என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

28-ந்தேதிக்குள் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்- ராமதாஸ்
- சொல்ல வேண்டிய தகவல் இருந்தால் டாக்டர் ராமதாஸ் உங்களிடம் சொல்வார் என்றார்.
- திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படுமா? என கேள்வி எழுப்பிய போது, இருக்கும் என தெரிவித்தார்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி ஆகியோர் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
இதில் அன்புமணி தலைமையிலான பா.ம.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் தொடர்ந்து தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள். டாக்டர் ராமதாஸ் எந்த கூட்டணியில் சேருவோம் என அறிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார். கடந்த சில தினங்களாக பா.ஜ.க. மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் டாக்டர் ராமதாசிடம் பேசி வருவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிர்வாக குழு கூட்டத்தை நடத்தி கூட்டணி சம்பந்தமாக கருத்து கேட்டார். அதில் பெரும்பாலான உறுப்பினர்கள் தமிழக வெற்றி கழகத்துடன் செல்லலாம் என கருத்து தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் ஒரு சில உறுப்பினர்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் நேற்று தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், நாம் பயணிக்க வேண்டிய தூரம் நீண்டது. ஆனால் கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடைய முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்து விட்டது. அதில் தான் நாம் பயணிக்க போகிறோம். நாம் இலக்கை அடைந்து, லட்சியத்தை வெல்வோம் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இன்று கூட்டணி குறித்து முடிவெடுப்பது சம்பந்தமாக டாக்டர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்க மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் பா.ம.க. முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் வன்னியர் சங்க தலைவர் பு.தா அருள் மொழி, எம்.எம்.ஏ.க்கள் ஜி.கே .மணி, அருள் மற்றும் பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக்கூட்டம் முடிந்த பிறகு டாக்டர் ராமதாஸ் நாளை கூட்டணி சம்பந்தமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆலோசனை கூட்டத்திற்கு வந்த பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறும் போது, சொல்ல வேண்டிய தகவல் இருந்தால் டாக்டர் ராமதாஸ் உங்களிடம் சொல்வார் என்றார். அவரிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பிய போது பதில் அளிக்காமல் சென்றார்.
இந்த நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற வந்த டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறும்போது, வருகிற 28-ந்தேதிக்குள் கூட்டணி சம்பந்தமாக அறிவிக்கப்படும் என்றார்.
அவரிடம் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படுமா? என கேள்வி எழுப்பிய போது, இருக்கும் என தெரிவித்தார்.
பின்னர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.






