னுரிமை ஆகும்.

    ஏனென்றால் அது வெறி, வன்முறை, சகிப்புத்தன்மை மற்றும் பயத்தை ஒருங்கிணைக்கிறது. பயங்கரவாதத்தை நாடுகள் வெளிப் படையாக அரசுக் கொள்கையாக அறிவிக்கும்போது, பயங்கரவாதிகள் பகிரங்கமாக மகிமைப்படுத்தப்படும்போது, அத்தகைய நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது தடுக்கப்பட வேண்டும்.

    பயங்கரவாதிகள் மீதும், அவர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் மீதும் இடைவிடாத அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். அமைதியை மீட்டெடுக்க உதவும் எந்தவொரு முயற்சியையும் இந்தியா ஆதரிக்கும்.

    உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நமது மக்களைப் பாதுகாக்கவும் அவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

    நமது எல்லைகளை வலுவாகப் பாதுகாத்தல், அதற்கு அப்பால் வெளிநாடுகளுடன் உறவை வலுப்படுத்துவது அங்கு வசிக்கும் நமது சமூகத்திற்கு உதவியாக இருக்கும்.

    ஐ.நா. கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிகள் இரண்டும் விரிவுபடுத்தப்பட வேண்டும். சீர்திருத்தப்பட்ட கவுன்சில் உண்மையிலேயே பிரதிநிதித்துவப் படுத்தப்பட வேண்டும். இந்தியா அதிக பொறுப்புகளை ஏற்கத் தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.  

    • ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் அபத்தமான நாடகங்களை அரங்கேற்றி உள்ளார்.
    • இந்தியப் படைகளால் பல பாகிஸ்தான் விமானப் படைத் தளங்கள் அழிக்கப்பட்டது.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச்சபையில் 80-வது அமர்வு பொதுவிவாதம் நடந்து வருகிறது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பேசினார்கள்.

    இதற்கிடையே ஐ.நா சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், இந்தியா-பாகிஸ்தான் போரை அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் தலையிட்டு நிறுத்தியதாக தெரிவித்தார்.

    டிரம்ப் சரியான நேரத்தில் மற்றும் தீர்க்கமாக தலையிடாவிட்டால் ஒரு முழுமையான போரின் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் என்று தெரிவித்தார்.

    இப்போரை நிறுத்தியதில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என்றும் பாகிஸ் தான் கெஞ்சியதால்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது என்றும் இந்தியா பலமுறை திட்டவட்டமாக கூறி உள்ளது. ஆனால் போரை நிறுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

    இந்த நிலையில்தான் ஐ.நா.சபையில் பாகிஸ்தான் பிரதமர் இக்கருத்தை தெரிவித்து உள்ளார். மேலும் இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் கூறிய அவர், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து விவகாரம், காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்டவற்றை பற்றியும் பேசினார்.

    பாகிஸ்தான் பிரதமரின் பேச்சுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து உள்ளது. இதுதொடர்பாக ஐ.நா.பொதுச்சபையில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகசெயலாளர் பெட்டல் கஹ்லோட் பேசியதாவது:-

    ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் அபத்தமான நாடகங்களை அரங்கேற்றி உள்ளார். அவர் மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத்தை மகிமைப்படுத்தினார். பயங்கரவாதம் பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையின் மையமாகும். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பயங்கரவாத அமைப்பை பாகிஸ்தான் பாதுகாக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பங்காளியாக நடித்து ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் கெஞ்சியது. மே 9-ந்தேதி வரை இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் அச்சுறுத்தல்களை மேற்கொண்டது.

    ஆனால் மே 10-ந்தேதி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் நேரடியாக கெஞ்சியது. இதனால்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எந்தவொரு பிரச்சனையிலும் எந்த 3-ம் தரப்பினரும் தலையிட இடமில்லை.

    இந்த சண்டையில் இந்தியப் படைகளால் பல பாகிஸ்தான் விமானப் படைத் தளங்கள் அழிக்கப்பட்டது.

    பயங்கரவாத செயல்களுக்கு எதிராக எங்கள் மக்களைப் பாதுகாக்கும் உரிமையை நாங்கள் பயன்படுத்தியுள்ளோம். பாகிஸ்தான் உண்மையிலேயே அமைதியை விரும்பினால் உடனடியாக அனைத்து பயங்கரவாத முகாம்களையும் மூடிவிட்டு, இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

    அணு ஆயுத மிரட்டல் என்ற போர்வையில் பயங்கரவாதம் நடைபெறுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு இந்தியா ஒருபோதும் அடி பணியாது. இதை உலகிற்கு தெளிவாக சொல்லி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×