என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிரிழப்பு"

    • வெடி விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
    • நிறுவனத்தின் 21 இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர், கட்டோல் தெஹ்சிலில் உள்ள ரவுல் கானில் சுரங்கம் மற்றும் வெடி பொருள் உற்பத்தி செய்யும் எஸ்.பி.எல். எனர்ஜி நிறுவன தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    இங்கு நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வெடி விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் எஸ்.பி.எல் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் 21 இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் 9 பேரை கைது செய்தனர்.

    பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பாதுகாப்பு தகவல் அமைப்பு ஆகியவற்றின் ஆரம்ப அறிக்கையின்படி, இந்த நிறுவனத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை கண்டறிந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில், அந்த தொழிற்சாலை நிறுவன அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ததாக தெரிவித்துள்ளனர்.

    மேலும், கைது செய்யப்பட்ட நபர்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த வழக்கில் மற்ற குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

    இதற்கிடையே வெடி விபத்தில் உயிர் இழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிவிட்டதால் அவர்களை அடையாளம் காண குடும்ப உறுப்பினர்களின் மாதிரிகள் டி.என்.ஏ. சோதனைக்காக எடுக்கப்பட்டு வருகின்றன.

    வெடி விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

    • பைக் நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • விபத்து குறித்து அதியமான் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி அருகேயுள்ள அங்கனாம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் வினோத் (வயது29). இவர் தருமபுரி நகர் அன்னசாகரம் பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வந்தார்.

    இவர் நேற்றிரவு வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கனாம் புதூர் என்ற இடத்தில் வந்தபோது எதிரே எம்.ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் என்பவரது மகன் ஹரிகிருஷ்ணன் (23) ஓட்டி பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் பலத்த காயம் அடைந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து அதியமான் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் இறந்த வினோத், ஹரிகிருஷ்ணன் ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆட்டோ சாலையோரமாக இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
    • மாணவிக்கு வெண்டிலேட்டர் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சுத்தமல்லி விலக்கு பகுதியில் உள்ள வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 30). இவர் தச்சநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 20-ந்தேதி காலை இவர் கல்லூரி பஸ்சை மதுபோதையில் ஓட்டிச்சென்றபோது நெல்லை-கடையம் சாலையில் சுத்தமல்லி அருகே உள்ள விஸ்வநாதன் நகர் பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது அதிவேகத்தில் மோதினார்.

    இதில் ஆட்டோ சாலையோரமாக இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த டிரைவரான சுத்தமல்லியை அடுத்த நடுக்கல்லூரை சேர்ந்த மனக்காவலம் பெருமாள் (49)மற்றும் சுத்தமல்லி அருகே பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளான சுத்தமல்லியை சேர்ந்த யஸ்வனி (15), பழவூர் கிராமத்தை சேர்ந்த செல்வபாலா (15) மற்றும் 10-ம் வகுப்பு மாணவன் முத்து அருள்(15) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    தொடர்ந்து 4 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாணவி செல்வபாலாவின் உடல்நிலை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நாளில் இருந்தே மிகவும் கவலைக்கிடமாகவே இருந்தது. இந்த நிலையில் மாணவிக்கு வெண்டிலேட்டர் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    சுமார் 4 நாட்களாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மாணவியின் உயிரை காப்பாற்ற போராடிய நிலையில் செல்வபாலா சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து தொடர்பாக ஏற்கனவே சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி விசாரணை நடத்தி கொலையாகாத மரணம் விளைவிக்க முயற்சி என வழக்குப்பதிவு செய்து டிரைவர் இசக்கியப்பனை கைது செய்திருந்த நிலையில், தற்போது மாணவி இறந்துவிட்டதால் கொலையாகாத மரணத்தை ஏற்படுத்தியதாக வழக்கை மாற்றம் செய்துள்ளனர். 

    • விபத்தில், 6 பெண்கள், 11 ஆண்கள் என மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர்.
    • 8 பெண்கள் உள்ளிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    நேபாளத்தின் போக்கராவிலிருந்து காத்மாண்டுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த கோர விபத்தில், 6 பெண்கள், 11 ஆண்கள் என மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர்.

    ஆற்றில் பேருந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்த 8 பெண்கள் உள்ளிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்செந்தூர் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக பக்தர்கள் மீது மோதியது.
    • விபத்தில் பலியான இருவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர்.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கழுவனை சேரியை சேர்ந்தவர்கள், காரியாபட்டியில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

    இவர்கள் அனைவரும் அருப்புக்கோட்டை அருகே செட்டி குறிச்சி விளக்கு அருகே சென்று கொண்டிந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் கோயமுத்தூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக பக்தர்கள் மீது மோதியது.

    இதில் கழுவனை சேரியை சேர்ந்த முத்து மகன் சடைய கருப்பன் (வயது 35), அதே பகுதியை சேர்ந்த முத்துராசு மகன் முத்துப்பாண்டி (35) ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பந்தல்குடி போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இது குறித்து பந்தல்குடி இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் பலியான இருவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். 

    • தனியார் நிறுவனம் மூலம் 15 பேர் கொண்ட குழுவினர் பனிச்சறுக்கு பயணம் மேற்கொண்டனர்.
    • பனிச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரை பத்திரமாக மீட்டனர்.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லேக் தாஹோ அருகிலுள்ள சியரா நெவாடா பகுதியில் தனியார் நிறுவனம் மூலம் 15 பேர் கொண்ட குழுவினர் பனிச்சறுக்கு பயணம் மேற்கொண்டனர்.

    அவர்கள் கேஸ்டில் பீக் பகுதியில் பனிச்சறுக்கில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்றுடன் பனிப்புயல் வீசியது. இதைதொடர்ந்து கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், அனைவரும் சிக்கிக் கொண்டனர்.

    இதுகுறித்து மீட்புப் படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் பனிச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரை பத்திரமாக மீட்டனர். பனிச்சரிவில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவரை காணவில்லை. அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து நெவாடா கவுண்டி ஷெரிப் ஷானன் மூன் கூறும்போது,"கடந்த 1981-ம் ஆண்டு வாஷிங்டனில் உள்ள மவுண்ட் ரெய்னியரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் நிகழ்ந்த மிக மோசமான சம்பவமாக இது அமைந்து உள்ளது"என்றார்.

    • வாயு கசிவால் அப்பகுதியில் திடீரென தீப்பற்றி வெடித்து சிதறியது.
    • சட்ட விரோதமாக செயல்படும் சுரங்கங்களை உடனடியாக மூட வேண்டும்.

    நைஜீரியாவின் பிளாட் டியூ மாகாணத்தில் உள்ள வேஸ் பகுதியில் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அதிகாலையில் தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, காா்பன் மோனாக்சைடு என்ற விஷவாயு வாயு கசிந்தது. வாயு கசிவால் அப்பகுதியில் திடீரென தீப்பற்றி வெடித்து சிதறியது.

    இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 38 தொழிலாளா்கள் பரிதாபமாக உயிரிழந்தனா்.

    மேலும், படுகாயமடைந்த 27 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

    நைஜீரியாவில் போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி சட்டவிரோதமாக செயல்படும் இதுபோன்ற சுரங்கங்களில் விபத்துகள் ஏற்படுவது தொடா்கதையாகி வருகிறது. இதனால் அந்நாட்டில் சட்ட விரோதமாக செயல்படும் சுரங்கங்களை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    • இழப்பீடு பெற்ற பிறகு பாதிக்கப்பட்டவர்கள் ஏர் இந்தியாவை மீண்டும் அணுக முடியாது.
    • ரூ.1 கோடிக்கும் ரூ.260 கோடிக்கும் இடையே உள்ள இடைவெளி தான் நாம் சிந்திக்க வேண்டிய இடமாகும்.

    மனித உடல் என்பது ஒரே மாதிரியான கூறுகளால் ஆனது. ஆனால் மனித உயிரின் மதிப்பு என்பது எந்த காலத்திலும் சமமாக இருந்ததில்லை. சமூகத்தின் எந்த அடுக்கில் இருக்கிறோம் என்பதை பொறுத்தே அது இருந்திருக்கிறது.

    நவீன காலத்தில் அரசுகள் மனிதன் வாழ்வதற்கான உரிமையை சமமாக வழங்குவதாக கூறுகின்றன. அனைத்து நாட்டு அரசியலமைப்புகளிலும் அந்த வரி இருக்கிறது.

    உணவு, மருத்துவம் உள்ளிட்ட அதற்கான திட்டங்களும் அரசுகளால் செயல்படுத்தப்படுகின்றன. ஆனாலும் சமூகம் இன்னும் பரபட்சமானதாகவே இருந்து வருகிறது. ஒரு நாட்டுக்குள் இருக்கும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பதை தாண்டி நாடுகளுக்கிடையேயான இடைவெளியும் கவனிக்கத்தக்கது.

    அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு குடிமகனின் உயிருக்கு இருக்கும் மதிப்புக்கும் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளில் இருப்போரின் உயிருக்கு இருக்கும் மதிப்புக்குமே பாரிய வித்தியாசம் உள்ளது. அமெரிக்காவில் ஒரு துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தால் அது அந்த வாரத்தின் பரபரப்பாக மாறுகிறது.

    ஆனால் சூடானில் கிளர்ச்சியாளர்களால் ஒரே கிராமத்தில் 200 பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை, குறைந்தபட்சம் பேசுபடுவதோ அல்லது உலகளவில் ஆவணமாவதோ கூட கிடையாது.


    இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டதற்கும் அதற்கு பழிவாங்க காசாவில் 70,000 மக்கள் கொன்று குவிக்கப்பட்டதும் மற்றொரு உதாரணம்.

    இது ஒரு புறம் இருக்க, அதிகாரம் மக்களின் உயிரின் மீது எத்தனை மதிப்பளிக்கிறது என்பதுமே கேள்விக்குரிய ஒன்றே.

    ஒரு விபத்து நிகழ்ந்தால் உயிரிழந்தவர்களுக்கு இவ்வளவு இழப்பீடு, காயமடைந்தவர்களுக்கு இவ்வளவு என அறிவிக்கப்டுகிறதே தவிர அதுபோன்ற விபத்து அல்லது தவறுகளை அடுத்து நிகழாமல் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் அரசுகள் தரப்பில் நிர்வாக மட்டத்தில் மேற்கொள்ளப்டுகிறதா என்பது பெரிய கேள்விக்குறியே.

    மனித உயிர் விலைமதிப்பற்றது. இருப்பினும் இழப்பீடு என்பது உயிரிழந்தவரின் வெற்றிடத்தை நிதி ரீதியாக எதிர்கொள்ள குடும்பத்திற்கு தேவை என்பதும் மறுக்க முடியாதது.

    இதன் அடிப்படையில் எவ்வளவு இழப்பீடு அளிக்கப்படுகிறது என்பது ஒரு உயிருக்கு அதிகாரம் எவ்வளவு மதிப்பளிக்கிறது என்பதை புரிந்துகொள்ள உதவுகிறது. அந்த வகையில் அண்மையில் இழப்பீடு குறித்து வந்த 2 செய்திகள் ஒப்புநோக்கத்தக்கவை.

    ஒன்று கடந்த ஆண்டு ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 260 பேருக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீடு.

    ஏர் இந்தியா அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கும் செயல்முறை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இழப்பீடு பெற்ற பிறகு பாதிக்கப்பட்டவர்கள் ஏர் இந்தியாவை மீண்டும் அணுக முடியாது எனவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

    எனவே உயிரிழந்த 260 பேருக்கும் தலா ரூ.1கோடி வீதம் இழப்பீடாக மொத்தம் ரூ.260 கோடி வழங்கப்படுகிறது.

    மற்றொரு செய்தி, அமெரிக்காவில் கடந்த 2023 ஜனவரியில் சாலையைக் கடக்க முயலும்போது அதிவேகத்தில் வந்த போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த 23 வயது இந்திய மாணவி ஜான்வி கண்டுலா குடும்பத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் வழங்கியுள்ள நிவாரணம்.

    கடந்த வெள்ளிக்கிழமை கிங் கவுண்டி உயர் நீதிமன்றம், ஜான்வியின் குடும்பத்தினருக்கு 20 மில்லியன் டாலர் (சுமார் ரூ.260 கோடி) தொகையை நகரத்தின் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. போலீஸ் அதிகாரி வாகனத்தை சுமார் 119 கி.மீ வேகத்தில் ஓட்டி சென்றதே ஜான்வியின் உயிரிழப்புக்கு காரணம்.

    எனவே எந்த தவறும் செய்யாமல் கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு ரூ.260 கோடி இழப்பீடு பொருத்தமானது என அந்நாட்டு நீதிமன்றம் கருதியது.

    அகமதாபாத் விமான விபத்திலும் பயணிகள் எந்த தவறும் செய்யவில்லை. இருப்பினும் அவர்களின் உயிருக்கு மதிப்பு ரூ.1 கோடி என்று முடிவுகட்டபடுகிறது. ரூ.1 கோடிக்கும் ரூ.260 கோடிக்கும் இடையே உள்ள இடைவெளி தான் நாம் சிந்திக்க வேண்டிய இடமாகும்.  

    • நீண்ட நேரமாக பள்ளத்தில் விழுந்து கிடந்தபோதும் தாமதமாகவே மீட்புப் பணிகள் தொடங்கின.
    • கடந்த பிப்ரவரி 6 அன்று மேற்கு டெல்லியின் ஜனக்புரி பகுதியில் டெல்லி குடிநீர் வாரியம் தோண்டியிருந்த பள்ளத்தில் விழுந்து மற்றொரு இளைஞர் உயிரிழந்தார்.

    டெல்லி ரோகிணி செக்டர் 32 பகுதியில் உள்ள மகாசக்தி காளி கோயில் அருகே, திறந்த நிலையில் இருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்து 32 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்தார்.

    உயிரிழந்தவர் பீகார் மாநிலம் சமஸ்திபூரைச் சேர்ந்த பிரிஜு குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    சம்பவ இடத்தில் இருந்த தேஜ்பால் யாதவ் என்பவர் கூறுகையில், "இந்த நபர் நீண்ட நேரமாக பள்ளத்தில் விழுந்து கிடந்துள்ளார். அவரது நண்பர்கள் மாலை 4 மணிக்கே போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். ஆனால் நான் 112 என்ற எண்ணிற்கு அழைத்து புகார் அளித்த பின்னரே மீட்புப் பணிகள் தொடங்கின" என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக கடந்த பிப்ரவரி 6 அன்று மேற்கு டெல்லியின் ஜனக்புரி பகுதியில் டெல்லி குடிநீர் வாரியம் தோண்டியிருந்த பள்ளத்தில் விழுந்து, தனியார் வங்கியில் பணிபுரிந்த 25 வயது இளைஞர் பலியானார்.

    டெல்லி மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்தின் இத்தகைய அலட்சியப்போக்கு குறித்து பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

    • மன வேதனையில் இருந்த சகாயம் செபஸ்டின் கேக்கில் விஷம் கலந்து குடும்பத்தினருக்கு கொடுத்தார்.
    • தாய் மற்றும் மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சென்னை பெரம்பூரில் விஷம் கலந்த கேக்கை சாப்பிட்டு 2 பேர் உயிரிழந்தனர். 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சகாயம் செபஸ்டின் என்பவரின் மனைவி பியூலா புற்றுநோயால் பாதிப்பட்டார். இதன் காரணமாக மன வேதனையில் இருந்த சகாயம் செபஸ்டின் கேக்கில் விஷம் கலந்து குடும்பத்தினருக்கு கொடுத்தார்.

    கேக்கை சாப்பிட்டு 2 பேர் உயிரிழந்தனர். தாய் மற்றும் மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    உயிரிழந்த இருவரின் உடலை கைப்பற்றி பெரம்பூர் செம்பியம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிராமத்தின் அருகே உள்ள குளத்தின் கரையின் டிராக்டர் வந்து கொண்டு இருந்தது
    • டிராக்டரில் வந்த 20 பெண்களும் தண்ணீரில் மூழ்கினர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டம் மல்லாபூர் அடுத்த மொகிலி பேட்டாவை சேர்ந்த 20 பெண்கள் மஞ்சள் அறுவடை வேலைக்காக அருகில் உள்ள கிராமத்திற்கு டிராக்டரில் சென்றனர்.

    நேற்று மாலை வேலை முடிந்து மீண்டும் டிராக்டரில் சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருந்தனர்.

    கிராமத்தின் அருகே உள்ள குளத்தின் கரையின் டிராக்டர் வந்து கொண்டு இருந்தது. குறுகிய வளைவில் திரும்பும்போது டிராக்டர் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்தது.

    டிராக்டரில் வந்த 20 பெண்களும் தண்ணீரில் மூழ்கினர். அருகில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கிய பெண்களை மீட்டனர். இதில் தண்ணீரில் மூழ்கி சம்பங்கி சாய்ம்மா (வயது 35),லலிதா (42 ), வைஷ்ணவி (13), பெட்டி ரெட்டி கங்கு (32) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    விவசாய வேலைக்குச் சென்று ஒரே ஊரை சேர்ந்த 4 பெண்கள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து மல்லாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாகவே திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் சமயபுரம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
    • சிறுவாச்சூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான பனிப்பொழிவில் சென்று கொண்டிருந்தனர்.

    பெரம்பலூர்:

    சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது. ஆண்டின் அனைத்து மாதங்களிலும் நடைபெறும் பல்வேறு விசேஷங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    குறிப்பாக பூச்சொரிதல், தைப்பூசம், சித்திரை திருவிழாக்களின்போது பக்தர்கள் தீச்சட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம் உள்ளிட்ட நேர்த்திக்கடன்கள் செலுத்துவது வழக்கம்.

    அதேபோல் திருச்சி மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சை உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும் வந்து சமயபுரம் மாரியம்மனை தரிசித்து செல்கிறார்கள். அந்த வகையில் தற்போது தைப்பூச திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (31-ந்தேதி) தெப்பத்திருவிழாவும், நாளை (1-ந்தேதி) கண்ணாடி பல்லக்கில் அம்மன் புறப்பாடும், அன்று இரவு வட திருக்காவேரி கரையில் ரெங்கநாதரிடமிருந்து சீர் பெறும் நிகழ்வும் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களாகவே திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் சமயபுரம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

    அதேபோல் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள தொழார் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிந்து நேற்று காலை ஒரு குழுவாக சமயபுரம் நோக்கி பாதயாத்திரையாக புறப்பட்டனர். வழியில் ஆங்காங்கே அமர்ந்து ஓய்வெடுத்தவாறு வந்தனர். அவர்கள் இன்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான பனிப்பொழிவில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது சுமார் 5 மணி அளவில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற கார் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் பக்தர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அந்த பகுதி முழுவதும் பெண் பக்தர்கள் மரண ஓலக்குரல் ஒலித்தது.

    இதைப்பார்த்த அந்த குழுவில் இடம்பெற்றிருந்த நடந்து வந்த பக்தர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தனர். அதேபோல் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களும் உடனடியாக நிறுத்தி விட்டு விபத்து நடந்த இடத்திற்கு வந்தனர். இந்த கோர விபத்தில் கடலூர் மாவட்டம், பெண்ணாடம், தொழார் குடிக்காட்டை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி மலர்கொடி (வயது 35), திருநாவுக்கரசு மனைவி சசிகலா (47), சுப்ரமணி மனைவி விஜயலட்சுமி (40), சேலம் மாவட்டம், கெங்க வல்லியை சேர்ந்த மருத முத்து மனைவி சித்ரா (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    மேலும் தொழார் குடிக்காட்டை சேர்ந்த பரமசிவம் மனைவி ஜோதிலட்சுமி (57) என்பவர் படுகாயமடைந்தார். தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காகவும் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் சென்னை திரிசூலம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த கவுதம் (24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் வெளியூர்களில் இருந்து பாதயாத்திரையாக சமயபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் விபத்துகளில் சிக்கி பலியாவது தொடர் கதையாகி வருகிறது. இதுபோன்ற விபத்துகளை தடுக்க பாதுகாப்பு கவசங்கள் அணிய பக்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    ×