என் மலர்
நீங்கள் தேடியது "திமுக"
- சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
- வழக்கில் மொத்தம் 3 பிரிவுகளில் 2 ஆண்டுகள் மற்றும் 1 ஆண்டு மற்றும் 3 மாதம் சிறை விதிக்கப்பட்டது.
தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளராக செயல்பட்டு வருபவர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி. இவர் 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குறித்தும், நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்பு குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசி இருந்தார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அதுமட்டுமின்றி கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது.
இதைத்தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் ஜாமினில் வெளியே வந்தார். இந்த வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வழக்கில் மொத்தம் 3 பிரிவுகளில் 2 ஆண்டுகள் மற்றும் 1 ஆண்டு மற்றும் 3 மாதம் சிறை விதிக்கப்பட்டது. ஏக காலத்தில் இதை அனுபவிக்க வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆளுநர், குஷ்புவை ஆபாசமாக பேசிய வழக்கில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை சென்னை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. கடந்த பிப்ரவரி மாதம் எழும்பூர் நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.
- ரூ.100 கோடி மதிப்பில் சுமார் 15 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
- அரசு விழாவிற்கு பின்னர் பாளை கே.டி.சி. நகரில் உள்ள மாதா மாளிகையில் நடக்கும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
நெல்லை:
தி.மு.க. இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக இன்று மாலை காரில் நெல்லைக்கு வந்தடையும் உதயநிதி ஸ்டாலினுக்கு நெல்லை சங்கர் நகரில் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் திரண்டு தாரை தப்பட்டை, செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 4.50 மணிக்கு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.
அப்போது ரூ.100 கோடி மதிப்பில் சுமார் 15 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
பின்னர் கே.டி.சி.நகரில் அமைக்கப்பட்டுள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பிலான பெட்ரோல் பங்க், கூட்டுறவு துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள், விஜயாபதி விஸ்வாமித்திரர் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டு பணிகளை திறந்து வைக்கிறார்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் சுகுமார், ராபர்ட் புரூஸ் எம்.பி., நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., நெல்லை மேயர் ராம கிருஷ்ணன், துணை மேயர் ராஜூ, மாநகர தி.மு.க. பொறுப்பாளர்கள் (மேற்கு) சுப்பிரமணியன், (கிழக்கு) தினேஷ், கிறிஸ்தவ தேவாயலங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய தலைவர் விஜிலா சத்யா னந்த், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபாகரன் உள்ளிட் டோர் பங்கேற்கின்றனர்.
அரசு விழாவிற்கு பின்னர் பாளை கே.டி.சி. நகரில் உள்ள மாதா மாளிகையில் நடக்கும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதில் கட்சியின் 28 சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட திரளான அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி பல்வேறு ஆலோசனைகளை உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
தொடர்ந்து இரவு தென்காசி மாவட்டத்திற்கு சாலை மார்க்கமாக செல்கிறார். இரவில் குற்றாலத்தில் தங்கும் உதயநிதி ஸ்டாலின் நாளை(வெள்ளிக்கிழமை) காலை அங்கு நடைபெறும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அங்கிருந்து மாலையில் புறப்பட்டு வள்ளியூர் வரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆஸ்பத்திரியை திறந்து வைக்கிறார்.
அவரது வருகையையொட்டி நெல்லை மாநகர பகுதி முழுவதும் சாலையின் இருபுறங்களிலும் கட்சி கொடிகள், விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி நெல்லை மாநகர போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். நெல்லை மாநகரில் டிரோன் பறக்க தடை விதித்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நிகழ்ச்சிகளில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், பாளை வடக்கு ஒன்றிய செயலாளர் வேலன்குளம் கண்ணன், தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மனோஜ்குமார், வக்கீல் மாயா, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் அனுராதா ரவிமுருகன், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
- திமுக அரசின் "குற்றவாளிகள் கைது" நடவடிக்கையைக் கண்டு குற்றவாளிகள் யாரும் பயந்த மாதிரியே தெரியவில்லை!
- இப்படி முடிந்துவிட்டதை எல்லாம் திரும்பப் பெற ஒரே வழி, உங்களுடைய விடியா ஆட்சிக்கு முடிவு கட்டுவதே!
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்திற்குள், இருசக்கர வாகனங்களில் அரிவாள் மட்டும் பட்டாக்கத்திகளுடன் வந்த ஒன்பது மர்மநபர்கள், கண்ணால் கண்டவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இதே மாதிரியான தாக்குதல் 2 நாட்களுக்கு முன்பு தான் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் நடந்துள்ளது. அதன் ரத்த ஈரம் காய்வதற்குள் அதேபோன்றதொரு தாக்குதல் மீண்டும் நடக்கிறது என்றால், இவை சொல்லவரும் செய்தி என்ன?
சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதலமைச்சர், ஒரு கையாலாகாத வெறும் பொம்மை முதல்வராக இருக்கிறார் என்பது தானே?
திமுக அரசின் "குற்றவாளிகள் கைது" நடவடிக்கையைக் கண்டு குற்றவாளிகள் யாரும் பயந்த மாதிரியே தெரியவில்லை!
பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புகுந்து தைரியமாக இப்படி ஒரு கொலைவெறித் தாக்குதல் நடக்கிறது என்றால், இங்கே நடக்கும் #சமூக_அநீதி_திமுகஅரசு இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என்று தானே மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?
இப்படி மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதல்வர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? "முடிந்துவிட்டது" என தான் காட்டிய சைகை வைரல் ஆனதாக வெட்டிப் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.
ஆமாம் மு.க.ஸ்டாலின் அவர்களே....
உங்கள் ஆட்சியில்
சட்டம் ஒழுங்கு முடிந்துவிட்டது!
பெண்கள் பாதுகாப்பு முடிந்துவிட்டது!
சமூகநீதி முடிந்துவிட்டது!
மொத்தத்தில், தமிழக மக்களின் நிம்மதியே முடிந்துவிட்டது!
இப்படி முடிந்துவிட்டதை எல்லாம் திரும்பப் பெற ஒரே வழி, உங்களுடைய விடியா ஆட்சிக்கு முடிவு கட்டுவதே! அதை மிக விரைவில் தமிழக மக்கள் "சிறப்பாக செய்ய" காத்திருக்கிறார்கள்!
இடைக்காட்டூர் கிராமத்தில் அரங்கேறிய கொலைவெறித் தாக்குதலில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.
- வாழையடி வாழையாக இந்த நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.
- மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றதில் நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்.
தஞ்சாவூா்:
தஞ்சையில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-துர்கா ஸ்டாலின் ஆகியோர் நடத்தி வைத்தனர்.
பின்னர் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :-
இது "எங்கள் குடும்பம்" என்று சொல்வதா, "கழகக் குடும்பம்" என்று சொல்வதா, ஒட்டுமொத்தமாகச் சொன்னால் "நமது குடும்பம்" என்ற நிலையிலேதான் இந்த மணவிழா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கக்கூடிய அன்பில் கழகப் பணி இந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய உங்களுக்கு நான் அதிகம் சொல்லவேண்டிய அவசியமில்லை. தலைவர் கலைஞரிடத்தில் எந்த அளவிற்கு நட்புக் கொண்டிருந்தார். தலைவர் கலைஞருக்கு எந்த அளவிற்குத் துணையாக இருந்தார். திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையிலே கழகத்தை உருவாக்குவதற்கு, கழகம் இன்றைக்கு கம்பீரமாக ஓங்கி நிற்பதற்கு காரணகர்த்தாக்களில் ஒருவராக இருந்த அன்பில் கடைசி வரையிலே கழகத்திற்கு, தலைவர் கலைஞருக்குப் பக்கபலமாக இருந்தவர்.
அதைத் தொடர்ந்து அவருடைய மகன், என்னுடைய ஆருயிர் நண்பன் அன்பில் பொய்யாமொழி எனக்கு எந்த அளவிற்குப் பக்கபலமாக இருந்தார் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆகவே ஒரு உற்ற நண்பனாக மட்டுமல்ல, என்னுடைய வாழ்விலே ஏற்பட்டிருக்கக்கூடிய பல்வேறு வளர்ச்சிக்குக் காரணகர்த்தாக்களில் ஒருவராக இருந்தவர் நம்முடைய அன்பில் பொய்யாமொழி.
ஆகவே இப்படித் தொடர்ந்தது அந்த உறவு. அதற்குப் பின்னால் இங்கே வரவேற்புரையாற்றிய உதயநிதி குறிப்பிட்டதைப் போல, அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இன்றைக்கு எங்களுடைய குடும்பத்திலே, குறிப்பாக உதயநிதியிடத்திலே எந்த அளவுக்கு நட்போடு பழகி, அவர் இன்றைக்கு வளர்ந்து சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்று, அமைச்சராகவும் பொறுப்பேற்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று, ஒரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருப்பவர்தான் நம்முடைய அன்பில் மகேஷ் பொய்யாமொழி .
சட்டமன்றத்தில் உரையாற்றினாலும் சரி, பல்வேறு நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்டு உரையாற்றினாலும் சரி, எந்தப் புள்ளிவிவரத்தையும் கையிலே வைத்துக் கொள்ளாமல் எதையும் படபடவென்று கம்ப்யூட்டரைப் போல பேசக்கூடிய ஆற்றலைப் பெற்றவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அவரைப் பார்த்து எல்லோரும் பாராட்டுகிற போது அவருடைய தந்தை என்னுடைய அருமை நண்பர் பொய்யாமொழி எந்த அளவுக்கு சந்தோஷப்படுவாரோ, அதைவிட அதிகமாக நான் சந்தோஷப்பட்டிருக்கிறேன். இப்போதும் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
ஆகவே இது இப்படித் தொடர்ந்து இன்னும் அன்பிலோடும் முடியவில்லை, தலைவர் கலைஞரோடும் முடியவில்லை, என்னோடும் முடியாது. நம்முடைய அன்பில் பொய்யாமொழியோடு முடியாது. அதேபோல நம்முடைய உதயநிதி, மகேஷோடு முடியப் போவதில்லை. உதயநிதியினுடைய மகன் இன்பனாக இருந்தாலும் சரி, மகேஷினுடைய மகன் இனியனாக இருந்தாலும் சரி, அவர்களுடைய நட்பும் இன்றைக்குத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஆகவே வாழையடி வாழையாக இந்த நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு எந்தச் சூழ்நிலையில் வந்திருக்கிறேன் என்பதும் உங்களுக்குத் தெரியும். நேற்று இரவு வரை கூட்டணிக் கட்சியோடு பேசி ஒரு ஒப்பந்தத்தை முடித்துவிட்டுதான், அதுவும் வெற்றிகரமாக முடித்து எல்லோரும் பாராட்டக்கூடிய வகையிலே முடித்துவிட்டுதான் இன்றைக்கு வந்திருக்கிறேன்.
இன்றைக்கு நீங்கள் எல்லாம் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பார்த்திருக்கலாம். கூட்டணி ஒப்பந்தத்தை முடித்துவிட்டு காரில் ஏறுகிற போது கையை எடுத்து இப்படி ஒரு சொல். அந்த ஆக்ஷனோடு நான் ஏறிய காட்சியைப் பார்த்திருப்பீர்கள். அது நான் திட்டமிட்டு செய்தது அல்ல. ஏதோ காரில் ஏற வருகிற போது அங்கே எதிரே நின்று கொண்டிருக்கக்கூடிய பத்திரிகையாளர்கள் எல்லாம் என்னை பார்த்து "என்ன முடிந்துவிட்டதா, முடிந்துவிட்டதா?" என்று கேட்டார்கள். "முடிந்துவிட்டது" என்று சொன்னேன், அவ்வளவுதான். அது இன்றைக்கு பெரிய வைரலாகி "எல்லாம் முடிந்துவிட்டது, ஆல் ஃபினிஷ்டு" அப்படின்னு சொல்ற மாதிரி இன்றைக்கு அந்த காட்சிகள் எல்லாம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதையெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
ஆகவே அந்த மகிழ்ச்சியோடுதான் வந்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, இந்தத் திருமணத்தை முடித்துவிட்டு ராஜ்யசபாவிற்கு வேட்பாளர்களாக இரண்டு பேரை அறிவித்திருக்கிறோம். கூட்டணிக் கட்சிக்கு இரண்டு பேருக்குக் கொடுத்திருக்கிறோம். இரண்டு இடங்களைக் கொடுத்திருக்கிறோம். அந்த நான்கு பேரும் சென்னையில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இருக்கிறார்கள். இன்றுதான் கடைசி நாள். நான் வந்தே தீர வேண்டும் என்று அவர்கள் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். நாம் வழக்கமாகச் செல்வது உண்டு.
ஆகவே இதை முடிச்சுட்டு உடனடியாக நான் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கின்ற காரணத்தினால்தான் வேகவேகமாக வந்து வேகவேகமாகத் திருமணத்தை முடித்து வைத்துவிட்டு நான் செல்லவிருக்கிறேன். இன்றைக்கு அந்த இல்லத்தில் நடைபெறக்கூடிய இந்த மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றதில் நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன். ஆகவே பொய்யாமொழி இருந்து இந்த விழாவை நடத்துகிறபோது எந்த அளவுக்கு மகிழ்ச்சியடைவாரோ, அதைவிடப் பன்மடங்கு மகிழ்ச்சியை நான் அடைந்து கொண்டிருக்கிறேன் என்பதை மாத்திரம் எடுத்துச் சொல்லி, மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்கள் பல்லாண்டுக் காலம் எல்லா நலமும் பெற்றுச் சிறப்போடு வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தி.மு.க.-2, காங்கிரஸ்-1, தே.மு.தி.க.-1 இடங்களில் போட்டியிடுகிறது.
- அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க.-1, பா.ம.க.-1 போட்டியிடுகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். தி.மு.க. கூட்டணியில் மொத்தமுள்ள 4 இடங்களில் தி.மு.க.-2, காங்கிரஸ்-1, தே.மு.தி.க.-1 இடங்களில் போட்டியிடுகிறது.
அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க.-1, பா.ம.க.-1 ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தீவிரம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
அதன்படி, திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
திமுக கூட்டணி கட்சி தலைவரகளும் வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
- கழகம் என்றாலே குடும்பம்தானே…! அதுதான் நமக்குப் பெருமை.
- நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் போல எனக்குப் பேசவோ, எழுதவோ வராது.
தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள மடலில்,
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் திருச்சி மாநாட்டு விழா அழைப்பு மடல்.
தீரர் கோட்டமாம் திருச்சியில் திராவிட அரசியல் பேரியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 'ஸ்டாடலின் தொடரட்டும் - தமிழ்நாடு வெல்லட்டும்' என்கிற தேர்தல் சிறப்பு மாபெரும் கழக நிர்வாகிகள் மாநாட்டில் உடன்பிறப்புகளாம் உங்களைக் காணும் ஆவலுடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். தலைமைக் கழகம் தொடங்கி, கிளைக்கழகங்கள் வரையிலான, கழகத்தின் அனைத்து அணிகளையும் உள்ளடக்கிய ஏறத்தாழ பத்து இலட்சம் நிர்வாகிகள் கூடுகின்ற பெருவிழாவாகத் திருச்சி சிறுகனூரில் மார்ச் 9 அன்று கழக மாநாடு நடைபெறவிருக்கிறது.
கழகம் என்றாலே குடும்பம்தானே…! அதுதான் நமக்குப் பெருமை. நம் அரசியல் எதிரிகளுக்கோ அவர்களின் வயிறு எரியச் செய்யும் பொறாமை. என்ன செய்வது? பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் நம்மை ஒருதாய் மக்கள் என்ற உணர்வுடனும், திராவிட முன்னேற்றக் கழகத்தைக் குடும்பப் பாசத்துடனும் வளர்த்துவிட்டார்கள். 75 ஆண்டுகளைக் கடந்த இந்தப் பெருங்குடும்பத்தின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ஓரிடத்தில் ஒன்றுகூடி, திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம் என உறுதியேற்று, களம் காணும் பட்டாளமாக அணிவகுக்கும்போது, எதிரிகள் நடுங்குவது இயல்புதானே!
உங்களில் ஒருவனான என்னைப் பொறுத்தவரை, நான் எதிரிகளின் செயல்பாடுகளைக் பற்றிக் கவலைப்படுபவனல்ல. நம் உயிர்மூச்சான திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தின் வளர்ச்சி, அதன் ஆட்சிக்காலத் திட்டங்களால் தமிழ்நாட்டின் முன்னேற்றம், தமிழர்கள் ஒவ்வொருவரும் அடைய வேண்டிய உயர்வு இவை பற்றி சிந்தித்து, அதற்காக என் சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருப்பவன். என்னைப் போலவே, கழக உடன்பிறப்புகளையும் உழைக்கச் செய்பவன்.
உழைப்பு வீண் போகாமல் அவற்றை மொத்தமாக அறுவடை செய்ய வேண்டிய காலம்தான், 2026 தேர்தல் களம். அந்தக் களத்திற்கு நம்மை ஆயத்தமாக்கிக் கொள்ள திருச்சி சிறுகனூரில் ஒன்றாகக் கூடுகிறோம்.
திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற கொள்கைக் குடும்பத்தின் தலைவனாக இருக்கிற எனக்கு, கிளைக்கழகங்கள் வரையிலான நிர்வாகிகளை மாநாட்டிற்கு வருகை தருமாறு அன்புடன் அழைக்க வேண்டிய கடமை இருக்கிறது. கடந்த பிப்ரவரி 26-ஆம் நாள், மாநாட்டில் பங்கேற்கும் நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்புக் கடிதத்தை அனுப்பியுள்ளேன்.
"அன்பு உடன்பிறப்பே… தீரர்கள் கோட்டமாம் திருச்சியில், வருகின்ற மார்ச் 9-ஆம் நாளன்று பத்து இலட்சம் கழக நிர்வாகிகள் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில் உங்களை எல்லாம் காண்பதற்கு ஆவலாய் உள்ளேன். நமது திராவிட மாடல் ஆட்சியில் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்தியுள்ளோம். நமது அரசு இதனை சாதித்துக் காட்டியதற்கு நீங்கள்தான் அடித்தளம். உங்களின் ஆதரவும் உழைப்பும் கொண்டு நம் பயணத்தைத் தொடர்ந்திடுவோம். அதற்குத் துவக்கமாய் தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! திரண்டு வா உடன்பிறப்பே!" என்று உள்ளன்புடன் எழுதிய அந்தக் கடிதம் உடன்பிறப்புகளாம் உங்கள் கைகளில் தவழ்வதை மனக்கண்களால் காண்கிறேன்.
திருச்சியில் மாநாடு என்றாலே கழகத்தின் வரலாற்றில் திருப்புமுனைதான். கழக மாநாடு என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருபவர் முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என். நேருதான். விழிகள் விரிந்து வியந்திடும் வகையில் திருச்சியில் கே.என். நேரு நடத்திக் காட்டியுள்ள மாநில மாநாடுகள், மண்டல மாநாடுகள், சிறப்பு மாநாடுகள் ஒவ்வொன்றும் கழக வரலாற்று அத்தியாயத்தில் அழுத்தமாகப் பதிந்துள்ளன. 'நேரு என்றால் மாநாடு, மாநாடு என்றால் நேரு' என்று நான் எப்போதும் கூறுவதற்கேற்ப, இப்போதும் மாநாட்டுப் பணிகளை மிகச் சிறப்பாக அவர் மேற்கொண்டு வருகிறார். முத்தமிழறிஞர் கலைஞர் இருந்திருந்தால், 'நேரு என்றால் மேரு. உடன்பிறப்பே.. திருச்சியை நோக்கி முன்னேறு' என்று அழைத்திருப்பார்.
நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் போல எனக்குப் பேசவோ, எழுதவோ வராது. அவரிடம் நான் கற்றுக்கொண்டது உழைப்பு. அந்த உழைப்பு இந்த இயக்கத்தைக் கட்டிக்காப்பதற்கான உழைப்பு. இந்திய அரசியல் வரலாற்றில், கூட்டணிக் கட்சிகளைக் கொள்கைத் தோழமைகளாக அரவணைத்து, இலட்சிய நோக்கத்துடன் பயணிக்கினற வாய்ப்பு, உங்களால் கழகத்தின் தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டவனான உங்களில் ஒருவனான எனக்குக் கிடைத்திருக்கிறது. நம் அன்புத்தலைவர் கலைஞர் அவர்களுக்குக் கூட காலம் இந்த வாய்ப்பை வழங்காத நிலையில், அவரது எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக உருவான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, 2020 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், பல இடைத்தேர்தல்கள், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் எனத் தொடர்வது மட்டுமல்ல, புதிதாக மேலும் பல கட்சிகள் நம் கூட்டணியில் இணைந்து கூடுதல் வலிமையைப் பெற்றிருக்கிறோம்.
அதனால்தான், அரசியல் எதிரிகள் தங்கள் கட்சியின் வலிமை மீது நம்பிக்கை இல்லாமல், நம்முடைய கூட்டணி உடையாதா என்று ஏங்கிக் கிடந்தார்கள். நம்மிடமிருந்து அவர்கள் வெளியேறி விடுவார்கள் என்றும், இவர்கள் பிரிந்து போகப் போகிறார்கள் என்றும் கனவில் கணக்கு போட்டு கற்பனைக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஆஃபர் கொடுத்தேனும் நம் கூட்டணியை உடைத்திடலாம் என முயற்சி செய்தார்கள். அவர்களின் கற்பனையையும் கனவுகளையும் இரசித்தபடி நாம் நம்முடைய பணியை மேற்கொண்டோம்.
மதவெறி அரசியலுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை, மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்கிற கொள்கை உணர்வுமிக்க நம் தோழமைக் கட்சியினருடன் தொடர்ந்து இணக்கமாகவும் ஜனநாயகத் தன்மையுடனும் ஆலோசனைகள் நடத்தி, நம் பயணத்தில் இணைந்திட விரும்பிய கட்சிகளுக்கும் இடமளித்து, உறுதியான வெற்றிக்கான கூட்டணியை உங்களில் ஒருவனான நான் தலைமையேற்றுத் தொடர்கிறேன்.
உடன்பிறப்புகளாம் உங்களின் கடுமையான உழைப்பாலும், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவினாலும் 10 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, 2021-ஆம் ஆண்டு உங்களில் ஒருவனான என் தலைமையில் அமைந்த தி.மு.கழகத்தின் திராவிட மாடல் ஆட்சி கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்களாலும், அதனால் தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் அடைந்துள்ள பலன்களினாலும், நான் மட்டுமல்ல, நாம் ஒவ்வொருவரும் பெருமிதத்துடனும் நம்பிக்கையுடனும் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் மக்களைச் சந்திக்க முடிகிறது.
2021-ஆம் ஆண்டு மே 2-ஆம் நாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, கழகத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில், நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் ஓய்விடத்தில் வெற்றிச் சான்றிதழைக் காணிக்கையாக்கிய பிறகு, செய்தியாளர்கள் சூழ்ந்திருந்த நிலையில் அவர்கள் மூலமாகத் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளித்த உறுதியை அன்பு உடன்பிறப்புகளான நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
"எங்களுக்கு வாக்களித்தவர்கள் சரியாகத்தான் வாக்களித்திருக்கிறோம் என்று மகிழ்ச்சி அடையக்கூடிய வகையிலும், வாக்களிக்காதவர்கள் இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று நினைக்கக்கூடிய அளவிலும் தி.மு.க.வின் ஆட்சி இருக்கும்" என்பதுதான் உங்களில் ஒருவனான நான் வழங்கிய உறுதி. அதனை நிறைவேற்றும் வகையில் திராவிட மாடல் அரசு, எல்லாருக்கும் எல்லாம் என்ற இலட்சியத்துடன், தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம் என்ற உறுதியுடன் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. திராவிட மாடல் ஆட்சியினால் பயன் பெறாத குடும்பங்களே தமிழ்நாட்டில் இல்லை என்கிற வகையில் சாதனைத் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், கலைஞர் கனவு இல்லம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48, இல்லம் தேடிக் கல்வி, தோழி விடுதி, தாயுமானவர் திட்டம், அன்புக் கரங்கள், அன்புச் சோலை, உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், பன்னாட்டு நிறுவன முதலீடுகளுடன் பரவலாக்கப்பட்ட தொழில் வளர்ச்சி, இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி என்று தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக, முன்னுதாரண மாநிலமாக, இந்தியாவின் பிற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய மாநிலமாக, இந்திய ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே மறுக்க முடியாத மாநிலமாக உருவாக்கியிருக்கிறோம். திராவிட மாடல் அரசின் திட்டங்களை நாம் பட்டியலிட்டுச் சொல்வதுடன், திட்டங்களால் பயன்பெற்ற மக்கள் அவற்றைப் பெருமையுடன் சொல்கின்ற நிலையைத் தமிழ்நாடு அடைந்திருக்கிறது.
5 ஆண்டுகால ஆட்சியின் நிறைவில், ஓரணியில் தமிழ்நாடு, வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆகிய பெயர்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று மக்களின் ஆதரவைத் திரட்டுகின்ற பணியை எவ்வித எதிர்ப்புமின்றிக் கழக உடன்பிறப்புகளால் மேற்கொள்ள முடிகிறது என்பதே திராவிட மாடல் நல்லாட்சிக்கான சாட்சியாகும்.
மண்டலவாரியாக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடுகள், மகளிரணியின் வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடுகள், BLA2, BLC, BDA பயிற்சி மாநாடுகள் எனத் தேர்தலை முன்னிட்டு நாம் நடத்திக்காட்டிய ஒவ்வொரு மாநாட்டிலும் இலட்சத்துக்கும் மேற்பட்ட உடன்பிறப்புகள் கருப்பு சிவப்பு படையாய்க் திரண்டு வந்து கலந்துகொண்டனர்.
இவற்றைத் தொடர்ந்து, மார்ச் 9-ஆம் நாள் 'ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்' என்ற பெயரிலான கழக நிர்வாகிகள் சந்திப்பு பிரம்மாண்ட மாநாடு நடைபெறவிருக்கிற திருச்சி சிறுகனூரில்தான், 5 ஆண்டுகளுக்கு முன் 2021-ஆம் ஆண்டு தேர்தல் சிறப்பு மாநாடு நடைபெற்றது. அப்போது உடன்பிறப்புகளான உங்களிடமும் பொதுமக்களிடமும் நான் வைத்த கோரிக்கை, 'தி.மு.கழகத்திற்கு 10 ஆண்டுகள் தொடர்ச்சியான ஆள்கின்ற வாய்ப்பைத் தாருங்கள். அ.தி.மு.க. ஆட்சியில் 50 ஆண்டுகால அளவுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ள தமிழ்நாட்டை மீட்டு உயர்த்திக் காட்டுவோம்' என்பதுதான்.
கழக உடன்பிறப்புளான உங்களின் உழைப்பாலும், மக்களின் ஆதரவாலும் 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டை மீட்டெடுத்து, வளர்ச்சிப் பாதையில் பயணிக்கச் செய்திருக்கிறது. தொடர் பயணத்திற்கும், தடையில்லா வளர்ச்சிக்கும், ஒவ்வொரு துறையிலும் உலகத் தரத்திலான முன்னேற்றத்திற்கும், நான் அப்போது கேட்டது போல, மேலும் 5 ஆண்டுகால ஆட்சியை நாம் அமைத்திட வேண்டும். திராவிட மாடல் 2.0 அரசு அமைந்திட வேண்டும்.
தீரர் கோட்டமாம் திருச்சியில் கூடுவோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்திட உறுதியேற்றுக் களம் காண்போம்!
திருச்சிக்குத் திரண்டு வா உடன்பிறப்பே! உன் திருமுகம் காண ஆவலாய்க் காத்திருக்கிறேன்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நெல்லை மாவட்டத்தில் இரட்டைக் கொலை என சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ளது.
- தமிழ்நாடே கஞ்சா, போதைப் பொருட்கள், அடாவடித்தனங்களால் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
சென்னை:
அரசு பணத்தை வாரி, வாரி இறைத்தாலும் தமிழ்நாட்டில் தி.மு.க. படுதோல்வி அடையும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின், வெளியே வந்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் குழப்பமான சூழ்நிலை உள்ளது. நெருப்பில்லாமல் புகையாது. கத்தரிக்காய் மலிந்தால் கடைத்தெருவுக்கு வரும். காங்கிரஸ்-தி.மு.க. உறவு விரைவில் வெட்டா வெளிச்சம் ஆகிவிடும்.
அவர்களுக்குள் இருக்கும் நெருப்பை யார் அணைத்தாலும் சரி, அணைத்துக் கொண்டாலும் சரி எங்களை பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் மீண்டும் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்று, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி மலரும்.
தி.மு.க. படுதோல்வியை தமிழ்நாட்டில் அடைய போகிறது. அரசு பணத்தை வாரி வாரி இறைக்கிறார்கள். அப்படி இறைத்தாலும் வெற்றி பெற முடியாது. நெல்லை மாவட்டத்தில் இரட்டைக் கொலை என சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ளது. தமிழ்நாடே கஞ்சா, போதைப் பொருட்கள், அடாவடித்தனங்களால் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இருப்பதால் சிறுபான்மை வாக்கு சிதறும் என்று இருந்த காலகட்டம் அப்போது வேறு. இப்போது வேறு. சிறுபான்மை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இந்த ஆட்சியில் ஒரு நன்மையும் அவர்கள் பெறவில்லை. அவர்களுக்கு தேனும், பாலும் ஆறாக இந்த ஆட்சியில் ஓடுகிறதா? சமூக, கல்வி, பொருளாதாரத்தில் இந்த 5 ஆண்டு காலத்தில் சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதா?. அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சொல்ல சொல்லுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கருணாநிதி வழியில் நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு தமிழ் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களைச் செய்து வருகிறது.
- தமிழினுடைய தொன்மையை வெளி உலகிற்குச் சொல்கிற வகையிலே வேர்ச்சொல் ஒப்பீட்டு ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
தஞ்சாவூா்:
தஞ்சாவூா் கரந்தை தமிழ் சங்கத்தில் இன்று தமிழ் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவசிலை மற்றும் தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவர் செயலாளர் ராமநாதன் உருவ சிலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
வரலாற்றுச் சிறப்புமிக்க கரந்தை தமிழ் சங்கத்தினுடைய வளாகத்திலே கருணாநிதி சிலையையும், சங்கத்துடைய முன்னாள் தலைவர் செம்மொழிவேலர் ராமநாதனுடைய சிலையையும் உங்களுடைய முன்னிலையிலே திறந்து வைத்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நிகழ்ச்சியினுடைய தொடக்கத்திலே தமிழ்த்தாய் வாழ்த்தை நாம் பாடி இருக்கின்றோம். தமிழ்த்தாய் வாழ்த்து முதன்முதலாகப் பாடப்பட்டது இந்தக் கரந்தை தமிழ்ச் சங்கத்தில்தான். அதன் பிறகு 1970-களில் கருணாநிதி தமிழ்த்தாய் வாழ்த்தைத் தமிழ்நாடு அரசினுடைய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்தார்.
இது வெறும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தான். இதற்கு எழுந்து நின்று நம்முடைய மரியாதை செலுத்தத் தேவையில்லை என்று ஒரு கூட்டம் சொல்கிறது. இன்னும் சில பேர் சட்டப்பேரவையிலே இந்த பாட்டையே பாடக்கூடாது அப்படின்னு ஒரு கூட்டம் சொல்கிறது. ஆனா இந்த பாடல் தமிழ்நாடு அரசினுடைய ஸ்டேட் ஆந்தம் மாநிலப் பாடல் என்பதை அறிவித்து அதைப் பாடும் பொழுது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று அரசாணையைப் போட்டவர் கருணாநிதி தான். இன்றைக்கு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் எப்படியாவது மீண்டும் தமிழ்நாட்டிற்குள்ளே இந்தியை திணிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டினுடைய கல்வி நிதி ரூ.3,500 கோடியை கொடுக்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. புதிய கல்விக் கொள்கை, மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் அந்த 3,500 கோடியை கொடுப்போம் என்று மத்திய அரசு கூறுகிறது.
ஆனா நம்முடைய முதலமைச்சர் 3,500 கோடி இல்லை. 10,000 கோடி கொடுத்தாலும் இந்தியையும் சமஸ்கிருதத்திற்கும் தமிழ்நாட்டில் எந்த நேரத்திற்கும் இடம் கிடையாது என்று உறுதியாக கூறிவிட்டார்.
கருணாநிதி வழியில் நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு தமிழ் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களைச் செய்து வருகிறது.
தமிழினுடைய தொன்மையை வெளி உலகிற்குச் சொல்கிற வகையிலே வேர்ச்சொல் ஒப்பீட்டு ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது . தமிழறிஞர்களுக்கு விருதுகளும், தேசிய சர்வதேச விருதுகளைப் பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடுகளும் நம்முடைய முதலமைச்சர் தொடர்ந்து வழங்கி வருகிறார். தமிழினுடைய அரிய நூல்கள் எல்லாமே இன்றைக்கு டிஜிட்டல் வடிவில் மாற்றப்படுகிறது. தமிழில் இருக்கக்கூடிய சிறந்த நூல்கள் உலகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. அதேபோல் உலகின் சிறந்த நூல்களை எல்லாம் தமிழில் கொண்டுவர முயற்சிகளை நம்முடைய அரசு எடுத்து வருகின்றது.
ஆனால் மத்திய அரசு சமஸ்கிருதத்தை வளர்க்கிறதில் மட்டும்தான் அக்கறையைக் காட்டி வருகின்றது. கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருத வளர்ச்சிக்காக மட்டும் மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ.2,500 கோடி. ஆனால் நம்முடைய தமிழ் மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒதுக்கிய தொகை வெறும் 147 கோடி ரூபாய்.
தமிழ் தமிழ்ன்னு சொல்லி இன்றைக்கு மக்களை ஏமாற்றும் வேலையை மத்திய அரசு செய்து வருகின்றது. அந்த ஏமாற்று வேலைகளை எல்லாம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். உண்மையாகத் தமிழுக்காக உழைப்பவர்கள் யார்? போலித்தனமாக நடிப்பவர்கள் யார்? என்பதை மக்களுக்கு நாம் வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டும். எனவே இந்த முக்கியமான நேரத்தில் நீங்கள் அத்தனை பேரும் நம்முடைய முதலமைச்சருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அன்னைத் தமிழைப் காப்போம், ஆதிக்க மொழித் திணிப்பை என்றும் வீழ்த்துவோம் என்று பேசினார்.
- தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு 1 மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- மணிப்பூர், நாகலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக செயல்பட்டவர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். தி.மு.க. கூட்டணியில் மொத்தமுள்ள 4 இடங்களில் தி.மு.க.-2, காங்கிரஸ்-1, தே.மு.தி.க.-1 இடங்களில் போட்டியிடுகிறது.
இதனிடையே காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருச்சியை பூர்வீகமாக கொண்ட கிறிஸ்டோபர் மணிப்பூர், நாகலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் தேமுதிகவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- தேர்தல் மார்.16 நடைபெற உள்ளது.
தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாகும் 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் திமுக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி திமுக தரப்பில் இருந்து திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"2026 மார்ச் 16 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கான 4 இடங்களில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள 2 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக திருச்சி சிவா, எம்.ஏ., பி.எல்., பேராசிரியர். ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எம்.இ.எம்.பி, எம்.சி.ஏ,எம்.எல், பி.எச்டி, ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்படுகிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தரப்பில் சுதீஷ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தரப்பில் யார் போட்டியிடுவார் என்பது இன்றிரவு அல்லது நாளை காலைக்குள் தெரியவரும்.
- காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் அதிக இடங்களை கோரியது.
- திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி ஏற்பட்டது,
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. பல கட்டங்களாக நடைபெற்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இன்று இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவை இடங்களும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தவெகவை காரணம் காட்டி காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் அதிக இடங்களை கோரியது. இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி ஏற்பட்டது,
தொகுதிப் பங்கீட்டில் நிலவி வந்த இழுபறியைத் தீர்க்க, காங்கிரஸ் மேலிடம் சார்பில் மூத்த தலைவர் ப. சிதம்பரம் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து கூட்டணியில் இணக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் சற்றுநேரத்திற்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஆர். பாலு, கனிமொழி, செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் கூடினர். இந்நிலையில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆட்சியில் பங்கு என்று கூறி திமுக கூட்டணி கட்சிகளுக்கு தவெக தூது விட்டது. விசிக இந்த வலையில் முதலில் விழும் என்று எதிர்பார்த்த தவெகவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து திமுக கூட்டணி நாளுக்கு நாள் வலுவானது. தேமுதிகவும் திமுக கூட்டணியில் இணைந்தது.
இதனிடையே காங்கிரஸ் கட்சியுடன் தவெக மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி பங்கீடு இறுதி செய்ததால் தவெகவிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. திமுக கூட்டணியும் அதிமுக கூட்டணியும் உறுதியாகியுள்ளதால் நாம் தமிழர் கட்சி போல தனித்து போட்டியிட வேண்டிய நிலைமைக்கு தவெக தள்ளப்பட்டுள்ளது.
- காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- தவெக உடன் கூட்டணி இல்லை என்பது தெளிவானது.
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. பல கட்டங்களாக நடைபெற்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இன்று இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவை இடங்களும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொகுதிப் பங்கீட்டில் நிலவி வந்த இழுபறியைத் தீர்க்க, காங்கிரஸ் மேலிடம் சார்பில் மூத்த தலைவர் ப. சிதம்பரம் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து கூட்டணியில் இணக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று திமுக - காங்கிரஸ் கூட்டணி கையெழுத்தாகிறது என காலையிலிருந்தே தகவல்கள் வெளியாகி வந்தது.
இந்நிலையில் சற்றுநேரத்திற்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஆர். பாலு, கனிமொழி, செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் கூடினர். இந்நிலையில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. நாளை முதலமைச்சர் முன்னிலையில் காங்கிரஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






