என் மலர்
நைஜீரியா
- ஒரே நேரத்தில் 7 கிராமங்களிலும் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர்.
- மக்களை கொள்ளையர்களிடம் இருந்து காப்பதாக கூறி வந்த இவர்கள், பின்னர் தாங்களே வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர்.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் கால்நடைகளை திருடிச் செல்ல, பயங்கரவாதிகள், 33 பேரை சுட்டுக் கொன்ற கொடூரம் அரங்கேறி உள்ளது.
நைஜீரியாவின் கெப்பி மாநிலத்தின் ஏழு கிராமங்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இங்கு பிவு என்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த புதன்கிழமை பக்கத்து மாநிலமான சோகோட்டோவில் இருந்து வந்த லகுராவா என்ற அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஒரே நேரத்தில் 7 கிராமங்களிலும் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் மொத்தம் 33 பேர் கொல்லப்பட்ட நிலையில், மாமுனு என்ற கிராமத்தில் அதிகபட்சமாக 16 பேர் கொல்லப்பட்டனர். அங்கு வீடுகள் மற்றும் கடைகளுக்கும் அவர்கள் தீ வைத்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், கால்நடைகளைத் திருடுவதற்காகவே இந்தத் தீவிரவாதிகள் ஊடுருவியதாக தெரியவந்துள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து, அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட கூடுதல் ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
லகுராவா என்பது வடமேற்கு நைஜீரியாவில் சமீபகாலமாக உருவெடுத்துள்ள ஒரு புதிய ஆயுதக்குழுவாகும்.
ஆரம்பத்தில் உள்ளூர் மக்களை கொள்ளையர்களிடம் இருந்து காப்பதாகக் கூறி வந்த இவர்கள், பின்னர் தாங்களே வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர். கடந்த ஆண்டு நைஜீரிய அரசு லகுராவாவை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.
- வாயு கசிவால் அப்பகுதியில் திடீரென தீப்பற்றி வெடித்து சிதறியது.
- சட்ட விரோதமாக செயல்படும் சுரங்கங்களை உடனடியாக மூட வேண்டும்.
நைஜீரியாவின் பிளாட் டியூ மாகாணத்தில் உள்ள வேஸ் பகுதியில் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதிகாலையில் தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, காா்பன் மோனாக்சைடு என்ற விஷவாயு வாயு கசிந்தது. வாயு கசிவால் அப்பகுதியில் திடீரென தீப்பற்றி வெடித்து சிதறியது.
இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 38 தொழிலாளா்கள் பரிதாபமாக உயிரிழந்தனா்.
மேலும், படுகாயமடைந்த 27 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
நைஜீரியாவில் போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி சட்டவிரோதமாக செயல்படும் இதுபோன்ற சுரங்கங்களில் விபத்துகள் ஏற்படுவது தொடா்கதையாகி வருகிறது. இதனால் அந்நாட்டில் சட்ட விரோதமாக செயல்படும் சுரங்கங்களை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
- உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
- பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் கானோ மாகாணம் குவானர் பார்டே நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பல பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் பயணம் செய்த 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
லாரி நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதிக மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. மோசமான சாலைகள் மற்றும் போக்குவரத்துச் சட்டங்களை முறையாக அமல்படுத்தாததுதான் இதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
- கிராம மக்களைச் சூழ்ந்து கொண்டு, பலரின் கைகளைக் கட்டிப் போட்டு சுட்டுக் கொன்றுள்ளனர்.
- ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய லகுராவா என்ற ஆயுதக் குழுவினர் நடத்தியதாக தெரிய வந்துள்ளது.
நைஜீரியாவின் குவாரா மாநிலத்தில் உள்ள 2 கிராமங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் சுமார் 200 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
பிப்ரவரி 3-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு, குவாரா மாநிலத்தின் வோரோ மற்றும் நுகு ஆகிய இரண்டு தொலைதூர கிராமங்களுக்குள் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
பயங்கரவாதிகள், கிராம மக்களைச் சூழ்ந்து கொண்டு, பலரின் கைகளைக் கட்டிப் போட்டு சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும், பல வீடுகள் மற்றும் கடைகளுக்கும் தீ வைத்துள்ளனர்.
இந்தத் தாக்குதலை ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய லகுராவா என்ற ஆயுதக் குழுவினர் நடத்தியதாக தெரிய வந்துள்ளது.
நைஜீரிய ராணுவம் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தி வரும் தாக்குதல்களால் ஏற்பட்ட விரக்தியிலேயே, அவர்கள் இது போன்ற கோழைத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளதாகக் குவாரா மாநில ஆளுநர் அப்துல் ரஹ்மான் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.
- நைஜீரியாவில் கொள்ளையர்கள், பயங்கரவாத குழுக்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுகின்றன.
- இங்குள்ள பல பகுதிகள் ஆயுதமேந்திய கும்பல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
குவாரா:
நைஜீரியாவில் கொள்ளையர்கள், பயங்கரவாத குழுக்கள் அடிக்கடி வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றன. இங்குள்ள பல பகுதிகள் ஆயுதமேந்திய கும்பல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நைஜீரியாவின் குவாராவில் உள்ள வோரோ உள்ளிட்ட இரு கிராமங்களுக்குள் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நுழைந்தனர். அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவர்கள் அங்கிருந்த கடைகளையும் மன்னரின் அரண்மனையையும் தீ வைத்துக் கொளுத்தினர்.
இந்தத் தாக்குதலில் 162 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத குழுக்களே காரணம் என மாநில அரசு குற்றம்சாட்டியது.
துப்பாக்கிச் சூடு காயங்களுடன் பலர் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர். இன்னும் பல சடலங்கள் கிடைக்கலாம். பாரம்பரிய மன்னர் எங்கு இருக்கிறாரென தெரியவில்லை என அதிகாரிகள் கூறினர்.
குவாரா மாநில ஆளுநர் அப்துல் ரஹ்மான் அப்துல் ரஸாக் இத்தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மாநிலத்தில் நடந்து வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளால் ஏற்பட்ட விரக்தியில் பயங்கரவாத குழுக்கள் இந்தக் கோழைத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளன என தெரிவித்தார்.
- மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிக் கொண்டு சொந்த ஊர் திரும்பியபோது விபத்து.
- 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 14 பேரை காணவில்லை.
நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான யோப்பில் பயணிகள் படகு கவிழ்ந்து 25 பேர் பலியான நிலையில், 14 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜிகாவா மாநிலத்தில் உள்ள அதியானி கிராமத்தில் இருந்து புறப்பட்ட படகு, யோப் மாநிலத்தில் உள்ள கார்பிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
படகில் 52 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் குறைந்தது 25 பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இது வரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 25 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாயமான 14 பேரை தேடும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது யோப் மாநில அவசரநிலை மேலாண்மை ஏஜென்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
லீக்கேஜ் காரணமாக படகு நீரில் மூழ்கியதாக ஜிகாவா மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த சனிக்கிழமை (நேற்று) மார்க்கெட் நாள். அன்றைய தினம் பொருட்களை வாங்கிய பின்னர், சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். ஓட்டுனர் உயிர் பிழைத்திருந்தால், கவனக்குறைவுக்காக அவர் மீது வழக்கு தொடரப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
- 303 மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்களைத் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது.
- கடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே 50 மாணவர்கள் அங்கிருந்து தப்பித்து வந்தனர்.
நைஜீரியாவில் பயங்கரவத்திகளால் கடத்தப்பட்ட சுமார் 130 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் 21-ஆம் தேதி, நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் உள்ள புனித மேரி கத்தோலிக்கப் பள்ளியில் புகுந்த ஆயுதம் ஏந்திய கும்பல், 303 மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்களைத் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது.
கடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே 50 மாணவர்கள் அங்கிருந்து தப்பித்து வந்தனர். மீதமுள்ளவர்களை மீட்க ராணுவம் தீவிர நடவடிக்கையில் இறங்கியது.
இதனைத் தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் 100 மாணவர்கள் கடத்தல்காரர்களால் விடுவிக்கப்பட்டனர்.
தற்போது எஞ்சியிருந்த 130 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளதாக நைஜர் மாகாண போலீஸ் செய்தித் தொடர்பாளர் வாசியு அபியோடன் தெரிவித்துள்ளார்.
ராணுவத்தின் தேடுதல் வேட்டை காரணமாகவே இந்த விடுதலை சாத்தியமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்கள் நிலை குறித்த இதுவரை தகவல் வெளியாகவில்லை.
விடுவிக்கப்பட்ட மாணவர்கள் நைஜர் மாகாணத் தலைநகரான மின்னாவுக்கு அழைத்து வரப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நைஜீரியாவில் 12 ஆசிரியர்கள் உள்பட 315 பேர் கடத்தப்பட்டனர்.
- பாதுகாப்பு கருதி விடுதியுடன் கூடிய பள்ளிகளை தற்காலிகமாக மூட அரசாங்கம் உத்தரவிட்டது.
அபுஜா:
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் ஆயுத கும்பல் நுழைந்தது. பின்னர் துப்பாக்கிமுனையில் 100-க்கும் மேற்பட்டோரை கடத்திச் சென்றதாக தகவல் வெளியானது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தற்போது 12 ஆசிரியர்கள் உள்பட 315 பேர் கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே கடந்த 17-ந்தேதி கெபி மாகாணத்தில் பள்ளிக்குள் நுழைந்து 25 மாணவிகள் கடத்தப்பட்டனர். இதனால் பாதுகாப்பு கருதி விடுதியுடன் கூடிய பள்ளிகளை தற்காலிகமாக மூட அரசாங்கம் உத்தரவிட்டு இருந்தது. அதனை மீறி பள்ளி செயல்பட்டதே இந்த கடத்தலுக்கு காரணம் என கூறப்படுகிறது.
முன்னதாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கிறிஸ்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடைபெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி இருந்தார். இந்த சூழலில் அடுத்தடுத்து மாணவர்கள் கடத்தப்படுவது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கடத்தப்பட்ட 303 மாணவர்களில் சுமார் 50 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டனர் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- நைஜீரியாவில் 2-வது முறையாக பள்ளி மாணவர்கள் 100 பேர் கடத்தப்பட்டனர்.
- ஒரே வாரத்தில் மாணவர்கள் கடத்தப்பட்டது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அபுஜா:
நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர் உள்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து கடத்தல்காரர்களிடம் இருந்து 2 மாணவிகள் தப்பி ஓடி போலீசில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் உதவியுடன் மற்ற மாணவிகளை மீட்கும் முயற்சியில் போலீஸ் தீவிரமாக இறங்கியது.
இந்த மீட்பு பணிக்கு உதவுவதற்காக நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி அல்–ஹாஜ்ஜி பெல்லோவை கெபி மாகாணத்துக்குச் செல்ல அதிபர் போலா டினுபு உத்தரவிட்டுள்ளார். கடந்த 2021-ல் பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட 279 மாணவர்களை மீட்பதில் இவர் முக்கிய பங்காற்றினார்.
இந்நிலையில், நைஜர் மாகாணம் பாபிரி நகரில் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளி செயல்படுகிறது. இதன் அருகே மாணவர்கள் தங்கும் விடுதியும் அமைந்துள்ளது.
அந்த விடுதிக்குள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் நுழைந்தனர். பின்னர் துப்பாக்கி முனையில் 100 மாணவர்களை அந்த கும்பல் கடத்திச் சென்றது.
ஒரே வாரத்தில் 2-வது முறையாக பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தனது அனைத்து வெளிநாட்டுப் பயணங்களையும் ஒத்தி வைப்பதாக அதிபர் போலா டினுபு அறிவித்துள்ளார்.
- மேய்ச்சல்காரர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையிலான மோதல்களால் 500 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்
- இன மற்றும் மத வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்ட மோதல்களாகும்.
மத்திய நைஜீரியாவின் பென்யூ மாநிலத்தில் உள்ள யெலேவாடா கிராமத்தில் நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிசூடு தாக்குதலில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை காலை வரை நீடித்த இந்த தாக்குதலில் பலரைக் காணவில்லை, மேலும் டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் நைஜீரியா அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் விவசாயிகளை குறிவைத்ததாகத் தெரிகிறது. இதனால் விவசாய சமூகங்கள் இடம்பெயர்ந்து அப்பகுதியின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படலாம்.
பென்யூ மாநிலத்தில் 2019 ஆம் ஆண்டு முதல் மேய்ச்சல்காரர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையிலான மோதல்களால் 500 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் சுமார் 2.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவை பெரும்பாலும் இன மற்றும் மத வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்ட மோதல்களாகும்.
கடந்த மாதம், பென்யூவில் 42 பேர் மேய்ச்சல்காரர்களால் கொல்லப்பட்டனர். இந்த மோதல்களால் நைஜீரியாவில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
- பயங்கரவாத குழுக்கள் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.
- படுகாயம் அடைந்த பயணிகள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அபுஜா:
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. இதில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய போகோ ஹரம் உள்ளிட்ட பயங்கரவாதிகள் பொதுமக்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்தும் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர்.
15 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு அட்டூழியம் செய்து வரும் இந்த பயங்கரவாத அமைப்பினர் இதுவரை ஏராளமானோரை கொன்று குவித்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோரை அவர்களது வீடுகளில் இருந்து விரட்டியடித்து உள்ளனர்.
எனவே பயங்கரவாத குழுக்கள் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. இதனை கட்டுப்படுத்த ராணுவம் பல்வேறு நடவடிக்கை எடுத்தும் தொடர்ந்து தாக்குதல் நடைபெறுகிறது.
இந்த நிலையில் போர்னோ மாகாணம் மைராரி பஸ் நிலையத்தில் பலர் நின்று கொண்டிருந்தனர். அங்கு பஸ் வந்ததும் பயணிகள் பலர் அதில் ஏற முயன்றனர். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த பயணிகள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- கனமழையால் மோக்வா நகர் தத்தளித்த நிலையில் அணை உடைந்து நீர் புகுந்தது.
- ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்ந்தனர்.
அபுஜா:
நைஜீரியா நாட்டின் மார்க்கெட் நகரான மோக்வா, மழை வெள்ளத்தில் மூழ்கியது. இதில் குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோக்வா நகருக்கு அருகில் உள்ள அணை உடைந்ததால் நகருக்குள் வெள்ளம் புகுந்து நிலைமையை மேலும் மோசமாக்கியது. பல மணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழையால் மோக்வா நகர் வெள்ளத்தில் தத்தளித்த நேரத்தில், அணை உடைந்து தண்ணீர் நகருக்குள் புகுந்ததால் உயிரிழப்பு அதிகமானது.
பல வீடுகள் நீரில் மூழ்கின. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கனமழை காரணமாக ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், நைஜீரியாவில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 151 பேர் உயிரிழந்தனர் என நைஜர் அவசரகால அமைப்பின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். மேலும் பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.






