என் மலர்
நீங்கள் தேடியது "காட்டு யானைகள்"
- தாளவாடி வனத்துறையினர் கரும்பு காட்டுக்குள் புகுந்த மூன்று யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
- கரும்பு தோட்டத்தை சுற்றி சுற்றி அந்த மூன்று யானைகளும் ஓடி வந்தன.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, போன்ற வ னவிலங்குகள் வசித்து வருகின்றன.
சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை கூட்டங்கள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட மரூர் செல்லும் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள அந்தோணி என்பவரது கரும்பு தோட்டத்தில் 3 யானைகள் புகுந்தது. பட்டப்பகலில் யானைகள் கரும்பு தோட்டத்தில் புகுந்ததால் விவசாய கூலி தொழில் பணிகள் செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் இதுபற்றி தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தாளவாடி வனத்துறையினர் கரும்பு காட்டுக்குள் புகுந்த மூன்று யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் 3 யானைகளும் கரும்பு காட்டை விட்டு வெளியே செல்லாமல் தொடர்ந்து கரும்பு காட்டுக்குள் உலா வந்தது. கரும்பு பயிர்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது. யானைகளை பட்டாசு வெடித்து விரட்டும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டனர்.
ஆனாலும் யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி கரும்பு காட்டுக்குள்ளேயே பதுங்கிக் கொண்டது. கரும்பு தோட்டத்தை சுற்றி சுற்றி அந்த மூன்று யானைகளும் ஓடி வந்தன.
பொதுமக்களும் வனத்துறையினரும் இணைந்து தோட்டத்தில் பதுங்கி இருக்கும் யானையை விரட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். ஒருபுறம் வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். மறுபுறம் பொதுமக்கள் சத்தங்களை எழுப்பியும், பட்டாசுகளை வெடித்தும் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஒரு வழியாக இரவு 11 மணி அளவில் அந்த மூன்று யானைகளும் கரும்பு தோட்டத்தில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றன. கிட்டத்தட்ட 12 மணி நேரமாக வனத்துறையினரையும், பொதுமக்களையும் அந்த மூன்று காட்டு யானைகளும் அலறவிட்டன.
எனினும் வனப்பகுதியில் இருந்து எந்நேரமும் மீண்டும் அந்த யானை கூட்டம் தோட்டத்துக்குள் வர வாய்ப்பு உள்ளதால் வனத்துறையினர் அந்த பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- யானைகள் கூட்டம் சாலையில் இருப்பதை கண்ட பக்தர்கள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தினர்.
- மலை பாதையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருப்பதி:
திருப்பதி மலைப்பாதையில் வனப்பகுதியில் இருந்து குட்டி யானைகள் உட்பட 7 யானைகள் வந்தன.
யானைகள் கூட்டம் சாலையில் இருப்பதை கண்ட பக்தர்கள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தினர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
யானைகள் கூட்டம் சாலையில் இருந்து விலகி செல்லாமல் அட்டகாசம் செய்தன. மலைப்பாதையில் ஏராளமான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.
வனத்துறையினர் யானைகள் கூட்டத்தை விரட்ட தீப்பந்தங்களை ஏற்றி, அதிக ஒலி எழுப்பும் மேளம் அடித்து சைரன் ஒலித்தனர்.
அப்போது யானைகள் வனத்துறை ஊழியர்களை தாக்க முயன்றன. வனத்துறை ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் ஒரு வழியாக யானைகள் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
இதனால் மலை பாதையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு மலைப்பாதையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பண்ணாரி சோதனை சாவடி அருகே சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையை சுமார் 6-க்கும் மேற்பட்ட யானைக் கூட்டங்கள் கடந்து சென்றன.
- தற்போது உணவு, தண்ணீருக்காக யானை கூட்டங்கள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருகிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக ஆசனூர், தாளவாடி , பர்கூர் வனச்சரக்கத்தில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
தற்போது வனப்பகுதியில் வெயில் தாக்கம் காரணமாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு, தண்ணீரை தேடி சத்தியமங்கலம் -மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரம் வந்து வாகனங்களை வழிமறிப்பதும், கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனத்துறை சார்பில் சோதனை சாவடி உள்ளது. இங்கு 24 மணி நேரமும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை பண்ணாரி சோதனை சாவடி அருகே சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையை சுமார் 6-க்கும் மேற்பட்ட யானைக் கூட்டங்கள் கடந்து சென்றன. திடீரென யானைக் கூட்டங்கள் சாலையைக் கடந்ததால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து சற்று தொலைவில் தங்களது வாகனங்களை நிறுத்தினர். சிறிது நேரம் அந்த யானை கூட்டங்கள் அந்தப் பகுதியில் சுற்றி வந்தன. பின்னர் மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் யானை கூட்டங்கள் சென்றன. இதன் பிறகே வாகன ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
தற்போது வனப்பகுதியில் வெயில் தாக்கம் காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு யானை கூட்டங்கள் இடம்பெயர்ந்து வருகிறது. அதன்படி கர்நாடகா மாநிலத்திலிருந்து இருந்து தமிழக எல்லைப் பகுதியான காரப்பள்ளம், தாளவாடி, ஆசனூர் பகுதிகளில் யானைகள் தஞ்சம் அடைந்து வருகின்றன.
தற்போது உணவு, தண்ணீருக்காக யானை கூட்டங்கள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணக் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றனர்.
- காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து அங்குள்ள காபி தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன.
- காபி, வாழை தோட்டங்களை அந்த காட்டு யானைகள் நாசப்படுத்தி உள்ளன.
சிக்கமகளூரு:
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கோனிபீடு, மாக்கேனஹள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இந்த வனப்பகுதி ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புராவை ஒட்டி உள்ளது. இதனால் சக்லேஷ்புரா வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வனவிலங்குகள் வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் அந்தப்பகுதி மக்கள் சொல்லொண்ணா துயரத்தை சந்தித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சக்லேஷ்புரா வனப்பகுதியில் இருந்து 42 காட்டு யானைகள் கோனிபீடு, மாக்கேனஹள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை ஒட்டி உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்தன.
அந்த காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து அங்குள்ள காபி தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன. அவை வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்கு தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. காபி செடிகளை மிதித்தும், பிடுங்கி எறிந்தும் நாசப்படுத்தி உள்ளன. மேலும் அங்கிருந்த வாழை மரங்களையும் சாய்த்தன. மிளகு செடிகளையும் நாசப்படுத்தின.
அந்தப்பகுதியில் சுமார் 10 ஏக்கரில் உள்ள காபி, வாழை தோட்டங்களை அந்த காட்டு யானைகள் நாசப்படுத்தி உள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும் காட்டு யானைகள் காபி தோட்டங்களில் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள், தங்கள் விளைநிலங்களுக்கு செல்லவே பீதியில் இருந்து வருகிறார்கள். இதுபற்றி அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் வனத்துறையினரும், அங்கு சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அப்போது அந்தப்பகுதி விவசாயிகள், காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்ற வனத்துறையினர், சக்லேஷ்புரா வனப்பகுதியில் இருந்து 42 காட்டு யானைகள் வெளியேறி அட்டகாசம் செய்து வருகின்றன. அவற்றை மீண்டும் சக்லேஷ்புரா வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.
- வனப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக அதிகளவில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
- 2 குட்டிகளுடன் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் சாலையை கடந்து செல்ல முற்பட்டன.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் யானைகள், சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தையொட்டிய குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் சுற்றி திரிவது வழக்கம்.
இந்த நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையையொட்டிய வனப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக அதிகளவில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
அவ்வப்போது இந்த யானைகள் சாலையையும் கடந்து வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் சாலைகளை கடந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். எனவே சாலைகளில் செல்லும் போதும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வனத்துறையும் அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் நேற்று, 2 குட்டிகளுடன் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் சாலையை கடந்து செல்ல முற்பட்டன. அப்போது வாகனங்களின் சப்தத்தை கேட்டதாலும், அதிக மக்கள் இருந்ததாலும் யானைகள் ஓட்டம் பிடிக்க துவங்கின.
இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஒரு சிலா் அதிக கூச்சலிட்டு யானைகளை புகைப்படம் எடுத்தனா். இந்த பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் அதன் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச், தொண்டியாளம், இரும்புபாலம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. உப்பட்டியில் இருந்து பந்தலூர் செல்லும் சாலையில் அம்ரூஸ்வளைவு அருகே குட்டிகளுடன் 4 காட்டு யானைகள் சாலையில் உலா வந்தன. சாலையில் நடந்து சென்றதோடு, வாகனங்களை வழிமறித்தன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.
மேலும் அருகே தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா வனச்சரகர் சஞ்சீவ் தலைமையில், வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். மீண்டும் ஊருக்குள் நுழையாமல் இருக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- யானைகளை கண்டவுடன் டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கி சாலையோரமாக நிறுத்தினார்.
- சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக சாலையை மறித்தபடி நின்றிருந்த யானைகள் அங்கிருந்து மெதுவாக சென்று மண் பாதை வழியாக காட்டுக்குள் சென்றது.
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி குன்னுார் சுற்றுப்புற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றது.
இதனால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கெத்தை பகுதியில் யானைகளின் நடமாட்டம் இல்லாததால் இவ்வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சென்று வந்தது.
இந்நிலையில் காட்டு யானைகள் மீண்டும் கெத்தை பகுதிக்கு திரும்பியுள்ளது. கடந்த 2 தினங்களாக 6 காட்டு யானைகள் மந்து, கெத்தை, பெரும்பள்ளம் பகுதிகளில் சுற்றி திரிகிறது.
சம்பவத்தன்று மாலை கோவையில் இருந்து பில்லூர் பகுதிக்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசு பஸ்சை முள்ளி பிரிவு அருகே குட்டியுடன் காணப்பட்ட 5 காட்டு யானைகள் வழிமறித்தது. யானைகளை கண்டவுடன் டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கி சாலையோரமாக நிறுத்தினார்.
அப்போது மஞ்சூர் பகுதியில் இருந்து கோவைக்கு சென்ற தனியார் வாகனங்களும் காட்டு யானைகளை கண்டு ஓரங்கட்டி நிறுத்தப்பட்டது. காட்டு யானைகளை கண்ட பயணிகள் பீதி அடைந்து வாகனங்களுக்குள் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக சாலையை மறித்தபடி நின்றிருந்த யானைகள் அங்கிருந்து மெதுவாக சென்று மண் பாதை வழியாக காட்டுக்குள் சென்றது. இதன்பிறகே அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இதேபோல் நேற்றும் அரசு பஸ் மற்றும் வாகனங்களை குட்டியுடன் வந்த காட்டு யானைகள் வழிமறித்தன. அரைமணி நேரத்திற்கு பிறகு யானைகள் சென்றதும், வாகனங்கள் அங்கிருந்து சென்றன.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
மஞ்சூர்-கோவை சாலையில் காட்டுயானைகள் மீண்டும் நடமாடி வருகிறது. 2 குட்டிகளுடன் யானைகள் நடமாடுவதால் இவ்வழியாக வாகனங்களில் செல்வோர் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். வழியில் யானைகள் எதிர்பட்டால் வாகனங்களை தொலைவிலேயே நிறுத்த வேண்டும். யானைகளை கண்டவுடன் கூச்சலிடுவது, வாகனங்களில் இருந்து இறங்கி செல்போன்களில் போட்டோ மற்றும் செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. யானைகள் சம்பவ இடத்தில் இருந்து வனப்பகுதிக்குள் செல்வதை உறுதி செய்த பிறகே வாகனங்களை எடுத்து செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் 3 யானைகளும் உள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
- நேற்று இரவு யானைகளை மேலுமலை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டி அடித்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சோக்காடி அருகே பனகமுட்லுவை ஒட்டிய வனப்பகுதியில் 3 யானைகள் முகாமிட்டிருந்தன. அவை பிக்கனப்பள்ளி, மேலுமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வந்தன.
நேற்று முன்தினம் இரவு இந்த 3 யானைகளும் இடம் பெயர்ந்து குல்நகர் வழியாக கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் முகாமிட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் 3 யானைகளும் உள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்றும் டோல்கேட் அருகே சுற்றிதிரிந்தது.
ஒரு பக்கம் ஆறு உள்ளதாலும், மறுபக்கம் தேசிய நெடுஞ்சாலை உள்ளதாலும் எந்த பக்கமும் செல்லாமல் யானை அலைந்து கொண்டு இருந்தது.
நேற்று இரவு யானைகளை மேலுமலை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதி குடியுருப்புவாசிகள் நிம்மதி அடைந்தனர்.
- சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
- நடுரோட்டில் துள்ளி விளையாடியதை பார்த்தது புது அனுபவமாக இருந்தது என்றனர்.
கூடலூர்,
முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் மசினகுடி வனப்பகுதியில் காட்டு யானைகள், மான்கள், புலிகள், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்தநிலையில் மசினகுடியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் 2 காட்டு யானைகள் வந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பசுந்தீவனங்களை காட்டு யானைகள் தின்றது. சிறிது நேரத்தில் சாலையில் நின்றவாறு காட்டு யானைகள் விளையாடியது. இதனை சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் இருந்தவாறு கண்டு ரசித்தனர். மேலும் செல்போன்களில் வீடியோ எடுத்தனர். தொடர்ந்து காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, சாதாரணமாக சாலையோரம் வனவிலங்குகள் நடந்து செல்லும். ஆனால், திடீரென காட்டு யானைகள் நடுரோட்டில் துள்ளி விளையாடியதை பார்த்தது புது அனுபவமாக இருந்தது என்றனர்.
- காந்தவயல் உள்ளிட்ட கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளளன.
- நீர்த்தேக்கத்தில் வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட லிங்காபுரம், காந்தவயல் உள்ளிட்ட கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளளன.
வனத்தில் இருந்து சிறுத்தை, காட்டுப்பன்றி, மான், குரங்கு, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, குடிநீர் தேடி குடியிருப்பு, விளைநிலங்களில் ஊடுருவி வருகின்றன.
லிங்காபுரம்-காந்தவயல் இடையே பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதி உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க அடிக்கடி வந்து செல்வது வழக்கம். லிங்காபுரம்-காந்தவயல் இடையேயுள்ள உயர்மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியதால் காந்தவயல், உலியூர், மேலூர், ஆளுர் ஆகிய கிராம மக்கள் போக்குவரத்திற்கு பரிசல், மோட்டார் படகில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று மாலை லிங்காபுரத்தில் இருந்து பரிசல் செல்லும் இடத்திற்கு செல்லும் சாலையில் 2 காட்டுயானைகள் நடமாடி வந்தன. இதையடுத்து வனத்துறையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்று காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் காட்டுயானைகள் வனப்பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. லிங்காபுரம்-காந்தவயல் சாலையின் இடையே காட்டுயானைகள் நடமாடி வருவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- 3 காட்டு யானைகள் முகாமிட்டு விலை நிலங்களை நாசம் செய்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
- இரவு நேரங்களில் மீண்டும் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே யுள்ளது மாமரத்துப்பள்ளம்.
ஒகேனக்கல் வனப்பகு தியை ஒட்டியுள்ள இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக 3 காட்டு யானைகள் முகாமிட்டு விலை நிலங்களை நாசம் செய்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வனத்துறையினர் அந்த யானைகளை வனப்பகுதிக்கு விரட்டி விட்டாலும் இரவு நேரங்களில் மீண்டும் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சத்துடன் உள்ளனர்.
யானைகள் வருவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
- வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
- வன பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 குட்டிகளுடன் 9 யானைகள் முகாமிட்டன.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், குன்னூா்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள வன பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 குட்டிகளுடன் 9 யானைகள் முகாமிட்டன.
அப்பகுதியிலேயே சில நாள்கள் சுற்றித்திரிந்த யானைகள் தானாகவே வனப்பகுதிக்குள் சென்றன.
இந்நிலையில், குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலையில் டபுள்ரோடு, ரன்னிமேடு இடையே உள்ள தேயிலை தோட்டம், சோலைப் பகுதிகளில் பல்வேறு விதமான பழங்கள் விளைந்துள்ளன.
இவற்றை உண்பதற்காக அப்பகுதியில் 2 குட்டிகளுடன் 9 யானைகள் முகாமிட்டுள்ளன. யானைகள் சாலைக்கு வராமல் தடுக்க 6 போ் கொண்ட வன ஊழியா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
இந்நிலையில் நேற்று இரவு ரன்னிமேடு பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் வாழைகளை சேதப்படுத்தி உள்ளது.
டபுள் ரோடு அருகே முகாமிட்டுள்ள யானைகளை பட்டாசுகள் வெடித்தும், தகரங்களை தட்டியும் விரட்டும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த காட்டு யானைகள் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வருடந்தோறும் உணவு தேடி நீலகிரி மாவட்டம் பகுதிக்கு வருவது வழக்கம் தான்.
இருப்பினும், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்
- காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து வனக்குழுவினரிடம் கேட்டறிந்தார்.
- தாசம்பட்டி வனப்பகுதிக்குள் மீண்டும் விரட்டியடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
பென்னாகம்,
கர்நாடகா மற்றும் ஓசூர் வனப்பகுதிகளில் இருந்து வழி தவறிய மக்னா மற்றும் ஆண் யானை உள்ளிட்ட இரண்டு காட்டு யானைகள் தருமபுரி மாவட்டம் சஞ்சீவராயன் மலை வழியாக பிக்கிலி வனப்பகுதியை ஒட்டியுள்ள நாகதாசம்பட்டி அருகே தொட்டில்பள்ளம் கிராமப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக முகாமிட்டுள்ளது.
இந்த இரண்டு காட்டு யானைகளும் இரவு நேரங்களில் தொட்டில் பள்ளம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்துள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தொட்டில் பள்ளம் பகுதிக்கு வந்த வனத்துறையினர் பட்டாசு மற்றும் தகர பெட்டிகளைக் கொண்டு அதீத ஒலியின் எழுப்பியவாறு காட்டு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டியுள்ளனர். இவ்விரு யானைகளும் பகலில் வனப்பகுதியிலும், இரவு நேரங்களில் மீண்டும் கிராமப் பகுதிக்குள் நுழைகின்றது.
இந்த நிலையில் இரவு நேரங்களில் கிராமப் பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க பாலக்கோடு வனத்துறையின் சார்பில் வனவர்கள் முனுசாமி, கனகராஜ் ஆகியோருடன் 8 வனத்துறையினர் அடங்கிய குழுவினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வரும் வனத்துறையினரின் நடவடிக்கைகளை உதவி வன பாதுகாப்பு அலுவலர் வில்சன் பார்வையிட்டு, காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து வனக்குழுவினரிடம் கேட்டறிந்தார்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்:- கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவ்விரு காட்டு யானைகளும் பாப்பாரப்பட்டி, சுரக்காய் பட்டி, மண்ணேரி, தாசம்பட்டி உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் அடிக்கடி உணவு தேடி நுழைந்தது. காட்டு யானைகளை வனக் குழுவினர் தாசம்பட்டி வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
பின்னர் மீண்டும் நாகதாசம்பட்டி தொட்டில்பள்ளம் கிராம பகுதிக்குள் உணவு தேடி நுழைந்துள்ளது. தற்போது காட்டுயானைகளின் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காட்டு யானைகளை மொரப்பூர் பீட் தாசம்பட்டி வனப்பகுதிக்குள் மீண்டும் விரட்டியடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
வனப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் உணவு தேடி தொட்டில்பள்ளம் கிராம பகுதிக்குள் நுழைந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளால் எவ்வித உயிரிழப்பு நிகழ்வதற்கு முன்பு
வனத்துறையினர் யானைகளை மீண்டும் கிராமப் பகுதிக்குள் நுழையாதவாறு அடர் வனப்பகுதிக்கு கொண்டு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






