என் மலர்
இந்தியா

அதானி குழுமம் குறித்து அவதூறு.. மூத்த பத்திரிகையாளருக்கு 1 வருடம் சிறை தண்டனை விதித்த குஜராத் நீதிமன்றம்
- ஊழல் முறைகேடுகள், அரசு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தியது, சுற்றுச்சூழல் விதிகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
- நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலான திட்டமிட்ட குற்றச்சாட்டுகள் என்ற நிறுவனத்தின் வாதத்தை ஏற்றுக்கொண்டது.
மூத்த பத்திரிகையாளரும் மனித உரிமை ஆர்வலருமான ரவி நாயர் அதானி குழுமம் மீது, ஊழல் முறைகேடுகள், அரசு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தியது, சுற்றுச்சூழல் விதிகளை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தார்.
அக்டோபர் 2020 முதல் ஜூலை 2021 வரை, ரவி நாயர் தனது சமூக வலைதள பக்கங்களில் தங்களைப் பற்றி அவதூறான மற்றும் தவறான கருத்துக்களைப் பதிவிட்டதாக அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் கிரிமினல் அவதூறு புகார் அளித்திருந்தது.
இந்த வழக்கை குஜராத்தின் காந்திநகர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரித்து வந்தது. அதானி நிறுவனம் தரப்பில் மூன்று சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். மேலும், ரவி நாயர் பதிவிட்ட ட்வீட்கள் மற்றும் கட்டுரைகளின் நகல்கள் ஆதாரங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
ரவி நாயர் தரப்பு வழக்கறிஞர், இந்தப் பதிவுகள் அவதூறானவை அல்ல என்றும், இதில் உள்நோக்கம் ஏதுமில்லை என்றும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ரவி நாயரின் பதிவுகள் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் திட்டமிட்ட குற்றச்சாட்டுகள் என்றும் விமர்சனத்திற்கான எல்லையை அந்தப் பதிவுகள் மீறிவிட்டதாகவும் கூறி, ரவி நாயரை கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் குற்றவாளி என உறுதி செய்தது.
எனவே அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம், ரூ.5000 அபராதமும் விதித்தது.






