வங்கிக் கணக்கு இல்லாத ரேசன் அட்டைதாரர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு தொடக்கம்: தமிழக அரசு

14.86 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு எதுவும் இல்லை. வங்கிகளில் ’ஜீரோ பாலன்ஸ்’ வங்கிக் கணக்கை தொடங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கு இல்லாத ரேசன் அட்டைதாரர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு தொடக்கம்: தமிழக அரசு
Published on

சென்னை :

தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் அட்டைதாரர்களில் 14.86 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு எதுவும் இல்லை. இவர்களில் பலர் வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும், ஆதார் நம்பரை இணைக்காததால், வங்கிக் கணக்கு இல்லை என்றே தரவுகள் தெரிவிக்கின்றன.

இவர்களில் யாராவது ஏற்கனவே வங்கிக் கணக்கு வைத்திருந்தால் அதன் விவரங்களை பெறவும், கணக்கு இல்லாதவர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 'ஜீரோ பாலன்ஸ்' (பணமில்லாத) வங்கிக் கணக்கை தொடங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பின்பற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படுகின்றன. வங்கிக் கணக்கு எண் இல்லாத ரேசன் அட்டைதாரர்களுக்கு விவரக் குறிப்புகள் அடங்கிய தாளுடன் சேர்த்து, அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையை நேரில் அணுகி 'ஜீரோ பாலன்ஸ்'கணக்கை தொடங்க வேண்டும்.

அந்த விபரங்கள் அடங்கிய படிவத்தை பூர்த்தி செய்து 4 நாட்களுக்குள் அந்தந்த ரேசன் கடைகளில் ஒப்படைக்க வேண்டும். ஏற்கனவே வங்கி கணக்கு எண் வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட ரேசன் கடைப் பணியாளர் அவர்களது பகுதியின் கீழ் வரும் ரேசன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரிடையாக சென்று, அவர்களின் வங்கி கணக்கு எண், பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் மற்றும் அவற்றுடன் ரேசன் அட்டை நம்பர், குடும்பத் தலைவர் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு வழங்கும்படி அவர்களை அறிவுறுத்தி, அந்தத் தகவல்களை கேட்டுப் பெறவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com