என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விஜயை தொட்டதால் தி.மு.க.தான் வருத்தப்பட வேண்டும் - ஜெயக்குமார்
- அண்ணாவை வைத்து வியாபாரம் செய்யும் கட்சியாக தி.மு.க. உள்ளது.
- தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சிதான் மலரும்.
சென்னை:
எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி படத்தின் 150-வது நாள் விழா சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் நடந்தது. விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று ரசிகர்களுடன் அமர்ந்து இதயக்கனி படத்தை பார்த்தார். பின்னர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் இன்றைக்கு ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, எம்.ஜி.ஆர். பெயரை உச்சரிக்காமல் அவர்களின் அரசியல் கிடையாது. அண்ணாவை வைத்து வியாபாரம் செய்யும் கட்சியாக தி.மு.க. உள்ளது" என்றார்.
கேள்வி:-அனைவருக்கும் நிரந்தர வீடு, வீட்டுக்கு ஒரு மோட்டார்சைக்கிள் என்பது இலக்கு. வீட்டுக்கு ஒரு கார் என்பது லட்சியம் என்று த.வெ.க. தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளாரே? அதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும், மற்றதையெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.
கேள்வி:- என்னை தொட்டவங்களை ஏண்டா தொட்டோம் என்று வருத்தப்படுவார்கள் என விஜய் பஞ்ச் டயலாக் பேசி இருக்கிறாரே?
பதில்:- அது தொட்டவர்களுக்கு தானே வருத்தம். எங்களுக்கு எதுவும் இல்லையே? அவர் தி.மு.க.வை பற்றித்தான் பேசியுள்ளார். தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சிதான் மலரும். அதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.






