என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ration Card"

    • இன்னும் 36 லட்சம் பேர் விரல் ரேகையை பதிவு செய்யாமல் உள்ளனர்.
    • விரல் ரேகை பதிவு செய்யும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் 98.45 லட்சம் முன்னுரிமை ரேஷன் கார்டுகளில் 3 கோடி உறுப்பினர்களும், 18.64 லட்சம் அந்தியோதயா ரேஷன் கார்டுகளில் 62.88 லட்சம் பேரும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த 2 கார்டுதாரர்களுக்கான அரிசி ஒதுக்கீட்டில், குறிப்பிட்ட அளவுக்கு கோதுமையை தேசிய ஒதுக்கீட்டின் கீழ் மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது.

    இந்த நிலையில் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதார் சரிபார்ப்பு வாயிலாக, 'பாயிண்ட ஆப் சேல்' என்ற விற்பனை முனைய கருவியில் விரல் ரேகையை வைத்து உண்மை தன்மையை உறுதி செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

    எனினும் இதற்கான பணி முழுமையாக முடிவடையவில்லை. இன்னும் 36 லட்சம் பேர் விரல் ரேகையை பதிவு செய்யாமல் உள்ளனர். இதையடுத்து இந்த பணியை வேகமாக முடிக்குமாறு மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.

    இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறும்போது, "விரல் ரேகை பதிவு செய்யும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதனை குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லை" என்றனர்.

    • அரசு ஊழியர்கள், கவுரவ ரேஷன் கார்டுதாரர்கள் தவிர அனைத்து ரேஷன் கார்டுதார்களுக்கும் இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
    • நெய் அரசின் கூட்டுறவு நிறுவனமான பாண்லேவில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த தீபாவளி பண்டிகைக்கும் மளிகை, எண்ணெய், சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

    புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன்கார்டு தாரர்களுக்கும் இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.

    இந்த தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், பாசிப்பருப்பு என ரூ.750 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்படும். இந்த பரிசு தொகுப்பு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    இந்த பரிசு தொகுப்பில் 4 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ நாட்டு சர்க்கரை, ஒரு கிலோ பாசிப்பருப்பு, 300 கிராம் பாண்லே நெய், ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் அடங்கிய பை வழங்கப்பட உள்ளது.

    புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்கள், கவுரவ ரேஷன் கார்டுதாரர்கள் தவிர அனைத்து ரேஷன் கார்டுதார்களுக்கும் இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

    இந்த பரிசு தொகுப்பு புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. கான்பெட் நிறுவனம் பரிசு தொகுப்பு கொள்முதல் பணியில் ஈடுபட்டுள்ளது.

    இதில் நெய் அரசின் கூட்டுறவு நிறுவனமான பாண்லேவில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

    • இந்தத் திட்டத்தின் கீழ் இன்னும் 0.79 கோடி பயனாளிகள் அடையாளம் காணப்படவில்லை.
    • எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

    2020 முதல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் 2.49 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் நிமுபன் ஜெயந்திபாய் பம்பானியா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

    அதில், இந்தியாவில் தற்போது சுமார் 20 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருக்கிறது. தற்போது, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ரேஷன் கடைகள் மூலம் சுமார் 80 கோடி மக்களுக்கு மத்திய அரசு இலவச உணவு தானியங்களை வழங்கி வருகிறது

    இருப்பினும், இந்தத் திட்டத்தின் கீழ் இன்னும் 0.79 கோடி பயனாளிகள் அடையாளம் காணப்படவில்லை.

    டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளின் விளைவாக, 2020 மற்றும் 2025 க்கு இடையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தோராயமாக 2.49 கோடி ரேஷன் கார்டுகளை அகற்ற முடிந்துள்ளது.

    போலி கார்டுகள், தகுதியற்ற பயனாளிகள், e-KYC முரண்பாடுகள், பயனாளிகளின் இறப்பு மற்றும் நிரந்தர இடம்பெயர்வு ஆகிய காரணங்களின் அடிப்படையில் அவை நீக்கப்பட்டுள்ளன.

    ரேஷன் கார்டுகளை தவறாக ரத்து செய்ததாக பயனாளிகளிடம் இருந்து அரசாங்கத்திற்கு எந்த குறிப்பிட்ட புகார்களும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • 16,73,333 குடும்ப அட்டைகளுக்கு நேரடியாக பொருட்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அடைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேசன் பொருட்களை தரும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 12ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

    இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மக்கள் நலன்சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27.797 மாற்றுத்தினாளிகளும், ஆக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது

    ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு. கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர்.

    70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்குவதால் அரசுக்கு ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம். நலிவுற்ற பிரிவினரின் வாழ்வாதாரத்தை சிறப்புறச் செய்வதுடன் அவர்தம் உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும்.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 12.8.2025 அன்று இத்திட்டத்தை சென்னையில் தொடங்கிவைக்கும் வேளையில், மாவட்டங்களில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள். உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரேஷன் கார்டுதாரர்கள் கட்டாயமாக அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • கடைசி தேதி வரையறுக்கப்படவில்லை.

    சென்னை:

    தஞ்சை மக்களே ரேஷன் கார்டுடன் ஆதார், மொபைல் எண், கைரேகை, இறந்தவர் பெயர் நீக்கம் போன்றவற்றை அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டு செல்லாது என்று குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை ரேஷன் கார்டுதாரர்கள் கட்டாயமாக அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதற்கான கடைசி தேதி வரையறுக்கப்படவில்லை. சமூக ஊடகத்தின் மூலம் வரப்பெற்ற செய்தியில் உண்மை ஏதுமில்லை என தஞ்சாவூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

    • மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர்.
    • அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் சிவப்பு ரேசன் கார்டு பெற தகுதியுள்ளவர்களாக இருப்பர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் ரேசன் கார்டுகளை கணக்கிட்டு வழங்கப்படும் இலவச அரிசியில் பல கோடி மோசடி நடந்துள்ளது என்றும் இதுதொடர்பாக விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என புதுச்சேரியை சேர்ந்த வக்கீல் பாலமுருகன் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களுடன் தலைமை செயலரிடம் புகார் அளித்துள்ளார்.

    இதுகுறித்து வக்கீல் பாலமுருகன் கூறியதாவது:-

    புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 3 லட்சத்து 62 ஆயிரத்து 136 ரேசன் கார்டுகள் உள்ளன. இதில் மஞ்சள் ரேசன் கார்டுகள் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 404. சிவப்பு ரேசன் கார்டுகள் 2 லட்சத்து 6 ஆயிரத்து 7. ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்குள் இருப்பவர்களுக்கு தான் அவர்கள் வறுமையில் உள்ளதாக கருதி சிவப்பு ரேசன் கார்டு வழங்கப்படுகிறது.

    அப்படி இருக்கும்போது மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் சிவப்பு ரேசன் கார்டு பெற தகுதியுள்ளவர்களாக இருப்பர். தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் குடும்பத்தினர் கண்டிப்பாக சிவப்பு ரேசன் கார்டு பெற தகுதியுடையவர்களாக இருக்க மாட்டார்கள்.

    எனவே தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரேசன் கார்டு மோசடியாக பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு ரூ.63 கோடியே 30 லட்சத்து 24 ஆயிரம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த மோசடி சம்பந்தமாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.
    • ஏழை மக்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும்.

    புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் 2025- 26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து 7-வது நாள் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வட்டம் தொடங்கியதும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 9 மாதங்களுக்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, நியாய விலைக்கடைகள் இல்லாத பகுதிகளில் வாகனங்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.

    மேலும், கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசுகையில், "புதுச்சேரியில் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் ஏழை மக்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும்" என அறிவித்தார்.

    இந்நிலையில், புதுச்சேரியில் மஞ்சள் நிற ரேசன் அட்டை வைத்துள்ள மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

    தற்போது சிவப்பு நிற ரேசன் அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சாதாரண குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மஞ்சள் நிற குடும்ப அட்டை என்பது ஆண்டு குடும்ப வருமானம் ரூ.1,20,000 வரை மட்டுமே பெரும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    • ரேசன் கார்டில் தத்தா என்பதற்கு பதில் குத்தா என பிரின்ட் செய்யப்பட்டதுதான் கோபத்திற்கு காரணம்.
    • அதிகாரிகள் செய்த தவறால் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீகாந்தி தத்தா வேதனை

    கொல்கத்தா:

    நாட்டில் அரசு அலுவலகங்களில் வழங்கப்படும் ஆவணங்களில் எழுத்துப்பிழை வருவது சகஜம். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு, தவறை சரிசெய்து கொள்ள முடியும். ஆனால், சில நேரங்களில் சிறிய எழுத்துப்பிழைகூட மக்களின் கோபத்தையும், போராட்டத்தையும் தூண்டிவிடுவதாக அமைந்துவிடுகிறது. அவ்வாறு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒருவர், தனது ரேசன் கார்டில் உள்ள எழுத்துப்பிழையை சரிசெய்யாத அதிகாரிகளை கண்டித்து வித்தியாசமான முறையில் எதிர்ப்பை பதிவு செய்தார்.

    ஸ்ரீகாந்தி தத்தா என்ற என்ற நபர், ரேசன் கார்டில் தன் பெயரை தவறுதலாக பிரின்ட் செய்யப்பட்டதை சரிசெய்யும்படி, அரசு அதிகாரியின் வாகனத்தை துரத்திச் சென்று நாய் போன்று குரைத்தார். தனது புகாரை ஏற்று பெயரை சரிசெய்யும்படி அந்த அதிகாரியிடம் கூறுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    ஸ்ரீகாந்தி தத்தாவின் பெயரில் உள்ள தத்தா என்பதற்கு பதில் குத்தா என பிரின்ட் செய்யப்பட்டதுதான் கோபத்திற்கு காரணம். குத்தா என்றால் இந்தியில் நாய் என்று பொருள். அதனால்தான் ஆத்திரத்தில் நாய் போன்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் குரைத்துள்ளார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், "பெயரை திருத்துவதற்காக மூன்று முறை விண்ணப்பித்தேன். கடைசியாக விண்ணப்பித்தபோது ஸ்ரீகாந்தி குத்தா என பிரின்ட் செய்யப்பட்டிருந்தது. அதிகாரிகள் செய்த இந்த தவறால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறேன். மீண்டும் விண்ணப்பிக்க சென்றபோது, வட்டார வளர்ச்சி இணை அதிகாரியைப் பார்த்ததும் அவர் முன்னால் நாயைப் போல் குரைக்க ஆரம்பித்தேன். அவர் என் கேள்விக்கு பதிலளிக்கவில்லை. எங்களைப் போன்ற சாமானியர்கள் வேலையை விட்டுவிட்டு இதுபோன்று பெயரை திருத்தம் செய்வதற்காக எத்தனை முறைதான் அலைவது?" என கேள்வி எழுப்பினார்.

    • 14.86 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு எதுவும் இல்லை.
    • வங்கிகளில் ’ஜீரோ பாலன்ஸ்’ வங்கிக் கணக்கை தொடங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னை :

    தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் அட்டைதாரர்களில் 14.86 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு எதுவும் இல்லை. இவர்களில் பலர் வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும், ஆதார் நம்பரை இணைக்காததால், வங்கிக் கணக்கு இல்லை என்றே தரவுகள் தெரிவிக்கின்றன.

    இவர்களில் யாராவது ஏற்கனவே வங்கிக் கணக்கு வைத்திருந்தால் அதன் விவரங்களை பெறவும், கணக்கு இல்லாதவர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 'ஜீரோ பாலன்ஸ்' (பணமில்லாத) வங்கிக் கணக்கை தொடங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பின்பற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படுகின்றன. வங்கிக் கணக்கு எண் இல்லாத ரேசன் அட்டைதாரர்களுக்கு விவரக் குறிப்புகள் அடங்கிய தாளுடன் சேர்த்து, அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையை நேரில் அணுகி 'ஜீரோ பாலன்ஸ்'கணக்கை தொடங்க வேண்டும்.

    அந்த விபரங்கள் அடங்கிய படிவத்தை பூர்த்தி செய்து 4 நாட்களுக்குள் அந்தந்த ரேசன் கடைகளில் ஒப்படைக்க வேண்டும். ஏற்கனவே வங்கி கணக்கு எண் வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட ரேசன் கடைப் பணியாளர் அவர்களது பகுதியின் கீழ் வரும் ரேசன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரிடையாக சென்று, அவர்களின் வங்கி கணக்கு எண், பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் மற்றும் அவற்றுடன் ரேசன் அட்டை நம்பர், குடும்பத் தலைவர் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு வழங்கும்படி அவர்களை அறிவுறுத்தி, அந்தத் தகவல்களை கேட்டுப் பெறவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை மாவட்டத்தில் 70 ஆயிரம் பேர் ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கை இணைக்கவில்லை.
    • உணவு பொருள் வழங்கல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மதுரை

    தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை- எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அரசின் பணப்பலன்கள் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமும் சென்ற டைவதற்கான ஏற்பாடு களை செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

    அதன்படி மாநில உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதிலும் ரேஷன் அட்டைதாரர்களிடம் வங்கி கணக்குகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவை உடனுக்குடன் மாநில உணவு பொருள் வழங்கல் இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேஷன் கார்டு தாரர்களின் வங்கி கணக்கு தொடர்பாக ஆய்வு நடத்தினார்கள். இதில் தமிழகம் முழுவதிலும் 14,86,000 பேரிடம் வங்கி கணக்கு இல்லை என்பது தெரிய வந்தது.

    அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கள்ளிக்குடி-1029, மதுரை வடக்கு தாலுகா- 11,004, மதுரை வடக்கு- 7744, மதுரை மேற்கு- 11742, மதுரை மத்தி-7144, மதுரை கிழக்கு-7909, மதுரை மேலூர்- 6139 பேரையூர்- 4188, திருமங்கலம்- 3188, உசிலம்பட்டி-4763, வாடிப்பட்டி- 5618 ஆகிய பகுதிகளில் வசிக்கும் மேற்கண்ட ரேஷன் கார்டுதாரர்கள் வங்கி கணக்கை சமர்ப்பிக்க வில்லை என்பது தெரிய வந்துள்ளது.

    மதுரை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 70 ஆயிரத்து 468 பேர் வங்கி கணக்கு ஒப்படைக்க வில்லை. எனவே ரேஷன் கார்டு அலுவலகத்தில் வங்கி கணக்கு சமர்ப்பிக்காத வாடிக்கையாளரிடம் கேட்டு பெறுவது, இல்லாத வர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை மூலம் 'ஜீரோ பேலன்ஸ்' அடிப்படையில் புதிய கணக்கு தொடங்கி அதன் விவரங்களை சென்னை சேப்பாக்கம் அலுவ லகத்திற்கு சமர்ப்பிக்கும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழக அரசின் பணப் பலன்கள் ரேசன் கார்டு மூலம் வாடிக்கையாளரை சென்றடைய வேண்டும் என்பதற்காக, வங்கி கணக்கு விவரங்கள் இணைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    • குடும்பஅட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புவழங்கப்பட வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
    • பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் வழங்கி தொடங்கி வைத்தார்.

    கடையநல்லூர்:

    தமிழகத்தில் வருகிற 15-ந் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அரிசி வாங்கும் குடும்பஅட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசான கரும்பு, பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,000 வழங்கப்பட வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்

    அதன்படி கடையநல்லூர் நகராட்சி அட்டைக் குளம் தெரு பகுதியில் உள்ள உள்ள ரேஷன்கடையில் நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இதுபோன்று கடையநல்லூர் நகர தி.மு.க. செயலாளர் அப்பாஸ், அந்தந்த பகுதி வார்டு செயலாளர் மற்றும் நகர் மன்ற வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்கள்.

    • புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் ரேசன் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை அரசு செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே கப்பலூர் மற்றும் தோப்பூர் பகுதிகளில் உள்ள அரசு நெல் சேமிப்பு கிடங்கில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு வரை திறந்தவெளியில் தார்பாய்கள் மூடப்பட்ட நெல் சேமிப்பு கிடங்குகள் பரவலாக காணப்பட்டது. இதுபோன்று நிலைமை இருக்கக்கூடாது என்ப தற்காக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    அதன்படி, 18 மாதங்களில் முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 213 இடங்களில் சுமார் 2.86 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவிற்கு ரூ. 238 கோடி மதிப்பில் சேமிப்பு கிடங்கு அமைக்க ஆணை வெளியிட்டது. மேலும் தற்போது உள்ள 18000 மெட்ரிக் டன் கொள்ளளவு கப்பலூர் சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 213 இடங்களில் 106 பகுதிகளில் 105 கோடி ரூபாய் செலவில் பணிகள் முடிவு பெற்று தயார் நிலையில் உள்ளது.

    நியாய விலைக் கடை ரேஷன் கார்டுகளை பொறுத்தவரை 3 வகையான கார்டுகள் உள்ளன. இதில் ஒரு கோடியே 14 லட்சம் அட்டைகள் முன்னுரிமையாக அந்தியோதயா திட்டத்தை உள்ளடக்கிய அட்டைகள், 1.04 லட்சம் முன்னுரிமையற்ற அட்டைதாரர்களும் அரிசி கேட்கிறார்கள்.

    சர்க்கரை அட்டை தாரர்கள் 3.82 லட்சம் பேர் உள்ளனர். பொருட்கள் எதையும் வாங்காமல் 60,000 அட்டைதாரர்கள் உள்ளனர். மொத்தத்தில் 2.23 கோடி ரேசன் அட்டைகள் புழக்கத்தில் உள்ளது. இதில் முன்னுரிமை அட்டைகளில் மாற்றுத்திறனாளிகள் 6.6 லட்சம் பேர் சேர்த்துள்ளோம்.

    இதேபோல் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு 2 வாரத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் ரேசன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக மே-2021 முதல் தற்போது வரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 132 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×