என் மலர்
நீங்கள் தேடியது "ஆன்லைன் மோசடி"
- இந்திய தண்டனைச் சட்டத்தில் ஆன்லைன் மூலமாக கைது என்ற முறை இல்லை.
- இது போன்ற மோசடி மிரட்டலுக்கு படித்தவர்களே ஏமாந்து நிற்பது வருத்தம் அளிக்கிறது.
திருச்சி:
திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 57), அரசு அதிகாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், டெல்லியில் இருந்து பேசுவதாகவும், தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் கைதான ஒரு முக்கிய புள்ளியிடமிருந்து பல்வேறு வங்கிகளின் 147 ஏ.டி.எம். கார்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளது. அதில் உங்களின் ஏ.டி.எம். கார்டும் இருக்கிறது. ஆகவே உங்களுக்கும், அவருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் உங்களை ஆன்லைனின் கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) செய்யப் போகிறோம்.
கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை நாங்கள் கூறும் வங்கி கணக்குக்கு அனுப்புங்கள். விசாரணைக்குப் பின்னர் நீங்கள் குற்றவாளி அல்ல என்று தெரியவந்தால் அந்த பணம் விடுவிக்கப்பட்டு மீண்டும் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்துவிடும் என கூறி உடனடியாக இணைப்பை துண்டித்துள்ளார்.
இதைக் கேட்டு அரசு அதிகாரியான கந்தசாமி அதிர்ச்சியில் உறைந்தார். அவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். ஒரு மகள் டாக்டராக பணியாற்றி வருகிறார். இரண்டாவது மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. மகளின் திருமணத்துக்காக மனைவியின் நகைகளை அடமானம் வைத்தும், வேறு வகைகளிலும் ரூ.90 லட்சம் பணத்தை தனது வங்கி கணக்கில் இருப்பு வைத்திருந்தார்.
இந்த அபாண்ட குற்றச்சாட்டினால் மகள்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடுமே என கருதி பதட்டத்தில், அவர் அந்த மோசடி பேர்வழியின் மிரட்டலை உண்மை என்று கருதி, பயந்து தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.90 லட்சம் பணத்தை அந்த நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு அனுப்பி விட்டார்.
செல்போனில் வந்த இந்த மிரட்டல் தொடர்பாக கந்தசாமி தனது மகன், மகளிடமோ அல்லது உறவினர்களிடமோ எந்தவித ஆலோசனையும் செய்யாமல், அவர்களுக்கு தெரிவிக்காமல் பணத்தை அனுப்பியுள்ளார்.
பின்னர் தான் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்ததை எண்ணி வருந்தினார். அதன் பின்னர் தனது நண்பரான வழக்கறிஞர் ஒருவரை சந்திக்க சென்ற போது, கந்தசாமி வழக்கத்துக்கு மாறாக சோர்வாக இருந்ததை பார்த்து என்ன வென்று கேட்டபோது நடந்த சம்பவங்களை கூறி அழுது புலம்பியுள்ளார்.
அதன் பின்னரே திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் மோசடி பேர்வழிகள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ஓய்வு பெற்ற அதிகாரிகளை குறிவைத்து ஆன்லைனில் கைது என மிரட்டி பணம் பறிக்கும் நூதன மோசடி சமீபகாலமாக அதிகமாக அரங்கேறி வருகிறது. இது போன்று வாரத்தில் இரண்டு புகார்கள் வருகிறது.
இந்திய தண்டனைச் சட்டத்தில் ஆன்லைன் மூலமாக கைது என்ற முறை இல்லை. இது போன்ற மோசடி மிரட்டலுக்கு படித்தவர்களே ஏமாந்து நிற்பது வருத்தம் அளிக்கிறது. மேற்கண்ட சம்பவத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் ஆன்லைனில் கைது செய்வது போன்ற வீடியோ காட்சிகளையும் கந்தசாமிக்கு அனுப்பி மிரட்டி உள்ளனர். பதட்டத்தில் பணத்தை அனுப்பியுள்ளார்.
அடையாளம் தெரியாத நபர்கள் யாரேனும் உங்களுக்கு தொடர்பு கொண்டு ஆன்லைனில் கைது அல்லது வேறு காரணங்களை சொல்லி மிரட்டி பணம் கேட்டால் அச்சப்படாதீர்கள். உடனடியாக 1930 என்ற டோல் பிரீ நம்பருக்கு தொடர்பு கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பணத்தை அனுப்பி சில நிமிடங்கள் மட்டுமே ஆகியிருந்தால் அந்த வங்கி கணக்கை முடக்கி பணத்தை திரும்ப பெற முடியும். ஆகவே குடும்ப அவமானம் என்றெல்லாம் எண்ணிக் கொண்டு புகார் அளிக்காமல் இருப்பது மோசடி பேர்வழிகளுக்கு சாதகமாகி விடுகிறது. சமீபத்தில் ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. அதிகாரி ஒருவர் ஆன்லைனில் கைது மிரட்டலுக்கு பயந்து ரூ.27 லட்சத்தை இழந்து தவிக்கிறார் என்றனர்.
- செப்டம்பர் முதல் அக்டோபர் 23-ந்தேதி வரை சுமார் 100 பண பரிவர்த்தனைகள் மூலம் ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.11 லட்சம் பெற்றுள்ளனர்.
- இதுபோன்ற ஆன்லைன் விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
புனே:
இன்றைய நவீன உலகில் இணையதளம் மூலமாக பல்வேறு நூதன முறைகளில் மோசடிகள் நடந்து வருகிறது.
லிங்கை தொட்டால் பரிசு, அரசின் உதவித்தொகை பெற்றுத் தருகிறோம் என கூறி பணம் பறிப்பது, வங்கியில் இருந்து பேசுவதாக கூறி யு.பி.ஐ. ஐ.டி. கேட்டு பணம் பறிப்பது, டிஜிட்டல் கைது என பல்வேறு வகைகளில் மோசடிகள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆனாலும் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பெண்ணை கர்ப்பமாக்கினால் ரூ.25 லட்சம் பரிசு என்ற ஆன்லைன் விளம்பரத்தை நம்பிய ஒருவர் ரூ.11 லட்சம் இழந்த சம்பவம் மராட்டிய மாநிலம் புனேயில் நடந்துள்ளது.
புனேயை சேர்ந்த 44 வயதான ஒருவர் ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் ஆன்லைனில் ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் பேசிய ஒரு பெண், நான் தாயாவதற்கு ஒரு ஆண் தேவை. என்னை கர்ப்பமாக்கக்கூடிய ஒரு ஆணை தேடுகிறேன். என்னை கர்ப்பமாக்கினால் ரூ.25 லட்சம் பரிசு தருகிறேன். அந்த நபரின் கல்வி, சாதி, அழகு ஒரு பொருட்டல்ல என கூறி இருந்தார்.
இதைப்பார்த்த ஒப்பந்ததாரர் சம்பந்தப்பட்ட விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த நம்பரில் தொடர்பு கொண்டபோது, சில விபரங்களை கேட்டுள்ளனர். மேலும் பரிசு பெறுவதற்காக சில சரிபார்ப்பு விதிமுறைகள் உள்ளன என கூறியுள்ளனர். பின்னர் பதிவு, சரிபார்ப்பு, ஜி.எஸ்.டி. என பல காரணங்களை கூறி பல்வேறு வகைகளில் கடந்த செப்டம்பர் முதல் அக்டோபர் 23-ந்தேதி வரை சுமார் 100 பண பரிவர்த்தனைகள் மூலம் ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.11 லட்சம் பெற்றுள்ளனர்.
பின்னர் அவர் கர்ப்பமாக்கும் வேலை தொடர்பாக தனது கேள்விகளை கேட்டபோது, மறுமுனையில் பேசியவரிடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவர் அழைத்தபோது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்போதுதான் அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து அவர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணத்தை இழந்த ஒப்பந்ததாரர் அளித்த தொலைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு எண்களை முடக்கி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த மோசடியின் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இதுபோன்ற ஆன்லைன் விளம்பரங்களை நம்ப வேண்டாம். என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
- பணத்தை இழந்தவர்கள் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க சைபர் கிரைம் போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் மோசடி பேர்வழிகள் நூதன முறையில் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர். மோசடிகாரர்கள் விரிக்கும் வலையில் படித்தவர்களும் பணத்தை இழந்து வருகின்றனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்கள் மூலமாக 'ஷாப்பிபை' உள்பட பல்வேறு செயலிகளை பதிவிறக்கம் செய்து முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாக ஆன்லைன் மோசடி கும்பல் ஆசை வார்த்தை கூறினர்.
ரூ.28 ஆயிரம் முதலீடு செய்தால் 30 நாளில் ரூ.1 லட்சத்து 800 தருவதாகவும் அல்லது தங்கமாக பெற்றுக்கொள்ளலாம் என அதில் கூறப்பட்டு இருந்தது.
இதனை நம்பிய புதுச்சேரியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்தனர். ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு எந்த பணமும் வரவில்லை. இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மோசடி கும்பல் பொதுமக்களை ஏமாற்றி பல கோடி பணத்தை மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து பணத்தை இழந்தவர்கள் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வரன் தேடும் இணையதளங்களில் பதிவு செய்து உள்ளவர்களின் சுயவிவரங்களின் உண்மைத்தன்மையை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
- செல்போனில் ‘வீடியோ' அழைப்புகள் அல்லது நேரடி சந்திப்புகளை தவிர்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சென்னை:
திருமண பந்தம் கை கூடுவதற்கு உறுதுணையாக இருக்கும் வரன் தேடும் இணையதளங்களிலும் 'ஆன்லைன்' மோசடி கும்பல் ஊடுருவி உள்ளது. இந்த இணையதளத்தில் புகைப்படம், வேலை, சம்பளம் போன்ற சுய விவரங்களை தவறாக பதிவிட்டு போலி கணக்கை உருவாக்கி பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
தமிழ்நாட்டில் இந்த மோசடி சம்பவம் தொடர்பாக 379 புகார்கள் பதிவாகி உள்ளன.
இந்த மோசடி எவ்வாறு அரங்கேறுகிறது? இந்த மோசடியில் சிக்காமல் தப்பிப்பது எப்படி? என்பது குறித்து 'சைபர் கிரைம்' போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பு வருமாறு:-
திருமண தகவல் இணையதளத்தில் போலி கணக்குகளுடன் ஊடுருவி உள்ள மோசடி கும்பலை சேர்ந்தவர்களின் குறியில் சிக்குபவர்களிடம் (மணப்பெண் அல்லது மணமகன்), நான் உங்களை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்று இனிக்க, இனிக்க பேசி வசியப்படுத்துவார்கள். திருமணத்துக்குபின்னர் நாம் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும். ஆன்லைனில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி விடுவார்கள்.
அதன்பின்னர் அவர்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் போலி முதலீட்டு இணையதள முகவரியை பரிந்துரை செய்வார்கள். மோசடி கும்பலின் மாய வலையில் சிக்கி பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு முதலில் லாபத்தொகையை தருவது போன்று நம்பிக்கையை உருவாக்குவார்கள். பெரிய தொகையை முதலீடு செய்யும் போது 'அபேஸ்' செய்து அனைத்து தொடர்புகளையும் தூண்டித்துவிட்டு திருமண தகவல் இணையதளத்தில் இருந்து வெளியேறி விடுவார்கள்.
எனவே வரன் தேடும் இணையதளங்களில் பதிவு செய்து உள்ளவர்களின் சுயவிவரங்களின் உண்மைத்தன்மையை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
செல்போனில் 'வீடியோ' அழைப்புகள் அல்லது நேரடி சந்திப்புகளை தவிர்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 'ஆன்லைன்' மூலம் அறிமுகமானவரின் ஆலோசனையை ஏற்று ஒரு போதும் பணத்தை முதலீடு செய்ய கூடாது.
இந்த மோசடி கும்பல் தங்கள் மோசடி திட்டத்துக்கு www.oxgatens.com, www.oxgatens.net, www.cityindexmain.com, www.cityindexlimited.com போன்ற போலி முதலீட்டு இணையதளங்களை பயன்படுத்துகின்றனர். இது போன்ற மோசடி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள், சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகளை கண்டறிந்தவர்கள் 'சைபர் கிரைம்' போலீசாரின் 1930 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை உடனடியாக தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம் என்றும் 'சைபர் கிரைம்' போலீசார் தெரிவித்துள்ளனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
புனே :
கொரோனா தடுப்பூசியை தயாரித்து வழங்கும் புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவன தலைவராக இருந்து வருபவர் ஆதார் புனாவாலா. இவரது நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருந்து வருபவர் சதீஷ் தேஷ்பாண்டே. அண்மையில் இவருக்கு வாட்ஸ் அப் மூலம் ஆதார் புனாவாலா புகைப்படம் இட்ட குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், நான் மீட்டிங்கில் பிசியாக இருப்பதாகவும், என்னை அழைக்க வேண்டாம். நான் அனுப்பிய 8 வங்கி கணக்கிற்கு உடனடியாக பணத்தை அனுப்பி விடவும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை நம்பிய சதீஷ் தேஷ்பாண்டே சிறிதும் தாமதிக்காமல் அதில் குறிப்பிடப்பட்டு இருந்த வங்கி கணக்கில் ரூ.1 கோடியே 10 லட்சத்து 10 ஆயிரத்து 554-ஐ அனுப்பி விட்டார். மறுநாளில் தேஷ்பாண்டே நிறுவன தலைவர் ஆதார் புனாவாலாவிடம் செல்போனில் உரையாடியபோது பணம் அனுப்பிய தகவலை தெரிவித்தார். இதனை கேட்ட அவர் தான் எந்தவொரு குறுந்தகவலும் அனுப்பவில்லை என மறுப்பு தெரிவித்தார். இதன்பிறகு தான் அவர்கள் மோசடி போன விவகாரம் தெரியவந்தது.
ஆதார் புனாவாலாவின் செல்போன் நம்பரை மர்மகும்பல் 'ஹேக்' செய்து குறுந்தகவல் அனுப்பி பணமோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக பந்த்கார்டன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் படி போலீசார் பணம் அனுப்பப்பட்ட வங்கி கணக்கு விவரங்களை சரிபார்த்தனர்.
இதில், மோசடி ஆசாமிகள் தங்கள் பெயரை எங்கும் குறிப்பிடாமல் பணம் பரிமாற்றம் செய்து உள்ளனர். இதைத்தவிர பீகார், அசாம், ஒடிசா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் எனவும், பணம் டெபாசிட் ஆன பின்னர் மற்றவர்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதனால் தொடர்புடைய அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது.
வங்கி கணக்கு வைத்திருந்த செல்போன் நம்பரை கொண்டு விசாரித்ததில் 7 பேரின் அடையாளம் தெரியவந்தது. இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜூவ்குமார் பிரசாத், சந்திரபூஷன் ஆனந்த் சிங், கன்னையா குமார், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த ரவீந்திரா குமார், மத்திய பிரதேச மாநிலம் ரபி கவுசல் குப்தா, யாசிர் நசீம் கான், ஆந்திராவை சேர்ந்த பிரசாத் சத்தியநாராயணா ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
இதில் பிரசாத் சத்தியநாராயணா என்பவர் சாப்ட்வேர் என்ஜினீயராகவும், ரபி கவுசல் குப்தா வணிக வங்கி ஊழியராகவும் இருந்து வந்தனர். இவர்களின் உதவியுடன் பணமோசடி நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாம் இழப்பது பணம் மட்டும் அல்ல மானமும்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.
- சைபர் கிரைம் என்ற மாய வலையில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.
'சைபர்' குற்றம் என்றால் என்ன தெரியுமா?
சாலையில் நடந்து போகிறோம். எதிரே வந்து ஒருவர் திடீர் என்று கத்தியைக் காட்டி மிரட்டி, ''சத்தம் போட்டால் குத்திக்கொன்றுடுவேன். எடு மணிப் பர்சை'' என்கிறார்.
பயத்தால் பர்சை கொடுக்கிறோம், அவர் பறந்துவிடுகிறார்.
இதை வழிப்பறி என்கிறோம். இதுபோன்ற செயல்களை மனிதர்கள் செய்வதால், இதை மனிதக்குற்றம் என்று சொல்லலாம்.
கம்ப்யூட்டர், செல்போன்கள் உதவியோடு வலைத்தள வழிகளில் இதுபோன்று நடைபெறுவதுதான் தொழில்நுட்ப வழிப்பறி. இதை சைபர் குற்றம் என்கிறோம்.
இந்த இரண்டு வழிப்பறிகளையும் மனிதர்கள்தான் செய்கிறார்கள். முதல் வழிப்பறியை மனிதன் நேரடியாகச் செய்கிறான். இரண்டாவதை தொழில்நுட்பங்களில் நுழைந்து அவனே செய்கிறான். இரண்டிலும் நாம் பணத்தை இழக்கிறோம். பயமுறுத்தப்படுகிறோம். அவமானப்படுகிறோம்.
இன்று மின்னணு தொழில்நுட்பம் (டிஜிட்டல் டெக்னாலஜி) வளர்ந்து, இணைய தளத்தின் பயன்பாடு எழுச்சி அடைந்து வருவதுடன், சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.
* வங்கி ஏ.டி.எம். கார்டு காலாவதியாக போகிறது. அதனை புதுப்பிப்பதற்கு உங்களது ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ரகசிய குறியீடு எண்ணை கொடுங்கள் என்று தமிழ் கலந்த இந்தியில் பேசி வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டுகிறார்கள்.
அவர்கள் வங்கியில் இருந்துதான் பேசுகிறார்கள் என்று நினைத்து ரகசிய குறியீடு எண்களை கொடுத்து, பணத்தை இழந்தவர்கள் ஏராளம்.
* வங்கியில் ஆதார் கார்டு எண்ணை இணைக்காவிட்டால், வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுவிடும், மின் கட்டணத்தை உடனடியாக செலுத்தாவிட்டால் மின் சேவை நிறுத்தப்படும், போக்குவரத்து விதிமீறல் அபராத கட்டணத்தை செலுத்துங்கள் என செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் இ-மெயிலுக்கு அனுப்பும் மோசடி 'லிங்க்'குகள் மூலம் நிழல் உலகில் இருந்து கொண்டு மோசடி மன்னர்கள் பணம் பறித்து வருகிறார்கள்.
* நெட் பேங்கிங் வசதி துண்டிக்கப்பட்டுவிடும், பகுதி நேர வேலைவாய்ப்பு, ஆன்லைன் திருமண மோசடி, ஆபாச வீடியோ கால் அழைப்பு, முக்கிய பிரமுகரின் பெயரில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை தொடங்கி, அந்த நபரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பணம் பறித்தல் என மாறு வேடங்களில் நம்மை சுற்றியே அலைகிறது சைபர் குற்றங்கள்.
* கேரளாவில் 68 வயது முதியவரை சமூக ஊடகம் மூலம் உல்லாச வலையில் வீழ்த்தி ரூ.23 லட்சம் பறித்த ரஷிதா என்ற பெண் சிறைச்சாலையில் தற்போது கம்பி எண்ணுகிறார்.
* கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியை பார்ப்பதற்கு 50 ஜி.பி. டேட்டா இலவசமாக வழங்குவதாக 'லிங்க்' ஒன்றை சமூக ஊடகங்களில் மோசடிக்காரர்கள் அனுப்பினார்கள். இதன் தீய நோக்கத்தை கண்டுபிடித்த சைபர் கிரைம் போலீசார் எச்சரித்தனர்.
சைபர் கிரைம் குற்றவாளிகள், ஆசையை தூண்டும் விதமாக தூண்டிலை வீசி, அதில் மாட்டிக்கொள்பவர்களை லாவகமாக அமுக்கிவிடுகிறார்கள். இதனால் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை, பலர் நொடிப்பொழுதில் இழந்து தவிக்கிறார்கள்.
சிலந்தி வலை போன்று பின்னிக்கிடக்கும் இணைய வலையில், விழுந்தால் நாம் இழப்பது பணம் மட்டும் அல்ல மானமும்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.
'சைபர் கிரைம்' குற்றவாளிகள் உள்ளூர் முதல் சர்வதேச அளவில் பல கொள்ளை கும்பல்கள் செயல்படுகின்றன. அந்த கும்பலை சேர்தவர்கள் யார்? என்று அடையாளம் காண்பதில்தான் சிக்கல் இருக்கிறது.
புதுப்புது அவதாரம் எடுக்கும் சைபர் கிரைம் குற்றவாளிகளை ஒடுக்குவது என்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலான பணியாகும். எனவே பொதுமக்கள்தான் சைபர் கிரைம் என்ற மாய வலையில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். அப்போதுதான் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையை சைபர் (பூஜியம்) ஆக்கமுடியும்.
சைபர் கிரைமில் பணியாற்றிய போலீஸ் துணை கமிஷனர் (தலைமை அலுவலகம்) எஸ்.ஆர்.செந்தில்குமார்:- சமூக ஊடகங்களை பயன்படுத்தும்போது, சுயவிவரங்கள் அடங்கிய 'புரோபைல்', பகிரும் தகவல்களை நம்பிக்கையானவர்கள் மட்டும் பார்க்கும் வகையில் 'லாக்' செய்து வைக்க வேண்டும். சமூக ஊடகம் என்பது பரந்து விரிந்தது. அதில் பெண் என்ற பெயரில் ஆண் கூட இருக்கலாம். அதனால் யாரிடம் பழகும்போதும், குறிப்பாக பெண்கள் கவனமாக இருக்கவேண்டும். யாராவது தனிப்பட்ட படங்களை திருடி 'மார்பிங்' செய்து, 'பிளாக்மெயில்' செய்தால் சைபர் கிரைம் போலீசில் தைரியமாக புகார் தெரிவிக்க வேண்டும். புகார் தெரிவிப்பவர்கள் வேண்டுகோள் விடுத்தால், அவர்களின் தனிப்பட்ட ரகசியங்கள் காக்கப்படும்.
சமூக ஊடக கணக்குகளை முடக்கி, அதில் தொடர்பில் இருப்பவர்களுக்கு பணம் அனுப்புமாறு தகவல் வந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் உடனடியாக தன்னுடைய வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், எஸ்.எம்.எஸ். உள்பட வெவ்வேறு ஊடகங்களின் மூலமாக தங்களுடைய தொடர்புகளுக்கு, யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்று தகவல் தெரிவிக்க வேண்டும். வங்கிகள் ஒருபோதும் வாடிக்கையாளர்களிடம் 'ஓ.டி.பி'. கேட்பது இல்லை. எனவே எந்த காரணத்தை கொண்டும் 'ஓ.டி.பி.'யை யாரும் பகிரக்கூடாது. முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் 'லிங்க்'குகளை ஒருபோதும் திறக்கக்கூடாது. பொதுமக்கள் விழிப்புணர்வாக இருந்தால் சைபர் குற்றங்களை தவிர்க்கலாம்.
பண பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக செய்வது எப்படி?
* இணையதள வங்கி பரிவர்த்தனைகளுக்காக தரமான மற்றும் 'லைசென்ஸ்' பெற்ற 'ஆபரேட்டிங் சிஸ்டத்தை' பயன்படுத்தவேண்டும்.
* தகவல்களை உள்ளீடு செய்வதற்கு முன்பு, எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயில் மூலமாக பெறப்படும் 'யூ.ஆர்.எல்.'களை பரிசோதிக்கவேண்டும்.
* பொதுவாக பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் மற்றும் பாதுகாப்பு இல்லாத இணைய இணைப்புகளை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.
* இ-மெயில், இ-காமர்ஸ் தளங்களில் பயன்படுத்தப்படும் கணக்குகளில் இருந்து வேறுபட்டு இருக்கும் வகையில், யாரும் எளிதில் கண்டுபிடிக்காத வகையில் 'பாஸ்வேர்டு'களை தேர்வு செய்யவேண்டும்.
உங்களுக்கு தெரியுமா?
இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகை 139 கோடி. இவர்களில் சுமார் 55 கோடி பேர் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர். நமது நாட்டில் நடப்பாண்டு முதல் காலாண்டில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 198 சைபர் கிரைம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2-வது காலாண்டில் 15.3 சதவீதம் அதிகரித்து, 2 லட்சத்து 37 ஆயிரத்து 658 ஆக உள்ளது. தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு பதிவாகிய சைபர் குற்றங்களின் எண்ணிக்கை வெறும் 748 மட்டும்தான். ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் சைபர் குற்றங்கள் 'ஜெட்' வேகத்தில் உயர்ந்துகொண்டே செல்கின்றது. கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் பதிவான சைபர் குற்றங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 707 ஆகும்.
சைபர் குற்றங்களுக்கு கடிவாளம் போட்டால் மட்டுமே, வங்கி கணக்குகளில் இருக்கும் பணம் தப்பிக்கும் என்பதே நிதர்சனம். சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.
- அவ்வப்போது மிரட்டி பணம், விலை உயர்ந்த பொருட்களைப் பெற்றுள்ளார்.
- டொனால்டு அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிடம் புகார் செய்தார்.
புதுடெல்லி :
அமெரிக்காவின் பிரபலமான பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக இருப்பவர் டொனால்டு (பெயர் மாற்றித்தரப்பட்டுள்ளது.).
இவர் இந்தியாவில் உள்ள ரோஷி என்ற பெண்ணுடன் (பெயர் மாற்றித்தரப்பட்டுள்ளது) 'பேஸ்புக்' மூலம் தொடர்பு கொண்டு அறிமுகமானார்.
இருவரிடையே நட்பு மலர்ந்தது. அந்த நட்பு, அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்கிறவரை வளர்ந்தது. இவர்கள் அடிக்கடி 'வீடியோ சாட்' மூலம் ஆபாசமாக பேசிக்கொள்வதும், ஆபாசமாக தோன்றுவதும் தொடர்ந்துள்ளது.
இதைத் தகவல் தொழில்நுட்ப வசதியால் மோப்பம் பிடித்த டெல்லி அசோலா பகுதியை சேர்ந்த ராகுல் குமார் என்பவர் பதிவு செய்தார். அதைத் தனக்கு சாதகமாக அவர் பயன்படுத்த முடிவு செய்தார்.
இது தொடர்பாக அவர் அமெரிக்க பேராசிரியர் டொனால்டுடன் தொடர்பு கொண்டார். " நீங்கள் அந்தப் பெண்ணுடன் ஆபாசமாகப்பேசியது, நடந்து கொண்டது தொடர்பான அனைத்தையும் நான் பதிவு செய்து வைத்துள்ளேன்.
நீங்கள் எனக்கு இந்தத் தொகையை பேபால் கணக்கின் (ஜி பே போன்றது) வழியாக அனுப்பி வைக்க வேண்டும். அனுப்பாவிட்டால் சமூக ஊடகங்களில் உங்கள் லீலைகள் அடங்கிய வீடியோ காட்சிகளை வெளியிட்டு விடுவேன்" என இ-மெயில் வாயிலாக மிரட்டி உள்ளார்.
இப்படி அவ்வப்போது மிரட்டி பணம், விலை உயர்ந்த பொருட்களைப் பெற்றுள்ளார். 48 ஆயிரம் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.39 லட்சம்) இப்படி மிரட்டியே ராகுல்குமார் கறந்துள்ளார்.
ஆனாலும் அவர் பேராசிரியர் டொனால்டுவை மிரட்டுவதை நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் 'பொறுத்தது போதும், பொங்கியெழு' என்ற நிலைக்கு பேராசிரியர் டொனால்டு போனார்.
அவர் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிடம் (எப்.பி.ஐ.), இந்தியர் ஒருவரால் தான் மிரட்டி பணம் பறிக்கப்படும் பிரச்சினை பற்றி புகார் செய்தார். அந்த அமைப்பினர், புகாரை டெல்லி சி.பி.ஐ.யின் விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து ராகுல் குமார் வீடடில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தினர். முக்கிய தடயங்களை கைப்பற்றினர். மேலும் ராகுல் குமாரை கைது செய்தனர்.
அவரிடம் முதல் கட்ட விசாரணை நடத்தி டெல்லி ரவுஸ் அவினியு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் போட்டோவை மார்பிங் செய்ததை அறிந்த மோகனசுந்தரி அதிர்ச்சியில் மன உளைச்சலுக்கு ஆளானார்.
- வெங்கடாசலம் நம்பியூர் போலீசில் மாயமான மனைவியை மீட்டுத்தரக் கோரி புகார் அளித்துள்ளார்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் இருகலூரை சேர்ந்தவர் வெங்கடாச்சலம் (42). இவரது மனைவி மோகன சுந்தரி (39). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
நம்பியூர் அரசு போக்குவரத்துக்கு கழக கிளையில் வெங்கடாசலம் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மோகனசுந்தரி ஆன்லைன் செயலி மூலமாக கடன் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் ஆன்லைன் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் மோகனசுந்தரியின் செல்போனை ஹேக் செய்து அதில் இருந்த அனைத்து போன் நம்பர்களையும் எடுத்து அனைவருக்கும் அவரது போட்டோவை மார்பிங் செய்து அனுப்பி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மோகனசுந்தரி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று வருவதாக குழந்தைகளிடம் கூறிவிட்டு சென்ற மோகனசுந்தரி அதன் பின் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து வெங்கடாசலம் நம்பியூர் போலீசில் மாயமான மனைவியை மீட்டுத்தரக் கோரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மோகன சுந்தரியை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் நம்பியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் நிறுவனத்தில் குலுக்கல் மூலம் மல்லிகாவுக்கு ரூ.12.50 லட்சம் பரிசு விழுந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.
- வங்கி கணக்கு மற்றும் போன் பே மூலம் மல்லிகா ரூ.5.22 லட்சம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள மேசகம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் மல்லிகா (வயது 28).
இவர் ஆன்லைன் மூலம் அடிக்கடி பொருட்கள் வாங்குவது வழக்கம். இந்நிலையில் மல்லிகாவுக்கு ஒரு கடிதம் வந்தது.
அதில் அவர் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் நிறுவனத்தில் குலுக்கல் மூலம் மல்லிகாவுக்கு ரூ.12.50 லட்சம் பரிசு விழுந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.
அந்த பரிசை வாங்க ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகளுக்காக ரூ.5.22 லட்சம் முன்பணமாக செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்கு மற்றும் போன் பே மூலம் மல்லிகா ரூ.5.22 லட்சம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் அவருக்கு வந்த கடிதத்தில் கூறப்பட்டபடி எந்த பரிசும் வரவில்லை. இதையடுத்து தான் ஏமாந்ததை அறிந்த மல்லிகா கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரகுராமின் வங்கி எச்.டி.எப்.சி. வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் பணத்தை அபேஸ் செய்து உள்ளனர்.
- அரும்பாக்கம் போலீசில் ரகுராம் புகார் அளித்தார்.
சென்னை:
சென்னை வானகரம் சக்தி நகரை சேர்ந்தவர் ரகுராம். இவர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது செல்போனுக்கு 'ஆன்லைன் கோல்டு டிரேடிஸ்' என்ற பெயரில் குறிப்பிட்ட செல்போன் எண்ணில் இருந்து எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. அதில் குஜராத்தில் உள்ள எஸ்.வங்கியின் வங்கி கணக்கு குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் பின்னர் ரகுராமின் வங்கி எச்.டி.எப்.சி. வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் பணத்தை அபேஸ் செய்து உள்ளனர். குறுஞ்செய்தியை அனுப்பிய நபரே ஏமாற்றி பணம் பறித்திருப்பது தெரிய வந்தது. இதனால் ரகுராம் அதிர்ச்சி அடைந்தார். இதுதெடார்பாக அரும்பாக்கம் போலீசில் ரகுராம் புகார் அளித்தார்.
இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆன்லைன் மோசடி தொடர்பாக போலீசார் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள் தேவையில்லாமல் வரும் எஸ்.எம்.எஸ்.களை கண்டு கொள்ளாமல் கடந்து சென்றுவிட வேண்டும் என்று போலீஸ் தரப்பில் தொடர்ந்து அறிவுரை கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் பலர் ஆன்லைன் வியாபாரத்தை நம்பி ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள்.
அந்த வகையில்தான் சென்னை வாலிபர் ரூ.5 லட்சம் பணத்தை இழந்து தவித்து வருகிறார்.
- கடந்த 2மாதங்களில் 8 பேர் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்துள்ளனர்.
- வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் லிங்கில் வரும் விளம்பரத்தை நம்பி முதலீடு செய்யாதீர்கள்.
புதுச்சேரி:
புதுவையில் சமீபகாலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகளவில் நடந்து வருகிறது.
பகுதிநேர வேலை, சினிமா விமர்சனம், பணம் இரட்டிப்பு என பலவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. இதில் பணத்தை இழந்தவர்கள் பெரும்பாலனவர்கள் வெளியில் சொல்வதில்லை. அதேநேரத்தில் சைபர் கிரைம் போலீசார் பண மோசடி குறித்து வெளிப்படையாக புகார் தெரிவிக்க வரும்படி அழைப்பு விடுக்கின்றனர்.
மோசடிகளை கண்டறிய நவீன மென்பொருட்கள் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2மாதங்களில் 8 பேர் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக ரூ.2 கோடி அளவில் பணத்தை இழந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சில மோசடி நபரை கைது செய்துள்ளனர்.
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் லிங்கில் வரும் விளம்பரத்தை நம்பி முதலீடு செய்யாதீர்கள். இல்லாவிட்டால் அதிக பணத்தை இழக்க நேரிடும் என சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி. விஷ்ணு, இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, கார்த்திகேயன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- பல்வேறு தவணைகளாக அந்த வங்கி கணக்கிற்கு ரூ.8 லட்சத்து 87 ஆயிரம் அனுப்பினார்.
- செலுத்திய தொகைக்கான லாபத்தொகையோ அல்லது செலுத்திய பணத்தையோ திருப்பி கொடுக்கவில்லை.
கோவை:
கோவை கள்ளிமடையை சேர்ந்தவர் பிரியங்கா (வயது 30). இவருடைய செல்போனுக்கு டெலிகிராமில் இருந்து ஒரு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் ஆன்லைனில் பகுதி நேர வேலை செய்தால் நல்ல ஊதியம் கிடைக்கும் எனவும், அதில் உள்ள லிங்கை அழுத்தவும் என்று கூறப்பட்டு இருந்தது.
உடனே அவர் அந்த லிங்கை அழுத்தி உள்ளே சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு ஒருவர் தொடர்பு கொண்டு பேசியதுடன், டெலிகிராமில் குரூப் தொடங்கப்பட்டு உள்ளது, அதில் உங்கள் எண்ணையும் இணைத்து உள்ளோம். உங்களுக்கு ஆன்லைனில் நல்ல வேலை இருக்கிறது. உங்களுக்கு கொடுக்கப்படும் வேலை தொடர்பாக அந்த குரூப்பிலேயே தகவல் அனுப்பி வைக்கப்படும் என்றனர்.
மேலும் அதை வைத்து நீங்கள் வேலை செய்தால் அதிகளவில் பணம் சம்பாதிக்கலாம் என்றும், அதற்காக நீங்கள் அவ்வப்போது பணமும் செலுத்த வேண்டும் என்றும் கூறி இருந்தது. இதனை நம்பிய அவர் பல்வேறு தவணைகளாக அந்த வங்கி கணக்கிற்கு ரூ.8 லட்சத்து 87 ஆயிரம் அனுப்பினார். ஆனால் அவர்கள் கூறியபடி அவருக்கு செலுத்திய தொகைக்கான லாபத்தொகையோ அல்லது செலுத்திய பணத்தையோ திருப்பி கொடுக்கவில்லை.
இதுகுறித்து அந்த குழுவில் அவர் கேட்டபோது, மேலும் அதிக பணம் அனுப்புமாறு கூறியுள்ளது. அப்போதுதான் அவருக்கு அந்த நிறுவனம் போலி என்பதும், தனக்கு ஆன்லைனில் தகுந்த வேலை கொடுப்பதாக கூறி நூதன முறையில் பணம் பெற்று ஏமாற்றியதும் தெரியவந்தது. இது தொடர்பாக பிரியங்கா, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






