என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்களை தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக ஜே.சி.பி. மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.
    • கட்டிடங்களை இடிக்கும்போது சுவர் சரிந்து விழுந்ததில் சீனப்பா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி துவக்க பள்ளியில் பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்களை தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக ஜே.சி.பி. மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.

    இதையடுத்து இன்று காலை அந்த கட்டிடங்களை இடிக்கும்போது சுவர் சரிந்து விழுந்ததில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சீனப்பா (வயது55) என்பவர் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்த சீனப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • காயமடைந்த பெண்ணை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • சம்பவம் தொடர்பாக சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் மேட்டு தெரு அருகே உள்ள கடையில் பணியாற்றி வரும் 24 வயதுடைய பெண்ணும், நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை (வயது26) என்ற வாலிபரும், கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சம்பவத்தன்று காலை மதுபோதையில் வந்த அண்ணாமலை கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த தனது காதலியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் அந்த பெண்ணின் தந்தைக்கு போன் செய்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து ஆத்திரம் அடைந்த அண்ணாமலை தான் மறைத்து வைத்திருந்த சூரி கத்தியால் காதலி கன்னத்தில் வெட்டி கீறினார். இதில் அவர் வலி தாங்காமல் அலறினார். அவர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று உள்ளார்.

    இதனை தொடர்ந்து காயமடைந்த அந்த பெண்ணை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.
    • அப்பெண் திருடுவதற்கு திட்டம் போட்டாரா என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நள்ளிரவில் பெண் ஒருவர் வீடு வீடாகச் சென்று கதவை தட்டி 'அடிப்பட்டு வந்திருக்கேன்.. ஹெல்ப் பண்ணுங்க சார்' என கூச்சலிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அப்பெண் உண்மையாக உத்தரவு கேட்டு வந்தாரா இல்லை திருடுவதற்காக திட்டமா என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

    இந்நிலையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அப்பெண்ணை கண்டுபிடித்து போலீசார் விசாரித்ததில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் இரு தினங்களாக பர்கூர் பகுதியில் சுற்றி வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
    • சூளகிரி நகரம், கதாமன்தொட்டி, அட்டகுறுக்கி,

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குருபரபபள்ளி, சூளகிரி, காமன்தொட்டி துணை மின் நிலையங்களில் மின்சார பராமரிப்பு பணிகள் வருகிற 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குருபரப்பள்ளி, அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் சுற்று வட்டார பகுதிகள், சூளகிரி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள், கதாமன்தொட்டி, அட்டகுறுக்கி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
    • வீட்டில் பிணமாக கிடந்த மூன்று பேரிpf உடல்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் கற்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவபூபதி (வயது45). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் குறிஞ்சி நகர் பகுதியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கி உள்ளார்.

    ஆன்லைன் நெட்வொர்க் ஷேர் மார்க்கெட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு நரேந்திரபூபதி (14) லதீஷ் பூபதி (11) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர்.

    இவர்கள் ஓசூர் சமத்துவபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். சிவபூபதி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டில் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரர் போலீசார் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது வீட்டில் சிவபூபதி தூக்கில் தொங்கியவாறு கிடந்தார். அருகில், இரண்டு மகன்களும் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.

    அவரது மனைவி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்று விட்டதால், உயிர் தப்பிவிட்டார்.

    இந்த சம்பவம் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக ஓசூரில் சிவபூபதி வாழ்ந்து வருவதாகவும், ஆன்லைன் வர்த்தகத்தை சொந்த ஊரிலும், சென்னையிலும் அவர் செய்து வந்த நிலையில் அதே தொழிலை ஓசூரில் செய்து வந்துள்ளார்.

    வீட்டில் பிணமாக கிடந்த மூன்று பேரிpf உடல்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    • சூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு செல்லக்கூடிய விஜய் கரூருக்கு தாமதமாக வந்தார்.
    • கரூர் விஷயத்தில் இருபக்கமும் தவறு உள்ளது.

    கிருஷ்ணகிரி:

    தே.மு.தி.க. சார்பில் 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற தலைப்பில் விஜயகாந்த் ரத யாத்திரை - பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று இரவு நடந்தது. இதில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

    கரூரில் நடந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கொடுக்க தவறியதால் 41 பேர் உயிர் இழந்துள்ளனர். மக்களை சந்திக்க தாமதமாக வந்ததே விஜய் செய்த பெரிய தவறு. நாம் சொன்ன நேரத்திற்கு இங்கு வந்தோம். முதலில் விஜய் தாமதமாக வந்தது தவறு. கடமை உணர்வை தவறினார் விஜய்.

    சூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு செல்லக்கூடிய விஜய் கரூருக்கு தாமதமாக வந்தார். கரூரில் பிரசார கூட்டம் நடந்த இடத்தில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்பட்டது. அதனாலேயே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதே நேரத்தில் தொண்டர்களுக்கு தண்ணீர், உணவு கொடுக்க வேண்டாமா? வாகனத்தில் உள்ளேயே அமர்ந்து இருக்க கூடாது.

    விஜய் நீங்கள் விஜயகாந்த்தை அண்ணன் என்று கூறுகிறீர்கள். அண்ணன் என்ன செய்தார்? என பார்த்து நீங்கள் செயல்படுங்கள். விமானத்தில் ஏறி வீட்டிற்குள் சென்றவர் இதுவரை வெளியே வரவில்லை. அறியாமல் விபத்து நடந்து விட்டதாக கூறுங்கள். ஏன் மகாமகத்தில் இறக்கவில்லையா? கள்ளச்சாராயம் குடித்து சாகவில்லையா? யாரை கைது செய்தார்கள். கள்ளக்குறிச்சிக்கு இந்த முதலமைச்சர் சென்றாரா? இன்று கரூருக்கு தனி விமானத்தில் இரவோடு இரவாக ஓடோடி செல்கிறார். எல்லாம் அரசியல்.

    யாரோ ஒருவர் செய்த தவறுக்காக தே.மு.தி.க.வை வஞ்சிக்கிறார்கள். இதுவரை தமிழ்நாட்டிலேயே ஒரு மாநாடு நடத்தி கின்னஸ் சாதனை படைத்த கட்சி தே.மு.தி.க. தான். தொண்டர்களை உண்மையில் நேசித்தவர் விஜயகாந்த். விஜய் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும். நிதியுதவியை நேரில் கொடுக்க வேண்டும்.

    கரூர் விஷயத்தில் இருபக்கமும் தவறு உள்ளது. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசும் தவறி விட்டது. தொண்டர்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய விஜய்யும் தவறு செய்து விட்டார். இதில் மாற்று கருத்து இல்லை. புஸ்சி ஆனந்த் தலைமறைவு என்கிறார்கள். எதற்காக தலைமறைவாக வேண்டும், தூக்கிலா போட போகிறார்கள். நேரில் வந்து சந்திக்க வேண்டும்.

    கர்நாடக மாநில தொழிற்சாலை கழிவுநீர் இந்த மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் கலக்கப்படுகிறது. இந்த தண்ணீரை கால்நடைகள் கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இந்த பகுதி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க வேண்டும். அதுவே அரசின் கடமை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காதல் ஜோடிகள் அத்துமீறும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.
    • தமிழக அரசின் முத்திரை, காவல்துறையின் முத்திரை, காவல் உதவி எண் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தது.

    காதல்... இரு மனங்கள் ஒன்றிணைவது காதல்.

    புனிதமாக பார்க்கப்பட்ட காதல் இக்காலக்கட்டத்தில் பொது இடங்களில் முகம் சுளிக்கும் வகையில் எல்லைமீறும் செயல்களில் களமிறங்குகிறார்கள், இன்றைய பல காதல் ஜோடிகள்.

    இதற்காக கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் கண்காணிப்பு கேமரா போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டாலும் பலனில்லை.

    அந்தவகையில் ஓசூரில் பூங்கா முன்பு விளம்பர பதாகை (பேனர்) ஒன்று வைக்கப்பட்டதில் பெரும் சர்ச்சையை கிளம்பியது. அதன் விவரம் வருமாறு:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் ராமநாயக்கன் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையில் மாநகராட்சி சார்பில் குழந்தைகள் பூங்கா அமைந்துள்ளது.

    இந்த பூங்காவில் நடைப்பயிற்சி பாதை, உடற்பயிற்சி மேற்கொள்வதற்கான கருவிகள், தியான மண்டபம், மரப்பூங்கா, சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஏரிக்கரையையொட்டி உட்காருவதற்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஓசூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் வந்து, பூங்காவில் பொழுது போக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் பூங்காவில் பகல் நேரத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் வந்து செல்வதும் மற்றும் பிறந்தநாள் கொண்டாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இது ஒருபுறம் இருந்தாலும், இங்கு காதல் ஜோடிகள் அத்துமீறும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இந்த பூங்காவில் இரவு நேர காவலாளி இல்லாததால் சமூக விரோத செயல்களும் நடந்து வந்தன. இதனால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் காலை மற்றும் மாலையில் மட்டும் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். தொடர்ந்து பூங்காவை பகலில் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதனிடையே பூங்காவின் நுழைவு வாயிலில் திருமணம் ஆகாதவர்களுக்கு பூங்காவிற்குள் அனுமதி இல்லை என நேற்று பேனர் வைக்கப்பட்டது. அதில் தமிழக அரசின் முத்திரை, காவல்துறையின் முத்திரை, காவல் உதவி எண் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக திருமணம் ஆகாத இளைஞர்களும், இளம்பெண்களும் பேனரை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களின் எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்தனர்.

    இதனிடையே இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானதால் அந்த பேனர் அகற்றப்பட்டது. இந்த பேனரை காவல்துறை சார்பில் வைக்கவில்லை என போலீசார் தெரிவித்த நிலையில், பேனரை கட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது யார்? என விசாரணை நடந்து வருகிறது.

    • விபத்தில் சிக்கிய அனைத்து வாகனங்களின் முன்பகுதி, பின்பகுதி கடுமையாக சேதமானது.
    • வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கு பலர் வேலைக்கு சென்று வருகின்றனர்.

    தினமும் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இதையடுத்து ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் ஒன்று விபத்தில் சிக்கியது.

    வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை படத்தில் காணலாம்.


     

    அப்போது எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதியது. விபத்தில் சிக்கிய அனைத்து வாகனங்களின் முன்பகுதி, பின்பகுதி கடுமையாக சேதமானது. இந்த விபத்தில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினர். பின்னர் போக்குவரத்து நெரிசல் சீரானது. இந்த விபத்தால் சாலையில் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    • ரேபிஸ் நோய் தாக்குதலில் சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயக்கோட்டை:

    உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நந்தலால். இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு மூன்றரை வயது சிறுவன் சத்யா.

    இவர்கள் மாசி நாயக்கன பள்ளி கிராமத்தில் ராம மூர்த்தி என்பவருக்கு சொந்தமான பசுமை குடிலில் அங்கேயே தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 31-ந்தேதி சிறுவன் விளையாடி கொண்டிருந்த பொழுது தெருநாய் முகம், கை ஆகிய பகுதிகளில் அவனை கடித்து குதறியதால் காயங்கள் ஏற்பட்டது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்ட பெற்றோர், சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனை யில் சிறுவன் அனுமதிக்கப்பட்டார்.

    சிகிச்சை முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய நிலையில் நேற்று மாலை கழிவறைக்கு செல்லும் போது சிறுவன் மயங்கி விழுந்தார்.

    அவரை மீட்டு மருத்து வமனைக்கு அழைத்து சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார். 21 நாட்களுக்கு பிறகு ரேபிஸ் நோய் தாக்குதலில் சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.

    கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அணையின் பாதுகாப்பு கருதி வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டுள்ளது.
    • கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் 49.75 கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 126 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டுள்ளது.

    அணை பூங்காவுக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் சாத்தனூர் அணை வரை உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் மற்றும் தாழ்வானப்பகுத களில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சாரிக்கை விடப்படுகிறது. பெரியமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டிணம், கால்வேஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சௌட்ட ஹள்ளி, தளி ஹள்ளி ஆகிய கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களுக்கு தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.

    தென் பெண்ணை யாற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

    மேலும் ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை கொண்டு செல்லவோ தடை விதிக்கப்படுகிறது என நீர்வளத்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • பன்றி வளர்ப்பில் ஈடுபட்ட ரவிசங்கரை மர்மநபர்கள் 2 பேர் வெட்டிக்கொன்று தப்பிச் சென்றனர்.
    • தொழில் போட்டி காரணமாக ரவிசங்கர் கொல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கிழக்கு ஒன்றிய பொருளாளர் ரவிசங்கர் (35) ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். பன்றி வளர்ப்பில் ஈடுபட்ட ரவிசங்கரை மர்மநபர்கள் 2 பேர் வெட்டிக்கொன்று தப்பிச் சென்றனர்.

    தொழில் போட்டி காரணமாக ரவிசங்கர் கொல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக சூளகிரி காவல்துறையினர் விசாரணை நடத்தி, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • கடந்த மாதம் 27-ந்தேதி இரவு தோட்டத்தின் அருகில் இருந்த நாயை அடிக்க முற்பட்டார்.
    • சம்பவம் குறித்து தளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த நாட்றம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முனி மல்லப்பா (வயது 50) கூலி தொழிலாளி. இவர் முன்ராஜ் என்பவரின் தோட்டத்தில் கடந்த 3 வருடங்களாக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில், கடந்த மாதம் 27-ந்தேதி இரவு தோட்டத்தின் அருகில் இருந்த நாயை அடிக்க முற்பட்டார். அப்போது அந்த நாய் முனி மல்லப்பாவை கடித்ததாக கூறப்படுகிறது.

    பின்னர், முனி மல்லப்பாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டர். அங்கு முனி மல்லப்பாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் முனி மல்லப்பா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து தளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×