search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parliament"

    • ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
    • பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன.

    தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். நூதன முறையிலும் வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் புதுச்சேரி தொகுதியில் மாஸ்கோ என்பவர் வாளி சின்னத்தில் தேர்தலில் களம் காண்கிறார். சுயேட்சை வேட்பாளரான மாஸ்கோ பிச்சை கேட்டு வாக்கு சேகரித்து வருவதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.



    • பாலகணபதி பேசும் போது, கடந்த முறை வெற்றி பெற்றவர் தொகுதிக்கு எந்த திட்டமும் செயல்படுத்த வில்லை.
    • கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் சென்று ஆதரவு திரட்டினர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.வி.பாலகணபதி காக்களுர், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடுகாடு, மப்பேடு, கூவம், பேரம்பாக்கம் உட்பட பல்வேறு கிராமங்களுக்கு சுட்டெரிக்கும் வெயிலில் வீதி வீதியாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

    அப்போது காக்களுர் பகுதியில் உள்ள டீக்கடையில் பொது மக்களுக்கு டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது வேட்பாளர் பொன்.வி.பாலகணபதி பேசும் போது, கடந்த முறை வெற்றி பெற்றவர் தொகுதிக்கு எந்த திட்டமும் செயல்படுத்த வில்லை.

    வளா்ச்சி திட்ட பணியும் மேற்கொள்ளவில்லை. எனவே எனக்கு ஒருமுறை வாய்ப்பு அளித்தால் தொகுதி மக்களோடு இருந்து மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பேன். எனவே எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    வேட்பாளருடன் மாவட்ட பொது செயலாளர் கருணாகரன், ஆர்யா சீனிவாசன், மண்டல் தலைவர் ராஜேந்திரன், தரவு மேலாண்மை மாநில செயலாளர் ரகு, கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் லட்சுமி காந்தன், காக்களூர் மோகன், அமமுக மாவட்ட செயலாளர் ஏழுமலை, ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் சீனன், மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் தியாகு, முன்னாள் ஒன்றிய செயலாளர் விநாயகம், வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர் பலராமன், கிளை செயலாளர் பார்த்திபன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் சென்று ஆதரவு திரட்டினர்.

    • பழவேற்காடு பகுதியில் சிறிய துறைமுகம் அமைக்கப்படும் என்றார்.
    • கவிதா மனோகரன், உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர் .

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் (தனி) தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பெரிய மாங்கோடு, சின்ன மாங்கோடு, புதுகுப்பம், கோட்டைக்குப்பம், ரெட்டி பாளையம், கம்மார்பாளையம், பெரும்பேடு, சோம்பட்டு, கொல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று கை சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.

    அப்போது பேசிய வேட்பாளர் சசிகாந்த் செந்தில், மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, ஏழை குடும்ப பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி, பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ பயின்றவர்களுக்கு தொழில் பயிற்சியுடன் ரூ.1 லட்சம் உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுப்பேன். ஊரக வேலை திட்டத்தை போல, நகர்ப்புற வேலை உறுதி திட்டம் அமல்படுத்த முயற்சி செய்வேன். மீனவ குடும்பத்தினருக்கு அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும், மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு மீன் பிடிப்பதற்கு படகுகள், வலைகள், இன்ஜின்கள் மானிய விலையில் வழங்கப்படும்.

    பழவேற்காடு பகுதியில் சிறிய துறைமுகம் அமைக்கப்படும் என்றார். வேட்பாளருடன் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகர், டி .ஜே. கோவிந்தராஜன், மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, துணை தலைவர், பரிமேலழகர், தமிழ்ச்செல்வி பூமிநாதன், காங்கிரஸ் மாநில செயலாளர் சம்பத் வட்டார தலைவர் ஜெயசீலன், புருஷோத்தமன், பழவை ஜெயராமன், கடல் தமிழ்வாணன், ரவி, தி.மு.க நிர்வாகிகள் அவை தலைவர் பகலவன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சம்பத், மாவட்ட துணை அமைப்பாளர் முரளி, கவுன்சிலர் வெற்றி, அன்பு, தமின்சா, ரமேஷ் பழவேற்காடு அலவி,பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, தலைவர் கவிதா மனோகரன், உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர் .

    • வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்குள் வாகனங்கள், பிற நபர்கள் நடமாட்டத்திற்கு அனுமதி இல்லை.
    • விடுதிகள் மண்டபங்களில் வெளி நபர்கள் தங்கக்கூடாது.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு வகையிலான வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் 146 மண்டலங்களில் 1,688 வாக்குச்சாவடிகள் உள்ளன. மொத்தம் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

    தேர்தல் பணிக்காக 2,325 மத்திய பாதுகாப்பு படையினரும், 1,571 உள்ளூர் போலீசாரும் என மொத்தம் 3 ஆயிரத்து 896 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடிகள் உட்பட மொத்தம் 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

    மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,222 வாக்குச்சாவடிகளில் 191 வாக்குச்சாவடிகள் சமூக மற்றும் பொருளாதார காரணங்களால் பாதிக்கப்பட கூடிய வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 1476 வாக்குச்சாவடிகளும், ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் உள்ள 1,112 வாக்குச்சாவடிகளும் நேரடி கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படுவதுடன் நுன்பார்வையாளர்கள் மூலமாகவும் நேரடியாக கண்காணிக்கப்படும்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு எடுத்து செல்லவும் வாக்குப்பதிவு செய்யப்பட்ட எந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்பாக எடுத்து செல்லவும், சிறப்பு நிர்வாக நடுவர் அதிகாரம் பெற்ற மண்டல மற்றும் காவல்துறை அலுவலர்களை கொண்ட 198 குழுக்கள் ஈரோடு மாவட்டம் முழுமைக்கும், 146 குழுக்கள் ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு எனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் தேவையில்லாத வாக்கு வாதத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 131-ன் படி காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்திய 72 மணி நேரத்தில் (3 நாட்களுக்கு முன்னர்) பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுவினரின் சோதனை தீவரப்படுத்தப்படும்.


    அதேப்போல் 48 மணி நேரத்துக்குள் மேலும் சோதனை தீவிர படுத்தப்படும். ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு தொடர்பு இல்லாத நபர்கள் மாவட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும். விடுதிகள் மண்டபங்களில் வெளி நபர்கள் தங்கக்கூடாது. கூட்டம் கூட கூடாது.

    மாவட்ட அளவில் இலவச தொலைபேசி எண், சி-விஜில் ஆப் மூலமாக 118 புகார்கள் பெறப்பட்டு முழுமையாக தீர்வு காணப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்குள் வாகனங்கள், பிற நபர்கள் நடமாட்டத்திற்கு அனுமதி இல்லை. 100 மீட்டருக்குள் வாகனங்களை நிறுத்துதல், பிற செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. கர்ப்பிணி, கை குழந்தையுடன் வருவோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து வாக்களித்திட அனுமதிக்கப்படுவார்கள்.

    மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோரில் 3001 பேரில் தபால் வாக்கு செலுத்த படிவம் 12 டி வழங்கப்பட்டது. அதில் 2,800 பேருக்கும் அதிகமானோர் வாக்கு பதிவு செய்துள்ளனர். முதியோர் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழற்குடை வசதி, குடிநீர், கழிப்பிட வசதிகள் இப்படி அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மூன்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ள மையத்தில் வழி காட்டுவதற்கு ஒருவர் செயல்படுவார்.

    தேர்தல் பணியில் 10 ஆயிரத்து 970 அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தவிர ஒருங்கிணைப்பு பணியில் சுமார் 2500 பேரும் என மொத்தம் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்தல் பணியில் பணியாற்றுகின்றனர். வாக்குப்பதிவு முதல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். வாக்குப்பதிவுக்கு பின்னர் சில தளர்வுகள் இருக்கும். அது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

    வாக்குப்பதிவு நாளன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று அதிகாலை 5.30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு முகவர்கள் முன்னிலையில் நடைபெறும். முகவர்கள் வர தாமதமானால் 15 நிமிடம் காத்திருந்து மாதிரி வாக்குப்பதிவு மேற்கொள்ளப்படும்.

    அப்போதும் முகவர்கள் வரவில்லை எனில் வாக்குச்சாவடி தலைமை அலுவலரே மாதிரி வாக்குப்பதிவை நடத்துவார். 50 மாதிரி வாக்குகள் பதிவு செய்யப்படும். முகவர்கள் இருந்தால் ஒரு வேட்பாளருக்கு ஒரு வாக்கு என மாதிரி வாக்கு பதிவு செய்யலாம். மலைப்பகுதி வாக்கு சாவடியில் அங்கு பணியாற்றுபவர்களே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    தொலைபேசி இன்டர்நெட் வசதி தொடர்ச்சியாகவும் முழுமையாகவும் கிடைக்காத வாக்கு சாவடிகளுக்கு வனத்துறையினர் மைக் மூலமாக தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மலைப்பகுதியில் மட்டும் 120 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    கத்திரி மலை, மல்லியம்மன் துர்க்கம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு செல்ல மண் சாலைகளை உள்ளன இருப்பினும் கூடுதல் வசதி அலுவலர்களுடன் அங்கு வாக்குப்பதிவு நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உடன் இருந்தார்.

    • பாம்பை பிடித்துக் கொண்டும், பிரசாரம் நடந்த பகுதியில் சுற்றி திரிந்தார்.
    • வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் அருகே கோட்டகவுண்டம்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அவர் பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்று வாக்கு சேகரித்தார்.

    அப்போது அந்த கூட்டத்திற்கு வாலிபர் ஒருவர் வயல் வெளியில் சுற்றித்திரிந்த பாம்பு ஒன்றை பிடித்து கழுத்தில் போட்டுக்கொண்டு வந்தார். 2 கைகளிலும் பாம்பை பிடித்துக் கொண்டும், பிரசாரம் நடந்த பகுதியில் சுற்றி திரிந்தார். இதைக்கண்ட அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பீதி அடைந்தனர். உடனே அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த போலீசார் அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.


    ஆனால் அந்த வாலிபர் பிரசாரம் முடியும் வரை, அந்த பகுதியை சுற்றிச்சுற்றி வந்தார். டி.எம்.செல்வகணபதி தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்ற பிறகு தான் அந்த வாலிபரும் அந்த இடத்தில் இருந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதை அறிந்த மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பாம்புடன் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு வந்த அந்த வாலிபரை கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் சேலம் தெற்கு வனச்சரகர் துரை முருகன் அந்த வாலிபர் யார்? என விசாரணை நடத்தியபோது பாம்புடன் பிரசார கூட்டத்திற்கு வந்தவர் கருப்பூர் பகுதியை சேர்ந்த அரவிந்த்குமார் (வயது 26) என்பது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • சுந்தர்.சியின் பேச்சுக்கள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
    • பிரசாரத்தின் நடுவில் சுந்தர்.சியிடம் அரண்மனை 4 படம் குறித்து கேள்வி எழுப்பினர்.

    வேலூர்:

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு திடீரென்று பிரசாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    உடல் நிலை பாதிப்பு காரணமாக நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. டாக்டர்கள் பிரசாரம் செய்ய வேண்டாம் என கூறியதால் பிரசாரத்தில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக பா.ஜனதா தலைவர் நட்டாவுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார்.

    எனது சமூக வலை தளங்கள் மூலம் பா.ஜனதாவின் கொள்கைகளையும், திட்டங்களையும் தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்வேன் என அவர் கூறினார்.


    இந்த நிலையில் குஷ்புவுக்கு பதிலாக அவரது கணவர் நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி பிரசார களத்தில் இறங்கி உள்ளார்.

    கடந்த சில நாட்களாக அவர் வேலூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சுந்தர்.சியின் பேச்சுக்கள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

    பிரசாரத்தின் நடுவில் சுந்தர்.சியிடம் அரண்மனை 4 படம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் சுவாரசியமாக பதில் அளித்தார்.

    • தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது.
    • அண்ணாமலை வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரசாரம் செய்து வருகிறார்‌.

    ஈரோடு:

    ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் வந்து கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி ஆறுதல் கூறினர்.

    பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும் என பா.ஜ.க. தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருப்பது புதிதாக (டெஸ்ட்) சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது. பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது.

    இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்த போது எட்டி பார்க்காத பிரதமர் எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

    நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரசாரம் செய்து வருகிறார். இதற்கு தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பனங்காட்டு தெருவில் தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுகிறார். இவர் நேற்று இரவு சீர்காழி நகரத்தில் உள்ள 24 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    ஒவ்வொரு வார்டு பகுதியிலும் அவரை வரவேற்கும் விதமாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பனங்காட்டு தெருவில் தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்பொழுது வெடிக்கப்பட்ட பட்டாசிலிருந்து சிதறிய தீப்பொறி அருகில் இருந்த அய்யாதுரை என்பவரது வீட்டின் கூரையில் விழுந்துள்ளது.

    இதை யாரும் கவனிக்காத நிலையில் வேட்பாளரும் உடன் வந்தவர்களும் அங்கிருந்து வேறு பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்றனர். சில நிமிடங்களில் அய்யாதுரையின் வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சீர்காழி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததுடன் துரிதமாக செயல்பட்டு வீட்டின் மீது தண்ணீரை ஊற்றியும் கூரையை பிரித்து அப்புறப்படுத்தியும் தீயை அணைத்தனர்.

    இதனால் வீட்டிலிருந்த பொருட்கள் தப்பியது. அதேநேரம் தீயை அணைப்பதற்காக வந்த தீயணைப்பு வாகனம் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி உரிய நேரத்தில் செல்ல முடியாமலும், குறுகிய சாலை என்பதால் தீ பிடித்த வீட்டிற்கு எளிதில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், மக்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கூட்டணி தர்மத்தை மதித்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றேன்.
    • கேப்டன் இல்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அவரது ஆசியால்தான் நான் இயங்கி வருகிறேன்.

    சிவகாசி:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் விஜயகாந்த் மகனை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    உங்கள் அண்ணன் மகனுக்கு நீங்கள் பெருவாரியான வாக்குகளை அளிக்க வேண்டும். 32 வயதில் படித்து முடித்துவிட்டு எத்தனையோ கனவுகள் இருந்தாலும் அதை தூக்கி எறிந்து விட்டு தந்தையின் வழியில் மக்கள் சேவை செய்ய இந்த தொகுதியில் அவர் போட்டியிடுகின்றார். உங்கள் எல்லாருக்கும் தெரியும் தம்பிக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை. இந்த விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர் இந்த தொகுதி மக்களின் தலைமையில் தான் அவருக்கு திருமணம் நடக்கும்.

    கூட்டணி தர்மத்தை மதித்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றேன். எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாகவும் அனைத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. இந்த தொகுதியில் தே. மு.தி.க. வெற்றி பெற்றவுடன் அவர் பல நல்ல திட்டங்களை இந்த தொகுதியில் அறிவித்து செயல்படுத்த உள்ளார். அதில் சிலவற்றை என்னிடம் கூறினார். அதை நான் உங்களிடம் கூறுகின்றேன்.

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் கேப்டன் பிறந்தநாள் அன்று 60 பெண்களை தேர்வு செய்து பெண்கள் நாட்டின் கண்கள் திட்டத்தின் மூலம் எங்களது சொந்த நிதியிலிருந்து அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க உள்ளார். ஆண்டுதோறும் 6 லட்சம் வீதம் 5 வருடத்தில் ரூ.30 லட்சம் வரை பெண்களுக்கு நிதி உதவி வழங்க உள்ளார்.

    தொகுதி முழுவதிலும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் தொடங்கப்படும். இலவச தையல் பள்ளிகள், இலவச நீட் கோச்சிங் சென்டர், படித்த படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு இலவச தையல் மிஷின்கள் வாங்கி கொடுத்து அவர்கள் வாழ்வாதாரம் உயர நடவடிக்கை, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாளாக உயர்த்தவும் கூலித் தொகையை ரூ.500 ஆக அதிகரிக்கவும் பாராளுமன் றத்தில் கோரிக்கை வைப்பார்.

    நமது வேட்பாளர் வயதில் சின்னவர் என்று நினைக்காதீர்கள். அவர் நல்ல அறிவாளி, உலகம் முழுவதும் சுற்றி வந்துள்ளார். பல்வேறு மொழிகளை பேசும் திறமை கொண்டவர். பாராளுமன்றத்தில் உங்கள் பிரச்சனைகளை எழுப்பி அதற்கு தீர்வு காணும் வல்லமை அவரிடம் உள்ளது. குணத்திலும், பழகுவதிலும் கேப்டனின் மறு உருவம். 34 வருடம் கேப்டனுக்கு மனைவியாக வாழ்ந்தும், அவருக்கு தாயாக இருந்தும் சேவை செய்திருக்கிறேன். கேப்டன் இல்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அவரது ஆசியால்தான் நான் இயங்கி வருகிறேன்.

    இவர் அவர் பேசினார்.

    • இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளேன்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன் என பிரசாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் தெரிவித்தார்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் விஜய் வசந்த் மாவட்டம் முழுவதும் சென்று மக்களிடம் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று அகஸ்தீஸ்வரம், காமராஜ் நகர், ராமன்புதூர், சந்தையடி, இலந்தையடிவிளை, சாமிதோப்பு, செட்டிவிளை, பொற்றையடி, வைகுண்டபதி, கொட்டாரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர்.

    பிரசாரத்தின் போது விஜய்வசந்த் பேசியதாவது:-

    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூ நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். அரசியலமைப்புச் சட்டத்தை நமக்கு தந்த அம்பேத்கரின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன். மேலும் இன்று (அதாவது நேற்று) எனது வாழ்வில் மிகவும் முக்கியமான நாள். எனது அன்பு தந்தை எச்.வசந்தகுமார் பிறந்த நாள் ஆகும்.

    எனது தந்தை விட்டுச் சென்ற மக்கள் பணியை தொடர்வதற்கு அவர் மேல் வைத்திருக்கும் பாசத்தால் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    குமரி மாவட்டத்தை வளர்ச்சி பெற்ற மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற என் தந்தையின் கனவை நிறைவேற்ற உங்களுக்காக இன்னும் பல பணிகள் செய்ய வேண்டும். இதற்காக நான் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறேன். மாவட்டத்தில் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக பாராளுமன்ற உறுப்பினராக நான் வாங்கிய அனைத்து சம்பளப் பணத்தையும் கொடுத்துள்ளேன்.

    குமரி மாவட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவை நிறைவேற்றும் வகையில் எனது தந்தை தொடங்கி வைத்த வேலைவாய்ப்பு முகாமை தொடர்ந்து நடத்தி சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளேன். குமரி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். எனக்கு நீங்கள் அனைவரும் கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயல் தலைவர் ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. பெல்லார்மின், மாநகர மேயர் மகேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லச்சாமி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. எச்.வசந்தகுமாரின் 74- வது பிறந்த நாளை முன்னிட்டு, அவர் குமரி மாவட்ட மக்களுடன் உரையாடுவது போன்ற நவீன தொழில்நுட்பத்துடன் (செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறையில்) தயாரிக்கப்பட்ட காணொலியை தமிழ்ச்செல்வி வசந்தகுமார் வெளியிட்டார். நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி., சகோதரர் வினோத் குமார், காமராஜ், எச்.வசந்தகுமாரின் தங்கை வசந்தகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ‘ரோடு ஷோ ’வில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமியும் பங்கேற்கிறார்.
    • தேசிய தலைவர்கள் வருகையை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.

    இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வைத்தி லிங்கம் எம்.பி.யும், அ.தி.மு.க. சார்பில் தமிழ் வேந்தனும் போட்டியிடுகின்றனர். இதனால் புதுச்சேரியில் மும்முனை போட்டி நிலவுகிறது.

    வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றனர். பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி தொகுதி வாரியாக வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

    அதுபோல் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து அக்கட்சியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரித்து வருகிறார்கள். தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந் தேதி பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அதுபோல் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 30-ந் தேதி பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் பா.ஜனதா வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து பிரசாரம் செய்ய அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று மாலை 4 மணி அளவில் விமானம் மூலமாக புதுச்சேரிக்கு வருகிறார்.

    மாலை 6 மணி அளவில் அண்ணாசிலையில் இருந்து அஜந்தா சிக்னல் வரை 'ரோடு-ஷோ' செல்கிறார். இந்த 'ரோடு ஷோ 'வில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமியும் பங்கேற்கிறார்.

    தேசிய தலைவர்கள் வருகையை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • தேர்தல் பிரசாரத்துக்கு கோவை வந்த பிரதமர் மோடி தி.மு.க. அழிந்து விடும் என பேசுகிறார்.
    • நாடு சர்வாதிகார நாடாகி ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டு விடும்.

    கோவை:

    கோவையில் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், ஆவாரம்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் கூறியதாவது:-

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் இரண்டு நபர்களுக்கு இடையே நடக்க கூடிய தேர்தல் அல்ல. இந்த தேர்தல் மூலமாகத்தான் நாம் நாட்டை காக்கப் போகிறோமா, கைவிடப் போகிறோமா என்பதை முடிவு செய்யப் போகிறோம்.

    இந்த தேர்தலில் மோடி மீண்டும் வென்றால் இந்தியாவில் இனி தேர்தல்களே நடக்காது. நாடு சர்வாதிகார நாடாகி ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டு விடும்.

    தேர்தல் பிரசாரத்துக்கு கோவை வந்த பிரதமர் மோடி தி.மு.க. அழிந்து விடும் என பேசுகிறார். இந்த தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை, அ.தி.மு.க. என்ற கட்சி அழிந்து விடும் என்று பேசுகிறார். அப்படி என்றால் தேர்தலுக்கு பிறகு இந்த இரண்டு கட்சிகளையும் இவர்கள் அழித்து விடுவார்களா, அவர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத சர்வாதிகாரிகள் போல் பேசுகிறார்கள்.


    இந்தியாவுக்கு பாகிஸ்தான், சீனாவால் பிரச்சனை இல்லை. பாரதிய ஜனதாவால் தான் பிரச்சனை. அதனால் இந்த தேர்தலில் இவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும்.

    மோடி கியாரண்டி என்ற தலைப்பில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் வரும் 5 ஆண்டுகளில் என்ன செய்வோம் என்பதை பட்டியலிட்டுள்ளனர். ஏற்கனவே வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சொல்லியதை எல்லாம் செய்து விட்டீர்களா என்று கேட்டால் பதில் இல்லை. தமிழக மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது வராத மோடி, நிதி கொடுக்காத மோடி, இப்போது தமிழக மக்களிடம் ஓட்டுக் கேட்க மட்டும் அடிக்கடி வருகிறார். இதை தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×