search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Floods"

    • கடந்த டிசம்பரில் பெய்த கனமழையால் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வீடுகள் சேதமடைந்தன.
    • வெள்ளத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளை கட்ட ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார் முதல்வர்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டங்களில் வசித்து வந்த பெரும்பாலான ஏழை மக்களின் வீடுகள் பெரிதும் சேதமடைந்தன.

    மழை வெள்ளத்தினால் பகுதியாக சேதமடைந்த வீடுகளை பழுது பார்ப்பதற்கு ரூ.2 லட்சம் வரையும், முழுமையாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாக கட்டுவதற்கு ரூ. 4 லட்சம் வரையும் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதன்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளிலுள்ள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பகுதியாக மற்றும் முழுமையாக சேதமடைந்த 955 வீடுகளுக்கு பழுதுநீக்கம் செய்யவும் மற்றும் புதிய கட்டுமானத்திற்கும் ரூபாய் 24.22 கோடியும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள 577 சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.21.62 கோடியும் ஆக மொத்தம் ரூ.45.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தொடர் மழை காரணமாக புதுவையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி விடுமுறை அறிவித்தார்.
    • வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் பாதியளவு தண்ணீரில் மூழ்கியுள்ளது.

    புதுச்சேரி:

    தென்மேற்கு வங்ககடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுவையில் வருகிற 10-ந் தேதி வரை மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    புதுவையில் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்தது. நேற்று காலை மழை இல்லை. வானம் மப்பும், மந்தாரமுமாக இருண்டு காணப்பட்டது. நேற்று மாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து விடிய, விடிய மழை பெய்தது. இன்று காலை வெளிச்சம் இன்றி இருண்டு காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    தொடர் மழை காரணமாக புதுவையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி விடுமுறை அறிவித்தார். இதேபோல பல்கலைக் கழகமும் கனமழையை ஒட்டி விடுமுறை அறிவித்தது.

    மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தேங்காய் திட்டு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க தொடங்கியுள்ளது. நகரையொட்டி உள்ள பாவாணர் நகர், பூமியான்பேட்டை, ஜவஹர் நகர், ரெயின்போ நகர், வெங்கட்டா நகர் பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    இப்பகுதிகளில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.


    முட்டளவு மழை நீர் தேங்கியதால் மக்கள் வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டனர். சில வீடுகளுக்கும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

    வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் பாதியளவு தண்ணீரில் மூழ்கியுள்ளது. வாய்க்கால்களில் மழைவெள்ளம் நிரம்பி வழிந்தோடுகிறது.

    நகர பகுதியில் உள்ள சில சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனங்கள் ஓட்டிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மழை காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டமே இன்றி வெறிச்சோடியது. மழையினால் புதுவை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

    • பல்வேறு ஆறுகளின் கரைகள் உடைந்ததாலும் ஸ்ரீவைகுண்டம் அருகே பல பகுதிகள் தீவுகளாக காணப்படுகின்றன.
    • திருச்செந்தூர், உடன்குடி பகுதிக்கு சென்ற 10-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் தென் திருப்பேரையில் நிற்கின்றன.

    தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மிக கன மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    தாமிரபரணி ஆற்றின் வெள்ள பெருக்காலும், பல்வேறு ஆறுகளின் கரைகள் உடைந்ததாலும் ஸ்ரீவைகுண்டம் அருகே பல பகுதிகள் தீவுகளாக காணப்படுகின்றன.

    கேம்பலாபாத், நாணல் காடு மற்றும் ஆறாாம் பண்ணையில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.

    பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பை தொடர்பு கொண்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலரான அந்த அமைப்பு தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளது.

    பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகிறது. மேலும் அவர்களை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    சென்னையில் இருந்து நேற்று முன்தினம் திருச்செந்தூர், உடன்குடி பகுதிக்கு சென்ற 10-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் தென் திருப்பேரையில் நிற்கின்றன. வெள்ள பெருக்கால் அந்த பகுதியை விட்டு செல்ல முடியவில்லை.

    இதனால் ஆம்னி பஸ்சில் இருந்து பயணிகள் தவித்தனர். அங்குள்ள நகராட்சி சார்பில் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்றக் கழக அமைப்பினர் சார்பில் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    வெள்ளம் வடிந்த பிறகு ஆம்னி பஸ்கள் அங்கிருந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கடந்த 2 நாட்களாக நிவாரணம் வழங்கப்பட்டன.

    வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள மேலப்பாளையம், பர்கிட் மாநகரம், ஆறாம் பண்ணை, பேட்டை, கொங்கராயக்குறிச்சி,தூத்துக்குடி, நெல்லை ஜங்ஷன், பாட்ட பத்து ஜங்ஷன், செய்துங்க நல்லூர், கோயில்பத்து, மெலசெவல்,கொழுமாடை, பத்தமடை, கணேஷ்புரம், புளியங்குடி, சுசீந்தரம், ஆகிய பகுதிகளில், சுமார் 10000-க்கும் அதிகமான மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பள்ளிவாசல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் தருதல், முதியவர்கள், கர்ப்பிணி பெண்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்ப்பது, மருத்துவமனைகளில் உள்ள நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கான பிரட், பால் வழங்குவது என பல பணிகளை செய்தது.

    • தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நம்பியாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது
    • அருவிகளில் குளிக்க பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல்தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நம்பியாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டது.

    இதே போல மேற்கு தொடர்ச்சி அணை பகுதியில் கனமழை பெய்வதால் மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அதன் வழித்தடத்தில் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

    மேலும் பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த அருவிகளில் குளிக்க பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • நிவாரண நிதியாக ரூ.6000 வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
    • இன்று முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 850 ரேஷன் கடைகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    திருவள்ளூர்:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்த தொகை அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட வட்டங்களில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இன்று முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 850 ரேஷன் கடைகளில் 4 லட்சத்து 62 ஆயிரத்து 893 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    • கடந்த இரண்டு நாட்களாக சென்னை மாநகரில் பெய்த வரலாறு காணாத கனமழையால், நகரமே தண்ணீரில் மூழ்கி உள்ளது.
    • தமிழ்நாடு அரசு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத்தில் பொருளாதார நிலைகுறித்த விவாதத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-

    2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட மிச்சாங் புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பேரழிவை உருவாக்கியுள்ளது. இதனால் கடந்த 6 நாட்களாக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களின் படகுகளும் வலைகளும் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. வெள்ளநீர் விளை நிலங்களில் தேங்கியுள்ளதால், விவசாயிகள் பயிர்களை இழந்துள்ளனர்.

    கடந்த இரண்டு நாட்களாக சென்னை மாநகரில் பெய்த வரலாறு காணாத கனமழையால், நகரமே தண்ணீரில் மூழ்கி உள்ளது.

    தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் சமுதாயக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கி தமிழ்நாடு அரசு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறது. இருந்தாலும், மீட்புப் பணிகளை மேற்கொள்வது பெரும் சவாலாக உள்ளது.

    எனவே, மத்திய அரசு நிதி மற்றும் நிவாரணப் பொருட்களை தமிழக அரசிற்கு வழங்கி, மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள உதவி செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தண்ணீர் வெளியேற்ற வேண்டும் என நேற்று தீர்த்தங்கரையம் பட்டு பகுதியில் பொது மக்கள் சாலை மறியல் செய்தனர்.
    • சென்னைக்கு குடிநீர் வழங்கும் 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரி நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலை உருவானது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிகள் தீவுகள் போல மாறியுள்ளன.

    சென்னையில் மேற்கு மாம்பலம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் கீழ்தளத் தில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

    இதனால் நேற்று இரவு அப்பகுதி மக்கள் தூக்கத்தை தொலைத்து விடிய, விடிய தவித்தனர். வீடுகளுக்குள் நாற்காலிகளை போட்டு அமர்ந்திருந்தனர்.

    இதே போன்று தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதி களிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

    ஆவடி மின்வாரிய அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்கு வசித்து வரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி யுள்ளனர். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 500-க்கும் மேற் பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கீழ்தளத்தில் வசிப்பவர்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் தவித்து வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் இந்த பகுதியில் மழை தேங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    அந்த பகுதியில் தேங்கிய மழைநீரை குழாய்கள் மூலமாக வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வரும் காலங்களில் இதுபோன்று மழை பாதிப்பு வரும் காலங்களில் ஏற்படாத வகையில் அதிகா ரிகள் உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண் டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மழை வெள்ளத்தில் நாய், பூனை போன்ற விலங்குகளும் செத்து கிடப்பதால் துர்நாற்றம் வீசு கிறது. அந்த பகுதியில் மின் கம்பிகளும் பொது மக்களை அச்சுறுத்தம் வகையில் இருப்பதாகவும் அதையும் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அம்பத்தூர் ஆவின் பகுதியில் உள்ள பட்டரவாக்கம் காந்திநகர், ஞானமூர்த்தி நகர், மேனாம்பேடு மின் வாரிய காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் அதிக அளவில் வெள்ளம் போல தேங்கியது.

    இதனால் அந்த வழியாக ரெயில் நிலையத்துக்கு சென்றவர்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர். மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புழல் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் புழல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதி களிலும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து தீவுபோல் காட்சி அளிக்கிறது.

    செங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    நேற்று புழல் பகுதியில் மட்டும் 8 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரி நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலை உருவானது.

    இதனால் நேற்று வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் இன்று காலை 2000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு கடலை சென்று அடைகிறது.

    இதனால் தண்ணீர் செல்லும் கால்வாயை ஒட்டியுள்ள சாமியார் மடம், வட பெரும் பாக்கம், வடகரை ஆகிய பகுதிகளில் மழைநீர் குடியி ருப்புகளில் புகுந்து பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் விளாங்காடுபாக்கத்தில் உள்ள மல்லிகாநகர் நியூ ஸ்டார் சிட்டி விளாங்காடுபாக்கம் கண்ணம்பாளையம் மற்றும் தீர்த்தங்கரை பட்டு ஊராட்சியில் உள்ள சன் சிட்டி, விவேக் நகர் ஆகிய நகரங்களில் வெள்ள நீர்புகுந்து பொதுமக்கள் வெளியே வர முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். தண்ணீர் வெளியேற்ற வேண்டும் என நேற்று தீர்த்தங்கரையம் பட்டு பகுதியில் பொது மக்கள் சாலை மறியல் செய்தனர். எனவே சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    புழல் விளாங்காடுபாக்கம் ஊரை ஒட்டியுள்ள மல்லிகா கார்டன், தாய் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அதன் அருகில் உள்ள நியூஸ்டார் சிட்டி பகுதிகளிலும் தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளது.

    குறிப்பாக நியூஸ்டார் சிட்டி குடியிருப்பு பகுதியை ஒட்டி ஓடும் கால்வாயில் இருந்து வெளியேறும் மழை வெள்ளம் அந்த பகுதி யில் காட்டாற்று வெள்ளம் போல் ஓடுகிறது. அந்த பகுதியில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாம்புகளும் அப்பகுதி மக்களை அச்சு றுத்திக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மழைக்கும் இதுபோன்ற வெள்ள பாதிப்பை சந்தித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி மக்கள் இந்த பாதிப்பில் இருந்து விடிவு காலம் பிறக்காதா? என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    அடுத்த ஆண்டு மழை காலத்திற்குள்ளாவது தங்களது பகுதியில் நீடிக்கும் வெள்ள பாதிப்புகளை மாதவரம் எம்.எல்.ஏ. சுதர் சனம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆகி யோர் தீர்த்து வைப்பார் களா? என்றும் அப்பகுதி மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

    விளாங்காடுபாக்கம் ஊருக்குள்ளும் மழை வெள்ளம் தேங்கி இருப்பதால் அங்கு வசிக்கும் மக்களும் இதே கோரிக்கையை விடுத்துள்ளனர்.

    இப்படி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. மழைக்காலங்களில் நீடிக்கும் இதுபோன்ற வெள்ள பாதிப்பு களை அதிகாரிகள் சரி செய்துதர வேண்டும் என்பதே அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • இன்று வரையிலும் அங்கு பாலம் கட்டி தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
    • அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர கால சிகிச்சைக்கு மலைவாழ் மக்கள் சமதள பரப்புக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அது தவிர கோடந்தூர், தளிஞ்சி, தளிஞ்சி வயல், கீழானவயல், பொறுப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, குழிப்பட்டி, குருமலை, மேல் குருமலை, மாவடப்பு, காட்டுப்பட்டி, முள்ளுப்பட்டி, கரட்டுபதி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ்மக்கள் குடியிருந்து வருகின்றனர். மலைவாழ் மக்கள் ரேஷன் பொருட்கள், மருத்துவ சிகிச்சை, உயர்கல்வி, சாகுபடி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காக சமதள பரப்பிற்கு சென்றுவர வேண்டி உள்ளது.

    அந்த வகையில் அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல், மஞ்சம்பட்டி போன்ற மலைவாழ் குடியிருப்புகளுக்கு சென்று வருவதற்கு உடுமலை-மூணாறு சாலையில் இருந்து கூட்டாறு வழியாக பாதை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாக மலைவாழ் மக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக உடுமலை மற்றும் கேரள மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் மழைக்காலங்களில் கூட்டாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்படுவதால் அதை கடந்து செல்ல முடியாமல் மலைவாழ் மக்கள் தவித்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து கூட்டாற்றில் உயர்மட்ட பாலம் அமைத்து தருமாறு மலைவாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இன்று வரையிலும் அங்கு பாலம் கட்டி தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

    இந்நிலையில் கடந்த 2 வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அமராவதி வனப்பகுதியில் 3 ஆறுகள் ஒன்றிணையும் கூட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதுமட்டுமின்றி சம்பகாட்டு வழிப்பாதையின் குறுக்காக செல்கின்ற ஓடையிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல் உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகள் எந்தவித தொடர்பும் இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர கால சிகிச்சைக்கு மலைவாழ் மக்கள் சமதள பரப்புக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மலைவாழ் மக்களின் நலன் கருதி கூட்டாற்றின் குறுக்காக உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • களக்காடு பகுதியை பொருத்தவரை தென் மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் குளங்கள் நிரம்பவில்லை. பருவமழை கை கொடுக்கா ததால் விவசாய பணிகளை மேற்கொள்வதில் தடை ஏற்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
    • களக்காடு பகுதியில் கடந்த சில நாட்க ளாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. மழை தொடர்ந்து நீடிப்ப தால் ஆறு, கால்வாய்களில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு உள்ளது.

    களக்காடு:

    களக்காடு பகுதியை பொருத்தவரை தென் மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் குளங்கள் நிரம்பவில்லை. பருவமழை கை கொடுக்கா ததால் விவசாய பணிகளை மேற்கொள்வதில் தடை ஏற்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

    தண்ணீர் வரத்து

    இந்நிலையில் களக்காடு பகுதியில் கடந்த சில நாட்க ளாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. மழை தொடர்ந்து நீடிப்ப தால் ஆறு, கால்வாய்களில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு உள்ளது.

    இதற்கிடையே நேற்று இரவில் விடிய, விடிய கனமழை கொட்டியது. மேற்கு தொடர்ச்சி மலையி லும் மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் மூலைக்கரைப்பட்டியில் அதிகபட்சமாக 140 மில்லி மீட்டரும், அதற்கடுத்தபடி யாக களக்காட்டில் 65 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

    மழையின் காரணமாக களக்காட்டில் ஓடும் நாங்கு நேரியான் கால்வாயில் திடீர் வெள்ளம் பாய்ந்தோடி யது. வெள்ளத்தால் களக்காடு-சிதம்பரபுரம் தரை பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு, பாலம் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது.

    இதையடுத்து நீர்வளத் துறையினரும், நகராட்சி ஊழியர்களும் ஜே.சி.பி.எந்திரத்தின் மூலம், பாலத்தில் ஏற்பட்டிருந்த அடைப்புகளை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இதுபோல கோவில்பத்து, கருவேலங்குளம் பாலங்களிலும் அடைப்புகள் அகற்றப்பட்டது. மேலும் பச்சையாறு, உப்பாற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மலையடிவார கால்வாய்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    சிதம்பரபுரத்தில் உள்ள கால்வாய்களில் தூர்வாரப் படாததால், கால்வாய்களில் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டு, இலவடி அணை யின் வழியாக தண்ணீர் வீணாக வெளியேறுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

    கால்வாய்களில் வரும் தண்ணீர் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர்வளத்துறையினர் கால்வாய், ஆறுகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். களக்காடு தலையணை யில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் கடந்த 7-ந் தேதி முதல் சுற்றுலா பயணி கள் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.

    தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்த வண்ணம் இருப்பதால் குளிக்க தடை நீடிக்கப் பட்டுள்ளது. அதே நேரத்தில் தலையணையை சுற்றி பார்க்க அனுமதி வழங்கப் படும் என்று வனத்துறை யினர் அறிவித்துள்ளனர்.

    • கரையோரத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • வேலப்பர் கோவிலை அடுத்துள்ள கூட்டாற்று பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டத்தில் கடந்த 1 வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. தேனி மாவட்டத்துக்கு தற்போது மேலும் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் இடைவிடாது மழை கொட்டியதால் இன்று தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக வராக நதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயமங்கலம், மேல்மங்கலம், வடுகபட்டி, குள்ளப்புரம் உள்ளிட்ட வராகநதிக்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கரையோரத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆண்டிபட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் நிலக்கடலை விவசாயம் செய்துள்ளார். நேற்று இரவு தனது தோட்டத்துக்கு காவலுக்கு சென்றார். அப்போது வேலப்பர் கோவிலை அடுத்துள்ள கூட்டாற்று பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதில் முருகன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. இது குறித்து ராஜதானி போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இரவு நேரமானதால் முருகனை மீட்க முடியவில்லை. இன்று காலை தடுப்பணையில் முருகன் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • போடி மெட்டு மலைச்சாலையில் புலியூத்து அருவிக்கு கீழ் 7,8 வது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே காட்டாற்று வெள்ளம் பாய்ந்தது.
    • ஒரு மணிநேரத்திற்கு பிறகு தண்ணீர் வரத்து குறைந்ததால் மீண்டும் அந்த சாலை வழியாக வாகனங்கள் கடந்து சென்றன.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பிள்ளையார்கோவில் அருகில் உள்ள தடுப்பணையில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

    கொட்டக்குடி ஆற்றை கடந்து விவசாய நிலங்களுக்கு செல்வதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். மேலும் சிலர் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை போடிமெட்டு மலைச்சாலையை ஒட்டிய பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் மலைச்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து அருவிபோல கொட்டியது.

    இந்த சாலையில் புலியூத்து அருவிக்கு கீழ் 7,8 வது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே காட்டாற்று வெள்ளம் பாய்ந்தது. இதனால் இப்பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. காட்டாற்று வெள்ளம் பாய்ந்த பகுதியை கடக்க முடியாமல் வாகன ஓட்டுனர்கள் ஆங்காங்கே தங்கள் வாகனங்களை நிறுத்தி இருந்தனர்.

    போடி முந்தல் சோதனைச்சாவடியில் வாகனங்களை நிறுத்துமாறு அவர்களை போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். ஒரு மணிநேரத்திற்கு பிறகு தண்ணீர் வரத்து குறைந்ததால் மீண்டும் அந்த சாலை வழியாக வாகனங்கள் கடந்து சென்றன.

    இதேபோல் கொடைக்கானலிலும் கடந்த 5 நாட்களுக்கு மேலாக பகல், இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல் ஏரியில் படகுசவாரி முற்றிலும் நிறுத்தப்பட்டது. சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. கொடைக்கானல், செண்பகனூர், அப்சர்வேட்டரி, வில்பட்டி, பிரகாசபுரம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

    இதனால் வியாபாரிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இரவு நேரங்களில் பெரும்பாலான வீதிகளில் மக்களின் கூட்டம் அடியோடு குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

    • குடியிருப்புகளுக்கு நடுவே ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது போல திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
    • தொடர் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று தொடங்கி நாளை வரை கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது.

    நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    கோத்தகிரி பகுதியில் விடிய, விடிய பெய்த மழைக்கு கீழ்தட்டப்பள்ளம் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது.

    இந்த மழைக்கு கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், குஞ்சப்பனை அருகே 5 இடங்களில் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்ததோடு மண்சரிவுகளும் ஏற்பட்டது.

    பர்லியார்-கல்லாறு சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டதுடன், மரங்களும் பெயர்ந்து சாலையில் விழுந்தது.

    தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, மரங்களை வெட்டி அகற்றி, மண்சரிவை சரி செய்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

    பந்தலூர் பகுதியிலும் கனமழை பெய்தது. இதில் எருமாடு அருகே ஆண்டவன் சிறாவில் உள்ள வீரேந்திரன் எனபவரின் வீடு சேதம் அடைந்தது.

    பந்தலூர் பகுதியில் பெய்யும் தொடர்மழைக்கு பொன்னானி, சேரம்பாடி, சோலாடி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நேற்று மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் நகரின் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக சாலையில் சென்ற வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி மெதுவாகவே சென்றன. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்றதால் துர்நாற்றம் வீசியது. இதனால் மக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

    வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் நனைந்து மிதந்து கொண்டிருந்தன. பொதுமக்கள் பத்திரமாக தேவையான பொருட்களை உயரத்தில் வைத்து கொண்டனர்.

    இன்னும் பல இடங்களில் குடியிருப்புகளுக்கு நடுவே ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது போல திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

    முழங்கால் அளவையும் தாண்டி தண்ணீர் சென்றதால் மக்களால் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத சூழ்நிலை உருவானது.

    மேட்டுப்பாளையம் நகராட்சி 20-வது வார்டு மாதையன் லே-அவுட், அன்பு சீரணி நகர், நகராட்சி அண்ணா வணிக வளாகம் ஆகிய பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.

    குறிப்பாக மாதையன் லே அவுட் குடியிருப்பில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. காட்டாறு போல சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் பொதுமக்கள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது.

    வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதோடு மட்டுமின்றி பல்வேறு இடங்களில் குடியிருப்புக்கு அருகேயும் குளம் போல் தண்ணீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது.

    இதேபோல் மேட்டுப்பாளையம் நகராட்சி 6-வது வார்டில் வீட்டின் பின்பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதேபோல் என்பவரது வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் காரமடை நில வருவாய் அலுவலர் ரேணுகாதேவி, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    நீலகிரி மற்றும் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

    ×