என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பழைய குற்றால அருவியில் தண்ணீர் மிதமாக விழும் காட்சி.
பழைய குற்றால அருவியில் சீரமைப்பு பணி முடியாததால் குளிக்க தடை நீட்டிப்பு
- நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக பழைய குற்றால அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
- சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் அருவி கரையானது வெறிச்சோடி காணப்படுகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக பகலில் வெயில் சுட்டெரித்து வந்ததால் ஐந்தருவி, மெயின் அருவி வறண்டு காணப்பட்ட நிலையில் நேற்று ஐந்தருவி, மெயின் அருவியில் தண்ணீர் விழத் தொடங்கியது. 2 அருவிகளிலும் பெரிய அளவில் தண்ணீர் விழவில்லை என்றாலும், பழைய குற்றால அருவியில் மட்டும் தண்ணீர் அதிகரித்து விழுந்தது.
சில மாதங்களுக்கு முன்பு கனமழை காரணமாக பழைய குற்றால அருவி பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இதனால் அங்கு 3 மாதங்களுக்கு மேலாக சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதனை மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் கடந்த வாரம் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக பழைய குற்றால அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. எனினும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் அருவி கரையானது வெறிச்சோடி காணப்படுகிறது.
தற்போது கடுமையான கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பழைய குற்றால அருவியில் மட்டும் நீர் விழுந்து வருவதால் விரைந்து சீரமைப்பு பணிகளை முடித்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது .






