என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "High Court Madurai Bench"

    • பொதுநல வழக்கு தொடர்ந்து, அதன் மூலம் பணம் பறிக்கும் நிலை உள்ளது.
    • வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த பூல்பாண்டி என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு காரைக்குடி நகராட்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

    அந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "பொதுநல வழக்கு தொடர்ந்து, அதன் மூலம் பணம் பறிக்கும் நிலை உள்ளது. அதுபோல பணம் கிடைத்தவுடன், பொதுநல வழக்கு திரும்பப் பெறப்படுகிறது. இது ஏற்கத்தக்கதல்ல. இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 4 ஆண்டுகளாகியும் வழக்கு நிலுவையிலே வைக்கப்பட்டிருக்கிறது.

    பொதுநல வழக்கை சிலரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்துவது அதிர்ச்சி அளிக்கிறது. அரசு அலுவலர்களும் இதில் நோட்டீஸ் கூட அனுப்பாமல் இருந்தது ஏற்கத்தக்கதல்ல. தற்போது தான் நோட்டீசே அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு பொதுநல வழக்கு என தொடர்ந்து ஆதாயம் பெற்றவுடன் திரும்ப பெரும் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும். ஆகவே பொதுநல வழக்கை முறையான காரணம் இன்றி திரும்ப பெற அனுமதி கோரினால் அதிக அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து, மனுதாரர் 9-ந் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

    • மனுதாரர் தரப்பில், 2011 கணக்கெடுப்பின்படி சுமார் 15 லட்சம் மக்கள்தொகை எனக்கூறி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
    • நீதிபதிகள், திட்டம் நிராகரிக்கப்படவில்லை, விளக்கங்களுக்காக திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது.

    மதுரை:

    மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த கதிர், ஐகோர்ட் மதுரை கிளை அமர்வில், மதுரையில் மெட்ரோ திட்டங்களை அமைப்பதற்காக திட்ட அறிக்கையை தயார் செய்து தமிழக அரசு அனுப்பியது. மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், மெட்ரோ ரெயில் கொள்கையின்படி 20 லட்சம் மற்றும் அதற்கு மேல் மக்கள்தொகை உள்ள நகரங்களில் பெருமளவு பொது போக்குவரத்து திட்டங்களை தொடங்கலாம்.

    2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மதுரை நகரத்தின் மக்கள்தொகை சுமார் 15 லட்சம் மட்டுமே. இதன் காரணமாக கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் சுமார் 27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவ்வாறெனில் 20 லட்சத்துக்கு அதிகமாகவே மதுரையின் மக்கள்தொகை இருக்கும்.

    ஆகவே மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டு வருவதற்கான விரிவான திட்ட அறிக்கையை முறையாக சரி செய்து மீண்டும் அனுப்ப தமிழக திட்டமிடல் மேம்பாட்டு துறையின் தலைமைச் செயலருக்கும், மத்திய அரசு அதனை பரிசீலித்து உரிய முடிவெடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், 2011 கணக்கெடுப்பின்படி சுமார் 15 லட்சம் மக்கள்தொகை எனக்கூறி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அந்த கணக்கெடுப்பு சுமார் 14 ஆண்டுகள் பழமையானது என தெரிவிக்கப்பட்டது.

    அதற்கு நீதிபதிகள், திட்டம் நிராகரிக்கப்படவில்லை, விளக்கங்களுக்காக திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. எப்படி இந்த நிவாரணத்தை வழங்குவது? என கேள்வி எழுப்பினர்.

    தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 16-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    • தந்தை, மகனை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்று, கடுமையாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
    • வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரதது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அதே ஊரில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கொரோனா ஊரடங்கின்போது ஊரடங்கு கட்டுப்பாட்டு நேரம் தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாக தந்தை, மகனை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்று, கடுமையாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

    இது தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உட்பட 9 பேரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த வழக்கு விசாரணையை விரைவில் முடிக்கக் கோரி ஜெயராஜின் மனைவி ஜெயராணி ஐகோர்ட்டு மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த ஐகோர்ட்டு, சாத்தான் குளம் கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க உத்தரவிட்டது.

    இந்நிலையில், விசாரணையை முடிக்க மேலும் 6 மாத கால அவகாசம் வழங்க மதுரை மாவட்ட நீதிமன்றம் சார்பில் ஐகோர்ட்டு மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளி சங்கர், சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு விசாரணையை முடிக்க 3 மாதம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

    • கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என கூறினார்.
    • நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் 10-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    மதுரை:

    மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பரமசிவம், மதுரை ஐகோர்ட் டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    சமீபத்தில் தமிழகத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொது நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே 1978-ம் ஆண்டிலேயே அர சாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என கூறுகிறார்கள்.

    இத்தனை ஆண்டுகளாக தெருக்கள் சாலைகளில் சாதி பெயர்கள் இருப்பதால் பிரச்சனை ஏற்பட்டதாக இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து தற்போதைய ஆளுங்கட்சி மக்களிடையே பகைமையை ஊக்குவிப்பது, பிளவுபடுத்துவதன் நோக்கமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    இதன் மூலம் ஆளுங்கட்சி தலைவர்கள் மற்றும் தங்களுக்கு விருப்பமானவர்களின் பெயர்களை வைக்க விரும்புகிறார்கள். இவ்வாறு தெருக்கள், சாலைகளின் பெயர்களை மாற்றுவதால் அப்பகுதியில் வசிப்பவர்கள் இருப்பிட சான்றுகளில் முகவரியை பயன்படுத்துவதில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும்.

    இந்த அரசாணையை அமல்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் எந்த கருத்துகளையும் கேட்டு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குடியிருப்பு பகுதி, சாலைகள், தெருக்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவதற்கு வழிவகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    ஏற்கனவே இது தொடர்பான விசாரணை நடந்தபோது, இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கும் வரை பழைய பெயர்களை நீக்குவது, புதிய பெயர்களை அமல்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது எனவும், இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் 10-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    இதன்மூலம் தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ள சாதி பெயர்களை நீக்குவற்கு ஏற்கனவே ஐகோர்ட்டு விதித்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மின்சார திருட்டு முறைகேட்டை தடுக்க மின்வாரிய மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • சிறைத்துறை மற்றும் மின்வாரிய துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது.

    மதுரை:

    தூத்துக்குடியைச் சேர்ந்த சேகர் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் சிறையை கண்காணிக்க தமிழ்நாடு சிறைத்துறை தலைவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மாவட்ட, மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர்கள் மூலம் சிறைகள் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றன.

    சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மத்திய சிறைச்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள மின் இணைப்பில் முறைகேடு செய்து வருகின்றனர்.

    மதுரை மத்திய சிறை, கோவை மத்திய சிறையில் உள்ள அதிகாரிகள் இது போன்று மின் திருட்டில் ஈடுபட்டு உள்ளனர். சிறைச் சாலைகளில் உள்ள பல அதிகாரிகள் வீட்டில் மின் இணைப்பு இல்லை. இருந்த போதும் அதிகளவில் மின்சாதனங்களை வைத்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மின்கட்டணம் இல்லை.

    குறிப்பாக மதுரை சரக கூடுதல் இயக்குனர் டி.ஐ.ஜி. பழனி, கோயம்புத்தூர் சரகம் டி.ஐ.ஜி. சண்முக சுந்தரம், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளராக பணியாற்றிய ஊர்மிளா ஆகியோர் இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டு உள்ளனர்.

    எனவே மத்திய சிறையில் நடைபெறும் மின்சார திருட்டு முறைகேட்டை தடுக்க மின்வாரிய மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறைத்துறை மற்றும் மின்வாரிய துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் கடந்த 2023-ம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    தொடர்ந்து எதிர்மனுதாரர் தரப்பில் பதில் அளிக்காமல் கால அவகாசம் கேட்பது ஏற்கத்தக்கது அல்ல. மனுதாரரின் குற்றச்சாட்டு தீவிரமானது. எனவே இந்த வழக்கை டிசம்பர் 3-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். அதற்கு முன்னதாக சிறைத்துறை மற்றும் மின்வாரிய துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்க நேரிடும் என உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணையை டிசம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    • எங்கள் மீது சட்டத்துக்கு புறம்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
    • அரசுக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்த ஒன்று கூடுவதை குற்றமாக கருதி வழக்கு பதிவு செய்ய அனுமதிக்க முடியாது.

    மதுரை:

    தஞ்சாவூர் மாவட்டம் அதிராமபட்டினம் பகுதியைச் சேர்ந்த அகமது காஜா, பஷீர் அகமது, அகமது அஸ்லாம், முகமது புகாரி, முகமது ரஷீத் உள்பட 19 பேர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது :-

    கடந்த 2022-ம் ஆண்டில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்து உத்தர விட்டது. மேலும் சம்பந்தப்பட்ட தலைவர்கள் வீட்டில் நள்ளிரவில் புகுந்து சோதனை செய்வது போன்ற நடவடிக்கைகள் எதிர்த்து 28.9.2022 அன்று அதிராமபட்டினம் பஸ் நிலையம் முன்பாக மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.

    நாங்கள் எந்தவித முன் அனுமதியும் பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாக கூறி அதிராமபட்டினம் போலீசார் எங்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 143, 341, 188, 290 மற்றும் 291 ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

    காவல்துறை சட்டத்தின் பிரிவு 30(2)-ன் படி அதிராமபட்டினம் போலீசார் அரசியலமைப்பின் வரம்பிற்குள் மட்டுமே செயல்பட முடியும். இது ஒரு குடிமகனுக்கு பேச்சு சுதந்திரத்தையும் நியாயமான கட்டுப்பாடுகளுடன் வெளிப்பாடுகளையும் வழங்குகிறது.

    அந்த வகையில் எங்கள் மீது சட்டத்துக்கு புறம்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். எனவே இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல் கலந்த ஆசிக் அகமது ஆஜராகி, மனுதாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பாக போலீசார் இது தொடர்பான புகார் குறித்து முதல்கட்ட விசாரணையை நடத்தாமல் நேரடியாக வழக்கு பதிவு செய்தது ஏற்புடையதல்ல என வாதாடினார்.

    விசாரணை முடிவில், போராடியதற்காக வழக்கு பதிந்தால் எந்த ஒரு குடிமகனும் ஜனநாயக முறையில் அதிருப்தியை வெளிப்படுத்த முடியாது. அரசுக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்த ஒன்று கூடுவதை குற்றமாக கருதி வழக்கு பதிவு செய்ய அனுமதிக்க முடியாது. அந்த வகையில் போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் மீது போலீசார் பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.

    • ஒரு வெளிப்படையான குற்றம் வெளிப்பட்டால், காவல்துறையினர் உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணையைத் தொடர வேண்டும்.
    • மனுதாரர் மனு குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த சோமசுந்தரம் ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    நான் மதுரை தல்லாகுளம் பகுதியில் எல்.கருப்பையா என்பவரிடமிருந்து ஒரு குடியிருப்பு நிலத்தை வாங்கினேன். இதற்காக வாங்கிய தொகையை செலுத்திய பிறகும், கூடுதல் பணம் கேட்டு, நான் கொடுத்த ஆவணங்களை தர மறுக்கின்றனர். அதிக வட்டி கேட்டு துன்புறுத்துகின்றனர். இதுகுறித்து நான் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இது போன்ற புகார்களில், போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் அழைத்து விசாரணை நடத்துவதாக தெரிய வருகிறது. இது கட்டப் பஞ்சாயத்து நடத்துவதற்கு சமமாகும் என தெரிவித்த நீதிபதி, முதற்கட்ட விசாரணைக்காக ஒரு நபருக்கு, காவல் அதிகாரி சம்மன் அறிவிப்பு அனுப்ப இயலாது.

    முதற்கட்ட விசாரணையின் நோக்கம் புகாரை ஆராய்வது மற்றும் புகார்தாரரால் வழங்கப்பட்ட துணைப் பொருட்களைப் பார்ப்பது மட்டுமே. ஒரு வெளிப்படையான குற்றம் வெளிப்பட்டால், காவல்துறையினர் உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணையைத் தொடர வேண்டும்.

    பிரிவு 173(3)-ன் கீழ் எந்தவொரு விசாரணையும், துணை போலீஸ் சூப்பிரண்டின் ஒப்புதலுக்குப் பிறகு 14 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். மேலும் அதன் முடிவு அதிகாரிக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அத்துடன் மனுதாரர் மனு குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    • தொண்டர்களை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை.
    • கூட்டம் நிற்கும் இடத்தில் ஏன் லத்தி சார்ஜ் நடத்த வேண்டும்.

    உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் முன் ஜாமீன் கோரிய வழக்கை ஒத்திவைக்க காவல்துறை தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

    விசாரணையின்போது," சொந்த கட்சி தொண்டர்களை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கரூரில் நடந்தது விபத்து. திட்டமிட்ட செயல் அல்ல. விஜயை பார்க்க கூடியவர்களை காவல்துறை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.

    தொண்டர்களை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை.

    வேண்டுமென்றே காக்க வைத்து தாமதமாக வந்தது போல் சொல்கிறார்கள். 7 மணி நேரம் தாமதமாக வந்ததற்கு வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்...தாமதமாக வந்தது குற்றமா?

    போலீஸ் மீது பழி போவில்லை. குற்றம்தான் சுமத்துகிறோம். வேலுச்சாமிபுரம் சரியான இடம் இல்லை என நினைத்திருந்தால் அனுமதி மறுத்திருக்க வேண்டும். கூட்டத்திற்குள் ரவுடிகள் புகுந்துவிட்டனர். கூட்டம் நிற்கும் இடத்தில் ஏன் லத்தி சார்ஜ் நடத்த வேண்டும்.

    கூட்டம் குறித்து உளவுத்துறை கணித்திருக்க வேண்டாமா?"என்று புஸ்ஸி ஆனந்த் தரப்பு வாதம் செய்யப்பட்டது. 

    • தனியார் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகின்றன.
    • அனைத்து மாவட்டங்களிலும் ஒரு முதியோர் இல்லத்தையாவது கட்டுங்கள் என உத்தரவிட்டது.

    புதுடெல்லி:

    தூத்துக்குடியை சேர்ந்த அதிசயகுமார், மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, வேளாங்கண்ணி பகுதியில் உள்ள கோவில் வளாகங்கள் பேருந்து நிலையங்களில் ஆதரவற்ற முதியவர்கள் பலர் ஆங்காங்கே நடைமேடை உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவின்றி தங்கி உள்ளனர்.

    இவர்களை பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டம் 2009-ன் படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டம் தோறும் ஆதரவற்ற முதியோர் காப்பகம் அமைத்து பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை, சட்டப்படி மாவட்டத்தில் ஒரு முதியோர் இல்லமாவது அரசால் நடத்தப்பட வேண்டும். ஆனால் ஒரு இல்லம் கூட அரசால் நடத்தப்படவில்லை. தனியார் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகின்றன. இது விதிமீறும் செயல். ஏற்கத்தக்கதல்ல. ஆகவே அனைத்து மாவட்டங்களிலும் ஒரு முதியோர் இல்லத்தையாவது கட்டுங்கள் என உத்தரவிட்டது.

    இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் வக்கீல் ஜி.இந்திரா மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு முதியோர் இல்லத்தை கட்டமைக்கும் பணியை 6 மாதங்களுக்குள் தொடங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்ததுடன், மூல மனுதாரர் அதிசயகுமார் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 29-ந் தேதிக்கு தள்ளி வைத்தது.

    • ஊராட்சி மன்ற தலைவர், செயலாளர் ஆகியோர் இணைந்து இலவச வீடு திட்டத்தில் போலி ஆவணங்களை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
    • அரசின் திட்டங்களை பெற லஞ்சம் கொடுக்கும்படி ஏழை, எளியோரை கட்டாயப்படுத்துகிறார்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த துரைசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் மற்றும் மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் கிராம ஊராட்சியில் உள்ள மக்கள் பயன் பெற்றனர். இந்நிலையில் கல்வார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் இணைந்து இலவச வீடு திட்டத்தில் போலி ஆவணங்களை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து உள்ளனர்.

    அதேபோல 100 நாள் வேலை திட்டத்தில் பங்கேற்று வேலை செய்யாதவர்கள் பெயரில் நிதி ஒதுக்கி ஏராளமான தொகையை ஊராட்சி செயலாளர் மோசடி செய்து உள்ளார். அரசின் திட்டங்களை பெற லஞ்சம் கொடுக்கும்படி ஏழை, எளியோரை கட்டாயப்படுத்துகிறார். இந்த மோசடி குறித்து அரசு அதிகாரிகளுக்கு மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கல்வார்பட்டி ஊராட்சி நிதியை முறைகேடு செய்த விவகாரத்தில் ஊராட்சி தலைவர், செயலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, கல்வார்பட்டி ஊராட்சியில் வண்டிப்பாதை ஆக்கிரமிப்புக்கு ஊராட்சி தலைவரும், செயலரும் ஆதரவு அளித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது போல பல்வேறு மோசடியில் அவர்கள் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

    இது சம்பந்தமாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதாடினார். விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்டவர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். மேலும் இது குறித்து அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற்று அரசு வழக்கில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள், உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

    • தி.மு.க.வில் சேரவில்லை என்றால் அரசின் பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்படும் எனவும் அச்சுறுத்துகின்றனர்.
    • வாக்காளர்களின் தனி நபர் விபரங்கள் பாதுகாக்கப்படுவது அவசியம்.

    மதுரை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.

    அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் வகையில் தி.மு.க. பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில், வாக்குச்சாவடி தோறும் 30 சதவீதம் வாக்கா ளர்களை தி.மு.க. உறுப்பினர்களாக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். கடந்த 1-ந்தேதி இந்த திட்டம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினர். அப்போது வாக்காளர்களின் தொலைபேசி எண் மூலம் ஓ.டி.பி. பெறப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்பட்டது.

    இந்தநிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராஜ்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க., 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்தி வருகிறது. இதற்காக தி.மு.க.வினர் வீடு, வீடாக செல்கின்றனர். அப்போது அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு ஆவணங்களை கேட்டு தொல்லை செய்கின்றனர்.

    எங்கள் வீட்டிற்கு தி.மு.க.வினர் 10 பேர் வந்து, அனுமதி இல்லாமல் தமிழக முதலமைச்சர் படத்துடன் கூடிய 'ஓரணியில் தமிழ்நாடு' என அச்சிடப்பட்ட சுவரொட்டியை வீட்டில் ஒட்டினர்.

    பின்னர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் உள்பட அடையாள அட்டைகளை கேட்டனர். அதனை தர மறுத்தபோது, வீட்டுப் பெண்கள் மாதந்தோறும் அரசிடம் பெற்று வரும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை நிறுத்தி விடுவோம் என மிரட்டினர். அதோடு அனைவரின் தனிப்பட்ட செல்போன் எண்களை கேட்டு வாங்கி, தி.மு.க.வில் சேர்த்து வருகின்றனர்.

    தி.மு.க.வில் சேரவில்லை என்றால் அரசின் பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்படும் எனவும் அச்சுறுத்துகின்றனர். அரசியல் பிரசாரத்துக்காக ஆதார் போன்ற தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்துவது தவறானது. இது, அரசியலமைப்பு வழங்கும் சுதந்திரம் மற்றும் தனியுரிமையை மீறுவதாகும். எனவே இந்த நடவடிக்கைக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.

    பொதுமக்களிடம் தி.மு.க.வினர் சட்ட விரோதமாக ஆதார் விவரங்களை சேகரித்தது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆதார் தலைமை செயல் அதிகாரி விசாரணை நடத்தி, தி.மு.க. பொதுச்செயலாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் கே.ஆர்.பாரதி கண்ணன், ஆயிரம் செல்வகுமார், மகேந்திரன் ஆகியோர் ஆஜராகி, அது தொடர்பான வீடியோவும் சமர்ப்பித்தனர்.

    அதையடுத்து நீதிபதிகள், ஓ.டி.பி. எண்ணை எதற்காக கேட்கிறார்கள்? ஓ.டி.பி. விபரங்களை பகிர வேண்டாமென, காவல்துறையினர் அறிவுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளிப்படையாக விளம்பரம் செய்யப்படும்போது, எதற்காக ஓ.டி.பி.யை கேட்கிறார்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அரசுத்தரப்பில், தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கைக்காக இந்த பிரசாரம் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், நீங்கள் அரசு வழக்கறிஞரா? அல்லது தி.மு.க. வழக்கறிஞரா? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, ஆதார் விபரங்களை சேகரிக்கும் தனியார் நிறுவனம், அமெரிக்க நிறுவனத்திற்கு இதனை விற்பனை செய்தால் என்ன செய்வது? இந்திய மக்கள் இவ்வாறு தான் கையாளப்படுவார்களா?

    தனது கட்சியின் உறுப்பினர் விபரங்களை சேகரிப்பதில் தவறில்லை. ஆனால் அந்த விபரங்கள் எவ்வாறு கையாளப்படும்? எவ்வாறு பாதுகாக்கப்படும்? எவ்வாறு அழிக்கப்படும்? என்பது தொடர்பான எந்த திட்டமும், விபரங்களும் இல்லை. மக்களின் தரவுகளை பாதுகாப்பது தொடர்பான தொழில்நுட்ப தகவல் பாதுகாப்பு விதிகள் இன்னமும் உருவாக்கப்படவில்லை.

    இது மிகவும் ஆபத்தானது என குறிப்பிட்ட நீதிபதிகள், தமிழகத்தின் பிரபல அரசியல் கட்சி, ஓரணியில் தமிழ்நாடு எனும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையை நடத்துகிறது. தனிநபர் விபரங்களை பாதுகாப்பது அரசியலமைப்பின் கடமை. தனிநபர் விபரங்களை சேகரிக்க தனியார் நிறுவனம் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.

    வாக்காளர்களின் தனி நபர் விபரங்கள் பாதுகாக்கப்படுவது அவசியம். அந்த விஷயங்கள் வெளிநாட்டுக்கு விற்கப்பட்டு விட்டால் என்ன செய்வது?

    ஆகவே ஓரணியில் தமிழ்நாடு என்னும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையின்போது ஓ.டி.பி.யை பெற இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. உறுப்பினர் சேர்க்கையை நடத்தலாம். ஆனால் ஓ.டி.பி. விபரங்களை கேட்கக் கூடாது என குறிப்பிட்டனர்.

    மேலும் இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து சேர்ப்பதாக அறிவித்தனர். டிஜிட்டல் முறையில் தனிநபர் தகவல் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது? என்பது குறித்தும், வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக் கினை நீதிபதிகள் 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

    • கனிம வளம் நமது நாட்டின் சொத்து அதை ஒருபோதும் திருடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.
    • சட்ட விரோத குவாரி முன்பக்க கதவுகள் சீல் வைக்கப்பட்டு, பின்பக்கமாக குவாரிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெயபால் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த பொது நல வழக்கில் கூறியிருப்பதாவது:-

    திண்டுக்கல் மாவட்டத்தில் மணல் குவாரிகள் செயல்பட மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு அனுமதியும் வழங்கவில்லை. ஆனால் பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக ஆற்று மணல் மற்றும் கிராவல் மணல் தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் அள்ளப்பட்டு வருகிறது.

    இதனால் இந்த பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் அரசின் முறையான அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுவதால் அரசிற்கு பெரும் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான சட்டவிரோதமாக கனிமவள குவாரிகளை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக திடீர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, சட்ட விரோத மணல் குவாரிகளை மூடி சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்து வழக்கை கடந்த வாரம் விசாரணை செய்த நீதிபதிகள் சட்டவிரோத குவாரிகளை உடனடியாக மூடி 'சீல்' வைக்க வேண்டும்.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும், குவாரி நடத்தியவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், கனிம வளம் நமது நாட்டின் சொத்து அதை ஒருபோதும் திருடுவதற்கு அனுமதிக்கக்கூடாது, அதிகாரிகள் அதற்கு துணை போகக் கூடாது என கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சம்பந்தப் பட்ட குவாரிகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும், சட்டவிரோத குவாரிகள் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

    மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்ட விரோத குவாரி முன்பக்க கதவுகள் சீல் வைக்கப்பட்டு, பின்பக்கமாக குவாரிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது என்பதற்கான புகைப்படங்களை நீதிபதியிடம் தாக்கல் செய்தார். அப்போது கோபமடைந்த நீதிபதிகள், இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் தொடர்கிறதா அல்லது வேறுவிதமாக நடக்கின்றனவா? என கேள்வி எழுப்பினார்கள்.

    அதிகாரிகளின் இவ்வாறான செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்பதால், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் இந்த நீதிமன்றத்தில் ஆஜராகி, உண்மைகளை விளக்கி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். எனவே வரும் 16.07.2025 அன்று காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

    ×