search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rajya sabha"

    • 2014-ம் ஆண்டில் 25 கோடி சந்தாதாரர்கள் மட்டுமே இணையதள சேவையை பயன்படுத்தினர்.
    • தற்போது இணையதள சேவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 97.44 கோடியாக உயர்ந்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் உறுப்பினர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா, அனைத்து செல்போன் நிறுவனங்களும் கடந்த ஆண்டு ஜூலை 3-ம் தேதி கட்டணத்தை உயர்த்தின. அது மத்திய அரசுக்கு தெரியுமா? இதனால் செல்போன் பயன்படுத்துவோருக்கு ரூ.34,000 கோடி கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற கட்டண உயர்வை மத்திய அரசால் தடுக்க முடியாதா? என்றார்.

    அப்போது, மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா பதிலளித்தார். அவர் கூறியதாவது:

    செல்போன் கட்டணம் 10 சதவீதம் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 5ஜி சேவையை வேகமாக அறிமுகப்படுத்துவதற்கு போட்ட முதலீடே அதற்கு காரணம்.

    ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அந்த முதலீட்டை திரும்ப எடுக்க வேண்டி இருக்கிறது. 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட 22 மாதங்களில் 98 சதவீத மாவட்டங்களில் 82 சதவீதம் பேரை சென்றடைந்துள்ளது.

    நம் நாட்டில் 2014-ல் 90 கோடி செல்போன் சந்தாதாரர்கள் இருந்தனர். இன்று 116 கோடி செல்போன் சந்தாதாரர்கள் உள்ளனர். கடந்த 2014ல் 25 கோடி சந்தாதாரர்கள் மட்டுமே இணையதள சேவையை பயன்படுத்தி வந்தனர். இன்று இணையதள சேவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 97.44 கோடியாக உயர்ந்துள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டில் ஒரு ஜிபி பிராட்பேண்ட் (வேகம்) இணையத்தின் விலை ஒரு ஜி.பி.க்கு ரூ.270 ஆக இருந்தது. இது தற்போது ஒரு ஜிபிக்கு ரூ.9.70 ஆக குறைந்துள்ளது.

    நுகர்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது கட்டணங்களை கண்காணிப்பது அவசியம். போட்டியை ஊக்குவிக்கும் அரசின் கொள்கைகளே இந்தக் கட்டண குறைவுக்கு காரணம். இந்த குறைவு, குறிப்பாக கிராமப்புறங்களில் செல்போன் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாகவும் இருந்திருக்கிறது.

    தொலைதொடர்பு சேவைகள் அனைத்து குடிமக்களுக்கும் மலிவு விலையில் கிடைப்பதை அரசு உறுதி செய்து வருகிறது. உலகிலேயே இந்தியாவில்தான் அழைப்பு கட்டணமும், டேட்டா கட்டணமும் மலிவாக உள்ளது என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஜக அரசு எந்த தவறும் செய்யவில்லை என்றால் ஏன் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை மறைகிறது
    • கண்களால் பார்த்த சாட்சியங்கள் கொடுத்த புள்ளிவிவரங்கள் படி 2,000 பேர் இறந்துள்ளனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.

    இந்நிகழ்வில் கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.

    ஆனால் ஆனால் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக அரசு மறைப்பதாக அகிலேஷ் சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    நேற்று பாரளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அவர் பாஜக அரசு எந்த தவறும் செய்யவில்லை என்றால் ஏன் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை மறைக்கிறது, அழிக்க நினைக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில் நேற்று மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பேசிய [உத்தவ் தாக்கரே பிரிவு] சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், "4-5 நாட்களுக்கு முன்பு கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது, அது கூட்ட நெரிசல் அல்ல, வதந்தி என்று கூறப்பட்டது. பின் 30 பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. அந்த எண்ணிக்கை உண்மையா? அதை மறைக்காதீர்கள். ஒருவர் இறந்தாலும் நாம்தான் பொறுப்பு.. கண்களால் பார்த்த சாட்சியங்கள் கொடுத்த புள்ளிவிவரங்கள் படி 2,000 பேர் இறந்துள்ளனர்.

    இந்த துயரத்திற்கு "மோசமான நிர்வாகமே" காரணம்.மகா கும்பமேளாவை "அரசியல் சந்தைப்படுத்தலுக்கான நிகழ்வாக மாற்றியுள்ளனர். மற்ற நாடுகளில் இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தால் பிரதமர் மற்றும் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்திருக்கும் என்று தெரிவித்தார்.

    இதற்கு பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவைத் தலைவர் புள்ளிவிவரத்துக்கான ஆதரத்தை கோரினார். முன்னதாக காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே கூட்ட நெரிசலில் ஆயிரக்கணக்கானோர் இறந்ததாகக் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

     

    • அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளி.
    • காங்கிரஸ் கட்சிதான் அம்பேத்கரை அவமதித்தது என பா.ஜ.க. பதிலுக்கு கடும் அமளியில் ஈடுபட்டதால் அவைகள் முடங்கின.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது "அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்" எனப் பேசினார்.

    இதனால் அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கரை அவமதித்தாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பான நேற்று இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அம்பேத்கர் குறித்து பேசியது தொடர்பாக அமித் ஷா நேற்று விளக்கம் அளித்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு இரு அவைகள் கூடியதும் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோஷமிட்டனர். மேலும் அமித் ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கினார். அதேவேளையில் காங்கிரஸ் கட்சி அம்பேத்கரை அவமதித்ததாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. எதிர்க்கட்சிகளும், ஆளும் பா.ஜ.க-வும் பரஸ்பர குற்றம்சாட்டை முன்வைத்து இரு அவைகளிலும் அமளியில் ஈடுட்டன.

    இதனால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு மக்களவை கூடியதும் மீண்டும் அதே பிரச்சனை இரு பக்கத்தில் இருந்தும் எழுப்பப்பட்டது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    மாநிலங்களவையில் ராகுல் காந்திக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வரப்போவதாக பா.ஜ.க. எம்.பி. ஜே.பி. நட்டா தெரிவித்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பா.ஜ.க. எம்.பி.க்களும் பதிலுக்கு அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவையில் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    நாளை காலை 11 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் தன்னை பா.ஜ.க. எம்.பி.க்கள் தடுத்து நிறுத்த முயன்றதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். அதேவேளையில் ராகுல் காந்தி தள்ளிவிட்டதால் இரண்டு பா.ஜ.க. எம்.பி.க்கள் காயம் அடைந்ததாக பா.ஜ.க.-வினர் குற்றம்சாட்டினர்.

    • முன்னாள் எம்.பி. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
    • பாராளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்களுக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    கடந்த 17 ஆம் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.

    இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து பாராளுமன்றத்திற்கு வெளியே அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தி அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

    இதனையடுத்து அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஜெய் பீம் என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைகள் நேற்று முழுவதும் முடங்கின.

    பின்னர் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமித் ஷா , பா.ஜ.க. ஒருபோதும் அம்பேத்கரை அவமதிக்காது. * அம்பேத்கரின் கொள்கைகளை பா.ஜ.க. பின்பற்றி வருகிறது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கருத்துக்களை திரித்து கூறிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. AI மூலம் எனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், அமைச்சர் பதவியை அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்ததாக பாஜக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.

    இதனையடுத்து பாராளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்களுக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதனால் பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    இதனையடுத்து இன்று காலை 11 மணிக்கு மாநிலங்களவை கூடியதும் அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

    இதனிடையே அண்மையில் மரணமடைந்த முன்னாள் எம்.பி.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மக்களவையும் இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    • அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர் என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது என அமித் ஷா பேச்சு.
    • அமித் ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

    அரசியலமைப்பு மீதான விவாதம் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசும்போது 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.

    அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும் இது தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

    பின்னர் 2 மணிக்கு அவை மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள். அமித் ஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    அதேபோல் மாநிலங்களவையும் இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு மீண்டும் அவை தொடங்கியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட அவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    • காங்கிரஸ் 77 முறை அரசியலமைப்பைத் திருத்தியது. பாஜக 22 முறை மட்டுமே அதை செய்துள்ளது.
    • நீங்கள் ஒரு போலியான, வெற்று அரசியலமைப்பை எடுத்துச் செல்கிறீர்கள் என்று மக்கள் கண்டுபிடித்தார்கள்.

    அரசியலமைப்பு நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதை நினைவுகூறும் வகையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மக்களவையில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை விவாதம் நடைபெற்றது.

    நேற்றும் இன்றும் மாநிலங்களவையில் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின்போது மாநிலங்களவையில் அமித் ஷா பேசினார்.

    அப்போது அமித் ஷா "மக்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்ற பிறகு, ஜனநாயக நடைமுறையைப் பின்பற்றி இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் செய்ததுபோல் யாரும் அதை சிதைக்கவில்லை.

    நீங்கள் (காங்கிரஸ் தலைவர்கள்) ஒரு போலியான, வெற்று அரசியலமைப்பை எடுத்துச் செல்கிறீர்கள் என்று மக்கள் கண்டுபிடித்தார்கள், அதனால்தான் நீங்கள் சமீபத்திய தேர்தல்களில் தோல்வியடைந்தீர்கள்.

    நாங்கள் மற்றவர்களிடமிருந்து நல்ல விஷயங்களை ஏற்றுக்கொண்டோம், ஆனால் எங்கள் மரபுகளில் ஒருபோதும் சமரசம் செய்ததில்லை.

    மாற்றம் என்பது வாழ்க்கையின் உண்மையும் மந்திரமும் ஆகும். அரசியலமைப்பை உருவாக்கியவர்களும் இதை உணர்ந்து அதற்கான ஏற்பாடுகளை உருவாக்கியுள்ளனர்.

    காங்கிரஸ் 77 முறை அரசியலமைப்பைத் திருத்தியது. பாஜக 22 முறை மட்டுமே அதை செய்துள்ளது.

    அரசியலமைப்புச் சட்டம் முதன்முறையாக ஜூன் 18, 1951 அன்று திருத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி பொதுத் தேர்தல்களுக்காகக் காத்திருக்க விரும்பாததால் அரசியலமைப்புச் சட்டக் குழு இந்தத் திருத்தத்தைச் செய்தது. கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த அரசியலமைப்பில் பிரிவு 19A சேர்க்கப்பட்டது.

    சமத்துவம் நமது அரசியலமைப்பின் இதயமாக உள்ளது. ஏன் ஒரு பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்படவில்லை? ஏனென்றால் முதல் பிரதமர் முஸ்லிம் தனிநபர் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

    ஒரே நாளில் இரண்டு தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. மகாராஷ்டிராவில் அவர்கள் (எதிர்க்கட்சிகள்) தேர்தலில் தோல்வியடைந்தபோது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததாகக் கூறினர், ஜார்க்கண்டில் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றபோது, நல்ல ஆடைகளை அணிந்து பதவி ஏற்றுக் கொண்டனர். கொஞ்சம் வெட்கப்படுங்கள்... மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    நாங்கள் 3 குற்றவியல் நீதிச் சட்டங்களைக் கொண்டு வந்தோம். இந்தச் சட்டங்களைக் கொண்டு வந்ததன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி குற்றவியல் நீதி அமைப்பை இந்தியமயமாக்கினார். அடிமைத்தன மனநிலையிலிருந்து நாட்டை விடுவிக்க யாராவது பாடுபட்டால் அது பிரதமர் மோடிதான்" என்றார்.

    • எவ்வளவு தீய அரசியலமைப்பாக இருந்தாலும் அதை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இருந்தால் அது நல்லதாக மாறும்
    • ஆனாலும் கடந்த 70 ஆண்டுகளில் அரசியலமைப்பில் பல திருத்தங்கள் நடந்துள்ளது

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    கூட்டத்தொடரின் நான்காவது மற்றும் கடைசி வாரம் இன்று [திங்கள்கிழமை] தொடங்கியது. அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு 75 வருட நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் கடந்த வாரம் முதல் இரு அவைகளிலும் சிறப்பு உரைகள் இடம்பெற்று வருகிறது.

    அந்த வகையில் இன்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசியலமைப்பின் மீது, மாநிலங்களவையில் உரையாற்றினார்.

    எவ்வளவு நல்ல அரசியலமைப்பாக இருந்தாலும், அதை செயல்படுத்துபவர்கள் சரியில்லை என்றால் அது தீயதாகும், எவ்வளவு தீய அரசியலமைப்பாக இருந்தாலும் அதை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இருந்தால் அது நல்லதாக மாறும் என்ற அம்பேத்கரின் கூற்றை மேற்கோள் காட்டினார்

    இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 50 க்கும் மேற்பட்ட நாடுகள் சுதந்திரமடைந்து, அவற்றின் அரசியலமைப்பை எழுதின. ஆனால் பலர் தங்கள் அரசியலமைப்பை முற்றிலுமாக மாற்றினர். ஆனால் நாம் இன்னும் அதை கடைபிடித்து வருகிறோம். இந்திய அரசியலமைப்பு காலத்தின் சோதனையை தாங்கியது.

    ஆனாலும் கடந்த 70 ஆண்டுகளில் அரசியலமைப்பில் பல திருத்தங்கள் நடந்துள்ளது. அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓராண்டுக்குள் பேச்சுச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த காங்கிரஸ் முதல் திருத்தும் கொண்டுவந்தது என்று விமர்சித்தார். முன்னதாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவையில் பதவியேற்றனர். 

    • மூன்று வருடங்களாக முக்கியமாக விசயங்கள் குறித்து பேச நேரமோ அல்லது இடமோ தரவில்லை.
    • தலைவரே அரசாங்கத்தைப் பாதுகாக்கும்போது எதிர்க்கட்சிகளின் பேச்சைக் கேட்பது யார்?.

    மாநிலங்களவையில் அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார் எனக் கூறிய எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் (பதவி நீக்கம்) கொண்டு வந்துள்ளன. காங்கிரஸ், திரணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சியை சேர்ந்த 70 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு தீர்மானத்தை வழங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் ஜெகதீப் தன்கர் மிகப்பெரிய இடையூறாக இருந்ததால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டதாக மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    இன்று மதியம் இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில் "மாநிலங்களவையில் மிகப்பெரிய இடையூறாக அவைத்தலைவர் இருக்கிறார். இதனால் ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அவருடைய நடவடிக்கை இந்தியாவின் கண்ணியத்தை காயப்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் நாங்கள் இந்த கட்டாய நடவடிக்கையை எடுத்துள்ளோம். நாங்கள் ஏற்கனவே நோட்டீஸ் கொடுத்துள்ளோம். இந்த முக்கியமான விசயத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன. மூன்று வருடங்களாக முக்கியமாக விசயங்கள் குறித்து பேச நேரமோ அல்லது இடமோ தரவில்லை.

    நாங்கள் மாநிலங்களவை தலைவரிடம் இருந்த பாதுகாப்பை எதிர்பார்த்தோம். ஆனால், ஆளும்கட்சி எம்.பி.க்களை தொடர்ந்து பேச சைகை காட்டுகிறார். தலைவரே அரசாங்கத்தைப் பாதுகாக்கும்போது எதிர்க்கட்சிகளின் பேச்சைக் கேட்பது யார்?.

    எதிர்க்கட்சி தலைவர்களை இழிவுப்படுத்த முயற்சிக்கிறார். பள்ளிக்கூடம் தலைமை ஆசிரியர் போன்று எம்.பி.க்களை ஈடுபடுத்துகிறார். அவருடைய பணி அரசு செய்தி தொடர்பாளர் போன்று உள்ளது. மாநிலங்களவையில் மிகப்பெரிய இடையூறு மாநிலங்களவை தலைவர்தான். தனிப்பட்ட குறைகள் அல்லது அரசியல் சண்டைகள் பற்றிய அறிவிப்பு அல்ல" என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    • நேற்று நடந்த அமளியில் தள்ளிவைக்கப்பட்ட அவை இன்று மதியம் கூடிய நிலையில் மீண்டும் அமளி ஏற்பட்டுள்ளது.
    • சோரோஸ் விஷயத்தை மூடி மறைக்கும் முயற்சி என்று நட்டா குற்றம் சாட்டினார்.

    பாராளுமன்றத்தில் அவைத்தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம், காங்கிரஸ் - ஜார்ஜ் சோரோஸ் விவகாரம் தொடர்பாக இன்று ஏற்பட்ட அமளியால் மாநிலங்களவை கூட்டம் நாள் முழுவதும் ஒத்துவைக்கப்பட்டுள்ளது.

    நேற்று நடந்த அமளியில் தள்ளிவைக்கப்பட்ட அவை இன்று மதியம் கூடிய நிலையில் மீண்டும் அமளி ஏற்பட்டுள்ளது.

    அவையில் ஆளும் கட்சி தலைவர் ஜே.பி. நட்டா, அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரோஸ் நிதி அமைப்புகளுடன் சேர்ந்த காங்கிரஸ் நாட்டை சீர்குலைக்க காங்கிரஸ் முயல்கிறது என்றும் அதன் மீதான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

     

    மேலும் அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளது சோரோஸ் விஷயத்தை மூடி மறைக்கும் முயற்சி என்று நட்டா குற்றம் சாட்டினார்.

    ஆனால் இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். இதனால் இரு தரப்பு எம்பிக்களும் மேஜையில் இருந்து எழுந்து முழக்கம் எழுப்பிய நிலையில் மாநிலங்களவை நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆந்திரா மாநிலத்தில் மூன்று எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • மேற்கு வங்கம், ஒடிசா, அரியானா மாநிலங்களில் தலா ஒரு இடங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் ஆறு எம்.பி.க்கள் இடம் காலியாக உள்ளது. இதற்கான தேர்தல் டிசம்பர் 20-ந்தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

    ஆந்திர பிரதேசத்தில் மூன்று இடத்திற்கும் ஒடிசா, மேற்கு வங்காளம், அரியானா மாநிலங்களில் தலா ஒரு இடங்களுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது.

    ஏற்கனவே எம்.பி.க்களாக இருந்து ஆறு பேரும் ராஜினாமா செய்ததால் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

    டிசம்பர் 10-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். டிசம்பர் 13-ந்தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடசி நாளாகும்.

    ஆந்திர பிரதேசத்தில் வெங்கடரமணா ராவ் மோபிதேவி, பீதா மஸ்தான் ராவ் யாதவ், ரியாகா கிருஷ்ணையா ஆகியோரும், ஒடிசாவில் சுஜீத் குமாரும், மேற்கு வங்கத்தில் ஜவ்ஹார் சிர்காரும், அரியானாவில் கிருஷ்ணா லா் பன்வாரும் தங்களது எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர்.

    • மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
    • மாநிலங்களை புதன்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் கூடும் என அறிவிப்பு.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மராட்டியம், ஜார்க்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள பரபரப்பான சூழ்நிலையில் கூட்டம் தொடங்கியதால் சபை நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவியது.

    கூட்டத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. அப்போது பாராளுமன்றத்தில் அதானி விவகாரம் மற்றும் மணிப்பூர் கலவரம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.

    இது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கும்போது சபை நடவடிக்கைகள் பற்றி அலுவல் ஆய்வு குழுக்கள் முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதானி விவகாரத்தை விசாரிக்க கோரி பாராளுமன்ற சபாநாயகரிடம் காங்கிரஸ் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது.

    எனவே பாராளுமன்றத்தில் அதானி விவகாரம் மிகப்பெரிய புயலை வீசச் செய்யும் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றத்துக்கு எம்.பி.க்கள் வர தொடங்கினார்கள். 10.30 மணிக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் வந்தனர்.

    பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, "பாராளுமன்றத்தை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை" என்று கூறினார்.

    பின்னர் பாராளுமன்றத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அலுவலகத்தில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்த ஆலோசனையில் காங்கிரஸ், தி.மு.க., ம.தி. மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் ஈடுபட்டனர். அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவது குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.

    பின்னர் சரியாக 11 மணிக்கு பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது.

    அவை தொடங்கியதும் சபாநாயகர் ஓம்பிர்லா இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    அவை தொடங்கியதுமே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து நின்று அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் போன்ற பல்வேறு விஷயங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகர் ஓம்பிர்லா அவையை பகல் 12 மணி வரை ஒத்தி வைத்தார்.

    மீண்டும் 12 மணிக்கு சபை கூடியது. அப்போது அதானி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவையை நாள் முழுவதும் சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்தி வைத்தார்.

    இந்த கூட்டத் தொடரில் 16 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதில் வக்பு வாரிய திருத்த மசோதா மிக முக்கியமான தாகும்.

    தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க வகை செய்யும் மசோதா, வர்த்தக கப்பல் போக்குவரத்து மசோதா, கடலோர போக்குவரத்து மசோதா ஆகியவை இந்த கூட்டத் தொடரில் புதிதாக கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன.

    8 மசோதாக்கள் ஏற்கனவே பாராளுமன்ற மேல் சபையில் நிறைவேற்றப்பட்டு நிலுவையில் உள்ளன. அந்த மசோதாக்களை மக்களவை யில் எடுத்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

    ஆனால் பல மசோதாக்களுக்கு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக ளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது போலவே இன்று இரு தரப்பினரும் காரசாரமாக மோதிக் கொண்டனர்.

    அடுத்த மாதம் (டிசம்பர்) 20-ந்தேதி வரை பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நடத்த பாராளு மன்ற விவகாரத்துறை அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.

    இதற்கிடையே நாளை (செவ்வாய்க்கிழமை) பழைய பாராளுமன்றத்தின் மைய மண்டலத்தில் இருசபைகளின் கூட்டு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நாட்டின் 75-வது அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்பட உள்ளது.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி இதில் பங்கேற்று பேச உள்ளனர். 75-வது அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு சிறப்பு தபால் தலை மற்றும் நூல்கள் வெளியிடப்பட உள்ளன.

    பாராளுமன்ற மேல் சபை அதன் தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமையில் இன்று காலை கூடியது. அங்கும் எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதம் நடத்த அனுமதிக்குமாறு கோஷம் எழுப்பினார்கள். அவர்களை அமைதியாக இருக்கும்படி ஜெகதீப் தன்கர் கேட்டுக் கொண்டார்.

    ஆனாலும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டபடி இருந்தனர். இதையடுத்து மேல்சபையை நாள் முழுவதும் ஜெகதீப் தன்கர் ஒத்திவைத்தார். நாளை அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுவதால் மேல்சபையில் விவாதங்கள் இல்லை. நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மேல்சபை கூடும் என்று ஜெகதீப் தன்கர் அறிவித்தார்.

    • மாநிலங்களவையில் தற்போதைய உறுப்பினர்கள் எண்ணிக்கை 237 ஆகும்.
    • மெஜாரிட்டிக்கு 119 தேவை. பாஜக 96 உறுப்பினர்களை கொண்டுள்ளது.

    இந்திய பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 245. தற்போது 8 இடங்கள் காலியாக உள்ளன. நான்கு உறுப்பினர்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். நான்கு பேர் நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட வேண்டும்.

    பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் 12 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    பாஜக-வைச் சேர்ந்த 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பாஜக கூட்டணியில் உள்ள அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய லோக் மாஞ்ச் ஆகிய இரண்டு கட்சிகளில் இருந்து தலா ஒரு உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரு உறுப்பினரும் தேர்வு செய்யப்பட்டனர்.

    தற்போது மாநிலங்களவையில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 237. மெஜாரிட்டிக்கு 119 தேவை. பாஜக உறுப்பினர்கள் 96 பேர் உள்ளனர். அந்த கூட்டணியில் 112 மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளனர். அத்துடன் 6 நியமனம் எம்.பி.க்கள், ஒரு சுயேட்சை எம்.பி. ஆகியோர் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    தற்போது இரண்டு கூட்டணி கட்சி எம்.பி.க்கள், நியமன எம்.பி.க்கள், சுயேட்சை எம்.பி.க்கள் என பாஜக கூட்டணிக்கு 119 எம்.பி.களுக்கு மேல் பெற்றுள்ளது.

    காங்கிரஸ் கட்சிக்கு 85 மாநிலங்களை எம்.பி.க்கள் உள்ளனர். தெலுங்கானாவில் இருந்து அபிஷேக் சிங்வி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மாநிலங்களவையில் மெஜாரிட்டி பெற கடந்த 10 வருடங்களாக பாஜக முயற்சி பெற்று வந்த நிலையில் தற்போது கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தனி மெஜாரிட்டி பிடித்துள்ளது. இதன் மூலம் மசோதாக்களை தடங்கல் இல்லாமல் நிறைவேற்ற முடியும்.

    மோடி 2-வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டபோது, பல்வேறு மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது கூட்டணியில் அல்லாத பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதரவால் மசோதாக்களை நிறைவேற்றி வந்தது.

    ×