search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "attack"

    • காயம் அடைந்த அந்தோணிராஜ், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
    • புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷை தேடிவருகின்றனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் இந்திரா நகரை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 38). இவரது மனைவி அனுசியா. இவர்களுக்கு அந்தோஸ் (9), மித்ரா (2) என்ற 2 குழந்தைகள் உள்ளது. அந்தோணிராஜ் கூலி வேலை செய்து வருகிறார்.

    அந்தோணிராஜின் குழந்தை அந்தோஸ் அருகில் உள்ள மார்க்கெட் கமிட்டி திடலில் சக குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, குழந்தைகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அந்தோணிராஜ், ஏன் உங்களுக்குள் சண்டை போட்டுகொள்கிறீர்கள் என சமாதானம் செய்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த மஸ்தான் பள்ளி வீதியை சேர்ந்த சந்தோஷ், நீ யாருடா என ஆபாசமாக திட்டி, கையில் வைத்திருந்த கிரிக்கெட் பேட்டால் அந்தோணிராஜின் தலையில் அடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.

    இதில், காயம் அடைந்த அந்தோணிராஜ், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷை தேடிவருகின்றனர்.

    • தேர்தல் பிரசாரத்தின் போது ஆந்திர முதல் மந்திரி மீது கல் வீசப்பட்டதில் அவர் காயமடைந்தார்.
    • இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி, சந்திரபாபு நாயுடு, மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

    அமராவதி:

    ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் பிரசாரத்துக்காக ரோடு ஷோ நடத்தினார். சிங் நகர் தாபா கோட்லா மையத்தில் நடந்த ரோடு ஷோவில் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபரின் கல்வீச்சு தாக்குதலில் ஜெகன்மோகன் காயமடைந்தார்.

    இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் இடது புருவத்தில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு அருகிலிருந்த டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த தாக்குதலில் முதல் மந்திரி அருகிலிருந்த எம்.எல்.ஏ. வெள்ளம்பள்ளியின் இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு ஜெகன் மோகன் ரெட்டி தனது பேருந்து யாத்திரையைத் தொடர்ந்தார்.

    இந்த தாக்குதலின் பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் இருப்பதாக விஜயவாடா ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர முதல் மந்திரி மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    முதல் மந்திரி மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வான்வழித் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    • இஸ்ரேலின் பாதுகாப்புக்காக நாங்கள் அர்ப்பணித்து இருக்கிறோம்.

    சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் கடந்த வாரம் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

    இதில் 2 ராணுவ தளபதிகள் உள்பட 9 பேர் பலியானார்கள். இதனால் கடும் ஆத்திரமடைந்துள்ள ஈரான், தக்க பதிலடி கொடுப்போம் என்று சூளுரைத்துள்ளது.

    இதனால் இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று தகவல் வெளியானது. மேலும், இவ்விவகாரத்தில் ஒதுங்கி இருக்குமாறு அமெரிக்காவிடம் ஈரான் தெரிவித்தது.

    இதற்கிடையே இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    இஸ்ரேல் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. வான்வழித் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும்போது, "இஸ்ரேலை ஈரான் விரைவில் தாக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

    நான் உறுதியான தகவலுக்குள் போக விரும்பவில்லை. ஆனால், இஸ்ரேல் மீது ஈரான் காலதாமதமின்றி விரைவில் தாக்குதல் நடத்தக்கூடும். இந்த தருணத்தில் ஈரானுக்கான என்னுடைய செய்தி, போர் வேண்டாம் என்பதுதான்.

    இஸ்ரேலின் பாதுகாப்புக்காக நாங்கள் அர்ப்பணித்து இருக்கிறோம். இஸ்ரேலுக்கு ஆதரவை வழங்குவோம். இஸ்ரேல் பாதுகாப்புக்கு நாங்கள் உதவுவோம். ஈரான் வெற்றி பெறாது என்றார்.

    ஏற்கனவே இஸ்ரேல்- காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையே போரால் அந்த பிராந்தியத்தில் பதற்றம் இருந்து வரும் நிலையில் தற்போது இஸ்ரேல்- ஈரான் மோதல் மேலும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. 

    இதையடுத்து இஸ்ரேல், ஈரானுக்கு மறுஉத்தரவு வரும்வரை செல்ல வேண்டாம் என்று இந்தியர்களை மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அதேபோல் பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகளும் தங்களது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு இயக்கமான ஹஸ்புல்லா அங்கிருந்து வடக்கு இஸ்ரே லுக்குள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் சில ஏவுகணைகளை இஸ்ரேல் இடைமறித்து அழித்தது.

    • ஜிஎஸ்டி வரி குறித்து பெண் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
    • இதனால் அவரை தகாத வார்த்தைகளில் பேசி பா.ஜ.,வினர் தாக்குதல் நடத்தினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் பகுதியில் பாஜகவினர் பிரசாரத்திற்கு சென்றனர்.

    அப்போது அங்கிருந்த ஒரு பெண், பா.ஜ.க.வினரிடம் சானிடரி நாப்கின்களுக்கு கூட ஜி.எஸ்.டி வரி வசூலிப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.

    இதையடுத்து, பா.ஜ.க.வினர் அந்தப் பெண்ணை தகாத வார்த்தைகளில் பேசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தை அந்தப் பெண்ணே வீடியோ எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகியது. இதற்கு தி.மு.க.வினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், முதலில் கோவையில் பா.ஜ.க. வன்முறை. அடுத்து திருப்பூரில் கோழைத்தனமாக தன்னந்தனியாக நின்ற ஒரு இளம்பெண் மீது கொலைவெறித் தாக்குதல். கோவையில் தோல்வி நிச்சயம் என்றதும் வன்முறை வெறியாட்டம் ஆட துவங்கியுள்ளது பா.ஜக. திருப்பூரிலும் ஒரு பெண்மணி ஜி.எஸ்.டி அநியாயங்கள் குறித்து துணிவாகவும் நேர்மையாகவும் கேட்டதற்கு பா.ஜ.க.வினர் 5 பேர் சேர்ந்து அந்த இளம் பெண்ணை தாக்கியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இந்த அடாவடி அராஜகக் கூட்டம் அமைதியான கோவை-திருப்பூருக்கும், தமிழகத்திற்கும் தேவையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    • நில பிரச்சினை சம்பந்தமாக பழங்குடியினர் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.
    • இன்ஸ்பெக்டரை குறிவைத்து பழங்குடியின வாலிபர்கள் சிலர் தாக்கி கொண்டே இருந்தனர்.

    தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் சத்துப்பள்ளி மண்டலம் ராய பாலம் கிராமத்தில் பழங்குடியினர்கள் வசித்து வருகின்றனர்.

    நில பிரச்சினை சம்பந்தமாக பழங்குடியினர் இரு தரப்பினர் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது.

    இதனை அறிந்த சத்து பள்ளி போலீசார் பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க அங்கு வந்தனர். இரு தரப்பினரையும் ஒருங்கிணைத்து பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றனர்.

    அப்போது ஆத்திரம் அடைந்த பழங்குடியினரின் ஒரு தரப்பினர் கம்புகளால் போலீசாரை தாக்கினர். அதிலும் குறிப்பாக இன்ஸ்பெக்டர் ஒருவரை பைக்கில் இருந்து கீழே இழுத்து தள்ளினர். அவரை கம்பு மற்றும் கைகளால் புரட்டி எடுத்தனர். அங்கிருந்த போலீசாரால் இதை தடுக்க முடியவில்லை.

    இன்ஸ்பெக்டரை குறிவைத்து பழங்குடியின வாலிபர்கள் சிலர் தாக்கி கொண்டே இருந்தனர்.

    இதனால் போலீசார் இன்ஸ்பெக்டரை மீட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதில் இன்ஸ்பெக்டர் உட்பட மேலும் சில போலீசார் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பழங்குடியினர் குறிப்பாக ஒரு இன்ஸ்பெக்டரை மட்டும் குறிவைத்து அதிக அளவில் தாக்கியது ஏன் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்ல. இன்ஸ்பெக்டரை குறி வைத்து தாக்கியதில் சதி செயல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்பெக்டரை பழங்குடியினர் விரட்டி தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பதற்காக நடந்து வரும் இந்த சண்டையில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர்.
    • ஆளில்லாத 4 டிரோன்களை செங்கடலில் அமெரிக்க போர்க்கப்பலை குறி வைத்து ஏவினார்கள்.

    வாஷிங்டன்:

    பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல் படை தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பதற்காக நடந்து வரும் இந்த சண்டையில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர்.இதில் அப்பாவி குழந்தைகள் மற்றும் பெண்கள் தான் அதிகம். ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை.

    பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நோக்கி செல்லும் சரக்கு கப்பல்களைஅவர்கள் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் செங்கடல் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஹவுதி கிளர்ச்சி யாளர்கள் தாக்குதலை முறியடிக்க செங்கடல் பகுதியில் அமெரிக்கா தனது கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளது. அந்நாட்டு கடற்படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டில் இருந்து ஆளில்லாத 4 டிரோன்களை செங்கடலில் அமெரிக்க போர்க்கப்பலை குறி வைத்து ஏவினார்கள். இதனால் உஷாரான அமெரிக்க படையினர் அந்த டிரோன்களை சுட்டு வீழ்த்தி அழித்தனர்.

    இந்த டிரோன்கள் வீசியதில் எந்த சேதமும் ஏற்படவில்லை. 

    • உக்ரைனுக்கு வந்து, எங்கள் நகரங்களை எரித்தனர், பின்னர் உக்ரைனைக் குறை கூற முயன்றனர்.
    • தங்கள் சொந்த நாட்டிற்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

    மாஸ்கோவில் நடந்த தாக்குதலில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மாஸ்கோவில் என்ன நடந்தது என்பது வெளிப்படையானது. இந்த தாக்குதலுக்கு புதினும், மற்றவர்களும் எங்கள் மீது குற்றம்சாட்ட முயற்சிக்கிறார்கள். அவர்களின் முறைகள் எப்போதும் ஒரே மாதிரியானவை. அதையெல்லாம் முன்பே பார்த்திருக்கிறோம். எப்போதும் மற்றவர்களை குறை கூறுவார்கள். அவர்கள் உக்ரைனுக்கு வந்து, எங்கள் நகரங்களை எரித்தனர், பின்னர் உக்ரைனைக் குறை கூற முயன்றனர். அவர்கள் மக்களை சித்ரவதை செய்து கற்பழிக்கிறார்கள்-பின்னர் அவர்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். எங்களுக்கு எதிராக போரை நடத்துகிறார்கள், ஆனால் அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

    ரஷிய குடிமக்களை பற்றி பேசுவதற்குப் பதிலாக, இத்தாக்குதலை உக்ரைனுடன் எவ்வாறு இணைப்பது என்று யோசித்து புதின் ஒரு நாள் அமைதியாக இருந்தார். உக்ரேனிய மண்ணில் தற்போது கொல்லப்படும் நூறாயிரக்கணக்கான ரஷ்யர்கள், அவர்கள் நாட்டில் இருந்திருந்தால் நிச்சயமாக பயங்கரவாதிகளை தடுத்திருக்க முடியும். புதின் தனிப்பட்ட அதிகாரத்திற்காக இந்த சூழ்நிலைகளில் அதிகமானவற்றைப் பயன்படுத்த முயற்சிப்பார். தீவிரவாதிகள் எப்போதும் தோற்க வேண்டும் என்றார்.

    • படகில் உள்ளவர்களுக்கு சிறிய படகுகள் மூலம் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது.
    • சர்ச்சைக்குரிய இரண்டாவது தாமஸ் ஷோல் பகுதி பிலிப்பைன்ஸ் கட்டுப்பாட்டில் உள்ளது.

    பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தென்சீனக்கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அதேசமயம் பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளும் அதற்கு உரிமை கோருகின்றன. குறிப்பாக சர்ச்சைக்குரிய இரண்டாவது தாமஸ் ஷோல் பகுதி பிலிப்பைன்ஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான படகுகள் அங்கு ரோந்து பணியில் ஈடுபடுகின்றன. அந்த படகில் உள்ளவர்களுக்கு சிறிய படகுகள் மூலம் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது.

    அந்தவகையில், நேற்று பிலிப்பைன்சுக்கு சொந்தமான சிறிய படகு சென்றபோது சீன போர்க்கப்பல்கள் அவர்கள் மீது தண்ணீர் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த படகு பலத்த சேதம் அடைந்தது. சீனாவின் இந்த தாக்குதலுக்கு பிலிப்பைன்ஸ் ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது இந்த மாதத்தில் நடைபெற்ற சீனாவின் 2-வது தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சமீபகாலமாக பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்படுவது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தது.
    • கடந்த நவம்பர் மாதம் லஷ்கர்-இ-தொய்பா தளபதி அக்ரம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாத தளபதிகளில் ஒருவர் ஷேக் ஜமீல்-உர்-ரஹ்மான்.

    காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த இவர் ஐக்கிய ஷிகாத் கவுன்சிலின் பொதுச் செயலாளர் மற்றும் தவ்ரீக்-உல்-முஜாகிதீன் அமைப்பு தலைவராக செயல்பட்டு வந்தார்.

    காஷ்மீரில் நடந்த பல தாக்குதல்களில் தொடர் புடைய ஜமீல்-உர்-ரஹ்மானை, இந்திய அரசு கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் தீவிரவாதியாக அறிவித்து தேடி வந்தது.

    இந்நிலையில் ஜமீர்-உர்-ரஹ்மான் பாகிஸ்தானில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.

    பாகிஸ்தானில் கைபர் பக்துள்கவா மாகாணத்தில் உள்ள அபோதாபாத்தில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து உறுதியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    சமீபகாலமாக பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்படுவது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தது.

    கடந்த நவம்பர் மாதம் லஷ்கர்-இ-தொய்பா தளபதி அக்ரம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    டிசம்பர் மாதம் கராச்சியில் லஷ்கர் தீவிரவாதி அபு ஹன்சலா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    நேற்று முன்தினம் லஷ்கர் உளவுத்துறை தலைவர் அசாம் சீமா மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 3076 தமிழ்நாடு மீனவர்கள் கைது.
    • கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

    தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து வரும் பிப்ரவரி 11ம் தேதி அன்று ராமேஸ்வரத்தில் திமுக மீனவரணி சார்பில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இலங்கை கடற்படையினரால் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 3076 தமிழ்நாடு மீனவர்கள் கைது செயப்பட்டுள்ளனர். 534 படகுகள் கடத்தப்பட்டுள்ளன.

    இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் குறித்தும் மீனவர் நலன் குறித்தும் தமிழக முதல்வர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளதோடு, பிரதமருக்கு 9 கடிதங்களும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 35 கடிதங்களும் எழுதியுள்ளார்.

    ஆனாலும் தமிழக மீனவர்கள் பிரச்சினையை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு கையாண்டு வருகிறது. இலங்கை அரசின் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

    தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து வரும் பிப்.11 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் ராமேஸ்வரத்தில், திமுக மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஒருங்கிணைப்பில், கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போர் காரணமாக காசா மக்கள், உணவு, தண்ணீர் மருந்து ஆகியவை கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறார்கள்.
    • பாலஸ்தீன அகதிகள் முகமை அமைப்பு கூறும் போது வடக்கு காசாவில் மக்கள் தீவிர உணவு பற்றாக்குறையை எதிர் கொண்டு வருகிறார்கள்.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடங்கிய போர் 4-வது மாதத்தை நெருங்கியுள்ளது.

    இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    போர் காரணமாக காசா மக்கள், உணவு, தண்ணீர் மருந்து ஆகியவை கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறார்கள். அவர்களுக்கு லாரிகள் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டாலும் போதுமான அளவு கிடைக்கவில்லை.

    இந்நிலையில் வடக்கு காசாவில் மக்களுக்கு உணவு பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமை சார்பில் உணவு, மருந்து உள்ளிட்டவைகளை ஏற்றிச்சென்ற லாரி மீது இஸ்ரேல் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த லாரி கடுமையாக சேத மடைந்தது. இதுகுறித்து பாலஸ்தீன அகதிகள் முகமை அமைப்பு கூறும் போது வடக்கு காசாவில் மக்கள் தீவிர உணவு பற்றாக்குறையை எதிர் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு உணவு பொருட்களுடன் லாரி ஒன்று செல்ல காத்திருந்தது.

    அந்த லாரி மீது இஸ்ரேல் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். மேலும் வடக்கு காசாவில் சுகாதார மருத்துவமனை ஒன்றும் அழிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான மற்றும் நிலையான மனிதாபிமான உதவிகள் காசாவின் எல்லா இடங்களிலும் அவசரமாக தேவைப்படுகிறது என்று தெரிவித்தது.

    சமீபத்தில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமையை சேர்ந்த ஊழியர்கள் சிலர் ஹமாஸ் அமைப்பினருக்கு உதவுவதாக கூறி அந்த முகமைக்கு அளித்து வந்த நிதியுதவியை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் நிறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே காசா சிட்டியில் குவைத் ரவுண்டானா அருகே மனிதாபிமான உதவிக்காக காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக ஐ.நா. மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது. காசா முழுவதும் போதிய நிவாரண பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    • விடியா அரசின் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்குடன் செயல்பட்டது
    • பாதிக்கப்பட்ட செய்தியாளர் நேசபிரபு விரைவில் பூரண உடல்நலம் பெற்று வீடுதிரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்ட சம்பவம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர் நேசபிரபு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

    மர்ம நபர்கள் தன்னை தாக்குவதற்கான அச்சமான சூழ்நிலை நிலவுவதாக நேசபிரபு தொடர்ச்சியாக காவல்துறையிடம் முறையிட்டும், தாக்குதலுக்கு 4 மணிநேரங்களுக்கு முன்பே தெரிவித்தும் இந்த விடியா அரசின் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்குடன் செயல்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.

    சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளால் ஏற்கனவே பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் தமிழகத்தில் நிலவி வருவதை நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவே இன்று செய்தியாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலாகும்.

    பாதிக்கப்பட்ட செய்தியாளர் நேசபிரபு விரைவில் பூரண உடல்நலம் பெற்று வீடுதிரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதோடு, அவர் குணமடைய உரிய மருத்துவ சிகிச்சை வழங்குமாறும், கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்து, பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழ்நிலையை உறுதிசெய்யுமாறு இந்த விடியா அரசை கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும், ஆட்சிக்கு வந்த நாள் முதலே சந்திசிரிக்கும் வண்ணம் சட்டம் ஒழுங்கை சீர்குலையச் செய்துள்ள, காவல்துறையை தன் கையில் வைத்திருப்பதாக சொல்லும் இந்த விடியா அரசின் பொம்மை முதல்வர், தன் கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் இனியாவது நிகழாவண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்.

    ×