search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elephants"

    • கரும்பு தோட்டம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக மாநில வனப்பகுதி அமைந்துள்ளது.
    • யானை கூட்டம் கரும்பு தோட்டத்தில் புகுந்து 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள கரும்புகளை சேதப்படுத்தி உள்ளது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து விளை நிலையங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ராமாபுரம் பிரிவு பகுதியைச் சேர்ந்த விவசாயி மல்லு (50) என்பவர் தனது தோட்டத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்டு இருந்தார். நேற்று காலை வழக்கம் போல் மல்லு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்திற்கு சென்ற போது கரும்பு பயிர்களுக்கு இடையே 4 காட்டு யானைகள் முகாமிட்டபடி கரும்பு பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்துவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து உடனடியாக தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ் நிர்மல் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகள் கரும்பு தோட்டத்திற்குள் நடமாடுவதை கண்டு உடனடியாக யானைகளை விரட்ட முயற்சித்தனர். பகல் நேரம் என்பதால் காட்டு யானைகள் கரும்பு தோட்டத்தை விட்டு வெளியேறாமல் போக்கு காட்டி வந்தது.

    இதையடுத்து யானைகள் நடமாட்டத்தை துல்லியமாக கண்காணிக்க வனத்துறையின் டிரோன் கேமரா குழுவினர் வர வழைக்கப்பட்டனர். டிரோன் கேமரா மூலம் யானைகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டதில் கரும்புத் தோட்டத்தில் முகாமிட்ட 4 யானைகளும் ஆண் யானைகள் என தெரிய வந்தது.

    யானைகள் அப்பகுதியில் முகாமிட்டதை அறிந்த பொதுமக்கள் யானைகளை வேடிக்கை பார்ப்பதற்காக கூட்டமாக திரண்டதால் சம்பவ இடத்திற்கு வந்த தாளவாடி போலீசார் பொதுமக்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    கரும்பு தோட்டம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக மாநில வனப்பகுதி அமைந்துள்ளது. அந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 4 காட்டு யானைகள் தான் கரும்பு தோட்டத்தில் முகாமிட்டது தெரியவந்தது.

    தொடர்ந்து இரவு வரை டிரோன் கேமரா மூலம் யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்தனர். சுமார் 12 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக இரவில் அந்த 4 யானைகளும் கர்நாடக வனப்பகுதிக்குள் சென்றது.

    இதன் பிறகு வனத்துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். யானை கூட்டம் கரும்பு தோட்டத்தில் புகுந்து 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள கரும்புகளை சேதப்படுத்தி உள்ளது. இதனால் நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயி மல்லு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • குட்டியுடன் கூடிய 4 யானைகள் மற்றும் ஒற்றை யானை ஆகியவை காட்டுக்குள் திரும்பாமல் ஊருக்குள் சுற்றி வந்தன.
    • காட்டு யானைகள் அதிகாலை நேரத்தில் செம்மேடு புற்றுக்கண் கோவில் அருகே வந்தது.

    வடவள்ளி:

    கோவை போளுவாம் பட்டி சரகத்துக்கு உட்பட்ட நரசீபுரம் வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 12 காட்டு யானைகள் வெளியேறின. பின்னர் அவற்றில் 7 யானைகள் நேற்று அதிகாலை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டன.

    ஆனால் குட்டியுடன் கூடிய 4 யானைகள் மற்றும் ஒற்றை யானை ஆகியவை காட்டுக்குள் திரும்பாமல் ஊருக்குள் சுற்றி வந்தன. அதிலும் குறிப்பாக ஒற்றை காட்டுயானை முட்டத்து வயல் பகுதிக்கு சென்று அங்குள்ள ரேசன் கடையை உடைத்து அரிசியை தின்றுவிட்டு பின்னர் பூண்டி வனப்பகுதிக்குள் சென்றது.

    இதற்கிடையே குட்டியுடன் கூடிய 4 காட்டு யானைகள் அதிகாலை நேரத்தில் செம்மேடு புற்றுக்கண் கோவில் அருகே வந்தது. பின்னர் அங்குள்ள தனியார் பாக்கு தோட்டத்தில் முகாமிட்ட யானைகள் அங்கு விளைந்து நிற்கும் சணப்பை பயிர்களை தின்று தீர்த்தது.

    அப்போது காலைநேரம் என்பதால் பூண்டி சாலையில் போக்குவரத்து நிறைந்து காணப்பட்டது. இதனால் மாலைவரை வனத்துறையினர் காத்திருந்தனர். பின்னர் மாலை 6 மணியளவில் போலீசார் உதவியுடன் பூண்டி சாலையில் போக்குவரத்தை நிறுத்தி தொடர்ந்து பட்டாசு வெடித்தும், ஜே.சி.பி. வாகனம் உதவியுடனும் காட்டு யானைகளை விரட்ட முயற்சித்தனர். ஆனால் இரவு 8 மணிவரை காட்டு யானைகள் பாக்கு தோட்டத்தை விட்டு வெளியேவரவில்லை. தொடர்ந்து வனத்துறையினர் சுமார் 14 மணிநேரம் போராடி காட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டினர்.

    • காடுகளிலும், அதை சுற்றிய பகுதிகளிலும் வெள்ளம் தேங்கி இருக்கும் போது வனத்துறையினர் யானைகள் மீது ஏறி ரோந்து செல்கின்றனர்.
    • காடுகளை சுற்றிலும் மழை நீர் தேங்கி இருக்கிறது.

    மழை காலத்தில் வனப்பகுதிகளை சுற்றிலும் வெள்ளம் மூழ்கியுள்ள நிலையில் இமயமலை அடிவாரத்தின் தெற்கு பகுதியில் உள்ள தேராய் காடுகளில் வனத்துறையினர் யானைகளில் ரோந்து செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    தேராய் காடுகளில் மழை காலங்களில் ரோந்து செல்வது வனத்துறையினருக்கு சவாலான பணியாக உள்ளது. காடுகளிலும், அதை சுற்றிய பகுதிகளிலும் வெள்ளம் தேங்கி இருக்கும் போது வனத்துறையினர் யானைகள் மீது ஏறி ரோந்து செல்கின்றனர்.

    இதுதொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில், காடுகளை சுற்றிலும் மழை நீர் தேங்கி இருக்கிறது. மேலும் காடு முழுவதும் நாணல்கள் வளர்ந்துள்ளது. அப்போது வனத்துறையினர் பாகன்களை அழைத்து கொண்டு யானைகள் மீது அமர்ந்து காட்டை சுற்றி ரோந்து செல்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் வனத்துறையினரை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர் உள்பட 7 வனச்சரகங்களும் உள்ளன.
    • வனக்கோட்ட வாரியாக யானைகளின் இருப்பு எவ்வளவு என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை மத்திய அரசு வெளியிடும்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றது.

    ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் சத்தியமங்கலம், டி.என்.பாளையம், கடம்பூர், தாளவாடி, ஆசனூர், ஜீரகள்ளி கேர்மாளம், விளாமுண்டி, தலமலை, பவானிசாகர் ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன.

    ஈரோடு வனக்கோட்டத்திற்குள்பட்ட தந்தை பெரியார் வனச்சரணாலயத்தில் ஈரோடு, அந்தியூர், பர்கூர், சென்னம்பட்டி, தட்டக்கரை ஆகிய 5 வனச்சரகங்களும், சேலம் மாவட்டத்தில் மேட்டூர், கொளத்தூர் உள்ளிட்ட 20 வனச்சரகங்களும், தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் உள்ளிட்ட 8 வனச்சரகங்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர் உள்பட 7 வனச்சரகங்களும் உள்ளன.

    இந்த வனச்சரணாலய பகுதிகளில் ஆயிரக்கணக்கான யானைகள் வசித்து வருகின்றன. வனச்சூழலையும், சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதில் யானைகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எனவே யானைகளின் வாழ்விடங்களை மேம்படுத்தும் வகையில் தமிழக வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வனச்சரணாலயப் பகுதிகளில் ஒவ்வொரு வனச்சரகத்திலும் வசிக்கும் யானைகள் எவ்வளவு என்பது குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டன.

    தற்போது வனச்சரகங்களில் எடுக்கப்பட்ட யானைகளின் கணக்கெடுப்பு தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்தப் பகுதிகளில் வசிக்கும் யானைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்ற தகவல்களை மத்திய வனத்துறை மூலம் அரசு வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பாதுகாப்பாளர் ராஜ்குமார் கூறியதாவது:-

    தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தொடங்கி அதன் தொடர்ச்சியாக உள்ள மோயாறு பள்ளத்தாக்கு, சத்தியமங்கலம், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஒசூர் வனக்கோட்டம் வரையிலான பகுதிகளில் இந்த ஆண்டுக்கான யானைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.

    சத்தியமங்கலம் வனக்கோட்டத்தை பொறுத்த வரை கடந்த ஆண்டில் 720-க்கும் மேற்பட்ட யானைகள் இருந்தது கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்தது. தமிழகத்தில் நடைபெற்றதை போலவே அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் யானைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது.

    ஒவ்வொரு பகுதியிலும் எடுக்கப்பட்ட யானைகளின் கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை சேகரித்து இறுதியாக வனக்கோட்ட வாரியாக யானைகளின் இருப்பு எவ்வளவு என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை மத்திய அரசு வெளியிடும்.

    சத்தியமங்கலம் வனக்கோட்டத்தைப் பொருத்த வரை யானைகள் வேட்டையாடுவது தடுக்கப்பட்டுள்ளதால் யானைகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பில்லை. யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்பதை யானைகளின் வழித்தடங்களில் எடுக்கப்பட்ட ஒட்டு மொத்தமாக கணக்கீட்டின் அடிப்படையிலேயே தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • யானை ஒன்று வால்பாறை-பொள்ளாச்சி நெடுஞ்சாலைக்கு வந்து அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தது.
    • சுற்றுலா பயணிகள் யானையை கண்டதும் குதூகலம் அடைந்து செல்பி எடுக்க முயன்றனர்.

    வால்பாறை:

    வால்பாறை பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

    அவற்றில் பெரும்பாலானவை வாட்டார் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு உள்ளன. கடந்த வாரம் அந்த வழியாக வந்த ஒரு காரை யானை உடைத்து சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வனத்தை விட்டு வெளியேறிய யானை ஒன்று வால்பாறை-பொள்ளாச்சி நெடுஞ்சாலைக்கு வந்து அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தது.

    அப்போது அந்த வழியாக வாகனத்தில் வந்த சுற்றுலா பயணிகள் யானையை கண்டதும் குதூகலம் அடைந்து செல்பி எடுக்க முயன்றனர். இதனால் மிரண்ட காட்டு யானை அந்த வாகனத்தை விரட்டியது.

    வால்பாறை-பொள்ளாச்சி சாலைக்கு வந்த ஒரு காட்டு யானை, அந்த வழியாக சென்ற காரை துரத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,

    வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் சாலையோரம் திரியும் யானைகளை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு அடிக்கடி வெளியே வருகிறது.
    • தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி மற்றும் தலமலை வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    இந்த பகுதியில் உள்ள யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு அடிக்கடி வெளியே வருகிறது. அப்படி வெளியேறும் யானைகள் ரோட்டை கடந்து சென்று வருகிறது. அப்போது அந்த வழியாக கரும்பு ஏற்றி வரும் லாரிகளில் இருந்து கரும்புகளை ருசித்து வருகிறது. மேலும் இந்த பகுதியில் மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் வெயில் கொளுத்தியது. மாவட்டத்தில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வந்தது.

    இதனால் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மற்றும் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதிகளில் வெயில் காரணமாக கடும் வரட்சி நிலவியது. குறிப்பாக தாளவாடி வனப்பகுதிகளில் செடி, கொடிகள் காய்ந்து கிடந்தது.

    அதே போல் வெயில் கொளுத்தியதால் தாளவாடி வனப்பகுதியில் உள்ள குளம், குட்டை மற்றும் நீர் நிலைகளில் நீர்வரத்து குறைந்து வறட்சியாக காணப்பட்டது. இதனால் நீர் நிலைகள் தண்ணீர் இன்றி காணப்பட்டது.

    இதனால் தாளவாடி வனப்பகுதிகளில் இருந்து யானைகள் வழக்கத்தை விட அதிகளவில் கூட்டம், கூட்டமாக தண்ணீர் மற்றும் உணவு தேடி வெளியே வந்தது.

    இந்த நிலையில் தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதே போல் தொடர்ந்து வனப்பகுதிகளில் அடிக்கடி சாரல் மழை தூறு கொண்டே உள்ளது.

    இதனால் தாளவாடி வனப்பகுதி பசுமையாக காட்சி அளித்து வருகிறது. இதே போல் தாளவாடி வனப்பகுதிகளில் மரம், செடி, கொடிகள் துளிர்ந்து பச்சை பசேலென இருக்கிறது.

    தொடர் மழையால் தாளவாடி வனப்பகுதிகளில் உள்ள வன குட்டைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் பெரும்பாலும் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    இதனால் வனப்பகுதிகளில் உள்ள யானைகள் மற்றும் வன விலங்குகளில் அங்கு உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் குடித்து தாகத்தை தீர்த்து வருகிறது. மேலும் வனப்பகுதியில் யானைகளுக்கு தேவையான உணவு கிடைப்பதால் பெரும்பாலான யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவது குறைந்தது. ஆனால் ஒரு சில யானைகள் மட்டுமே வனப்பகுதியை விட்டு வெளியேறினாலும் அவை அமைதியான முறையில் ரோட்டை கடந்து சென்று விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் யானைகள் தொல்லையின்றி சென்று வருகிறார்கள்.

    இதே போல் அநதியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதிகளிலும் யானைகள்கள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதியில் யானைகள் அடிக்கடி வெளியேறி வந்தன. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் வனப்பகுதிகளில் உள்ள குட்டைகள் நிரம்பி வருகிறது.

    இதனால் வனப்பகுதிகளில் உள்ள யானைகள் அந்த பகுதிகளில் குட்டைகளில் தண்ணீர் குடித்து வருகிறது. இதனால் பர்கூர் வனப்பகுதிகளில் இருந்து யானைகள் வெளியேறுவது குறைந்து உள்ளது.

    • வனத்துறையினர் யானை வந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • வனத்துறையினர் யானையை கண்காணித்து அடர்ந்த காட்டுப் பகுதிக்கு விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள ஆலள்ளி, மரகட்டா, ஜார்க்கலட்டி, நொகனூர், நெல்லுக்குந்தி, ஜவளகிரி, அய்யூர், அஞ்செட்டி போன்ற பகுதிகளில் தனித்தனியாக ஒற்றை காட்டு யானைகள் சுற்றித்திரிந்து பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த காட்டு யானைகள் தாக்கி கடந்த 2 மாதங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், தேன்கனிக்கோட்டையில் இருந்து பஞ்சப்பள்ளி செல்லும் சாலையில், உள்ள திப்ப சந்திரம் என்ற கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு உணவுத் தண்ணீர் தேடி ஒற்றை காட்டு யானை சுற்றித்திரிந்துள்ளது. இரவு நேரத்தில் கிராமத்தின் அருகே வந்த காட்டு யானை, அங்குள்ள வீட்டின் முன்பு நின்ற நாய்களை பிளிறியபடி துரத்தி சென்றது.

    இந்த காட்சிகளை பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். சமூக வலைதளத்தில் பரவ விட்டுள்ளனர். நீண்ட நேரம் சுற்றித்திரிந்த அந்த யானை, பின்னர் அங்கிருந்து அருகிலுள்ள வனப்பகுதிக்கு சென்றது.

    இதையடுத்து, கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல்அளித்தனர். விரைந்த வந்த வனத்துறையினர் யானை வந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, அங்கு வந்த பொதுமக்கள், அச்சுறுத்தி வரும் காட்டுயானையை அடர்ந்தவனப்பகுதிக்கு விரட்டவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தற்போது வனத்துறையினர் ஒற்றை யானையை கண்காணித்து அடர்ந்த காட்டுப் பகுதிக்கு விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • கோவையில் மட்டும் 4 புதிய யானை வழித்தடங்கள் கண்டறியப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    • எங்களை இடம்பெயர வைக்க திட்டமிடுவது மனித உரிமைகளை மீறும் செயலாகும்.

    பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத்துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக கோவையில் செயல்பட்டு வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவரும், தொண்டாமுத்தூர் விவசாயியுமான குமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:-

    கோவையில் செயல்பட்டு வரும் எங்களுடைய வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் இந்தியாவின் முன்னணி உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கான தமிழக அரசின் விருதையும், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறந்த வளர்ந்து வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கான விருதையும் எங்கள் நிறுவனம் பெற்றுள்ளது. எங்கள் நிறுவனத்தில் 1063 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் மொத்தம் 5859 ஏக்கரில் சொந்தமாக விவசாயம் செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட அனைத்து விவசாய உறுப்பினர்களும் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். தென்னை, பாக்கு, வாழை மற்றும் காய்கறிகளை பிரதான பயிர்களை விளைவித்து வருகிறோம்.


    தமிழக வனத்துறை தமிழ்நாட்டில் புதிதாக 42 யானை வழித்தடங்களை கண்டறிந்துள்ளதாக ஒரு செய்தி சில தினங்களுக்கு முன்பு செய்திதாள்களில் வெளியாகி இருந்தது. இதையடுத்து, தமிழக வனத்துறையின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு இருந்த அந்த வரைவு அறிக்கையை நாங்கள் படித்து பார்த்தோம். அந்த அறிக்கையில் கோவையில் மட்டும் 4 புதிய யானை வழித்தடங்கள் கண்டறியப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எங்களுடைய விவசாய உறுப்பினர்களின் விவசாய நிலங்கள், வீடுகள், கோவில்கள் இருக்கும் பகுதியும் ஒரு யானை வழித்தடமாக குறிப்பிடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.

    மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆய்வை தமிழக வனத்துறை மேற்கொண்ட போது எங்கள் பகுதி விவசாயிகள் ஒருவரிடம் கூட இது குறித்து கலந்து ஆலோசிக்கவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயிகளுடன் ஒரு கருத்து கேட்பு கூட்டமும் நடத்தவில்லை. இதற்கு மாறாக, எங்கள் பகுதி நிலப்பரப்பையும், சுற்றுச்சூழலையையும் முழுமையாக அறியாத நபர்களை கொண்டு ஒரு தலைப்பட்சமாக இந்த வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    நாங்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் பகுதிகளை அந்த குழுவினர் யானை வழித்தடமாக பரிந்துரைத்து இருப்பது வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. அதுமட்டுமின்றி, இல்லாத யானை வழித்தடத்தை புதிதாக கண்டறிந்து அதை விரிவுப்படுத்த 450 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த வேண்டும் எனவும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


    இந்த முடிவை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

    எங்களுடைய பெற்றோரும், முன்னோர்களும் பல தலைமுறைகளாக இங்கு விவசாயம் செய்து வருகின்றனர். அந்த வகையில், எங்கள் பகுதியில் யானைகள் இடம்பெயர்வதை நாங்கள் இதுவரை பார்த்ததும் இல்லை; கேள்விப்பட்டதும் இல்லை. அவ்வாறு யானைகள் அதிகம் இடம்பெயரும் பகுதியாக இருந்தால் எங்களால் இங்கு பல தலைமுறைகளாக விவசாயம் செய்து இருக்க முடியாது.

    எனவே, காலம் காலமாக விவசாயம் நடைபெற்று வரும் பகுதிகளை யானை வழித்தடம் என பரிந்துரைத்து இருப்பதை நாங்கள் எவ்விதத்திலும் ஏற்று கொள்ளமாட்டோம். யானைகளின் பெயரை பயன்படுத்தி எங்கள் நிலங்களை பறித்து, எங்களை இடம்பெயர வைக்க திட்டமிடுவது மனித உரிமைகளை மீறும் செயலாகும்.

    அத்துடன், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில், மருதமலை கோவில், அனுவாவி கோவில், பண்ணாரி கோவில், பொன்னூத்து அம்மன் கோவில் என பல இந்து கோவில்கள் அமைந்துள்ள பகுதிகள் யானை வழித்தடப் பகுதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது எங்களுடைய இந்து மக்களின் வழிப்பாட்டு உரிமையை பறிக்கும் முயற்சியாகவும் கருதுகிறோம்.

    எனவே, எவ்வித முறையான கள ஆய்வும், உள்ளூர் மக்களின் கலந்தாலோசனையும் இன்றி தன்னிச்சையாக தயாரிக்கப்பட்டுள்ள 'வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் - மருதமலை' யானை வழித்தட பரிந்துரையை தமிழக அரசு ஏற்று கொள்ள கூடாது என வேண்டுகோள் விடுக்கிறோம்.

    • பாறை இடுக்குகளில் தண்ணீர் தேடும் யானைகள்.
    • தண்ணீரை தேடி மலை அடிவார பகுதிகளில் சுற்றி திரிந்து வருகின்றன.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தை யொட்டிய மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வருவ தால் அங்கு உள்ள காட்டு யானைகள் தற்போது வனத்தில் இருந்து வெளியேறி உணவு மற்றும் தண்ணீரை தேடி மலை அடிவார பகுதிகளில் சுற்றித்திரிந்து வருகின்றன.

    இந்த நிலையில் மேட்டுப்பாளையம்-குன்னூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கே.என்.ஆா்.பகுதி க்கு 6 காட்டு யானைகள் வந்தன. அவை அங்குள்ள பாறைகளின் நடுவே தண்ணீர் கிடைக்கிறதா என தேடி பார்த்தன.

    அப்போது பாறைகளின் நடுவில் ஆங்காங்கே தேங்கிக் கிடந்த குட்டைகளில் உள்ள தண்ணீரை துதிக்கையால் உறிஞ்சிக் குடித்தன. பின்னர் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றி சூட்டை தணித்துக்கொண்டு மீண்டும் காட்டுக்குள் திரும்பி சென்றன.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை பகுதியில் பாறை இடுக்குகளில் தண்ணீர் தேடும் யானைகள் குறித்து வனவியல் ஆய்வாளர்கள் கூறுகையில், `நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் மட்டுமின்றி வனவிலங்குகளுக்கான குடிநீா் தேவையும் அதிகரித்து உள்ளது.

    எனவே காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் கோடைக்காலம் முடியும்வரை தண்ணீரை நிரப்பவும், குட்டைகளை கண்காணிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அமராவதி அணையிலும் நீா் இருப்பு குறைந்து காணப்படுவதால், யானைகள் அவதியடைந்து வருகின்றன.
    • தண்ணீா் கிடைக்காமல் யானைகள் அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூா் மாவட்டம், உடுமலை மற்றும் அமராவதி வனப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருவதால், யானைகள் குடிநீருக்காக அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    இந்நிலையில் கோடைக் காலம் தொடங்கியுள்ளதால் வனப் பகுதியில் உள்ள ஓடைகள், ஆறுகள் வறண்டு போயுள்ளன. மேலும், புற்கள் காய்ந்து வன விலங்குகளுக்கு உணவு கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் உணவு, குடிநீா் தேடி வன விலங்குகள் வனத்தைவிட்டு கூட்டம் கூட்டமாக வெளி யேறத் தொடங்கியுள்ளன.

    அதன்படி தமிழக எல்லைக்குட்பட்ட காமனூத்து, பூங்கன் ஓடை, சரக்குப்பட்டி, ஏழுமலையான் கோவில் வளைவு உள்ளிட்ட பகுதிகளுக்கு யானைகள் வரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, குடிநீா்த் தேவைக்காக உடுமலை-மூணாறு சாலையைக் கடந்து அமராவதி அணையை நோக்கி யானைகள் படையெடுத்து வருகின்றன. ஆனால், அமராவதி அணையிலும் நீா் இருப்பு குறைந்து காணப்படுவதால், யானைகள் அவதியடைந்து வருகின்றன.

    உடுமலை மற்றும் அமராவதி வனப்பகுதியில் வனத்துறையினரால் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளும் வறண்டு காணப்படுகின்றன. இதனால், தண்ணீா் கிடைக்காமல் யானைகள் அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து உடுமலை மற்றும் அமராவதி வனச் சரக அதிகாரிகள் கூறியதாவது:- வனப்பகுதியில் தற்போது கடுமையான வறட்சி நிலவி வருகிறது. தடுப்பணைகளும் வறண்டு போனதால் யானைகள் வனத்தைவிட்டு வெளியே சுற்றி வருகின்றன. தற்போது, அமராவதி அணையை நோக்கி யானைகள் கூட்டம்கூட்டமாக வருகின்றன. அங்கும் நீா்ப் பற்றாக்குறை உள்ளது. மழை பெய்தால் மட்டுமே இதற்குத் தீா்வு கிடைக்கும் என்றனா்.

    • வனப்பகுதியில் இருந்து 14 காட்டு யானைகள் குளத்தில் தண்ணீர் குடிக்க வந்தன.
    • இரும்பு தடுப்பு வேலிகளை உடைத்து தள்ளி பூங்காவிற்குள் நுழைந்தன.

    திருப்பதி:

    திருப்பதி மலையில் உள்ள ஸ்ரீ வாரி பாடலா வனப்பகுதியில் சீலா தோரணம் பூங்கா உள்ளது. இதன் அருகில் வன விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக குளம் ஒன்று உள்ளது.

    வனப்பகுதியில் இருந்து 14 காட்டு யானைகள் குளத்தில் தண்ணீர் குடிக்க வந்தன. அப்போது அருகில் இருந்த சீலா தோரணத்திற்கு வந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பு வேலிகளை உடைத்து தள்ளி பூங்காவிற்குள் நுழைந்தன.

    அங்கிருந்த மரங்கள் மற்றும் பூ தொட்டிகள், பூச்செடிகள் ஆகியவற்றை மிதித்து நாசம் செய்தன. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தொடர்ந்து சைரன் ஒலி எழுப்பி காட்டு யானைகளை விரட்டியடித்தனர்.

    • ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டுயானைகள் வசித்து வருகின்றன.
    • யானை கூட்டங்களை செல்போனில் படம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான்கள் உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டுயானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் கிராமத்துக்குள் புகுவதும், விளை நிலங்களை சேதப்படுத்துவதும், சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி உணவு இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பதுமாக அலைந்து வருகிறது.

    இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை கூட்டம் உணவு-தண்ணீர் தேடி சாலையை கடந்து சென்றது. யானை கூட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை நிறுத்தினர். பின்னர் சிறிது நேரத்தில் அந்த யானைகள் கூட்டம் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் வாகன ஓட்டிகள் சென்றனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீரை தேடி காட்டுயானைகள் கூட்டம் அடிக்கடி சாலையோரம் வருகிறது. வாகனங்களை நிறுத்தி உணவு இருக்கிறதா என்று தேடிப் பார்க்கிறது.

    எனவே வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம். அதேப்போல் யானை கூட்டங்களை செல்போனில் படம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    ×