என் மலர்tooltip icon

    தென்காசி

    • நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக பழைய குற்றால அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
    • சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் அருவி கரையானது வெறிச்சோடி காணப்படுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக பகலில் வெயில் சுட்டெரித்து வந்ததால் ஐந்தருவி, மெயின் அருவி வறண்டு காணப்பட்ட நிலையில் நேற்று ஐந்தருவி, மெயின் அருவியில் தண்ணீர் விழத் தொடங்கியது. 2 அருவிகளிலும் பெரிய அளவில் தண்ணீர் விழவில்லை என்றாலும், பழைய குற்றால அருவியில் மட்டும் தண்ணீர் அதிகரித்து விழுந்தது.

    சில மாதங்களுக்கு முன்பு கனமழை காரணமாக பழைய குற்றால அருவி பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இதனால் அங்கு 3 மாதங்களுக்கு மேலாக சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதனை மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் கடந்த வாரம் நேரில் சென்று பார்வையிட்டார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக பழைய குற்றால அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. எனினும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் அருவி கரையானது வெறிச்சோடி காணப்படுகிறது.

    தற்போது கடுமையான கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பழைய குற்றால அருவியில் மட்டும் நீர் விழுந்து வருவதால் விரைந்து சீரமைப்பு பணிகளை முடித்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது . 

    • ஓ.பி.எஸ் தி.மு.க.வில் இணைந்தால் செல்வாக்கை இழப்பார்.
    • 75 ஆண்டுகால தி.மு.க.வை வீழ்த்தியே தீரவேண்டும் என்ற நம்பிக்கையோடு களத்தில் நிற்கின்றார்.

    தென்காசி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது

    இதில் கலந்து கொள்ள வருகை புரிந்த தமிழக வெற்றிக்கழக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் நிருபர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    த.வெ.க தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டத்தை பார்க்கும்போது, பல கூட்டத்தை நடத்தியவன் என்ற முறையில் சொல்கிறேன் 39 ஆண்டு காலத்தில் நான் இதேபோல் மிகப்பெரிய கூட்டத்தை பார்த்தில்லை.

    அவருக்கு தமிழகத்தில் கிடைக்கும் வரவேற்பு, வளர்ச்சி தமிழகத்தில் புதிய அத்தியாயம் படைக்கும்.

    அவர் 75 ஆண்டுகால தி.மு.க.வை வீழ்த்தியே தீரவேண்டும் என்ற நம்பிக்கையோடு களத்தில் நிற்கின்றார். தி.மு.க. திகைத்து நிற்கிறது.

    சட்டம்-ஒழுங்கு கெட்டு தமிழகம் சாம்பல் மேடாக மாறி உள்ளது. இதனை எதிர்த்து கேள்வி கேட்கும் ஆளுமையும், ஆண்மையும் எதிர்கட்சிகள் இழந்துள்ளன. இதனை எதிர்க்கும் ஒரே கட்சி த.வெ.க.

    ஓ.பி.எஸ் தி.மு.க.வில் இணைந்தால் இதுவரை பெற்று வந்த செல்வாக்கை இழப்பார் என நினைக்கிறேன். வைகோ தி.மு.க.வுடன் இணைந்துள்ளார்.

    தி.மு.க.வுடன் உள்ளோம், இனியும் இருப்போம் என காங்கிரஸ் கூறவில்லை.

    மார்ச் 9-ந்தேதி தி.மு.க ஒரு மாநாட்டை திருச்சியில் நடத்துகிறது. அன்று எங்கள் பொலிடிகல் பாம் வெடிக்கும். ராகுல் காந்தியும், விஜய்யும் ஒரே மேடையில் நின்றால் தி.மு.க.வுக்கு மாரடைப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பஸ் நிலையத்தில் 64 கடைகள் கட்டப்பட்டுள்ளன.
    • பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பழைய, புதிய பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில் வாகன பெருக்கம், நகரின் வளர்ச்சி காரணமாக போக்குவரத்து நெருக்கடி மிகுந்து காணப்படுகிறது.

    இதன் காரணமாக பொள்ளாச்சியில் கூடுதலாக பஸ் நிலையம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி-கோவை ரோடு சி.டி.சி.மேட்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் கட்டுவதற்கு ரூ.9 கோடியே 83 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது. பஸ் நிலையத்தில் 64 கடைகள் கட்டப்பட்டுள்ளன. பொள்ளாச்சியின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.

    பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதை தொடர்ந்து பொள்ளாச்சி கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் இன்று திறக்கப்பட்டது.

    பொள்ளாச்சியில் நடந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பஸ் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் அவர் பார்வையிட்டார்.

    அதனை தொடர்ந்து காந்திசாலை-பல்லடம் ரோட்டை இணைக்கும் புதிய சாலைக்கு பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பெயரை சூட்டி, பெயர் பலகையையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார்.

    பொள்ளாச்சி நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் மாவட்டம் உடுமலை செல்கிறார். திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். துணை முதலமைச்சர் வருகையை முன்னிட்டு பொள்ளாச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • பணத்தை திருப்பி தராமல் காலிப் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
    • ஹர்ஷத் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    தென்காசி:

    தென்காசி நகரப்பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷத். இவர் தென்காசி நகரின் மையப்பகுதியில் உள்ள அம்மன் சன்னதி பஜாரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    இவரிடம் சில மாதங்களுக்கு முன்பு அதே சன்னதி பஜாரில் நகைக்கடை நடத்தி வரும் உரிமையாளரான காலிப் என்பவர், தனக்குத் தெரிந்த ஒருவரின் 56 கிராம் நகை ரூ.3.5 லட்சத்திற்கு அடமானத்தில் உள்ளதாகவும், அந்த நகையை அடகில் இருந்து திருப்ப நீங்கள் பணம் கொடுத்தால், அவர் அந்த நகையை உங்களிடமே விற்பனை செய்வார் என கூறி உள்ளார்.

    இந்த நிலையில், ஹர்ஷத் தன்னிடம் இருந்த ரூ3.5 லட்சம் பணத்தை காலிப்பிடம் கொடுத்து அந்த நகையை திருப்பிய நிலையில், அந்த நகை தரம் குறைந்த நகையாக இருந்துள்ளது.

    அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஹர்ஷத் இது தரம் குறைந்த தங்கம் எனவும், இது எனக்கு வேண்டாம் தன்னுடைய பணத்தை திருப்பி தாருங்கள் என கூறியுள்ளார்.

    ஆனால், பணத்தை திருப்பி தராமல் காலிப் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஹர்ஷத் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த நிலையில், நேற்று இரவு ஹர்சத்தை, காலிப் உள்பட சிலர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கடுமையாக தாக்கி உள்ளனர். இதுதொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹர்சத்தை தாக்கிய காலிப் மற்றும் அவரது சகோதரர்களான அஸ்லம், ஹாஜி உள்ளிட்ட 4 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் கனிம வளங்கள் ஏற்றி செல்லப்படுகிறது.
    • கூட்டுறவு வேளாண் சங்கத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் பஞ்சாயத்தில் 3 குவாரிகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த குவாரிகளில் இருந்தும், அருகில் உள்ள ஓ.துலுக்கப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குவாரிகளில் இருந்தும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் கனிம வளங்கள் ஏற்றி செல்லப்படுகிறது.

    இந்த லாரிகள் அனைத்தும் மருதம்புத்தூர் வழியாக ஆலங்குளத்தை அடைந்து அங்கிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அந்த வகையில் இன்று அதிகாலை கண்டபட்டி விலக்கு பகுதியில் உள்ள தனியார் குவாரியில் இருந்து கனிமவளத்தை ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று ஆலங்குளம் நோக்கி புறப்பட்டு சென்றது.

    கண்டபட்டி விலக்கு பகுதியில் வந்தபோது எதிரே வந்த மர்ம நபர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை லாரி டிரைவர் மீது வீசிவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் லாரியை ஓட்டிவந்த செங்கோட்டையை சேர்ந்த டிரைவர் படுகாயம் அடைந்தார்.

    அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த மற்றொரு லாரியில் இருந்த 2 டிரைவர்கள் விரைந்து வந்து, படுகாயம் அடைந்த டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் ஓட்டி வந்த லாரியை அதே இடத்தில் விட்டு விட்டு சென்றால் மர்ம நபர்கள் அதனை சேதப்படுத்திவிடக்கூடாது என்பதற்காக மருதம்புத்தூர் ஊருக்குள் மெயின்ரோட்டில் ஓரமாக நிறுத்திவிட்டு ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி டிரைவர் இருக்கை தீயில் கருகி இருந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள கூட்டுறவு வேளாண் சங்கத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த தாக்குதல் டிரைவர் மீது தனிப்பட்ட முறையிலான கோபத்தில் நடைபெற்றதா என்று கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருதம்புத்தூர் கிராமம் வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் செல்வதால், அதனால் அவதியுறும் பொதுமக்களில் யாரேனும் இளைஞர்களை திரட்டி இந்த சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மழை குறைந்து அருவிகளில் நீர்வரத்து சீரானதும் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பழைய குற்றால அருவியில் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு தடை நீடிக்கிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இதன் காரணமாக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மழை குறைந்து அருவிகளில் நீர்வரத்து சீரானதும் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் பழைய குற்றால அருவியில் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு தடை நீடிக்கிறது.

    மற்ற அருவிகளான புலி அருவி, சிற்றருவி, ஐந்தருவியிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டாலும் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    • ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்பை உங்களது மகன் சூர்யா வாங்கி சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
    • சம்பவம் தொடர்பாக ராசுக்குட்டி ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார்.

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் லிங்கத் துரை. இவரது மகன் ரமேஷ் (வயது 42). கட்டிட தொழிலாளி. இவரது முதல் மனைவி மூக்கம்மாள். இவர்களுக்கு சூர்யா (17) என்ற மகன் உள்ளார். மூக்கம்மாள் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார்.

    இதனிடையே மகாலட்சுமி (35) என்பவரை ரமேஷ் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்கள் தனியாக வசித்து வருகின்றனர். சூர்யா தனது தாத்தா லிங்கத்துரையுடன் தனிவீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ரமேஷ் தனது 2-வது மனைவி மகாலட்சுமியுடன் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்கு சென்று டோக்கனை கொடுத்து விற்பனையாளர் ராசுக் குட்டியிடம் பரிசு தொகுப்பை கேட்டுள்ளார். அப்போது, ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்பை உங்களது மகன் சூர்யா வாங்கி சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் விற்பனையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் ஆத்திரமடைந்த அவர்கள் 2பேரும் ரேஷன் கடையிலிருந்த கைரேகை வைக்கும் எந்திரத்தை கையில் எடுத்தனர்.

    மேலும் இந்த எந்திரம் இருந்தால் தானே எல்லாருக்கும் பணம் கொடுப்பாய் என்று கூறி அவதூறாக பேசிவிட்டு எந்திரத்தை தங்களது வீட்டுக்கு தூக்கிச் சென்றுவிட்டனர். பின்னர் சிறிதுநேரம் கழித்து எந்திரத்தை கொண்டு வந்து கடையில் கொடுத்த ரமேஷ், கடை ஊழியர் ராசுகுட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ராசுக்குட்டி ஆலங்குளம் போலீசில் புகார் அளித்த நிலையில், இன்ஸ்பெக்டர் ஆடிவேல் விசாரணை நடத்தி அரசு ஊழியரை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து, எந்திரத்தை தூக்கி சென்றதாக மகாலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரமேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • மெயின் அருவி, ஐந்தருவி உட்பட அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து சீரானது.
    • சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. மாவட்டம் முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழையால் குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவவி, புலி அருவி என அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நேற்று காலை முதல் மாலை வரையில் புலியருவி தவிர்த்து மற்ற அருவிகளில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது.

    இந்தநிலையில் மழை குறைந்ததால் இன்று காலை முதல் மெயின் அருவி, ஐந்தருவி உட்பட அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து சீரானது.

    இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் காலை முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். 

    • நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • மாவட்டம் முழுவதும் அதிகாலை முதல் கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வருகிற 7-ந்தேதி வரை பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்தது.

    இந்நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரையிலும் பரவலாக பெய்த கனமழை காரணமாக பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் வழக்கமான வெயில் அடித்தது. மாலையில் நாங்குநேரி பகுதியில் லேசான சாரல் பெய்தது.

    இந்நிலையில் சேரன்மகாதேவி, அம்பை சுற்று வட்டாரங்களில் இரவில் திடீரென கனமழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து இடைவிடாமல் கனமழையாக பொழிய தொடங்கியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    சேரன்மகாதேவி சுற்று வட்டாரத்தில் இன்று காலை நிலவரப்படி 10 சென்டி மீட்டர் மழை பெய்தது. அம்பையில் 9 சென்டி மீட்டரும், கண்ணடியன் கால்வாய் பகுதி, களக்காடு சுற்றுவட்டாரங்களில் 5 சென்டிமீட்டரும், நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டியில் தலா 4 சென்டிமீட்டரும் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் இரவு தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது. மாஞ்சோலையில் அதிகபட்சமாக 9 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 8 சென்டி மீட்டரும், நாலுமுக்கு எஸ்டேட்டில் 5 சென்டி மீட்டரும் மழை பதிவாகியது.

    அணைகளை பொறுத்தவரை பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று நிலவரப்படி பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 281 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை வினாடிக்கு 955 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் நேற்று மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 78 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை 465 கனஅடியாக உயர்ந்துள்ளது. சேர்வலாறில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியது.

    மாவட்டம் முழுவதும் அதிகாலை முதல் கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் அம்பை சுற்றுவட்டாரத்தில் பிசான பருவ நெல் சாகுபடி பணியையொட்டி நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில் இரவில் பெய்த கனமழையால் வயல்களில் மழைநீர் தேங்கியது. இதனால் வயல்வெளிகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

    தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அனைத்து அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் நேற்று இரவில் தொடங்கிய மழை இன்று காலை வரையிலும் இடைவிடாமல் பெய்தது.

    கடனா அணை நீர்பிடிப்பு பகுதியில் 52 கனஅடி நீர் வந்த இடத்தில் இன்று காலை வினாடிக்கு 1,265 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் ராமநதி அணைக்கு 312 கனஅடியும், கருப்பாநதியில் 25 கனஅடியும் வந்து கொண்டிருக்கிறது.

    கடனா அணை நீர்பிடிப்பு பகுதியில் அதிகபட்சமாக 24 சென்டிமீட்டர் மழை கொட்டியது. அணை அடி வாரத்தில் உள்ள சிவசைலம், ஆழ்வார்குறிச்சி, சம்பன் குளம், கல்யாணிபுரம் சுற்றுவட்டாரத்திலும் மிக கனமழை கொட்டியது.

    ராமநதியில் 12 சென்டி மீட்டரும், கருப்பாநதியில் 7½ சென்டிமீட்டரும் மழை பதிவாகியது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள ஆய்குடி சுற்றுவட்டாரத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. இதேபோல் சிவகிரி, வாசுதேவநல்லூர் சுற்றுவட்டாரங்களில் விடிய, விடிய பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதேபோல் ஆலங்குளம், பாவூர்சத்திரம் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று இரவு தொடங்கி இடைவிடாது கனமழை பெய்தது. இன்று அதிகாலை வரையிலும் சற்று கூட இடைவெளி விடாமல் கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. திடீர் கனமழையால் மக்கள் அவதி அடைந்தனர். 

    • குற்றால அருவிகளில் குளிப்பதற்கு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டு வந்தது.
    • ஐந்தருவிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமான குற்றால அருவிகளில் கடந்த சில தினங்களாக மழைப்பொழிவு குறைந்ததால் அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. அனைத்து அருவிகளிலும் பாறையை ஒட்டி மிகவும் குறைந்த அளவே தண்ணீர் விழுந்து வந்தது.

    தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு பண்டிகை கால விடுமுறை மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டமானது குற்றால அருவிகளில் குளிப்பதற்கு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டு வந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு 8 மணி முதல் தென்காசி நகரப்பகுதி குத்துக்கல்வலசை, மேலகரம், குற்றாலம், வல்லம், மத்தளம்பாறை, திரவியநகர் உள்ளிட்ட பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது.

    இரவு 11 மணிக்கு மேல் மிகக் கனமழையாக கொட்டி தீர்த்ததால் முக்கிய அருவியான குற்றாலம் மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது

    மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளமானது பாதுகாப்பு வளைவைத் தாண்டி போலீசார் பாதுகாப்பு பணியில் நிற்கும் பகுதி வரையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    இதனால் இரவில் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.இன்று காலையில் மழைப்பொழிவு சற்று குறைந்ததால் மெயின் அருவிக்கு தண்ணீர் வரத்தும் சற்று குறைய தொடங்கியது.

    தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் சீராக விழ தொடங்கியது. எனினும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கு காலையில் மெயின் அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது.

    ஐந்தருவிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஐந்தருவி மற்றும் புலியருவில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

    • குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலுமே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    • சுற்றுலாப் பயணிகள் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப்பட்டு வருவதால், அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலுமே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இன்று காலை முதலே கணிசமாக அதிகரித்து காணப்பட்டு வருவதால், அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    தற்போது பள்ளிகளுக்கு தேர்வு கால விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் சுற்றுலா தளங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஏராளமானோர் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கும் வருகை தந்து தங்களது குடும்பத்தினருடன் ஆனந்த குளியல் இட்டு வருகின்றனர்.

    தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் காலகட்டமும் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் முன்னதாக குற்றால அருவிகளில் புனித நீராட அதிக அளவில் வருவதால் குற்றாலமானது ஐயப்ப பக்தர்கள் கூட்டத்தாலும், சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தாலும் களை கட்டி உள்ளது.

    தற்போது மழைப் பொழிவு முற்றிலும் குறைந்துள்ளதால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்தும் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. எனினும் சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    • இரவு முதல் இன்று காலை வரை மழைப்பொழிவு முற்றிலும் குறைந்துள்ளதால் தண்ணீர் வரத்தும் அருவிக்கு சீரானது.
    • இன்று காலையில் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து வெயில் முகம் காட்ட தொடங்கியது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் மாலை வரையில் பரவலாக மழை பெய்தது. இதனால் குற்றால அருவிகளான ஐந்தருவி, மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இரவு முதல் இன்று காலை வரை மழைப்பொழிவு முற்றிலும் குறைந்துள்ளதால் தண்ணீர் வரத்தும் அருவிக்கு சீரானது. இதனால் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்து விழுந்த தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் குற்றாலத்தில் அதிகரித்து காணப்படுவதால் போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இன்று காலையில் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து வெயில் முகம் காட்ட தொடங்கியது.

    ×