என் மலர்
நீங்கள் தேடியது "Thiruparankundram"
- தி.மு.க.வை மதவாத கட்சி என்று சொல்வது நகைப்புக்குரியதாக உள்ளது.
- ஒரு மதவாத சக்தி அதற்கு எதிராக போராடக்கூடிய ஜனநாயக சக்திகளை மதவாத சக்தி என்று சொல்லுவது வேடிக்கையாக இருக்கிறது.
குழித்துறை:
மேல்புறம் வட்டாரத்தை சேர்ந்த கிறிஸ்தவ ஐக்கியம் அமைப்பு சார்பில் கடந்த 13 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக நடத்தி வருகின்றனர். இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வந்து கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் விழா நேற்று இரவு நடை பெற்றது.
விழாவில் கலந்து கொள்ள வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தாரகை கத்பட், ரூபி மனோகரன் உள்பட தலைவர்களை மேளதாளங்கள் முழங்க பொய்க்கால் குதிரை, பொம்மையாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக அழைத்து வந்து மேடையில் அமரச்செய்தனர். பின்பு கிறிஸ்துமஸ் கேக் வெட்டப்பட்டது. பின்னர் ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜ.க.வினர் திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து மத அரசியலை பரப்ப பார்க்கிறார்கள். அதற்கு தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒருபோதும் இடம் கொடுக்காது. தமிழ்நாட்டு மக்களும் இடம் கொடுக்க மாட்டார்கள். தி.மு.க.வை மதவாத கட்சி என்று சொல்வது நகைப்புக்குரியதாக உள்ளது. ஒரு மதவாத சக்தி அதற்கு எதிராக போராடக்கூடிய ஜனநாயக சக்திகளை மதவாத சக்தி என்று சொல்லுவது வேடிக்கையாக இருக்கிறது.
இந்துக்களை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் புறக்கணிக்கிறது என்பது திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு. பெரும்பான்மை சமூகம், சிறுபான்மை சமூகம் என்ற பாகுபாடு இல்லாமல் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அனைத்து தரப்பு மக்களுக்காக தான் குரல் கொடுக்கிறோம். அதனால்தான் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெற்று தி.மு.க. தலைமையிலான கூட்டணி தொடர்ந்து தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறது.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே வாக்களித்து இந்த வெற்றியை பெற்று விட முடியாது. இந்து சமூகத்தினரும் பெரும்பாலும் ஆதரிக்கக்கூடிய ஒரு அணியாகத்தான் எங்களுடைய கூட்டணி விளங்குகிறது. ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது தவறான முழக்கம் இல்லை. யாருக்கும் எதிரான முழக்கமும் இல்லை.
அது ஒரு ஜனநாயக முழக்கம், எல்லோருக்கும் அதிகாரம் வேண்டும் என்பது எந்த வகையிலும் தவறில்லை. அதற்கான கருத்தை சாமிதோப்பு அடிகளார் இந்த மேடையில் பதிவு செய்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரை திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசல் மற்றும் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது.
- கடந்த 19 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் 12.30 மணி முதல் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசல் மற்றும் மலையில் உள்ள தர்காவில் வருகிற 6-ந் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது.
நேற்று இரவு 8.30 மணியளவில் திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசலில் இருந்து மின்னொளியுடன் கூடிய அலங்கார வண்டியில் பிறை கொடி எடுத்து வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மற்றொரு பிறை கொடியும் எடுத்து செல்லப்பட்டது. பெரிய ரதவீதி, கோட்டை தெரு வழியாக அந்த கொடி மலைக்கு எடுத்து செல்லப்பட்டு தர்காவில் அமைத்த கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி தரப்பட்டது.
ஆதார் அட்டை, செல்போன் எண்ணை கொடுத்துவிட்டு திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லலாம் என்று காவல் உதவி ஆணையர் சசிபிரியா தெரிவித்துள்ளார்.
கடந்த 19 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் 12.30 மணி முதல் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
மலையில் உள்ள தர்காவில் நடக்கும் சந்தனக்கூடு விழாவிற்கு இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அனைவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்னும் பட்டியல்கூட இடவில்லை
- இளைஞர் பூர்ணசந்திரனின் இறப்பிற்கு காரணம் மதுரை மாவட்ட ஆட்சியரும், காவல் ஆணையரும்தான்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தீபம் ஏற்ற காவல் துறை, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இதனிடையே மலைக்குச் செல்லும் பாதை இரும்புத் தடுப்புகளால் அடைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பக்தர்கள் யாரும் மலை மீது செல்ல அனுமதிக்கப்படவில்லை.இந்நிலையில், மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா மற்றும் பள்ளிவாசலில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி திருமங்கலம் கோட்டாட்சியர் சிவஜோதி தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அதில், கடந்த காலங்களில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றி சந்தனக்கூடு விழாவை நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து முஸ்லீம்கள் மட்டும் எவ்வாறு மலைமீது செல்ல அனுமதிக்கப்படலாம் என அக்கிராம மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் போராட்டத்திலும் ஈடுபட முயன்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டு அங்குள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்களை சந்திக்க வேண்டும் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,
"இளைஞர் பூர்ணசந்திரனின் இறப்பிற்கு காரணம் மதுரை மாவட்ட ஆட்சியரும், காவல் ஆணையரும்தான். நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாத சட்டவிரோத காவல்துறை, தமிழ்நாடு காவல்துறை. தமிழ்நாடு காவல்துறை சட்டவிரோதமானவர்கள் இல்லை என்றால் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியின் தீர்ப்பை செயல்படுத்தி இருக்க வேண்டும். ஏன் செயல்படுத்தவில்லை? தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்னும் பட்டியல்கூட இடவில்லை. நீங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள்.
இந்த மக்களை ஏன் கைதுசெய்ய வேண்டும்? அவர்களுக்கு சந்தனக்கூடு விழா நடத்த அனுமதி என்றால், இந்துக்கள் காசி விஸ்வநாதரை சென்று வணங்குவதற்கு ஏன் தடை? இது என்ன ஔரங்கசீப் ஆட்சியா? மு.க. ஸ்டாலின் ஆட்சியா, முகமது ஸ்டாலின் ஆட்சியா? தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? மு.க.ஸ்டாலின், மதுரை ஆட்சியர், காவல் ஆணையர் அனைவரும் இந்து விரோதிகள்." என தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் வாக்குவாதத்தில் ஈடுபட, ஹெச். ராஜா மற்றும் பாஜகவை சேர்ந்த மற்ற ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்ட மக்களை காண உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
- இதில் வந்தே மாதரம் பாடல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்டவை குறித்து காரசார விவாதங்கள் நடந்தன.
- காற்று மாசு குறித்து விவாதிக்கப்படாமலேயே கூட்டத்தொடர் முடிந்தது/
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இக்கூட்டத்தொடர் 19-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
15 அமர்வுகள் கொண்ட குளிர்கால கூட்டத்தொட ரின் முதல் 2 நாட்களில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் பணி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. 3-ந் தேதி முதல் கூட்டத் தொடரின் அலுவல்கள் நடந்தன.
இதில் வந்தே மாதரம் பாடல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்டவை குறித்து காரசார விவாதங்கள் நடந்தன. அணுசக்தித் துறையில் தனி யாரை அனுமதிப்பது உள்பட முக்கிய மசோதாக்கள் இரு அவையிலும் நிறை வேற்றப்பட்டன.
மக்களவையில் நேற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமான விக்சித் பாரத்-ரோஜ்கர் மற்றும் அஜீவிகாமிஷன் (விபி-ஜி ராம் ஜி) மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரு அவைகளிலும் நிறைவேறியது.
இந்த நிலையில் இன்று காலை மக்களவை கூடிய தும் குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுவதாகவும், கால வரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அப்போது இந்தக் கூட்டத்தொடரின் போது சபையின் செயல்பாடு 111 சதவீதமாக இருந்தது என்று ஓம் பிர்லா கூறினார்.
மேல்சபை இன்று காலை கூடியதும் அவைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், 15 நாட்கள் நடைபெற்ற கூட்டத் தொடரின் போது மேற்கொள்ளப்பட்ட சட்ட மியற்றும் மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்த சுருக்கத்தை வாசித்தார்.
பின்னர் மேல்-சபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அவை தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் அறிவித்தார். இதையடுத்து மேல் சபையிலும் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவுபெற்றது. இரு அவைகளின் நிறைவிலும் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது. இன்று டெல்லி காற்று மாசு குறித்து விவாதிக்கப்பட இருந்த நிலையில் அது குறித்து விவாதிக்கப்படாமலேயே தொடர் முடிவுக்கு வந்தது.
- தி.மு.க. அரசின் வீண் பிடிவாதத்திற்கு பலியானவரின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவதென்றே தெரியவில்லை.
- எந்தவொரு கஷ்டத்திற்கும் தற்கொலை என்பது என்றைக்குமே தீர்வாகாது.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
திருப்பரங்குன்ற தீபத் தூணில் கார்த்திகை தீப மேற்ற உயர்நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் கூட, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகத் தி.மு.க. அரசு அதை செயல்படுத்த மறுத்ததைக் கண்டித்து, மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த பூர்ணசந்திரன் மதுரை மாநகர் அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள பெரியார் சிலை அருகே தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட தகவலறிந்து சொல்லொண்ணா துயரத்தில் தவிக்கிறேன்.
தி.மு.க. அரசின் வீண் பிடிவாதத்திற்கு பலியானவரின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவதென்றே தெரியவில்லை.
தமிழர் வழிபாட்டு உரிமைகளை மீட்டெடுக்க காலங்காலமாக நாம் போராடி வருகிறோம், ஆயிரம் தடைகள் வந்தாலும் அத்தனையும் தகர்த்தெறிந்து இனியும் நாம் தொடர்ந்து போராடுவோம். நேர்கொண்ட பார்வையுடன், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடன், அறத்தின் துணை கொண்டு போராட்டக்களத்தில் நாம் கை கோர்த்து நிற்போம். ஆனால், எந்தவொரு கஷ்டத்திற்கும் தற்கொலை என்பது என்றைக்குமே தீர்வாகாது.
எனவே, உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பற்றவை என்பதைக் கருத்தில் கொண்டு இனியும் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தவிர்க்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டுமென உங்கள் அனைவரிடமும் சிரம் தாழ்ந்த கோரிக்கை விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நீதிமன்றங்களின் மீது நம் அனைவருக்கும் முழு நம்பிக்கை இருக்கிறது.
- இது போன்ற முடிவுகள், எப்போதும், எதற்காகவும் வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றாததை கண்டித்து மதுரையில் முருக பக்தர் பூர்ண சந்திரன் தீக்குளித்து உயிரிழந்ததாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்த திமுக அரசைக் கண்டித்து, மதுரை மாநகர் நரிமேடு பகுதியை சேர்ந்த தீவிர முருக பக்தர், சகோதரர் திரு. பூர்ண சந்திரன், தீக்குளித்து உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றங்களின் மீது நம் அனைவருக்கும் முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், இது போன்ற வருந்தத்தக்க முடிவை, சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் எடுத்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. ஒவ்வொருவரும், அவர்களது குடும்பத்தினருக்கு முக்கியம். இது போன்ற முடிவுகள், எப்போதும், எதற்காகவும் வேண்டாம் என்று அனைவரிடமும் பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன்.
சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருமாறு, மதுரை பாஜக சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் ஆன்மா, முருகன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- திருப்பரங்குன்றம் விவகாரத்தை மையமாக வைத்து தான் கந்தன் மலை என்ற படத்தை உருவாக்கியுள்ளனர்.
- கந்தன் மலை படத்தில் பாஜக உறுப்பினர் எச்.ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அண்மையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை அகற்ற வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது திருப்பரங்குன்றம் என்பது கந்தர் மலை, அது சிக்கந்தர் மலை அல்ல என்று எச். ராஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது சிக்கந்தர் தர்கா அருகே உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும் என்று இந்துத்துவ அமைப்பினர் அண்மையில் பிரச்சனை கிளப்பினர்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தை மையமாக வைத்து தான் கந்தன் மலை என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எச் ராஜா முறுக்கு மீசையுடன் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், கந்தன்மலை திரைப்படம் நாளை (டிசம்பர் 19) தாமரை யூடியூப் சேனலில் வெளியாகவுள்ளதாக எச் ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- மனுக்கள் மீதான விரிவான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று 5-வது நாளாக தொடர்ந்து நடந்தது.
- எழுத்துபூர்வமான வாதங்களை நாளை தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில், உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேலும் இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா நிர்வாகம், தமிழ்நாடு வக்ஃபு வாரியம், இந்து முன்னணி உள்ளிட்ட பலர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் மீதான விரிவான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று 5-வது நாளாக தொடர்ந்து நடந்தது.
நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதனையடுத்து தனி நீதிபதி விசாரிக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான மேல்முறையீடு உள்ளிட்ட இது தொடர்பான அனைத்து வழக்குகளும் அடுத்தமாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர். தொடர்ந்து எழுத்துபூர்வமான வாதங்களை நாளைக்கும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, தீர்ப்புக்கான தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.
- திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது போல் திருநெல்வேலியில் அதிக தூண்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
- திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது போல் திருநெல்வேலியில் அதிக தூண்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் ஐகோர்ட் மதுரை கிளை டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா நிர்வாகம், தமிழக வக்பு வாரியம், இந்து முன்னணி உள்ளிட்ட பலர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் மீதான விரிவான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது.
மனுதாரர்கள் தரப்பு, கோவில் தரப்பு, வக்பு வாரியம் தரப்பு வாதங்கள் முடிந்தநிலையில் இன்று அரசு தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.
அரசு தரப்பு வழக்கறிஞர் வாதத்தில், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடத்தில் இதற்கு முன் தீபம் ஏற்றியதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபம் ஏற்றும் தூண் தான் என்பதற்கு மனுதாரர் எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை.
நில அளவை துறை ஆய்வு செய்ததில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது போல் தமிழ்நாட்டில் பல தூண்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது போல் திருநெல்வேலியில் அதிக தூண்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
1920-ல் தனிநீதிபதி ஆய்வுக்கு சென்றபோது திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூண் இருந்திருந்தால் உத்தரவில் கூறியிருப்பார்.
மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தமிழர்கள் கலாச்சாரம் எனக்கூறி திருப்பரங்குன்றத்தில் அதே வழக்கத்தை கேட்பது ஏற்புடையதல்ல.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற தனிநீதிபதி உத்தரவிட முடியுமா? என்பது தான் எங்களது கேள்வி என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அரசு தரப்பில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூண் தீபத்தூண் இல்லை என்பது தான் எங்கள் தரப்பு வாதம். தூணில் தீபம் ஏற்றுமாறு மனுதாரர் வைத்த கோரிக்கையை கோவில் நிர்வாக அதிகாரி சட்டப்படி தான் நிராகரித்துள்ளார்.
சட்டப்படி திருப்பரங்குன்றம் வழக்கை உரிமையியல் நீதிமன்றத்தில் தான் நடத்தியிருக்க வேண்டும்.
இவ்வாறு அரசு தரப்பில் வாதம் நடைபெற்றது.
- எந்த உள்நோக்கத்துடனும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை
- உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டுவது என்னமாதிரியான போக்கு?
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவால் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சைகள் கிளம்பி, தற்போது அவர்மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கையும் தொடரப்பட்டுள்ளது.
இதனிடையே நீதிமன்ற உத்தரவை அரசு நிறைவேற்றாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதனையும் அவரே விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் டிசம்பர் 17-ந் தேதி ( இன்று) தமிழ்நாடு தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் காணொலி மூலம் மதுரை ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, இந்த வழக்கின் விசாரணை இன்று பிற்பகலில் வந்தது. அப்போது தலைமை செயலாளர் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக ஆஜராகினர்.
தலைமை செயலாளர் கூறுகையில், எந்த உள்நோக்கத்துடனும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. ஏற்கனவே உள்ள உத்தரவுகளின் படிதான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கம் போன்றவற்றை கருத்தில்கொண்டே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, என் உத்தரவை அதிகாரிகள் யாரும் மதிக்கவில்லை. தீபமேற்ற உத்தரவிட்டபிறகு 144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏன்? நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு அதிகாரிகள் பதில் சொல்லியே ஆகவேண்டும். உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டுவது என்னமாதிரியான போக்கு? உரிய பதிலை விரிவான மனுவாக தாக்கல் செய்ய அவகாசம் தருகிறேன் எனக்கூறினார்.
மேலும், நான் தேர்தலில் போட்டியிடபோவதாக தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஷ் சிங் வாதம் செய்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
- மாநில அரசு தனது கடமையை நிறைவேற்றுவதில் தவறி விட்டது.
- மலை உச்சியில் விளக்கேற்றுவது இந்து மதத்தின் ஒரு முக்கிய சடங்காகும்.
மதுரை:
திருப்பரங்குன்றத்தில் உள்ள மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டின் டிவிசன் பெஞ்சில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று அதே நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தனி நீதிபதியின் உத்தரவுக்கு ஆதரவாக தாக்கல் செய்த இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் தெலுங்கானாவின் முன்னாள் அரசு வக்கீல் எஸ். ஸ்ரீராம் ஆஜராகி வாதாடி வருகிறார். அதன் விவரம் வருமாறு:-
தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றும்பட்சத்தில் பொது அமைதி பாதிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் தரப்பில் தெரிவிக்கப்படுவது தனி நீதிபதி உத்தரவை அவமதிப்பதாகும். மேலும் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவு காரணமாக எந்த பொது அமைதியும் சீர்குலையவில்லை. அரசு கூறுவது ஏற்புடையதல்ல. மேலும் இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு உரிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றுவது அரசின் கடமை.
எனவே இந்த உத்தரவை மனசாட்சியுடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் ஒரு அங்கமாக விளங்கும் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை என்பதன் மூலம் அதிகாரிகள் தங்களின் அடிப்படை கடமையை மீறி உள்ளனர். மாநில அரசு தனது கடமையை நிறைவேற்றுவதில் தவறி விட்டது.
மனுதாரரால் பொது அமைதி குலைந்தது என்பது ஒரு சாக்குபோக்கு காரணம். நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றும் முன்னரே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் நீதிபதி தீர்ப்பை நிறைவேற்றக்கூடாது என்பதற்காக சம்பவத்தன்று திருப்பரங் குன்றம் பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் வாதாடினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பொது அமைதி கெடும் என்று அரசு தரப்பு கூறுவதும், அதற்கு மனுதாரர் தரப்பு எதிர்ப்பு தெரிவிப்பதும் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்று கருத்து தெரிவித்தனர். அதன் பின்பு மூத்த வக்கீல் ஸ்ரீராம் தனது வாதத்தை தொடர்ந்து கூறியதாவது:-
மலை உச்சியில் விளக்கேற்றுவது இந்து மதத்தின் ஒரு முக்கிய சடங்காகும். குறிப்பிட்ட இடத்தில்தான் வழிபடும் இந்த உரிமை, அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவின் கீழ் ஒரு உரிமை அல்ல என்று மாநில அரசு வாதிடுகிறது. ஒருபுறம் இதைச் சொல்லிக்கொண்டே, மறுபுறம் இந்த உத்தரவு பொது ஒழுங்கிற்கு எதிரானது என்றும் வாதிட்டு வருகின்றனர். இது ஏற்கத்தக்கது அல்ல.
1996-ம் ஆண்டு நீதிபதி கனகராஜ் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தான் தர்காவின் அருகில் 15 மீட்டர் தூரத்தில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த விவகாரத்தை இரு மதத்திற்கு இடையே ஏற்படும் பிரச்சனை என்பது போல் திசை திருப்பி விட்டுள்ளனர். தனி நீதிபதி தனது கருத்தை தீர்ப்பில் திணித்து உள்ளார் என எதிர்த்தரப்பினர் வாதாடுவது ஏற்புடையதல்ல.
எனவே கோவில் நிர்வாகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காகவே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார் என்றார்
அதற்கு நீதிபதிகள், தீப தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவு உள்ளதா? என கேட்டனர். அதற்கு வக்கீல் ஸ்ரீராம் கூறுகையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டியது கோவில் நிர்வாகம், மதுரை மாவட்ட கலெக்டரின் கடமை.
இவ்வாறு மனுதாரர் தரப்பில் வாதாடப்பட்டது தொடர்ந்து விசாரணை நடந்தது.
- புதுச்சேரியில் இந்து அமைப்புகள், முருக பக்தர்கள் சார்பில் மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றும் போராட்டம் சுதேசி காட்டன் மில் அருகே நடந்தது.
- தமிழக பா.ஜ.க. தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
புதுச்சேரி:
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திருநாளில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு அமர்வு உத்தரவிட்ட நிலையில் தீபம் ஏற்ற தமிழக அரசு அனுமதிக்கவில்லை.
இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதைக் கண்டித்து புதுச்சேரியில் மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி புதுச்சேரி மாநில தலைவர் சனில்குமார் மற்றும் ஸ்ரீ கணேச தேசிக சுவாமிகள் ஆகியோர் அறிவித்திருந்தனர்.
அதன்படி புதுச்சேரியில் இந்து அமைப்புகள், முருக பக்தர்கள் சார்பில் மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றும் போராட்டம் சுதேசி காட்டன் மில் அருகே நடந்தது.
தமிழக பா.ஜ.க. தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். மாதிரி தீபத் தூணில் தொழிலதிபர் குணசேகரன் தீபத்தை ஏற்றினார். திருக்கனூர் அருகேயுள்ள திருமங்கலம் ஸ்ரீ கணேச தேசிக சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி பா.ஜனதா தலைவர் வி.பி.ராமலிங்கம், எம்.எல்.ஏக்கள் கல்யாணசுந்தரம், செல்வம், தீப்பாய்ந்தான், இந்து முன்னணி தலைவர் சனில்குமார் மற்றும் இந்து அமைப்பின் நிர்வாகிகள், முருகபக்தர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.






