என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி எடப்பாடிக்கு தலையில் இடி விழுந்தது போல் உள்ளது - திருமாவளவன்
    X

    தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி எடப்பாடிக்கு தலையில் இடி விழுந்தது போல் உள்ளது - திருமாவளவன்

    • பா.ம.க.வை தி.மு.க.வில் சேர்க்க வேண்டாம் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை.
    • விஜய்யுடன் ஒரு கட்சி கூட இதுவரை கூட்டணி சேரவில்லை.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அம்பேத்கர் மக்கள் கட்சியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இணைப்பு, தலித் இளைஞர்களின் அரசியல் எழுச்சி மற்றும் ஒன்று சேர் மாநாடு, 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு நிதியளிப்பு விழா என நடைபெற்ற முப்பெரும் விழா மற்றும் செஞ்சி தொகுதி மாவட்ட செயலாளர் அலுவலகம் திறப்பு விழா ஆகியவை செஞ்சி-விழுப்புரம் சாலையில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி கலந்து கொண்டார். அவர் வக்கீல் மழைமேணிபாண்டியன் மற்றும் அவரது தலைமையில் இணைந்த முக்கிய நிர்வாகிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சால்வை அணிவித்து வரவேற்றார். இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது :-

    அம்பேத்கர் மக்கள் கட்சி வேற எந்த அரசியல் கட்சியிலும் இணையாமல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இணைந்தது அவர்களின் அம்பேத்கர் கொள்கை பற்றை காட்டுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உள்ளவர்கள் புயலே அடித்தாலும் என்னை விட்டு போகாமல் இருப்பதே எனக்கு வியப்பை தருகிறது.விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தவுடன் வி.சி.க.வினர் அங்கு போய்விட்டார்கள் என்று சொன்னார்கள்.

    ஆனால் அதற்கு பிறகு தான் வி.சி.க. மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது. அம்பேத்கர் பெயரில் கட்சி நடத்துவது அவரது கொள்கைகளை பின்பற்றும் அமைப்புகளை பெயரளவிற்கு மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அங்கீகாரம் பெற்றது சாதாரணமான விஷயம் அல்ல. நடிகர் ரஜினிகாந்த் சொல்வது போல் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்னது போல் வி.சி.க. ஒரு எம்.எல்.ஏ.மற்றும் எம்.பி. பெற்றால் நூறு பேரை பெற்றதை போன்றது.

    மேலும் திருமாவளவன் அ.தி.மு.க. கூட்டணி மற்றும் விஜய் கூட்டணியில் சேர முடியாதா? என்றால் முடியும். ஆனால் பா.ஜ.க. தமிழ்நாட்டில் கால் ஊன்ற கூடாது என்பதால் தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறோம். 5 சீட்டு 6 சீட்டுக்கு தி.மு.க.வுடன் இருக்கிறீர்கள் என்று நம்மை ஆத்திர மூட்டுவார்கள். இதற்கு எல்லாம் திருமாவளவன் அசைந்து கொடுக்கவில்லை. நாங்கள் கொள்கை கூட்டணியில் இருக்கிறோம். பா.ஜ.க. கட்சி தமிழ்நாட்டில் காலூன்ற பார்க்கிறது. அதற்கு அதிமுக கட்சியின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி காவிய கொடியை ஏற்ற பார்க்கிறார்கள்.அதனால் தான் பல வழிகளில் பெரியாரை குறி வைத்து விமர்சனம் செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு தலித் தலைவர்கள் தேசிய அளவில் இருந்த போதும் அம்பேத்கரை முன்னிறுத்தினார் பெரியார். எதனால் சனாதான தர்மத்தை அழிக்க வேண்டும் என்பது தான் இருவரின் நோக்கமும் அதுதான். அம்பேத்கர் பேசினதை தான் பெரியார் பேசினார். திமுகவை பலவீனபடுத்தினால் அது பெரியார் அரசியலை பலவீனம் படுத்தும் அரசியல் ஆகும்.

    பா.ம.க.வை தி.மு.க.வில் சேர்க்க வேண்டாம் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. நான் ஒருபோதும் அப்படி நெருக்கடி கொடுக்கவில்லை. எங்கள் கட்சி நலன் காரணமாக தான் பா.ம.க. இடம் பெறும் கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என்று ஏற்கனவே சொல்லி விட்டோம். அதற்கு தர்மபுரி நாயக்கன் கொட்டாய் சம்பவமும் அதனைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட தலித் அல்லாத கூட்டணி என்ற சோசியல் என்ஜினியரிங் தான் முக்கிய காரணம். எங்களுக்கு எம்.எல்.ஏ., எம்.பி இல்லை என்றாலும் அம்பேத்கர் கொள்கையை கடைபிடிக்கிறோம். அந்த வகையில் வேற கட்சியில் இணையாமல் அம்பேத்கர் மக்கள் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்துள்ளதை வரவேற்கிறோம். தி.மு.க. கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும்.அதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி காரணமாக இருக்க வேண்டும்.

    தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது. இது எடப்பாடிக்கு தலைமையில் இடியே விழுந்து போல் இருக்கும். உரிமை தொகை 5 ஆயிரம் வழங்கியபோது அவருக்கு அடி வயிற்றில் இடி விழுந்தது போல் இருக்கும்.இப்போது தே.மு.தி.க . தி.மு.க. உடன் கூட்டணியில் இணைந்தது எடப்பாடிக்கு உச்சந்தலையில் இடி விழுந்தது போல் இருக்கும். விசில் காரங்க ஆட்சியில் பங்கு தர நாங்க ரெடி நீங்க ரெடியா என்று கேட்டார்கள். ஆட்சியில் பங்குக்கு நாங்க ரெடி அதை எங்களால் அமைத்துக் கொள்ள முடியும் ஆனால் உங்க கூட வர நாங்க ரெடி இல்லை என்று சொல்லி விட்டோம். விஜய்யுடன் ஒரு கட்சி கூட இதுவரை கூட்டணி சேரவில்லை. அதே போல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர கட்சிகள் தயக்கம் காட்டுகின்றனர்.

    தி.மு.க. கூட்டணி வெற்றி பெற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும்.

    இவ்வாறு தொல் திருமாவளவன் பேசினார்.

    Next Story
    ×