என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து"

    • விபத்து ஒன்றுக்கு அதிகபட்சம் 7 நாட்களுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம்வரை கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்படும்.
    • உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படுவதை குறைக்கும் நோக்கத்தில் இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.

    புதுடெல்லி:

    சாலை விபத்துகளில் காயமடைபவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டம், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 14-ந் தேதி, சண்டிகாரில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தால் பரிசோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது. பின்னர், அத்திட்டம் 6 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

    இந்நிலையில், விரைவில் நாடு முழுவதும் இத்திட்டத்தை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பார் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கூறினார்.

    அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் போக்குவரத்து மந்திரிகளின் வருடாந்திர கூட்டம், நிதின் கட்காரி தலைமையில் நடந்தது. அதில், சாலை பாதுகாப்பு, பயணிகளுக்கான வசதிகள் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு நிதின் கட்காரி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது இத்தகவலை தெரிவித்தார். கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டத்தின்படி, நாட்டின் எந்தவகையான சாலையிலும் மோட்டார் வாகன பயன்பாட்டின் மூலம் ஏற்படும் விபத்துகளில் காயமடைபவர்களுக்கு நபர் ஒருவருக்கு விபத்து ஒன்றுக்கு அதிகபட்சம் 7 நாட்களுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம்வரை கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்படும்.

    உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படுவதை குறைக்கும் நோக்கத்தில் இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.

    அதே சமயத்தில், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் பரிசோதனை அடிப்படையில் அமலுக்கு வந்ததில் இருந்து 20 சதவீத கட்டணமில்லா சிகிச்சை கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.

    • தனது குழந்தைக்கு விடை கொடுக்கும் பெற்றோரின் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
    • அந்த வாக்குறுதியை நான் புதுப்பித்து, இன்னும் எளிமையான வாழ்க்கையை வாழத் தீர்மானிக்கிறேன்

    வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ் (49) காலமானார்.

    சமீபத்தில் அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது அக்னிவேஷ் விபத்தில் சிக்கினார்.

    இதைத்தொடர்ந்து நியூயார்க்கில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    உடல்நிலை தேறி வந்த நிலையில், நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.

    தனது மகனின் மறைவு குறித்து எக்ஸ் தளத்தில் அனில் அகர்வால் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று என் வாழ்வின் இருண்ட நாள். தனது குழந்தைக்கு விடை கொடுக்கும் பெற்றோரின் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

    ஒரு மகன் தனது தந்தைக்கு முன்பே செல்வது இயற்கை அல்ல. அவர் வெறும் என் மகன் மட்டுமல்ல, என் நண்பன் மற்றும் பெருமையும் கூட" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் அந்த பதிவில், " நாட்டில் எந்தக் குழந்தையும் பசியுடன் உறங்கக் கூடாது, எந்தக் குழந்தைக்கும் கல்வி மறுக்கப்படக் கூடாது, ஒவ்வொரு பெண்ணும் தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும், ஒவ்வொரு இளம் இந்தியருக்கும் அர்த்தமுள்ள வேலை கிடைக்க வேண்டும் என்ற கனவை நாங்கள் இருவரும் பகிர்ந்துகொண்டோம்.

    நாங்கள் சம்பாதிப்பதில் 75 சதவீதத்திற்கும் அதிகமானதை சமூகத்திற்குத் திருப்பிக் கொடுப்போம் என்று அக்னியிடம் நான் உறுதியளித்திருந்தேன்.

    இன்று, அந்த வாக்குறுதியை நான் புதுப்பித்து, இன்னும் எளிமையான வாழ்க்கையை வாழத் தீர்மானிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    அக்னிவேஷின் மறைவுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். 

    • கடந்த மாதம் 23-ந்தேதி இருவரும் வெவ்வேறு கார்களில் சென்றனர்.
    • விபத்தை ஏற்படுத்திய காரை கண்டுபிடித்து, அதனை ஓட்டியது அஜாஸ் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.

    காதலில் விழுந்தவர்கள் அதில் வெற்றி பெற பல்வேறு யுக்திகளை கையாளுவது சகஜமான விஷயம் தான். அதிலும் ஆண்களை எடுத்துக் கொண்டால் காதலிக்கும் பெண்ணை மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரின் மனதையும் கவர வேண்டும் என்று நினைப்பர்.

    அப்படி நினைத்த ஒருவர், தான் காதலித்த பெண்ணின் மீது நண்பன் மூலமாக மோதச்செய்து விபத்தை ஏற்படுத்தி உள்ளார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையால், விபத்தை வாலிபர் திட்டமிட்டு அரங்கேற்றிய விவரம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. அது பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் கோன்னி மம்மூத்து பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் ராஜன்(வயது24). இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்துள்ளார். அதுகுறித்து அந்த பெண்ணிடம் ரஞ்சித்ராஜன் தெரிவித்திருக்கிறார். ஆனால் அந்த பெண்ணோ பெரிய அளவில் விருப்பம் காட்டாமல் இருந்ததாக தெரிகிறது.

    இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தினரின் மனதை கவர்ந்து, அதன் மூலமாக இளம்பெண்ணை காதலிக்க வைத்துவிடலாம் என்று நினைத்தார். தான் காதலிக்கும் பெண்ணின் குடும்பத்தினரை கவர, விபத்து நாடகத்தை சினிமா பாணியில் அரங்கேற்ற திட்டமிட்டார்.

    அதாவது தான் காதலிக்கும் பெண்ணை ஏதாவது ஒரு வாகனத்தை விட்டு மோதச்செய்து, அவரை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்ப்பதன் மூலம் பெண்ணின் குடும்பத்தினரிடம் நல்ல பெயர் வாங்குவதே அவரது திட்டம் ஆகும்.

     

    கைதானவர்கள்

    இதுகுறித்து தனது நண்பரான கோன்னி பையனமான் பகுதியை சேர்ந்த அஜாஸ்(19) என்பவரிடம் தெரிவித்தார். அதற்கு அவரும் சம்மதித்தார். இதையடுத்து விபத்தை எங்கு வைத்து நடத்துவது? எப்படி அரங்கேற்றுவது? என்று இருவரும் திட்டமிட்டனர்.

    ரஞ்சித் ராஜன் மற்றும் அஜாஸ் வெவ்வேறு கார்களில் செல்வதும், அஜாஸ் தனது காரால் ரஞ்சித் ராஜன் காதலிக்கும் பெண்ணின் மீது மோதி விபத்தை ஏற்படுத்துவதுமே அவர்களது திட்டமாகும். அதன்படி கடந்த மாதம் 23-ந்தேதி இருவரும் வெவ்வேறு கார்களில் சென்றனர். பின்பு இருசக்கர வாகனத்தில் சென்ற ரஞ்சித்ராஜன் காதலிக்கும் பெண்ணை, அஜாஸ் தனது காரில் பின்தொடர்ந்து சென்றார். பத்தினம்திட்டா அருகே உள்ள வாழமுட்டம் பகுதிக்கு சென்றதும் அந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தின் மீது காரால் அஜாஸ் மோதினார்.

    பின்பு அவர் சம்பவ இடத்தில் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார். கார் மோதிய வேகத்தில் அந்த பெண் தூக்கிவீசப்பட்டார். அதில் அவரது கை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் மற்றொரு காரில் ரஞ்சித் ராஜன் விபத்து நடந்த இடத்துக்கு வந்தார்.

    அவர் காயமடைந்து கிடந்த தான் காதலிக்கும் பெண்ணை மீட்டு, தனது காரில் கொண்டு சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய காரை கண்டுபிடித்து, அதனை ஓட்டியது அஜாஸ் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் விபத்தில் சிக்கி காயமடைந்த பெண்ணை காப்பாற்றிய ரஞ்சித்ராஜனின் நண்பர் என்பது தெரியவந்தது. மேலும் விபத்து நடந்தவுடன் சம்பவ இடத்துக்கு ரஞ்சித் ராஜன் உடனடியாக வந்தது எப்படி? என்ற கேள்வி போலீசாருக்கு எழுந்தது.

    இதனால் இந்த விபத்து தற்செயலாக நடந்திருக்காதோ? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அஜாஸ் மற்றும் ரஞ்சித் ராஜன் ஆகியோரிடம் தனித்தனியாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

    இறுதியில் ரஞ்சித்ராஜன் தனது நண்பருடன் சேர்ந்து விபத்தை திட்டமிட்டு அரங்கேற்றியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ரஞ்சித்ராஜன் மற்றும் அஜாஸ் ஆகிய இருவரையும் போலிசார் கைது செய்தனர். காதலித்த பெண்ணின் குடும்பத்தினரை கவருவதற்காக, திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி இளம் பெண்ணின் மீது காரால் மோதச்செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆண்டிபட்டியில் இருந்து நேற்று இரவு பாதயாத்திரையாக சபரிமலைக்கு புறப்பட்டனர்.
    • விபத்தில் பலியான குமார் என்ற மாரிச்சாமி ஆண்டிபட்டியில் மருந்து கடை வைத்துள்ளார்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேலத்தெருவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வருடம் தோறும் அதே பகுதியை சேர்ந்த மாரிச்சாமி என்ற குருசாமி தலைமையில் சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். அதன்படி மாரிச்சாமி (வயது55) தலைமையில் ராம்கி (35) மற்றும் 7 பேருடன் ஆண்டிபட்டியில் இருந்து நேற்று இரவு பாதயாத்திரையாக சபரிமலைக்கு புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை அவர்கள் சின்னமனூர் அருகில் உள்ள கோட்டூர்-சீலையம்பட்டி சத்தியா கார்டன் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா மேலப்பாடியூரை சேர்ந்த சிவக்குமார் (34) என்பவர் வேனில் ஐயப்ப பக்தர்களுடன் சபரிமலைக்கு சென்று கொண்டிருந்தார். அதிகாலை 4.30 மணி அளவில் மற்றவர்கள் முன்னே சென்று விட மாரிச்சாமி, ராம்கி மட்டும் பின்னால் வந்துகொண்டிருந்தனர். இவர்கள் மீது அந்த வேன் பயங்கரமாக மோதியது. இதில் மாரிச்சாமி மற்றும் ராம்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதை பார்த்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சின்னமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சின்னமனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஈஸ்வரன், மோகன்தாஸ், காந்தி ஆகியோர் வழக்குப்ப திவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் பலியான குமார் என்ற மாரிச்சாமி ஆண்டிபட்டியில் மருந்து கடை வைத்துள்ளார். இவரது மனைவி கல்பனாதேவி அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். மகள் கல்லூரியிலும், மகன் 12-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    இதேபோல் விபத்தில் பலியான ராம்கி சலவை தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். ஒரு மகன் 3-ம் வகுப்பும் மற்றொரு மகன் 1-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் மீது சபரிமலைக்கு சென்ற வேன் மோதியதில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • பாதசாரிகள், பேருந்துக்காகக் காத்திருந்தவர்கள் மீது மோதியது.

    மும்பையில் நேற்று இரவு 10 மணியளவில் மாநகராட்சிப் பேருந்து மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மும்பையின் பாண்டூப் (Bhandup) ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள ஸ்டேஷன் சாலையில், ரிவர்ஸ் எடுக்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து மாநகர் அரசுப்பேருந்து (BEST bus) அங்கு நின்றிருந்த பாதசாரிகள் மற்றும் பேருந்துக்காகக் காத்திருந்தவர்கள் மீது மோதியது.

    இதில் 4 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் அடங்குவர். காயமடைந்த 9 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் சந்தோஷ் ரமேஷ் சாவந்த் (52) என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் 

    • கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் எதிரே வந்த அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • சிகிச்சை பலனின்றி கலைவாணனும், பவுனு அம்மாளும் பரிதாபமாக இறந்தனர்.

    திருவண்ணாமலை வேங்கிக்காலை சேர்ந்தவர் சக்திவேல். இவரது தாயார் பவுனு அம்மாளுக்கு (வயது 70) உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி பவுனுஅம்மாளை காரில் விழுப்புரத்துக்கு அழைத்துச்சென்று கொண்டிருந்தனர். காரில் சக்திவேலின் மனைவி கனகவல்லி (வயது 36). சக்திவேலின் தம்பி கோவிந்தராஜ் (42), அவரது மாமனார் கலைவாணன் (60, ஆகியோர் சென்றனர்.

    திருவண்ணாமலையை அடுத்த ராஜந்தாங்கல் பகுதியில் விழுப்புரம் நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் எதிரே விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ்சின் முன் பக்கத்தில் சிக்கிக் கொண்ட கார் சிறிது தூரம் இழுத்துச் செல்லபட்டதில், காரின் ஒரு பக்க மேற்கூரை முழுவதும் நசுங்கி சேதமானது.

    இந்த சம்பவத்தில் சக்திவேலின் மனைவி கனகவல்லி, தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த வேட்டவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் காரில் சென்ற கோவிந்தராஜ், கலைவாணன், பவுனு அம்மாள் ஆகிய 3 பேரும் படுகாயத்துடன் துடிதுடித்தனர். அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலைவாணனும், பவுனு அம்மாளும் பரிதாபமாக இறந்தனர். கோவிந்தராஜனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகவல்லியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் மாமியார், மருமகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மூத்த மகள் தமிழ்செல்வி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார்.
    • சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மாதம்பதி பகுதியை சேர்ந்தவர் தணிகாச்சலம் (வயது 35), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஐஸ்வர்யா (28). இவர்களுக்கு தமிழ் செல்வி, நிஷா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

    இதில் மூத்த மகள் தமிழ்செல்வி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார். இன்று காலை தமிழ் செல்வியை பள்ளிக்கு அனுப்புவதற்கு தாய் ஐஸ்வர்யா, தனது 4 இரண்டாவது மகள் நிஷாவையும் கூடவே அழைத்து சென்றுள்ளார்.

    அப்போது பள்ளி பஸ் வந்த உடன் தமிழ் செல்வியை ஏற்றி விட்டார். அப்போது எதிர்பாராத விதமாக பஸ் சக்கரத்தில் 2 வயது நிஷா சிக்கி உயிரிழந்தார்.

    மகள் பஸ் சக்கரத்தில் சிக்கி இறந்ததை கண்டு தாய் பதறி போய் கதறினார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • லாரி முன்னால் சென்று கொண்டிருந்த பைக், கார் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
    • தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் சதீஸ், போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    தருமபுரி:

    கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் புதூர் பகுதியில் இன்று காலை வந்தபோது திடீரென கட்டுபாட்டை இழந்தது. இதில் முன்னால் சென்று கொண்டிருந்த பைக், கார் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரில் இருந்தவர்கள் அய்யா.. அம்மா... என்று அலறினர்.

    உடனே அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இது குறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    விபத்தில் படுகாயம் அடைந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பொதுமக்கள் உதவியுடன் போலீசார் காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 5 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த 4 பேருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த விபத்தில் இறந்தது ஈரோடு மாவட்டம், சங்கரியை சேர்ந்த முனியப்பன் (வயது40), தருமபுரி மாவட்டம், மாதேமங்கலத்தை சேர்ந்த கலையரசி, சம்மனம்பட்டியை சேர்ந்த அருணகிரி ஆகிய 3 பேர் என தெரிய வந்தது. அவர்களது உடல் களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்தவிபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் சதீஸ், போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்து நடந்த இடத்தை ஆகியோர் பார்வையிட்டனர்.

    இந்த விபத்தால் தருமபுரி-சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போலீசார் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    இதனால் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கோர விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கோயில் விரிவாக்க கட்டுமானப் பணிகளின்போது விபத்து ஏற்பட்டது
    • கட்டுமானத் திட்டத்தின் மேலாளருமான விக்கி ஜெய்ராஜ் பாண்டே உயிரிழந்தார்

    தென் ஆப்பிரிக்காவின் குவாசுலு-நடால் மாகாணத்தில் 4 மாடி கோயில் இடிந்து விழுந்த விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

    கோயில் விரிவாக்க கட்டுமானப் பணிகளின்போது, திடீரென இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

    இறந்த நான்கு பேரில், ஒருவர் கோயில் அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினரும் கட்டுமானத் திட்டத்தின் மேலாளருமான விக்கி ஜெய்ராஜ் பாண்டே என அடையாளம் காணப்பட்டார்.

    • டிரைவர் அக்‌ஷய், பள்ளி மாணவி ஸ்ருதி லட்சுமி, ஜோதி லட்சுமி ஆகிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் தாழமேல் கிராமத்தை சேர்ந்தவர் அக்ஷய்(வயது23). ஆட்டோ டிரைவர். இவரது ஆட்டோவில் கவரலூர் பள்ளிவடக்கம் பகுதியை சேர்ந்த சுனில் பினி-நீலம்மாள் தம்பதியின் மகளான 10-ம் வகுப்பு மாணவி ஸ்ருதி லட்சுமி(16) மற்றும் ஜோதிலட்சுமி(21) ஆகிய இருவரும் பயணம் செய்தனர்.

    அவர்கள் அஞ்சல் பகுதியில் இருந்து கரவலூருக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களது ஆட்டோ மாவிலா கோவில் பகுதியில் வந்தபோது, அந்த வழியாக எதிரே ஐயப்ப பக்தர்கள் குழுவை அழைத்து வந்த சுற்றுலா பஸ் வந்தது.

    அந்த பஸ்சும், ஆட்டோவும் திடீரென நேருக்குநேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலுமாக நொறுங்கியது. ஆட்டோவில் இருந்த டிரைவர் அக்ஷய், பள்ளி மாணவி ஸ்ருதி லட்சுமி, ஜோதி லட்சுமி ஆகிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

    ஆட்டோ டிரைவர் அக்ஷய் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 2 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    படுகாயமடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்த பள்ளி மாணவி மற்றும் இளம்பெண்ணை மீட்டு அஞ்சல் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் பரிதாபமாக இறந்துவிட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆனது.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐயப்ப பக்தர்கள் வந்த பஸ் மற்றும் ஆட்டோ மோதிய விபத்தில் பள்ளி மாணவி உள்பட 3 பேர் பலியான சம்பவம் அஞ்சல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த எரிபொருள் டேங்கரில் இருந்து கசிந்த எரிபொருளை மக்கள் எடுக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
    • மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் அங்கு குழுமியிருந்தவர்களில் குறைந்தது 231 பேர் உயிரிழந்தனர்.

    2025 இல் உலகில் பல அழிவுகரமான விபத்துகள் அரங்கேறி உள்ளன. அவற்றில் நூற்றுக்கணக்கில் மக்கள் உயிரிழந்துள்ளனர். அவற்றை கால வரிசைப்படி இங்கு பார்ப்போம்.

    98 பேர் உடல் கருகி உயிரிழந்த நைஜீரிய எரிபொருள் டேங்கர் விபத்து

    2025 தொடக்கத்தில் ஜனவரி 18 அன்று நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தின் சுலேஜா அருகே நிகழ்ந்த கோரமான விபத்தில் 98 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சாலையில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த எரிபொருள் டேங்கரில் இருந்து கசிந்த எரிபொருளை மக்கள் எடுக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    78 பேர் பலியான துருக்கி ஹோட்டல் விபத்து

    ஜனவரி 21 அன்று துருக்கியில் புகழ்பெற்ற Ski Resort அமைந்துள்ள கார்தால்காயாவில் ஒரு சொகுசு ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 78 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். ஜனவரி மாத நடுப்பகுதியில், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்திருந்த நேரத்தில் இந்த விபத்து நடந்தது.

    இரவு நேரத்தில் தீப்பிடித்ததால், பலர் தங்கள் அறைகளுக்குள் சிக்கிக்கொண்டனர். மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டாலும், ஹோட்டலின் மரக்கட்டமைப்பு மற்றும் குளிர்சாதன அமைப்புகளால் தீ வேகமாக பரவியதில் விபத்தின் சேதம் பன்மடங்கு அதிகரித்தது.

    55 பேர் மரணித்த குவாத்தமாலா பேருந்து விபத்து

    மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு குவாத்தமாலா குடியரசு. இதன் தலைநகரான குவாத்தமாலா சிட்டியில் உள்ள லாஸ் வேகாஸ் ஆற்றின் மீதுள்ள பாலம் ஒன்றில் கடந்த பிப்ரவரி 10 அன்று அதிகாலையில் லாஸ் வேகாஸ் ஆற்றின் மீதுள்ள பாலம் ஒன்றில் இருந்து, பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது.

    இந்த கோர விபத்தில் குறைந்தது 55 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். பேருந்தில் இருந்தவர்களில் பலர் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த தினசரி கூலித் தொழிலாளர்கள்.

    59 பேர் பலி மரணித்த நைட் கிளப் விபத்து:

    பால்கன் நாடுகளில் ஒன்றான வடக்கு மாசிடோனியாவில் கோச்சானி நகரில் ஒரு பரபரப்பான இரவு விடுதியில் கடந்த மார்ச் 16 ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் உடல் கருகி இறந்தனர். இந்த விபத்தில் 155 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    தீ விபத்து ஏற்பட்டபோது விடுதிக்குள் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவசரகால வெளியேறும் வழிகள் போதுமானதாக இல்லாததும், நெரிசலும் உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

    231 பேர் பலி உயிரிழந்த டொமினிகன் நைட் கிளப் விபத்து

    கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசின் சான்டோ டொமிங்கோ நகரில் பிரபல பாடகர் ரூபி பெரெஸ் பங்கேற்ற இசை நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 8 அன்று இரவு விடுதி ஒன்றில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் அங்கு குழுமியிருந்தவர்களில் குறைந்தது 231 பேர் உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்தச் சம்பவத்தில் பாடகர் ரூபி பெரெஸும் உயிரிழந்தார். நிகழ்ச்சியின் போது கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதும், கட்டிடத்தின் தரமற்ற கட்டுமானமும் இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    148 பேர் பலி உயிரிழந்த காங்கோ படகு விபத்து

    ஏப்ரல் 15 அன்று ஆபிரிக்க நாடான காங்கோவின் மண்டாகா நகருக்கு அருகில் உள்ள காங்கோ ஆற்றில் மரப் படகு தீப்பிடித்துக் கவிழ்ந்ததில் குறைந்தது 148 பேர் உயிரிழந்தனர்.

    மோட்டார் மூலம் ஆற்றில் படகு அதிவேகமாக இயக்கப்பட்டதும் பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக இல்லாததும் இந்த விபத்துக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. படகில் இருந்த பலர் நீச்சல் தெரியாததாலும், தீக்காயங்களாலும் உயிரிழந்தனர்.

    70 பேர் பலியான ஈரான் துறைமுக விபத்து

    ஈரானின் முக்கிய வர்த்தக மையமான பந்தர் அப்பாஸில் உள்ள ஷாஹித் துறைமுகத்தில் ஏப்ரல் 26 பெரும் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. இந்த விபத்தில் குறைந்தது 70 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    துறைமுகத்தில் சேமிக்கப்பட்டிருந்த எரிபொருள் அல்லது இரசாயனப் பொருட்கள் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் ஈரானின் ஏற்றுமதி இறக்குமதி செயல்பாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    79 பேர் பலியான ஆப்கானிஸ்தான் பேருந்து விபத்து

    ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து, ஆப்கானிஸ்தான் ஹெராத் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் சரக்கு லாரி மீது மோதிய விபத்தில் 79 பேர் பலியாகினர்.

    159 பேர் பலியான ஹாங்காங் அடுக்குமாடி தீ விபத்து

    நவம்பர் 23 அன்று ஹாங்காங்கில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நெருக்கமாக அமைந்திருந்த கட்டடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 159 பேர் கொல்லப்பட்டதுடன், 150-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். அந்த கட்டடங்களில் மூங்கில் உள்ளிட்ட தீப்பற்றக்கூடிய பொருட்கள் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்டதே விபத்துக்கு காரணம் என்று பின்னர் தெரிய வந்தது. 

    • டிரெய்லர் லாரியை முந்தி செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.
    • 6 பேரும் பல்நாடு மாவட்டத்தில் நடைபெறும் படிபூஜையில் பங்கேற்க சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் சிலகலூரி பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் கனப்பவரம் என்னும் இடத்தில் புதிய டிராக்டர்களை ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லாரி ஒன்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் விட்டம்ராஜூ பள்ளி அருகே நடைபெறும் படிபூஜையில் கலந்து கொள்வதற்காக கார் ஒன்று வேகமாக சென்றது. காரில் 6 பேர் இருந்தனர்.

    டிரெய்லர் லாரியை முந்தி செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரிலிருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஒருவர் செல்லும் வழியிலேயே இறந்தார். ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பலியான 5 பேரும் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த வாசு, மகேஷ், ஸ்ரீகாந்த், ராமிரெட்டி, யஷ்வந்த் சாயி என்பதும், என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்திருந்தனர். 6 பேரும் பல்நாடு மாவட்டத்தில் நடைபெறும் படிபூஜையில் பங்கேற்க சென்றபோது இந்த கோர விபத்து நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    ×