என் மலர்
நீங்கள் தேடியது "தேமுதிக"
- நேர்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவர்.
- நல்லகண்ணுவின் சேவை என்றும் நினைவு கூறப்படும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
நல்லக்கண்ணு மறைவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நேர்மையான அரசியல்வாதி..
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தூணாக விளங்கியவர் நல்லகண்ணு
லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்ட நேர்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவர்; பொதுமக்களின் நலனுக்காக போராடிய நல்லகண்ணுவின் சேவை என்றும் நினைவு கூறப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஒவ்வொரு தேர்தலிலும் ஜனநாயக கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறேன்.
- விஜயகாந்த் இருக்கும் போதும் வந்து வாக்களித்துள்ளேன்.
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் வாக்களித்தார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்க ளிடம் கூறுகையில், "நான் 25 வருடங்களாக தயாரிப்பாளராக இருக்கிறேன். ஒவ்வொரு தேர்தலிலும் ஜனநாயக கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறேன். விஜயகாந்த் இருக்கும் போதும் வந்து வாக்களித்துள்ளேன்" என்றார்.
அப்போது அவரிடம் நிருபர்கள், "தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. போனதால் விஜயகாந்த் ஆன்மா மன்னிக்காது என்று எதிர்க்கட்சியினர் சொல்கிறார்களே" என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு அவர், "அரசியல் இங்கு பேச வேண்டாம், இது சினிமா நிகழ்ச்சி' என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.
- அ.தி.மு.க.வில் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்தவர் ஓ. பன்னீர் செல்வம்.
- டெல்லியை வாரணாசிக்கு மாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சி செய்து வருகிறது.
நெல்லை:
ம.தி.மு.க நெல்லை மண்டல தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ. நிஜாம் வரவேற்றார்.
பொதுச்செயலாளர் வைகோ, அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், பொருளாளர் செந்திலதிபன் ஆகியோர் கலந்து கொண்டு நிதியினை பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் நெல்லை மண்டலத்துக்குட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கிய கட்சி ரீதியிலான 10 மாவட்டங்கள் சார்பில் சுமார் ரூ.2 கோடி வரை தேர்தல் நிதி வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் நிஜாம், ரைமன்ட், சுதா பாலசுப்பிரமணியன், உதயசூரியன், ஆர்.எஸ்.ரமேஷ், ரஞ்சன், வெற்றிவேல், வேல்முருகன், ரவிச்சந்திரன், கண்ணன் ஆகியோர் தலைமையில் நிதி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சதன் திருமலைகுமார் எம்.எல். ஏ., ரகுராமன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி சிப்பிபாறை ரவிச்சந்திரன், சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் திவான், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ராணி செல்வின், மாநில செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி மற்றும் திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னதாக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள்? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 4 பேர் கொண்ட குழு அமைத்துள்ளோம். அந்த குழு தி.மு.க.வில் அமைக்கப்படும் பேச்சுவார்த்தை குழுவுடன் பேசி சுமூக முடிவு எடுக்கப்படும்.
எங்கள் கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. ஓ.பி.எஸ்.சும் எங்கள் கூட்டணியில் வந்துள்ளார். அ.தி.மு.க.வில் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்தவர் ஓ. பன்னீர் செல்வம். அவர் அரசியல் அனுபவம் மிக்கவர்.
திராவிட இயக்கங்கள் விழிப்பாக உள்ளது. திருக்குறள் குறித்து பேசி தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விடலாம் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். அது நடக்காது.
வாஜ்பாய் போன்று ஒரு தலைவரை நான் பார்க்கவில்லை. ஆனால் இப்போது பா.ஜ.கவின் நிலை வேறு. அதேபோல் அத்வானியும் ஒரு வினோதமான தலைவர் தான். அவரிடம் நான் மத சார்பின்மையை ஆதரிக்கிறீர்களா? என்று நேருக்கு நேர் நான் கேட்டபோது அவர் ஆம் என்று தைரியமாக சொன்னார். எனது குரல் பாராளுமன்றத்தில் மீண்டும் ஒலிப்பது குறித்து காலம் பதில் சொல்லும்.
நான் இதுவரை பாராளுமன்றத்தில் 1360 முறை பேசியுள்ளேன். அதனை 5 தொகுப்புகளாக புத்தகமாக வடிவமைத்து ஒவ்வொரு முக்கிய தலைவர்களையும் சந்தித்து வழங்கி வருகிறேன்.
வந்தே மாதரம் பாடலில் நீக்கப்பட்ட 4 வரிகளை மீண்டும் சேர்க்க வேண்டும் எனவும், அதனை பள்ளி, கல்லூரிகளில் இசைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 4 வரிகளை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதனை ம.தி.மு.க. சார்பில் எதிர்க்கிறோம். இந்தியா என்பதை பாரத் என்று மாற்றவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இது நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும்.
அதேபோல் இந்தியாவின் தலைநகரான டெல்லியை வாரணாசிக்கு மாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சி செய்து வருகிறது. இது வரும் காலங்களில் அபாயகரமானதாக மாறும். இதனையும் அனைத்து மாநிலத்தவர்களும் சேர்ந்து முழு மூச்சுடன் எதிர்க்க வேண்டும் என்றார்.
- பா.ம.க.வை தி.மு.க.வில் சேர்க்க வேண்டாம் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை.
- விஜய்யுடன் ஒரு கட்சி கூட இதுவரை கூட்டணி சேரவில்லை.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அம்பேத்கர் மக்கள் கட்சியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இணைப்பு, தலித் இளைஞர்களின் அரசியல் எழுச்சி மற்றும் ஒன்று சேர் மாநாடு, 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு நிதியளிப்பு விழா என நடைபெற்ற முப்பெரும் விழா மற்றும் செஞ்சி தொகுதி மாவட்ட செயலாளர் அலுவலகம் திறப்பு விழா ஆகியவை செஞ்சி-விழுப்புரம் சாலையில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி கலந்து கொண்டார். அவர் வக்கீல் மழைமேணிபாண்டியன் மற்றும் அவரது தலைமையில் இணைந்த முக்கிய நிர்வாகிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சால்வை அணிவித்து வரவேற்றார். இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது :-
அம்பேத்கர் மக்கள் கட்சி வேற எந்த அரசியல் கட்சியிலும் இணையாமல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இணைந்தது அவர்களின் அம்பேத்கர் கொள்கை பற்றை காட்டுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உள்ளவர்கள் புயலே அடித்தாலும் என்னை விட்டு போகாமல் இருப்பதே எனக்கு வியப்பை தருகிறது.விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தவுடன் வி.சி.க.வினர் அங்கு போய்விட்டார்கள் என்று சொன்னார்கள்.
ஆனால் அதற்கு பிறகு தான் வி.சி.க. மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது. அம்பேத்கர் பெயரில் கட்சி நடத்துவது அவரது கொள்கைகளை பின்பற்றும் அமைப்புகளை பெயரளவிற்கு மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அங்கீகாரம் பெற்றது சாதாரணமான விஷயம் அல்ல. நடிகர் ரஜினிகாந்த் சொல்வது போல் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்னது போல் வி.சி.க. ஒரு எம்.எல்.ஏ.மற்றும் எம்.பி. பெற்றால் நூறு பேரை பெற்றதை போன்றது.
மேலும் திருமாவளவன் அ.தி.மு.க. கூட்டணி மற்றும் விஜய் கூட்டணியில் சேர முடியாதா? என்றால் முடியும். ஆனால் பா.ஜ.க. தமிழ்நாட்டில் கால் ஊன்ற கூடாது என்பதால் தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறோம். 5 சீட்டு 6 சீட்டுக்கு தி.மு.க.வுடன் இருக்கிறீர்கள் என்று நம்மை ஆத்திர மூட்டுவார்கள். இதற்கு எல்லாம் திருமாவளவன் அசைந்து கொடுக்கவில்லை. நாங்கள் கொள்கை கூட்டணியில் இருக்கிறோம். பா.ஜ.க. கட்சி தமிழ்நாட்டில் காலூன்ற பார்க்கிறது. அதற்கு அதிமுக கட்சியின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி காவிய கொடியை ஏற்ற பார்க்கிறார்கள்.அதனால் தான் பல வழிகளில் பெரியாரை குறி வைத்து விமர்சனம் செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு தலித் தலைவர்கள் தேசிய அளவில் இருந்த போதும் அம்பேத்கரை முன்னிறுத்தினார் பெரியார். எதனால் சனாதான தர்மத்தை அழிக்க வேண்டும் என்பது தான் இருவரின் நோக்கமும் அதுதான். அம்பேத்கர் பேசினதை தான் பெரியார் பேசினார். திமுகவை பலவீனபடுத்தினால் அது பெரியார் அரசியலை பலவீனம் படுத்தும் அரசியல் ஆகும்.
பா.ம.க.வை தி.மு.க.வில் சேர்க்க வேண்டாம் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. நான் ஒருபோதும் அப்படி நெருக்கடி கொடுக்கவில்லை. எங்கள் கட்சி நலன் காரணமாக தான் பா.ம.க. இடம் பெறும் கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என்று ஏற்கனவே சொல்லி விட்டோம். அதற்கு தர்மபுரி நாயக்கன் கொட்டாய் சம்பவமும் அதனைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட தலித் அல்லாத கூட்டணி என்ற சோசியல் என்ஜினியரிங் தான் முக்கிய காரணம். எங்களுக்கு எம்.எல்.ஏ., எம்.பி இல்லை என்றாலும் அம்பேத்கர் கொள்கையை கடைபிடிக்கிறோம். அந்த வகையில் வேற கட்சியில் இணையாமல் அம்பேத்கர் மக்கள் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்துள்ளதை வரவேற்கிறோம். தி.மு.க. கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும்.அதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி காரணமாக இருக்க வேண்டும்.
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது. இது எடப்பாடிக்கு தலைமையில் இடியே விழுந்து போல் இருக்கும். உரிமை தொகை 5 ஆயிரம் வழங்கியபோது அவருக்கு அடி வயிற்றில் இடி விழுந்தது போல் இருக்கும்.இப்போது தே.மு.தி.க . தி.மு.க. உடன் கூட்டணியில் இணைந்தது எடப்பாடிக்கு உச்சந்தலையில் இடி விழுந்தது போல் இருக்கும். விசில் காரங்க ஆட்சியில் பங்கு தர நாங்க ரெடி நீங்க ரெடியா என்று கேட்டார்கள். ஆட்சியில் பங்குக்கு நாங்க ரெடி அதை எங்களால் அமைத்துக் கொள்ள முடியும் ஆனால் உங்க கூட வர நாங்க ரெடி இல்லை என்று சொல்லி விட்டோம். விஜய்யுடன் ஒரு கட்சி கூட இதுவரை கூட்டணி சேரவில்லை. அதே போல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர கட்சிகள் தயக்கம் காட்டுகின்றனர்.
தி.மு.க. கூட்டணி வெற்றி பெற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும்.
இவ்வாறு தொல் திருமாவளவன் பேசினார்.
- தி.மு.க.வை பொறுத்தவரை இந்த முறை ஜெயிக்கப்போவதில்லை என்பது தெரிந்துவிட்டது.
- அ.தி.மு.க.- பா.ஜ.க. அலையில் சிக்கி தி.மு.க. காணாமல் போகும்.
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது பற்றி பா.ஜ.க. நிர்வாகி நடிகை குஷ்பு கூறியதாவது:-
கேப்டன் விஜயகாந்த் தன் வாழ்நாளில் அறிவாலய வாசலை கூட மிதிக்காதவர். யாராவது அழைக்கமாட்டார்களா என்று காத்திருந்து வேறு வழியில்லாமல் பிரேமலதா தி.மு.க.வுடன் இணைந்துள்ளார். அவரது இந்த முடிவை கேப்டனின் ஆன்மா மன்னிக்காது.
தி.மு.க.வை பொறுத்தவரை இந்த முறை ஜெயிக்கப்போவதில்லை என்பது தெரிந்துவிட்டது. எனவே யார் வந்தாலும் சேர்த்து கொண்டு கரையேற முயற்சிக்கிறது.
ஆனால் இந்த முறை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அ.தி.மு.க.- பா.ஜ.க. அலையில் சிக்கி தி.மு.க. காணாமல் போகும்.
அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வெளியே போய்விட்டால் என்ன செய்வது என்ற தவிப்பில் தே.மு.தி.க.வையும் இழுத்து போட்டுள்ளார்கள்.
காங்கிரசுக்கு சூடு, சொரணை, மானம் இருந்தால் தி.மு.க. கூட்டணியை விட்டு எப்போதோ வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு அது கிடையாது.
காமராஜர் காலத்துக்கு பிறகு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலக் கட்டத்திலும் தனியாக நிற்க முயற்சி எடுத்தது கிடையாது. கரைந்து போன அந்த கட்சி இனி எந்த காலத்திலும் கரைதேறாது என்றார்.
- தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்திருப்பது பெருமகிழ்வளிக்கிறது.
- அரசியல் பகைவர்களின் அடிவயிறு குமையும்.
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இன்று இணைந்தது. இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்திருப்பது பெருமகிழ்வளிக்கிறது. இக்கூட்டணி மேலும் வலிமை மிக்கதாக மாறியுள்ளது.
எம் உறுதியான வெற்றிக்கு ஏதுவாக அமையும். அரசியல் பகைவர்களின் அடிவயிறு குமையும்.
தி.மு.க. கூட்டணி உடையும் என்கிற அவர்களின் கனவில் மண் விழுந்தது.
கலைஞரின் கனவு நனவாகும் வகையில் பழம் நழுவி பாலில் விழுந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விஜயகாந்த் இருந்தவரை தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கவில்லை.
- மக்களை ஏமாற்றிய தி.மு.க.வை அவர்களுக்கு எதிராக வாக்களித்து மக்கள் ஏமாற்றுவார்கள்.
திருச்சி:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தே.மு.தி.க., தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளது தமிழக மக்களின் எண்ணத்துக்கு நேர்மாறாக உள்ளது. விஜயகாந்த் இருந்தவரை தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கவில்லை. இது மக்கள் மனநிலைக்கு ஏற்ற கூட்டணி இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் மக்கள் மத்தியில் ஆதரவு அதிகம் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும்.
ஜனநாயகத்தில் கூட்டணியை தேர்வு செய்வதற்கு ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில், அ.தி.மு.க. தலைமையிலான அணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது. தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்த பிரயோசனமான அறிவிப்பும் இல்லை.
மாநில சுயாட்சிக்காக சட்டத்தை திருத்துவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய ஆட்சியில் பல ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய போதெல்லாம் மாநில சுயாட்சி, இந்தி திணிப்பு போன்றவற்றுக்கு தி.மு.க. அழுத்தம் கொடுக்கவில்லை. மத்திய அரசில் நல்ல இலாகாக்களை பெறுவதில் தான் போராடி இருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பா.ஜ.க.வுடன் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் கூட சுயாட்சியை வலியுறுத்தவில்லை. பிரதமர்களிடம் அழுத்தமாக வலியுறுத்தியதாக தெரியவில்லை. த.மா.கா. குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதை நோக்கியே என் கவனம் உள்ளது. அதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தான் என் கவனமும், செயல்பாடும் உள்ளது.
ராஜ்ய சபை உறுப்பினர் குறித்து எதுவும் தற்போது நாங்கள் யோசிக்கவில்லை. த.மா.க.வை பொருத்தவரை கூட்டணியின் வெற்றியை உறுதி செய்து கொள்ள வேண்டும் எம்பது தான் முதல் பணி. வெற்றி தான் இலக்காக இருக்க வேண்டும். ஆட்சியில் பங்கு குறித்து சிந்திக்கவில்லை.
லாப நஷ்டங்களை தாண்டி கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் கட்சி த.மா.கா.தான். தி.மு.க. அரசின் மீது மக்கள் கோபமாக இருப்பதால், மாநில சுயாட்சி, கவர்னர் மீது புகார் என மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். பல்வேறு வரிகள் மூலம் சுமையை ஏற்றிய அரசு தி.மு.க. அரசு. மக்களை ஏமாற்றிய தி.மு.க.வை அவர்களுக்கு எதிராக வாக்களித்து மக்கள் ஏமாற்றுவார்கள்.
காங்கிரசுக்கு பல்வேறு நெருக்கடிகள் உள்ளது. முரண்பாடுகளின் மொத்த உருவம் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி தான். சுக்குநூறான பொருளை எப்படி ஒட்ட நினைத்தாலும் அது மீண்டும் சுக்குநுறாக தான் போகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. கோட்டை மேலும் பலம் பெற்றுள்ளது.
- ம.தி.மு.க. இந்த முறை தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும்.
மதுரையில் ம.தி.மு.க. பிரமுகரின் இல்ல திருமண விழாவில் கட்சி பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.
தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது. வரும் தேர்தல் கடுமையாக இருக்கும் என சில ஏடுகள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். நாங்கள் தி.மு.க.வோடு பேசும் போதுதான், எத்தனை தொகுதிகள் கேட்கிறோம் என தெரியவரும்.
அதுபற்றி முன்கூட்டியே சொல்ல முடியவில்லை. தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்டதால் 234 தொகுதிகளில் நிற்பேன் என கூறினேன். மைக்கேல்பட்டி மாணவி இறப்பை மத மாற்றம் என பா.ஜ.க. அபாண்டமான குற்றச்சாட்டை வைத்தது.
தற்போது சி.பி.ஐ. விசாரித்தது. மத மாற்றம் காரணம் இல்லை என கூறி உள்ளது. பா.ஜ.க. பழி சொன்னதற்காக அப்போது யாரெல்லாம் பழித்து பேசினார்களோ, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி, தித்திப்பான செய்தி. மகிழ்ச்சியோடு தே.மு.தி.க.வை வரவேற்கிறோம். தி.மு.க. அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற உள்ளது. தி.மு.க. கோட்டை மேலும் பலம் பெற்றுள்ளது. இதனால் எதிர்தரப்பு கலகலத்து கொண்டிருக்கிறது.
ம.தி.மு.க. இந்த முறை தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும். அ.தி.மு.க. குறித்து நான் பேசியதை முழுமையாக வெளியிடவில்லை. முழுமையாக பேசியதை பார்த்தால் உண்மையான அர்த்தம் தெரிந்திருக்கும்.
ம.தி.மு.க.வுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படுமா? என்ற கேள்விக்கு, மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு கிடையாது. தொண்டர்களுக்கு எதிர்ப்பார்ப்பு இருக்கலாம், அது இயற்கை.
இவ்வாறு அவர் பேசினார்.
- அனைவரும் தோழமை கட்சிகள் தான்.
- 234 தொகுதிகளும் தே.மு.தி.க.வின் களம்தான்.
தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தொடர்பாக கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அனைவரும் தோழமை கட்சிகள் தான்.
* பலரின் கற்பனைகளுக்கும் தே.மு.தி.க. இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
* சட்டசபை தேர்தலில் நானும் போட்டியிடுவேன்.
* 234 தொகுதிகளும் தே.மு.தி.க.வின் களம்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன்.
- மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது.
தமிழக பாஜக வெளியிட்டுள்ள பதிவில்,
தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது என பதிவிட்டுள்ளது.
- 2006-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. 8 சதவீத வாக்குகளை பெற்றது.
- 2011-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு தே.மு.தி.க. தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்துள்ளது.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் இதுவரை நடைபெற்று முடிந்த தேர்தல்களை விட முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் அதிமுக, திமுக-வை எதிர்த்து முதல்முறையாக களம் இறங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகம் தான்.
அரசியல் எதிரி, கொள்கை எதிரி என தி.மு.க., பா.ஜ.க. வை எதிர்த்து விஜய் களமிறங்கியுள்ளார். இதனால் விஜய் அரசியலில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.
இதனிடையே, மறைந்த விஜயகாந்தின் தே.மு.தி.க. எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்ற கேள்வியும் எழுந்து இருந்தது. இதனை சுற்றி பல தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இன்று இதற்கு பதலளிக்கும் விதமாக தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது.
கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் அரசியலில் கோலோச்சிய காலத்திலேயே கடந்த 2005-ம் ஆண்டு விஜயகாந்த் தே.மு.தி.க.வை தொடங்கினார்.
2006-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. 8 சதவீத வாக்குகளை பெற்றது. இதன் பின்னர் 2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க. எதிர்க்கட்சி அந்தஸ்தையும் எட்டி பிடித்தது.
2011-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு தே.மு.தி.க. தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று தோல்வியை தழுவியது. 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தினகரனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலிலும் தோல்வியை தழுவியது.
கடந்த 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று தேர்தலை சந்தித்த தே.மு.தி.க. அப்போதும் வெற்றி பெறவில்லை. இப்படி தொடர் தோல்வியை சந்தித்து வந்த தே.மு.தி.க. வருகிற சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் தே.மு.தி.க. வெற்றி கூட்டணியில் இடம் பெறும் என்று பிரேமலதா தொடர்ந்து கூறி வந்தார். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடனும் தே.மு.தி.க. சார்பில் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
தங்களது கூட்டணியில் தே.மு.தி.க.வை தக்க வைப்பதற்கு அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிகள் தொடர்ந்து முயற்சி செய்து வந்தன.
இந்த நிலையில் அதிரடி திருப்பமாக தே.மு.தி.க. இன்று தி.மு.க. கூட்டணியில் இணைந்தது. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு சென்றார். அங்கு வாசலில் அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகர் பாபு, கோவி.செழியன் ஆகியோர் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்.
அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிரேமலதா சந்தித்து பூங்கொத்து கொடுத்து தி.மு.க. கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டார். இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சந்திப்பின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன், பூச்சி முருகன், தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக முதல் முறையாக தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது. 2006-ம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வரும் தே.மு.தி.க. முதல் முறையாக தி.மு.க. உடன் கூட்டணி அமைத்துள்ளது.
இம்முடிவு தே.மு.தி.க.விற்கு எந்த அளவிற்கு கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!
- கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!
சென்னை :
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக முதல் முறையாக தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு சென்றார். அங்கு வாசலில் அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகர் பாபு, கோவி.செழியன் ஆகியோர் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிரேமலதா சந்தித்து பூங்கொத்து கொடுத்து தி.மு.க. கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டார். இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சந்திப்பின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன், பூச்சி முருகன், தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான 'கேப்டன்' விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!
சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.
கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!
திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்! என்று கூறியுள்ளார்.






