என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க. யாருடன் கூட்டணி?- டாக்டர் ராமதாஸ் நாளை முடிவு
- ராமதாஸ் தரப்பு பா.ம.க. எந்த அணிக்கு செல்வது என்ற முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது.
- பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறுகிறது.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சி யாருக்கு சொந்தம் என்ற போட்டி நிலவி வருகிறது.
இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அன்புமணி அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து விட்டார்.
ஆனால் ராமதாஸ் தரப்பு பா.ம.க. எந்த அணிக்கு செல்வது என்ற முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது. தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் நாங்கள் வெளியேறி விடுவோம் என அக்கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கூறி விட்டது.
அ.தி.மு.க. கூட்டணியில் அன்புமணி இடம் பெற்று உள்ளதால் அக்கூட்டணிக்கும் ராமதாஸ் தரப்பு பா.ம.க. செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளிடம் நாளை ஆலோசனை நடத்தி முடிவு செய்ய டாக்டர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறுகிறது.
இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பா.ம.க., வன்னியர் சங்கம் உள்ளிட்ட சார்பு அமைப்புகளில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் என் தலைமையில் நடைபெறுகிறது.
அதில் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
எனவே நாளை நடைபெறும் கூட்டத்திற்கு பின் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை ராமதாஸ் வெளியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.






