என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RSS"

    • வட மாநிலங்களில் கையாளும் 'வியூக, வித்தைகள்' தமிழ்நாட்டில் செலாவணி ஆகாது!
    • 2026 இல் ஸ்டாலின் ஆட்சி' என்பது உறுதி!

    தி.மு.க. தலைமையிலான கொள்கைக் கூட்டணி தன் சாதனைகளால் வெற்றி பெற்று மீண்டும் (2026 இல்) ஸ்டாலின் ஆட்சி என்பது உறுதி என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "தமிழ்நாட்டில் கால் பதிக்க பி.ஜே.பி.யின் அமித்ஷாக்கள் பல தந்திரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அ.தி.மு.க. என்ற கூடாரத்தில் முதலில் நுழைந்து, பிறகு கூடாரத்தையே தன் வசமாக்கும் தந்திரம்! தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் எந்த சூழ்ச்சி வாண வேடிக்கைகளைக் காட்டினாலும், மீண்டும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கொள்கைக் கூட்டணியே வெற்றி பெறும். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி உறுதி! உறுதி!! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

    தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி, நேற்று (23.1.2026) வந்து, மதுராந்தகத்தில் தங்களது கூட்டணியின் சார்பில், தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். வட நாட்டில் பார்க்கும் 'சுப நாள்' என்னும் ('வசந்த பஞ்சமி' நாளாம்!) நாளில் தொடங்கி வைத்துள்ளார்!

    கடந்த ஆறு மாதங்களாக பி.ஜே.பி.யின் சிந்தனை எத்தகையது?

    கடந்த ஆறு மாதங்களாக, தி.மு.க. தலைவர் (மு.க.ஸ்டாலின்) அவர்களது தலைமையில் அமைந்து, தொடர்ந்து வெற்றிக் கனிகளைப் பறித்து வரும், கூட்டணிக்கு எதிராக வலுவான ஒரு கூட்டணியை அமைக்க முயற்சித்து, அது தனது சொந்தக்காலில் நிற்க முடியாததால், அ.தி.மு.க. போன்ற 'திராவிட' முத்திரையுள்ள எதிர்க்கட்சியான 'பெரிய கட்சி'யின் தோள்மீது சவாரி செய்தால்தான் முடியும்; இல்லையேல், தி.மு.க. கூட்டணியை அசைக்கவே முடியாது என்பதை ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. உணர்ந்துள்ளதால்,

    உள்துறை அமைச்சரான அமித்ஷாமூலம், அச்சுறுத்தல்களின் காரணமாக – எதிர்க்கட்சித் தலைவர் (அ.தி.மு.க. பொதுச்செயலாளர்) எடப்பாடி பழனிசாமிமூலம், ஒரு நிர்ப்பந்தக் கூட்டணியை – அ.தி.மு.க. என்ற பெரிய (தமிழ்நாட்டில்) கட்சியைத் தங்களது அரசியல் கூண்டுக்குள் (சாக்கில்) அடைத்து, சவுக்கெடுத்த ரிங் மாஸ்டர் போல பா.ஜ.க. தனது வெகுநாளைய ஆசையான, தமிழ்நாட்டைக் காவி அரசியல் மண்ணாக்கிட 'வியூகம்' வகுத்துக் களம் இறங்கி, வடக்கே செய்த வித்தைகளைக் கையாண்டு பார்த்தது.

    இது தந்தை பெரியாரின் பகுத்தறிவு – சுயமரியாதை மண் ஆகும்.

    இதில், ஜாதி, வர்ணாசிரமப் பாதுகாப்பு அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.ேஸா, அதன் அரசியல் அமைப்போ ஆழமாக ஒருபோதும் காலூன்றிவிட முடியாது என்பது பட்டாங்கமான சுவரெழுத்து.

    கூடாரத்தில் நுழையும் ஒட்டகம்!

    வட மாநிலங்களில் அமித்ஷா போன்றவர்கள் கையாண்ட வித்தைகளும், வியூகங்களும் இங்கே செலாவணி ஆகாது!

    அந்தக் கட்சித் தாவல் எம்.எல்.ஏ.,க்கள் ''ஆயாராம் காயாராம்'' பாடிக்கொண்டே முதலில் கூடாரத்தில் நுழைந்த ஒட்டகம், பிறகு கூடாரத்துக்காரர்களையே வெளியே துரத்திவிட்டு, கூடாரத்தைத் தனதாக்கிக் கொண்ட பழமொழி – தத்துவப்படி நடந்துகொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். அது இங்கே ஒருபோதும் பலிக்காது!

    சென்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்குக் கிடைத்த 4 உறுப்பினர்களின் எண்ணிக்கையாவது, இம்முறை கிடைக்குமா? என்பதே சந்தேகந்தான்! கட்சிகளைப் பிளந்து, ''விபீடணர்களையும், சுக்ரீவன்களையும்'' தங்கள் வசம் – ஆசைகாட்டியோ, பயமுறுத்தியோ ''திரிசூல'' அரசியலை எல்லாம் பயன்படுத்தியோ, களம் காண ஆயத்தமாகிய நிலையில்தான், பா.ஜ.க.வின் தலைமைத் தேர்தல் பிரச்சாரகரையே முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து, அரசியல் ஆலாபனக் கச்சேரி செய்துள்ளனர்!

    ஆனால், அவரது அணியோ, பரிதாபத்திற்குரிய கூட்டணியாக மேடையை ''அலங்கரித்தது!'' மாநிலத் தலைவர் மீதே 4 கோடி ரூபாய் தேர்தல் வழக்கு நிலுவை!

    பிரதமர் மோடி பேசிய கூட்ட மேடையில், கூனிக் குறுகி உட்கார்ந்தோர் எத்தகையவர்கள்?

    வழக்கில் சிக்கிக்கொண்டோர், வெளியே வருவதற்கு வழி தேட முனைவோர், வழக்கில் சிக்கி விடக்கூடாதே என்று கவலையோடு, முகவரி இழந்து முகாரி பாடிய சிலர், தனது பேச்சுகள் தன்னையே வறுத்தெடுக்கும் என்ற நிலையில்,

    ''ஆசை வெட்கமறியாது' அச்சுறுத்தலால் பணிவு வேறு வழியறியாது'' என்பதால்,

    'சரணம்', 'சரணம்', 'காவிச் சரணம்' என்று மேடையில், கூனிக் குறுகி, 'தம் நெஞ்சே தம்மைச் சுடும்' என்று அமர்ந்திருந்தனர் சிலர்.

    சென்ற முறை இருந்த கட்சிகள்கூட, அந்தத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முழுமையாகக் கூட இல்லை. வெடிப்புகள், சுவர் போல ஒன்று சேர்ந்து, மகிழ்ச்சியில்லாத ஒரு கூட்டணிக் காட்சியாகவே இருந்தது.

    பேசிய பிரதமர் மோடி 45 நிமிடங்களில், முன்பு அரைத்த மாவையே அரைத்தார்; இதனால் அவர்களுக்கு எந்த உருப்படியான அரசியல் அறுவடையும் கிடைக்காது!

    மழையிலே நனைந்து ('சாவி'யான) நெற்கதிர்கள் மூலம் என்ன கிடைக்கும்? அதைத்தான் அவர்கள் தங்கள் அரசியல் களத்து மேட்டு அறுவடைப் பயனாகப் பெற முடியும்?

    ஒரு என்ஜினால் இழுக்க முடியாதோ!

    'டபுள் என்ஜின்' என்பதைப்பற்றி ஆழ்ந்து சிந்தித்தால், ஒரு எஞ்சினால் இழுக்க முடியாது போனதாலோ என்னவோ அப்படி ஒரு சொல்லாடல்!

    ஆனால், தமிழ்நாட்டில் 'திராவிட மாடல்' ஆட்சியின் சாதனைகள், கல்வி, மருத்துவம், அமைதி, வளர்ச்சி என்பன வட மாநிலங்களில் இருக்கும் 'டபுள் என்ஜின்'கள் - பா.ஜ.க. அரசுகள் எட்ட முடியாத உயரத்திற்குச் சென்று, உலகப் பாராட்டைப் பெற்று வலம் வருகின்றன!

    தமிழ்நாட்டு மக்கள் தெளிவும், உறுதியும் பெற்று, பலனடைந்தவர்கள், நன்றியை மறக்காதவர்கள் என்பதால்,

    எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் சுருக்கென்று சொன்ன 'டப்பா என்ஜின்'களால் பிரச்சாரம் வெறும் பெருவெளிக் கூத்தாகவே முடிவது உறுதி!

    எவ்வளவு 'மத்தாப்பு – வாண வேடிக்கைகளை'க் காட்டினாலும், தெளிவான நிலைப்பாட்டை மேற்கொண்டு, தி.மு.க. கூட்டணி என்ற கொள்கைக் கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் ஸ்டாலின் ஆட்சி என்ற முத்திரைப் பதிப்பார்கள் என்பது முக்காலும் உண்மையே!" என்று தெரிவித்துள்ளார்.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிளவுப்படுத்தும் அரசியல் கேரளாவை மோசமான சூழ்நிலைக்கு தள்ளிவிடும்.
    • மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கு ஒரு பொறிக்காகக் காத்திருப்பவர்களின் கைகளில், எரியும் தீப்பந்தம் வழங்கப்படுகிறது.

    கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, வாக்குகளுக்காக ஆர்.எஸ்.எஸ். பாணியில் பிளவுப்படுத்தும் அரசியலை பின்பற்றுவதாக காங்கிரஸ் தலைவரும், அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான வி.டி. சதீசன் குற்றம்சாட்டியுள்ளார்.

    வாக்குகளை பெறுவதற்காக மக்களை பிளவுப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். வழியான அதே பாதையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பயணம் செய்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் பினராயி விஜயன் இதற்கு அதரவு தெரிவித்து வருகிறார்.

    இது தொடர்பாக வி.டி. சதீசன் கூறியதாவது:-

    UDF ஆட்சிக்கு வந்தால் வகுப்புவாத கலவரங்கள் வெடிக்கும் என்று சி.பி.எம். தலைவர் ஏ.கே. பாலன் கூறிய கருத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் ஆதரிக்கிறார். அதேவேளையில் மலப்புரம் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் காசர்கோடு நகராட்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் மதத்தை பற்றி அமைச்சர் சஜி செரியன் குறிப்பிடுகிறார். கேரள மாநில சட்டசபை வரலாற்றில் இதுபோன்று எந்த உறுப்பினரும் வகுப்புவாதம் குறித்து கருத்து தெரிவித்ததில்லை. வெற்றி பெற்றவர்களின் மதத்தை பார்க்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிளவுப்படுத்தும் அரசியல் கேரளாவை மோசமான சூழ்நிலைக்கு தள்ளிவிடும். மாநிலத்தின் முக்கிய மதிப்பை அழித்துவிடும். மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கு ஒரு பொறிக்காகக் காத்திருப்பவர்களின் கைகளில், எரியும் தீப்பந்தம் வழங்கப்படுகிறது. பினராயி விஜயனும் தானும் ஒரு நாள் நினைவுகளாகிவிடுவார்கள், ஆனால் கேரளா தொடர்ந்து நிலைத்திருக்கும்.

    சிபிஐ(எம்) கட்சி கேரளாவின் அடித்தளங்களையே எரித்துக்கொண்டிருக்கிறது. இது மாநிலத்தின் எதிர்காலத்திற்கு எதிரான ஒரு கொடூரச் செயலாகும். வரும் தலைமுறைகளுக்கு இதுபோன்ற அநீதியை இழைத்துவிடாதீர்கள்.

    இவ்வாறு சதீசன் தெரிவித்தார்.

    • திருப்பரங்குன்றத்தில் புதிதாக வேறு இடத்தில் தீபம் ஏற்ற முனைவோரின் நோக்கமென்ன?
    • திருப்பரங்குன்ற விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திற்குச் செல்வது அவசரத் தேவையாகும்!

    திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே தீபம் ஏற்றிய பிறகு, புதிதாக வேறொரு இடத்தில் தீபம் ஏற்ற முயற்சிப்பவர்களின் நோக்கம் என்ன? இதில் ஆர்.எஸ்.எஸ். மூக்கை நுழைப்பது ஏன்? இதற்கு நீதிபதிகள் துணைப் போகலாமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின்மீது தரந்தாழ்ந்து போகலாமா என்பது போன்ற வாசகங்களைப் பயன்படுத்தலாமா? மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வது அவசரத் தேவையாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

    அந்த அறிக்கையில், "திருப்பரங்குன்றத்தில் 'தீபத்தூண்' என்ற பெயரை அண்மையில் உருவாக்கிக் கொண்ட, ஹிந்துத்துவ – காவிக் கட்சியினர் திருப்பரங்குன்றம் மலைமீது வழமையான இடத்தில் முறைப்படி விளக்கு ஏற்றிய நிகழ்வு நடத்தப்பட்டது – அக்கோயில் நடைமுறைப்படி.

    இதை ஏற்காமல், தாங்கள் குறிப்பிடும் தர்காவிற்கு அருகில் தீபம் ஏற்றுவது என்று கடந்த பல ஆண்டுகளாக மதக் கலவரத்தை ஏற்படுத்த – ஹிந்து முன்னணியினரும் அவர்களது ''சுற்றுக்கிரகங்களும்'' தமிழ்நாட்டில் மதக் கலவரங்களைத் தொடங்க திட்டமிடுகின்றனர்.

    இவர்கள் உண்மையான முருக பக்தர்களோ, கடவுள் பக்தர்களோ அல்ல; தங்களது ஹிந்துத்துவ வெறியைப் பரப்புவதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை எப்படியாவது தமிழ்நாட்டில் வளர்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடனும், தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சி, கொள்கை உறுதியும், மக்களின் பேராதரவும் பெற்ற ஓர் ஆட்சியாக, அசைக்க முடியாத பாறைபோல் இருப்பதால், வாக்காளர்களிடம் மத உணர்வைத் தூண்டி, 'பக்தி' முகமூடியுடன் அந்தத் திருப்ப ரங்குன்றத்தை வைத்து ''அரசியல்'' செய்ய கிளம்பியுள்ளது.

    எதிர்மனுதாரர்களுக்குப் போதிய அவகாசம் தராத நீதிபதிகள்!

    சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் என்ற, தன்னை ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று பகிரங்கப்படுத்திய ஒருவர், இந்த தீப நிகழ்ச்சியில், அரசியலமைப்புச் சட்ட விதிகளைப் புறக்கணித்து, அவசர அவசரமாக – மற்றவர்களுக்குப் போதிய அவகாசம்கூடத் தராமல், குறிப்பிட்ட இடத்தில் மனுதாரருடன், சிலர் சென்று தீபம் ஏற்றுவதற்கு, மத்திய காவல்துறை துணை யுடன் அதை நிறைவேற்றவேண்டும் என்று கொடுத்த அரசியலமைப்புச் சட்ட விரோத அவசரத் தீர்ப்பின்மீது தமிழ்நாடு அரசும், அறநிலையத் துறையும் மேல்முறையீடு (அப்பீல்) செய்து, அவ்வழக்கு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின்முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    (அந்த இரு நீதிபதிகள் அமர்வு டாக்டர் ஜஸ்டிஸ் ஜி.ஜெயச்சந்திரன், ஜஸ்டிஸ் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆவர்).

    அந்த மேல்முறையீட்டில், தமிழ்நாடு அரசு, அறநிலையத் துறை, தர்கா தரப்பு, வக்ஃப் போர்டு, தொல்பொருள் துறை, மதுரை மாநகர காவல்துறை ஆணையர் தரப்பு, மதுரை மாவட்ட ஆட்சியர் (இவர்களை நீதிமன்றமே இணைத்திருக்கிறது) ஆகியோர் தரப்பில் எடுத்து வைத்த ஆழமான வாதங்களை அப்படியே புறந்தள்ளி, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ததோடு அல்ல,

    தனி நீதிபதியின் ஆணையில் கண்ட பல அம்சங்கள்பற்றி மேலே குறிப்பிட்ட பல அமைப்புகளின் வாதங்களுக்கு உரிய முறையில் தாங்கள் ஏற்கவில்லை என்பதற்கான விரிவான விளக்கம் ஏதும் தராமல், மேல் முறையீட்டை ஏற்காமல், தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

    தேவையற்ற கருத்துகளை அரசுமீதும், துறைகள்மீதும் நீதிபதிகள் சுமத்தலாமா?

    மேல்முறையீட்டில், நீதிபதிகள் கருத்துப்படி, தீர்ப்பு வழங்க முழு உரிமை உடையவர்கள் என்பது மறுக்க முடியாதது என்றாலும், இந்த மேல்முறையீட்டுத் தீர்ப்பில்,

    1. அப்பீல்தாரர்களின் வாதங்களுக்கு விளக்கம் தராதது மட்டுமல்ல; அதில் தரப்பட்ட தீர்ப்பு தமிழ்நாடு அரசுமீது, காவல்துறை முதலிய பல துறைகளின் – பொறுப்புணர்வு பற்றிய தேவையற்ற கருத்துகளை எடுத்து எழுதியிருக்கிறார்கள். தனி நீதிபதி தீர்ப்பைவிட, மிகவும் மோசமான – அரசியலமைப்புச் சட்ட மதச் சுதந்திர கூறுகள் 25, 26–க்கேகூட முற்றிலும் எதிரானதாகவே உள்ளது என்பதை அவர்களது வாசகங்களில் இருந்து, நடுநிலையாளர் எவரும் புரிந்துகொள்ள முடியும்.

    எடுத்துக்காட்டாக,

    It is "ridiculous and hard to believe" the fear of the mighty State that by allowing representatives of the Devasthanam to light the lamp at the stone pillar near top of the hill located within its territory of devasthanam land, on a particular day in a year, will cause disturbance to public peace. Of course, it may happen only if such disturbance is sponsored by the State itself. "We pray no State should stoop to that level to achieve their political agenda,"

    இதன் தமிழாக்கம்:

    தேவஸ்தானத்திற்குச் சொந்தமான நிலப்பரப்பிற்குள் அமைந்துள்ள மலையின் உச்சியில் உள்ள கல் தூணில், ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில், தேவஸ்தானத்தின் பிரதி நிதிகளை விளக்கேற்ற அனு மதிப்பதால் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் என்று சக்திவாய்ந்த அரசு அஞ்சுவது, 'கேலிக்குரியதும் நம்ப முடியாததும்' ஆகும். நிச்சயமாக, அத்தகைய குழப்பம் அரசாலேயே தூண்டிவிடப்பட்டால் மட்டுமே அது நிகழக்கூடும். ''தங்கள் அரசியல் நோக்கங்களை அடைவதற்காக எந்த அரசும் அந்த அளவிற்குத் தாழ்ந்துவிடக் கூடாது என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்.''

    கலவரத்தைத் தூண்டுவது அரசு என்று நீதிபதிகள் கூறலாமா?

    பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படும் என்ற நிலைபற்றி பொறுப்புள்ள ஓர் அரசு, அதன் அமைப்புகள் கவலைப்படுவதை கேலி செய்வதோடு, மிகவும் கீழிறக்கமான ஒரு கருத்தாக – அரசாங்கம்தான் அத்தகைய கலவரத்தையே தூண்டிவிடக் கூடும் என்று குற்றம் சுமத்தி எழுதலாமா? அதோடு அரசுக்கு ஏதோ ஓர் அரசியல் திட்டம் (Political Agenda) இருக்கிறது என்று எதை வைத்துக் கூறுகின்றனர்? இதுதான் மேல்முறையீடு தீர்ப்பின் லட்சணமா? இது முறையானதா? பொறுப்பான குற்றச்சாற்றா?

    அதுமட்டுமா?

    மற்றொரு பாராவில்,

    "We find that the apprehension expressed by the District Administration regarding probability of disturbance to the public peace is nothing but an imaginary ghost created by them for their convenience sake and to put one community against other community under suspicion and constant mistrust," the bench said.

    இதன் தமிழாக்கம்:

    ''பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படக்கூடும் என்பது குறித்து மாவட்ட நிர்வாகத்தால் வெளிப்ப டுத்தப்பட்ட அச்சம், அவர்களின் வசதிக்காக அவர்களால் உரு வாக்கப்பட்ட ஒரு கற்பனையான 'பூதமே' தவிர வேறில்லை என்றும், ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்திற்கு எதிராகச் சந்தேகத்திலும், தொடர்ச்சியான அவநம்பிக்கையின் கீழும் நிறுத்துவதே இதன் நோக்கம் என்றும்'' நீதிபதிகள் அமர்வு கூறியது.

    அரசியலமைப்புச் சட்டத்தின்மீது எடுத்த உறுதிமொழியை அடித்து நொறுக்கலாமா நீதிபதிகள்?

    ''தனி நீதிபதியின் ஏற்க முடியாத தீர்ப்பினை, அகலப்படுத்துவதுபோல, ''தீபத்தூண் கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமானது. கார்த்திகைத் தீபத்தை மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கோயில் நிர்வாகம் ஏற்றவேண்டும். அதனை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிடவேண்டும்.

    தீபம் ஏற்றும் நிகழ்வின்போது கோயில் நிர்வாகத்துடன் செல்ல, மக்களுக்கு அனுமதி இல்லை.''

    இப்படிக் கூறுவது நீதிபதிகள் எடுத்த பதவிப் பிரமாணப்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றும் உறுதிமொழிக்கு நேர் முரண் அல்லவா! பீடிகை (Preamble) அடிக்கட்டுமானம் கூறிய Secular என்பதை இது அடித்து நொறுக்குவதாகாதா?

    கூறு (Article) 25, 26, Subject to Public Order, Morality, Health என்ற பிரிவுகளைத் தூக்கி தூர எறிந்திருப்பது, தமது கடமை உணர்வு தவறியதாகாதா?

    முந்தைய பக்கங்களில் பக்தர்கள் வழிபாட்டு உரிமைபற்றி விளக்கம் கூறுவதை ஏற்ற இந்த அமர்வு, அதற்கு நேர்முரணாக சிலர் மட்டுமே தீபம் ஏற்ற மேலே செல்லவேண்டும் – மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் துணையோடு என்றால், மற்ற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றால், கொதிப்பு, கொந்தளிப்பு, கலவரம் ஏற்படாதா?

    இது சட்டம் – ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்காதா? அந்த அமர்வு நீதிபதிகள்தான் இந்த முரண்பாட்டுக்குப் பதில் அளிக்க வேண்டும்!

    அதுமட்டுமல்ல!

    திருமூலர் பாட்டு ஆகமம் ஆகுமா?

    ஆகமப்படி, உச்சிப்பிள்ளையார் கோயிலில் முறைப்படி 'தீபம்' ஏற்றியாகிவிட்டது. மறு முறை செய்ய ஆகமத்தைச் சுட்டிக் காட்டிய அறநிலையத் துறை வாதத்தினை மறுத்து, திருமூலரைத் தேடி, தீர்ப்புச் சொல்கிறார்கள்.

    ''திருமூலர் பாட்டு ஆகமமாகுமா?'' அர்ச்சகக் கூட்டத்தினர்கூட ஏற்க மாட்டார்களே!

    திருமூலர், சித்தர்பாட்டு – அதுமட்டுமல்ல,

    ''நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே

    சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா

    நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் ளிருக்கையில்

    சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ''

    என்று சித்தர் சிவவாக்கியர் எழுதியுள்ளதை ஏற்பார்களா என்று கேள்வி கேட்டால், கனம் நீதிபதிகளின் நிலை என்ன?

    கலவரம் செய்ய காத்திருக்கும் ''தெரு மூலர்கள்'' தீபம் ஏற்ற தூபம் போடுவோர் யோசிக்காதது ஏன்?

    கிராமத்தில் நம் மக்கள் ஒரு பழமொழி கூறுவார்கள்.

    ''அசல் அநியாயம்; அப்பீலில் அதுவே காயம்'' (காயம் என்றால், நிரந்தரம் என்று பொருள்).

    மதக்கலவரம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அரசின் கடமையாகும்!

    அரசியலமைப்புச் சட்டத்தைப் புறக்கணித்து, இப்படி தீர்ப்பு எழுதுவது, அறத்தை மீறியது மட்டுமல்ல; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டை மதக் கலவர பூமியாக்காமல் காக்கும் மாநில அரசுமீது வெறுப்பை, வன்மத்தை உமிழ்வது எந்த வகையிலும் நீதியாகாது, நியாயமாகாது!

    மக்களின் பொதுப் பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படுத்துவது மிக கீழிறக்கமான கண்ட னத்திற்குரிய தீர்ப்பு இது!

    உச்சநீதிமன்றத்திற்குச் சென்றால், இது மாறிவிடக் கூடும் என்பது வேறு விஷயம்!

    ஆனால், எல்லாவற்றிற்கும் மேலானது மக்கள் மன்றம் என்பதை மறந்துவிடக் கூடாது!

    Political Agenda எங்கே, யாரிடம் உள்ளது?

    'Political Agenda' என்றெல்லாம் (தி.மு.க.) மாநில அரசு மீது அவசர குற்றப்பத்திரிகை எழுதும் நீதிபதிகளே,

    ''திருப்பரங்குன்றத்தை அயோத்தி ஆக்குவோம்'' என்று, திருப்பரங்குன்ற தீபத்தை சாக்காக வைத்து, அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டை அமளிக்காடாக ஆக்கக் குர லெழுப்பும் கலவரக் கும்பலுக்கு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், தமிழ்நாடு ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளதோடு, திருச்சியில் பேசியபோது,

    ''திருப்பரங்குன்றம் பிரச்சினையில் ஹிந்து அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ். உதவியை நாடினால், பரிசீலிப்போம்'' என்று கூறியுள்ளது ஏடுகளில், ஊடகங்களில் வந்தன என்பதை அறியமாட்டீர்களா?

    Political Agenda எங்கே, யாரிடம் உள்ளது? என்பது இதன்மூலமாவது உங்களுக்குப் புரியாதா? எனவே, இந்தத் தீர்ப்பு நியாயவாதிகள் ஏற்கத்தகுந்த தீர்ப்பல்ல; சாய்ந்த தராசுத் தீர்ப்பேயாகும்! மக்கள் மன்றத்தின் கண்டனத்திற்குரிய ஒரு சார்புத் தீர்ப்பேயாகும்! உச்சநீதிமன்றத்திற்குச் செல்வது அவசரத் தேவையாகும்!" என்று தெரிவித்துள்ளார்.

    • ஓரணியில் நின்று ஆர்.எஸ்.எஸ் சக்திகளை விரட்டி அடித்து தமிழ்நாட்டைக் காப்பதுதான் இந்தக் கூட்டணியின் ஒற்றை நோக்கம்
    • ஆட்சியில் பங்கு என்பது இந்துத்துவா அமைப்புகளால் உருவாக்கப்பட்டது என்பதை உணராத பேச்சு

    தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் நீண்ட நாட்களாகவே ஒரு புகை கசிந்துவருகிறது. குறிப்பாக காங்கிரஸ், திமுக மத்தியில். காங்கிரஸ் உள்ளேயே உட்கட்சி மோதல் தொடரும் நிலையில், இடையிடேயே கூட்டணி இடங்கள் தொடர்பாக திமுகவுடனும் ஒரு கருத்து முரண்பாடு நீடிப்பதுபோல் தகவல்கள் வருகிறது. ஆனால் திமுகவுடன் மட்டும்தான் கூட்டணி என மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தை உறுதியாக இருக்கிறார்.

    இதனிடையே கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வு குறித்தும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். மாணிக்கம் தாகூரின் இந்த கருத்துக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் பதிலளித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது திமுக முன்னாள் எம்.பி. எம்.எம்.அப்துல்லாவும் கருத்து தெரிவித்துள்ளார்.

    மாணிக்கம் தாகூரின் பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அப்துல்லா, 

    "சமூக ஊடகங்களைத் தொடர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும்.. கடந்த ஓராண்டாக இந்துத்துவ ஆதரவு பக்கங்கள் தமிழ்நாட்டு ஆட்சியிலும் அதிகாரப் பகிர்வு வருமா என்ற செய்தியை தொடர்ந்து பேசி வந்தனர்.

    இன்றைய சூழ்நிலையில் அவர்கள் கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சியை ஒரு போதும் பிடிக்கப் போவதில்லை என்ற நிலையில், வலுவாக இருக்கும் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக அவர்கள் செய்யும் திட்டமிட்ட அஜெண்டா என்பதை உணர்ந்த எழுச்சித் தமிழர் திருமாவளவன், தகைசால் தமிழர் பேராசிரியர் காதர்மொய்தீன் போன்ற கூட்டணித் தலைவர்கள் "ஓரணியில் நின்று ஆர்.எஸ்.எஸ் சக்திகளை விரட்டி அடித்து தமிழ்நாட்டைக் காப்பதுதான் இந்தக் கூட்டணியின் ஒற்றை நோக்கம்" என்பதனைத் தங்கள் பேட்டிகளில் தெளிவுபடுத்தினர்.

    அதன் பிறகு இந்துத்துவ சமூக ஊடகங்களில் இந்தப் பேச்சுகள் கிட்டத்தட்ட மறைந்து விட்ட நிலையில் தற்போது மாணிக்கம் தாகூர் "இந்தப் பேச்சு எங்கிருந்து யாரால் உருவாக்கப்பட்டது என்பதனை உணராது" மீண்டும் இந்தப் பேச்சை எடுக்கின்றார்!! அனைத்து தலைவர்களும் மிகச் சரியாக இருக்கின்றார்கள். அனைத்து தொண்டர்களும் மிகுந்த ஒருங்கிணைப்போடு தேர்தல் பணியை எதிர் நோக்கிக் இருக்கின்றார்கள்.

    இந்த நிலையில் கூட்டணியின் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தி ஒருங்கிணைப்பை சீர்குழைக்க ஆர் எஸ் எஸ் உருவாக்கிய "முடிந்து போன" குரலை மாணிக்கம் தாகூர் இப்போது எதிரொலிப்பது யாருக்கு பயன் தருவதாய் அமையும்!?" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வலிமைகளை பாராட்டி திக் விஜய் சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • காங்கிரஸ் தலைவர்கள் பல விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக் விஜய் சிங், மோடியின் படத்தை காண்பித்து பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வலிமையை பாராட்டி பேசினார்.

    தலைவர்கள் காலடியில் இருந்த ஒரு சாதாரண தொண்டன் முதல்வர் மற்றும் பிரதமராகியுள்ளார் எனக் கூறியதாக தெரிகிறது. அந்த அளவிற்கு அந்த அமைப்பு வலிமையாக இருப்பதாக தெரிவித்தார். இதற்கு மற்ற தலைவர்கள் ஆட்சேபனை தெரிவித்து தற்போதுள்ள விசயங்கள் குறித்து பேசுமாறு வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.

    பின்னர், எக்ஸ் பக்கத்தில் திக் விஜய் சிங் விளக்கம் அளித்திருந்தார். அதில் நான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளை பாராட்ட வில்லை. அமைப்பின் வலிமையை சுட்டிக்காட்டினேன் எனத் தெரிவித்தார். இது பேசும்பொருளாக மாறியுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் வெளிப்படையாக திக் விஜய் சிங்கை விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியதாவது:-

    ஆர்.எஸ்.எஸ். என்பது வெறுப்பின் அடிப்படையில் கட்டப்பட்ட ஒரு அமைப்பு. அது வெறுப்பைப் பரப்புகிறது. வெறுப்பிலிருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை. அல்-கொய்தாவிடமிருந்து நீங்கள் எதையாவது கற்றுக்கொள்ள முடியுமா? அல்-கொய்தா ஒரு வெறுப்பு அமைப்பு. அது மற்றவர்களை வெறுக்கிறது. அந்த அமைப்பிடமிருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?

    நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பினால், நல்லவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். 140 ஆண்டுகள் பழமையான காங்கிரஸ் கட்சி இருக்கிறது. காங்கிரஸ் மக்களை ஒன்றிணைத்தது. மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றினார். இந்த அமைப்பு வெறுப்பு அமைப்புகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமா?.

    இவ்வாறு மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார்.

    • டெல்லியில், சாண்டா கிளாஸ் தொப்பி அணிந்த பெண்களை விரட்டி அடித்திருக்கிறது ஒரு கும்பல்.
    • பாலக்காட்டில் கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பாடலைப் பாடிய சிறுவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

    வடமாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டாட்டத்தில் சிறுபான்மையினர் தாக்கப்பட்டதற்கு தவெக கொள்கைப் பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அன்பு மற்றும் கருணையின் வெளிப்பாடாக உலகம் எங்கும் கொண்டாடப்படுவதே கிறிஸ்துமஸ் பெருவிழா. உலகில் உள்ள அனைத்து மக்களும் அக்கொண்டாட்டத்தில் பங்கேற்பதும், அதனை ஆதரிப்பதும் இயல்பான ஒன்றுதான். ஆனால், மதச்சார்பின்மை மண்ணான நம் இந்தியத் திருநாட்டில் தற்போது உலக நீதி மற்றும் இயல்புக்கும் எதிரான சில நிகழ்வுகள் நடந்தேறி உள்ளதாகச் சில தகவல்கள் வந்துள்ளன. மனதை வேதனையுறச் செய்யும் அவை நம் தேசத்தின் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் சவால் விடுவதாக உள்ளன.

    டெல்லியின் ஒரு பகுதியில், சாண்டா கிளாஸ் தொப்பி அணிந்த பெண்களை விரட்டி அடித்திருக்கிறது ஒரு கும்பல்.

    ஒடிசாவில் கிறிஸ்துமஸ் தொப்பிகளை விற்ற ஓர் ஏழைக் குடும்பத்தை சிறுவன் ஒருவன் கொடுமைக்குள்ளாக்கி விரட்டி அடித்திருக்கிறான்.

    மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடந்த மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி ஒன்றில் பார்வையற்ற சிறுமியை அவளுடைய பிறவிக் குறைபாட்டை ஏளனமாகப் பேசியவர் யார் தெரியுமா? அஞ்சு பார்கவ் என்ற பா.ஜ.க.வின் மாவட்டத் துணைத்தலைவராம்.

    உத்தரகாண்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஹோட்டலில் நடத்தக்கூட விடாமல் ரத்து செய்ய வைக்கப்பட்டிருக்கிறது.

    இவையெல்லாம் வடமாநிலங்களில் என்றால், நம்முடைய அண்டை மாநிலமான கேரளாவில் இருக்கும் பாலக்காட்டில் கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பாடலைப் பாடிய சிறுவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளது யார் தெரியுமா? தீவிர ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வின்ராஜ் என்பவர்தான்.

    இந்தச் செய்திகளில் கூறப்பட்டுள்ள தகவல்கள், இனி வரும் காலங்களில், இந்தியாவின் எந்த மூலையிலும் நடைபெற அனுமதிக்கவே கூடாது. இதுபோன்ற வன்செயல்களுக்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது கடும் கண்டனங்களைப் பதிவு செய்கிறது. கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழா ஆராதனையில் பங்குபெற்ற மாண்புமிகு ஒன்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இதற்கான கண்டனத்தைத் தெரிவித்து, சிறுபான்மை சகோதரர்களின் பாதுகாப்பை உண்மையாகவே உறுதி செய்ய வேண்டும் என்பதை தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது.

    "எம்மதமும் நம்மதமே" என்ற பேரன்பு மனப்பான்மையுடன் நல்லிணக்கம் காப்பவரே நம் வெற்றித் தலைவர் அவர்கள். ஆகவே, சிறுபான்மை சகோதரர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே நம் வெற்றித் தலைவர் மற்றும் நமது தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதியான, சமரசமற்ற மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை ஆகும். இதை நம் வெற்றித் தலைவரின் ஒப்புதலுடன் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • சிறுவர்கள் வைத்திருந்த மேளத்தில் 'சிபிஐ(எம்)' என்று கம்யூனிஸ்ட் கட்சி பெயர் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்தார்.
    • அச்சமடைந்த சிறுவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கரோல் பாடிச் சென்ற சிறுவர்களை தாக்கியதாக ஆர்.எஸ்.எஸ் தொண்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பாலக்காடு மாவட்டம் புதுசேரி பகுதியைச் சேர்ந்த அஸ்வின் ராஜ் என்ற அந்த நபர், ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சுரபி நகர் பகுதியில் கரோல் பாடிச் சென்ற 14 வயதுக்குட்பட்ட சில சிறுவர்களை வழிமறித்துள்ளார்.

    அப்போது, சிறுவர்கள் வைத்திருந்த மேளத்தில் 'சிபிஐ(எம்)' என்று கம்யூனிஸ்ட் கட்சி பெயர் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த அவர், சிறுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அந்தச் சிறுவர்களை கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டி அவர்களைத் தாக்கியதுடன் இசைக்கருவிகளையும் அஸ்வின் ராஜ் சேதப்படுத்தியுள்ளார். அச்சமடைந்த சிறுவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.

    இச்சம்பவம் குறித்து உள்ளூர் சிபிஐ(எம்) கட்சியினர் கூறுகையில், அந்தச் சிறுவர்கள் எந்த அரசியல் சார்பும் இல்லாதவர்கள் என்றும், ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் காலத்தில் கட்சியின் இசைக்கருவிகளைச் சிறுவர்களுக்குப் பயன்படுத்துவதற்காகக் கொடுப்பது வழக்கம் என்றும் தெரிவித்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட அஸ்வின் ராஜ் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுவர்கள் மீதான இந்தத் தாக்குதல் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

    • ஆர்எஸ்எஸ் பற்றி புரிந்து கொள்ள நிறைய இருக்கிறது
    • பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதி அமைப்பு இந்துத்துவாவின் முத்திரை அல்ல

    ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தங்களது 100-வது ஆண்டை நாடு முழுவதும் கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று கொல்கத்தாவில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் அவ்வமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது, 

    "சூரியன் கிழக்கில் உதிக்கிறது; இது எப்போதிலிருந்து நடக்கிறது என்று நமக்குத் தெரியாது. அதற்கு அரசியலமைப்பு ஒப்புதல் தேவையா? அதுபோல இந்தியா ஒரு இந்து நாடு. இந்தியாவைத் தங்கள் தாய்நாடாகக் கருதுபவர்கள் இந்திய கலாச்சாரத்தைப் பாராட்டுகிறார்கள்; இந்துஸ்தான் நிலத்தில் இந்திய மூதாதையர்களின் மகிமையை நம்பும் மற்றும் போற்றும் ஒருவர் உயிருடன் இருக்கும் வரை, இந்தியா ஒரு இந்து நாடு. 

    நாடாளுமன்றம் எப்போதாவது அரசியலமைப்பைத் திருத்தி அந்த வார்த்தையைச் சேர்க்க முடிவு செய்தால், அவர்கள் அதைச் செய்தாலும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. நாங்கள் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை, ஏனென்றால் நாங்கள் இந்துக்கள், எங்கள் நாடு ஒரு இந்து நாடு. அதுதான் உண்மை. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதி அமைப்பு இந்துத்துவாவின் முத்திரை அல்ல. 

    நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்ற கருத்து இருந்தால், நான் சொல்கிறேன், ஆர்எஸ்எஸ் வெளிப்படையானது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம், அப்படி ஏதாவது (முஸ்லிம்களுக்கு எதிராக) நடப்பதை நீங்கள் பார்த்தால், உங்கள் பார்வை அப்படியே இருக்கட்டும். அப்படி அதுபோன்ற செயல்கள் நடக்கவில்லை என்றால் உங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ளுங்கள். (ஆர்எஸ்எஸ் பற்றி) புரிந்து கொள்ள நிறைய இருக்கிறது, ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள விரும்பவில்லை என்றால், உங்கள் மனதை யாராலும் மாற்ற முடியாது" என தெரிவித்தார். 

    • வலதுசாரிகளின் வெறுப்பு அரசியலால் இருள் சூழ்ந்துள்ள கொடுங்காலத்தில், முற்போக்காளர்கள் முகாமிலிருந்தும் புரிதலின்றி இது போன்ற வெறுப்புப் பேச்சுக்கள் வருவது மிகவும் ஆபத்தானது
    • பாரதி குறித்தான பாதி உண்மைகளை வைத்துக்கொண்டு, பாரதி எனும் பேருருவத்தை மதிப்பிடுவது பகுத்தறிவு செயல் அல்ல.

    சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்-சின் 'விஜில்' அமைப்பு சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பாரதியார் குறித்தும், பெரியார் குறித்தும் பேசியிருந்தார். "பார்ப்பனர் என்ற கடப்பாரையை கொண்டு திராவிடத்தை இடித்து தள்ளுவேன்" என்று கூறி, பாரதியார் போன்றவர்களின் சிந்தனைகளை முன்னிறுத்தினார். சீமானின் இந்தப் பேச்சை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி எல்லாம் பாராட்டி இருந்தார். 

    இந்நிலையில் சீமானின் இந்தப் பேச்சு தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில் அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை எனக்குறிப்பிட்டு, சீமான் போன்றவர்களை வலதுசாரிகள் திட்டமிட்டு தங்களுக்காக பயன்படுத்தும் போது, அதை புரிந்துகொள்ளாமல் உணர்ச்சிவயப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி வலதுசாரிகளுக்கு இரையாகக்கூடாது எனத் தெரிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக த.மு.எ.க.ச வெளியிட்டுள்ள பதிவில், 

    "பாரதியார், காந்தியடிகள், நேரு உள்ளிட்ட இந்நாட்டின் பல ஆளுமைகளை அவர்கள் பிறந்த நாள், நினைவு நாள் வரும் போது போற்றுகின்ற செயல்கள் எவ்வளவு நடைபெறுகிறதோ, அதே அளவு அவர்களை தூற்றுவதற்கும் ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. பொது வாழ்வில் இருந்தவர்கள் எந்த விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் அல்ல. கடந்த காலம் போல் வலதுசாரிகள் இந்த ஆளுமைகளை விமர்சித்தால் நமக்கு சிக்கலேதும் இல்லை. அது நாம் சரியாக செயல்படுகிறோம் என்பதன் பொருள் ஆகும். ஆனால் முற்போக்காளர்களாக அறியப்பட்ட சில பெரியாரியவாதிகளின் இப்படிப்பட்ட விமர்சனங்கள் சரியான செயல் ஆகாது.

    எந்த ஆளுமைகளையும் அவர்கள் வாழ்ந்த காலத்தோடு பொருத்திப்பார்ப்பதும், காலவரிசையோடு அவர்கள் செயலை மதிப்பிடுவதுமே சரியான செயலாகும். தியாகராஜர் இன்றைக்கு உயர்சாதி சார்ந்த இசையின் குறியீடாக இருக்கிறார். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் மன்னரின் அதிகாரத்திற்கு எதிராகவே தனது பக்தி சார்ந்த இசையை பயன்படுத்தினார். கம்பர் இராமாயணத்தை எழுதினார். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சோழப் பேரசும், அதன் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கும் எதிரான மனோநிலையோடே தான் விரும்பும் தேசத்தை கற்பனையில் 'அயோத்தி' என்று எழுதிப்பார்த்தார். அப்படி நம் சமூகத்தில் பாரதி அவர் காலத்தில் எழுதிய எழுத்துக்களில் சில பொருத்தமாக இல்லாமல் இருந்திருக்கலாம். அதையும் அவர் தன் வாழ்நாளிலேயே சரிசெய்து ஒரு உன்னத இடத்திற்கு வந்து மகாகவியாக பரிணாமம் பெற்றிருக்கிறார்.

    பாரதியின் எழுத்துக்களில் ரஷ்ய புரட்சி ஏற்பட்ட சூழலில் முதலில் லெனின்-ஐ விமர்சித்தார். காரணம் 100ஆண்டுகளுக்கு முன்பு பல்லாயிரம் மையில் தாண்டியுள்ள ரஷ்யாவில் என்ன நடக்கிறது என்ற செய்தி அறிந்து ஒரு எழுத்தாளர் தனக்குத் தோன்றியதை எழுதினார். ஆனால் அதன் பின் ரஷ்ய சூழலை தீர விசாரித்து அதே லெனின்-ஐ தன் இறுதிக் காலம் வரை போற்றிப் புகழ்ந்தார் பாரதி. சோவியத், போல்ஷெவிக் போன்ற சொற்களுக்கு தமிழ்ச் சொற்களை தன் வாழ்நாளிலேயே உருவாக்கிப் பார்த்தார்.

    பாவேந்தரை பாரதி முதன் முதலில் பார்த்தது ஒரு ஆன்மீக கதாகாலஷேப நிகழ்ச்சியில் தான். தொடக்கத்தில் பாவேந்தர் முழு ஆன்மீக வாதியாகத்தான் தன் படைப்புகளை முன் வைத்தார். ஆனால் அதை வைத்து பாவேந்தரை இன்றைக்கு மதிப்பிட முடியுமா? தன்னை பாரதிதாசன் என்று அறிவித்துக் கொண்ட பாவேந்தரை எந்த விமர்சனமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் இவர்கள், பாரதியை மட்டும் விமர்சிப்பது என்பது பாரதியை காலவரிசையோடு பொருத்திப் பார்க்காததன் வெளிப்பாடு ஆகும். பாரதி வாழ்ந்த காலத்தில் சொந்த சாதியால் ஒதுக்கப்பட்டவர். ஆனால் இன்று அவர் பிறந்த சாதியை மட்டும் வைத்துக்கொண்டு அவர் மீது வன்மம் காட்டுவதும் பிறப்பின் அடிப்படையிலான பேதமே ஆகும்.

    பொய்யயை விட மிகவும் ஆபத்தானது பாதி உண்மை. பாரதி குறித்தான பாதி உண்மைகளை வைத்துக்கொண்டு, பாரதி எனும் பேருருவத்தை மதிப்பிடுவது பகுத்தறிவு செயல் அல்ல. வலதுசாரிகள் எல்லா ஆளுமைகளையும் தங்களுக்குள் ஆலிங்கனம் செய்து தனதாக்கிக் கொள்ளும் காலம் இது. இந்தச் சூழலில் இது போன்ற உரையாடல்கள் நம்முடைய கருத்தியலுக்கு வலு சேர்க்கும் பாரதியைப் போன்ற ஆளுமைகளை வலிந்து வலதுசாரிகள் கையில் கொடுக்கும் செயலாகும்.

    சமகாலச் சிக்கல்கள் குறித்துப் பேசாமல், அதை மைய அரசியலாக கொண்டுவராமல் வலதுசாரிகள் எப்படி திசைதிருப்பும் வேலையை செய்கிறார்களோ, அதே விளையாட்டை பெரியாரியவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலரும் செய்வது விபரீதமானது என்று சுட்டிக் காட்ட விரும்புகிறோம். எந்த வித செயல்தந்திரமும் இல்லாமல் தமிழ்ச்சமூகத்தின் ஆளுமைகளின் ஒட்டுமொத்த பங்களிப்பை மதிப்பீடு செய்யாமல் அவர்களிடம் உள்ள சில குறைகளை மட்டும் பெரிதுபடுத்துவது பாசிச எதிர்ப்பை பலவீனப்படுத்தவே செய்யும். சீமான் போன்றவர்களை வலதுசாரிகள் திட்டமிட்டு தங்களுக்காக பயன்படுத்தும் போது, அதை புரிந்துகொள்ளாமல் உணர்ச்சிவயப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி வலதுசாரிகளுக்கு இரையாகக்கூடாது.

    வலதுசாரிகளின் வெறுப்பு அரசியலால் இருள் சூழ்ந்துள்ள கொடுங்காலத்தில், முற்போக்காளர்கள் முகாமிலிருந்தும் புரிதலின்றி இது போன்ற வெறுப்புப் பேச்சுக்கள் வருவது மிகவும் ஆபத்தானது, கண்டிக்கத்தக்கது. இவைகளை உடனே தடுப்பது, தவிர்ப்பது காலத்தின் தேவை ஆகும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.
    • காந்தியின் படுகொலைக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் அடுத்த கட்டம் நாட்டின் நிறுவனங்களைக் கைப்பற்றுவதாகும்.

    நேற்று மக்களவையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த விவாதம் நடைபெற்றது.

    இதில் பேசிய மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.

    இதற்கிடையே ஆர்எஸ்எஸ் குறித்து பேசிய ராகுல், நாட்டு மக்களுக்கும் ஜனநாயக நிறுவனங்களுக்கும் சமத்துவம் வேண்டும் என்று கனவு கண்ட காந்தியின் படுகொலைக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் அடுத்த கட்டம் நாட்டின் நிறுவனங்களைக் கைப்பற்றுவதாகும். இந்தியா 1.5 மில்லியன் இந்தியர்கள் தங்கள் வாக்குகள் மூலம் நெய்த துணியைப் போன்றது, வாக்குகள் இல்லாமல், இந்த நாட்டில் எந்த நிறுவனங்களும் இருக்காது. வாக்குகள் எண்ணப்படுவதை உறுதி செய்வதற்காக, நாட்டின் ஜனநாயக நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ் ஒவ்வொன்றாகக் கைப்பற்றி வருவதாக கூறினார்.

    ஆர்எஸ்எஸ் குறித்து ராகுலின் பேச்சைக் கேட்ட பாஜக வரிசை எம்பிக்கள் அவரை மேற்கொண்டு பேச விடாமல் அமளியில் ஈடுபட்டனர். ராகுல் தேவையில்லாததை பேசுவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரித்தார்.  

    • உலகம் உயிர்வாழ இந்து சமூகம் அவசியம்
    • இந்தியா ஒரு ‘இந்து ராஷ்டிரம்’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தேவையில்லை.

    இந்து சமூகம் என்றும் அழியாதது என்றும், பண்டைய நாகரிகங்கள் அழிந்தபோதும் இந்த சமூகம் நிலைத்திருந்தது எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் பேசியுள்ளார். மணிப்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,

    "உலகில் உள்ள அனைத்து நாடுகளும் எல்லாவிதமான சூழ்நிலைகளையும் கடந்திருக்கும். யுனான்(கிரீஸ்), மிஸ்ர் (எகிப்து), ரோமா என உலகின் அனைத்து சிறந்த பண்டைய நாகரிகங்களும் அழிந்தன. ஆனால் நம் நாகரிகத்தில் ஏதோ இருக்கிறது. அதனால்தான் நாம் இன்னும் இருக்கிறோம்" என தெரிவித்தார். 

    முன்னதாக இந்தவார தொடக்கத்தில் அசாமில் பேசிய மோகன் பகவத்,

    "தாய்நாட்டின் மீதான பக்தி, நமது முன்னோர்களின் பெருமை மற்றும் நமது கலாச்சாரத்தின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் அனைவரும் இந்துக்கள்தான். இந்து என்பதை வெறும் மத அர்த்தங்களில் மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்து மற்றும் இந்துக்களின் கலாச்சாரம் என்பது வெறும் உணவு மற்றும் வழிபாடு மட்டுமல்ல, அனைத்தையும் உள்ளடக்கியது. இந்து மதம் இன்னும் பல மக்களை ஈர்க்கும்.

    தங்கள் வழிபாடு, பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை விட்டுகொடுக்காவிடினும், நம் நாட்டை, இந்திய கலாச்சாரத்தை பின்பற்றினால், நம் மூதாதையர்களை எண்ணி பெருமைப்பட்டால் அந்த முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், இந்துக்கள்தான். பாரதம் என்பதில் பெருமை கொள்பவர்கள் அனைவரும் இந்துக்கள்தான். பாரதம், இந்து ஆகிய இரண்டு சொற்களும் ஒத்த சொற்கள்தான். இந்தியா ஒரு 'இந்து ராஷ்டிரம்' என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தேவையில்லை. நாட்டின் நாகரிக நெறிமுறைகள் ஏற்கனவே அதனை அடையாளப்படுத்துகின்றன" என தெரிவித்தார்.

    • எஸ்.ஐ.ஆரை பார்த்து முதலமைச்சருக்கு எந்த பயமும் இல்லை.
    • எஸ்.ஐ.ஆருக்கு எதிராக வருவாய் துறை அலுவலர்களை தி.மு.க தூண்டி விடுவதாக கூறுகின்றனர்.

    நெல்லை:

    கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு இன்று நெல்லை டவுன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் தலைமையில் சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக விஜய் போராட வேண்டுமானால் டெல்லியில் மத்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் மாநில அரசுக்கு எதிராக போராடுவது வெறும் கண்துடைப்பே.

    ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை மனதில் வைத்துக்கொண்டு அவர் போராடுகிறார். இப்படி போராடுபவர்களை மக்கள் நம்பவில்லை.

    எஸ்.ஐ.ஆருக்கு எதிராக போராட்டம் என்று கூறிவிட்டு எஸ்.ஐ.ஆருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தமிழக அரசுக்கு எதிராகவே பேசி இருக்கிறார் விஜய்.

    எஸ்.ஐ.ஆரை பார்த்து முதலமைச்சருக்கு எந்த பயமும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் தினந்தோறும் 50 வாக்காளர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கொடுக்கலாம் என தேர்தல் ஆணையமே கூறி இருக்கிறது. இது தமிழக வெற்றிக் கழகத்திற்கு தெரியாது.

    எஸ்.ஐ.ஆரை எதிர்த்து போராட்டம் நடத்துவது என முடிவு செய்தால் விஜய் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துடன் விஜய் ஒன்றுபட்டுள்ளார். எனவே அவர்கள் இருவரும் ஒன்றாக இணைவார்கள்.

    எஸ்.ஐ.ஆருக்கு எதிராக வருவாய் துறை அலுவலர்களை தி.மு.க தூண்டி விடுவதாக கூறுகின்றனர். அதுபோன்று தூண்டிவிடும் பழக்கம் தி.மு.க.வுக்கு கிடையாது.

    பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்துகிறார்கள். அது அவர்களுடைய உரிமை. மத்திய அரசு உயர்த்திய உடனே மாநில அரசும் அகவிலைப்படி உயர்த்தி இருக்கிறது.

    மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காததாலேயே ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. மத்திய அரசு கடுமையான நிதி நெருக்கடியை கொடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×