என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீனா"

    • மக்கள் தொகையைச் சமநிலையில் வைத்திருக்கத் தேவையான 2.1 என்ற அளவிற்கும் கீழே குறைந்துள்ளது.
    • தமிழ்நாட்டில் இதுபோன்ற மாவட்டங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்தது.

    2025-ஆம் ஆண்டில் உலக நாடுகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக மக்கள் தொகை வீழ்ச்சி உருவெடுத்துள்ளது.

    மக்கள் தொகை பெருக்கத்தைப் பற்றி கவலைப்பட்ட உலக நாடுகள், இப்போது போதிய குழந்தைகள் பிறக்காதது குறித்து அச்சமடைந்துள்ளது.

    இதனால் ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பல சலுகைகளை அறிவித்தும் பெரிய பயன் கிடைக்காததால் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகின்றன.

    உலகின் 60%-க்கும் அதிகமான நாடுகளில் பிறப்பு விகிதமானது, மக்கள் தொகையைச் சமநிலையில் வைத்திருக்கத் தேவையான 2.1 என்ற அளவிற்கும் கீழே குறைந்துள்ளது.

    ஐ.நா. அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, உலக கருத்தரிப்பு விகிதம் 2.4-ஐத் தாண்டவில்லை.

    1950-களில் 4.7-ஆக இருந்த உலக சராசரி, இப்போது பாதியாகக் குறைந்துள்ளது.

    2025இல், உலக கருத்தரிப்பு விகிதம் முந்தைய ஆண்டை விட 0.37% குறைந்து 2.40 ஆக உள்ளது. ஐ.நா. மக்கள்தொகை அறிக்கை இதை அசாதாரண குறைவு என்று விவரிக்கிறது.

    இந்தக் குறைவு, 2050-க்குள் உலக மக்கள்தொகையை 2.1-க்கு கொண்டுவரும் என்று ஐ.நா. கணிக்கிறது. உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் 2.1 ஐ கீழ் உள்ளன. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 2.0 ஆக, நகர்ப்புறங்களில் 1.7 ஆகக் குறைந்துள்ளது.

    சிக்கலில் சீனா: 

    சீனாவின் நிலைமை 2025-இல் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக அந்நாட்டின் மக்கள் தொகை தொடர்ந்து சுருங்கி வருகிறது. சீனாவின் கருத்தரிப்பு விகிதம் 2025-ல் 1.01-ஆக உள்ளது.

    அண்மைக் காலம் வரை உலக மக்கள் தொகையில் முதலிடத்திலிருந்த சீனாவை இந்தியா கடந்த 2023 முந்தியது.

    தற்போது உலகின் மக்கள் தொகையில் 145 கோடி மக்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

    இதற்கு சீனா ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை மட்டுமே என சட்டம் போட்டு மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதே காரணம்.

    கடந்த 1980-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தம்பதிகள் ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றி ருந்தால் சலுகைகள் மறுக்கப்பட்டது. அபராதமும் விதிக்கப்பட்டது.

    ஆனால் அதுவே இப்போது அந்நாட்டுக்கு வினையாக வந்து முடிந்துள்ளது.

    2015-ம் ஆண்டு முதல் 2 குழந்தைகள் பெற்று கொள்ளலாம் என்று கொள்கை தளர்த்தப்பட்டது. 2021-ம் ஆண்டு 3 குழந்தைகளை பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்து குழந்தை பிறப்பை சீன அரசு ஊக்குவித்தது.

    இருப்பினும் பல சீனர்கள் குறிப்பாக இளம் தலைமுறையினர் இப்போது அந்த ஒரு குழந்தை கூட வேண்டாம் என்ற மனப்பான்மைக்கு வந்துவிட்டனர்.

    இதனால் சீனா தனது வரலாற்றிலேயே இல்லாத வகையில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் கொள்கைகளை வகுத்து அமல்படுத்தி வருகிறது.

    அதன் படி சீனாவில் மூன்று குழந்தைகளை பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு மிகப்பெரிய அளவில் வரிச்லுகைகள் மற்றும் நேரடிப் பண உதவி வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 3,600 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.44 ஆயிரம்) மானியம் வழங்கப்படும் சீன அர சாங்கம் அறிவித்தது.

    இந்த நிதி குழந்தையின் 3 வயது வரை வழங்கப்படும். அதன் படி ஒரு குழந்தைக்கு ரூ.1.30 லட்சம் மானியம் வழங்கப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    அனைத்து பிறப்பு தொடர்பான மருத்துவ செலவுகளையும் அரசு ஏற்கும் என்று தெரிவித்துள்ளது.

    ஆணுறை உள்ளிட்ட கருத்தடைச் சாதனங்கள் மீது சீனாவில் பெரும்பாலான பொருட்களுக்கு வரும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி முதல் 13 சதவீத VAT வரி விதிக்கப்படும் என்றும் அண்மையில் சீனா அறிவித்தது.

    இவ்வளவு செய்தும், சீன இளைஞர்கள் அதிக வாழ்க்கைச் செலவு மற்றும் வேலைப் பளு காரணமாகத் திருமணம் மற்றும் குழந்தைப்பேற்றைத் தவிர்த்து வருகின்றனர்.

    அடுத்ததாக ரஷியா..

    உக்ரைன் போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறியதால், ரஷியாவின் பிறப்பு விகிதம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

    அதிபர் புதின் 'பெரிய குடும்பங்களே ரஷியாவின் எதிர்காலம்' என்று கூறி வருகிறார். சோவியத் காலத்து விருதான 'மதர் ஹீரோயின்' விருதை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

    10 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெறும் பெண்களுக்கு பெரும் தொகையும் கௌரவமும் வழங்கப்படுகிறது. தம்பதிகள் வீட்டில் ஒன்றாக இருப்பதற்கென்றே சிறப்பு விடுமுறைகளையும் ரஷிய நிறுவனங்கள் அறிவித்தன.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் இளம்பெண்கள் குடும்பங்களைத் தொடங்க ஊக்குவிக்கும் முயற்சியில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் 25 வயதுக்குட்பட்ட கல்லூரி பெண்களுக்கு 100,000 ரூபிள் (இந்திய மதிப்பில் ரூ.81,000) கணிசமான ஊக்கத்தொகையை ரஷிய அரசு வழங்குகிறது. இது பின்னர் பள்ளியில் பயிலும் பெண்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

    மேலும், கருக்கலைப்புக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், குழந்தை வேண்டாம் என்ற கருத்தைப் பரப்புவதற்குத் தடை விதிக்க மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

    ஜப்பான்:

    குழந்தை பிறப்பை அதிகரிக்க ஜப்பான் தனி அமைச்சகமே வைத்துள்ளது. அங்கு, 'குழந்தை மற்றும் குடும்ப முகமை' அமைச்சகத்தின் மூலம் டேட்டிங் செயலிகளை அரசாங்கமே நடத்தி இளைஞர்களைத் திருமணத்திற்கு ஊக்குவித்து வருகிறது.

    அதிக வேலை நேரம், வேலைப்பளு காரணமாக அந்நாட்டு இளைஞர்கள் தாம்பத்தியத்தின் மீதான ஆர்வத்தை இழந்து வருகின்றனர். தேவைப்பட்டால் வாடகை கணவன் என்ற அளவுக்கு ஜப்பானில் நிலைமை மோசமாகி விட்டது. 

    தென் கொரியா:

    தற்போதைய நிலவரப்படி, 0.7-க்கும் கீழ் என்ற அளவில் உலகின் மிகக்குறைந்த பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ள நாடாக தென் கொரியா உருவெடுத்துள்ளது.

    2025-இல், ஒவ்வொரு குழந்தைப் பிறப்பிற்கும் சுமார் 70 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி அளிக்கும் திட்டங்களை அந்நாடு அறிவித்துள்ளது.

    ஆனால் ஏன்?

    வீடு வாங்குவது மற்றும் குழந்தைகளை வளர்ப்பது என்பது நடுத்தர வர்க்கத்திற்கு எட்டாக்கனியாக மாறியது, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பெண்கள் அதிக கவனம் செலுத்துவதால், திருமண வயது தள்ளிப் போவது, இளைஞர்களிடையே அதிகரித்து வரும் பாலியல் உறவில் ஆர்வமின்மை, கருவுறுதல் பிரச்சனை ஆகியவை இந்த உலகளாவிய பிறப்பு சதேவீத வீழ்ச்சிக்கு காரணங்களாக சுட்டப்படுகின்றன.

    சுதந்திரமான வாழ்க்கை முறையை விரும்பும் இந்த தலைமுறையினரிடையே 'இருவருக்கும் வருமானம் - குழந்தை வேண்டாம்' என்ற கலாச்சாரம் உலகெங்கும் பரவி வருகிறது.

    2025-ஆம் ஆண்டு நமக்கு உணர்த்துவது என்னவென்றால், ரஷியா, சீனா, தென் கொரியாவை போல் பணத்தை அள்ளிக் கொடுத்தால் மட்டும் பிறப்பு விகிதத்தை உயர்த்திவிட முடியாது என்பதாகும்.

    வேலை-வாழ்க்கைச் சமநிலை, பாலின சமத்துவம் மற்றும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை ஆகியவற்றை உருவாக்கினால் மட்டுமே இந்த மக்கள் தொகைச் சரிவை உலக நாடுகள் தடுக்க முடியும்.

    சரி இந்தியாவுக்கு வருவோம்!

    இதற்கிடையே இந்திய அளவில் ஒரு புள்ளிவிரமமும் கவனிக்கப்பட வேண்டியதாகிறது.

    அதாவது, இந்தியாவில் 49 மாவட்டங்களில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    2021 குடிமைப் பதிவுத் தரவுகளின்படி இந்த உண்மை இந்த ஆண்டு தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 7 மாவட்டங்களில் மட்டுமே பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இறப்பதை விடக் குறைவாக இருந்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டில், இறப்பு விகிதம் அதிகமாக உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

    இந்த நிலைமை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை தரவுகள் காட்டுகின்றன. இந்த பிறப்பு விகித குறைவு, கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.

    2019 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 7 மாவட்டங்களில் மட்டுமே பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இறப்பதை விடக் குறைவாக இருந்தது. அதேசமயம் 2021 ஆம் ஆண்டில், இறப்பு விகிதம் அதிகமாக உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரிக்கிறது.

    குறிப்பாக இந்த 49 மாவட்டங்களில் பெரும்பாலானவை தமிழ்நாட்டைச் சேர்ந்தவை.

    2019 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் இதுபோன்ற மாவட்டங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டில், அத்தகைய மாவட்டங்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 37 மாவட்டங்கள் உள்ளன, அப்படிப் பார்த்தால், இந்த எண்ணிக்கை 50 சதவீதத்தை நெருங்கி வருவதாகத் தெரிகிறது.

    இதற்கு நேர் மாறாக உத்தரப் பிரதேசத்தின் 75 மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தின் 51 மாவட்டங்களிலும், பிறப்பு விகிதம் இறப்பு விகிதத்தை விட மிக அதிகமாக உள்ளது. மக்கள் தொகை விகிதத்துக்கு ஏற்ப பாராளுமன்ற தொகுதிகளை வரையறுக்க மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    ஆனால் இதனால் பிரதிநிதித்துவம் குறைக்கப்படும் என தென் மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில் இந்த புள்ளிவிவரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.  

    • 3 குழந்தைகளை பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்து குழந்தை பிறப்பை சீன அரசு ஊக்குவித்தது.
    • பாலியல் ரீதியாகப் பரவும் நோய்கள் அதிகரிப்புக்கு கொண்டு செல்லும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    குழந்தை பிறப்பு சதவீதம் வீழ்ச்சி சீனாவில் 'ஆணுறைக்கு வரி' கருத்தடை மருந்துகளுக்கு வரி விலக்கு ரத்தாகிறது

    சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து குழந்தை பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடந்த 1980-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தம்பதிகள் ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

    ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றி ருந்தால் சலுகைகள் மறுக் கப்பட்டது. அபராதமும் விதிக்கப்பட்டது. அதன் பிறகு 2015-ம் ஆண்டு முதல் 2 குழந்தைகள் பெற்று கொள்ளலாம் என்று கொள்கை தளர்த்தப்பட்டது.

    இதற்கிடையே சமீப ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் கடும் சரிவை சந்தித்தது. இதனால் 2021-ம் ஆண்டு 3 குழந்தைகளை பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்து குழந்தை பிறப்பை சீன அரசு ஊக்குவித்தது.

    இதற்காக பல்வேறு சலுகைகள், உதவித் தொகை உள்ளிட்டவற்றை அரசு அறிவித்தது. ஆனாலும் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. ஆண்டு தோறும் குழந்தை பிறப்பு விகிதம் சரிவு அதிகரித்தது. இதனால் சீனாவில் முதிய வர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் சீனாவில் புதிய ஆணுறை வரி திட்டம் வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

    இந்த புதிய மதிப்பு கூட்டப்பட்ட வரிச் சட்டத்தின்படி, ஜனவரி 1-ந்தேதி முதல் கருத்தடை மருந்துகள் மற்றும் ஆணுறை போன்ற கருத்தடை சாதன தயாரிப்பு களுக்கு வரி விலக்கு அளிக்கப்படாது என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

    ஆணுறை உள்ளிட்ட கருத்தடைச் சாதனங்கள் மீது சீனாவில் பெரும்பாலான பொருட்களுக்கு விதிக்கப்படும் 13 சதவீத மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்படும்.

    இதற்கிடையே கருத்தடைச் சாதனங்களின் விலை உயர்வது என்பது மக்களை திட்டமிடப்படாத கர்ப்பம் மற்றும் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்கள் அதிகரிப்புக்கு கொண்டு செல்லும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    இந்த வரி விதிப்பு குறித்து சீன சமூக ஊடகங்களில் கடும் விவாதங்கள் கிளம்பி உள்ளன. விலை உயர்த்தப்பட்டாலும் ஆணுறை வாங்குவதை விடக் குழந்தை களை வளர்ப்பதற்கான செலவு அதிகமாகவே இருக் கும் என்று பலர் கிண்டல் செய்துள்ளனர்.

    சீனாவில் பிறப்புகளை விட இறப்புகள் அதிகமானதால் 2023-ம் ஆண்டில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா சீனாவை முந்தியது என்பது குறிப்பிடத்தக்கது.  

    • சீனாவின் குவாங்டங் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த தீ விபத்தில் சிக்கி 12 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

    பீஜிங்:

    சீனாவின் தெற்கே குவாங்டங் மாகாணத்தில் சாவோனன் மாவட்டம் அமைந்துள்ளது. அங்குள்ள சாந்தவ் நகரின் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    தீ மளமளவென பரவி 150 சதுர மீட்டர் பரப்பளவுள்ள பகுதிகளுக்கு தீ பரவியது.

    இந்த தீ விபத்தில் சிக்கி 12 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் சுமார் 40 நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    தீ விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

    கடந்த ஒரு வாரத்துக்கு முன் சீனாவுக்கு உட்பட்ட ஹாங்காங் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 140-க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது நினைவிருக்கலாம்.

    • மேல்முறையீடு செய்யப்பட்டபோதும் உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது.
    • குடும்ப உறுப்பினர்களை கடைசியாக சந்தித்த பிறகு தூக்கிலிடப்பட்டார்.

    அரசுக்கு சொந்தமான சொத்து மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் மேலாளர், லஞ்சம் வாங்கிய வழக்கில் நேற்று தூக்கிலிடப்பட்டதாக நிறைவேற்றப்பட்டதாக சீன அரசு அறிவித்துள்ளது.

    சீனா ஹுவாரோங் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸின் (CHIH) முன்னாள் பொது மேலாளர் பாய் தியான்ஹுய் 2014 மற்றும் 2018 க்கு இடையில் பல திட்டங்களை வாங்குவதற்கும் நிதியளிப்பதற்கும் ஆதரவாக அவர் பெரும் அளவில் லஞ்சம் பெற்றதாகக் கண்டறியப்பட்டது.

    அவர் 156 மில்லியன் டாலர்களுக்கு மேல் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,300 கோடி) லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.

    இந்த வழக்கில், தியான்ஜினில் உள்ள நீதிமன்றம் இந்த ஆண்டு மே மாதம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டபோதும் உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது.

    இந்நிலையில் நேற்று காலை பாய் தியான்ஹுய், குடும்ப உறுப்பினர்களை கடைசியாக சந்தித்த பிறகு தூக்கிலிடப்பட்டார்.  

    • தரமான கைவினைப் பொருட்களை மட்டுமே வழங்கவேண்டும் என்பதே தாமதத்திற்கு காரணம்
    • ஆர்டர் செய்யப்பட்ட கண்களுக்கான பொம்மைகள் முன்னரே விற்கப்பட்டன

    சீனாவில் லீ என்ற பெண் ஆர்டர் செய்த 'பொம்மை கண்கள்' பத்து ஆண்டுகளுக்கு பின்னர் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு செய்யப்பட்ட இந்த ஆர்டரை லீ மறந்தேவிட்டதாகவும், தனது மொபைல் நம்பரை மாற்றாததால் பார்சலை நவ.27 அன்று பெற்றதாக தெரிவித்துள்ளார். பார்சல் வரவிருக்கிறது என்பதற்கான குறுஞ்செய்தியை நவ.25ஆம் தேதி பெற்றுள்ளார். 515 யுவான் (ரூ. 6,566) செலுத்தி வாங்கிய ஆர்டரில் கூடுதலாக ஒரு ஜோடி பொம்மை கண்களும் இருந்துள்ளன.

    உயர்தர, குறைபாடற்ற, தரமான கைவினைப் பொருட்களை மட்டுமே வழங்கவேண்டும் என்பதே தாமதத்திற்கு காரணம் என விற்பனையாளர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த பத்து ஆண்டுகளாக உற்பத்தியை நிறுத்திவிட்டதாகவும், ஆனால் பெற்ற ஆர்டர்களை மட்டும் டெலிவரி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் செய்த பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏற்கனவே தங்கள் பொருட்களைப் பெற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    மறுபக்கம், லீ ஆர்டர் செய்யப்பட்ட கண்களுக்கான பொம்மைகளை ஏற்கனவே விற்றுவிட்டதாகவும், தற்போது இந்த கண்களை வைத்து என்ன செய்வது என்று தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.  


    • ஒரே குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை கடந்த 2016-ம் ஆண்டு சீனா கைவிட்டது.
    • சீனாவின் குழந்தை பிறப்பு விகிதம் குறைத்துக்கொண்டு வருகிறது.

    மக்கள்தொகையில் உலகிலேயே முதல் இடத்தில் இந்தியா உள்ளது. அடுத்த இடத்தில சீனா உள்ளது. தொடர்ந்து இந்தியாவின் மக்கள் தொகை உயர்ந்து வரும் நிலையில், சீனா மக்கள் தொகை சரிவை சந்தித்து வருகிறது.

    1980-ம் ஆண்டு, ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளும் கொள்கையை சீனா அறிவித்தவுடன், ஆண் குழந்தை பெற்றுக்கொள்வதில் பெண்கள் ஆர்வம் காட்டினர். இதனையடுத்து, ஆண்களுக்கு திருமணத்துக்கு பெண் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது.

    சிறு குடும்ப முறைக்கு மக்கள் பழகி விட்டதும், வாழ்க்கை செலவு அதிகரித்ததும், திருமண வயது அதிகரித்ததால், குழந்தை பிறப்பு தள்ளிப்போனதும், குழந்தை பெற்றுக்கொள்ளும் வயது பெண்கள் குறைவாக இருப்பதும் சீனாவின் மக்கள்தொகை சரிவடைய தொடங்கி இருப்பதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

    இதனால் ஒரே குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை கடந்த 2016-ம் ஆண்டு சீனா கைவிட்டது. 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளுமாறு வரிச்சலுகைகளையும், ஊக்கத்தொகையையும் கடந்த ஆண்டு அறிவித்தது.

    ஆனாலும் சீனாவின் குழந்தை பிறப்பு விகிதம் குறைத்துக்கொண்டு தான் உள்ளது. இந்நிலையில், சீனாவில் சரிந்துவரும் மக்கள்தொகையை அதிகரிக்கும் ஒரு பகுதியாக, ஆணுறைகள்,

    கருத்தடை மருந்துகளின் பயன்பாடுகளை குறைக்க கூடுதல் வரிகளை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மேலும், குழந்தைகள், முதியோர் பராமரிப்பு சேவைகள், திருமணம் தொடர்பான வணிகங்கள் மீதான மதிப்புக் கூட்டு வரிகளையும் சீனா நீக்கியுள்ளது.

    • உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது.
    • இலங்கையிலுள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் +94 773727832 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

    டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.

    இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மீட்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    எனினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 370 பேர் மாயமாகியுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    வெள்ளம் மற்றும் மண்சரிவு பாதிப்பால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பால் இலங்கை அரசு அவசரநிலையை அறிவித்துள்ளது.

    இந்நிலையில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சீனா அவசரகால நிதியுதவியாக 10 லட்சம் டாலர் அளித்துள்ளது.

    இதற்கிடையே இலங்கைக்கு இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இலங்கையுடன் மீட்புப்பணிகளில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையும் இந்திய விமானப்படையும் ஈடுபட்டுள்ளன.

    இலங்கையிலுள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் +94 773727832 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.  

    • ரெயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
    • மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இ

    தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தின் தலைநகரான குன்மிங் நகரில் ரெயில் மோதி 11 பேர் உயிரிழந்தனர்.

    குன்மிங்கில் உள்ள லுயோயாங்ஜென் ரெயில் நிலையம் அருகே அங்கு இன்று அதிகாலை ரெயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழித்தடத்தில் வந்த சோதனை ரெயில் ஒன்று பராமரிப்பு பணியாளர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது  

    • தைவான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
    • தைவானை கைப்பற்ற சீன ராணுவம் தயாராகி வருகிறது

    தைவான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தேவைப்படும்போது, தன்னுடன் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது.

    தைவான் பிரச்சனையில் அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தலையிடுவதையும் எதிர்த்து வருகிறது.

    இதற்கிடையே, ஜப்பான் புதிய பிரதமர் சனே தகாய்ச்சி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தைவானுக்கு எதிராக சீன கடற்படை அத்துமீறினால், ஜப்பான் ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என தெரிவித்தார். அவர் அக்கருத்தை பிறகு திரும்ப பெற்றுக் கொண்டார்.

    இந்நிலையில், சீனாவின் அச்சுறுத்தல்கள் தீவிரமடைந்து வருவதால், 2027ம் ஆண்டுக்குள் தைவான் உயர்மட்ட போர் தயார்நிலையை அடையும் என்று அந்நாட்டு அதிபர் லாய் சிங்-டே அறிவித்துள்ளார்.

    மேலும்,தைவானை கைப்பற்ற சீன ராணுவம் தயாராகி வருவதாக கூறிய லாய் சிங்-டே, ராணுவத்தை பலப்படுத்த $40 பில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    • கடந்த 5-ந் தேதி இந்த விண்கலம் பூமி திரும்ப திட்டமிட்டு இருந்தது.
    • தோங் தலைமையிலான ஷென்சோ-20 குழுவினர் ஷென்சோ-21 விண்கலம் மூலம் கடந்த 14-ந் தேதி பூமி திரும்பினர்.

    பீஜிங்:

    விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் தீவிர ஆர்வம் காட்டுகின்றன. இதில் சீனா ஒரு படி மேலே ஏறி 2021-ம் ஆண்டு தியாங்காங் என்ற விண்வெளி நிலையத்தை தனக்கென அமைத்துள்ளது.

    சுமார் 390 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள அங்கு சீன விண்வெளி வீரர்கள் தங்கி சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அதன்படி கடந்த ஏப்ரல் 24-ந் தேதி ஷென்சோ-20 என்ற விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் அனுப்பப்பட்டது.

    கடந்த 5-ந் தேதி இந்த விண்கலம் பூமி திரும்ப திட்டமிட்டு இருந்தது. ஆனால் விண்வெளி குப்பை மோதியதால் விண்கலம் சேதமடைந்தது. எனவே அந்த விண்கலம் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

    இதனையடுத்து விண்வெளி நிலைய ஆராய்ச்சிக்காக 3 வீரர்களுடன் ஷென்சோ-21 விண்கலம் அனுப்பப்பட்டது. இதனால் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் 3 பேருக்கு பதிலாக 6 பேர் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    அதன்பிறகு தோங் தலைமையிலான ஷென்சோ-20 குழுவினர் ஷென்சோ-21 விண்கலம் மூலம் கடந்த 14-ந் தேதி பூமி திரும்பினர். சாங் லூ தலைமையிலான ஷென்சோ-21 குழுவினர் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் தொடர்ந்து ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதேசமயம் ஷென்சோ-21 குழுவினர் பூமி திரும்ப எந்த விண்கலத்துடனும் இணைக்கப்படவில்லை. இதனால் அவர்களை மீட்க ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-2எப் ராக்கெட் மூலம் ஷென்சோ-22 என்ற விண்கலத்தை சீனா வெற்றிகரமாக நேற்று அனுப்பியது.

    • அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது.
    • இந்திய பாஸ்போர்ட் செல்லாது என கூறி சுமார் 18 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்தில் வசிக்கும் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தோங்டாக் என்ற பெண் கடந்த நவம்பர் 21 அன்று லண்டனில் இருந்து ஜப்பானுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார். சீனாவின் ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவர் அங்கிருந்து ஜப்பான் விமானத்தை பிடிப்பதற்காக காத்திருந்தார்.

    ஆனால் அங்கு சீன அதிகாரிகள் பிரேமா, அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது இந்திய பாஸ்போர்ட் செல்லாது என கூறி சுமார் 18 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதுதொடர்பாக அவ்வப்போது சர்ச்சைக்குரிய வரைபடங்களை வெளியிட்டு வருகிறது.

    இந்த சூழலில்தான் பிரேமாவை தடுத்து வைத்த சீன அதிகரிகள் அவருக்கு அடிப்படை வசதிகளையும் மறுத்து அலைக்கழித்துள்ளனர்.

    அவருக்கு சரியான உணவு அல்லது அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை. அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு ஜப்பானுக்கு விமானத்தில் ஏற விடாமல் தடுக்கப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள அவரது தோழி ஷாங்காயில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகிய பிறகு, அதிகாரிகள் தலையிட்டு அவர் வேறு விமானத்தில் அனுப்பப்பட்டார்.

    சீன அதிகாரிகளும் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஊழியர்களும் தன்னைப் பார்த்து சிரித்ததாகவும், "சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும்" என கூறி கேலி செய்ததாகவும் பிரேமா குற்றம் சாட்டினார்.

    இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய பிரேமா, இது இந்தியாவின் இறையாண்மைக்கு அவமானம் என்றும். தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்கவும், அருணாச்சலப் பிரதேச மக்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற சிரமங்களை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தி உள்ளார்.

    இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு அருணாச்சல முதலமைச்சர் பெமா காண்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஷாங்காய் விமான நிலையத்தில், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பெருமைமிக்க இந்தியக் குடிமகனான பிரேமா வாங்ஜோம் தோங்டாக்கை சீன குடியேற்ற அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள முடியாத முறையில் நடத்திய விதம் எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட் இருந்தபோதிலும், அவரை அவமானப்படுத்துவதும், இன ரீதியாக கேலி செய்வதும் மிகவும் கொடூரமானது.

    அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும். இது தொடர்பாக எந்தவொரு குற்றச்சாட்டும் அடிப்படையற்றது மற்றும் புண்படுத்தும் நோக்கம் கொண்டது. இத்தகைய செயல் சர்வதேச விதிமுறைகளை மீறுவதாகும். மேலும் நமது குடிமக்களின் கண்ணியத்திற்கு அவமானம் ஏற்படுத்துவதாகும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் இந்த விஷயத்தை அவசரமாக எடுத்துக் கொள்ளும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும் என கூறி கேலி செய்ததாகவும் தோங்டாக் குற்றம் சாட்டினார்.
    • இந்திய பயணி கைது செய்யப்பட்டுள்ளது மிகவும் கொடூரமானது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

    இங்கிலாந்தில் வசிக்கும் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தோங்டாக் என்ற பெண் கடந்த நவம்பர் 21 அன்று லண்டனில் இருந்து ஜப்பானுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார். சீனாவின் ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவர் அங்கிருந்து ஜப்பான் விமானத்தை பிடிப்பதற்காக காத்திருந்தார்.

    ஆனால் அங்கு சீன அதிகாரிகள் பிரேமா, அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது இந்திய பாஸ்போர்ட் செல்லாது என கூறி சுமார் 18 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதுதொடர்பாக அவ்வப்போது சர்ச்சைக்குரிய வரைபடங்களை வெளியிட்டு வருகிறது.

    இந்த சூழலில்தான் பிரேமாவை தடுத்து வைத்த சீன அதிகரிகள் அவருக்கு அடிப்படை வசதிகளையும் மறுத்து அலைக்கழித்துள்ளனர்.

    அவருக்கு சரியான உணவு அல்லது அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை. அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு ஜப்பானுக்கு விமானத்தில் ஏற விடாமல் தடுக்கப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள அவரது தோழி ஷாங்காயில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகிய பிறகு, அதிகாரிகள் தலையிட்டு அவர் வேறு விமானத்தில் அனுப்பப்பட்டார்.

    சீன அதிகாரிகளும் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஊழியர்களும் தன்னைப் பார்த்து சிரித்ததாகவும், "சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும்" என கூறி கேலி செய்ததாகவும் தோங்டாக் குற்றம் சாட்டினார்.

    இதுதொடர்பாக ஷாங்காயில் உள்ள இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரி கூறுகையில், வெளிப்படையான காரணமின்றி ஒரு இந்திய பயணி கைது செய்யப்பட்டுள்ளது மிகவும் கொடூரமானது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அதன் குடிமக்களுக்கு இந்திய பாஸ்போர்ட்டில் பயணிக்க அனைத்து உரிமைகளும் உள்ளன. சீனாவின் நடவடிக்கைகள் சர்வதேச சிவில் விமான ஒப்பந்தங்களுக்கு எதிரானவை என்று தெரிவித்தார்.

    இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய தோங்டாக், இது இந்தியாவின் இறையாண்மைக்கு அவமானம் என்றும். தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்கவும், அருணாச்சலப் பிரதேச மக்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற சிரமங்களை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தி உள்ளார்.     

    ×