என் மலர்
குஜராத்
- ஒரு எளிய லாஜிக்கை ராகுல் பாபாவுக்குப் புரிய வைப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது.
- ஏனென்றால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே அதை அவருக்குப் புரிய வைப்பதில் தோல்வியடைந்து விட்டனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற கிராம மக்கள் வாழும் நிலத்திற்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சமீபத்தில் மக்களவையில் நடைபெற்ற விவாத்தின்போது, எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி என்னிடம், ஒவ்வொரு முறையும் தன்னுடைய கட்சி தேர்தலில் ஏன் தோல்வியடைகிறது என என்னிடம் விசித்திரமான கேள்வியை கேட்டார். மக்களிடம் கேட்பதற்குப் பதில் என்னிடம் கேட்டார். ராகுல் பாபா, நான் இங்கு தொடங்கியுள்ள இந்த இரண்டு முயற்சிகளை நீங்கள் புரிந்துகொண்டால், உங்களுக்குப் பதில் கிடைத்துவிடும்.
தோல்விக்காக ராகுல் காந்தி காந்தி சோர்வு அடையக்கூடாது. ஏனென்றால், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் வரவிருக்கும் தேர்தலில் உறுதியாக காங்கிரஸ் தோல்வியடைய இருக்கிறது.
எங்களுடைய வெற்றிக்கு பின்னால் உள்ள காரணம், மக்கள் எங்களுடைய கொள்கையோடு இணைக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ராமர் கோவில், பயங்கரவாதிகள் மீது சர்ஜிகல் தாக்குதல், சட்டப்பிரிவு 370 நீக்கம், பொது சிவில் சட்டம், முத்தலாக் சட்டம், வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு எதிராக பிரசாரம் ஆகியவற்றை எதிர்த்தது.
மக்கள் விரும்புவதை, நீங்கள் எதிர்த்தால், நீங்கள் எப்படி வாக்குகளை பெறுவீர்கள்? என்பதை எனக்கு சொல்லுங்கள்.
ஆனால், இத்தகைய ஒரு எளிய லாஜிக்கை ராகுல் பாபாவுக்குப் புரிய வைப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது, ஏனென்றால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே அதை அவருக்குப் புரிய வைப்பதில் தோல்வியடைந்து விட்டனர்.
- ஒவ்வொரு பெற்றோருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், உங்கள் குழந்தைகளை விளையாட ஊக்குவியுங்கள்.
- உங்களை போன்ற இளம் விளையாட்டு வீரர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்.
குஜராத் மாநிலம் ஜூனகத்தில் விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்று பேசியதாவது:-
இந்தப் போட்டியில் பங்கேற்ற சில வீரர்களுடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். அவர்களின் உற்சாகம், மன உறுதி, ஆர்வம் ஆகியவற்றில் இந்தியாவின் வலிமையின் ஒரு சிறு பார்வையை என்னால் காண முடிந்தது. வீரர்களிடம் இருக்கும் தன்னம்பிக்கை கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு அதே நம்பிக்கையை ஊட்டுகிறது. அதனால்தான், ஸ்டார்ட்-அப்கள், விண்வெளி, அறிவியல், விளையாட்டு என ஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் இளைஞர்கள் தங்கள் கொடியை உச்சத்தில் பறக்கவிட்டுள்ளனர்.
ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் வெற்றிக்காக மட்டும் விளையாடவில்லை. நீங்கள் நாட்டிற்காக விளையாடுகிறீர்கள், மூவர்ணக் கொடியின் பெருமைக்காகவும் மரியாதைக்காகவும் விளையாடுகிறீர்கள்.
ஒவ்வொரு பெற்றோருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், உங்கள் குழந்தைகளை விளையாட ஊக்குவியுங்கள், அவர்களுக்கு விளையாடுவதற்கு வாய்ப்புகளை வழங்குங்கள். ஏனென்றால் விளையாட்டு கற்றலின் ஒரு பகுதி மட்டுமல்ல ஆரோக்கியமான உடலுக்கும், மனதிற்கும் ஒரு அத்தியாவசியமான தேவையுமானது.
இன்று விளையாட்டுகளில் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அவை வரம்பற்றவை. ஏழ்மையான குடும்பங்களை சேர்ந்த குழந்தைகூட இளம் வயதிலேயே உச்சத்தை அடைய முடியும்.
வரும் ஆண்டுகளில் இந்தியா பல முக்கிய விளையாட்டுகளை நடத்த இருக்கிறது. 2030-ல் அகமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடக்கிறது. உங்களை போன்ற இளம் விளையாட்டு வீரர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்.
மேலும் 2036-ல் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கும் இந்தியா முயற்சி செய்து வருகிறது.
இன்று 10 அல்லது 12 வயது இளைஞர்கள்தான் 2036 ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தப் போகிறார்கள். அவர்களை நாம் இப்போதே கண்டறிந்து, வளர்த்து, தேசிய அரங்கிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.
- ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 12.72 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்தனர்.
- சொத்துகளின் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாயை தாண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்ட துணை போக்குவரத்து ஆணையர் மூட் கிஷன். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது ஊழல் தடுப்பு பிரிவுக்கு புகார் வந்தது.
இதைத் தொடர்ந்து தெலுங்கானா ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அவருக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது அவர் ரூ.12.72 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்களை வாங்கி இருந்தது கண்டறியப்பட்டது. இந்த சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்பு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இதனால் அவர் வாங்கிய சொத்துக்களின் மதிப்பு ரூ.100 கோடி வரை செல்லலாம் என்று கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தின் 13 (1), (பி) மற்றும் 13 (2) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- விமானம் ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட மிகச் சில விநாடிகளிலேயே விபத்துக்குள்ளானது.
- விமான விபத்தில் மொத்தம் 260 பேர் பலியானார்கள்.
2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு கருப்பு தினமாகும். இந்த விபத்தில் 241 உயிர்கள் பரிபோனது.
2025ம் ஆண்டு ஜூன் 12 அன்று மதியம் 1:39 மணியளவில், ஏர் இந்தியா போயிங் 787-8 டிரீம்லைனர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலே விபத்துக்குள்ளானது.

குஜராத்தின் அகமதாபாத் (சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம்) முதல் லண்டன் (கேட்விக் விமான நிலையம்) வரை விமானம் புறப்பட்டது.
விமானம் ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட மிகச் சில விநாடிகளிலேயே விபத்துக்குள்ளானது. சரியாக 32 விநாடிகளில், விமானம் கட்டுப்பாட்டை இழந்து விமான நிலையத்திற்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்தது. விமானம் விழுந்த வேகத்தில் அங்கிருந்த பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதி தீப்பிடித்தது.
விமானத்தில் இருந்தவர்கள் மொத்தம் 242 பேர் (230 பயணிகள் + 12 ஊழியர்கள்). இதில் 241 பேர் உயிரிழந்தனர். அதிசயத்தக்க வகையில் ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் தப்பினார்.

தரையில் இருந்தவர்கள்: விமானம் மருத்துவக் கல்லூரி விடுதி மீது விழுந்ததால், அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். அதன்படி, இந்த விபத்தில் மொத்தம் 260 பேர் பலியானார்கள்.
விமானம் புறப்பட்ட உடனேயே அதன் இரண்டு இன்ஜின்களுக்கும் செல்லும் எரிபொருள் விநியோகம் திடீரெனத் துண்டிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் இரண்டு இன்ஜின்களும் செயலிழந்ததால், விமானிகளால் விமானத்தை மீண்டும் ஓடுதளத்திற்குத் திருப்ப அல்லது அவசரமாகத் தரையிறக்க போதிய நேரம் கிடைக்கவில்லை.
இந்த விபத்து நவீன ரகமான 'டிரீம்லைனர்' விமானங்களின் பாதுகாப்பு குறித்து உலகளவில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
அகமதாபாத் நகரமே இந்த விபத்தினால் பெரும் சோகத்தில் ஆழ்ந்தது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மத்திய அரசு மற்றும் ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கின.
- முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 231 ரன்கள் குவித்தது.
- திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அரை சதமடித்தனர்.
அகமதாபாத்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 231 ரன்கள் குவித்தது. திலக் வர்மா 73 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 63 ரன்னும் அடித்தனர்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் கார்பின் போஷ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா 30 ரன் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ஹர்திக் பாண்ட்யா வெறும் 16 பந்தில் அரை சதம் விளாசினார்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய 2-வது இந்திய வீரர் என்ற அபிஷேக் சர்மாவின் (17 பந்துகள்) சாதனையை பாண்ட்யா முறியடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் யுவராஜ் சிங் முதலிடத்தில் உள்ளார்.
யுவராஜ் சிங் - 12 பந்து
ஹர்திக் பாண்ட்யா - 16 பந்து
அபிஷேக் சர்மா - 17 பந்து
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 231 ரன்கள் குவித்தது.
அகமதாபாத்,
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 231 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 42 பந்தில் 73 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 25 பந்தில் 63 ரன்களும் அடித்தனர். சஞ்சு சாம்சன் 37 ரன்னும், அபிஷேக் சர்மா 34 ரன்னும் எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்கா சார்பில் கார்பின் போஷ் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. டி காக் அதிரடியாக ஆடினார். 35 பந்தில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டெவால்டு பிரேவிஸ் 17 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரை 3-1 என கைப்பற்றி அசத்தியது.
இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும், பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
- நான்கு போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.
- இரு அணிகள் இடையிலான 5வது டி20 போட்டி இன்று குஜராத்தில் நடக்கிறது.
அகமதாபாத்:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 ஓவரில் 3 ஆட்டத்தின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.
கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் 101 ரன் வித்தியாசத்திலும், தர்மசாலாவில் நடந்த 3-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
நியூ சண்டிகரில் நடந்த 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4வது போட்டி கடும் பனி காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இரு அணிகள் அணிகள் மோதும் 5-வது டி20 போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
உடல் நலம் சரியில்லாததால் அக்சர் படேல் மற்றும் சுப்மன் கில் விலகியுள்ளனர்.
பேட்டிங்கில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடுகிறார். முதல் 2 ஆட்டத்திலும் சொதப்பிய சுப்மன் கில் 3வது போட்டியில் சராசரி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன்களை எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.
மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய நெருக்கடி உள்ளது. இதில் தோற்றால் தொடரை இழந்துவிடும். அந்த அணி இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்யும் வேட்கையில் உள்ளது.
கேப்டன் மார்க்ரம், குயின்டன் டி காக், பிரேவிஸ், மில்லர், யான்சென், நிகிடி, டொனவன் பெராரியா போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.
இரு அணிகளும் 35 டி20 போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா 20-ல், தென் ஆப்பிரிக்கா 13-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் முடிவு இல்லை.
- ரிவாபா ஜடேஜா பாஜக ஆளும் குஜராத்தின் கல்வி அமைச்சராக உள்ளார்.
- என் கணவர் ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட்டுக்காக லண்டன், துபாய், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக ரவீந்திர ஜடேஜா உள்ளார். அவரின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜக ஆளும் குஜராத்தின் கல்வி அமைச்சராக உள்ளார்.
இந்நிலையில் துவாரகாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரிவாபா, "என் கணவர் ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட்டுக்காக லண்டன், துபாய், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்கிறார். ஆனாலும், இன்றுவரை அவர் எந்தவொரு போதைப் பழக்கத்தையோ அல்லது வேறு எந்த தீய பழக்கத்தையோ தொட்டது கூட கிடையாது.
அவருக்குத் தனது பொறுப்பு என்னவென்று தெரியும். ஆனால், அணியில் உள்ள மற்ற வீரர்கள் சிலர் இது போன்ற பழக்கங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை" என்று தெரிவித்தார்.
தனது கணவனை புகழும் அதே வேளையில் ரிவாபா மற்ற வீரர்களை அவமதித்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- தகராறு முற்றியதால் கேசவ் மனைவி தனது குழந்தையை அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
- இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த கேசவ் என்பவருக்கு கடந்த 2002ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு கேசவ் மனைவி உணவில் பூண்டு மற்றும் வெங்காயம் சேர்க்காமல் சமையல் செய்ய ஆரம்பித்தார். இது கேசவ் குடும்பத்தில் உள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை.
வெங்காயம், பூண்டு இல்லாமல் சமையல் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
தகராறு முற்றியதால் கேசவ் மனைவி தனது குழந்தையை அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு கேசவ் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி அகமதாபாத் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியது. அதோடு மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்கவும் உத்தரவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து இருவரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த குஜராத் ஐகோர்ட்டு இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. வெங்காயம், பூண்டால் திருமண தம்பதி பிரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு இணையத்தில் விவாதப்பொருளாகவும் மாறி உள்ளது.
- விமான நிலைய ரன்வேயில் இருந்து வானில் விமானம் பறந்தது.
- திடீரென கீழே இறங்கி அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி தீப்பிடித்தது.
அகமதாபாத்:
அழகான மாலை நேரம். பார்க்கில் வாக்கிங் செல்பவர்கள் தங்களது நண்பர்களுடன் பேசிக் கொண்டும், காதில் இயர்போன் மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டும் சென்று கொண்டிருந்தனர்.
அங்குள்ள பெஞ்சில் 65 வயது பெரியவர் சபேசன் உட்கார்ந்து இருந்தார். அங்குள்ளவர்களை சுற்றிலும் நோக்கினார்.
அப்போது ஒருவர் வந்து அவரிடம், ஐயா என்னை நினைவிருக்கிறதா என கேட்டார்.
சரியாக ஞாபகம் இல்லையேப்பா என சபேசன் கூறினார்.
ஐயா, நான் தங்களிடம் படித்த மாணவன். என பெயர் முருகேஷ் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். படித்து வெளியூர் சென்று விட்டேன். தற்போது தான் இந்த ஊருக்கு வந்துள்ளேன் என்றார்.
ரொம்ப சந்தோஷம்பா, என்னை எப்படி அடையாளம் கண்டு கொண்டாய்? என கேட்டார்.
எங்களுக்கு எளிதில் புரியும் விதமாக ஒரு உதாரணம் சொல்லி தானே சார் நீங்க பாடம் நடத்துவீங்க. அதை எப்படி என்னால மறக்க முடியும் என உற்சாகமாக சொன்னார்.
நல விசாரிப்புகள் முடிந்தபின் ஊர் உலக நடப்புகள் பற்றிய பேச்சு வந்தது.
அப்போது அந்த ஆசிரியர், சரி உனக்கு எமன் கிட்ட இருந்து தன் புருஷனை மீட்ட சாவித்ரி பத்தி சொல்லி இருக்கேனே, அதுமாதிரி கடந்த ஆண்டு ஒரு ஆள் எமன் கிட்ட இருந்து தப்பிச்சு வந்திருக்கான் தெரியுமா உனக்கு என புதிர் போட்டார்.
யாருன்னு எனக்கு சரியா தெரியலையே சார், சொல்லுங்க சார் ஞாபகம் வச்சிக்கிறேன் என்றார்.
ஆசிரியர் கூறிய விஷயம் இதுதான்:
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம் ஜூன் மாதம் 12-ம் தேதி புறப்பட்டுச் சென்றது.

ரன்வேயில் இருந்து வானில் பறந்த விமானம் திடீரென கீழே இறங்கி, விமான நிலையத்தின் அருகில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதி தீப்பிடித்தது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உள்பட மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர்.
விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பிரிட்டனைச் சேர்ந்த விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்பவரே அந்த அதிசய மனிதர். விமான விபத்தில் இவரது உறவினர் பலியானதால் சோகத்தில் ஆழ்ந்தார்.
நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. இறைவனுக்கு நன்றி எனக்கூறிய அவர், பிரதமர் மோடி நேரில் வந்து சந்தித்து ஆறுதல் கூறியது ஊக்கம் அளித்தது என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இப்படித்தான் அந்த ஆள் எமன் கிட்ட இருந்து தப்பிச்சு வந்தான் என கூறி முடித்த சபேசன், சரி, நான் கிளம்பறேன். வீட்டில் தேடுவாங்க. அடிக்கடி வந்துட்டு போப்பா. வேற யாராவது பார்த்தாலும் இங்க வரச்சொல்லு பேசலாம் என வீட்டுக்கு புறப்பட்டார்.
தனது பள்ளி பருவ ஆசிரியரை சந்தித்த நிறைவுடன் முருகேசும் வீடு திரும்பினார்.
- சர்தார் படேலின் பெருமைகளை மறைக்க காங்கிரஸ் முயற்சித்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
- மேடையில் இருந்த பாஜக தலைவர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.
குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று நடைபெற்ற சர்தார் படேல் 150 ஆண்டு நிகழ்வில் மத்திய அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜே.பி. நட்டா காங்கிரசை காரசாரமாக விமர்சித்துக்கொண்டிருந்தார். சர்தார் படேலின் பெருமைகளை மறைக்க காங்கிரஸ் முயற்சித்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
அவர் பேசிக்கொண்டிருக்கும்போது மேடைக்கு முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை மற்ற அதிகாரிகள் தூக்கிச் சென்றனர். ஆனால் நட்டா இவை எதையும் பொருட்படுத்தாமல் தனது உரையை நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இந்த வீடியோவை எக்ஸில் பகிர்ந்துள்ள இந்திய இளைஞர் காங்கிரஸ், ஜே.பி. நட்டா பேசிக்கொண்டிருந்தபோது, பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் மேடை அருகே மயங்கி விழுந்துள்ளார்.
இருப்பினும், நட்டா தனது பேச்சை நிறுத்தவில்லை .மேடையில் இருந்த பாஜக தலைவர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.
கண் முன்னால் ஒருவர் விழுந்ததைக் கூடப் பொருட்படுத்தாத பாஜக தலைவர்கள், பணவீக்கம், வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினைகள் போன்ற பொதுமக்களின் கஷ்டங்களைப் பற்றி எப்படி அக்கறை செலுத்துவார்கள்?
அதிகாரம் மட்டுமே முக்கியம், பொதுமக்களின் கஷ்டங்கள் ஒரு பொருட்டல்ல என்பதே பாஜகவின் யதார்த்தம். பாஜக மனித நேயத்தை விற்றுவிட்டது என்று சாட்டியுள்ளது.
இதற்கிடையே மயங்கி விழுந்தவர், நீண்ட நேரம் நின்றதால் சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவ உதவிக்கு பின் அவர் உடல்நிலை சீரானதாக கூறப்படுகிறது.
- அரவிந்த் ஒரு சிறந்த BLO என்றும், அவரது வாக்குச்சாவடியில் 40 சதவீத பணிகளை முடித்துள்ளதாகவும் ஆட்சியர் கூறினார்.
- BLO க்கள் தற்கொலை தொடர்கதையாகி வருவது பணிச்சுமை குறித்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி (SIR) -க்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) ஆக நியமிக்கப்பட்ட ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.
கிர் சோம்நாத் மாவட்டத்தில் தேவ்லி கிராமத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் அரவிந்த் வதேர் நேற்று காலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அரவிந்த் தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில், தனது SIR பணியைத் தொடர முடியவில்லை என்றும், மன அழுத்தத்தில் இருப்பதாகவும், மரணத்தைத் தவிர வேறு வழியில்லை என்றும் எழுதியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் என்.வி. உபாத்யாய் தெரிவித்தார்.
அரவிந்த் ஒரு சிறந்த BLO என்றும், அவரது வாக்குச்சாவடியில் 40 சதவீத பணிகளை முடித்துள்ளதாகவும் ஆட்சியர் கூறினார்.
கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் BLO க்கள் தற்கொலை தொடர்கதையாகி வருவது பணிச்சுமை குறித்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.






