என் மலர்
நீங்கள் தேடியது "Parliament"
- திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அரசியலில் நுழைவது கடினம் என்று நினைக்கிறார்கள்.
- பாராளுமன்றத்துக்கு இப்படி நடிகைகள் வருவதை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
புதுடெல்லி:
சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பாராளுமன்றம் கடந்த மே மாத இறுதியில் திறக்கப்பட்டது. இதன்பிறகு நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடர், பழைய பாராளுமன்ற கட்டிடத்திலேயே நடந்தது. இந்த நிலையில் திடீரென அறிவிக்கப்பட்ட 5 நாள் சிறப்புக்கூட்டத்தொடர், முதல் நாளான கடந்த 18-ந்தேதி பழைய பாராளுமன்றத்தில் தொடங்கி மறுநாளில் இருந்து புதிய பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
புதிய பாராளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இதனையொட்டி பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பிரம்மகுமாரிகள் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் பாராளுமன்றத்துக்கு சிறப்பு அழைப்பாளர்களாக வரவழைக்கப்பட்டு வருகிறார்கள். அதிகாரிகள் அவர்களை அழைத்துச்சென்று புதிய பாராளுமன்றத்தை சுற்றிக்காட்டுகிறார்கள். இரு அவைகளின் மாடங்களிலும் அமர வைத்து பாராளுமன்ற நடவடிக்கைகளை பார்க்கச் செய்கிறார்கள்.
இந்த வகையில் நடிகைகளும் அழைக்கப்படுகிறார்கள். இதன்படி 19-ந்தேதி இந்தி நடிகைகள் கங்கனா ரணாவத், ஈஷா குப்தா, பாடகி சப்னா சவுத்ரி, பாடகர் சுமித்ரா குஹா, ஆடை வடிவமைப்பாளர் ரினா டாக்கா, நடன கலைஞர்கள் நளினி கம்லினி ஆகியோர் அழைக்கப்பட்டு இருந்தனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இந்தி நடிகைகள் பூமி பெட்னேகர், ஷெஹ்லான் கில், டோலிசிங், ஷிபானி பேடி ஆகியோர் வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நடிகைகள் குஷ்பு, தமன்னா மற்றும் திவ்யா தத்தா உள்ளிட்டோர் வந்திருந்தனர். இதனையொட்டி பாராளுமன்ற வளாகத்தில் அவர்களைச் சுற்றி கூட்டம் கூடியது. அவர்களுடன் பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பின்னர் அவர்கள் புதிய பாராளுமன்றத்தை சுற்றிப்பார்த்தனர். மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதங்களை நடிகைகள், பார்வையாளர் மாடத்தில் இருந்து பார்த்தனர்.
இதற்கிடையே நடிகை குஷ்புவும், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.யும் சந்தித்தனர். இவர்கள் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை குஷ்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டார். இதைப்போல பிற நடிகைகளுடன் எடுத்துக் கொண்ட படத்தையும் பதிவேற்றம் செய்திருந்தார்.
மேலும், புதிய பாராளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்டதை நேரில் பார்த்த பெருமை கிடைத்தது என்றும், அதற்காக என்னை அழைத்ததற்கு மரியாதைக்குரிய பிரதமர் மோடிக்கும், அனுராக் தாக்குருக்கும் மிகவும் நன்றி என்றும் பதிவிட்டு உள்ளார்.
இதைப்போல நடிகை தமன்னா செய்தியாளர்களிடம் பேசும்போது, "இது ஒரு விழிப்புணர்வாக இருக்கும் என நான் நினைக்கிறேன். திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அரசியலில் நுழைவது கடினம் என்று நினைக்கிறார்கள். ஆனால் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, சாமானியர்களைக்கூட அரசியலுக்கு வர ஊக்குவிக்கும்" என்று கூறினார்.
இதற்கிடையே, பாராளுமன்றத்துக்கு இப்படி நடிகைகள் வருவதை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விமர்சனம் செய்துள்ளனர். குறிப்பாக உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, தனது எக்ஸ் தள பக்கத்தில், "பாராளுமன்றத்தில்கூட திரைப்பட விளம்பரங்கள் நடக்கின்றன" என்று கிண்டலாக பதிவிட்டு உள்ளார்.
- உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை வெற்றிகரமாக செயல்படுத்திய புரட்சித் தலைவி அம்மாவை நினைவுகூர விரும்புகிறேன்.
- மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் போதுமான அளவு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது பெண்களின் வளர்ச்சியை பொறுத்தே அமையும் என்று கூறியதோடு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை வெற்றிகரமாக அமல்படுத்தி சாதனை படைத்து நாட்டின் முன்னோடியாக திகழ்ந்த புரட்சித் தலைவி அம்மாவை இந்த நேரத்தில் நினைவுகூர விரும்புகிறேன்.
அதே நேரத்தில் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருக்கும் மக்கள்தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகளை உடனடியாக தொடங்குவதோடு, இட ஒதுக்கீடு மசோதாவின் மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் போதுமான அளவு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
மேலும், நாட்டின் முக்கிய முடிவுகள் மற்றும் அதிகாரங்களில் பெண்களுக்கான பங்களிப்பை அதிகப்படுத்தும் 33 சதவீதம் இட ஒதுக்கீட்டு சட்டமசோதாவை ஒரு மனதாக நிறைவேற்றுவதோடு, அதனை விரைவில் அமலுக்கு கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
- இந்த மசோதாவை மக்களவையில் மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் தாக்கல் செய்தார்.
புதுடெல்லி:
சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று இந்த மசோதா தாக்கல் செய்ய முடிவானது.
புதிய பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று பிற்பகல் கூடின. அந்த கூட்டத்தில் முதலில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டன.
மக்களவையில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதா நிறைவேற அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இந்நிலையில், மக்களவையில் மகளிர் இட ஓதுக்கீடு மசோதா குறித்து பேச தலைவர்களுக்கு நேரம் ஒதுக்கி பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி இன்று உரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட 750 எம்.பி.க்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
- பா.ஜனதா மேல்-சபை எம்.பி. நர்ஹரி அமீன் திடீரென்று மயங்கி விழுந்தார்.
புதுடெல்லி:
பழைய பாராளுமன்றத்திற்கு விடை கொடுத்துவிட்டு இன்று முதல் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடக்கிறது. பாராளுமன்ற நடவடிக்கைகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதற்கு முன்பு மக்களவை, மேல்-சபை எம்.பி.க்கள் பழைய பாராளுமன்றத்தின் உள் முற்றத்தில் ஒன்றாக குரூப் புகைப்படம் எடுத்து கொண்டனர். பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட 750 எம்.பி.க்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அப்போது பா.ஜனதா மேல்-சபை எம்.பி. நர்ஹரி அமீன் திடீரென்று மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு மற்ற உறுப்பினர்கள் உதவினர். பின்னர் சிறிது நேரத்தில் அவர் சகஜ நிலைக்கு திரும்பி புகைப்பட அமர்வில் பங்கேற்றார்.
- பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல்நாள் நிகழ்வுகள் வழக்கம்போல பழைய கட்டிடத்திலேயே நடைபெற உள்ளன.
- புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு செல்லும்போது, பாராளுமன்ற ஊழியர்கள் புதிய சீருடை அணிந்து செல்வார்கள்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) பழைய கட்டிடத்தில் தொடங்குகிறது.
இதையொட்டி இன்று புதிய பாராளுமன்ற வளாகத்தில் துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
கடந்த மே மாதம் 28-ந் தேதி திறக்கப்பட்ட புதிய கட்டிடத்தில் தேசிய கொடி ஏற்றப்படவில்லை என்பதால் இன்று கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள் பிரகலாத் ஜோஷி, முரளீதரன், பியூஷ் கோயல், அர்ஜூன் ராம்மேக்வால், காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரமோத் திவாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல்நாள் நிகழ்வுகள் வழக்கம்போல பழைய கட்டிடத்திலேயே நடைபெற உள்ளன. அடுத்த நாள் முதல் 22-ந்தேதி வரை புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
பாராளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்படாததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, பாராளுமன்ற செய்தி இதழில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
அரசியல் நிர்ணய சபை தொடங்கப்பட்டது முதல் பாராளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் வரை இந்தக் கூட்டத் தொடரின் முதல் நாளில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதாவை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர, வழக்கறிஞர்கள் (திருத்த) மசோதா, அஞ்சல் அலுவல் மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் மக்களவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளன. மேலும், பாராளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவும் இந்தக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
சிறப்புக் கூட்டத்தொடரில் பா.ஜ.க. உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பங்கேற்குமாறு அக்கட்சி கொறடா உத்தரவிட்டு உள்ளார். இதனிடையே சிறப்புக் கூட்டத்தொடரை முன்னிட்டு, மத்திய அரசு இன்று அனைத்துக் கட்சிக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதில், கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக்கட்சிகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு கேட்கும் எனத் தெரிகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதனால், அதுபற்றி இந்த சிறப்பு கூட்டத்தொடரில் விவாதிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டது, ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்தது பற்றியும் ஆலோ சிக்கப்படும் என கூறப்படுகிறது.
புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு செல்லும்போது, பாராளுமன்ற ஊழியர்கள் புதிய சீருடை அணிந்து செல்வார்கள். இவற்றை நிப்ட் எனப்படும் பாட்னா தேசிய பேஷன் தொழில்நுட்ப மையம் தயாரித்துள்ளது.
பாராளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் சீருடை இனி அடர் இளஞ்சிவப்பு நிறத்திலான அல்லது மஜெண்டா நிறத்திலான நேரு ஜாக்கெட் மாடலில் இருக்கும். இவற்றில் தாமரைப் பூக்கள் அச்சாகி இருக்கும். பேண்ட் காக்கி நிறத்திலேயே இருக்கும்.
அதேபோல் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் காவலர்களின் உடைகளும் மாற்றப்படுகின்றன. அவர்கள் மணிப்பூரி தலைப்பாகை அணிந்திருப்பார்கள்.
பாராளுமன்ற வளாகப் பாதுகாவலர்களின் சீருடையும் மாற்றப்படுகிறது. சபாரி உடைக்குப் பதிலாக அவர்களுக்கு ராணுவத்தினர் அணியும் உருமறைப்பு உடைகள் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாராளுமன்ற புதிய கட்டிடத்தின் வடிவமைப்பு, நிறம் ஆகியனவற்றையும் இந்த சீருடைகள் பிரதிபலிக்கும். அனைத்து சீருடைகளிலும் செல்போனை வைத்துக் கொள்வதற்காகவே பிரத்யேக பாக்கெட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது.
- அவை நடவடிக்கையில் முழுமையாக பங்கேற்க வேண்டும்.
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் ஒரே நாடு-ஒரே தேர்தல் சட்ட மசோதா தாக்கல் செய்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது.
அவை நடவடிக்கையில் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்று எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேல்-சபையில் 3-ல் 2 பங்கு ஆதரவு பா.ஜ.க. அரசுக்கு இல்லை என்பதால் மசோதாவை அங்கேயே தோற்கடிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
- பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் சில அறிவிப்புகள் மூலம் மக்களை கவர பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது.
- எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து சில முக்கிய பிரச்சனைகளை எழுப்பவும் திட்டமிட்டுள்ளன.
சென்னை:
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் முழுமையாக இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
சிறப்பு கூட்டத்தொடரில் 75 ஆண்டு கால பாராளுமன்ற பயணம் குறித்து விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தலைமை தேர்தல் ஆணையர் நியமன மசோதா, வழக்கறிஞர்கள் திருத்த மசோதா, அஞ்சல் அலுவலக மசோதா கொண்டு வரப்பட உள்ளது.
இவை தவிர நடைமுறையில் இல்லாத தேவையற்ற சட்டங்களை ரத்து செய்யவும் இந்த கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. என்றாலும் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நெருங்குவதால் அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நீடிக்கிறது. குறிப்பாக 'ஒரே நாடு ஒரே தேர்தல்' பற்றி விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் சில அறிவிப்புகள் மூலம் மக்களை கவர பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது. எனவே பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பா.ஜ.க.வின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகளும் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில்கலந்து கொண்டு பதிலடி கொடுக்க தீர்மானித்துள்ளன. இதை கருத்தில் கலந்து கொண்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் சிறப்பு கூட்டம் நடக்கும் 5 நாட்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து சில முக்கிய பிரச்சனைகளை எழுப்பவும் திட்டமிட்டுள்ளன. மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சனாதன சர்ச்சை ஆகியவற்றை எழுப்ப திட்டமிட்டுள்ளன.
மேலும் எதிர்க்கட்சியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சிகள் தங்கள் மாநில பிரச்சனைகளை சிறப்பு கூட்டத்தில் எதிரொலிக்க செய்ய முடிவு செய்துள்ளன. அந்த வகையில் தமிழக எம்.பி.க்கள் காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடாத பிரச்சனையை எழுப்பும் என்று தெரிகிறது.
இதற்காக தி.மு.க. எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நாளை (சனிக்கிழமை) சென்னையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி முடிவு செய்யப்பட உள்ளது.
எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து முக்கிய பிரச்சனைகளை எழுப்ப திட்டமிட்டு இருப்பதால் அவற்றை எதிர்கொள்ள பா.ஜ.க. மூத்த தலைவர்களும் தயாராகி வருகிறார்கள். சர்வதேச அளவில் இந்தியாவின் புகழை மேம்படுத்தும் வகையில் ஜி-20 மாநாடு நடத்தப்பட்டதையும், நிலவில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டதையும் முன்னிலைப்படுத்த பா.ஜ.க. தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதன் காரணமாக பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒரே நாடு ஒரே தேர்தல், மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இந்த தொடரில் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.
- முக்கியமான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும், அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கவும் அவையில் இருக்குமாறு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.
முன்னதாக எதற்காக இந்த கூட்டம் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரில் பாராளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்து முதல் நாளில் விவாதிக்கப்பட உள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. பாராளுமன்ற சிறப்பு கூட்டம் தொடங்குவதற்கு முன்பு 17-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல், மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இந்த தொடரில் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் மக்களவை பா.ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கொறடா உத்தரவிட்டு உள்ளார்.
முக்கியமான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும், அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கவும் அவையில் இருக்குமாறு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு உள்ளிட்ட 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகிறது
- 75 ஆண்டுகால பாராளுமன்ற கூட்டம் குறித்து சிறப்பு விவாதம்
பாராளுமன்ற சிறப்புக் கூட்டம் வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், சிறப்புக் கூட்டம் எதற்காக கூட்டப்படுகிறது என்பது குறித்து தெரிவிக்கவில்லை.
இந்திய நாட்டின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு கூட்டப்படிருக்கலாம், ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த மசோதாவை தாக்கல் செய்வதற்காக கூட்டப்பட்டிருக்கலாம் என பேசப்பட்டது.
ஆனால், 18-ந்தேதி பாராளுமன்ற பழைய கட்டிடத்தில் கூட்டம் தொடங்கும். அதன்பின் 19-ந்தேதி பாராளுமன்ற புதிய கட்டிடத்தில், அவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற இருக்கும நிகழ்ச்சி நிரல் குறித்து மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
சம்விதன் சபாவில் இருந்து பாராளுமன்றத்தின் 75 ஆண்டு காலத்தின் சாதனைகள், அனுபவம், நினைவுகள், கற்றுக்கொண்டவை குறித்து விவாதம் 18-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தேர்வு, தபால் நிலையம் மசோதா, வழக்கறிஞர்கள் (திருத்தம்) மசோதா, பத்திரிகை மற்றும் பத்திரிகை பதிவு மசோதா ஆகிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் அடுத்தடுத்து ஆலோசனை கூட்டம், சோனியா காந்தி பிரதமருக்கு கடிதம் எழுதுதல் போன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு தற்போது நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் ''இந்த நிகழ்ச்சி நிரலில் ஒன்றுமில்லை. குளிர்கால கூட்டத்தொடர் வரை காத்திருந்திருக்கலாம்'' எனத் தெரிவித்துள்ளார்.
- பாராளுமன்ற செயலகத்தில் 5 பிரிவுகளை சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.
- பெண் ஊழியர்களுக்கு சேலை சீருடையாக வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர், வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது. முதல் நாள் மட்டும் பழைய பாராளுமன்றத்தில் கூட்டம் நடைபெறும். 19-ந் தேதியில் இருந்து புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடக்கிறது.
புதிய கட்டிடத்துக்கு மாறும்போது, பாராளுமன்ற ஊழியர்களின் சீருடையும் மாறுகிறது. தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனங்களிடம் புதிய சீருடை எப்படி அமைய வேண்டும் என்று யோசனை கேட்கப்பட்டது. அந்நிறுவனங்கள் அளித்த வடிவமைப்புகளில் இருந்து ஒன்றை நிபுணர் குழு தேர்வு செய்துள்ளது.
பாராளுமன்ற செயலகத்தில் 5 பிரிவுகளை சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். பிரிவுக்கு தகுந்தபடி, ஒவ்வொரு நிறத்தில் சபாரி சூட்டை சீருடையாக ஊழியர்கள் அணிந்து வந்தனர். புதிய சீருடை, இந்திய தன்மையுடன் அமைந்துள்ளது. ஆண் ஊழியர்களுக்கு 'நேரு ஜாக்கெட்' பாணியில் இளஞ்சிவப்பு நிற சட்டையும், காக்கி நிற பேண்ட்டும் சீருடையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சட்டையில், ஏராளமான 'தாமரை' படங்கள் இடம்பெற்றுள்ளன.
சபை காவலர்களுக்கு இந்த சீருடையுடன் மணிப்பூர் தலைப்பாகையும் உண்டு. இதுபோல், பெண் ஊழியர்களுக்கு சேலை சீருடையாக வழங்கப்பட்டுள்ளது.
தாமரை என்பது தேசிய மலர் ஆகும். இருப்பினும், அது பா.ஜனதாவின் தேர்தல் சின்னம் என்பதால், சர்ச்சை எழுந்துள்ளது. இரு அவைகளின் உள்ளேயும், வெளியேயும் 271 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தாமரை படம் இடம்பெற்றதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்றம், அனைத்து கட்சிகளுக்கும் அப்பாற்பட்டது. ஆனால் அதை கட்சி சொத்தாக பா.ஜனதா மாற்றுகிறது.
பாராளுமன்ற ஊழியர்கள் சீருடையில், தேசிய விலங்கு என்பதற்காக 'புலி' படத்தை ஏன் போடவில்லை? தேசிய பறவை என்பதற்காக 'மயில்' படத்தை ஏன் போடவில்லை? ஏனென்றால் அவையெல்லாம் பா.ஜனதாவின் சின்னம் அல்ல. எவ்வளவு மலிவாக நடந்து கொள்கிறார்கள்?. இந்த வீழ்ச்சியை சபாநாயகர் கவனிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.