search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Taiwan"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளதால் சீனா ஆத்திரம் அடைந்தது.
    • கடந்த ஆண்டு அப்போதைய அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் தைவானுக்கு வந்த போது சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டது.

    பீஜிங்:

    தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளதால் சீனா ஆத்திரம் அடைந்தது. சில மாதங்களுக்கு முன்பு தைவானை சுற்றி கடலில் சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.

    இதற்கிடையே தைவான் துணை அதிபர் வில்லியம்லாய், சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் தைவானை சுற்றி மீண்டும் சீனா தனது போர் பயிற்சிகளை தொடங்கியுள்ளது.

    தைவான் தீவை சுற்றி சீன கடற்படை மற்றும் விமானப்படை, கூட்டு வான், கடல் ரோந்து, ராணுவ பயிற்சிகளை இன்று அதிரடியாக தொடங்கியது. இதை சீன ராணுவ செய்தி தொடர்பாளரான ஷியி உறுதிப்படுத்தினார்.

    இது தொடர்பாக சீனா கூறும்போது, தைவான் துணை அதிபர் லாய் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார். தேசிய இறையாண்மை பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தது.

    கடந்த ஆண்டு அப்போதைய அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் தைவானுக்கு வந்த போது சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டது. இந்த நிலையில் தைவான் துணை அதிபர், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட பிறகு போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தைவானுடன் அமெரிக்கா இணைந்து பயிற்சிகளை மேற்கொள்கிறது.
    • தைவான் ஜலசந்தியில் அமைதி நிலவும் போது, உலக அமைதி நிலவும் என்று தெரிவித்து உள்ளது.

    தைபேசிட்டி:

    தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீன சொந்தம் கொண்டாடி வருகிறது.

    இந்த விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது.சமீபத்தில் தைவானை சுற்றி கடலில் சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டது.

    அதேபோல் தைவானுடன் அமெரிக்கா இணைந்து பயிற்சிகளை மேற்கொள்கிறது. இதற்கிடையே தைவான் துணை அதிபர் வில்லி யம்லாய், பராகுவே நாட்டின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அங்கு புறப்பட்டு சென்றார். வழியில் அவர் அமெரிக்காவில் நியூயார்க் நகருக்கு சென்றார். அவரது அமெரிக்க பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

    இந்த நிலையில் சீனாவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என்று தைவான் துணை அதிபர் வில்லி யம்லாய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    தைவானின் நீண்ட கால உயிர் வாழ்வை சர்வதேச சமூகம் அக்கறை கொள்ள வேண்டிய ஒன்றாகும். தைவானுக்கு சர்வாதி காரத்தின் அச்சுறுத்தல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் நாங்கள் முற்றிலும் அடிபணிய மாட்டோம். பயப்படமாட்டோம். ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் மதிப்புகளை நிலைநிறுத்துவோம்" என்றார்.

    மேலும் தைவான் அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தைவான் பாதுகாப்பாக இருக்கும் போது உலகம் பாதுகாப்பாக இருக்கும். தைவான் ஜலசந்தியில் அமைதி நிலவும் போது, உலக அமைதி நிலவும் என்று தெரிவித்து உள்ளது.

    • பராகுவே நாட்டிற்கு செல்லும் வழியில் அமெரிக்கா சென்ற தைவான் துணை அதிபர்
    • இறையாண்மையை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது சீனா

    தைவான் நாட்டின் ஒரே நட்பு நாடு தென்அமெரிக்காவின் பராகுவே. தங்களது நட்பு நாடான பராகுவே செல்ல தவைான் துணை அதிபர் வில்லியம் லாய் முடிவு செய்தார். அவர் பராகுவே செல்லும் வழியில் நேற்றிரவு இடைநிறுத்தமாக அமெரிக்காவின் சான்பிராஸ்சிஸ்கோ நகர் சென்றடைந்தார்.

    அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், தைவான் துணை அதிபர் அமெரிக்கா சென்றுள்ளது, சீனாவுக்கு எரிச்சலூட்டியுள்ளது.

    இதுகுறித்து சீனா தரப்பில் கூறும்போது ''தைவான் துணை அதிபர் வில்லியம்ஸ் லாய் ஒரு பிரிவினைவாதி. அவர் தொடர்ந்து இடையூறு செய்து வருகிறார். சீனா தனது இறையாண்மையை பாதுகாக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும்'' எனத் தெரிவித்துள்ளார்.

    தைவான் தனி நாடு என்றாலும், தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பிராந்தியமாக சீனா பார்க்கிறது. ஆனால், அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தைவானுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அடிக்கடி தைவான் ஒட்டிய கடற்பகுதியில் ராணுவ நடவடிக்கையை அதிகரித்து மிரட்டல் விடுத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளது.

    இதையும் தாண்டி சமீபத்தில் தைவானுக்கு அமெரிக்கா ராணுவ உதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    • ஜாயின்ட் ஸ்வார்ட் எனும் தைவானுக்கெதிரான ஒரு ராணுவ பயிற்சியை சீனா மேற்கொண்டது
    • தேவைப்பட்டால் தற்கொலை தாக்குதல் நடத்த தயார்

    தீவு நாடான தைவானை தனக்கு சொந்தமானது எனக் கூறி வரும் சீனா தேவைப்பட்டால் ராணுவ ஆக்ரமிப்பு மூலம் அந்நாட்டை கைப்பற்ற போவதாக பலமுறை கூறியிருக்கிறது.

    கடந்த ஏப்ரல் மாதம் "ஜாயின்ட் ஸ்வார்ட்" (Joint Sword) எனும் தைவானுக்கெதிரான ஒரு ராணுவ பயிற்சியை சீனா மேற்கொண்டது.

    கடந்த மாதம், தைவானுக்கு அமெரிக்கா ரூ.2800 கோடி ($345 மில்லியன்) மதிப்பிலான ராணுவ உதவியை வழங்கியது. ஆனால், இதற்கு சீனா தனது எதிர்ப்பை தெரிவித்தது.

    இந்நிலையில் சீன ராணுவத்தின் 96-வது ஆண்டு விழாவை குறிக்கும் விதமாக சீனா ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில் போருக்கு தயாரான நிலையில் ராணுவம் இருப்பதுபோல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில் சீன வீரர்கள் நாட்டிற்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக உறுதி எடுத்து கொள்கின்றனர்.

    தைவான் நாட்டை எதிர்க்க சீனா ராணுவத்தில் உள்ள கிழக்கு பகுதி அமைப்பை சேர்ந்த ஒரு சீன ராணுவ விமானப்படை பைலட் உறுதிபட கூறியிருப்பது தெரிகிறது. அவர் தேவைப்பட்டால் தற்கொலை தாக்குதல் நடத்த தயார் என கூறுகிறார். தங்களின் உடலையும் உயிரையும் தியாகம் செய்ய தயார் என நீருக்கடியில் மூழ்கி ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும் "ஃப்ராக் மேன்" படை வீரர் ஒருவர் கூறுகிறார்.

    ஜாயின்ட் ஸ்வார்ட் பயிற்சி சம்பந்தமான காட்சிகளும், ராணுத்தின் பல அமைப்பின் வீரர்களின் கதைகளும், ராணுவ பயிற்சிகளும் இதில் இடம்பெற்றிருக்கிறது. இது தைவான் நாட்டிற்கு சீனா விடும் எச்சரிக்கைபோல் இருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    சேஸிங் ட்ரீம்ஸ் என இந்த ஆவணப்படத்திற்கு சீனா பெயரிட்டுள்ளது.

    தைவானை அச்சுறுத்தும் விதமாக தைவான் ஜலசந்தி பகுதியில் சீன ராணுவம் வான்வழி ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • தைவானை, சீனா தனது தேசத்தின் ஒரு பகுதியாக அறிவித்தது
    • அமெரிக்க அதிபரின் டிராடவுன் அதாரிட்டி எனும் உத்தரவின் மூலம் அமெரிக்கா இதனை வழங்குகிறது

    கிழக்காசிய ஜனநாயக நாடான தைவானை, சீனா தனது தேசத்தின் ஒரு பகுதியாக அறிவித்தது. ஆனால், தைவான் இதனை ஏற்க மறுத்து வருகிறது.

    தேவைப்பட்டால் ராணுவ ஆக்ரமிப்பு மூலம் தைவானை கைப்பற்ற போவதாகவும் சீனா கூறி வருகிறது.

    கடந்த ஆண்டு, சீன இராணுவம் தைவானை சுற்றியுள்ள பகுதிகளில் 2 பெரிய ராணுவ பயிற்சிகளை நடத்தியது. இந்த பயிற்சிகளில் தைவான் தீவின் முற்றுகையும் நடைபெற்றது.

    இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையே பதட்டம் நிலவி வருகிறது.

    இந்நிலையில் சீனாவிலிருந்து வரக்கூடிய தாக்குதல்களை எதிர்கொள்ளவும், தற்காப்பு திறனை மேம்படுத்தி கொள்ளவும், தைவானுக்கு அமெரிக்கா சுமார் ரூ.2800 கோடி ($345 மில்லியன்) மதிப்பிலான ராணுவ உதவியை வழங்க போகிறது.

    இந்த தொகுப்பில், உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் உளவு கருவிகளும், சிறிய ஆயுத வெடிமருந்துகளும் அடங்கும்.

    "இதன் மூலம் தற்காலத்திலும், எதிர்காலத்திலும் தன் நாட்டிற்கெதிரான ராணுவ நடவடிக்கைகளை தைவான் தடுக்க முடியும்", என அமெரிக்க ராணுவ அமைச்சகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

    ரஷியாவிற்கெதிராக போரிடும் உக்ரைனுக்கு வழங்கியது போலவே, அவசரகால உதவியாக ராணுவ தளவாடங்களை உடனடியாக ராணுவ அமைச்சகம் மூலம் வழங்கும் அமெரிக்க அதிபரின் டிராடவுன் அதாரிட்டி (drawdown authority) எனும் உத்தரவின் மூலம் அமெரிக்கா இதனை வழங்குகிறது. மேலும் இந்த தளவாடங்கள், அமெரிக்காவின் சொந்த இருப்புகளிலிருந்து வழங்கப்படுகின்றன.

    இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, "தைவான் ஜலசந்தியில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் தற்போதைய நிலையை நிலைநிறுத்துவதற்காக, அமெரிக்காவுடன் பாதுகாப்பு விஷயங்களில் தைவான் நெருக்கமாக ஒத்துழைக்கும்" என தைவான் அறிவித்துள்ளது

    • ஒரு குளவி அவரை கொட்டியதில் அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது.
    • "சுதந்திரத்தை தேடி" நீந்தி வந்ததாக அதிகாரிகளிடம் அவர் கூறினார்.

    கட்டுப்பாடுகள் நிறைந்த சீனாவில் வாழ பிடிக்காமல் கிழக்கு ஆசியாவில் உள்ள தைவான் நாட்டிற்குள் சட்ட விரோதமாக புகலிடம் தேடி ஒரு சிலர் நீந்தியே செல்வது அவ்வப்போது நடைபெறும்.

    2019ல் இரு சீனர்கள் தைவானின் கின்மென் கவுன்டி பகுதியை அடைய நீந்தி சென்றபோது சட்டவிரோதமாக நுழைந்ததாக கைது செய்யப்பட்டனர். 2020ல் 7 மணி நேரம் நீந்தியே தைவானின் கின்மென் கவுன்டி பகுதியை அடைந்த 45 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    இதே போன்று 4 தினங்களுக்கு முன், சீனாவின் புஜியான் மாகாணத்தில் இருந்து தைவானின் மட்சு தீவுகளுக்கு 40 வயது சீனர் ஒருவர், கிட்டத்தட்ட 10 மணிநேரம் நீந்தி சென்று புகலிடம் அடைந்துள்ளார். இந்த பிரயாணத்திற்காக அவர் உணவு, ஆடை, மருந்து மற்றும் சீன கரன்சி ஆகியவற்றை கையோடு எடுத்து சென்றிருக்கிறார்.

    மட்சு தீவுகளில் இரண்டாவது பெரிய தீவான பெய்கன் தீவில் உள்ள பெய்கன் டவுன்ஷிப் பகுதியில் நுழைந்தார். வெற்றிகரமாக நீந்தி அங்கு நுழைந்தவர் அங்கேயே அரசுக்கு தெரியாமல் வாழ்ந்திருக்கலாம்.

    ஆனால் அவருக்கு சோதனை குளவி வடிவத்தில் வந்தது. ஒரு குளவி அவரை கொட்டியதில் அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது.

    இதனால் மட்சு தீவுகளில் சுற்றுலா பயணிகளிடம் உதவி கோரினார். சுற்றுலா பயணிகள் உடனே உள்ளூர் அதிகாரிகளுக்கு இவரை குறித்து தகவல் தெரிவித்தனர்.

    சீனாவின் ஃப்யூஜியான் மாகாணத்தில் உள்ள ஹுவாங் கி தீபகற்பத்தில் இருந்து தைவானின் மட்சு தீவுகளுக்கு "சுதந்திரத்தை தேடி" நீந்தி வந்ததாக அதிகாரிகளிடம் அவர் கூறினார்.

    அதிகாரிகள் விரைந்து வந்து அவரிடம் தகவல்களை கேட்டறிந்தனர். அப்போது அவர் சட்டவிரோதமாக குடியேறியவர் என்பது உறுதியானது.

    இதனையடுத்து அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்ட அவரை பெய்கன் சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அவருக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

    ஹுவாங்கி தீபகற்பத்திற்கும் பெய்கன் தீவிற்கும் இடையிலான தூரம் சுமார் 12 கி.மீ. சீனாவின் கடற்கரை பகுதியிலிருந்து தைவான் 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

    தைவான் பகுதிக்கும், மெயின்லேண்ட் பகுதிக்கும் இடையேயான சட்டத்தின்படி விசாரணைக்காக லியன்சியாங் மாவட்ட அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    சமீபத்திய சில ஆண்டுகளாக தைவானை சுற்றி தனது ராணுவ நடவடிக்கைகளை சீனா தீவிரப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த இரண்டு நாட்களாக தைவான் எல்லையில் அத்துமீறிய சீன விமானங்கள்
    • தைவானின் அரசியல் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்துள்ள சீனா இவ்வாறு நடந்து கொள்கிறது

    சீனாவின் போர் விமானங்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு தைவானின் வான் பாதுகாப்பு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக, சுயாட்சி செய்து வரும் தீவு நாடான தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கப்பல்கள் உள்ளிட்ட போர் விமானக்குழுவை அனுப்பி அச்சுறுத்தியுள்ளது.

    சீன ராணுவம் 38 போர் விமானங்களையும், 9 கடற்படைக் கப்பல்களையும் தைவானைச் சுற்றி நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை அனுப்பியுள்ளது.

    புதன்கிழமை காலை முதல் மதியம் வரை, சீன ராணுவம் மேலும் 30 விமானங்களை பறக்கவிட்டிருக்கிறது. அவற்றில் ஜே-10 மற்றும் ஜே-16 போர் விமானங்களும் அடங்கும். இவற்றில் 32 விமானங்கள் தைவான் ஜலசந்தியின் (தீவுக்கும் பிரதான நிலப்பகுதிக்கும் இடையில் ஒரு இடைப்பகுதியாக கருதப்படும் அதிகாரப்பூர்வமற்ற எல்லை) நடுப்பகுதியைக் கடந்து பறந்தது. பின்னர், மேலும் 23 விமானங்கள் நடுக்கோட்டைக் கடந்தன.

    தைவான் நாட்டு ராணுவம், படையெடுப்புகளுக்கு எதிராக தன்னை காப்பதற்கான தயார்நிலை பயிற்சிகளை மேற்கொள்ளும் வருடாந்திர ஹான் குவாங் (Han Guang) பயிற்சியில் ஈடுபடவிருக்கிறது.

    ஒவ்வொரு வருடமும் தைவானில் பொதுமக்கள் வான்வழி போர் தாக்குதல்களின் போது பாதுகாப்பாக வெளியேறவும், இயற்கை பேரழிவுகளின் போது தங்களை காத்து கொள்ளவும், "வான்'ஆன்" (Wan'an) பயிற்சிகள் எனும் வழிமுறைகள் மூலம் பயிற்சி அளிக்கப்படுவார்கள். வரும் வாரங்களில் தைவானில் இது நடக்க இருக்கிறது. இந்த பின்னணியில், சீனாவின் அத்துமீறல் நடந்திருக்கிறது.

    தைவானுக்கு முழு உரிமை கொண்டாடி வரும் சீனா, சமீபத்திய ஆண்டுகளில், தைவானின் அரசியல் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்திருக்கிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக தைவானை நோக்கி அனுப்பும் ராணுவ விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம், கடற்படை கப்பல்களையும், டிரோன்களையும் தைவானுக்கு அருகிலுள்ள கடற்பரப்பிற்கு சீனா அனுப்பி வைத்தது.

    நேற்றைய மற்றும் இன்றைய ராணுவ வெளிக்காட்டுதல்களில் சீனா, தனது H-6 ரக குண்டுவீச்சு விமானங்களை தைவானின் தெற்கே தீவைக் கடந்து, பின் சீனாவின் தெற்கு கடற்கரையை நோக்கி திருப்பியது.

    முன்னாள் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் வருகையை தொடர்ந்து கடந்த ஆகஸ்டில் சமீபத்திய ஆண்டுகளில் நடந்திராத மிகப்பெரிய ராணுவப் பயிற்சிகள், சீனாவால் மேற்கொள்ளப்பட்டன.

    இதில் தைவான் தீவின் மீது சீனா ஏவுகணைகளை செலுத்தியது. சீனாவின் ராணுவ பயிற்சிகளால், தைவான் ஜலசந்தியின் வர்த்தக பாதைகள் சீர்குலைந்து, விமானங்கள் தங்கள் வான்பாதையை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் உருவாகியது.

    ஏப்ரல் மாதம், தைவான் ஜனாதிபதி, ட்ஸாய் இங்-வென் உடன் தற்போதைய அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியின் சந்திப்பின் எதிரொலியாக தைவானை சுற்றியுள்ள ஆகாய மற்றும் கடல் பகுதிகளில் பெரிய அளவிலான போர் தயார்நிலை பயிற்சிகளையும் சீன ராணுவம் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

    • 71 சீன விமானங்கள், 9 கப்பல்கள் தைவானை சுற்றி வளைத்து இன்று போர் பயிற்சியில் ஈடுபட்டன.
    • இன்று 2-வது நாளாக சீனா போர் பயிற்சியை தொடர்ந்துள்ளது.

    தைபே:

    தைவான் அதிபர் சாய் இங் வென் சமீபத்தில் தென் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தைபேவுக்கு வரும் வழியில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்றார்.

    இந்தப் பயணத்தின் போது தைவான் அதிபரை அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, இந்தச் சந்திப்பு நடைபெறக் கூடாது என இருதரப்பையும் எச்சரித்தது.

    சீனாவின் எச்சரிக்கையையும் மீறி கடந்த சில தினங்களுக்கு முன், தைவான் அதிபர் சாய் இங் வென்னை அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி சந்தித்துப் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த சீனா, தைவானைச் சுற்றிவளைத்து போர் பயிற்சியை தொடங்கியது.

    தைவானைச் சுற்றிய வான் மற்றும் நீர் பரப்பில் சீன போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் கடும் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன என சீன ராணுவமும் தெரிவித்தது.

    இந்தப் போர் பயிற்சியானது இன்றும் தொடர்ந்தது. இதன்படி, இன்று காலை 6 மணியளவில் தைவானைச் சுற்றி 71 சீன விமானங்கள், 9 கப்பல்கள் வட்டமிட்டன. இதனால் தைவானைச் சுற்றி இன்று 2-வது நாளாக சீனா போர் பயிற்சியை தொடர்ந்துள்ளது என்பது தெளிவானது. இவற்றில் 45 விமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில், ஜே-11, ஜே-10, ஜே-16, ஒய்-8 ஏ.எஸ்.டபிள்யூ., ஒய்-20, கே.ஜே.-500 உள்ளிட்ட விமானங்களும் அடங்கும். அவை தைவான் ஜலசந்தியின் மையப்பகுதிக்குள் நுழைந்து தென்மேற்கு நகருக்குள் சென்றது என தைவான் அமைச்சகம் தெரிவிக்கின்றது.

    இந்நிலையில், தைவான் எங்களது தாய்வீடு. இந்த நிலத்தின் ஒவ்வொரு கதையும் எங்களது நினைவுகளில் பதிந்துள்ளது. எங்களது தாய்நாட்டை மற்றும் எங்களது வீட்டைப் பாதுகாக்க முழு மனதோடு, நாங்கள் போராடி வருகிறோம் என தெரிவித்துள்ளது.

    • தைவான் விவகாரத்தில் தேசிய இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் இப்போதும் சீனா உறுதியாக உள்ளது.
    • சீனாவுக்கு தீங்கிழைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் சில நாடுகள் தைவானுக்கு ஆதரவாக செயல்படுகின்றன.

    தைவானை, சீனா தனது நாட்டின் ஒரு பகுதி என்று சொந்தம் கொண்டாடி வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    தைவானுடன் இணைந்து அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு சென்றார்.

    அதேபோல் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தற்போது தைவான் சென்றுள்ளது. இது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தநிலையில் தைவானை ஆதரிக்கும் நாடுகளுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து சீனாவின் தைவான் விவகார அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "தைவான் விவகாரத்தில் தேசிய இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் இப்போதும் சீனா உறுதியாக உள்ளது. சீனாவுக்கு தீங்கிழைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் சில நாடுகள் தைவானுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. அந்த நாடுகள் நெருப்புடன் விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

    • தைவானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது.
    • சீனா தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என்று தொடர்ந்து கூறி வருகிறது.

    பீஜிங் :

    சீனாவில் 1927-ம் ஆண்டு முதல் 1949-ம் ஆண்டு வரை நடந்த உள்நாட்டு போருக்கு பின் தைவான் சீனாவிடம் இருந்து பிரிந்து தனி நாடாக உருவானது. ஆனால் சீனாவோ தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என்று தொடர்ந்து கூறி வருகிறது.

    இதனால் உலகின் பிற நாடுகள் தைவானின் சுதந்திரத்தை ஆதரிப்பதை சீனா கடுமையாக எதிர்க்கிறது. ஆனால் அதை மீறி தைவானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது.

    இந்த விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே மோதல் போக்கு நீடிக்கும் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி தைவானுக்கு சென்றார்.

    இதனால் கடும் கோபம் அடைந்த சீனா தைவானை நாலாபுறமும் சுற்றி வளைத்து கடல் மற்றும் வான்வெளியில் போர் பயிற்சியை தொடங்கியது. சீன நேரப்படி கடந்த 4-ந் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த போர் பயிற்சி 8-ந் தேதி மதியம் 12 மணி வரை தொடரும் என சீன ராணுவம் அறிவித்தது.

    அதன்படியே நேற்று முன்தினம் மதியம் 12 மணி வரையில் தொடர்ந்து 4 நாட்களாக சீனா ராணுவம் கடுமையான போர் பயிற்சியில் ஈடுபட்டது. சீன ராணுவத்தின் இந்த போர் பயிற்சி தங்கள் நாட்டின் மீது படையெடுப்பதற்கான ஒத்திகை என தைவான் குற்றம் சாட்டியது.

    இந்த நிலையில் சீன ராணுவம் நேற்று தைவானை சுற்றி புதிய போர் பயிற்சியை தொடங்கியது. கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் மூலம் கடல்வழி தாக்குதல் மற்றும் தொலைதூர வான்தாக்குதல் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

    மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் இந்த போர் பயிற்சி நடத்தப்படுவதாக சீன ராணுவம் கூறியது. அதேசமயம் இந்த புதிய போர் பயிற்சி எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதை சீன ராணுவம் தெரிவிக்கவில்லை.

    தைவானை சுற்றி தொடர்ந்து 4 நாட்கள் போர் பயிற்சியை நடத்திய பின்னர் சீனா மீண்டும் மிகப்பெரிய போர் பயிற்சியை தொடங்கி இருப்பதால் தைவான்-சீனா இடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

    • 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
    • இந்த தடைகளால் தைவான் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்படும்.

    பீஜிங் :

    2-ம் உலகப்போருக்கு பிறகு சீனாவிடம் இருந்து பிரிந்து சென்ற தைவான், தன்னை ஒரு சுதந்திர நாடாக கூறி வருகிறது. ஆனால் சீனாவோ, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது.

    இந்த சூழலில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு செல்ல இருப்பதாக சமீபத்தில் அமெரிக்க அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, நான்சி பெலோசி தைவான் சென்றால் அமெரிக்கா அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என பகிரங்கமாக எச்சரித்தது.

    ஆனால் சீனாவில் எதிர்ப்பயைும், மிரட்டலையும் புறந்தள்ளிவிட்டு நான்சி பெலோசி நேற்று முன்தினம் தைவான் சென்றார். கடும் பதற்றத்துக்கு மத்தியில் நான்சி பெலோசியின் விமானம் தைவான் தலைநகர் தைபேயில் தரையிறங்கியது. அங்கு அவருக்கு தைவான் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

    அதை தொடர்ந்து அவர் தைவான் அதிபர் சாய் இங் வென் மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகளை சந்தித்து பேசினார்.

    பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், "தைவானுக்கு அமெரிக்காவின் ஆதரவு உண்டு. தைவானுடன் நாங்கள் நிற்கிறோம். தைவானுக்கு பாதகமாக எதுவும் நடக்க நாங்கள் விடமாட்டோம். தைவான் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை நாங்கள் விரும்புகிறோம். இதிலிருந்து தைவான் பின்வாங்கக் கூடாது. தைவானிலும் உலகெங்கிலும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாடு இரும்புக்கரம் நிறைந்ததாகவே உள்ளது" என கூறினார்.

    இந்த நிலையில் நான்சி பெலோசியின் வருகையால் கடும் கோபத்தில் உள்ள சீனா, இந்த விவகாரத்தில் தைவானை தண்டிக்கும் விதமாக தைவான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.

    அதன்படி தைவானின் சுதந்திரத்தை ஆதரிக்கும் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. தடை விதிக்கப்பட்ட நிறுவனங்களில் பெரும்பாலானவை உணவு தயாரிப்பு நிறுவனங்கள் என்று கூறப்படுகின்றன.

    மேலும் தைவானின் தேயிலை இலைகள், உலர் பழங்கள், தேன், கொக்கோ பீன்ஸ், காய்கறிகள் மற்றும் மீன்வகைகள் ஆகியவற்றின் இறக்குமதிக்கு சீனா தடை விதித்துள்ளது. அதே போல் சீனாவில் இருந்து தைவானுக்கு இயற்கை மணல் ஏற்றுமதியை நிறுத்துவதாகவும் சீனா அறிவித்துள்ளது.

    தைவான் மீது சீனா கடுமையான அணுகுமுறையை கொண்டிருந்தாலும் சீனா தைவானின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருந்து வருகிறது. எனவே சீனாவின் இந்த தடைகளால் தைவான் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

    இதனிடையே நான்சி பெலோசியின் வருகைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக சீனாவுக்கான அமெரிக்கா தூதரை சீனா நேரில் அழைத்து சம்மன் வழங்கியது. மேலும் அமெரிக்கா தனது தவறுகளுக்கு விலையை கொடுக்கும் எனவும் சீனா எச்சரித்தது.

    • பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் நாடுகளுடன் சீனாவிற்கு கடல்சாா்ந்த பிரச்சினை உள்ளது.
    • அமெரிக்கா ஆசிய நாடுகளிடம் அச்சத்தை உருவாக்கி, தென் சீனக் கடல் பகுதிகளில் போர்க் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை நிறுத்துகிறது.

    பெய்ஜிங்:

    சீனாவுக்கு ஆசிய நாடுகள் தரும் ஆதரவை அபகரிக்க அமொிக்கா முயற்சிப்பதாக சீனாவின் பாதுகாப்பு மந்திரி வெய் ஃபெங்க் குற்றம் சாட்டி உள்ளாா்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பன்முகத்தன்மை என்ற போா்வையில் அமெரிக்கா தனது நாட்டின் நலன்களை பிற நாடுகளின் மீது திணிக்கிறது. எந்த நாடும் தன் விருப்பத்தை மற்ற நாடுகள் மீது திணிக்கக்கூடாது, பிற நாடுகளை கொடுமைப்படுத்த கூடாது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிா்ப்பதற்காக, இந்தோ-பசிபிக் என்ற பெயரில் ஒரு சிறிய அமைப்பை அமெரிக்கா உருவாக்கும் முயற்சி, ஆசிய நாடுகள் சீனாவுக்கு தரும் ஆதரவை பறிக்கும் முயற்சியே ஆகும்.

    இது மற்றவர்களைக் கட்டுப்படுத்தவும் மோதலையும் உருவாக்குவதற்கான ஒரு உத்தியாகும். சீனா தனது ராணுவத்தை விரைவாக நவீனப்படுத்தி வருகிறது. சமீபத்தில் சீனா, சாலமன் தீவுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது. இது பசிபிக் கடற்பகுதியில் சீன கடற்படை தளம் உருவாகலாம் என்ற அச்சத்தை அமெரிக்கா உருவாக்கி, தென் சீனக் கடல் பகுதிகளில் போர்க் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அமெரிக்கா நிறுத்துகிறது. இது எங்கள் பிராந்திய விவகாரங்களில் தலையிடுவதாகும்.

    பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் நாடுகளுடன் சீனாவிற்கு கடல்சாா்ந்த பிரச்சினை உள்ளது. இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தங்கள் கடல் சாா்ந்த பிரச்சினைகளை தாங்களாகவே தீா்த்து கொள்ள வேண்டும். தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே சீனாவை எதிர்க்கும் போர்வையில் தைவானுக்கு ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

    இவ்வாறு சீனா பாதுகாப்பு மந்திரி கூறினார்.

    ×