என் மலர்
விழுப்புரம்
- கடந்த சில நாட்களுக்கு முன் ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார்.
- பிப்ரவரி 28-ந்தேதி கூட்டணி அறிவிப்பு இருக்கும் என்றும் கூறி இருந்தார்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சி யாருக்கு சொந்தம் என்ற போட்டி நிலவி வருகிறது.
இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அன்புமணி அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து விட்டார்.
ஆனால் ராமதாஸ் தரப்பு பா.ம.க. எந்த அணிக்கு செல்வது என்ற முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது. தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் நாங்கள் வெளியேறி விடுவோம் என அக்கூட்டணியில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கூறி விட்டது.
அ.தி.மு.க. கூட்டணியில் அன்புமணி இடம்பெற்று உள்ளதால் அக்கூட்டணிக்கும் ராமதாஸ் தரப்பு பா.ம.க. செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார். அதில் நமது இலக்கை அடைவதற்கான வாகனம் அருகே வந்து விட்டது என கூறி இருந்தார்.
மேலும் பிப்ரவரி 28-ந்தேதி கூட்டணி அறிவிப்பு இருக்கும் என்றும் கூறி இருந்தார். ஆனால் நேற்று ராமதாஸ் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று தைலாபுரம் வந்த பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே. மணி நிருபர்களிடம் கூறும் போது, கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது. இதுவரை இறுதி முடிவு எட்டப்படவில்லை. யாருடன் கூட்டணி என முடிவெடுக்கவில்லை என்றார்.
இதனால் தொண்டர்கள் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள்.
இதற்கிடையே வருகிற 3-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ராமதாஸ் யாருடன் கூட்டணி என்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை மறுநாள் காலை 10 மணிக்கு திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் சங்கம், மகளிர் சங்கம், மாணவர் சங்கம், பாட்டாளி சமூக ஊடக பேரவை, மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர, மாநகர, பகுதி நிர்வாகிகள் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே அன்று கூட்டணி அறிவிப்பை வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- அன்புமணி தலைமையிலான பா.ம.க., அ.திமு.க. கூட்டணியில் இணைந்து விட்டது.
- திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி இருக்கும்.
திண்டிவனம்:
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கூட்டணி அமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த தேர்தலில் 4 முனை போட்டி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளின் தலைமையில் தனித்தனி கூட்டணி ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளுக்கும் அக்கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். விஜய் தலைமையிலான த.வெ.க. தனித்து போட்டியிடுமா அல்லது அந்த கட்சியுடன் வேறு கட்சி கூட்டணியில் இணையுமா என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ் ஒரு அணியாகவும், அவரது மகன் அன்புமணி மற்றொரு அணியாகவும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இருவரும் மாம்பழம் சின்னம் தங்களுக்கு தான் சொந்தம் என உரிமை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் அன்புமணி தலைமையிலான பா.ம.க., அ.திமு.க. கூட்டணியில் இணைந்து விட்டது. ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வினர் தி.மு.க. கூட்டணிக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பா.ம.க.வை சேர்த்தால் நாங்கள் வெளியேறிவிடுவோம் என தெரிவித்தனர். இதனால் ராமதாஸ் எந்த அணியில் இணைவார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
நேற்று முன்தினம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க., வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறும்போது, திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி இருக்கும். 28-ந் தேதிக்குள் (இன்று) கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவோம். அப்போது தான் எந்த வாகனத்தில் பயணிப்போம் என்பதை தெரிவிப்போம் என்றார்.
இதனால் அவர் இன்று கூட்டணி குறித்து அறிவிப்பார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் ராமதாஸ் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அவர் எப்போது கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என பா.ம.க. தொண்டர்கள் எதிர்பார்த்து ஆவலுடன் உள்ளனர்.
- சொல்ல வேண்டிய தகவல் இருந்தால் டாக்டர் ராமதாஸ் உங்களிடம் சொல்வார் என்றார்.
- திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படுமா? என கேள்வி எழுப்பிய போது, இருக்கும் என தெரிவித்தார்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி ஆகியோர் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
இதில் அன்புமணி தலைமையிலான பா.ம.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் தொடர்ந்து தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள். டாக்டர் ராமதாஸ் எந்த கூட்டணியில் சேருவோம் என அறிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார். கடந்த சில தினங்களாக பா.ஜ.க. மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் டாக்டர் ராமதாசிடம் பேசி வருவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிர்வாக குழு கூட்டத்தை நடத்தி கூட்டணி சம்பந்தமாக கருத்து கேட்டார். அதில் பெரும்பாலான உறுப்பினர்கள் தமிழக வெற்றி கழகத்துடன் செல்லலாம் என கருத்து தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் ஒரு சில உறுப்பினர்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் நேற்று தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், நாம் பயணிக்க வேண்டிய தூரம் நீண்டது. ஆனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடைய முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்து விட்டது. அதில் தான் நாம் பயணிக்க போகிறோம். நாம் இலக்கை அடைந்து, லட்சியத்தை வெல்வோம் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இன்று கூட்டணி குறித்து முடிவெடுப்பது சம்பந்தமாக டாக்டர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்க மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் பா.ம.க. முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் வன்னியர் சங்க தலைவர் பு.தா அருள் மொழி, எம்.எம்.ஏ.க்கள் ஜி.கே .மணி, அருள் மற்றும் பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக்கூட்டம் முடிந்த பிறகு டாக்டர் ராமதாஸ் நாளை கூட்டணி சம்பந்தமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆலோசனை கூட்டத்திற்கு வந்த பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறும் போது, சொல்ல வேண்டிய தகவல் இருந்தால் டாக்டர் ராமதாஸ் உங்களிடம் சொல்வார் என்றார். அவரிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பிய போது பதில் அளிக்காமல் சென்றார்.
இந்த நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற வந்த டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறும்போது, வருகிற 28-ந்தேதிக்குள் கூட்டணி சம்பந்தமாக அறிவிக்கப்படும் என்றார்.
அவரிடம் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படுமா? என கேள்வி எழுப்பிய போது, இருக்கும் என தெரிவித்தார்.
பின்னர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
- ராமதாஸ் தரப்பு பா.ம.க. எந்த அணிக்கு செல்வது என்ற முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது.
- பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறுகிறது.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சி யாருக்கு சொந்தம் என்ற போட்டி நிலவி வருகிறது.
இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அன்புமணி அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து விட்டார்.
ஆனால் ராமதாஸ் தரப்பு பா.ம.க. எந்த அணிக்கு செல்வது என்ற முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது. தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் நாங்கள் வெளியேறி விடுவோம் என அக்கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கூறி விட்டது.
அ.தி.மு.க. கூட்டணியில் அன்புமணி இடம் பெற்று உள்ளதால் அக்கூட்டணிக்கும் ராமதாஸ் தரப்பு பா.ம.க. செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளிடம் நாளை ஆலோசனை நடத்தி முடிவு செய்ய டாக்டர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறுகிறது.
இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பா.ம.க., வன்னியர் சங்கம் உள்ளிட்ட சார்பு அமைப்புகளில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் என் தலைமையில் நடைபெறுகிறது.
அதில் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
எனவே நாளை நடைபெறும் கூட்டத்திற்கு பின் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை ராமதாஸ் வெளியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- ராமதாஸ் எந்த பக்கம் செல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
- 21 பேர் கொண்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்துள்ளனர்.
திண்டிவனம்:
பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. கட்சி தங்களுக்கே சொந்தம் என இருவரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அன்புமணி தலைமையிலான பா.ம.க. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து உள்ளது. டாக்டர் ராமதாஸ் தி.மு.க. பக்கம் செல்வதா அல்லது அ.தி.மு.க. கூட்டணிக்கு செல்வதா என்ற குழப்பத்தில் இருந்து வருகிறார்.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்கள் கூட்டணியில் பா.ம.க.வை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் ராமதாஸ் எந்த பக்கம் செல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. அவசர நிர்வாக குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள 21 பேர் கொண்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்துள்ளனர்.
அவர்களுடன் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக இன்று இறுதி கட்ட ஆலோசனையில் ராமதாஸ் ஈடுபட்டு வருகிறார். யாருடன் கூட்டணி என்பது தொடர்பான முடிவை ராமதாஸ் இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பா.ம.க.வை தி.மு.க.வில் சேர்க்க வேண்டாம் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை.
- விஜய்யுடன் ஒரு கட்சி கூட இதுவரை கூட்டணி சேரவில்லை.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அம்பேத்கர் மக்கள் கட்சியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இணைப்பு, தலித் இளைஞர்களின் அரசியல் எழுச்சி மற்றும் ஒன்று சேர் மாநாடு, 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு நிதியளிப்பு விழா என நடைபெற்ற முப்பெரும் விழா மற்றும் செஞ்சி தொகுதி மாவட்ட செயலாளர் அலுவலகம் திறப்பு விழா ஆகியவை செஞ்சி-விழுப்புரம் சாலையில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி கலந்து கொண்டார். அவர் வக்கீல் மழைமேணிபாண்டியன் மற்றும் அவரது தலைமையில் இணைந்த முக்கிய நிர்வாகிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சால்வை அணிவித்து வரவேற்றார். இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது :-
அம்பேத்கர் மக்கள் கட்சி வேற எந்த அரசியல் கட்சியிலும் இணையாமல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இணைந்தது அவர்களின் அம்பேத்கர் கொள்கை பற்றை காட்டுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உள்ளவர்கள் புயலே அடித்தாலும் என்னை விட்டு போகாமல் இருப்பதே எனக்கு வியப்பை தருகிறது.விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தவுடன் வி.சி.க.வினர் அங்கு போய்விட்டார்கள் என்று சொன்னார்கள்.
ஆனால் அதற்கு பிறகு தான் வி.சி.க. மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது. அம்பேத்கர் பெயரில் கட்சி நடத்துவது அவரது கொள்கைகளை பின்பற்றும் அமைப்புகளை பெயரளவிற்கு மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அங்கீகாரம் பெற்றது சாதாரணமான விஷயம் அல்ல. நடிகர் ரஜினிகாந்த் சொல்வது போல் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்னது போல் வி.சி.க. ஒரு எம்.எல்.ஏ.மற்றும் எம்.பி. பெற்றால் நூறு பேரை பெற்றதை போன்றது.
மேலும் திருமாவளவன் அ.தி.மு.க. கூட்டணி மற்றும் விஜய் கூட்டணியில் சேர முடியாதா? என்றால் முடியும். ஆனால் பா.ஜ.க. தமிழ்நாட்டில் கால் ஊன்ற கூடாது என்பதால் தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறோம். 5 சீட்டு 6 சீட்டுக்கு தி.மு.க.வுடன் இருக்கிறீர்கள் என்று நம்மை ஆத்திர மூட்டுவார்கள். இதற்கு எல்லாம் திருமாவளவன் அசைந்து கொடுக்கவில்லை. நாங்கள் கொள்கை கூட்டணியில் இருக்கிறோம். பா.ஜ.க. கட்சி தமிழ்நாட்டில் காலூன்ற பார்க்கிறது. அதற்கு அதிமுக கட்சியின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி காவிய கொடியை ஏற்ற பார்க்கிறார்கள்.அதனால் தான் பல வழிகளில் பெரியாரை குறி வைத்து விமர்சனம் செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு தலித் தலைவர்கள் தேசிய அளவில் இருந்த போதும் அம்பேத்கரை முன்னிறுத்தினார் பெரியார். எதனால் சனாதான தர்மத்தை அழிக்க வேண்டும் என்பது தான் இருவரின் நோக்கமும் அதுதான். அம்பேத்கர் பேசினதை தான் பெரியார் பேசினார். திமுகவை பலவீனபடுத்தினால் அது பெரியார் அரசியலை பலவீனம் படுத்தும் அரசியல் ஆகும்.
பா.ம.க.வை தி.மு.க.வில் சேர்க்க வேண்டாம் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. நான் ஒருபோதும் அப்படி நெருக்கடி கொடுக்கவில்லை. எங்கள் கட்சி நலன் காரணமாக தான் பா.ம.க. இடம் பெறும் கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என்று ஏற்கனவே சொல்லி விட்டோம். அதற்கு தர்மபுரி நாயக்கன் கொட்டாய் சம்பவமும் அதனைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட தலித் அல்லாத கூட்டணி என்ற சோசியல் என்ஜினியரிங் தான் முக்கிய காரணம். எங்களுக்கு எம்.எல்.ஏ., எம்.பி இல்லை என்றாலும் அம்பேத்கர் கொள்கையை கடைபிடிக்கிறோம். அந்த வகையில் வேற கட்சியில் இணையாமல் அம்பேத்கர் மக்கள் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்துள்ளதை வரவேற்கிறோம். தி.மு.க. கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும்.அதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி காரணமாக இருக்க வேண்டும்.
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது. இது எடப்பாடிக்கு தலைமையில் இடியே விழுந்து போல் இருக்கும். உரிமை தொகை 5 ஆயிரம் வழங்கியபோது அவருக்கு அடி வயிற்றில் இடி விழுந்தது போல் இருக்கும்.இப்போது தே.மு.தி.க . தி.மு.க. உடன் கூட்டணியில் இணைந்தது எடப்பாடிக்கு உச்சந்தலையில் இடி விழுந்தது போல் இருக்கும். விசில் காரங்க ஆட்சியில் பங்கு தர நாங்க ரெடி நீங்க ரெடியா என்று கேட்டார்கள். ஆட்சியில் பங்குக்கு நாங்க ரெடி அதை எங்களால் அமைத்துக் கொள்ள முடியும் ஆனால் உங்க கூட வர நாங்க ரெடி இல்லை என்று சொல்லி விட்டோம். விஜய்யுடன் ஒரு கட்சி கூட இதுவரை கூட்டணி சேரவில்லை. அதே போல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர கட்சிகள் தயக்கம் காட்டுகின்றனர்.
தி.மு.க. கூட்டணி வெற்றி பெற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும்.
இவ்வாறு தொல் திருமாவளவன் பேசினார்.
- 5 வயதில் மகன் ஒருவர் உள்ளார்
- ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் துளசிராம் (36). இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன் மதுரை கல்லுப்பட்டியை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது 5 வயதில் மகன் உள்ளார். துளசிராம் பி.இ. படித்து விட்டு சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் மனைவி பாண்டியம்மாள், கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தாய் வீட்டிற்கு சென்று அங்கு வசித்து வந்துள்ளார். வேலை இல்லாததாலும், மனைவி பிரிந்து சென்றதாலும் விரக்தியில் இருந்த துளசிராம் பாதரசம் வாங்கி ஊசி மூலம் உடலில் செலுத்தி உள்ளார்.
இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் விழுப்புரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வழக்கமாக சொல்லும் திருக்குறள் கூட மத்திய பட்ஜெட்டில் இல்லை.
- தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு கூட பட்ஜெட்டில் நிதி இல்லை.
விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.254.29 கோடி மதிப்பிலான 29 திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்யும் 'என் கனவு என் எதிர்காலம்' திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். ரூ.390 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என எதுவுமில்லை.
* வழக்கமாக சொல்லும் திருக்குறள் கூட மத்திய பட்ஜெட்டில் இல்லை.
* தமிழ்நாட்டின் மீதும், தமிழர்கள் மீதும் பா.ஜ.க.விற்கு அவ்வளவு வெறுப்பு
* தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு கூட பட்ஜெட்டில் நிதி இல்லை.
* தேர்தல் முடிவு தெரிந்து விட்டதால் நிதியை ஒதுக்க பா.ஜ.க. மறுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முடக்க சிலர் உச்சநீதிமன்றம் வரை சென்றார்கள்.
- விதிகளை தளர்த்தி 16,94,000 பேருக்கு கூடுதலாக மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.254.29 கோடி மதிப்பிலான 29 திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்யும் 'என் கனவு என் எதிர்காலம்' திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். ரூ.390 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* சோழர் காலத்திலும் பல்லவர் காலத்திலும் வர்த்தக நகராக இருந்த சிறப்புக்குரிய நகரம் திண்டிவனம்.
* சென்னையின் நுழைவு வாயிலாக இருப்பது திண்டிவனம்.
* தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத பல திட்டங்களை அறிவித்து நிறைவேற்றி வருகிறோம்.
* உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் மூலம் பெறப்பட்ட 4.5 லட்சம் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்பட்டது.
* மக்களின் தேவைகளை உன்னிப்பாக கவனித்து விரைவாக நிறைவேற்றி வருகிறோம்.
* மக்களின் தேவையை கண்டறிந்து அவர்கள் இடத்திற்கே சென்று தீர்வு காணப்படுகிறது.
* உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முடக்க சிலர் உச்சநீதிமன்றம் வரை சென்றார்கள். அவர்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது.
* பல தடைகளை தாண்டி உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இன்று வெற்றி பெற்றுள்ளது.
* உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் இதுவரை 10,000 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
* விழுப்புரம் மாவட்டத்திற்கு தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்தது மட்டுமின்றி சொல்லாத வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
* முதல்வரின் முகவரி திட்டத்தின் வாயிலாக 1.49 கோடி மனுக்களுக்கு தீர்வு கண்டுள்ளோம்.
* அரசு சேவைகள் மக்களுக்கு தடையின்றி, விரைவாக கிடைக்க வேண்டும்.
* மக்களின் குறைகள், தேவைகளை உன்னிப்பாக கவனித்து நிறைவேற்றி வருகிறது திராவிட மாடல் அரசு.
* உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஊரக பகுதிகளில் 15 துறைகளும் நகரப்பகுதிகளில் 13 துறை சார்ந்த முகாம்கள் நடத்தப்பட்டது.
* ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு, குடும்ப அட்டை, சொத்துவரி பெயர் மாற்றுதல், பட்டா கேட்டு அதிக மனுக்கள் வந்தது.
* பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காண்பதில் நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் 40 நாட்களில் தீர்வு காணப்பட்டது.
* விதிகளை தளர்த்தி 16,94,000 பேருக்கு கூடுதலாக மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளையும் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விழுப்புரம் மாவட்ட எல்லையில் தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
திண்டிவனம்:
திண்டிவனத்தில் 'என் கனவு-என் எதிர்காலம்' திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
தமிழகம் முழுவதும் 2025 ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது.
மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் அந்த முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் 1.80 லட்சம் பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் வழங்கும் விழா 'என் கனவு-என் எதிர்காலம்' இணையதள தொடக்க விழா மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் முடிவுற்ற பணிகள் தொடக்கவிழா, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது.
திண்டிவனம்-செஞ்சி சாலையில் கொள்ளார் கிராமத்தில் உள்ள சிப்காட் வளாகத்தில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று நலத் திட்ட பயன்களையும், சமூக பாதுகாப்பு திட்ட பயன்களையும் வழங்கி என் எனவு-என் எதிர்காலம் என்ற திட்டத்தில் இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்ய உருவாக்கப்பட்டுள்ள இணைய தளத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.
இதனை தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளையும் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார்.
விழாவில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து நாளை காலை சாலை மார்க்கமாக புறப்பட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விழுப்புரம் மாவட்ட எல்லையில் தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இந்த வரவேற்பை தொடர்ந்து திண்டிவனம் தீர்த்த குளத்திலிருந்து செஞ்சி சாலை காந்தி திடல் வரை ரோடு ஷோ மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா நடைபெறும் பகுதியை சென்றடைகிறார்.
அரசு விழா முடிவடைந்த பின்னர் சாலை மார்க்கமாக மீண்டும் சென்னைக்கு முதலமைச்சர் புறப்பட்டு செல்கிறார்.
முதலமைச்சர் வருகையையொட்டி விழா நடைபெறும் பகுதி, திண்டிவனம் பகுதிகள், முதலமைச்சர் வரும் வழித்தட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- நேர்காணல் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
- நாளை மற்றும் நாளை மறுநாள் மீதி உள்ள மாவட்டங்களுக்கு நேர்காணலை ராமதாஸ் நடத்துகிறார்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பா.ம.க. சார்பாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனுவை பெற்றார். இதையடுத்து அதற்கான நேர்காணல் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
இந்த நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கான முதற்கட்டமான வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. நாளை மற்றும் நாளை மறுநாள் மீதி உள்ள மாவட்டங்களுக்கு நேர்காணலை ராமதாஸ் நடத்துகிறார்.
இந்த நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் முடிவு எடுக்கவில்லை. விரைவில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். நம்பிக்கையின் அடிப்படையில் தான் உலகம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டணி அமைப்பதில் டாக்டர் ராமதாசுக்கு எந்த சிக்கலும் இல்லை.
- தேர்தலில் ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வார்கள்.
திண்டிவனம்:
பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி தைலாபுரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு தேர்தலில் வெற்றி என்பது கட்சியின் பலம். அந்த கட்சியை வழிநடத்தக் கூடிய தலைவருக்கான மிகப்பெரிய சக்தி, அதையும் தாண்டி கூட்டணி. அதற்கும் மேல் அந்த தொகுதியில் வேட்பாளர்களுக்குரிய முக்கியத்துவம். இதெல்லாம் சேர்ந்ததுதான் வெற்றி.
அந்த அடிப்படையில் இதையெல்லாம் கூட்டி கழித்து நேர்காணல் நடத்தி டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஒரு நல்ல முடிவு எடுப்போம்.
பா.ம.க. இன்று ஒரு நெருக்கடியான சூழலை சந்தித்தால் கூட டாக்டர் ராமதாஸ் பின்னால் கிராமங்களில் உள்ள அடித்தட்டு மக்கள், பா.ம.க.வின் அனுதாபிகள், மூத்த நிர்வாகிகள் ஆகியோர் உள்ளனர். அவர்கள் இந்த தேர்தலில் டாக்டர் ராமதாசின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.
டாக்டர் ராமதாசை பாதுகாக்க வேண்டும் என்று பேசத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த தேர்தல் டாக்டர் ராமதாசுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
கேள்வி: கூட்டணி தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும்?
பதில்: கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க டாக்டர் ராமதாசுக்கு பொதுக்குழு அதிகாரம் கொடுத்து உள்ளது. அதற்கு பிறகு 3 கட்ட நிர்வாக குழு கூட்டம் நடத்தப்பட்டது. நிர்வாக குழுவிடம் டாக்டர் ராமதாஸ் கருத்து கேட்டார். மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களிடம் தனித்தனியாகவும் கருத்து கேட்டார். அந்த கருத்தின் அடிப்படையில் நல்ல முடிவு எடுப்பார். முடிவை வேகமாக அறிவிக்காமல் சற்று காலதாமதம் ஆவதற்கு என்ன காரணம் என்றால் நல்ல முடிவாக இருக்கணும்.
வெற்றி பெறக்கூடிய கூட்டணியாக இருக்க வேண்டும். டாக்டர் ராமதாஸ் இடம் பெறுகிற கூட்டணிதான் ஆட்சியை பிடிக்கக் கூடிய கூட்டணியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர் அலசி ஆராய்ந்து, யோசனை செய்து கொண்டிருக்கிறார். நல்ல முடிவை விரைவில் அறிவிப்பார்.
கேள்வி: த.வெ.க. சார்பில் கூட்டணி தொடர்பாக பேசினார்களா?
பதில்: எல்லா தரப்பும் பேசுகிறார்கள். தேர்தல் என்று சொன்னாலே சில கட்சிகள் தலைமையில் நேரடியாக பேசுவார்கள். சில கட்சியின் சார்பில் யாராவது ஆள் அனுப்பி பேசுவார்கள். இதெல்லாம் இயல்பானது. இறுதி முடிவுதான் உறுதியானது. இறுதி முடிவை டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார்.
கேள்வி: கூட்டணி அமைப்பதில் ஏதாவது சிக்கல் இருக்கிறதா?
பதில்: கூட்டணி அமைப்பதில் டாக்டர் ராமதாசுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஒரே ஒரு சிக்கல். வெற்றி கூட்டணி எது என்று கண்டறிவதை தவிர வேறு எதுவும் இல்லை.
கேள்வி: மாம்பழம் சின்னம் யாருக்கு?
பதில்: கட்சி யாருக்கு, மாம்பழம் சின்னம் யாருக்கு என்பதை மிக தெளிவாக விரைவில் உங்களிடம் டாக்டர் ராமதாஸ் சொல்வார்.
கேள்வி: அ.தி.மு.க. தலைமையில் இருந்து உங்களிடம் பேசினார்களா?
பதில்: எல்லா தரப்பிலும் பேசப்பட்டு வருகிறது. அதை இப்போது வெளியில் சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது.
கேள்வி: பா.ம.க. இடம்பெறும் கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என்று திருமாவளவன் கூறி இருக்கிறாரே?
பதில்: தேர்தலில் ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வார்கள். இன்னொருவர் கருத்துக்கு நாம் பதில் சொல்லக்கூடாது. அது சரியாக இருக்காது. தேர்தலின் போது எல்லோருடனும் இணக்கமாக இருக்க வேண்டும். நான் அப்படித்தான் இருப்பேன்.
கேள்வி: திருமாவளவனை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்ததா?
பதில்: அப்படி எதுவும் எனக்கு தெரியவில்லை.
கேள்வி: பா.ம.க.வுக்கு கடந்த காலங்களை போல தொகுதிகள் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா?
பதில்: பா.ம.க. வலிமையான சக்தி. டாக்டர் ராமதாசின் வலிமை எப்போதும் குறையாது. தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக பா.ம.க.வும், டாக்டர் ராமதாசும் இருக்கிறார்கள்.
கேள்வி: கூட்டணி தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலுவிடம் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறதே?
பதில்: இது உங்கள் கற்பனை மற்றும் யூகம்தான்.
கேள்வி: உங்களை தி.மு.க.வின் கைக்கூலி என்று விமர்சித்து சொல்லப்படுகிறதே?
பதில்: டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் ஏற்பட்ட பிரிவுக்கு நான் தான் காரணம் என்று சொல்கிறார்கள். கைக்கூலி என்றும் சொல்கிறார்கள். டாக்டர் ராமதாசையும், அன்புமணியையும் பிரிப்பதற்கு எனது மனசாட்சி இடம் கொடுக்குமா? ஒன்றாக இணைக்கும் முயற்சியை 5 மாதமாக மேற்கொண்டேன். அது நடக்கவில்லை என்ற வருத்தம் இன்று வரை இருக்கிறது. அவர்கள் இருவரும் ஒன்றாக பேச வேண்டும் என்று நினைக்கிற முதல் ஆள் நான்தான். அவர்கள் இணைய தடையாக இருக்க மாட்டேன். கைக்கூலி என்று சொல்வதை கனத்த இதயத்துடன் தாங்கிக் கொண்டு வாழ்கிறேன் என்றார்.






