search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "online scam"

    • ஆன்லைனில் முதலீடு செய்து பணத்தை இழந்த 2 பேருக்கு ரூ.11 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.
    • பெண் குழந்தைகளுக்கு எதிரான 6 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மோசடி மற்றும் செல்போன் திருட்டு தொடர்பாக பல்வேறு புகார்கள் குவிந்தன.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து அந்த செல்போன்களை யார் பயன்படுத்தி வருகிறார்கள்? என கண்டுபிடித்து மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    அதன்படி புதுவையை சேர்ந்த 70 பேரின் செல்போன்களை போலீசார் மீட்டனர். இவற்றின் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்.

    இந்த செல்போன்களை காவல்துறை தலைமையகத்தில் அதன் உரிமையாளர்களிடம் போலீஸ் டி.ஐ.ஜி.பிரிஜேந்திரகுமார் யாதவ் வழங்கினார்.

    மேலும் ஆன்லைனில் முதலீடு செய்து பணத்தை இழந்த 2 பேருக்கு ரூ.11 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து போலீஸ் டி.ஐ.ஜி. பிரிஜேந்திர குமார் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடப்பாண்டில் மொத்தம் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஆன்லைன் மோசடியில் பணம் இழந்தது தொடர்பாக 24 வழக்குகளில் 13 வழக்கில் ரூ.94 லட்சம் மீட்கப்பட்டது.

    பெண்களுக்கு எதிரான 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12 வழக்குகளில் தொடர்புடையவர்கள் கைதாகி உள்ளனர்.

    பெண் குழந்தைகளுக்கு எதிரான 6 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர், இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    • புதுவை சைபர் கிரைம் போலீசார் சென்னை ஓரகடம் பகுதிக்கு சென்று அசாமுதீன் அன்சாரி, மகேஷ்குமார் 2 பேரையும் கைது செய்தனர்.
    • ஜார்க்கண்டில் இணையதளம் வழியாக பணம் திருட தனி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

    புதுச்சேரி:

    புதுவை துத்திப்பட்டு பகுதி கடப்பேரிகுப்பத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசர்மா (39). ஜிப்மர் காவலாளி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆன்லைன் செயலி மூலம் வீட்டுக்கான பொருள் வாங்க முயற்சித்தார். ஆனால் பொருள் அவருக்கு கிடைக்கவில்லை.

    இதுகுறித்து விசாரிக்க வாடிக்கையாளர் சேவை பிரிவை இணையத்தில் தேடினார். அப்போது குறிப்பிட்ட செல்போன் எண் கிடைத்துள்ளது. அதில் பேசிய மர்மநபர், கிருஷ்ணசர்மாவின் விவரங்களை குறிப்பிட்ட செயலியில் பதிவிடும்படி கூறியுள்ளார்.

    அதன்படி கிருஷ்ணசர்மா பதிவு செய்தார். அப்போது அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 ¾ லட்சம் மர்மநபர்களால் அபகரிக்கப்பட்டது.

    இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீசில் கிருஷ்ணசர்மா புகார் அளித்தார். விசாரணையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அசாமுதீன் அன்சாரி (30), மகேஷ்குமார் (28) ஆகியோர் வங்கிக் கணக்கில் கிருஷ்ண சர்மாவின் பணம் செலுத்தப்பட்டது தெரிய வந்தது.

    தொடர் விசாரணையில் அசாமுதீன் அன்சாரி, மகேஷ்குமார் இருவரும் சென்னை ஓரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தது தெரிந்தது.

    இதையடுத்து புதுவை சைபர் கிரைம் போலீசார் சென்னை ஓரகடம் பகுதிக்கு சென்று அசாமுதீன் அன்சாரி, மகேஷ்குமார் 2 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 3 ஏ.டி.எம் கார்டுகள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் தங்களது வங்கி கணக்கை தங்களது சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் உள்ள ஒரு நபரிடம் அளித்துள்ளதாகவும், அதற்காக தங்களுக்கு கமிஷன் கிடைக்கும் என்றும், ஆகவே பணம் தங்களது வங்கிக்கணக்குக்கு எப்படி பரிமாற்றப்படுகிறது என தெரியாது என்றும் கூறியுள்ளனர்.

    கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. ஜார்க்கண்டில் இணையதளம் வழியாக பணம் திருட தனி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த குழுவினர் வடமாநிலத்தில் இருந்து தமிழகத்தில் தங்கி வேலை செய்யும் நபர்களின் வங்கி கணக்குகளை வாங்கி கொள்கின்றனர்.

    'ஆன்லைன்' மூலம் திருடப்படும் பணத்தை தமிழகத்தில் தங்கி வேலை செய்யும் நபர்களின் வங்கி கணக்கில் செலுத்துகின்றனர். ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி கணக்கு வைத்திருப்பவருக்கு கமிஷனாக கொடுத்து விட்டு, மீதி தொகையை மோசடி கும்பல் பெற்றுக் கொள்கிறது.

    இதனால், மோசடி கும்பலை கைது செய்ய புதுவை சைபர் கிரைம் போலீசார் ஜார்கண்ட் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    • ரகுராமின் வங்கி எச்.டி.எப்.சி. வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் பணத்தை அபேஸ் செய்து உள்ளனர்.
    • அரும்பாக்கம் போலீசில் ரகுராம் புகார் அளித்தார்.

    சென்னை:

    சென்னை வானகரம் சக்தி நகரை சேர்ந்தவர் ரகுராம். இவர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இவரது செல்போனுக்கு 'ஆன்லைன் கோல்டு டிரேடிஸ்' என்ற பெயரில் குறிப்பிட்ட செல்போன் எண்ணில் இருந்து எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. அதில் குஜராத்தில் உள்ள எஸ்.வங்கியின் வங்கி கணக்கு குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் பின்னர் ரகுராமின் வங்கி எச்.டி.எப்.சி. வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் பணத்தை அபேஸ் செய்து உள்ளனர். குறுஞ்செய்தியை அனுப்பிய நபரே ஏமாற்றி பணம் பறித்திருப்பது தெரிய வந்தது. இதனால் ரகுராம் அதிர்ச்சி அடைந்தார். இதுதெடார்பாக அரும்பாக்கம் போலீசில் ரகுராம் புகார் அளித்தார்.

    இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆன்லைன் மோசடி தொடர்பாக போலீசார் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள் தேவையில்லாமல் வரும் எஸ்.எம்.எஸ்.களை கண்டு கொள்ளாமல் கடந்து சென்றுவிட வேண்டும் என்று போலீஸ் தரப்பில் தொடர்ந்து அறிவுரை கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் பலர் ஆன்லைன் வியாபாரத்தை நம்பி ஏமாந்து கொண்டே இருக்கிறார்கள்.

    அந்த வகையில்தான் சென்னை வாலிபர் ரூ.5 லட்சம் பணத்தை இழந்து தவித்து வருகிறார்.

    நவீன முறையில் ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபட்ட கண்ணூர் பகுதியை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கிரிப்டோ கரன்சி என்ற டிஜிட்டல் பணத்தின் பேரில் மோசடி நடப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதன் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் ஒரு கும்பல் பொதுமக்களிடம் அதிக அளவில் பணத்தை பெற்று இரட்டிப்பாக தருவதாக மோசடியில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி கண்ணூர் பகுதியை சேர்ந்த இளம் தொழில் அதிபர் ஒருவர் புகார் தெரிவித்தார். இதன்பேரில் கண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நவீன முறையில் ஆன்லைன் மூலம் இந்த மோசடியில் ஈடுபட்டது கண்ணூர் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ், சபீக், வாசிம் முனாவரலி மற்றும் முகமது சபீக் ஆகியோர் என தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் இவர்கள் ஏராளமானோரிடம் அதிக பணம் பெற்று கிரிப்டோ கரன்சியாக திருப்பி தருவதாக கூறி ரூ.100 கோடி அளவில் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதற்காக தனியாக நிறுவனம் நடத்தி அதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்றுள்ளனர். அந்த பணத்திற்கு பதிலாக கிரிப்டோ கரன்சி என்னும் டிஜிட்டல் பணம் திருப்பி தருவதாக கூறி ஏமாற்றி உள்ளனர். மேலும் அவர்கள் பலரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.



    மும்பையை சேர்ந்த மருத்துவர் ஆன்லைன் ஊழலில் ஒற்றை க்ளிக் செய்து ரூ.3 லட்சம் இழந்திருக்கிறார். #OnlineScam



    மும்பையை சேர்ந்த மருத்துவர் ஒற்றை க்ளிக் செய்து சுமார் ரூ.3 லட்சம் இழந்துள்ளார். இது தொடர்பாக பிபின் மஹாடோ என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    போலீசார் கைது செய்துள்ள பிபின் மஹாடோ பணத்தை பறிக் கொடுத்த மருத்துவரிடம் ஒரேமுறை மட்டும் பேசி, அவருக்கே தெரியாமல் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2.9 லட்சம் பணத்தை நூதன முறையில் திருடியிருக்கிறார்.

    சில தினங்களுக்கு முன் வங்கியில் இருந்து பேசுவதாக பிபின் மருத்துவரிடம் தெரிவித்தார். மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டதால், பிபின் வங்கியில் இருந்து பேசுவதை மருத்துவரிடம் நிரூபிக்க அவரது வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்தார்.



    மேலும், மருத்துவர் பயன்படுத்தும் வங்கி செயலியை மேம்படுத்த வங்கி சார்பில் அனுப்பப்படும் இணைய முகவரியை க்ளிக் செய்ய பிபின் மருத்துவரிடம் தெரிவித்திருக்கிறார். இதை முழுமையாக நம்பிய மருத்துவர் பிபின் சொன்னதை போன்று அவன் அனுப்பிய இணைய முகவரியை க்ளிக் செய்தார்.

    இணைய முகவரியை க்ளிக் செய்ததும் மருத்துவர் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.9 லட்சம் தொகை எடுக்கப்பட்டு விட்டதாக மருத்துவருக்கு தகவல் கிடைத்தது. பின் பிபினை தொடர்பு கொள்ள மருத்துவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியை தழுவின.

    இறுதியில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவர் காவல் துறை உதவியை நாடினார். போலீசார் நடத்திய விசாரணையில், மருத்துவர் வங்கி கணக்கில் இருந்த தொகை மாற்றப்பட்ட வங்கி கணக்கு கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவரை ஏமாற்றி அவரது பணத்தை பிபின் பறித்தது உறுதி செய்யப்பட்டது.
    ×