என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முதல்முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக - அண்ணா அறிவாலயத்தில் பிரேமலதா!
    X

    முதல்முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக - அண்ணா அறிவாலயத்தில் பிரேமலதா!

    • 2006-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. 8 சதவீத வாக்குகளை பெற்றது.
    • 2011-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு தே.மு.தி.க. தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்துள்ளது.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் இதுவரை நடைபெற்று முடிந்த தேர்தல்களை விட முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் அதிமுக, திமுக-வை எதிர்த்து முதல்முறையாக களம் இறங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகம் தான்.

    அரசியல் எதிரி, கொள்கை எதிரி என தி.மு.க., பா.ஜ.க. வை எதிர்த்து விஜய் களமிறங்கியுள்ளார். இதனால் விஜய் அரசியலில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.

    இதனிடையே, மறைந்த விஜயகாந்தின் தே.மு.தி.க. எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்ற கேள்வியும் எழுந்து இருந்தது. இதனை சுற்றி பல தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இன்று இதற்கு பதலளிக்கும் விதமாக தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது.

    கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் அரசியலில் கோலோச்சிய காலத்திலேயே கடந்த 2005-ம் ஆண்டு விஜயகாந்த் தே.மு.தி.க.வை தொடங்கினார்.

    2006-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. 8 சதவீத வாக்குகளை பெற்றது. இதன் பின்னர் 2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க. எதிர்க்கட்சி அந்தஸ்தையும் எட்டி பிடித்தது.

    2011-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு தே.மு.தி.க. தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று தோல்வியை தழுவியது. 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தினகரனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலிலும் தோல்வியை தழுவியது.

    கடந்த 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று தேர்தலை சந்தித்த தே.மு.தி.க. அப்போதும் வெற்றி பெறவில்லை. இப்படி தொடர் தோல்வியை சந்தித்து வந்த தே.மு.தி.க. வருகிற சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

    இதனால் தே.மு.தி.க. வெற்றி கூட்டணியில் இடம் பெறும் என்று பிரேமலதா தொடர்ந்து கூறி வந்தார். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடனும் தே.மு.தி.க. சார்பில் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

    தங்களது கூட்டணியில் தே.மு.தி.க.வை தக்க வைப்பதற்கு அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிகள் தொடர்ந்து முயற்சி செய்து வந்தன.

    இந்த நிலையில் அதிரடி திருப்பமாக தே.மு.தி.க. இன்று தி.மு.க. கூட்டணியில் இணைந்தது. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு சென்றார். அங்கு வாசலில் அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகர் பாபு, கோவி.செழியன் ஆகியோர் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்.

    அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிரேமலதா சந்தித்து பூங்கொத்து கொடுத்து தி.மு.க. கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டார். இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சந்திப்பின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன், பூச்சி முருகன், தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

    தமிழக அரசியலில் புதிய திருப்பமாக முதல் முறையாக தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது. 2006-ம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வரும் தே.மு.தி.க. முதல் முறையாக தி.மு.க. உடன் கூட்டணி அமைத்துள்ளது.

    இம்முடிவு தே.மு.தி.க.விற்கு எந்த அளவிற்கு கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Next Story
    ×