என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறை தண்டனை"

    • நீதிமன்ற உத்தரவின்படி விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.
    • சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கோகிலபாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் மயிலாடும்பாறை அருகே நரியூத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு கணித பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்தவர் கோகிலபாண்டியன். இதே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியைகள் சிலர் கோகிலபாண்டியனுக்கு எதிராக பாலியல் புகார் அளித்தனர்.

    அதன் அடிப்படையில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 16ந் தேதி கோகிலபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தன்மீது முன்விரோதம் காரணமாக பாலியல் புகார் அளிக்கப்பட்டதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கோகிலபாண்டியன் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.

    இதில் சத்துணவு அமைப்பாளர் நந்தினியின் பெயரில் கோகிலபாண்டி யனுக்கு எதிராக போலியான ஆவணம் தயாரித்து ஆசிரியைகள் வனிதா, ராமலட்சுமி ஆகியோர் பொய் புகார் அளித்தது உறுதியானது. இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் பலருக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் கோகிலபாண்டியனின் தற்காலிக பணி நீக்கம் பணிக்காலமாக கருதி அவருக்கு ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கோகிலபாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.

    விசாரணை முடிந்த நிலையில் ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் பாசில்முகமது தீர்ப்பளித்தார். மாவட்ட கல்வி அலுவலர் மொக்கத்துரை, ஆசிரியைகள் வனிதா, ராமலட்சுமி ஆகிய 3 பேருக்கும் தலா 3½ ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்றொரு மாவட்ட கல்வி அலுவலர் கணேசுக்கு 1½ ஆண்டுகள் சிறை தண்டனையும் அளித்து உத்தரவிட்டார்.

    மேலும் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்த முனியாண்டி, வட்டார கல்வி அலுவலர்கள் ஸ்ரீதேவி, ஹெலன் மெட்டில்டா ஆகிய 3 பேருக்கும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட ஆசிரியர் கோகிலபாண்டியனுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. ஆசிரியர் கோகிலபாண்டியன் தற்போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள ராஜகோபாலன்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.

    • விசாரணை முடிந்த நிலையில் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
    • இந்த வழக்கில் மற்ற 4பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கரியமாணிக்கத்தை சேர்ந்தவர் வில்லேந்தி (வயது 40) விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான விநாயக மூர்த்தி (42) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் வில்லேந்தி கடந்த 9.7.2008-ம் ஆண்டு அவரது உறவினர்களான மகி, ரவிச்சந்திரன் ஆகியோருடன் நெட்டப்பாக்கத்தில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது விநாயகமூர்த்தி மற்றும் அவரது கூட்டளிகள் பாக்யராஜ், ஸ்ரீதர், கிருஷ்ணன், குப்பன் ஆகியோர் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வில்லேந்தி, மகி, ரவிச்சந்திரன் ஆகியோர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி தப்பிச்சென்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் விநாயகமூர்த்தி உள்பட 5 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி யஸ்வந்த்ராவ் இங்கர் சல் முன்னிலையில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

    இதில் விநாயமூர்த்தி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அபராதத் தொகை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் மற்ற 4பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    • ஊழல் முறைகேடுகள், அரசு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தியது, சுற்றுச்சூழல் விதிகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
    • நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலான திட்டமிட்ட குற்றச்சாட்டுகள் என்ற நிறுவனத்தின் வாதத்தை ஏற்றுக்கொண்டது.

    மூத்த பத்திரிகையாளரும் மனித உரிமை ஆர்வலருமான ரவி நாயர் அதானி குழுமம் மீது, ஊழல் முறைகேடுகள், அரசு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தியது, சுற்றுச்சூழல் விதிகளை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தார்.

    அக்டோபர் 2020 முதல் ஜூலை 2021 வரை, ரவி நாயர் தனது சமூக வலைதள பக்கங்களில் தங்களைப் பற்றி அவதூறான மற்றும் தவறான கருத்துக்களைப் பதிவிட்டதாக அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் கிரிமினல் அவதூறு புகார் அளித்திருந்தது.

    இந்த வழக்கை குஜராத்தின் காந்திநகர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரித்து வந்தது. அதானி நிறுவனம் தரப்பில் மூன்று சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். மேலும், ரவி நாயர் பதிவிட்ட ட்வீட்கள் மற்றும் கட்டுரைகளின் நகல்கள் ஆதாரங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

    ரவி நாயர் தரப்பு வழக்கறிஞர், இந்தப் பதிவுகள் அவதூறானவை அல்ல என்றும், இதில் உள்நோக்கம் ஏதுமில்லை என்றும் வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ரவி நாயரின் பதிவுகள் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் திட்டமிட்ட குற்றச்சாட்டுகள் என்றும் விமர்சனத்திற்கான எல்லையை அந்தப் பதிவுகள் மீறிவிட்டதாகவும் கூறி, ரவி நாயரை கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் குற்றவாளி என உறுதி செய்தது.

    எனவே அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம், ரூ.5000 அபராதமும் விதித்தது.  

    • 'ஆப்பிள் டெய்லி' பத்திரிகை, ஹாங்காங் மற்றும் சீன அரசாங்கங்களின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வந்தது.
    • ஜிம்மி லாயுடன் பணியாற்றிய மற்ற 6 பத்திரிகையாளர்களுக்கும் 6 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆங்கிலேயர் காலனியாதிக்கத்தில் இருந்த ஹாங்காங் 1997-ஆம் ஆண்டு சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

    அன்று முதல் ஹாங்காங் சீனாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமாக உள்ளது. இருப்பினும் அங்கு ஜனநாயகத்துக்கு எதிரான குரல்களை சீனா தொடர்ந்து ஒடுக்கி வருகிறது.

    இந்நிலையில் ஹாங்காங்கின் பிரபல ஊடக தொழிலதிபர் ஜிம்மி லாய்க்கு தற்போது 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    ஜிம்மி லாய் தொடங்கிய 'ஆப்பிள் டெய்லி' பத்திரிகை, ஹாங்காங் மற்றும் சீன அரசாங்கங்களின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வந்தது.

    2021-ல் அரசின் அழுத்தங்கள், சொத்துக்கள் முடக்கம் மற்றும் ரெய்டுகள் காரணமாக இந்தப் பத்திரிகை மூடப்பட்டது.

    அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து சதி செய்தல் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக மக்களை தூண்டிவிடும் வகையில் கட்டுரைகளை வெளியிட்டது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.

    தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் நீடித்தன.

    இந்நிலையில் ஏற்கனவே மோசடி வழக்கில் ஜிம்மி லாய் 5 ஆண்டு 9 மாத தண்டனையை அனுபவித்து வரும் நிலையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மேலும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    ஜிம்மி லாயுடன் பணியாற்றிய மற்ற 6 பத்திரிகையாளர்களுக்கும் 6 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீன நாடாளுமன்றம் கடந்த 2020-ஆம் ஆண்டு நிறைவேற்றியது.

    அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, ஏராளமான ஜனநாயக ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

    2020 ஆகஸ்ட் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜிம்மி லாய்க்கு தற்போது 78 வயது ஆவதால் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள 20 ஆண்டு தண்டனை ஆயுள் தண்டனைக்கு சமமாகும்.

    தாம் சீனாவின் துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஓர் அரசியல் கைதி என்று லாய் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    பெரும்பாலும் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ள ஜிம்மி லாய் உடல்நிலை மோசமாக உள்ளது என அவரது குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர். 

    • இதில் போர்க்கப்பல்களின் ஆயுத அமைப்புகள், ரேடார் தொழில்நுட்பம் மற்றும் முக்கிய ராணுவப் பயிற்சிகளின் வரைபடங்கள் அடங்கும்.
    • பணத்திற்காக தான் இதை செய்ததாக வெய், நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

    அமெரிக்கக் கடற்படையின் ரகசியங்களைச் சீனாவிற்கு விற்ற 25 வயது முன்னாள் கடற்படை வீரர் ஜின்ச்சாவ் வெய் என்பவருக்கு அமெரிக்க மத்திய நீதிமன்றம் 200 மாதங்கள் (சுமார் 17 ஆண்டுகள்) சிறை தண்டனை விதித்துள்ளது.

    சான் டியாகோவில் உள்ள USS Essex என்ற போர்க்கப்பலில் பணியாற்றி வந்த வெய், 2022-ஆம் ஆண்டு முதல் சீன உளவுத்துறை அதிகாரியுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

    வெய் சுமார் 50-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் மற்றும் தொழில்நுட்ப கையேடுகளைச் சீனாவிற்கு வழங்கியுள்ளார்.

    இதில் போர்க்கப்பல்களின் ஆயுத அமைப்புகள், ரேடார் தொழில்நுட்பம் மற்றும் முக்கிய ராணுவப் பயிற்சிகளின் வரைபடங்கள் அடங்கும்.

    அமெரிக்கக் கடற்படையின் தாக்குதல் திறன்கள் குறித்த ரகசியத் தகவல்களை அவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக எடுத்து அனுப்பியுள்ளார். இதற்காக பல லட்சம் ரூபாய் லஞ்சமாக வெய் பெற்றுள்ளார்.

    பணத்திற்காக தான் இதை செய்ததாக வெய், நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "வெய் தனது தனிப்பட்ட ஆதாயத்திற்காகத் தனது சக வீரர்களின் உயிரையும், நாட்டின் பாதுகாப்பையும் பணயம் வைத்துள்ளார். இது மன்னிக்க முடியாத குற்றம்" என்று கூறி 200 மாதங்கள் சிறை தண்டனை விதித்தனர். 

    சீன வம்சாவளியை சேர்ந்த வெய்-க்கு 2022-ஆம் ஆண்டு அவர் அமெரிக்க கடற்படையில் சேர்ந்தபோதுதான் அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது.

    குடியுரிமை விண்ணப்பம் பரிசீலனையில் இருந்தபோதே அவர் ராணுவ ரசிகசியங்களை கசிய விட்டுள்ளார். வெய் போலவே  ஜாவோ என்ற மற்றொரு அமெரிக்க கடற்படை வீரரும் சீனாவுக்கு உளவு பார்த்த வழக்கில் சிறை தண்டனை பெற்றிருந்தார். இந்த தொடர் சம்பவங்கள் அமெரிக்க ராணுவத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடாக கருதப்படுகிறது.  

    • காவல்நிலையத்தில் இருக்கும்போது பெண்ணின் தந்தை உயிரிழந்தார்
    • விசாரணை நீதிமன்றத்திலிருந்து டெல்லிக்கு வழக்குகள் மாற்றப்பட்டன

    உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரின் சிறைத்தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 

    நீதிபதிகள் சுப்ரமணியம் பிரசாத் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனிப்பட்ட பிணையில் செங்காரை ஜாமினில் விடுவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டைச்சுற்றி 5 கி.மீ. தூரத்திற்கு செங்கார் செல்லக்கூடாது என்றும், அப்பெண்ணையோ அல்லது அவரது தாயாரையோ அச்சுறுத்தக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது. வாரம் ஒருமுறை காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் ஜாமின் ரத்து செய்யப்படும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

    கடந்த 2017 ஆம் ஆண்டு 16வயதான சிறுமி செங்காரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு செங்காருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனிடையே இந்த குற்றத்திற்கு நீதிக்கேட்டு போராடியதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் இருக்கும்போது இச்சிறுமியின் தந்தை உயிரிழந்தார். இந்த காவல் மரண வழக்கிலும் செங்கருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் இதுதொடர்புடைய பிற வழக்குகள் அனைத்தும் ஆகஸ்ட் 1, 2019 அன்று உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் உத்தரபிரதேசத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்திலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில் செங்காரின் மேல்முறையீட்டில் டெல்லி உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. 

    ×