search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HC Madurai Bench"

    • விசாரணை சரியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய மறுபிரேத பரிசோதனை செய்வதும், அதனை வீடியோ பதிவு செய்வதும் அவசியம்.
    • உத்தரவு கிடைக்கப்பெற்ற ஒரு வார காலத்திற்குள், இந்த நடவடிக்கைகளை முடித்து மனுதாரரிடம் உடலை ஒப்படைக்க வேண்டும்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடியைச் சேர்ந்த லிங்கசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மர்மமான முறையில் உயிரிழந்த எனது மகன் காளையனின் உடலை மூத்த தடய அறிவியல் மருத்துவர்களைக் கொண்ட குழுவினர் மறு பிரேத பரிசோதனை செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தார்.

    இந்த வழக்கு இன்று நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரரின் மகன் காளையன், மாற்று சமூகத்தை சேர்ந்த வனிதா என்ற பெண்ணுடன் பேசியதால் அவரது உறவினர்கள் காளையனை மிரட்டியதாகவும், இது தொடர்பாக புகார் அளித்த நிலையில், மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் தனது மகனை கொலை செய்து உள்ளனர்.

    இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை. மனுதாரர் மகன் உடலை பிரேத பரிசோதனை செய்வது சம்பந்தமாக மனுதாரர் தரப்பினருக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனவே மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என வாதாடினார்.

    பின்னர் அரசு வக்கீல் ஆஜராகி , மூத்த தடய அறிவியல் மருத்துவர்களைக் கொண்டு மனுதாரர் மகன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடல் அழுகும் நிலையில் உள்ளது. ஆகவே மறு பிரேத பரிசோதனை செய்வது சாத்தியமில்லை என தெரிவித்தார்.

    விசாரணை முடிவில், மனுதாரர் மகன் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டாலும், அது வீடியோ பதிவு செய்யப்படவில்லை. மனுதாரரிடம் தகவல் தெரிவிக்காமலேயே இது நடைபெற்றுள்ளது. ஆகவே விசாரணை சரியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய மறுபிரேத பரிசோதனை செய்வதும், அதனை வீடியோ பதிவு செய்வதும் அவசியம்.

    ஆகவே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் காளையனின் உடல், மறு பிரேத பரிசோதனை செய்யும் நிலையில் உள்ளதா? என்பதை முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு மறு பிரேத பரிசோதனை செய்ய முடியும் என்றால், தகுதி வாய்ந்த மருத்துவ அலுவலர்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும்.

    அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும். இந்த உத்தரவு கிடைக்கப்பெற்ற ஒரு வார காலத்திற்குள், இந்த நடவடிக்கைகளை முடித்து மனுதாரரிடம் உடலை ஒப்படைக்க வேண்டும். அவரும் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

    • "திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்போம்" என்ற கோஷத்தை வலியுறுத்தி அறப்போராட்டத்தில் ஈடுபட அழைப்பு .
    • போலீசார் அனுமதி மறுப்பு. மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் உத்தரவு.

    திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சனை நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்து அமைப்பினர் மற்றும் ஆதரவு அமைப்பினர் "திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்போம்" என்ற கோஷத்தை வலியுறுத்தி அறப்போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்தனர்.

    இதனால் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அறப்போராட்டம் நடத்த காவல்துறையினர் தடைவிதித்தனர். மதுரை மாவட்டத்தில் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் போராட்டத்திற்கு அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மதுரை பழங்காநத்தத்தில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை அனுமதி வழங்கியுள்ளது.

    பொதுமக்களை தொந்தரவு செய்யக் கூடாது, ஒரு மைக்கிற்கு மேல் பயன்படுத்தக் கூடாது, கட்சிக் கொடிகள் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

    • இரண்டு பெண் குழந்தைகள் டெல்லியில் பள்ளி படிப்பை தொடர்ந்து வருகின்றனர்.
    • வழக்கில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீதான காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த பணி மாறுதல் நடைபெற்றுள்ளது.

    மதுரை:

    நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    நான் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவு 8-ல் சப்-இன்ஸ்பெக்டராக கடந்த 22 ஆண்டுகளாக டெல்லி திகார் சிறையில் பணிபுரிந்து வருகிறேன். இந்நிலையில் கடந்த ஆண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் எனக்கு பணியின் போது பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தேன்.

    மேலும் எனக்கு பணியின் போது பாலியல் தொந்தரவு செய்த இன்ஸ்பெக்டர் மீது விசாகா கமிட்டி விசாரணை கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தேன். பாலியல் குற்றச்சாட்டு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் எந்தவித காரணமும் இன்றி டெல்லி சிறப்பு பட்டாலியன் பிரிவிலிருந்து என்னை கடந்த 20-ந்தேதி திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படை (பட்டாலியனுக்கு) இடம் மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    எனது இரண்டு பெண் குழந்தைகள் டெல்லியில் பள்ளி படிப்பை தொடர்ந்து வருகின்றனர். மேலும் என்னை பணிமாற்றம் செய்வதற்கான எந்த காரணமும் இல்லாமல் டெல்லியில் இருந்து திருநெல்வேலிக்கு பணிமாற்றம் செய்தது சட்டவிரோதம். எனவே எனது பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பினேகாஸ் ஆஜராகி, பெண் சப்-இன்ஸ்பெக்டர் தனது உயர் அதிகாரியான இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் காழ்ப்புணர்ச்சியாலும், பழிவாங்கும் நோக்கோடும் இதுபோன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இது ஏற்கத்தக்கது அல்ல, விசாகா கமிட்டியின் உத்தரவுக்கு எதிரானது. இந்த பணியிடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். இதனை பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீதான காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த பணி மாறுதல் நடைபெற்றுள்ளது. எனவே இந்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

    மேலும் பணியிட மாற்றம் குறித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் தலைவர் டி.ஜி.பி. மற்றும் டெல்லி தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் தளவாய் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • செலவின தொகைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூல் செய்யவேண்டும்.
    • தற்பொழுது கொடிக்கம்பங்களுக்கு அனுமதி கோரிய இந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

    மதுரை:

    மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த சித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    நான் அ.தி.மு.க. பிரமுகராக உள்ளேன். அ.தி.மு.க.வின் 53-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு மதுரை கூடல்புதூர் பகுதியில் உள்ள எங்கள் கட்சிக்கொடி கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய கொடிக் கம்பம் அமைக்க அனுமதி வழங்குமாறு மாநகராட்சி அதிகாரிளுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இதே போல மதுரை, பை-பாஸ் ரோடு பஸ் நிறுத்தம் அருகே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தில் அ.தி.மு.க. கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி கதிரவன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, இதுகுறித்து போலீஸ் டி.ஜி.பி. பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தது.

    இந்த வழக்கு ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, தமிழகத்தில் கட்சி கொடி கம்பங்கள் தொடர்பாக 114 வழக்குகள் பதிவாகியுள்ளன. கொடிக்கம்பங்கள், பிளக்ஸ் பேனர்களை பொறுத்தவரையில் தடையில்லா சான்றிதழ் மட்டுமே வழங்க போலீசாருக்கு அதிகாரம் உள்ளது.

    மாநகராட்சி அல்லது நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் தடையில்லா சான்றிதழ்கள் பெற்று இவை வைக்கப்படுகின்றன. தற்காலிக நடவடிக்கைகளாகவே இதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்து இருந்தார்.

    அதற்கு நீதிபதி, கட்சி கொடிக்கம்பத்தை நிரந்தரமாக வைப்பதற்கு அனுமதி வழங்குவது யார்? எவ்விதமான வழிகாட்டுதல்களும், விதிகளும் இல்லாத நிலையில், பல அடி உயரத்துக்கு கட்சிக்கொடி கம்பங்கள் எதன் அடிப்படையில் நிரந்தரமாக வைக்கப்படுகின்றன? இவ்வாறு வைக்கப்படும் கம்பங்களுக்கு ஏன் வாடகை செலுத்தக் கூடாது?

    பொது இடங்களில் தான் கட்சி கொடி கம்பங்கள் நடப்பட வேண்டுமா? அரசியல் கட்சி அலுவலகங்களிலோ, வீடுகளிலோ, பட்டா நிலங்களிலோ கொடிக்கம்பங்களை வைத்துக் கொள்ளலாமே. ஆங்காங்கே கட்சி கொடி கம்பங்கள் நடுவதற்கு தேவைப்படும் இடத்தை கிரையம் செய்து நட்டு வைத்துக் கொள்ளலாமே?

    ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் அருகிலும் பல்வேறு கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. பொது இடம் என்பது நாம் அனைவருக்கும் சொந்தமானது. இங்கு இங்கெல்லாம் சிறுநீர் கழிப்பது, கம்பம் நடுவது, பொதுமக்களுக்கு இடையூறாக எதையாவது செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் நீதிபதி அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி இருந்தார்.

    அனைத்து தரப்பு விசாரணையும் முடித்த நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பை நீதிபதி இளந்திரையன் இன்று பிறப்பித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

    பொது இடங்களில் கட்சி, இயக்கம், மதம், சாதி சம்பந்தமான கொடிக்கம்பங்களை நட்டு வைப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது மட்டுமல்லாமல் போக்குவரத்துக்கு இடையூறுகளும், விபத்தும் ஏற்படுவதற்கும் கொடிக்கம்பங்கள் காரணமாக அமைகின்றன. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் உருவாகிறது.

    மேலும் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு அதிக உயரங்களிலும் கட்சி கொடி கம்பங்களை அமைத்து வருவது ஏற்கத்தக்கதல்ல. இதனை கருத்தில் கொண்டு கொடிக்கம்பங்கள் நடும் விவகாரத்தில் இந்த கோர்ட்டு கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கிறது.

    அதாவது, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சி மற்றும் இயக்கங்கள், மத ரீதியான அனைத்து கொடிக்கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றாத பட்சத்தில் அரசே பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கான செலவின தொகைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூல் செய்யவேண்டும்.

    மேலும் எதிர் காலங்களில் பொது இடங்களில் கொடிக் கம்பங்கள் அமைப்பதற்கு வருவாய்த்துறையினர் அனுமதிக்க கூடாது.

    பட்டா இடங்களில் கம்பங்கள் அமைப்பது குறித்து அரசு உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும். பொதுக் கூட்டங்கள் மற்றும் தேர்தல் நேரங்களில் கட்சி கொடிக்கம்பங்கள் வைப்பதற்கு உரிய வழிகாட்டுதலை வழங்க அனுமதி வழங்கலாம். அவ்வாறு வழங்கும் பட்சத்தில் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது என்ற உறுதிமொழியையும் வைப்புத் தொகை மற்றும் வாடகை தொகையும் வசூல் செய்திருக்க வேண்டும்.

    இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து அவ்வப்போது அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இந்த உத்தரவை தமிழகத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உடனடியாக அனுப்ப வேண்டும்.

    நீதிமன்ற உத்தரவு முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உறுதிப்படுத்த வேண்டும். தற்பொழுது கொடிக்கம்பங்களுக்கு அனுமதி கோரிய இந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

    இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறி இருந்தார்.

    • மனுதாரர் அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து, வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
    • வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், முன்பாக விசாரணைக்கு வந்தது.

    மதுரை:

    தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையைச் சேர்ந்த பத்மநாபன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் அருளானந்தம்மாள் நகரில் உள்ள பல ஏக்கர் நிலம் நகராட்சி பள்ளி கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடம் வருவாய் ஆவணங்களில் தஞ்சை மாநகராட்சியின் ஆணையர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு பொன்னுமணி எனும் தனிநபரின் பெயரில் இந்த இடம் சட்ட விரோதமாக மாற்றப்பட்டிருந்தது. சட்ட விரோதமாக, முறைகேடு செய்து தனி நபரின் பெயரில் அந்த இடத்திற்கு பட்டா வாங்கப்பட்டிருந்தது.

    இந்த நடவடிக்கையை நகராட்சி அலுவலர்கள் எதிர்த்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தஞ்சை மாநகராட்சியின் ஆணையர், மேயர், வருவாய் அலுவலர்கள் ஆகியோர் இணைந்து சுயநல நோக்கில் சட்ட விரோதமாக அந்த இடத்தை விற்பனை செய்து, தற்போது மேயரின் மனைவியின் பெயரில் அந்த இடம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    தற்போதைய தஞ்சை மாநகராட்சி மேயர் ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால் இந்த விவகாரத்தை தமிழக காவல்துறை விசாரித்தால் விசாரணை நியாயமான முறையில் நடைபெறாது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து, வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி இந்த வழக்கில், வழக்கின் முக்கியத்துவம் கருதி பொன்னுமணி, தஞ்சை மேயரின் மனைவி சங்கீதா, தஞ்சை மாவட்ட வருவாய் மண்டல அலுவலர் ஆகிய 3 பேரையும், நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கில் சேர்ப்பதாகவும், வழக்கு தொடர்பாக அவர்களது தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும், தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட இடம் குறித்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

    • மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையிட்டபோது அவர் உரிய நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டார்.
    • வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நீதிபதி மரிய கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    மதுரை:

    திருச்சியை சேர்ந்த முருகேசன் ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஈரோட்டை சேர்ந்த தனியார் ஒப்பந்ததாரர் ஒருவரால் மிகப்பெரிய ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. கோவில் கட்டப்பட்டு வரும் இடம் அரசுக்கு சொந்தமான இடம். மேலும் கட்டுமான பொருட்கள் அனைத்தையும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே வைத்து உள்ளனர். இங்கு கட்டுமான பணியில் ஈடுபடும் ஊழியர்களும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலேயே தங்கி உள்ளனர்.

    இவ்வாறு அரசுக்கு சொந்தமான நிலத்தில் கோவில் கட்டுவதற்கும், பணியாளர்கள் அங்கே தங்குவதற்கும் எந்த அனுமதியும் அரசு வழங்கவில்லை. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையிட்டபோது அவர் உரிய நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டார். மேலும் தனியார் ஒப்பந்ததாரருடன் இணைந்து செயல்படுகிறார்.

    அரசுக்கு சொந்தமான நிலத்தில் எந்தவித வகை மாற்றமும் செய்யாமல் சட்டவிரோதமாக தனியார் ஒப்பந்ததாரருடன் மாவட்ட வருவாய் அதிகாரி இணைந்து இதுபோன்ற கட்டுமானங்களை கட்டி வருகிறார். இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வரும் கட்டுமானத்தை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நீதிபதி மரிய கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் உள்ளேயே அரசு நிலத்தில் உரிய அனுமதி இல்லாமல் ஆஞ்சநேயர் கோவில் கட்டப்படுவதற்கான புகைப்படங்களையும் ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.

    இதனை பதிவு செய்த நீதிபதிகள் மனுதாரர் புகார் குறித்து உள்துறை செயலர் மற்றும் திருச்சி மாவட்ட கலெக்டர் பரிசீலனை செய்து உரிய முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • நீதிமன்றம் 8 வாரங்களுக்குள்ளாக அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழக முதன்மைச் செயலருக்கு உத்தரவிட்டிருந்தது.
    • தமிழர்கள் மற்றும் தமிழ் மொழியின் நலனுக்காகவே திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ் மொழியின் சிறப்பு மிக்க எழுத்தாக சிறப்பு ழகரம் உள்ளது.

    அரசு தொடர்பான அரசாணைகளில் ஸ்டேட் கவர்மெண்ட் ஆப் தமிழ்நாடு எனக் குறிப்பிடப்படுகிறது. இது 'டமில் நடு' என தவறாக உச்சரிக்கும் வகையில் உள்ளது. ஆகவே சிறப்பு ழகரம் இடம்பெறும் வகையில் ஆங்கிலத்தில் 'எல்' என்பதற்கு பதிலாக 'இசட்' என திருத்தம் செய்யக்கோரி கடந்த 2021-ல் வழக்கு தொடர்ந்தேன்.

    நீதிமன்றம் 8 வாரங்களுக்குள்ளாக அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழக முதன்மைச் செயலருக்கு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் இதுவரை அது தொடர்பாக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழர்கள் மற்றும் தமிழ் மொழியின் நலனுக்காகவே திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது.

    ஆகவே அரசின் சுற்றறிக்கைகளில் ஆங்கிலத்தில் தமிழ்நாடு என்பதற்கு 'எல்' என்ற எழுத்திற்கு பதிலாக 'இசட்' என்ற எழுத்தை திருத்தம் செய்து பயன்படுத்தவும், மேலும் சேர, சோழ, பாண்டியர்களின் சின்னங்களை கொண்டு தமிழ்நாட்டிற்கென கொடியை வடிவமைத்து பயன்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வு, ஆங்கிலத்தில் தமிழ்நாடு என்பதற்கு 'எல்' என்பதை 'இசட்' என திருத்தம் செய்ய ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை ஏன் நிறைவேற்றவில்லை என கேள்வி எழுப்பினார்.

    எனவே இந்த விவாகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுங்கள் என கூறிய நீதிபதிகள் மனுதாரரின் மனுவை பரிசீலித்து விரைவாக உரிய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • கோவில் உள்ளே நாய்கள் வருவதை தடுத்தும், பக்தர்களின் சுகாதாரம் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவிடவேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
    • இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மதுரை:

    திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கோபி ஆச்சார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கூறியிருந்ததாவது:-

    திருச்சி மாவட்டம் திருவானைக்கோவிலில் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் உலக பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் இங்கு வந்து செல்லக்கூடிய பக்தர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையில் கோவில் முழுவதும் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளது. கோவில் சன்னதி முதல் முன்புறம் உள்ள கொடிக்கம்பம் வரை தெரு நாய்கள் வந்து படுத்து கிடக்கின்றது. வரக்கூடிய தெரு நாய்கள் கோவிலுக்குள் அசுத்தம் செய்வதால் ஆகம விதிபடி அதை சுத்தம் செய்ய வேண்டி உள்ளது. மேலும் பக்தர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருவதுடன், சில நாய்கள் பக்தர்களை விரட்டி கடிக்க அமைகின்றது.

    மேலும் சிலர் பக்தர்கள் என்ற போர்வையில் மது அருந்தி குடித்துவிட்டு கோவிலுக்குள் உள்ளே வந்து படுத்து கிடக்கின்றனர். இதனால் கோவிலின் ஆகம விதிகள் மீறப்படுகிறது. எனவே கோவில் சன்னதியின் புனிதத்தை காக்கும் பொருட்டும், பக்தர்களின் பாதுகாப்பு சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் நாய்களை உள்ளே வரவிடாமல் தடுத்தும் கோவிலில் புனித காக்க வலியுறுத்தி மாநகராட்சி மற்றும் கோவில் உதவி ஆணையரிடம் மனு அளித்திருந்தேன். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே கோவில் உள்ளே நாய்கள் வருவதை தடுத்தும், பக்தர்களின் சுகாதாரம் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவிடவேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜம்புகேஸ்வரர் கோவிலில் தெரு நாய்கள் அதிக அளவில் நடமாடுவது குறித்த புகைப்படங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வாதிட்டார்.

    கோவில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாய்களை கட்டுப்படுத்துவது குறித்து மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், கோவிலுக்குள் வரும் பக்தர்களின் பாதுகாப்பை கோவில் நிர்வாகம் தான் உறுதிப்படுத்த வேண்டும். இந்த மனு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய திருச்சி மாவட்ட கலெக்டர், கோவில் இணை ஆணையர், திருச்சி மாநகராட்சி ஆணையர் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

    மேலும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாய்கள் கட்டுப்படுத்துவது குறித்து தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் இணைத்து இந்த வழக்கை பட்டியலிடவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்.

    • ஒருவரின் தனி உரிமையை மீறி ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டால், விசாரணை நீதிமன்றம் அவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
    • தமிழகத்தில் இந்த வல்லுநா்கள் எந்த மாவட்டத்திலும் நியமிக்கப்படவில்லை.

    பரமக்குடியை சேர்ந்த பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அம்மனுவில், எனக்கும், எனது கணவருக்கும் கடந்த 2003- ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில், எனது கணவர் விவாகரத்து கோரி பரமக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் எனது கைப்பேசியில் நான் யாரிடமெல்லாம் பேசினேன் என்ற ஆவணத்தை நீதிமன்றத்தில் அவா் ஒப்படைத்தார். இந்த ஆவணத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என விசாரணை நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவர் மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரை நீதிபதி தான் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் மனைவி பயன்படுத்திய கைப்பேசி ஆவணங்களை பெற சம்பந்தப்பட்ட கைப்பேசி நிறுவனத்துக்கு இணையதளம் மூலம் கணவர் வேண்டுகோள் விடுக்க வேண்டும். அப்போது, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் எண் (ஓடிபி) வரும். இதைப் பயன்படுத்தி ஆவணங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

    ஆனால், இந்த வழக்கில் மனைவிக்குத் தெரியாமல் அவரது கைப்பேசியை எடுத்து ஓடிபி எண்ணைப் பெற்று ஆவணங்களை கணவர் பதிவிறக்கம் செய்துள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. திருமணம் என்பது ஒருவரையொருவா் நம்ப வேண்டும். ஒருவரது தனி உரிமையில் மற்றவர் தலையிடுவது முறையாக இருக்காது. தனது டைரியை கணவா் பார்க்கக் கூடாது என மனைவி நினைப்பது சரியே. இது கைபேசிக்கும் பொருந்தும்.

    ஒருவரின் தனி உரிமையை மீறி ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டால், விசாரணை நீதிமன்றம் அவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடாது. இந்த வழக்கில் மனைவியின் மனுவைத் தள்ளுபடி செய்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பாரதிய சாக்சிய ஆதினிய சட்டப்படியும், தகவல் தொழில்நுட்ப சட்டப்படியும் மின்னணு தொடா்பான ஆவணங்களை சமா்ப்பிக்கும் போது வல்லுநா் சான்றளிக்க வேண்டும். இந்தச் சட்டம், கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது.

    ஆனால், தமிழகத்தில் இந்த வல்லுநா்கள் எந்த மாவட்டத்திலும் நியமிக்கப்படவில்லை. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் மின்னணு தொடா்பான ஆவணங்களை ஆய்வு செய்து சான்றளிக்க வல்லுநா்களை மூன்று மாதங்களில் நியமிக்க மத்திய தொழில்நுட்ப அமைச்சகச் செயலா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

    • வங்கி மூலமாகவும், நேரடியாகவும் பணம் மற்றும் தங்க நகைகள் என ரூ.1 கோடியே 21 லட்சம் கொடுத்திருந்தேன்.
    • என்னிடம் மோசடி செய்த பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

    மதுரை:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த பஷீர் அகமது என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    நான் பக்ரைன் நாட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தேன். அங்கு அருகில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றிய கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த வினி என்ற ஏஞ்சல் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

    அந்தப் பெண் கேரளாவில் பியூட்டி பார்லர் தொழில் தொடங்க உள்ளதாகவும், அதில் அதிக வருமானம் வரும் என்றும், எனவே அதில் என்னை முதலீடு செய்ய சொன்னார். அதனை நம்பி நான் வங்கி மூலமாகவும், நேரடியாகவும் பணம் மற்றும் தங்க நகைகள் என ரூ.1 கோடியே 21 லட்சம் கொடுத்திருந்தேன்.

    தொழிலில் வரும் லாபத்தை எனக்கு தருவதாக உறுதியளித்திருந்தார். நான் வழங்கிய பணம் மற்றும் அதற்கான லாபம் குறித்து அந்த பெண்ணிடம் பல முறை கேட்டும் தராமல் இழுத்தடித்து வந்தார். கடந்த மாதம் அவரை நேரில் சந்திக்க அவரது சொந்த ஊரான கேரளா மாநிலம் கொல்லம் பகுதிக்கு சென்றேன்.

    அப்போது அவர் அங்கு இல்லை. மேலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது அந்த பெண் என்னைப் போன்று பல பேரிடம் தொழில் தொடங்குவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக உள்ளார் என தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்திருந்தேன். ஆனால் இதுவரை நடவடிக்கைகள் இல்லை. எனவே என்னிடம் மோசடி செய்த பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். எனது பணத்தையும் மீட்டுத்தர வேண்டுமென புகார் மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி, பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை செய்து இரண்டு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தார். 

    • பொதுமக்கள் பலரின் முதலீட்டு தொகையை பல்வேறு வெளிநாடுகளில் முதலீடு செய்து உள்ளனர்.
    • வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    மதுரை:

    துபாயை சேர்ந்த முகமது யூசுப், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் என் மனைவி இந்தியாவில் இருந்தார். அப்போது கும்பகோணத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் கணேசன், சுவாமிநாதன் ஆகியோர் என் மனைவியை சந்தித்து வெளிநாடுகளில் செயல்படும் தங்களின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்பு தொகை வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

    இதை நம்பிய என் மனைவி, பல்வேறு தவணைகளில் வங்கி கணக்கு மூலம் ரூ.10 கோடி வரை செலுத்தி உள்ளார். ஆனால் அவர்கள் கூறியதை போல பணத்தை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் தஞ்சாவூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கை திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. விசாரிக்கிறார். இந்த வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மோசடி நபர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அப்பாவி பொதுமக்கள் பலரின் முதலீட்டு தொகையை பல்வேறு வெளிநாடுகளில் முதலீடு செய்து உள்ளனர். அந்த சொத்துகளை முடக்கவும், பணத்தை பறிமுதல் செய்து உரியவர்களிடம் ஒப்படைக்கவும் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீதான வழக்கின்பேரில் அவர்களின் சொத்துகளை முடக்குவதற்கு தமிழக உள்துறை செயலாளர் 2 மாதத்தில் அரசாணை பிறப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களின் சொத்துகளை முடக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணிகள் தொடங்கப்பட்டு 2026-க்குள் நிறைவடைந்துவிடும்.
    • கொரோனா காலகட்டத்தை காரணம் காட்ட வேண்டாம்.

    மதுரை:

    மதுரையை சேர்ந்த பாஸ்கர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதால், ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, அவர்களின் வாழ்க்கை தரம் உயர உதவியாக இருக்கும். தென் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் சிறந்த மருத்துவ வசதியை பெறவும் வாய்ப்பாக இருக்கும்.

    இதனை கருத்தில் கொண்டு 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தாலும் 2018 ஆம் ஆண்டு தான் மதுரை தோப்பூர் பகுதி தேர்வு செய்யப்பட்டது. பிரதமர் நேரில் வந்து அடிக்கல் நாட்டினார்.

    இருப்பினும் இன்னமும் கட்டுமான பணிகள் நடைபெறாமல், நீண்ட காலமாக கிடப்பிலேயே உள்ளது. கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு வழக்குகள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இதுவரை கட்டுமான பணிகளை தொடங்கப்படவில்லை.

    எனவே மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைவுபடுத்தி, குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டு விட்டது. பணிகள் தொடங்கப்பட்டு 2026-க்குள் நிறைவடைந்துவிடும். இடையில் கொரோனா காலம் ஏற்பட்டதால் தாமதம் ஆகிவிட்டது என தெரிவித்தார்.

    ஆனால் நீதிபதிகள், கொரோனா காலகட்டத்தை காரணம் காட்ட வேண்டாம். அதற்கு முன்பும் பின்பும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினர். விசாரணை முடிவில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எப்போது நிறைவடையும்? என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் எழுத்து பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    ×