search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heavy rains"

    • மலேசியாவின் சில பகுதிகளில் 700 மில்லிமீட்டருக்கும் மேல் மழை பதிவாகியுள்ளது.
    • 5000-த்திற்கும் மேற்பட்டார் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மலேசியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    இந்த கனமழையினால் 5 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கிட்டத்தட்ட 5000-த்திற்கும் மேற்பட்டார் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மலேசியாவின் சபா மற்றும் சரவாக்கின் சில பகுதிகளில் 700 மில்லிமீட்டருக்கும் மேல் மழை பதிவானதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, நாளை வரை கனமழை தொடரும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    • காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
    • குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்து வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக மாவட் டத்தில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்று (ஞாயிற்றுக் கிழமை) விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றா லம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


    மேலும், காலையில் மழை குறைந்துள்ள நிலையில், அருவிகளிலும் தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழையும் பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்து வருகிறது.

    • மெக்கா, மதீனா மற்றும் ஜெட்டாவில் அதி கனமழை பெய்துள்ளது.
    • அதிகபட்சமாக அல்-ஷாஃபியா எனும் பகுதியில் 49.2 மிமீ மழை பதிவாகியுள்ளது.

    பாலைவன நாடான சவுதி அரேபியாவில் பெய்த மிக கனமழையால் பல இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது.

    புனித நகரங்களான மெக்கா, மதீனா மற்றும் ஜெட்டாவில் பெய்த அதி கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    அல்-ஷாஃபியா எனும் பகுதியில் 49.2 மிமீ மழையும் ஜெட்டாவின் அல்-பசதீன் பகுதியில் 38 மிமீ மழையும் மதீனாவின் நபிகள் நாயகம் பள்ளிவாசல் பகுதியில் 36.1 மிமீ மழையும் அதன் அருகிலுள்ள குபா மசூதியில் 28.4 மிமீ மழையும் பெய்துள்ளது.

    மேலும் மெக்கா, மதீனா மற்றும் ஜெட்டா ஆகிய நகரங்களில் மிக கனமளிக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

    • பூமியின் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.
    • இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட ஹீட்ஸ்ரோக் இறப்புகள் மற்றும் 40,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகின

    இயற்கைப் பேரழிவுகள் எந்த காலத்திலும் இருந்து வரும் ஒன்று. ஆனால் சமீப காலங்களாக அதிகரித்து வரும் இயற்கை பேரழிவுகளுக்கு முக்கிய காரணமாக காலநிலை மாற்றம் விளங்குகிறது. தீவிர வானிலை நிலைமைகள், காலநிலை நெருக்கடிகளும் மக்களின் வாழ்வில் பெரும் தாக்கம் ஏற்படுத்தி வருகிறது.

    இந்த ஆண்டு மட்டும் (2024) உலகம் முழுவதும் 3,700 பேர் இறந்துள்ளதாக லண்டனை சேர்ந்த உலக வானிலை கண்காணிப்பகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், காலநிலை மாற்றத்தால் ஆண்டின் சராசரி வெப்ப நாட்களில் 41 நாட்கள் கூடுதலாகி உள்ளது.

    காலநிலை மாற்றம் என்றால் என்ன?

    காலநிலை மாற்றம் என்பது உலக அளவில் வானிலை மற்றும் வெப்பநிலையில் ஏற்படும் நீண்ட கால மாற்றமாகும். இது இயற்கையாக நிகழக்கூடியது என்றாலும், புதைபடிவ[fossil] எரிபொருட்களை எரிப்பது போன்ற மனித நடவடிக்கைகளால் 1800 களில் இருந்து காலநிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது.

    ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, பூமியின் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.

    உலகளாவிய வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்தாத பட்சத்தில் ஆபத்துக்கு வழிவகுக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் நூற்றாண்டின் இறுதியில் பூமி 3.1 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமடையும் என்று கணிக்கப்படுகிறது.

    இதற்கான முன்னறிவிப்பாக இந்த ஆண்டு உலகம் முழுவதிலும் வெப்ப அலைகள், காட்டுத்தீ, சூறாவளி, வறட்சி மற்றும் வெள்ளம் என பல்லாயிரக்கணக்கான உயிர்களை காலநிலை மாற்ற பேரழிவுகள் பலிகொண்டுள்ளது. 

    பேரழிவுகள்

    அட்லாண்டிக் கடலில், 11 சூறாவளிகள், 18 புயல்கள் ஏற்பட்டன. இதனால் அமெரிக்க பகுதிகளில், ஜூலையில் பெரில், ஆகஸ்டில் டெபி, செப்டம்பரில் ஹெலன் மற்றும் அக்டோபரில் மில்டன் ஆகிய கொடிய சூறாவளிகளால் 330-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். பில்லியன் டாலர்கள் வரை சேதம் ஏற்பட்டது.

    மே மாதம் பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 670 பேர் உயிரிழந்தனர். ஏப்ரல் வாக்கில் தெற்கு பிரேசிலில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்தனர்.

    ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் மே மாதத்தில் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தில், 300 க்கும் மேற்பட்ட மக்களை பலிகொண்டது. 6,000 வீடுகள் முற்றாக அழித்தன.

    கேரளாவில் ஜூலையில், நிலச்சரி மற்றும் கனமழையால் வயநாடு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 400 பேர் இறந்தனர்.

    தென்கிழக்கு ஆசியாவில் செப்டம்பர் மாதம் ஏற்பட்ட யாகி என்ற சூப்பர் புயல், கிட்டத்தட்ட 600 பேரைக் பலிகொண்டது.

    அக்டோபர் பிற்பகுதியில் தென்கிழக்கு ஸ்பெயின் மற்றும் மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வறண்ட பிரதேசமான மத்திய கிழக்கிலும் ஏப்ரலில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. துபாய் கடுமையான பாதிப்புகளை சந்தித்தது.

     

    பருவநிலை மாற்றம் வறட்சி, மழைப்பொழிவு மற்றும் வெப்பத்தால் பயிர்கள் சேதமடைந்து உணவுப் பற்றாக்குறை, உலகளவில் விவசாயத் தொழிலுக்கு இழப்புகளை அதிகரித்தது.

     வெப்ப அலை மரணங்கள்

    மழை வெள்ள பேரழிவுகளை தவிர்த்து, இந்த வருடம் கோடையில் உலகளவில் உணரப்பட்ட வெப்ப அலை ஆயிரக்கணக்கானோரை பலிகொண்டது.

    உலகளாவிய சராசரி மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை ஜனவரி முதல் செப்டம்பர் வரை சராசரியை விட 1.54 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.

    உலகளாவிய சராசரி வெப்பநிலை ஜூலை 22 ஆம் தேதி 17.15 டிகிரி செல்சியஸை எட்டியது. இதுவே இந்த வருடம் பூமியில் வெப்பமான நாளாக பதிவுசெய்யப்பட்டது. ஜூலை 21 பதிவான 17.09 டிகிரி செல்ஸியஸ் இரண்டாவது வெப்பமான நாளாக பதிவானது.

    இந்தியா, வங்கதேசம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், கம்போடியா மற்றும் மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் பருவநிலை மாற்றம் மற்றும் எல் நினோ விளைவு காரணமாக பல நாட்களாக 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை நிலவியது. ஹீட்ஸ்ட்ரோக் வெப்ப அலைகளால் ஆசியா முழுவதும் நூற்றுக்கணக்கான இறப்புகள் பதிவாகியுள்ளன.

    ஹீட்வாட்ச் அமைப்பு வெளியிட்டுள்ள வெளியிட்ட அறிக்கைப்படி, இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட இறப்புகள் மற்றும் 40,000 க்கும் மேற்பட்ட ஹீட்ஸ்ரோக் பாதிப்புகள் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டதாகக் கூறுகிறது.

    ஜூன் மாதம் சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரையின் போது வெப்பநிலை 52 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததால் 1,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    ஐரோப்பாவின் தெற்கு மற்றும் தென்கிழக்கு நாடுகளில் வெப்ப அலை காரணமாக 19 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன, குறிப்பாக கிரீஸ் மற்றும் இத்தாலியில் அதிக இறப்புகள் பதிவாகியுள்ளன.

    அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகள் வெப்ப அலைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு, 1,000க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவானது. வெப்பம் தொடர்பான நோய்களால் மெக்சிகோவில் 150 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளது. 

     தீர்வுதான் என்ன?

    காலநிலை மாற்றத்தால் மறைமுகமாக இதய நோய்கள், காற்று மாசுபாட்டால் ஏற்படும் சுவாச நோய்கள், பக்கவாதம், புற்றுநோய் மற்றும் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய பல முக்கிய காரணங்கள் போன்ற கொடிய நோய்களால் உயிர்கள் பறிபோகின்றன.

    2024-ஐ திரும்பிப் பார்க்கும்போது, நாம் அவசர நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், ஒரு நாள் நமது கிரகம் மனிதகுலம் வாழத் தகுதியற்றதாக மாறும் என்பது நிரூபணமாகிறது.

    உலகளாவிய அமைப்புகளும் அரசாங்கங்களும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுதல் மற்றும் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதில் இருந்து பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் போன்ற கடுமையான சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை செயல்படுத்துவதே தீர்வாகும். 

    • 40 சதவீத கண்மாய்கள், குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.
    • கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்திலுள்ள 40 சதவீத கண்மாய்கள், குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

    இந்நிலையில், சாயல்குடி அருகே கொக்கரசன் கோட்டை, கொண்டு நல்லான்பட்டி, வாலம்பட்டி, உச்சிநத்தம், வி.சேதுரா ஜபுரம், முத்துராம லிங்கபுரம், வெள்ளையா புரம், பிச்சையாபுரம், டி.கரிசல்குளம், டி.எம். கோட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தூத்துக்குடி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது.

    இந்த கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கரில் மிளகாய், வெங்காயம், உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, சோளம், நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

    சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக, விளாத்திகுளம் ஒன்றியத்தைச் சேர்ந்த லட்சுமிபும், மாவிலோடை கண்மாய்ககளில் தண்ணீர் நிரம்பி அது காட்டாற்று வெள்ளமாக மாறி கஞ்சம்பட்டி ஓடை வழியாக வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் வி. சேதுராஜ புரத்திலிருந்து உச்சிநத்தம் செல்லும் சாலை வழியாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.


    இதனிடையே, எஸ். தரைக்குடி பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜூலு, பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கவுர் உள்ளிட்ட அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தனர்.

    இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வெள்ளத்தால் சாலை சேதமடைந்த போக்குவரத்து துண்டிக்கப்பட்ட காரணத்தால், டிராக்டர் மூலம் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

    பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அவர், வெள்ளத்தால் சேதமடைந்து சாலை துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தோம். இதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரிய நடவடிக்கை துரித வேகத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அம்மாபட்டி கிராமத்திற்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    திருச்சி:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தொடர்ந்து மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடலில் நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

    திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. துறையூரில் பெரிய ஏரி, சின்ன ஏரி நிரம்பி அருகில் சிங்களாந்தபுரம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு செல்கிறது.

    பச்சமலையில் பெய்த மழையால் அதிக அளவு நீர்வரத்து ஏற்பட்டதால், திருச்சி-துறையூர் சாலைகளில் இருந்து அம்மாபட்டிக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டு நீர் நிரம்பி காட்சியளிக்கிறது.


    இந்த சாலையானது சிங்களாந்தபுரம் ஏரிக்கு அருகில் உள்ளது. இதனால் சிங்களாந்தபுரம் ஏரி நிரம்பியதால் அருகில் உள்ள விளைநிலங்கள் மற்றும் சாலைகள் முழுவதும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் அப்பகுதிக்கு சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். குறுக்கு சாலையில் உள்ள தண்ணீர் அளவானது தற்போது உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் அம்மாபட்டி கிராமத்திற்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழையால் 150 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், அரியலூர், செந்துறை ஆகிய பகுதிகளில் ஒரே நாளில் அதிக கன மழை பெய்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தின சாமி உத்தரவிட்டுள்ளார்.

    இன்று காலை வரை பதிவான மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

    ஜெயங்கொண்டம் 205, செந்துறை 195.4, அரியலூர் 179, சுத்தமல்லி டேம் 152, குருவாடி 115, ஆண்டிமடம் 111.2, திருமனூர் 90, தா.பழூர் 39.4.

    எரையூர்-166, அகரம் சீகூர் 140, லெப்பைக்குடிக்காடு 139, வேப்பந்தட்டை-127, தலுதலை-122, கிருஷ்ணாபுரம்-111, வி.களத்தூர்-95, பெரம்பலூர்-94, படுவேட்டைக்குடி 71, செட்டிகுளம் 75, பாடாலூர் 21.

    ஆவுடையார்கோவில் 143, மணமேல்குடி 135, மீமிசல் 67, விராலிமலை 63, நாகுடி 66.20, கீழாநிலை 63.90, ஆயின்குடி 57.20, அறந்தாங்கி 56.40, கீரனூர் 50.40, இலுப்பூர் 48.80, ஆதன கோட்டை 48, திருமயம் 46.70, கந்தர்வகோட்டை 45.40, புதுக்கோட்டை 44.10, பெருங்களூர் 40.60, மழையூர் 40.60, உடையாளிபட்டி 39, அன்னவாசல் 35.60, ஆலங்குடி 35, குடுமியான் மலை 34.50, கரையூர் 30.80, பொன்னமராவதி 25.40, கறம்பக்குடி 27, அரிமளம் 20.

    மாவட்டம் முழுவதும் மொத்தம் 1264.10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 52.67 ஆகும்.

    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

    கோவை:

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது.

    கோவை மாவட்டத்திலும் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் மிதமான அளவில் மழை பெய்தது. இன்று காலை வானில் கருமேகங்கள் சூழ்ந்து இருள்போல காட்சியளித்தது.

    தொடர்ந்து மாநகர் பகுதிகளான ரெயில் நிலையம், காந்திபுரம், டவுன்ஹால், பாப்ப நாயக்கன்பாளையம், அண்ணாசிலை, லட்சுமில் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    காலை நேரத்தில் பெய்து வரும் மழையால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமம் அடைந்தனர். ஆங்காங்கே உள்ள நிழற்குடைகள், பாதுகாப்பான இடங்களில் மக்கள் நின்றனர். பலர் குடைபிடித்தபடியும், பிளாஸ்டிக் கவர், ஜர்க்கின் அணிந்தபடி சென்றதையும் காண முடிந்தது.

    வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மிதமான அளவில் மழை பெய்தது. மாலையிலும் மழை நீடித்தது.

    இரவில் 7 மணிக்கு பிறகு கனமழை பெய்ய தொடங்கியது. இரவு தொடங்கிய மழையானது இன்று காலை வரை வெளுத்து வாங்கி வருகிறது. வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அக்காமலை, பச்சைமலை, சோலையார் அணை, சின்னக்கல்லார், பெரியகல்லார், கவர்க்கல் எஸ்டேட், ரொட்டிக்கடை, உருளிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

    மழையால் வால்பாறை நகரில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களிலும் தண்ணீர் தேங்கியது.

    இரவு முழுவதும் பெய்து வரும் மழை காரணமாக வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு மற்றும் நடுமலை ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இன்று காலை கூழாங்கல் ஆறு மற்றும் நடுமலையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

    வால்பாறையில் பெய்து வரும் மழை காரணமாக, வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல் பொள்ளாச்சி, ஆனைமலை, சூலூர், சுல்தான்பேட்டை, மேட்டுப்பாளையம், காரமடை, அன்னூர், தொண்டாமுத்தூர், வடவள்ளி, கிணத்துக்கடவு, மதுக்கரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலுமே மிதமான அளவில் மழை பெய்து வருகிறது.

    தொடர் மழையால் கோவையில் குளிரும் அதிகரித்து காணப்படுகிறது. பொதுமக்கள் குளிரில் இருந்து தப்பிக்க சுவர்ட்டர் உள்ளிட்டவற்றை அணிந்து வருகின்றனர்.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:

    வால்பாறை தாலுகா-57 நீரரார்-40, சோலையார் அணை-26 

    • பயிர்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தன.

    தஞ்சாவூர்:

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பதற்கு முன்னர் கனமழை கொட்டியது. அதன்பிறகு ஒரு வாரமாக மழை இன்றி காணப்பட்டது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.

    நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. இரவிலும் இதே நிலை நீடித்தது. ஆனால் இன்று அதிகாலையில் இருந்து கனமழையாக மாறி கொட்டியது. நள்ளிரவு 1 மணி முதல் காலை 7 மணி வரை கனமழையாக வெளுத்து வாங்கியது.

    தஞ்சையில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    இதேபோல் வல்லம், பூதலூர், ஒரத்தநாடு, நெய்வாசல்தென்பாதி, கும்பகோணம், திருவிடைமருதூர், கீழணை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

    தொடர்ந்து பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தன. மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 73.60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஒரே நாளில் 795.80 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடதக்கது.

    ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையால் மாவட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மூழ்கி பாதிப்படைந்திருந்தன.

    அதன் பின்னர் மழை ஓய்ந்ததால் வயல்களில் தேங்கிய தண்ணீர் வடிந்தன. இந்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை பெய்து வருவதால் பயிர்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தற்பொழுது வரை 24 மணி நேரத்தை கடந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக திருவாரூர், கமலாபுரம், வடபாதிமங்கலம், மாங்குடி, நன்னிலம், குடவாசல், கூத்தாநல்லூர், கொரடாச்சேரி திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

    இந்த கனமழையின் காரணமாக விக்கிரபாண்டியம். புழுதிகுடி. கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பா நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்த கன மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, பொறையாறு, திருக்கடையூர், செம்பனார்கோவில், சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்ய தொடங்கியது.

    நேற்று இரவு விடிய,விடிய பரவலாக மழை பெய்த நிலையில் அதிகாலை முதல் தொடர்ந்து கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    கடலோர பகுதி பழையாறு, பூம்புகார், திருமுல்லைவாசல், தொடுவாய் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் உத்தரவுப்படி பழையாறு துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க செல்லும் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தங்களது படகுகளை மீன் பிடித்துறை முகம் அருகே பக்கிங்காம் கால்வாய் கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

    இதேபோல் திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி பகுதி மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் 10,000 க்கு மேற்பட்ட மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, சாட்டியக்குடி, திருக்குவளை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், காமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    நாகை நகராட்சிக்குட்பட்ட வடக்கு பால் பண்ணை சேரி வாட்டர் டேங்க் சாலையில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் வீடுகளுக்குள் மழை நீர் புகும் அபாயம் இருப்பதுடன், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    மின்வளத்துறையினர் எச்சரிக்கை காரணமாக வேதாரண்யம் தாலுகாவில் 5 ஆயிரம் மீனவர்கள் 2-ம் நாளாகமீன்பிடிக்க செல்லாமல் ஆயிரத்துக்கு மேற்பட்ட பைபர்படகுகளை பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் வேதாரண்யம் தாலுகாவில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    இடைவிடாது பெய்து வரும் கனமழையால் தஞ்சை பெரியகோவில், சிவகங்கைபூங்கா, மனோரா, வேளாங்கண்ணி கடற்கரை, தரங்கம்பாடி டேனிஷ்கோட்டை, முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று வழக்கத்தை விட குறைந்தளவே சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டதால் அவைகள் வெறிச்சோடின.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • புதுச்சேரி கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த 30-ந் தேதி தாக்கிய பெஞ்ஜல் புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

    வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 50 செ.மீ. மழை கொட்டியது. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், துணை மின்நிலையங்கள், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள், சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தது. ரூ.600 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல் கட்டமாக கணக்கிடப் பட்டுள்ளது.

    புயலுக்கு பின் புதுச்சேரி நகர பகுதி ஓரிரு நாளில் இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால் கிராமங்களில் அணைகள் திறப்பால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் மீள வில்லை.

    இந்த நிலையில் மீண்டும் வங்க கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் வருகிற 16-ந் தேதி வரை புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நேற்று காலை 7 மணி முதல் இரவு வரை மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று 2-வது நாளாக புதுச்சேரி முழுவதும் அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

    விமான நிலையம், கிழக்கு கடற்கரை சாலை, திண்டிவனம் புறவழி சாலை, ஆரோவில் பகுதி களில் கனமழை பெய்தது. நகர பகுதியான லேசான மழைபெய்தது. பேரிடர் மேலாண்மை துறை கேட்டு கொண்டதற்கிணங்க அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் பாதுகாப்பு குழு புதுச்சேரிக்கு மீண்டும் வந்துள்ளது.

    கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தர விட்டார். இதனால் இன்று காலையில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. பஸ்களில் கூட்டம் இல்லை

    மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் பாகூர் பொதுப்பணித்துறை நீர் பாசன கோட்ட பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆறு, ஏரி, குளம் உட்பட நீர் நிலைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    மழையால் சாத்தனூர் அணை திறக்கப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றங்கரையோர புதுச்சேரி கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மீனவர்கள் ஆழ் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையும் எச்சரித்துள்ளது. புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்ட அறிவிப்பில், நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகம், புதுச்சேரியில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத் திலும், இடை யிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும். எனவே புதுச்சேரி மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

    புதுச்சேரி கடற்பகுதியில் பாதுகாப்பாக மீன்பிடி தொழிலை மேற்கொள்ள வேண்டும். இந்த வானிலை அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்படும். மீனவர்கள் தொடர்ந்து வானிலை எச்சரிக்கைகளை கவனிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    அதேபோல வெள்ளம் வரும் வரை காத்திருக்காமல், அருகில் இருக்கும் நிவாரண முகாம்களில் தங்க வரும்படி கலெக்டர் குலோத்துங்கன் அழைப்பு விடுத்துள்ளார்.

    • குப்பையுடன் கழிவுநீர் வெளியேறி நோய் பரவும் அபாயம்.
    • கழிவுநீரை ஊருக்குள் நுழையாதவாறு தடுத்து நிறுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பெஞ்ஜல் புயல் காரணமாக கன மழை பெய்தது. இதனால் ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை சூழ்ந்தது.

    இந்த நிலையில் புதுச்சேரி ஊசுடு தொகுதிக்குட்பட்ட குரும்பாபேட் குப்பை கிடங்கில் இருந்து குப்பையுடன் கழிவுநீர் வெளியேறி கோபாலன்கடை பகுதியில் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான சாய் ஜெ சரவணன்குமாரிடம் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார் கோபாலன் கடை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதி மக்கள் குப்பைக் கிடங்கில் இருந்து வரும் கழிவுநீரை ஊருக்குள் நுழையாதவாறு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார் அந்த வழியாக சென்ற குப்பை வண்டியில் ஏறி குரும்பாபேட் குப்பை கிடங்கிற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்து கழிவுகள் வெளியேறி வாய்க்கால் வழியாக ஊருக்குள் புகுந்தது தெரியவந்தது.

    இதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தனியார் நிறுவனத்திடம் அறிவுறுத்தினார்.

    இதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து மீண்டும் குப்பை வண்டியில் ஏறி புறப்பட்டு சென்றார். அமைச்சர் குப்பை வண்டியில் ஏறி ஆய்வு செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் பரிசல் மூலம் பயணித்து வருகின்றனர்.
    • திருமணிமுத்தாறு-சரபங்கா நதியில் தொடர்ந்து வெள்ளம்.

    சேலம்:

    சேலத்தில் முக்கிய நீராதாரமே மலைகள் தான். ஏற்காடு சேர்வராயன் மலை தொடரில் உள்ளது. திருமணிமுத்தாறின் பிறப்பிடமாக ஏற்காடு மலை திகழ்கிறது . சேர்வராயன் மலைகளில் இருந்து வழிந்தோடும் தண்ணீர் திருமணிமுத்தாறில் சங்கமித்து தொடர் சங்கிலி ஏரிகளை நிரப்பி காவிரியுடன் கலக்கிறது.

    அதாவது திருமணிமுத்தாறு சேலம் நகரம் வழியாக உத்தமசோழபுரம், ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி வழியாக 120 கி.மீ. ஓடி பரமத்திவேலூர் அருகே காவிரியில் கலக்கிறது. சிறப்புமிக்க திருமணிமுத்தாறில் கடந்த 1972-ம் ஆண்டு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது திருமணிமுத்தாறில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி பெரும் அழிவை ஏற்படுத்தியது.


    இந்த பெரும் வெள்ளத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் அம்மன் கருவறை மூழ்கியது. திருவள்ளுவர் சிலை அருகே ஒரு வாரத்திற்கு மேல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி மற்றும் டிசம்பர் 1,2-ந்தேதிகளில் கன மழை பெய்தது. இதனால் சேலம் மாவட்டத்தில் மற்ற இடங்களை காட்டிலும் ஏற்காட்டில் அதிக மழை பெய்தது.

    அங்கு கடந்த 1-ந்தேதி காலை நிலவரப்படி 144.4 மில்லி மீட்டர் மழையும், 2-ந்தேதி 238 மில்லி மீட்டர் மழையும், 3-ந்தேதி 98.2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

    இம்மழையால் ஏற்காடு மலைப்பாதை மற்றும் கிராமப்பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன.

    ஏற்காட்டில் பெய்த பலத்த மழையினால் திருமணிமுத்தாறில் கடந்த 3-ந்தேதி காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 52 ஆண்டுகளுக்கு பிறகு திருமணிமுத்தாறில் மீண்டும் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கந்தம்பட்டி பைபாஸ் அருகே தரைப்பாலத்திற்கு மேல் இடுப்பளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    பாலத்தில் உள்ள தண்ணீர் மோட்டார்வைத்து வெளியேற்றப்பட்டது. கந்தம்பட்டி மற்றும் ஆற்றங்கரையோரம் உள்ள அனைத்து கிராமங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    திருச்செங்கோடு அருகாமையில் கிராமங்களில் உள்ள திருமணிமுத்தாறு தரைபாலங்கள் அனைத்தும் மூழ்கடித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பல்வேறு கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

    பரமத்திவேலூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. பரமத்திவேலூர் அருகே உள்ள பில்லூரில் இருந்து வில்லிபாளையம் உள்ளிட்ட தரைபாலம் மூழ்கியது. பொதுமக்கள் தரைபாலத்தை கடக்க வேண்டாம் என வருவாய்துறை, பேரூராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதேபோல் வசிஷ்டநதி, சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் எடப்பாடியில் உள்ள பெரிய ஏரி, சின்ன ஏரி, அரசிராமணி, பேரூராட்சி, குள்ளம்பட்டி, செட்டிப்பட்டியில் தரைபாலத்தை மூழ்கடித்து சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    கிராமங்களில் விளைநிலங்கள் மட்டுமின்றி வீடுகள், பள்ளிகள், கடைகள் என கிராமம் முழுவதும் குளம்போல் தண்ணீர் தேங்கி பெருக்கெடுத்து ஓடியது. குள்ளம்பட்டியில் வெள்ளூற்று பெருமாள் கோவிலுக்கு செல்லும் சிறிய பாலமும் வெள்ளத்தால் சேதமடைந்தது.


    ஓலப்பாளையம், கண்டாயிக்காடு, தைலங்காடு, வயக்காடு, சுக்கலான்காடு, கள்ளப்பாளையம், எல்லாப்பாளையம் உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தரைப்பாலம் மூழ்கியது. நைனாம்பட்டி, ஆரையான்காடு, செரக்காடு, வண்ணாங்காடு, கோட்டக்காடு, பூனையம்காடு, பெரியகாடு, புளியம்பட்டி உள்பட 25 குக்கிராமங்கள் வெள்ளம் சூழப்பட்டு தனித்தீவுகளாக மாறியுள்ளது.

    தேவூர் மயிலம்பட்டி, மேட்டுகடை, பெரமச்சிபாளையம், மேட்டாங்காடு, சோழக்கவுண்டனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நெல், கரும்பு, வாழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

    தண்ணீர் சூழ்ந்த கிராமங்களில் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், வெளியூர் செல்பவர்கள் பரிசல் மூலம் பள்ளிக்கு அழைத்து வந்து விடுகின்றனர். பள்ளி குழந்தைகளுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள், மளிகை பொருட்கள் ஆகியவற்றை பரிசல் மூலம் வீடுகளுக்கு வழங்கி வருகின்றனர். பால, மருந்து, மாத்திரைகள் வாங்க பொதுமக்கள் பரிசல் மூலம் பயணித்து வருகின்றனர்.

    திருமணிமுத்தாறு-சரபங்கா நதி ஆகியவை கிராமங்களில் ஏற்படுத்திய சேதத்தை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த கிராமங்களில் அடிப்படை வசதிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருமணிமுத்தாறு-சரபங்கா நதியில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 2 ஆறுகள் வெவ்வேறு திசைகளில் பயணித்தாலும் மழை வெள்ளத்தால் கடும் சேதத்தை ஏற்படுத்தி பொதுமக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. 

    • எங்கு பார்த்தாலும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
    • மீட்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு.

    விழுப்புரம்:

    பெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம், விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டிப் போட்டுள்ளது. மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

    விழுப்புரம் பஸ் நிலையம், கலெக்டர் அலு வலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளையும் மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

    நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியதோடு மீட்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், செந்தில் பாலாஜி ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் முகாமிட்டு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (திங்கட்கிழமை) காலையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்றார்.

    சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்ட அவர் முதலில் செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் பகுதிக்கு சென்றார். அங்கு சாய்ந்து கிடந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவற்றை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தார்.

    அப்போது முதல்-அமைச்சரிடம் பெண் அதிகாரி கூறியதாவது:-

    இந்த பகுதியில் தோப்புக்கு ஒரு வீடு வீதம் நிறைய உள்ளது. மரங்கள் விழுந்து வீடுகள் சேதம் அடைந்ததுடன் மின் கம்பங்களும் சாய்ந்து விட்டது.

    2 நாட்களாக அவற்றை சரி செய்து வருகிறோம். மின் கம்பங்களை சரி செய்ய ஊழியர்கள் குறைவாக இருந்தார்கள். இன்று கூடுதல் ஊழியர்கள் வந்துள்ளார்கள் என்றார்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேத விவரங்களை முழுமையாக கணக்கெடுத்து மாவட்ட கலெக்டரிடம் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரி அமுதா, கலெக்டர் அருண்ராஜ் ஆகியோரும் பாதிப்பு விவரங்களை எடுத்துக் கூறினார்கள்.

    அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு மரக்காணம் ஒன்றியம் மந்தவாய்புதுக்குப்பத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு புடவை, பணம் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.


    பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் விழுப்புரம் ரெட்டியார் மில்லில் உள்ள வி.பி.எஸ். மெட்ரிக்கு லேஷன் பள்ளியில் (தாமரைக்குளம்) அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

    அப்போது மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆறுதல் கூறினார். உங்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    மரக்காணத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் வழியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்த்துக்கொண்டே சென்றார். அவருடன் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள், மாவட்ட கலெக்டரும் உடன் சென்றனர்.

    விழுப்புரம் மாவட்டத்தை தொடர்ந்து அவர் கள்ளக்குறிச்சி மாவட்டமும் சென்றார். திருநாவலூர் ஒன்றியம் சேந்தமங்கலத்தில் சேதமடைந்த விவசாய பயிர்களை பார்வையிட்டார்.

    உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி டோல்கேட் பகுதியில் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள திருமண மண்டபத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

    ×