என் மலர்
நீங்கள் தேடியது "ஜெயக்குமார்"
- துணை நின்றவர்களை ரகுபதி கடித்துக் குதறி அழித்த வரலாறு அனைவருக்கும் தெரியும்.
- வளர்த்த எஜமானரையே கடித்துத் குதறுவதுபோல் இந்த நபர் செயல்பட்டதை யாரும் மறக்கவில்லை.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'யோக்கியன் வருகிறான், சொம்பை எடுத்து உள்ளே வை' என்ற ஒரு கிராம முதுமொழிக்கேற்ப, தனக்கு அரசியல் வாழ்வளித்த புரட்சித் தலைவி அம்மாவின் முதுகில் குத்திவிட்டு 'கோபாலபுர கொத்தடிமைகளில்' ஒருவராகத் திகழ்ந்து வரும் திரு. எஸ். ரகுபதி என்ற திமுக மந்திரி, முதுகில் குத்துவது பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார்.
அரசியலின் ஏணிப் படிகளில், இந்த நாலாந்தரப் பேர்வழி ரகுபதி ஏறுவதற்கு துணை நின்றவர்களை கடித்துக் குதறி அழித்த வரலாறு அனைவருக்கும் தெரியும். கழகப் பொதுச் செயலாளர் `புரட்சித் தமிழர்' அண்ணன் எடப்பாடியார் அவர்கள் சேலத்தில் அளித்த பேட்டியில், விளம்பரத்திற்காக கரும்பு காட்டில் கான்கிரீட் சாலை அமைத்து ஷூ காலுடன் நடந்த திரு. ஸ்டாலின், எங்கள் புரட்சித் தமிழரைப் பற்றி, அவருடைய விவசாயத் தொழிலைப் பற்றி கேலியும் கிண்டலுமாக பேசியதற்கு அவர் பதிலளித்தார்.
நெல்லின் ஈர பதத்தை 18 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்துவதற்கு, 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு இந்த அதிமேதாவி என்ன செய்தார் என்றும் ஈர பதம் உயர்த்தி வழங்க மத்திய அரசு அனுமதி மறுத்த காரணத்தை ஏன் வெளியிட விடியா திமுக அரசு தயங்குகிறது என்றும் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.
இதற்கு நேரடியாக பதில் சொல்ல வக்கற்ற முதலமைச்சர் திரு ஸ்டாலின், விவசாயிகளிடமாவது விளக்கிச்
சொல்லத் தயாரா என்று கேள்வி எழுப்பினார்.
இதைப் பற்றி இந்த விலாங்கு மனிதன் திரு. ரகுபதி தன்னுடைய சொந்த மாவட்டமான புதுக்கோட்டை விவசாயிகளிடம்
நேரில் போய் சொல்லத் தயாரா? டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு, தற்போது பெய்த மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை, எங்கள்
அண்ணன் எடப்பாடியார் சுட்டிக்காட்டி, பாதிப்படைந்த விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தினார்.
ஏற்றிய ஏணியையே எட்டி உதைப்பதுபோல், வளர்த்த எஜமானரையே கடித்துத் குதறுவதுபோல் இந்த நபர் செயல்பட்டதை யாரும் மறக்கவில்லை. தற்போது எங்களது `புரட்சித் தமிழர்' எடப்பாடியார் மீது பாய்ந்து பிராண்டும் இந்த பிராணி, அறிவாலய எஜமானரை கடித்துத் குதறும் காலமும் வெகு தொலைவில் இல்லை.
பயிர்க் காப்பீடு செய்யாத இந்த அரசின் தவறை சுட்டிக்காட்டினார்; நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை எடுத்து வைத்தார். கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே பல நாட்களாக குவித்து வைக்கப்பட்ட நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாவதை சுட்டிக் காட்டினார்.
டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன்-மீத்தேன் திட்டங்களுக்கு அனுமதி அளித்துவிட்டு, தற்போது நீலிக் கண்ணீர் வடிக்கும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினின், விவசாயிகள் விரோதப் போக்கை அம்பலப்படுத்தினார். மேலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் விவசாயிகளுக்கு செய்யப்பட்ட சாதனைகளைப் பட்டியலிட்டார்.
இரண்டு முறை விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகள் பாதிக்கப்படும்போது வறட்சி நிவாரண நிதி, வெள்ள காலத்தில் நிவாரணம் உள்ளிட்ட சாதனைகளை விவரித்தார். ஆனால், ஸ்டாலினோ மழை வெள்ள நீரில் நனைந்து முளைவிட்ட நெல் கதிர்களை
'ட்ரே' வைத்து சென்னையில் பார்வையிட்டதை சுட்டிக் காட்டி, விடியா திமுக அரசு மீது விவசாயிகள் கொந்தளிப்புடன்
இருப்பதைக் குறிப்பிட்டார்.
மொத்த தமிழகத்தையும் பாலைவனமாக்கும் வகையில் கர்நாடக அரசு முயற்சிக்கும் மேகதாது அணை திட்டத்தை தன் சுயநலத்திற்காக, கண்டும் காணாமலும் இருக்கும் திரு. மு.க. ஸ்டாலினின் கபட நாடகத்தை வெளிப்படுத்தினார். டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்காக மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் நீர் முறையாக கடைமடை வரை செல்கிறதா என்பதைக்கூட பார்க்காமல், வெற்று விளம்பரத்திற்காக ஒருசில நடவடிக்கைகளை எடுக்கும் திரு. ஸ்டாலினின் விளம்பர மாடல் அரசை
தோலுரித்துக் காட்டினார்.
பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினுடைய ஆட்சியின் சாதனை என்னவென்றால், குண்டர் சட்டத்தில் விவசாயியை கைது செய்ததுதான். இவை எதற்கும் முறையாக பதில் சொல்ல வக்கில்லாமலும், வேளாண் துறைக்கென்று ஒரு மந்திரி, உணவு வழங்கல்
துறைக்கென்று ஒரு மந்திரி என்று இருவர் இருக்கும்போது, முந்திரிக் கொட்டை போல தன் இருப்பைக் காட்டிக்கொள்ள
வேண்டிய அவசியம் ஒட்டுண்ணி ரகுபதிக்கு ஏன் வந்தது? மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டே பழக்கப்பட்ட
திமுக கும்பலில் ஒருவராக இருப்பதால்தானோ என்னவோ, தான் படித்த படிப்பைக்கூட மறந்துவிட்டு உளறுவாயராக
திரு. ரகுபதி இருப்பதைக் கண்டு மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.
அறிவாலயத்தின் வாசலில் நின்றுகொண்டு பதவிப் பிச்சை எடுக்கும் ரகுபதிக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றியோ, அதன் பொதுச் செயலாளரைப் பற்றியோ, அர்த்தம் இல்லாத வகையில் விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை.
உங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்றால் உங்கள் தலைவர் திரு.ஸ்டாலினையோ அவரது அருந்தவப் புதல்வர் திரு. உதயநிதியையோ பாராட்டி, நாமாவலி பாடுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.
`யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு'
என்பதை எச்சரிக்கையோடு திரு. ரகுபதிக்குத் தெரிவித்துக்கொள்கிறேன் என அறிக்கையில் கூறியுள்ளார்.
- செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்ததை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.
- செங்கோட்டையனுக்கு பிறகு நானும் த.வெ.க.வில் இணைவதாக சொல்கின்றனர்.
சென்னை:
50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், புலிக்கு வாலாக இருக்கலாம், எலிக்கு தலையாக இருக்கக்கூடாது என செங்கேட்டையன் த.வெ.க.வில் இணைந்தது குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்ததை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. செங்கோட்டையனுக்கு பிறகு நானும் த.வெ.க.வில் இணைவதாக சொல்கின்றனர். மூச்சு உள்ள வரை அ.தி.மு.க.வில் தான் இருப்பேன் என்று ஜெயக்குமார் கூறினார்.
- அண்ணாவை வைத்து வியாபாரம் செய்யும் கட்சியாக தி.மு.க. உள்ளது.
- தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சிதான் மலரும்.
சென்னை:
எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி படத்தின் 150-வது நாள் விழா சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் நடந்தது. விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று ரசிகர்களுடன் அமர்ந்து இதயக்கனி படத்தை பார்த்தார். பின்னர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் இன்றைக்கு ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, எம்.ஜி.ஆர். பெயரை உச்சரிக்காமல் அவர்களின் அரசியல் கிடையாது. அண்ணாவை வைத்து வியாபாரம் செய்யும் கட்சியாக தி.மு.க. உள்ளது" என்றார்.
கேள்வி:-அனைவருக்கும் நிரந்தர வீடு, வீட்டுக்கு ஒரு மோட்டார்சைக்கிள் என்பது இலக்கு. வீட்டுக்கு ஒரு கார் என்பது லட்சியம் என்று த.வெ.க. தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளாரே? அதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும், மற்றதையெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.
கேள்வி:- என்னை தொட்டவங்களை ஏண்டா தொட்டோம் என்று வருத்தப்படுவார்கள் என விஜய் பஞ்ச் டயலாக் பேசி இருக்கிறாரே?
பதில்:- அது தொட்டவர்களுக்கு தானே வருத்தம். எங்களுக்கு எதுவும் இல்லையே? அவர் தி.மு.க.வை பற்றித்தான் பேசியுள்ளார். தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சிதான் மலரும். அதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
- வாக்காளர் திருத்தப்பட்டியலை சீரழிக்கும் முயற்சியில் தி.மு.க. ஈடுபட்டு வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியில் ஆளும் தி.மு.க. அரசு அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு குளறுபடிகளை செய்து வருவதாக அ.தி.மு.க. குற்றம் சாட்டியது. இதனை கண்டித்து அ.தி.மு.க.வின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, வி.என். ரவி, ஆதிராஜாராம், வி.எஸ்.பாபு, தி.நகர் சத்தியா, ராஜேஷ், அசோக், கே.பி.கந்தன் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:-
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியில் தி.மு.க.வினர் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்ட தேர்தல் அதிகாரியாக உள்ள ஆணையர், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி நடக்கவில்லை. இதுபோல் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு எதிராக நடைபெறும் அதிகாரிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப்பட்டியலை அ.தி.மு.க. தொடர்ந்து ஆதரிக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் இந்த ஜனநாயக முறைப்படியிலான வாக்காளர் திருத்தப்பட்டியலை சீரழிக்கும் முயற்சியில் தி.மு.க. ஈடுபட்டு வருகிறது. அதனை அதி.மு.க. ஒருபோதும் அனுமதிக்காது.
அண்மைக்காலமாக தேர்தல் ஆணையம் வெளியிடும் வாக்காளர் பட்டியல்களில் 20 ஆண்டுகளாக முகவரி மாறியவர்கள், இறந்தவர்கள் நீக்கம் செய்ய வேண்டும் என தொடர்ந்து அ.தி.மு.க. வலியுறுத்தி வருகிறது. வாக்காளர் பட்டியலில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே, சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப் பட்டியலை அ.தி.மு.க. ஆதரித்ததே தவிர, பா.ஜ.க. ஆதரிப்பதால், அ.தி.மு.க. ஆதரிக்கவில்லை.
சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு எச்சரிக்கையாக சொல்கிறோம். நியாயமான முறையில் நடக்கவில்லை என்றால் இன்னும் 6 மாதத்தில் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், பா.வளர்மதி, கோகுல் இந்திரா மற்றும் ராயபுரம் மனோ, தென் சென்னை மாவட்ட அவைத் தலைவர் தி.நகர் சுவாமி நாதன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணை செயலாளர் மாவட்ட இணை செயலாளர் ஆவின் அருள்வேல், லட்சுமி நாராயணன், பெரும்பாக்கம் ராஜசேகர், சைதை சொ.கடும் பாடி, எம்.என்.இளங்கோ, பகுதி செயலாளர் துறைமுகம் பயாஸ், ரோலக்ஸ் ஆர்.இஸ்மாயில், பட்மேடு டி.சாரதி, புரசை எம்.கிருஷ்ணன், சேவியர், வி.சுகுமார், ஜி.ஆர்.சதீஷ் குமார், வில்லிவாக்கம் ஜெய், சுரேஷ், பாலசுப்பிர மணியன், வில்லிவாக்கம் பிரபு காந்த், கேட்டரிங் ரமேஷ், எம்.ஆர். சந்திரன், ஜெய செல்வகுமார், வழக்கறிஞர் அருண், வட்ட செயலாளர் உதய வெற்றி, எழும்பூர் சரவணன், எம்.குமரவேல், எம்.பெருமாள், பி.சிவக்குமார், எழும்பூர் ஆர்.ரமேஷ், சேத்துப்பட்டு பிரகாஷ், நா.சுப்பிரமணியன், பகுதி செயலாளர்கள் ஏ.எம்.காமராஜ், வேளச்சேரி எம்.ஏ.மூர்த்தி, சி.கே.முருகன், சைதை சுகுமார், ஷேக்அலி, வழக்கறிஞர் சதாசிவம் மற்றும் வழக்கறிஞர் சரவணன், எம்.ஜி.ஆர். நகர் குட்டி, செயல் மோகன், பூவரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இறந்து போனவர்கள், போலி வாக்காளர்களை மட்டுமே நம்பியிருக்கிறது தி.மு.க.
- அ.தி.மு.க. எதையும் கண்மூடித்தனமாக வரவேற்காது.
சென்னை:
அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பட்டினப்பாக்கத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு பொய் பிரசாரத்தை அரங்கேற்றி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு முறை திருத்தப் பணிகளை நடத்துவது வழக்கமான ஒன்று தான்.
2002-2004 ஆண்டுகளுக்கு பிறகு இப்பணிகள் நடைபெறவில்லை. அன்றைக்கு ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்-தி.மு.க. அப்போதெல்லாம் எதிர்க்காத தி.மு.க. தற்போது எதிர்க்கிறது. இறந்து போனவர்கள், போலி வாக்காளர்களை மட்டுமே நம்பியிருக்கிறது தி.மு.க.
எஸ்.ஐ.ஆர். வேண்டாம் என்று தி.மு.க. நீதிமன்றம் சென்றால் நாங்கள் (அ.தி.மு.க.) எஸ்.ஐ.ஆர். வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம். அனைத்துக் கட்சிகளிலும் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளனர்.
இப்பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்கள் தவறு செய்தால் புகார் அளியுங்கள் அதற்கான வாய்ப்பை கொடுக்கவில்லை என்றால் சர்வாதிகாரப் போக்கு என சொல்லலாம்.
கட்சி சார்பில் விழிப்பாக இருந்து வாக்குகள் சரியாக இருக்கிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் போலி வாக்காளர்கள் களையப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெறும் இப்பணிகளை அ.தி.மு.க. வரவேற்கிறது.
அ.தி.மு.க. எதையும் கண்மூடித்தனமாக வரவேற்காது. அதே நேரத்தில் அவசியமான ஒன்றை அ.தி.மு.க. வரவேற்கும் தமிழகத்தில் வெளிமாநில மக்கள் அமைதியாக இருப்பது ஜெயலலிதா காலத்தில் போடப்பட்ட விதை. தி.மு.க. அதில் வேறுபடுவார்கள். ஆனால் அ.தி.மு.க. சாதி, மத ரீதியாக வேறுபாட்டை ஏற்படுத்தாது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன் பிறகு நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் என்பது கிடையாது
தி.மு.க.வால் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் தெரிவித்த கருத்தை மு.க.ஸ்டாலினிடம் தான் கேட்க வேண்டும். இது பற்றி தி.மு.க. திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆல் தோட்ட பூபதி போல எதற்கெடுத்தாலும் அனைத்துக் கட்சி கூட்டத்தை தி.மு.க. நடத்தி வருகிறது.
வரும் தேர்தல் நேர்மையான, நியாயமான தேர்தலாக அமைய வேண்டும். அதனை தேர்தல் ஆணையம் உறுதி செய்யும். வாக்காளர்களை யாராலும் நீக்க முடியாது. இப்பணிகளுக்கும் பா.ஜ.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
விஜய் கட்சியுடன் கூட்டணி குறித்து கேட்கிறீர்கள், தேர்தலுக்கு இன்னும் 5 அமாவசை உள்ளது. 2 அமாவாசைக்கு முன்பு கூட மாற்றம் வரலாம். எனவே அந்த நேரத்தில்தான் கூட்டணி பற்றி எடப்பாடியார் முடிவு செய்வார்.
வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மூலம் குடியுரிமை சட்டத்தை புகுத்த திட்டம் என மக்களை தி.மு.க. திசை திருப்புகிறது. தி.மு.க.வின் திசை திருப்பும் முயற்சி நிச்சயம் வெற்றி பெற போவதில்லை.
வடமாநிலத்தவராக இருந்தாலும் நிரந்தரமாக தமிழகத்தில் குடியிருப்பவர்கள் வாக்குரிமையை பறிக்க கூடாது. பா.ஜ.க. தொடர்பாக அவ்வப்போது எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்து வருகிறார். அண்ணாமலை சொன்ன கருத்து குறித்தும் எடப்பாடியார் பதில் அளிப்பார். அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் கிடையாது.
அமைச்சர் கே.என்.நேரு இலாகாவில் நடைபெற்ற ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். சீமான் ஆட்டை கடித்து மாட்டை கடித்து தற்போது அ.தி.மு.க.வை விமர்சித்து வருகிறார். அவர் எங்களை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சீமான் வேலையை அவர் பார்க்கட்டும் எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம். தொடர்ந்து பேசினால் தகுந்த பதிலடி கொடுப்போம் என்றார்.
- தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றால் அதற்கு அடிப்படையே வாக்காளர் பட்டியல்தான்.
- இந்திய தேர்தல் ஆணையத்திடமும் புகார்கள் கொடுக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அதிமுக முழு மனதுடன் வரறே்கிறது என அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இந்தியாவின் சிறப்பே ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்துவது தான். அப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றால் அதற்கு அடிப்படையே வாக்காளர் பட்டியல்தான்.
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்றால் இந்தியா முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியல் சரியானதா என்று சரிபார்க்க வேண்டும். குறிப்பாக, தமிழகத்தில் 2026-ல் சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியல் 100 சதவீதம் முழுமையானதாகவும், சரியானவையாகவும் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
எனவே, இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இரட்டை வாக்குகள், இறந்தவர்கள் மற்றும் இடம் பெயர்ந்தவர்ளை நீக்குவதும், புதிதாக தகுதி உள்ளவர்களை சேர்ப்பதும் அவ்வப்போது சுருக்கத் திருத்தம் மற்றும் தீவிர திருத்தம் என்ற முறைகளை பின்பற்றி சரியான வாக்காளர் பட்டியலை உறுதிபடுத்துவது இயல்பான ஒரு நடைமுறை.
எனவேதான், வாக்களர் பட்டியல் சரிபார்ப்பு சம்பந்தமாக அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் கூட்டங்களில், தமிழ் நாட்டில் தற்போதுள்ள வாக்காளர் பட்டியல் 100 சதவீத சரிபார்ப்பு இல்லாமல் முழுமையானதாக இல்லை என்பதால், வாக்காளர் பட்டியலை முழுமையாக ஆய்வு செய்யுங்கள் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வந்துள்ளோம்.
குறிப்பாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், எங்கள் கழகப்
பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஒப்புதலோடு இந்தியத் தேர்தல் ஆணையத்தின், மாவட்ட அளவில் நடைபெறும் கூட்டங்கள்; மாநில அளவில் சென்னையில் நடைபெறும் கூட்டங்கள் மட்டுமல்லாமல், டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களிலும், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல்களில் உள்ள குளறுபடிகளை நாங்கள் உரிய ஆதாரங்களுடன் எடுத்து வைத்து, திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை கோரி வருகிறோம்.
உதாரணமாக, 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலின்போது வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், அந்தத் தொகுதியில் வசிக்காத 40 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
அதேபோல், சுமார் 8 ஆயிரம் இறந்த வாக்காளர்களின் பெயர்களும் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இதற்கான ஆதாரங்களை கழகத்தின் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு புகாராகக் கொண்டு சென்றும், அதைப்பற்றி தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. இடைத் தேர்தல் முடியும்வரை அப்பெயர்கள் நீக்கப்படவில்லை.
அதேபோல், 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகம் முழுவதும் இரட்டை வாக்குகள், இறந்தவர்கள் மற்றும் முகவரி மாற்றம் செய்தவர்களின் பெயர்கள் வாக்களர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்டத் தேர்தல் அலுவலர்களிடமும், இந்திய தேர்தல் ஆணையத்திடமும் புகார்கள் கொடுக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
2024-ஆம் ஆண்டு, சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில், இரட்டை வாக்குகள், முகவரி மாற்றம் மற்றும் இறந்தவர்கள் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்படவில்லை என்றும்; இப்படி சுமார் 44 ஆயிரம் நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று சென்னையில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியிடம் உரிய ஆதாரங்களுடன் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் உத்தரவுப்படி, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து, ஆர்.கே. நகர் தொகுதியில் மட்டும் இன்றுவரை
சுமார் 31 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பெயர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தபோது, கழகத்தின் சார்பில் சென்னை மாநகர் முழுவதும் இதுபோன்று பல்லாயிரக்கணக்கான பெயர்கள் வாக்களர் பட்டியலில் முறைகேடாக இடம் பெற்றுள்ளது என்று நாங்கள் தெரிவித்தோம். தொடர்ந்து, தியாகராயநகர், ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம் ஆகிய தொகுதிகள் உள்பட பல தொகுதிகளின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டு, மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் சரிபார்ப்பினை நடத்தி வருகிறது.
எங்களது கழகப் பொதுச் செயலாளர் `புரட்சித் தமிழர்' எடப்பாடியார் அவர்கள் `மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்று ஆளும் விடியா திமுக ஸ்டாலினின் ஃபெயிலியர் மாடல் அரசின் தோல்விகளை தழிழகம் முழுவதும் எடுத்துக்கூறும் புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணத்தின் போது, பல தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படாத இரட்டை வாக்குகள், இறந்தவர் வாக்குகள், முகவரி மாற்றம் உள்ளிட்ட குளறுபடிகளை சுட்டிக்காட்டி, வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் ஆய்வு செய்து திருத்திய வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகிறார்.
வாக்காளர் சரிபார்ப்பு கோரிக்கையை சென்னை மட்டுமல்லாது, டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கூட்டங்களிலும் உரிய ஆதாரங்களுடன் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
எனவே, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ளு.ஐ.சு எனப்படும் 'சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை' அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முழு மனதுடன் வரவேற்கிறோம். இந்திய தேர்தல் ஆணையம் இந்த சிறப்பு தீவிர திருத்தத்தை முறையாகவும், வெளிப்படையாகவும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இந்தப் பணிகளையெல்லாம் மாநில அரசின் கீழுள்ள அலுவலர்கள்தான் செய்யப்போகிறார்கள் என்பதால், தேர்தல் ஆணையம் அவர்கள் நடுநிலையோடு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இருக்கும் குளறுபடிகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, 100 சதவீதம் வாக்காளர்கள் பட்டியல் சரிபார்க்கப்பட்டு, தங்களுக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்கக் கூடிய உரிமை, உண்மையான வாக்காளர்களுக்குத் தான் வழங்கப்பட வேண்டும் என்பதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதி கொண்டுள்ளது.
கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழ் நாட்டு மக்களின் நலனுக்காக எந்தவித நலத் திட்டங்களையும் செயல்படுத்தாமல், எங்களது ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட பணிகளை ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைப்பது; இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக விளங்குவது; வாங்கும் கடனையெல்லாம் வருவாய் செலவினங்களுக்கே செலவிட்டுவிட்டு, விளம்பர ஆட்சி நடத்தி வரும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஃபெயிலியர் ஆட்சியில், மக்கள் படும் துன்பங்களுக்கு 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்; அத்தேர்தலில் திமுக தோல்வியுறுவது உறுதி, என்று தெரிந்தவுடன் இப்போதே அதற்கான காரணங்களைத் தேடும் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள்,
இனியாவது தங்களது தவறுகளை திருத்திக்கொண்டு, எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுவதை நிறுத்திவிட்டு, மீதமுள்ள ஒருசில மாதங்களுக்காவது தமிழக மக்களுக்கு நல்லதைச் செய்ய வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பற்றி பேசுவதை அவர் நிறுத்த வேண்டும்.
- இல்லை என்றால் இவரை விட கன்னா பின்னா என பேசி விட்டு சிரிப்பதற்கு எங்களுக்கும் தெரியும் என்றார்.
சென்னை:
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 121-வது பிறந்தநாளையொட்டி எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்த பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், சட்ட பேரவை தலைவராக சி.பா. ஆதித்தனார் சிறப்பாக பணியாற்றினார்.
அவர் அமர்ந்த நாற்காலியில் புரட்சித்தலைவி ஜெயலலிதா என்னை அமர வைத்தார் . இதனை மிகவும் பெருமையாக கருதுகிறேன்.
தினத்தந்தி பத்திரிகையை நிறுவி அதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் தமிழை பரப்பியவர் என்றார். பின்னர் அவரிடம் அண்ணா, எம்.ஜி.ஆர். குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்து அவர் கூறும் போது, மறைந்த தலைவர்களான அண்ணா, எம்.ஜி.ஆர். பற்றி விமர்சனம் செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாது. சிலருக்கு நாக்கில் சனி இருக்கும். சிலருக்கு ஜென்ம சனி இருக்கும். ஆனால் ஒட்டுமொத்த சனியின் மொத்த உருவமாக சீமான் இருக்கிறார்.
அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பற்றி பேசுவதை அவர் நிறுத்த வேண்டும். இல்லை என்றால் இவரை விட கன்னா பின்னா என பேசி விட்டு சிரிப்பதற்கு எங்களுக்கும் தெரியும் என்றார்.
அண்ணா, எம்.ஜி.ஆர்.பற்றி சீமான் தெரிவித்த கருத்து குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடமும் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் மறைந்த தலைவர்கள் பற்றி இது போன்று பேசுவது ஏற்புடையது அல்ல. கண்டிக்கத்தக்கது என்றார்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரான திருநாவுக்கரசர் கூறும்போது, கட்சித் தலைவர்களை சீமான் தரம் தாழ்ந்து விமர்சிப்பது அவருக்கு நல்லது அல்ல. அவரது கட்சிக்கும் நல்லது கிடையாது.
சீமான் தனது பேச்சையும் மாற்றிக்கொள்ள வேண்டும் அவரையும் மாற்றிக்கொள்ள வேண்டும். மறைந்த தலைவர்களை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.
- ஒரு காலத்திலும் அ.தி.மு.க.வின் ஓட்டு விஜய்க்கு போகாது.
- உதயநிதியை மை டியர் குட்டி சாத்தான் என்று சொல்லி இருக்கலாம்.
சென்னை:
அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
செங்கோட்டையன் மறப்போம் மன்னிப்போம் என்று பேசி உள்ளார். அது குறித்து பொதுச்செயலாளர்தான் முடிவு செய்ய வேண்டும். அண்ணா, எம்.ஜி.ஆர். மறுக்க முடியாத மாபெரும் சக்திகள். விஜய் எம்.ஜி.ஆரின் படத்தை பயன்படுத்தியது வரவேற்கும் விசயம்தான்.
அண்ணா படத்தையோ எம்.ஜி.ஆர். படத்தையோ பயன்படுத்துவதால் அ.தி.மு.க.வின் ஓட்டுகள் அவருக்கு போகாது. ஒரு காலத்திலும் அ.தி.மு.க.வின் ஓட்டு விஜய்க்கு போகாது. விஜய்க்கு ஏமாற்றம்தான் கிடைக்கும்.
விஜய் ஸ்டாலினை அங்கிள் என்றார்... சி.எம். சார் என்றார்... என்னை கேட்டு இருந்தால் நானே சொல்லி இருப்பேன். சி.எம். ஸ்டாலின் சார் என்று சொல்லாமல்.. சி.எம். சாத்தான் சார் என்று சொல்லி இருக்கலாம். உதயநிதியை மை டியர் குட்டி சாத்தான் என்று சொல்லி இருக்கலாம்.
அமைச்சர் நேரு மழைக்காலத்திற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையில் கவனம் செலுத்தாமல் கரூரில் நடக்கும் முப்பெரும் விழாவில்தான் கவனம் செலுத்துகிறார். இந்த சாத்தான் ஆட்சியில் லஞ்சம், ஊழல், கட்டபஞ்சாயத்து தான் நடக்கிறது.
எங்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் ஸ்டைலை பின்பற்றுவதால் எங்கள் கட்சி ஓட்டு விஜய்க்கு போகாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- எல்லோராலும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகிட முடியாது.
- எல்லோராலும் புரட்சித் தலைவி அம்மா ஆகிட முடியாது.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, மதுரையில் இன்று நடைபெற்ற தவெகவின் 2வது மாநாட்டில் அக்கட்சி தலைவர் விஜய், எம்ஜிஆர் குறித்தும், அதிமுக குறித்தும் பேசினார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெயக்குமார் கூறியதாவது:-
எல்லோராலும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகிட முடியாது. எல்லோராலும் புரட்சித் தலைவி அம்மா ஆகிட முடியாது. உலகத்திற்கே ஒரு புரட்சித் தலைவர். உலகத்திற்கே ஒரு புரட்சித் தலைவி அம்மா.
அதனால், வாக்குகள் வாங்க வேண்டும் என்பதற்காக அண்ணா பெயரை பயன்படுத்துறது, அண்ணா புகைப்படம் பயன்படுத்துறது, எம்ஜிஆர் புகைப்படத்தை பயன்படுத்துறது, நான் தான் புரட்சித் தலைவர் மாதிரி சொல்வது எல்லாம் தேர்தல் யுக்தி.
இதெல்லாம் எப்படி சொன்னாலும் சரி, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆரம்பித்த இயக்கம் அதிமுக. அவர்தான் கட்சிக்கே முழுமையான சொந்தக்காரர்.
அதனால், அதிமுகவின் இரட்டை இலைக்கு வாக்களித்த கை, வேறு எந்த கட்சிக்கும் வாக்குகள் போடாது. எங்கள் தலைவரின் பெயர் கூறாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது.
எங்கள் தலைவரை ஏற்றுக்கொண்டது என்பது எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால், அது உங்களுக்கு வாக்குகளாக வருமா என்றால் நிச்சயமாக வராது. அதை மட்டும் உறுதியாக கூறிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நான் முதலமைச்சரான பின் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் நேராக தலைமை செயலகத்தில் எனது அறைக்கு வரலாம் என்றார்.
- தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி நடைபெறவில்லை. போலீஸ் ஆட்சியும், அதிகாரிகள் ஆட்சியுமே நடைபெறுகிறது.
சென்னை:
சென்னையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ள உங்களுடன் ஸ்டாலின் 'திட்டம் என்பதற்கு பதிலாக பொய்களுடன் ஸ்டாலின் என பெயர் வைத்திருக்கலாம். தேர்தல் வந்தால்தான் முதலமைச்சருக்கு மக்கள் கண்ணுக்கு தெரிகின்றனர்.
கொஞ்சம் கூட ஸ்டாலினுக்கு வெட்கம் இல்லையா..? எதிர்கட்சியாக இருந்தபோது பெட்டி வைத்து வாங்கிய மனுக்கள் என்னவானது..? சாவியை அவரே வைத்திருந்தார். முதலமைச்சரான பின் மனுக்களை நானே படித்து நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
நான் முதலமைச்சரான பின் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் நேராக தலைமை செயலகத்தில் எனது அறைக்கு வரலாம் என்றார். 4 ஆண்டில் தலைமைச் செயலகத்தில் பொதுமக்களை ஒருமுறையேனும் ஸ்டாலின் சந்தித்தது உண்டா..? "பொய்களுடன் ஸ்டாலின்" என்பதே திட்டத்தின் உண்மையான பெயராக இருக்க வேண்டும் என மக்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி நடைபெறவில்லை. போலீஸ் ஆட்சியும், அதிகாரிகள் ஆட்சியுமே நடைபெறுகிறது.
அரசின் செய்தித் தொடர்பு அதிகாரிகளாக 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அறிவித்துள்ளார் இதன் மூலம் முதலமைச்சர். தலைமைச் செயலாளர் நிலையில் இருக்கும் நான்கு அதிகாரிகளை அவமதித்து விட்டார். இனி 4 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் பி.ஆர்.ஓ. என்று மற்றவர்கள் கூப்பிடுவர்.
ஏற்கனவே செய்தி மக்கள் தொடர்புத் துறை இருக்கும்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை செய்தித் தொடர்பாளராக நியமிப்பது ஏன்..? அரசின் திட்டங்களை அமைச்சர்கள் மக்களுக்கு கூறாமல் அதிகாரிகள் கூறினால் அதன் பெயர் எமர்ஜென்சி நிலை. இப்போது மக்களாட்சி இல்லை, அதிகாரிகள் ஆட்சியே நடக்கிறது என்பதற்கு இந்த நியமனமே உதாரணமாகும். தமிழகத்தில் மக்களாட்சி நடைபெறவில்லை, அதிகாரிகள் ஆட்சிதான் நடைபெறுகிறது.
கேரளாவை போல் 'ப' வடிவில் மாணவர்களை அமரவைப்பதால் கல்வித்தரம் உயர்ந்து விடுமா..? 3,600 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். பள்ளிகளில் கழிவறை உட்பட அடிப்படை வசதியில்லை.
நானும் கடைசி பெஞ்ச் மாணவன் தான். ஆனால் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். அன்பில் மகேஷ் திறமையற்றவர், அறிவு இருப்பவர்களை பள்ளிக் கல்வித்துறைக்கு அமைச்சர்களாக நியமிக்கலாம். அன்பில் மகேசை திரைத்துறை அமைச்சராக போடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த லோக் சபா தேர்தலில் கூட்டணி முறிந்தது.
- அண்ணாமலை குறித்து ஜெயகுமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களத்தில் காட்சிகள் அதிரடியாக மாறி வருகின்றன. அதில் சமீபத்தியது, அதிமுக - பாஜக கூட்டணி. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்த நிலையில் அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பேச்சால் கடந்த லோக் சபா தேர்தலில் கூட்டணி முறிந்தது.
இது அத்தேர்தலில் தமிழகத்தில் இரண்டு கட்சிகளுக்குமே பின்னடைவை தந்தது. இதிலிருந்து பாடம் கற்ற இவ்விரு கட்சிகள் தற்போது மீண்டும் கூட்டு சேர்ந்துள்ளன.
இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவில் இருந்து தான் விலகிவிடுவேன் என்று தான் சொல்லவே இல்லை என முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கியுள்ளார்.
அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவில் இருந்து விலகுவேன் என நான் எப்போதும் கூறவில்லை.
பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் இந்த ஜெயக்குமார் நின்றதில்லை. அதிமுகதான் எனது உயிர் மூச்சு" என்று தெரிவித்துள்ளார். முன்னதாக மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்தும் அண்ணாமலை குறித்து ஜெயகுமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி.
- நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் மீண்டும் சந்திக்கிறேன் என்றார் விஜய்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர்," அடுத்தாண்டு மக்கள் இதுவரை சந்திக்காத தேர்தலை சந்திப்பார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக. நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் மீண்டும் சந்திக்கிறேன்" என்றார்.
விஜய்யின் உரைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, "உண்மையான களம் அதிமுகக்கும் திமுகவுக்கும்தான்" என அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், " தவெக தொண்டர்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன் விஜய் அவ்வாறு பேசியுள்ளார்.
ஆனால், உண்மையான களம் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தான்" என்றார்.






