search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heavy rains"

    • கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வந்தது.
    • குடியிருப்புகளின் கூரைகள் காற்றில் பறந்தது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்திருந்தது.

    அதேவேளையில் காற்றின் வேகம் அதிகரித்து சூறாவளி காற்று வீசி வருகிறது. இன்றும் பலத்த சூறாவளி காற்று வீசியது. குறிப்பாக குன்னூர், ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வரலாறு காணாத காற்று வீசுகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுவது, வீடுகளின் மேற்கூரைகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன.

    காற்றின் வேகத்தால் ஊட்டி அருகே உள்ள கோவில்மேடு பகுதியில் வீடுகளின் மேற்கூரை பெயர்ந்து, கூரை ஓடுகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு தரையில் கிடக்கின்றன. 40-க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் சேதம் அடைந்துள்ளன.

    குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கொலக்கம்பை, சேலாஸ், கோடேரி, கைகாட்டி, வண்டிச்சோலை, பாரத் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக குடியிருப்புகளின் கூரைகள் காற்றில் பறந்தது.

    குறிப்பாக காமராஜர் புரம் பகுதியில் ஊராட்சி சார்பில் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகளின் மேற்கூரையும் காற்றில் பறந்தன. குன்னூர் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்துள்ளன.

    உபதலை, மேல்பாரத் நகர், சப்ளை டிப்போ, பழைய அருவங்காடு உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

    மரங்கள் விழுந்த பகுதிகளில் குன்னூர் தாசில்தார் கனி சுந்தரம் மேற்பார்வையில் வருவாய்த்துறையினர், தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரங்களை அகற்றி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    சின்ன வண்டிச்சோலை பகுதியில் 3 மின் கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்ததால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் 5 மணி நேரம் போராடி சீரமைத்தனர்.

    காத்தாடி மட்டம் அருகே சாலையில் நின்றிருந்த ராட்சத மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. அப்போது மரத்தின் கீழே இருந்த கோவில் சேதம் அடைந்தது. குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் தொடர்ந்து விழுந்து வருவதால், அவ்வப்போது மின்தடையும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.

    குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் வீசிய சூறவாளி காற்றுக்கு, பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கொய்மலர் சாகுபடி குடில்கள் காற்றில் தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்தன. பல இடங்களில் குடில்களின் பிளாஸ்டிக்குகள் கிழிந்துள்ளதால் மலர் சாகுபடி தொழிலை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொய்மலர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் வீசிய பலத்த காற்றுக்கு, கோத்தகிரியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையின் மேற்கூரை காற்றில் பறந்தது. இந்த பணிமனை தற்போது தான் புதிதாக கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வீசி வரும் சூறவாளி காற்றுக்கு மாவட்டம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட இடங்களில் சிறியது முதல் பெரிய அளவிலான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன.

    இதேபோல் 50-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகளும் காற்றில் பறந்து சேதம் அடைந்துள்ளது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் 5 இடங்களில் டிரான்ஸ்பார்மர்களும் கீழே விழுந்து சேதம் அடைந்துள்ளன. ஊட்டி, குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் உள்பட பல்வேறு இடங்களில் 150க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் ஆங்காங்கே விழுந்து மின் வினியோகம், குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து வீசி வரும் பலத்த சூறாவளி காற்று காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று தொடர்ந்து வீசுவதால் பாதிப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஆந்திர பத்ராச்சலம் அணையின் நீர் மட்டம் 36 அடியாக உயர்ந்துள்ளது.
    • மணல் மூட்டைகளை பொதுப்பணித்துறை தயார் நிலையில் வைத்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கோதாவரி ஆறு கடலில் கலக்கும் மூகத்துவாரத்தில் உள்ளது.

    ஆந்திர பகுதியில் தொடர் கன மழை பெய்தால் கோதாவரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திர பத்ராச்சலம் அணையின் நீர் மட்டம் 36 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணை 43 அடியை எட்டும் போது முதல் எச்சரிக்கை விடப்படும்.

    இருப்பினும் ஏனாம் பிராந்திய மண்டல நிர்வாகி முனுசாமி உத்தரவின்பேரில் அனைத்து துறையினரும் பாதுகாப்பு, முன்னெச் சரிகை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

    தாழ்வான பகுதிகளான பிரான்சிபா, பாலயோகி நகர், பழைய ராஜீவ் நகர், குருசம்பேட்டை, குரு கிருஷ்ணாபுரம் மற்றும் கடலோர கிராமங்களில் வெள்ள நீர் அளவை கணக்கிட்டு வருகின்றனர். கனமழை நீடித்தால் ஏனாமில் வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளது.

    கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட வில்லை.

    அதேபோல் இந்த ஆண்டும் அனைத்து துறை களும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. போதிய அளவிலான மணல் மூட்டைகளை பொதுப்பணித்துறை தயார் நிலையில் வைத்துள்ளது.

    தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று உணவு வழங்க குடிமைபொருள் வழங்கு துறையும் வருவாய் துறையும் தயார் நிலையில் உள்ளன.

    மழைக்கால நோயிலிருந்து மக்களை பாதுகாக்க சுகாதார துறையும், மரங்கள் விழுந்தாலும் மழையில் சிக்கினாலும் அவர்களை மீட்க தீயணைப்புத் துறையும் தயார் நிலையில் உள்ளதாக மண்டல நிர்வாக அதிகாரி முனுசாமி தெரிவித்துள்ளார். 

    • அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • சுற்றுலாப் பயணிகள் குளிக்க செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

    கோவை:

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக கோவை குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த ஜூன் மாதம் 26-ந்தேதி முதல் அருவிக்கான பாதை மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருவதால் கோவை குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    மேலும் சாடிவயல் பகுதியில் நொய்யல் ஆற்றுக்கு செல்லும் வழிப்பாதையிலும் வெள்ள நீரின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கோவை குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை விதித்த தடை தொடர்ந்து நீடிக்கிறது.

    இதுதொடர்பாக வனஅதிகாரிகள் கூறுகையில், கோவை குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அருவிக்கு செல்ல விதிக்கப்பட்டு உள்ள தடை உத்தரவு தொடரும்.

    மேலும் மறுஉத்தரவு வரும்வரை பொதுமக்கள் யாரும் குற்றாலம் அருவியில் குளிக்க வர வேண்டாமென தெரிவித்து உள்ளனர்.

    • நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்து.
    • வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்து. நேற்று ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர், தேவாலா, கோத்தகிரி, பாடந்தொரை, சேரங்கோடு உள்பட மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது.

    குறிப்பாக அவலாஞ்சியில் 34 செ.மீ மழையும், அப்பர்பவானியில் 21 செ.மீ அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. மேலும் ஒரே நாளில் 5 இடங்களில் 10 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது.

    கனமழை காரணமாக அவலாஞ்சி பகுதியில் உள்ள லாரன்ஸ், கப்பத்துரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

    அங்கு பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கேரட் பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

    இதுமட்டுமின்றி அறுவடைக்கு தயாராக இருந்த பூண்டு செடிகளில் தண்டு உடைந்து வீணானது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    ஊட்டி நகரிலும் கனமழை பெய்தது. இந்த மழைக்கு ஊட்டி நகரின் மத்திய பகுதியான பிரிக்ஸ் பள்ளி அருகே ராட்சத மரம் சாலையில் விழுந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

    பிங்கர் போஸ்ட் பகுதியில் மின்கம்பம் முறிந்து கீழே விழுந்ததில் கார் மற்றும் ஆட்டோ சேதமடைந்தது. ஊட்டி பெர்ன்ல் பகுதியிலும் மரம் விழுந்து, அது உடனடியாக அகற்றப்பட்டது.

    கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று காலை முதல் இரவு வரை கனமழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.

    கூடலூர் தொரப்பள்ளி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இருவயல் பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. அங்குள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததுடன் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

    மேலும் தொரப்பள்ளியில் இருந்து இருவயல் செல்லும் சாலையில் மூங்கில்கள் கொத்தாக சரிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அத்துடன் மூங்கில் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்களும் சேதம் அடைந்து, அந்த பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

    இதனால் அந்த பகுதியே இருளில் மூழ்கியது. பல மணி நேரங்களுக்கு பிறகு இடர்பாடுகள் சரி செய்யப்பட்டு, மின்சாரம் வழங்கப்பட்டது.

    மேல் கூடலூரை அடுத்துள்ள கோக்கால் மலை பகுதியில் உள்ள குடியிருப்புகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 50 வீடுகளில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. மேலும் அங்குள்ள சாலைகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.

    மாயாறு, பாண்டியாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் 2-வது நாளாகவும் தெப்பக்காடு தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள குந்தா அணை, அவலாஞ்சி அணை, அப்பர் பவானி அணை உள்பட அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் குந்தா அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    குந்தா அணையின் மொத்த கொள்ளளவான 89 அடியும் நிரம்பி வழிகிறது.அணைக்கு வினாடிக்கு 300கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 2 மதகுகள் வழியாக 150 கன அடி உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

    குந்தா அணை திறக்கப்பட்டதை அடுத்து கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆற்றில் இறங்கவோ, ஆற்றின் அருகே செல்லவோ வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் கூடலூருக்கு விரைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    அவலாஞ்சி-339, அப்பர் பவானி-217, பந்தலூர்-136, தேவாலா-152, சேரங்கோடு, எமரால்டு-125, குந்தா-108, பாடந்தொரை-102, ஓவேலி-98, கூடலூர்-97, செருமுள்ளி-96, அப்பர் கூடலூர்-95, பாலகொலா-67, ஊட்டி, நடுவட்டம்-58.

    • இரவில் பலத்த மழையாக மாறி கொட்டி தீர்த்தது.
    • மாயாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    ஊட்டி:

    மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை மே மாதம் இறுதியில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்யும்.

    நீலகிரி மாவட்டத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்து வந்தது. இரவில் பலத்த மழையாக மாறி கொட்டி தீர்த்தது. இதேபோல் அவலாஞ்சி, அப்பர் பவானி, எமரால்டு, குந்தா உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

    கனமழைக்கு ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை சாண்டிநல்லா பகுதியில் மரம் விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனால் வாகனங்கள் நீண்ட வரிசயைில் காத்திருந்தன. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. நேற்றும் கனமழை நீடித்தது. இந்த மழை காரணமாக மாயாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு தரைப்பாலத்திற்கு மேல் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பாலம் முழுவதுமாக நீரில் மூழ்கியது.

    தரைப்பாலம் நீரில் மூழ்கியதை அடுத்து, ஊட்டியில் இருந்து தெப்பக்காடு வழியாக கூடலூர் மற்றும் கர்நாடகாவுக்கு செல்லும் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

    மேலும் மாயாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக முதுமலை யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளை ஆற்றுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றும், பழங்குடியின மக்கள், சுற்றுலா பயணிகள் மாயாற்றின் அருகே செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் அந்த பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கையும், விடுக்கப்பட்டுள்ளது. கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் ஆகாச பாலம் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. கற்கள், பாறைகள் உருண்டு சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மலைப்பாதையில் கிடந்த மண், கற்கள் அகற்றப்பட்டன. அதனை தொடர்ந்து போக்குவரத்தும் சீரானது.

    கூடலூர்-ஓவேலி சாலையில் ராக்லேன்ட் பகுதியில் மூங்கில்கள் சரிந்து அருகே இருந்த மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    கூடலூர்-ஊட்டி சாலையில் டி.ஆர்.பஜார் பகுதியில் ராட்ச பாறை மற்றும் மரம் ஒன்று முறிந்து, சாலையின் நடுவே விழுந்தது. இதனால் அங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து, மரத்தை வெட்டி அகற்றினர்.

    அவலாஞ்சி பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்றும் மழை பெய்கிறது.

    இதன் காரணமாக அவலாஞ்சியில் வனத்துறை சார்பில் நடைபெறும் சூழல் சுற்றுலாவுக்கு இன்றும், நாளையும் என 2 நாட்கள் செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 37, அப்பர் பவானியில் 24 செ.மீ மழை பெய்துள்ளது.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    அவலாஞ்சி-372, அப்பர் பவானி-248, எமரால்டு-135, கூடலூர்-108, அப்பர் கூடலூர்-106, சேரங்கோடு-113, பந்தலூர்-92, ஓவேலி-88, பாடந்தொரை-85, தேவாலா, குந்தா-83, செருமுள்ளி-82, நடுவட்டம்-79, கிளைன்மார்கன்-59, ஊட்டி-53.

    • அசாம் மாநிலம் முழுவதும் பருவமழை பெய்து வருகிறது.
    • மழை வெள்ளத்துக்கு 78 பேர் பலியாகி உள்ளனர்.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் முழுவதும் பருவமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மதிக்கின்றன. மழை வெள்ளத்துக்கு 78 பேர் பலியாகி உள்ளனர். வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட இன்று அசாமுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சென்றார். இன்று காலை அசாமின் சில்சாருக்கு சென்றடைந்த அவரை காங்கிரஸ் கட்சியினர் வரவேற்று அழைத்து சென்றனர்.

    பின்னர் புலர்டல் பகுதியில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்ற ராகுல்காந்தி அங்கு தங்கியுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

    அசாம் பயணத்துக்கு பிறகு ராகுல்காந்தி மணிப்பூருக்கு செல்கிறார். மணிப்பூரில் மெய்தி-குகி சமூகத்தினரிடையே கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். மணிப்பூரில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. இதனால் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். தற்போதும் அடிக்கடி மோதல் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று மணிப்பூருக்கு செல்ல உள்ளார். ஏற்கனவே அவர் மணிப்பூருக்கு இரண்டு முறை சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார். தற்போது எதிர்கட்சித்தலைவரான பிறகு முதன் முறையாக ராகுல்காந்தி மணிப்பூர் செல்கிறார்.

    • நேற்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
    • மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறியது.

    மும்பை:

    மராட்டிய மாநிலத்தில் வழக்கமாக ஜூன் மாதம் 2-வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்திலேயே பருவமழை தொடங்கியது. ஆனாலும் மும்பை பெருநகர பகுதிகளை சுற்றியுள்ள மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இதன் காரணமாக மும்பை, தானே பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது.

    இந்த நிலையில் மும்பையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்ய தொடங்கியது. இன்று காலை வரை விடிய விடிய தொடர்ந்து கனமழை பெய்தது.

    மேலும் தானே, பால்கர், நவிமும்பை, ராய்காட், மட்டுங்கா, அந்தேரி, குர்லா, பாந்த்ரூப், கிங்ஸ் சர்கிள் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

    இன்று அதிகாலை நேரத்தில் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறியது. மும்பையில் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தாழ்வான அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் தேங்கி காணப்படுகிறது.

    வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    சாலைகளில் குளம் போல தண்ணீர் தேங்கி கிடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    வெளியூர்களுக்கு செல்லும் விரைவு ரெயில்கள் உள்பட 5 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் மின்சார ரெயில் சேவைகளும் முடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

    இன்று காலையில் தண்டவாளத்தில் தேங்கிய வெள்ளம் ஓரளவு வடிந்துள்ளதால் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. பாண்டுப், சியோன் பகுதிகளில் வெள்ளம் வடிந்துள்ளதால் அங்கு மீண்டும் ரெயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

    மேலும் பஸ் போக்குவரத்து சேவையும் முடங்கியுள்ளது. பல பஸ்கள் வாற்று வழிகளில் திருப்பிவிடப்பட்டன. சாலைகளில் வெள்ளம் தேங்கி கிடப்பதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

    பல சாலைகளில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் தத்தளிக்கிறார்கள்.

    மும்பை விமான நிலையத்துக்கு செல்லும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்களுக்கு செல்லும் பயணிகள், குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

    கனமழை காரணமாக மும்பையில் அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தேவையில்லாமல் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    பலத்த மழை காரணமாக மும்பையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சதாரா, சாங்லி, கோலாபூா் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை நீடித்து வருகிறது. தானே மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த ரிசாா்ட்டில் சிக்கியிருந்த 49 பேரை தேசிய பேரிடா் மீட்புப் படையினா் மீட்டனா்.

    தாதர் பகுதியில் சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் வாகன போக்குவரத்து முடங்கியது. மும்பை தானே பகுதியில் நேற்று முன்தினம் முதலே கனமழை பெய்வதால் அங்கு பாதிப்புகள் அதிகமாக உள்ளது.

    இடைவிடாத மழையால் மழைநீர் கால்வாய்கள் நிரம்பி வழிவதால் நகரில் ஆங்காங்கே தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை முதல் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை 1 மணி முதல் காலை 7 மணி வரை 6 மணி நேரத்தில் மும்பையில் 30 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    இதற்கிடையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் பெற்றுள்ளதால் வரும் 10-ந்தேதி வரை மழை தொடரும். குறிப்பாக மராத்வடா பகுதியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

    இதேபோல் வட மாநிலங்களிலும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் சிராவஸ்தி, குஷிநகா், பல்ராம்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக, கண்டக், சிராவஸ்தி, ரப்தி ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    பல கிராமங்களை வெள்ளநீா் சூழ்ந்துள்ள நிலையில், கிராம மக்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடா் மீட்பு படையினா், மாநில பேரிடா் மீட்பு படையினா் ஈடுபட்டுள்ளனா்.

    பீகாரில் கனமழை நீடித்து வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மின்னல் தாக்கி 10 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் கடந்த 2 நாள்களில் மின்னல் தாக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 வாரங்களில் 40 போ் உயிரிழந்து விட்டனா்.

    பீகார் மாநிலத்தில் பாயும் கோசி, மகாநந்தா, பாகமதி, கண்டக், கமலா உள்ளிட்ட ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்கிறது.

    தாழ்வான பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்துள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அசாம் மாநிலத்தில் கனமழை நீடித்து வரும் நிலையில், 29 மாவட்டங்களில் 24 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். துப்ரி மாவட்டத்தில் அதிகபட்சமாக சுமாா் 8 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.

    பிரம்மபுத்திரா உள்பட முக்கிய ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்கிறது. மழை வெள்ளத்தால் சாலைகள், பாலங்கள் ஆகியவை கடுமையாக சேதமடைந்துள்ளன.

    காசிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளத்தில் சிக்கி காண்டாமிருகங்கள் உள்பட 130 வனவிலங்குகள் உயிரிழந்துவிட்டன.

    • சுமார் 24 லட்சம் மக்கள் வெள்ள பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்
    • ஒருவர் தனது உயிரைப் பணயம் வைத்து கழுத்துவரை உள்ள வெள்ள நீரில் நீந்தித் சென்று பசுமாட்டைக் காப்பற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.

    அசாம் மாநிலத்தில் கடந்த வாரம் முதல் பெய்து வரும் கனமழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் கரைபுரண்டோடி பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. மாநிலம் முழுவதும் வெவேறு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 52 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 30 மாவட்டங்களில் அபாயகரமான முறையில் வெள்ளம் வீதிகளை அடைத்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

    சுமார் 24 லட்சம் மக்கள் வெள்ள பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் வெள்ள பாதகிப்புகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒன்றான திப்ருகார் மாவட்டத்தின் துளியாஜான் நகரில் வீதியில் ஓடும் வெள்ளத்தில் சிக்கி மூழ்கிக்கொண்டிருந்த தனது பசுமாட்டை காப்பாற்றுவதற்காக உள்ளூர்வாசி ஒருவர் தனது உயிரைப் பணயம் வைத்து கழுத்துவரை உள்ள வெள்ள நீரில் நீந்தித் சென்று பசுமாட்டைக்  காப்பற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

    இந்த  சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சாரார் அவரின் செயலைப் பாராட்டி வரும் நிலையில்  மற்றொரு சாரார் அவரின் செயல் ஆபத்தானது என்று  கமன்ட் tவருகின்றனர்.

    • கனமழை தொடரும் என சிம்லா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • இமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை 80க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளது.

    இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் கனமழை காரணமாக இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் ஹட்கோட்டி பௌண்டா சாஹிப்பை இணைக்கும் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

    கனமழை, நிலச்சரிவால் இமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை 80க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மண்டியில் 38 சாலைகளும், குலுவில் 14 சாலைகளும் சிம்லாவில் 5 சாலைகளும் மூடப்பட்டன.

    இதையடுத்து ஜூலை 12ம்தேதி வரை கனமழை தொடரும் என சிம்லா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • 334 மின்மாற்றிகள் பழுதடைந்துள்ளதாகவும், 55 குடிநீர் திட்டங்கள் பாதிப்பு.
    • சிம்லா வானிலை ஆய்வு மையம் "மஞ்சள்" அலர்ட் விடுத்துள்ளது.

    இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ராவின் தர்மஷாலா மற்றும் பாலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 200 மிமீ அளவில் மழை அதிகமாக பெய்தது.

    மழையைத் தொடர்ந்து போக்குவரத்துக்காக மண்டியில் 111, சிர்மூரில் 13, சிம்லாவில் ஒன்பது, சம்பா மற்றும் குலுவில் தலா எட்டு, காங்க்ரா மாவட்டத்தில் ஒரு சாலை என 150 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

    மாநிலத்தில் 334 மின்மாற்றிகள் பழுதடைந்துள்ளதாகவும், 55 குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காங்க்ராவின் தரம்சாலாவில் அதிகபட்சமாக 214.6 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து பாலம்பூர் 212.4 மிமீ, ஜோகிந்தர்நகர் 169 மிமீ, காங்க்ரா நகரம் 157.6 மிமீ, பைஜ்நாத் 142 மிமீ, ஜோட் 95.2 மிமீ, நக்ரோடா சூரியன் 90.2 மிமீ, சுஜன்பூர் 6 மிமீ2, திரா 70, திரா 70 மிமீ. , நடவுன் 63 மி.மீ மற்றும் பெர்தின் 58.8 மி.மீ மழையும் பெய்துள்ளது.

    மற்ற சுற்றுலா தலங்களான டல்ஹவுசியில் 31 மிமீ மழையும், மணாலியில் 30 மிமீ, கசௌலி 24 மிமீ, நர்கண்டா 19 மிமீ மற்றும் சிம்லாவில் 17.2 மிமீ மழை பெய்துள்ளது.

    இதைதொடர்ந்து, சிம்லா வானிலை ஆய்வு மையம் "மஞ்சள்" அலர்ட் விடுத்துள்ளது. வரும் ஜூலை 12 வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது.

    வியாழன் இரவு லாஹவுல் மற்றும் ஸ்பிதியில் உள்ள குகும்சேரியில் குறைந்தபட்ச வெப்பநிலை 11.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

    இதுவரை, மாநிலத்தில் 72.1 மிமீ மழை பெய்துள்ளது. இது ஜூலை மாதத்தில் 35 மிமீ மழை அளவு இயல்பிற்கு எதிராக, 106 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.

    • இரவு, பகல் என இரு வேளைகளிலும் கனமழை கொட்டி வருகிறது.
    • பந்தலூர் பகுதியே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக இரவு, பகல் என இரு வேளைகளிலும் கனமழை கொட்டி வருகிறது.

    நேற்றும், பந்தலூர், நெலாக்கோட்டை, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, பிதர்காடு, பாட்டவயல், நெலாக்கோட்டை, கரியசோலை, சேரம்பாடி, எருமாடு மற்றும் கூடலூர், தேவர்சோலை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

    பந்தலூர் பஜாரில் சாலையிலும், கால்வாயிலும் வெள்ளம் ஆறுபோல் ஓடுகிறது. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே சாலையில் உள்ள குழிகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியே தண்ணீர் நிரம்பி குளம் போல காட்சியளித்து கொண்டிருக்கிறது.

    மழை வெள்ளம் செல்வதற்கு வழி இல்லாததால், பந்தலூர் பஜார், கோழிக்கோடு-கூடலூர் செல்லும் சாலை, தாலுகாஅலுவலகம் செல்லும் சாலை, கூவமூலா செல்லும் சாலைகளிலும் வெள்ளம் தேங்கி நிற்கிறது.

    அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் பந்தலூர் பகுதியே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் பொன்னானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் 6 வீடுகள் சேதம் அடைந்தன. அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டு, அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் தங்க வைக்கபட்டுள்ளனர்.

    இதேபோல் அம்பலமூலா சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வட்டகொல்லி, மணல்வயல் ஆதிவாசிகாலனியில் 4 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் அம்பலமூலா அரசு தொடக்கபள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

    நெலாக்கோட்டை அருகே கூவச்சோலையில் பெய்த மழைக்கு அந்த பகுதியில் உள்ள 4 வீடுகள் இடிந்து விழுந்தன. அங்கிருந்த 10 குடும்பங்களை சேர்ந்த 31 பேர் நெலாக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

    சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 1, 2 பகுதிகளில் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு பின்புறம் மண்சரிவு ஏற்பட்டதுடன் வீடுகளுக்குள் வெள்ளமும் புகுந்தது. இதனால் தொழிலாளர்கள் கடும் அவதியடைந்தனர். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை நீடித்தது. இருவயல், குற்றிமுச்சு, கம்மாத்தி, புத்தூர் வயல் பகுதிகளில் விளைநிலங்கள் மற்றும் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.

    இருவயல், புத்தூர் வயல் பகுதிகளில் 14 குடும்பத்தை சேர்ந்த 49 பேர் மீட்கப்பட்டு தொரப்பள்ளி அரசு பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

    பந்தலூரில் உள்ள அத்திமாநகர், தொண்டியாளம் பகுதிகளில் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை யினர் உடனடியாக அகற்றி போக்கு வரத்தை சீர் செய்தனர்.

    தொடர் மழையால் முதுமலை பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள ஆற்றுப்பாலத்திற்கு மேல் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வனத்துறையினர், வருவாய்த்துறையினர் விரைந்து வந்து ஜே.சி.பி எந்திரம் மூலம் பாலத்திற்கு அடியில் தேங்கிய மரக்கட்டைகளை அகற்றினர். அதன்பின்னர் வாகனங்கள் அந்த வழியாக இயக்கப்பட்டன.

    கூடலூர் பகுதியில் பெய்து வரும் மழைக்கு பாடந்தொரையில் உள்ள பால் சொசைட்டியை சுற்றி மழைவெள்ளம் சூழ்ந்தது. அங்கு வந்தவர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று பால் கேனை வைத்து சென்றனர்.

    கூடலூர், பந்தலூர் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    • மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது.
    • ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா தாலுகாக்களில் மழையின் தாக்கம் குறைந்த நிலையில் கூட லூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது.

    நேற்றும் கூடலூர், பந்தலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான தேவாலா, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, சேரம்பாடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இன்று பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பனி மூட்டத்துடன் மழை பெய்து வருகிறது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

    பந்தலூர், கூடலூர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    தொடர் மழையால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குட்டைகள், ஓடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை காரணமாக அங்குள்ள சில குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    ஆங்காங்கே சில இடங்களில் மண் சரிவுகளும், மரங்களும் முறிந்து விழுந்தன. இதனை தீயணைப்புத் துறையினர் வெட்டி அகற்றினர். தொடர் மழை காரணமாக கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

    தேவால-உப்பட்டி டவர் பகுதியில் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. நிலச்சரிவு ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அந்த வாகனம் நகர்ந்ததால் காரில் வந்தவர் உயிர்தப்பினார்.

    கூடலூர் பகுதியில் பெய்த கனமழையில் இதுவரை 6 மின் கம்பங்கள், 5 வீடுகள் சேதம் அடைந்தன. பெரிதும், சிறிதுமாக 17 இடங்களில் விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டன.

    காற்றில் 2,500 நேந்திரன் வாழை மரங்கள் பாதிக்கப்பட்டன. 24 இடங்களில் சிறிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது. பருவமழையின் போது மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட தேன்வயல், சிறுவயல் கிராம மக்களுக்கு இலவச வீடுடன் மாற்றிடம் வழங்கப்பட்டது.

    இதனால் கூடலூரில் தற்காலிக தங்கும் முகாம் அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை. இருவயல் பகுதியில் மட்டும் குடியிருப்புக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் பந்தலூர் அருகே கொளப்பள்ளியில் இருந்து பாலாவயல் வழியாக பாட்டவயல் மற்றும் பிதர்காடு உட்பட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது.

    இந்த சாலை வழியாக, 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் நாள்தோறும் சென்று வருகிறார்கள். சாலையின் நடுவே பாயும் ஆற்றைக் கடப்பதற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது.

    இந்த பாலம் கடந்த 2019-ம் ஆண்டு பெய்த மழையின் போது இடிந்து விழுந்தது. இதனால் தற்போது அங்கு புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. மக்கள் ஆற்றை கடந்து செல்வதற்கு வசதியாக அங்கு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு, மக்கள் அதனை பயன்படுத்தி வந்தனர்.

    தற்போது மழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாலத்தின் ஒரு பகுதியை ஆற்று வெள்ளம் சூழ்ந்தது. மற்றொரு பகுதி தண்ணீரின் மேல் பகுதியில் அமைந்துள்ளதால் மக்கள் பாலத்தை கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் இந்த பகுதி மக்கள் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வேறு வழியில் பயணித்து வருகிறார்கள்.

    மாவட்ட கலெக்டர் அருணா கூறும்போது, `நீலகிரியில் பெய்து வரும் மழையால் பெரியளவில் பாதிப்பில்லை. மரங்கள் விழுந்துள்ளன. அவற்றை நெடுஞ்சாலை மற்றும் தீயணைப்புத்துறையினர் வெட்டி அகற்றினர். பந்தலூர் அருகே பாலாவயல் பகுதியில் ஆற்றை கடக்க அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தை வெள்ளம் சூழ்ந்தது. அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    அப்பர் பவானி-72,

    சேரங்கோடு-39,

    ஓவேலி-28,

    பந்தலூர், நடுவட்டம்-22,

    பாடந்தொரை-18,

    செருமுள்ளி-16. 

    ×