என் மலர்tooltip icon

    ஈரோடு

    • 124 திருக்கோவில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
    • ரூ. 414கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

    ஈரோடு திண்டல் மலையில் வேலாயுத சாமி கோவில் உள்ளது. இந்து அறநிலைதுறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தற்போது ராஜகோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து கோவில் முன்பு 186 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இந்தப் பணிகளை இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திராவிட மாடல் ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு திருக்கோவில் திருப்பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்து சமய அறநிலையத்துறை சட்டம் உருவாக்கப்பட்ட நாளில் இருந்து நடைபெறாத எண்ணிக்கையில் திருப்பணிகள் நடந்து வருகிறது.

    மன்னர் ஆட்சி காலத்தை விட திராவிட மாடல் ஆட்சியில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 3,500 கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து குடமுழுக்கு விழா நடைபெறும்.

    இந்த ஆக்கபூர்வமான பணிக்கு துறையின் சார்பில் கேட்கப்படும் நிதிகள் வழங்கப்படுகிறது. இதுவரை 1,120கோடி ரூபாய் அரசிடம் இருந்து மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 124 திருக்கோவில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

    பழனி இரண்டாம் கட்ட திருப்பணிக்கு ரூ. 58 கோடி அரசே வழங்கி 54 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருச்செந்தூர் கோவில் 14 ஆண்டுகளுக்கு பிறகு பெரு திட்டத்தின் கீழ் ரூ. 414கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் செப்டம்பர், நவம்பர் மாதம் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

    திருத்தணி கோவிலுக்கு ஆந்திர மாநில பக்தர்கள் வருகை அதிகமாக இருப்பதால் கோவிலுக்கு மாற்று பாதை உருவாக்க ரூ. 54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அறுபடை வீடுகளில் ஒன்றான சாமிமலைக்கு 100 படிகள் இருப்பதால் படி ஏறும் பக்தர்கள் சிரமம் கருதி மின் தூக்கி அமைக்கவும், மருதலை கோவிலும் படி கட்டுகள் இருப்பதால் மின் தூக்கி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த ஆட்சியில் அனைத்து சைணவம், வைணவம் கடவுளுக்கும் சிறப்பு சேர்ப்பதுடன் முருகனுக்கு மாநாடு நடத்தி பெருமை சேர்த்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான்.

    ஆசியாவில் மிக உயரமான 186 அடி உயரத்தில் சிலை அமைக்கும் பணிகள் ஈரோடு திண்டல் கோவிலில் அமைக்கப்பட்ட உள்ளது.

    உலக அளவிலான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி காலம் கடந்து நிற்கும் வகையில் ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் சிலை அமைக்கப்படும்.

    இந்த ஆட்சியில் மட்டும் 1,400கோடி ரூபாய் வரை உபயதாரர்கள் நிதி வந்துள்ளது,

    கடந்த எந்த ஆட்சியில் இதுபோன்ற உபயதாரர்கள் நிதி வந்ததில்லை. உபயதாரர்கள் நிதி பயன்படுத்தப்பட வில்லை. இந்த ஆட்சியில் அனுமதி அளித்ததால் உபயதாரர்கள் நிதி வழங்க அதிகமாக முன் வந்தனர்.

    இந்த ஆட்சியில் உபயதாரர்கள் நிதி எண்ணத்திற்கு ஏற்ப திருப்பணிகள் செலவு செய்யப்படுகிறது. மனம், எண்ணம் நிறைவடைந்ததால் உபயதாரர்கள் நிதி வழங்கி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தாளவாடி வனத்துறையினர் கரும்பு காட்டுக்குள் புகுந்த மூன்று யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • கரும்பு தோட்டத்தை சுற்றி சுற்றி அந்த மூன்று யானைகளும் ஓடி வந்தன.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, போன்ற வ னவிலங்குகள் வசித்து வருகின்றன.

    சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை கூட்டங்கள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட மரூர் செல்லும் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள அந்தோணி என்பவரது கரும்பு தோட்டத்தில் 3 யானைகள் புகுந்தது. பட்டப்பகலில் யானைகள் கரும்பு தோட்டத்தில் புகுந்ததால் விவசாய கூலி தொழில் பணிகள் செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    பின்னர் இதுபற்றி தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தாளவாடி வனத்துறையினர் கரும்பு காட்டுக்குள் புகுந்த மூன்று யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் 3 யானைகளும் கரும்பு காட்டை விட்டு வெளியே செல்லாமல் தொடர்ந்து கரும்பு காட்டுக்குள் உலா வந்தது. கரும்பு பயிர்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது. யானைகளை பட்டாசு வெடித்து விரட்டும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டனர்.

    ஆனாலும் யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி கரும்பு காட்டுக்குள்ளேயே பதுங்கிக் கொண்டது. கரும்பு தோட்டத்தை சுற்றி சுற்றி அந்த மூன்று யானைகளும் ஓடி வந்தன.

    பொதுமக்களும் வனத்துறையினரும் இணைந்து தோட்டத்தில் பதுங்கி இருக்கும் யானையை விரட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். ஒருபுறம் வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். மறுபுறம் பொதுமக்கள் சத்தங்களை எழுப்பியும், பட்டாசுகளை வெடித்தும் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஒரு வழியாக இரவு 11 மணி அளவில் அந்த மூன்று யானைகளும் கரும்பு தோட்டத்தில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றன. கிட்டத்தட்ட 12 மணி நேரமாக வனத்துறையினரையும், பொதுமக்களையும் அந்த மூன்று காட்டு யானைகளும் அலறவிட்டன.

    எனினும் வனப்பகுதியில் இருந்து எந்நேரமும் மீண்டும் அந்த யானை கூட்டம் தோட்டத்துக்குள் வர வாய்ப்பு உள்ளதால் வனத்துறையினர் அந்த பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஆசனூர் வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன
    • யானை கூட்டமாக சாலையை கடக்கும் காட்சியை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, மான், கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    சமீப காலமாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் உணவு தண்ணீர் தேடி சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை வருவதும், கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது.

    ஆசனூர் வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    இந்நிலையில் ஆசனூர் அருகே அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானைக் கூட்டங்கள் குட்டிகளுடன் சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றன. யானை கூட்டமாக சாலையை கடக்கும் காட்சியை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் சற்று தொலைவிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டனர். சிலர் யானைகள் கடக்கும் காட்சியை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் சாலையை கடந்து சிறிது நேரம் நெடுஞ்சாலை ஓரம் சுற்றி திரிந்து கொண்டிருந்தன. பின்னர் மீண்டும் அந்த யானை கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து தொடங்கியது.

    யானைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து வருகிறது. யானைகள் கூட்டமாக செல்லும்போது வாகன ஓட்டிகள் சுற்றுலா பயணிகள் அவைகளுக்கு எந்த ஒரு தொந்தரவும் செய்யக்கூடாது. ஆசனூர் வழியாக யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும்.

    குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் தங்களது வாகனத்தை வனப்பகுதியில் நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    • யானை காரை துரத்தும் காட்சியை வாகன ஓட்டி செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
    • சாலையில் செல்லும் யானைகளுக்கு வாகன ஓட்டிகள் எந்த ஒரு தொந்தரவும் அளிக்கக்கூடாது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    தமிழகம்-கர்நாடக இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இந்த நெடுஞ்சாலை அமைந்துள்ளது. சாலையின் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. சமீபகாலமாக பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் சென்று வருகின்றன. இதனால் இந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு பண்ணாரி அடுத்த சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டி ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை நெடுஞ்சாலையில் நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது. அந்த வாகன ஓட்டி ஹாரனை அடித்ததால் திடீரென ஆவேசம் அடைந்த அந்த ஒற்றை யானை அந்த காரை துரத்த தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாகன ஓட்டி காரை பின்னோக்கி வேகமாக இயக்கினார். சிறிது தூரம் அந்த காரை விரட்டி சென்ற அந்த ஒற்றை யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னர் வாகன ஓட்டி அங்கிருந்து சென்றார். யானை காரை துரத்தும் காட்சியை இந்த வாகன ஓட்டி செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். தற்போது சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    பண்ணாரி தேசிய நெடுஞ்சாலை ஓரம் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. யானைகள் ஒரே இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம் பெயர்ந்து வருகிறது. சாலையில் செல்லும் யானைகளுக்கு வாகன ஓட்டிகள் எந்த ஒரு தொந்தரவும் அளிக்கக்கூடாது. இதை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    • சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன.
    • வனப் பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தை ஒன்று தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்நிலையில் ஆசனூர் அருகே கடந்த சில நாட்களாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தை ஒன்று கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை தொடர்ந்து வேட்டை ஆடி வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆசனூர் சோதனை சாவடி அருகே அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை சாலையோரம் சென்ற குதிரையை துரத்த தொடங்கியது. சிறுத்தையை பார்த்து பயந்து குதிரை ஓட தொடங்கியது. ஆனால் சிறுத்தை விடாமல் சென்று துரத்தி அந்த குதிரையை தாக்கி கழுத்தில் கடித்து கொன்றது. பின்னர் மீண்டும் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் ஆசனூர் கிராம மக்கள் மீண்டும் பீதியில் உள்ளனர்.

    இது குறித்து கிராம மக்கள் கூறும்போது,

    எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாகவே அடர்ந்த வனப் பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தை ஒன்று தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. இதனால் எங்கள் கிராம மக்கள் குறிப்பாக குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினரிடம் ஏற்கனவே தகவல் தெரிவித்து விட்டோம். அவர்கள் இனியும் தாமதிக்காமல் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரித்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.
    • அக்கடிதம் அனுப்பிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 7 தளங்களில், மாவட்ட வழங்கல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், 7 தளங்கள் உள்ளடக்கிய கூடுதல் கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அங்கு தினமும் நூற்று க்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு கலெக்டருக்கு நேற்று மாலை தபால் வந்தது. அதனை கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரித்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.

    அதில், கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைப்பதற்கு சிலர் திட்டமிடுவதாகவும், இந்த மாதத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்றும், அந்த நபர்கள் குறித்த தகவல் தனக்கு தெரியும் என்றும், தனது உயிருக்கு பாதுகாப்பு அளித்தால் அவர்கள் குறித்த விபரத்தை தெரிவிப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது.

    அனுப்பியவர் முகவரியில் வக்கீல் ஒருவரின் பெயர் இடம் பெற்று இருந்தது. இக்கடிதத்தை அடிப்படையாக கொண்டு, ஈரோடு சூரம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதன், ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், அடையாளம் தெரியாத நபர் கடிதம் எழுதியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அக்கடிதம் அனுப்பிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதில் தென்காசியில் இருந்து அந்த கடிதம் எழுதப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இந்நிலையில் இன்று காலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு செயலிழப்பு தடுப்பு பிரிவு நிபுணர்கள், மோப்பப்படை பிரிவினர் வந்து சோதனையிட்டனர். மோப்பப் படை பிரிவு பவானி நாய் வரவழைக்கப்பட்டது. முதலில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில், கார் பார்க்கிங் பகுதி, ஒவ்வொரு அலுவலகமாக சென்று சோதனையிட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம் இன்று பரபரப்பாக காட்சியளிக்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொருத்தரமாக சென்று வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனையிட்டு வருகின்றனர்.

    • மக்கள் காலி குடங்களுடன் இன்று காலை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர், ஜீவா நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கே குடிநீர் குழாய் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சமீப காலமாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மக்கள் காலி குடங்களுடன் புளியம்பட்டி ரோடு அண்ணா நகர் பஸ் நிறுத்தம் இன்று காலை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். உங்கள் பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து களைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • நல்லூர் ஊராட்சி சார்பாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
    • போராட்டம் காரணமாக அந்த வழியாக சாலையின் இரு புறம் வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நல்லூர் ஊராட்சி சார்பாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 20 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். ஆனாலும் முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து இன்று காலை அந்த பகுதி சேர்ந்தயை 80-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் புளியம்பட்டி-சத்தியமங்கலம் ரோடு பகுதியில் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டம் காரணமாக அந்த வழியாக சாலையின் இரு புறம் வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் புளியம்பட்டி போலீசார் மற்றும் பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிகாரி இந்திராணி, உங்கள் பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்று பொதுமக்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தை கைவிட்ட அங்கிருந்து கலந்து சென்றனர்.

    சுமார் ஒரு மணி நேரமாக நடந்த சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • சில வாகன ஓட்டிகள் சிறுத்தையும் நடமாட்டத்தை தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.
    • திம்பம் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் திம்பம் மலைப்பகுதி தமிழக - கர்நாடகவை இணைக்கும் முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது. அடர்ந்த வனப்பகுதி மத்தியில் அமைந்துள்ள திம்பம் மலைப்பகுதியை 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். திம்பம் மலைப்பகுதியில் யானை, சிறுத்தை நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்து உள்ளன.

    இந்த நிலையில் நேற்று இரவு திம்பம் மலைப்பாதையில் உள்ள சாலையோரம் அடர்ந்த பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று சாலையோரம் உலா வந்தது. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து தங்களது வாகனங்களை சற்று தொலைவில் நிறுத்தினர்.

    சில வாகன ஓட்டிகள் சிறுத்தையும் நடமாட்டத்தை தங்களது செல்போனில் படம் பிடித்தனர். சிறிது நேரம் சாலையோரம் உலா வந்த சிறுத்தை சாலை தடுப்பு சுவரை தாண்டி பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    இதன் பிறகு வாகன ஓட்டிகள் அங்கிருந்து இருந்து கிளம்பிச் சென்றனர். சமீபகாலமாக திம்பம் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    எனவே திம்பம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • வீட்டில் உள்ள தொட்டியில் மகன் ஆதிரன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்றது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வெள்ளோடு, காந்திநகரை சேர்ந்தவர் கவின் பிரசாத். இவரது மனைவி அமராவதி (28). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 1 வயதில் ஆதிரன் என்ற மகன் இருந்தார். கவின் பிரசாத் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு வழக்கம் போல் வேலை முடிந்து கவின் பிரசாத் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் மனைவி, குழந்தையுடன் சாப்பிட்டு தூங்கு சென்று விட்டனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் பிரசாத் எழுந்து பார்த்தபோது மனைவி அருகில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் படுக்கை அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது மனைவி தூக்குப்போட்டு கொண்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அமராவதியை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே வரும் வழியிலேயே அமராவதி இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதனைக் கேட்டு கவின் பிரசாத் கதறி அழுதார். பின்னர் மகன் ஞாபகம் வந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள தொட்டியில் மகன் ஆதிரன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து வெள்ளோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குழந்தை ஆதிரனை கொன்று தாய் அமராவதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்ப தகராறில் அமராவதி மகனை கொன்று தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு என்ன காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதனிடையே, திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்றது.

    இந்த நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அமராவதி கணவரே மனைவியையும், குழந்தையையும் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கணவர் கவின் பிரசாத்திடம் நடத்திய விசாரணையில் மனைவி அமராவதியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் இருவரையும் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதை அடுத்து குழந்தையையும், மனைவியையும் கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர் கவின் பிரசாத்தை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
    • கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திநகர் பகுதியில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு அருகே கவின் பிரசாத் என்பவரின் மனைவி அமராவதி தனது குழந்தையை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை கொல்லப்பட்டது தொடர்பாகவும், தாய் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீலகிரி, கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வந்தாலும் மற்ற அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. நீலகிரி, கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதன் எதிரொலியாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 91.06 அடியாக உயர்ந்து உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்து உள்ளது. நேற்று காலை அணைக்கு 4, 966 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 15 ஆயிரத்து 199 கன அடியாக அதிகரித்து வருகிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி நீரும், தடப்பள்ளி -அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், காலிங்கராயன் பாசனத்திற்கு 450 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி நீரும் என மொத்தம் 1,355 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வந்தாலும் மற்ற அணைகள் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 25.50 அடியாக உள்ளது. இதே போல் வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 22.47 அடியாக சரிந்து உள்ளது. 30 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 15.35 அடியாக சரிந்து உள்ளது.

    ×