search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Courtallam Falls"

    • கடந்த 3 நாட்களாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஆர்ப்பரித்ததால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
    • காலை முதல் குற்றாலம் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் விட்டுவிட்டு சாரல் மழையுடன் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கடந்த 3 நாட்களாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஆர்ப்பரித்ததால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் அருவிகளில் வெள்ளத்தின் சீற்றம் சற்று குறைந்துள்ளதால் ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    காலை முதல் குற்றாலம் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் விட்டுவிட்டு சாரல் மழையுடன் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. தண்ணீரின் சீற்றம் குறையும் பட்சத்தில் பழைய குற்றாலம் மற்றும் மெயின் அருவிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுபவர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பெய்யும்.
    • அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சீசன் காலமாக கருதப்படும். இந்த காலங்களில் குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பெய்யும்.

    மேலும் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இந்த அருவிகளில் குளிப்பதற்கும், குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழையில் நனைவதற்கும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணி கள் குற்றாலம் வருகை தருவார்கள்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக தென்காசி, குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையினால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் நலன் கருதி குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று முன்தினம் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

    குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை அதிகமாக பெய்வதால் அருவிகளில் குளிக்க தடை நேற்று நீட்டிக்கப்பட்ட நிலையில், நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் இன்றும் 3-வது நாளாக மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • குற்றாலம் பூங்கா பகுதியில் நின்றிருந்த பழமையான மரம் பலத்த காற்றின் காரணமாக முறிந்து விழுந்தது.
    • குளிர்ந்த காற்று வீசி வருவதால் சுற்றுலா பயணிகள் சீசனை அனுபவித்து வருகின்றனர்.

    தென்காசி:

    தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தற்பொழுது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதோடு, காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படுகிறது.வேகமாக வீசி வரும் சூறைக்காற்றால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தும், மரங்கள் முறிந்தும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

    குற்றாலம் பூங்கா பகுதியில் நின்றிருந்த பழமையான மரம் பலத்த காற்றின் காரணமாக முறிந்து விழுந்தது. அதனை உடனடியாக பணியாளர்கள் அப்புறப்படுத்திய நிலையில் குடியிருப்பு பகுதிகளிலும் மரங்கள் அதிகம் முறிந்து விழுந்துள்ளன.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மழைப்பொழிவு இல்லாததால் இன்று காலையில் முக்கிய சுற்றுலா தலமான குற்றாலம் அருவிகளில் தண்ணீர் குறைந்த அளவே விழுகிறது. இருப்பினும் குளிர்ந்த காற்று வீசி வருவதால் சுற்றுலா பயணிகள் சீசனை அனுபவித்து வருகின்றனர்.

    பழைய குற்றால அருவி பகுதியில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட வேண்டும், கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது சுற்றுலா பயணிகளை எச்சரிக்கும் வண்ணம் எச்சரிக்கை கருவிகளை நிறுவ வேண்டும் என மாலை மலரில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

    அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.

    பழைய குற்றால அருவிப்பகுதியில் இருந்த தடுப்பு கம்பிகளை ஒட்டி வலை போன்ற இரும்பு கம்பிகள் நிறுவப்பட்டு உள்ளது. 

    • குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
    • பாதுகாப்பு அம்சமாக கம்பிகள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கணிசமாக விழுந்தது.

    இந்நிலையில் கடந்த 17-ந்தேதி பழைய குற்றாலம் அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் நெல்லையை சேர்ந்த அஸ்வின் என்ற சிறுவன் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு இறந்தான்.

    இதையடுத்து குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. தொடர்ந்து சில நாட்களாக அருவிகளில் மிதமான அளவிலேயே தண்ணீர் கொட்டினாலும், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    அருவிகளில் இதுபோன்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை முன்கூட்டியே அறிந்து சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்ற தேவையான ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக நேற்று மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் அருவிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து அருவிகளில் குளிப்பதற்கான தடை உத்தரவு நேற்று விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் இன்று காலை முதல் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    மெயின் அருவியில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இன்று மாலை முதல் குளிக்க அனுமதி வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பழைய குற்றாலம் அருவியில் ஒரு வாரத்துக்கு பின்னர் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அங்கு பாதுகாப்பு அம்சமாக கம்பிகள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பழைய குற்றாலம் அருவியில் இனி காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி எனவும், இரவில் குளிக்க அனுமதி இல்லை எனவும் கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.

    • வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
    • சிற்றருவி, செண்பகாதேவி அருவி, புலி அருவிகள் ஏற்கனவே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் நேற்று பழைய குற்றால அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, அருவியில் குளித்துக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினர்.

    இருப்பினும், வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். தொடர்ந்து, கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தென்காசி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம், மெயின் குற்றாலம், ஐந்தருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கெனவே சிற்றருவி, செண்பகாதேவி அருவி, புலி அருவி ஆகியவை வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கன மழை சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக கொட்டியது.
    • குற்றாலத்தின் பிரதான அருவிகளான பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    தென்காசி:

    தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    அதன்படி தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கன மழை சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக கொட்டியது. இதனால் தென்காசியின் கூலகடை பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் மழைநீர் செல்ல முடியாமல் சாக்கடை நீர் கலந்து தெருக்களில் சூழ்ந்து நின்றதால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

    மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை பெய்ததால் குற்றாலத்தின் பிரதான அருவிகளான பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நீண்ட நாட்களாக வறண்டு காணப்பட்ட குற்றால அருவிகளில் தற்போது பெய்த மழையின் காரணமாக தண்ணீர் மிதமான அளவில் விழ தொடங்கியுள்ளதால் அதில் ஆனந்த குளியல் போட சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.

    • கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக நீர் நிலைகளிலும் தண்ணீரின் அளவு கணிசமாக குறைய தொடங்கி உள்ளது.
    • அனைத்து அருவிகளும் வறண்டு காணப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வரத்துகள் இன்றி அருவி கரையானது வெறிச்சோடி காணப்படுகிறது.

    தென்காசி:

    தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    இதனால் பொதுமக்கள் பலரும் குளிப்பதற்காக நீர் நிலைகளை அதிகம் நாடி வருகின்றனர். இந்நிலையில் கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக நீர் நிலைகளிலும் தண்ணீரின் அளவு கணிசமாக குறைய தொடங்கி உள்ளது.

    இந்நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தளமான குற்றால அருவிகளும் தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் தண்ணீர் வரத்து குறைந்து அருவிகள் வறண்டு காணப்படுகின்றன.

    இதேபோல் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் வறண்டு காணப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வரத்துகள் இன்றி அருவி கரையானது வெறிச்சோடி காணப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கும் பொழுது குற்றால சீசன் தொடங்கும்.

    • ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி ஐயப்ப பக்தர்களும் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.
    • மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் சற்று கூடுதலாக விழுவதால் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பணிக்கு போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

    தற்போது மழைப்பொழிவு குறைந்ததால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சற்று நீர்வரத்து குறைய தொடங்கி உள்ளது. இன்று காலை முதல் ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மற்ற அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி ஐயப்ப பக்தர்களும் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.

    ஆனால் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் சற்று கூடுதலாக விழுவதால் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. வெள்ளம் குறைந்தால் அங்கு இன்று மாலைக்குள் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய காட்டாற்று வெள்ளத்தால் பெண்கள் குளிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் தூண்கள், நடைமேடைகளில் அமைக்கப்பட்டு இருந்ததால் செங்கல்கள் பெயர்ந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலத்த சேதம் அடைந்தது .

    அருவிக்கரையை சுற்றிலும் பொதுமக்கள் நின்று குளிக்கும் பகுதிகளில் அருவியில் அடித்து வரப்பட்ட கற்கள், மரத்துண்டுகள், மண் குவியல்கள் ஆகியவற்றை துப்புரவு பணியாளர்களை கொண்டு அகற்றும் நடவடிக்கையில் குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

    • குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.
    • பாவூர்சத்திரத்திற்கு தென்பகுதியில் அமைந்துள்ள குளத்து பாசனத்தை நம்பி இருக்கும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று முதல் போதிய அளவு மழை இல்லாததால் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வரும் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.

    கடந்த சில நாட்களாக குற்றால அருவிகளில் இருந்து வரும் தண்ணீர் மூலம் சிற்றாற்று பாசன வசதி பெரும் குளங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பியதால் தென்காசி, சுந்தரபாண்டியபுரம், மேலப்பாவூர், கீழப்பாவூர், நாகல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பியதால் அந்த குளங்களின் மூலம் பாசன வசதி பெறும் விவசாய நிலங்களில் நெல் நடவு செய்யும் பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

    அதேநேரம் பாவூர்சத்திரத்திற்கு தென் பகுதியில் நாட்டார்பட்டி, திப்பணம்பட்டி, ஆவுடையானூர், பண்டாரகுளம் உள்ளிட்ட கிராமங்களை சுற்றிலும் அமைந்துள்ள குளங்கள் நிரம்பாமல் புற்கள் மட்டுமே வளர்ந்து காணப்படுகின்றன.

    இதனால் பாவூர்சத்திரத்திற்கு தென்பகுதியில் அமைந்துள்ள குளத்து பாசனத்தை நம்பி இருக்கும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஜம்பு நதியின் மேல்மட்ட கால்வாய் பணிகள் தொடங்கப்பட்ட பொழுதிலும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் இருப்பதால் போதிய மழை இருந்தும் தங்கள் பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பாமல் தாங்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    எனவே ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் பணிகளை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டு நிரம்பாத குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து விவசாயிகளை வாழ வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.
    • கனமழையால் புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழை நீர் தேங்கி நிற்கின்றது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    நேற்று மழை சற்று குறைந்த நிலையில் நெல்லை, டவுன், வண்ணார்பேட்டை, தச்சநல்லூர், பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இன்று காலை மழை முதல் பெய்து வருகிறது. இதேபோல் திசையன்விளை, பணகுடி, ராதாபுரம், நாங்குநேரி, நம்பியாறு உள்ளிட்ட புறநகர் மாவட்ட பகுதியிலும் மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை அதிகபட்சமாக சூரன்குடியில் 80 மல்லிமீட்டர் மழை பதிவானது.

    இந்நிலையில் பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி இருந்து வகுப்புகள் நடத்த உகந்த சூழல் இல்லாத நிலை ஏற்பட்டாலோ, அல்லது சில இடங்களில் கனமழை பெய்தாலோ அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

    நெல்லை அருகே உள்ள தேவர்குளம் சுற்றுவட்டார பகுதிகளான மேலஇலந்தைகுளம், சுண்டங்குறிச்சி, பன்னீரூத்து, மூவிருந்தாளி, அச்சம்பட்டி, புளியம்பட்டி மற்றும் தென்காசி மாவட்ட பகுதிகளான கரிசல்குளம், களப்பாலங்குளம், மேல நீலிதநல்லூர், குருக்கள்பட்டி, கோ.மருதப்பபுரம், பனவடலிசத்திரம், கீழநீலிதநல்லூர், நெடுங்குளம், கொக்குகுளம், சாயமலை, வலசை ஆகிய பகுதிகளில் தொடர்மழை காரணமாக பல்வேறு குளங்கள் நிரம்பி கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மூவிருந்தாளி கிராமத்தில் உள்ள பெரியகுளம் நிரம்பி மறுகால் சென்றது. இதில் இருந்து வெளியேறிய தண்ணீர் அதிகமாக சென்றதால் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இதனால் அங்குள்ள சுமார் 200 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. 6 வீடுகள் சேதமடைந்து உள்ளது. மேலும் பல்வேறு குளங்களில் இருந்து வெளியேறிய காட்டாற்று வெள்ளம் மேலஇலந்தைகுளம் பகுதியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்றது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் நெல்லை சந்திப்பு பஸ்நிலையம், டவுன், மேலப்பாளையம் குறிச்சி, பாளையங்கோட்டையில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. லூர்தம்மாள்புரம், ஸ்டேட் வங்கி காலனி, கலைஞர் நகர், பால்பாண்டி நகர், ராஜீவ் நகர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வீடுகளை சூழ்ந்து உள்ளது.

    திரு.வி.க. நகர், இந்திரா நகர் பகுதிகளிலும் மழைநீர் தேங்கி உள்ளது. அந்த பகுதியில் ஒரு சில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மோட்டார்கள் மூலம் மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தூத்துக்குடி கீழுர் ரெயில் நிலையத்தில் மழைநீர் தேங்கியது. தண்டவாளம் மழைநீரில் மூழ்கி இருந்தது.

    கயத்தாறு திருமங்களக்குறிச்சி பஞ்சாயத்தில் பெரியசாமிபுரம் கிராமத்தில் விவசாயிகள் சுமார் 300 மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் மக்காசோளப்பயிர் பயிரிட்டுள்ளனர். இங்கு பூ பூத்துள்ள தொடர் மழையில் மக்காசோளப்பயிர்களில் மழைநீர் இரண்டு அடி உயரம் தேங்கிய நிலையில் இப்பகுதியில் நேற்று மாலையில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. இதில் 250 ஏக்கர் மக்காச்சோளம், 50 ஏக்கர் உளுந்து பயிர் ஆகியவை நொடிந்து விழுந்தது.

    கனமழையால் புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழை நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் நோயாளிகள் அவதியடைந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே உடனடியாக அதனை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மாவட்ட நிர்வாகங்கள், மாநகராட்சி, நகராட்சி சார்பில் தேங்கிய இடங்களில் மழைநீரை அகற்றும் பணி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. பாபநாசம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 844.155 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து 504.75 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. 143 கொள்ளளவு கொண்ட அணையில் இன்று 105.75 அடியாக உயர்ந்து உள்ளது. அதேபோல் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 72.35 அடியில் இருந்து நேற்று 73.45 அடியாவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 118.04 உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்து வருகிறது. இதனால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் அருவிகளில் குளிக்க திரண்டனர்.

    • குற்றாலம் மெயின் அருவியில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவி நீரில் மண் மற்றும் கற்கள் அடித்து வரப்பட்டது.
    • உரிய நேரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க தடை விதித்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய 3 அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்வரத்து அதிக அளவில் காணப்படுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி போலீசாரால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    குற்றாலம் மெயின் அருவியில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவி நீரில் மண் மற்றும் கற்கள் அடித்து வரப்பட்டது. அருவி பகுதியில் அமைந்துள்ள இரும்பினால் ஆன காவல் கண்காணிப்பு மையம் தூக்கி வீசப்பட்டு பாதுகாப்பு கம்பிகள் சேதம் அடைந்து காணப்படுகிறது.

    உரிய நேரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க தடை விதித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ள நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அவை ஒவ்வொன்றாக நிரம்பும் தருவாயை எட்டியுள்ளன.

    • தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் நேற்றும் பரவலாக மழை பெய்தது.
    • கடனா அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 57 அடியை எட்டியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததன் விளைவாக பிரதான அணையான 142 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 19 அடி உயர்ந்த நிலையில், இன்று மேலும் 2 அடி உயர்ந்து 94.40 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 106.17 அடியாக உள்ளது.

    இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 1,909 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து வினாடிக்கு 1354 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் மேலும் 1 அடி உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 51.60 அடியாக உள்ளது. அணைக்கு 340 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    கொடுமுடியாறு அணை நீர்மட்டம் நேற்று 28 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 3 அடி உயர்ந்து 31.25 அடியை எட்டியுள்ளது. அந்த அணை பகுதியில் அதிகபட்சமாக 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மாவட்டத்தில் மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 22 மில்லிமீட்டரும், ராதாபுரத்தில் 3.60 மில்லிமீட்டரும் மழை பெய்தது. களக்காட்டில் 1.20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலை, காக்காச்சி மற்றும் ஊத்து எஸ்டேட்டுகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அங்கு தலா 2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. அந்த அணை முழுகொள்ளளவான 36 அடியை எட்டி 2 வாரங்களுக்கும் மேலாக உபரிநீர் வெளியேறி வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 98 கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்படு கிறது. குண்டாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 8.8 மில்லிமீட்டர் மழை பெய்தது. அந்த அணையில் ஆபத்தை உணராமல் ஆழமான பகுதிக்கு சென்று சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.

    132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்ந்து இன்று காலை 116 அடியை எட்டியது. அந்த அணை நிரம்ப இன்னும் 16 அடி நீரே தேவைப்படுகிறது.

    கடனா அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 57 அடியை எட்டியது. ராமநதி நீர் இருப்பு 1 அடி உயர்ந்து 64 அடியாக உள்ளது. கருப்பாநதியில் 44.62 அடி நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து அணைகளுக்கு நீர் வரத்து உள்ளது.

    குற்றாலம் அருவி பகுதிகளில் விட்டு விட்டு சாரல் பெய்து வருகிறது. அங்கு மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    ×