search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐநா"

    • உரையாற்ற உள்ள உறுப்பு நாட்டு தலைவர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக ஐ.நா. வெளியிடப்பட்டுள்ளது.
    • மோடி கடைசியாக செப்டம்பர் 2021-ல் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றினார்.

    நியூயார்க்:

    ஐ.நா. பொதுச்சபையில் 79-வது கூட்டம் வருகிற செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதில் பங்கேற்று உரையாற்ற உள்ள உறுப்பு நாட்டு தலைவர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக ஐ.நா. வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 26-ம் தேதி ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மோடி கடைசியாக செப்டம்பர் 2021-ல் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுமார் 1.9 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
    • போர் காரணமாக காசா இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது.

    இஸ்ரேல் மற்றும் காசா இடையே போர் துவங்கியதில் இருந்து காசாவை சேர்ந்த பத்தில் ஒன்பது பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

    பாலஸ்தீன எல்லை பகுதியில் உள்ள ஐநா-வின் OCHA அமைப்பு தலைவர் ஆண்ட்ரியா டி டொமினிகோ காசாவில் சுமார் 1.9 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய அவர், "கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து இதுவரை காசா எல்லையில் ஒவ்வொரு பத்தில் ஒன்பது பேர் குறைந்தபட்சம் ஒருமுறையேனும் இடம்பெயர்ந்து இருக்கலாம் என்று கணிக்கிறோம். நாங்கள் 1.7 மில்லியன் பேர் இடம்பெயர வாய்ப்புள்ளதாக கணித்திருந்தோம்," என்று தெரிவித்தார்.

    இஸ்ரேல் போர் காரணமாக காசா இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக வடக்கில் சுமார் 3 முதல் 3.5 லட்சம் பேர் வரை சிக்கிக் கொண்டு தெற்கிற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

    • குழந்தைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் தொடர்ந்து கடுமையான மீறல்கள் உள்ளன.
    • அதன் கவனத்தை திசை திருப்புவதற்கான வழக்கமான மற்றொரு முயற்சி.

    ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் குழந்தைகள் மற்றும் ஆயுதங்கள் விதிமீறல் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் தூதர் காஷ்மீர் குறித்து பேசினார். அதற்கு இந்தியாவுக்கான ஐ.நா.வின் துணை நிரந்தர பிரதிநிதி ஆர். ரவீந்திரா கடும் கண்டனம் தெரவித்ததுடன், தக்க பதிலடி கொடுத்தார்.

    குழந்தைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் தொடர்ந்து கடுமையான மீறல்கள் உள்ள நிலையில், அதன் கவனத்தை திசை திருப்புவதற்கான வழக்கமான மற்றொரு முயற்சி. எந்த தடையுமின்றி பாகிஸ்தானில் தொடர்ந்து மீறல்கள் நடைபெற்று வருகிறது.

    எங்கள் நாட்டிற்கு எதிராக ஒரு பிரதிநிதி கூறிய குற்றச்சாட்டுக்கு காலத்தின் நலன் கருதி இது முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. ஆதாரமற்றது என குறுகிய பதில் அளிக்கிறேன். இந்த அடிப்படையற்ற கருத்துகளை நான் திட்டவட்டமாக நிராகரித்து அவர்களை கண்டிக்கிறேன் என்றார்.

    மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை இந்த குறிப்பிட்ட பிரதிநிதி அல்லது அவரது நாடு எதை நம்பினாலும் அல்லது விரும்பினாலும், அவை இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தன, எப்போதும் இருக்கும் என்றார்.

    • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 101 பாலஸ்தீனிய பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
    • குழந்தைகளின் கால்களை அகற்றும்போது சில சமயங்களில் மயக்க மருந்து கூட செலுத்துவதற்கு இல்லாத சூழ்நிலைதான் உள்ளது

    பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 2023 அக்டோபர் மாதம் துவங்கி கடந்த ௯ மதங்களாக நீடித்து வரும் நிலையில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 37, 658 பேர் உயிரிழந்துள்ளனர். காஸா நகரம் போரினால் முற்றிலும் உருகுலைந்துள்ள நிலையில் தற்போது ராஃபா நகரின் மீது தனது கண்களை இஸ்ரேல் திருப்பியுள்ளது.

    அகதி முகாம்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள இடங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் சர்வதேச சமுதாயத்தின் கடும் எதிர்ப்புக்கு இஸ்ரேல் ஆளாகியுள்ளது. போரை நிறுத்துவதற்கான முயற்சியில் ஐ.நா மெனக்கிட்டு வந்தாலும் இஸ்ரேல் பிடி கொடுப்பதாக தெரியவில்லை.

    எல்லைகளை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளதால் காசா மற்றும் ராஃபா நகரத்தில் தாக்குதல்களால் படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையும் நிவாரணப் பொருட்களும் கிடைக்காத சூழல் நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 101 பாலஸ்தீனிய பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

     

     

    இந்நிலையில் ஐநாவின் பாலஸ்தீன நிவாரண பிரிவான UNRWA தலைவர் பிலிப் லசாரினி அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளார. அதாவது, காசாவில் சராசரியாக தினமும் 10 குழந்தைகள் தங்களது ஒன்று அல்லது இரண்டு கால்களையும் இழக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு 10 குழந்தைகள் எனில் 260 நாட்களாக நடந்து வரும் இந்த போரில் காசாவில் சுமார் 2,000 குழந்தைகள் தங்களின் கால்களை இழந்துள்ளனர் .

     

     

    மேலும் தாக்குதலால் படுகாயமடைந்த குழந்தைகளின் கால்களை அகற்றும்போது சில சமயங்களில் மயக்க மருந்து கூட செலுத்துவதற்கு இல்லாத சூழ்நிலை இருப்பதாக பிலிப் லசாரினி தெரிவிக்கிறார். இந்த மொத்த போரிலும் இதுவரை சுமார் 21,000 குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • காசாவில் இனப்படுகொலை நடத்தப்பட்டதாக அறிவிக்க தென்ஆப்பிரிக்கா வழக்கு தொடர்ந்தது.
    • ரஃபா மீது தற்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு பெரும்பாலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த தாக்குதலை இனப்படுகொலை என அறிவிக்க வேண்டும் என தென்ஆப்பிரிக்கா ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் ஹமாஸ்க்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறோம். இனப்படுகொலை நடைபெறவில்லை என இஸ்ரேல் மறுப்பு தெரிவித்தது.

    தற்போது பாலஸ்தீன மக்கள் அதிகமாக வசித்து வரும் ரஃபா நகர் மீது இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால் அதிக அளவில் மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. ஏற்கனவே 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் காசாவில் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் ரஃபா மீதான ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதிலும் இஸ்ரேல் இந்த உத்தரவை பின்பற்ற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என்றால், உலக நாடுகளால் தனித்து விடப்படும் அபாயம் ஏற்படும்.

    ஆனால் காசா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும். அதாவது போர் நிறுத்தத்தை நீதிமன்றம் வலியுறுத்தவில்லை.

    சமீபத்தில் மூன்று ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக தெரிவித்தது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனால் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. இந்த தாக்குதலில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    • ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • கடந்த வாரம், கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கிராமங்களில் 315 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மத்திய ஆப்கானிஸ்தானில் உள்ள கோர் மாகாணப் பகுதிகளில் இதுவரை கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வெள்ளப்பெருக்கால் சாலைப் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் காயமடைந்தவர்களளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கோர் மாகாணத்தின் நகர்ப்பகுதிகளில் சுமார் 2,000 வீடுகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாகவும் 2000க்கும் மேற்பட்ட கடைகள் தண்ணீருக்கு அடியில் மூழ்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    முன்னதாக விமானப்படை ஹெலிகாப்டர் மூலம், கோர் மாகாண ஆற்றில் விழுந்தவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியின் போது தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக விபத்துக்குள்ளானது, ஒருவர் கொல்லப்பட்டார். கடந்த வாரம், கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கிராமங்களில் 315 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    ஆப்கானிஸ்தானில் வழக்கத்துக்கு மாறாக பெய்து வரும் கனமழைக்கு காலநிலை மாற்றமே காரணம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக ஆப்கனிஸ்தானை ஐநா வரையறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 




     


    • காசாவின் வடக்குப்பதியில் உள்ள இடங்களை இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி சீர்குலைத்துள்ளது.
    • இஸ்ரேல் தாக்குதல் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த இடத்தில் இருந்து இடம் பெயர்ந்துள்ளனர்.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தியது. காசா முனையின் வடக்குப் பகுதியை முற்றிலுமாக சீர்குலைத்துள்ளது. தெற்கு காசாவிலும் வான் தாக்குதல் நடத்தி வருகிறது. தரை தாக்குதலுக்கும் தயாராகி வருகிறது.

    காசாவில் மொத்தம் 23 லட்சம் மக்கள் உள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் சொந்த இடத்தை விட்டு வெளியேறி முகாம்களில் வசித்து வருகின்றனர்.

    தற்போது முகாம்களில் வசித்து வரும் பாலஸ்தீன மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க ஐ.நா. முயற்சி மேற்கொண்டு வருகிறது. மனிதாபிமான உதவிகள் கிடைக்க இஸ்ரேல் உதவ வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா, ஐ.நா. உள்ளிட்டவைகளின் வலியுறுத்தலின்படி நேற்று, இஸ்ரேல் வடக்கு காசாவிற்கான ஒரு எல்லையை திறந்துள்ளது.

    இந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் சீர்குலைந்துள்ள வீடுகளை சீரமைப்பதற்கு 2040 வரை ஆகும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீரென இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

    அதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியது. ஏழு மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ரஃபா நகரைத் தவிர மற்ற நகரங்கள் ஏறக்குறைய சீர்குலைக்கப்பட்டுள்ளனர். இதில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன பொதுமக்கள கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பட்டினியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 5-வது ஆண்டாக அதிகரித்துள்ளது.
    • எல் நினோ வானிலை நிகழ்வு மேற்கு மற்றும் தென்னாப்பிரிக்காவில் கடுமையான வறட்சிக்கு வழிவகுக்கும்.

    நியூயார்க்:

    உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்கள் பட்டினியால் வாடி வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த ஆண்டில் (2023) 28 கோடி பேர் கடுமையான பட்டினியை எதிர்கொண்டனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2023-ம் ஆண்டில் உலகம் முழுவதும் உணவு பாதுகாப்பின்மை மோசமடைந்தது. சுமார் 28.20 கோடி மக்கள் கடுமையான பட்டினியால் பாதிக்கப்பட்டனர்.

    குறிப்பாக போர் சூழல் உள்ள காசா மற்றும் சூடானில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. தீவிர வானிலை நிகழ்வுகள் பொருளாதார பாதிப்புகள் உள்ளிட்டவைகளால் கடுமையான உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

    பட்டினியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 5-வது ஆண்டாக அதிகரித்துள்ளது. போர், காலநிலை மற்றும் வாழ்க்கை செலவு நெருக்கடி ஆகியவற்றால் 2023-ம் ஆண்டில் சுமார் 30 கோடி மக்கள் கடுமையான உணவு நெருக்கடியை எதிர்கொண்டனர். 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-ம் ஆண்டில் 2.40 கோடி மக்கள் அதிகரித்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தான், காங்கோ ஜனநாயக குடியரசு, எத்தியோப்பியா, நைஜீரியா, சிரியா மற்றும் யோமன் ஆகிய நாடுகளில் நீடித்த பெரும் உணவு நெருக்கடிகள் தொடர்கின்றன.

    ஹைட்டி நாட்டில் மோசமான அரசியல் ஸ்திரமின்மை மற்றும் விவசாய உற்பத்தி குறைந்ததால் பட்டினி ஏற்பட்டுள்ளது. எல் நினோ வானிலை நிகழ்வு மேற்கு மற்றும் தென்னாப்பிரிக்காவில் கடுமையான வறட்சிக்கு வழிவகுக்கும். 13.50 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள 20 நாடுகள் அல்லது பிரதேசங்களில் கடுமையான பட்டினிக்கு மோதல் அல்லது பாதுகாப்பின்மை சூழ்நிலைகள் முக்கிய காரணமாக உள்ளன.

    வெள்ளம் அல்லது வறட்சி போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள் 18 நாடுகளில் 7.20 கோடி மக்களின் கடுமையான உணவு பாதுகாப்பின்மைக்கு முக்கிய காரணமாகும். பொருளாதார பாதிப்புகளால் 21 நாடுகளில் 7.50 கோடி மக்கள் பட்டினி பாதிப்பை சந்தித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
    • நாம் வாழும் 21-ம் நூற்றாண்டின் உலகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐ.நா. அமைப்புக்கான சீர்திருத்தங்களை நாங்கள் நிச்சயமாக ஆதரிக்கிறோம்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 15 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. இதில் வீட்டோ அதிகாரம் கொண்ட 5 நிரந்தர உறுப்பினர்கள் (அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா) மற்றும் 2 ஆண்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நிரந்தரமற்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று இந்தியா கோரி உள்ளது.

    இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறும்போது, நாம் வாழும் 21-ம் நூற்றாண்டின் உலகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐ.நா. அமைப்புக்கான சீர்திருத்தங்களை நாங்கள் நிச்சயமாக ஆதரிக்கிறோம். அது என்ன என்பது குறித்து என்னிடம் எந்த விவரமும் இல்லை, ஆனால் நிச்சயமாக நாங்கள் அதை அங்கீகரிக்கிறோம் என்றார்.

    • உங்களில் பெரும்பாலானவர்கள் பட்டினியை அனுபவித்து இருக்கமாட்டீர்கள்.
    • 50 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் மற்றவர்கள் கார்களில் ‘லிப்ட்’ கேட்டே பயணித்துக்கொண்டு இருந்தேன்.

    நியூயார்க்:

    ஐ.நா.வில் இந்திய தூதரகம் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல தொழிலதிபரும், இன்போசிஸ் நிறுவனருமான நாராயணமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், 'உங்களில் பெரும்பாலானவர்கள் பட்டினியை அனுபவித்து இருக்கமாட்டீர்கள். ஆனால் நான் அனுபவித்து இருக்கிறேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் மற்றவர்கள் கார்களில் 'லிப்ட்' கேட்டே பயணித்துக்கொண்டு இருந்தேன். அப்போது பல்கேரியாவுக்கும் இன்றைய செர்பியாவுக்கும் இடையே உள்ள நிஷ் என்ற பகுதியில் 120 மணி நேரம் (5 நாட்கள்) பட்டினி கிடந்தேன்' என்று தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் நிபுணர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஜெர்மனி தெரிவித்த கருத்துக்காக, அந்நாட்டு தூதரக அதிகாரியையும் அழைத்து கண்டனம் தெரிவித்தது.
    • அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் முடக்கம் ஆகிய பிரச்சனைகள் பற்றி நிருபர்கள் கேட்டனர்.

    நியூயார்க்:

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

    அதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் 3 நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்தார். இந்தியாவில் உள்ள நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

    அமெரிக்காவின் தலையீடு தேவையற்றது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரியை நேரில் அழைத்து எதிர்ப்பு தெரிவித்தது.

    அதுபோல் ஏற்கனவே ஜெர்மனி தெரிவித்த கருத்துக்காக, அந்நாட்டு தூதரக அதிகாரியையும் அழைத்து கண்டனம் தெரிவித்தது.

    இருப்பினும், மீண்டும் அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் இப்பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்தார்.

    இந்நிலையில், ஐ.நா.வும் இப்பிரச்சனை பற்றி கருத்து கூறியுள்ளது. ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரசின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் அன்றாட நிருபர்கள் சந்திப்பை நடத்தினார்.

    அப்போது, அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் முடக்கம் ஆகிய பிரச்சனைகள் பற்றி நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது:-

    தேர்தல் நடக்கும் எந்த நாட்டையும் போலவே, இந்தியாவிலும் ஒவ்வொருவரது அரசியல் உரிமைகளும், சிவில் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்று பெரிதும் நம்புகிறோம்.

    ஒவ்வொருவரும் நேர்மையான, சுதந்திரமான சூழ்நிலையில் வாக்களிக்க முடியும் என்றும் நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வடக்கு காசா பகுதியில் இருந்து வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தது
    • பசியின் காரணமாக உணவு வாகனங்களை கும்பல்கள் தாக்கி களவாடுகின்றன

    கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் 130 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது.

    பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேலிய ராணுவ படையினர் (Israeli Defence Forces) ஹமாஸ் (Hamas) அமைப்பினரை அழிக்க வான்வழியாகவும், தரை வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    மேலும், ஹமாஸ் அமைப்பினரின் வசம் உள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகளை காசா பகுதி முழுவதும் அனைத்து இடங்களிலும் இஸ்ரேலிய ராணுவம் தேடி வருகின்றனர்.

    இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையை அடுத்து வடக்கு காசாவில் இருந்து மக்களில் பலர் கூட்டம் கூட்டமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர்.

    அங்கிருந்து செல்லாமல் தங்கிய மக்களுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் (World Food Programme) எனும் சர்வதேச அமைப்பின் வழியாக உணவு வழங்கப்பட்டு வந்தது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வடக்கு காசாவில் உணவுகளை வினியோகிக்க சென்ற இந்த அமைப்பினரின் வாகனங்களை பசி மற்றும் வறட்சி காரணமாக காசா மக்கள் சூழ்ந்து கொண்டு உணவு பண்டங்களை சூறையாடினர்.

    ஒரு சில இடங்களில் வாகன ஓட்டுனர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.

    இந்நிலையில், அங்கு நிலவும் அசாதாரணமான சூழலால், உணவு வழங்குவதை உலக உணவு திட்ட அமைப்பினர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.


    இது குறித்து உலக உணவு திட்ட அமைப்பு அறிவித்திருப்பதாவது:

    வடக்கு காசா பகுதியில் வன்முறையும், கட்டுப்பாடற்ற சூழலும் நிலவுகிறது. அங்கு சட்டம் ஒழுங்கற்ற நிலை உருவாகி விட்டது.

    உணவுக்காக கும்பல் கும்பலாக தாக்குதலில் ஈடுபடுகின்றனர். துப்பாக்கிச் சூடு மற்றும் உணவு களவாடப்படுதல் சம்பவங்கள் அதிகரித்து விட்டது.

    பாதுகாப்பற்ற சூழலில் உள்ள மக்கள் சிறிது சிறிதாக பசி மற்றும் நோய் தாக்குதல் ஆகியவற்றால் தீவிர துன்பத்தை அனுபவிக்கின்றனர்.

    உணவு வினியோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு கோரியுள்ளோம்.

    விரைவில் வினியோகம் மீண்டும் தொடங்கப்படும்.

    இவ்வாறு அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

    வடக்கு காசாவில் உணவு, குடிநீர், மருந்து ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பஞ்சம் நிலவுகிறது.

    இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களினால் பாலஸ்தீனத்தில் இதுவரை 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    ×