என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளப்பெருக்கு"

    • கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • அணையில் இருந்து 1319 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. புயல் காரணமாக 2 நாட்கள் சற்று ஓய்ந்திருந்த மழை நேற்று இரவு முதல் மீண்டும் வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு தொடங்கிய மழை இன்று காலையிலும் நீடித்தது. இதனால் ஜக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை மழை நீர் சூழ்ந்தது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் மாணவ-மாணவிகள் சிரமத்துடன் வகுப்பறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

    கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 63.65 அடியாக உள்ள நிலையில் நீர்வரத்து 2215 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1319 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4337 மி. கனஅடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.20 அடியாக உள்ளது. வரத்து 884 கன அடி. திறப்பு 1600 கன அடி. இருப்பு 6924 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.30 அடி. வரத்து 38 கன அடி. இருப்பு 292.15 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 என அதன் முழு கொள்ளளவில் தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் அணைக்கு வரும் 181 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 43.10 அடியாக உள்ளது. வரத்து 15 கன அடி. திறப்பு 14.47 கன அடி.

    கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். சபரிமலை சீசன் என்பதால் தினந்தோறும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி செல்வது வழக்கம். ஆனால் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

    ஆண்டிபட்டி 43, அரண்மனைபுதூர் 16.8, வீரபாண்டி 2.2, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 17.4, வைகை அணை 30, உத்தமபாளையம் 3, தேக்கடி 3.4 என ஒரே நாளில் 119.8 மி.மீ. மழை அளவு பதிவானது. 

    • கண்டமனூர் தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து வெள்ளம் போல் பெருக்கெடுத்து செல்கிறது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.45 அடியாக உள்ளது. வரத்து 885 கன அடி. திறப்பு 1600 கன அடி.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வந்த நிலையில் முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. சற்று மழை ஓய்ந்த நிலையில் டிட்வா புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான வெள்ளிமலை, வருசநாடு, அய்யனார்கோவில், டானா தோட்டம் போன்ற பகுதிகளில் பெய்த மழை காரணமாக வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக கண்டமனூர் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. எனவே கண்டமனூர் தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து வெள்ளம் போல் பெருக்கெடுத்து செல்கிறது. எனவே பொதுமக்கள் யாரும் தடுப்பணையில் குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம் என்றும், கால்நடைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    நீர் வரத்து அதிகரிப்பால் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 63.29 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1740 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1319 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4262 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.45 அடியாக உள்ளது. வரத்து 885 கன அடி. திறப்பு 1600 கன அடி. இருப்பு 6987 மி.கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.28 அடியில் நீடிப்பதால் அணைக்கு வரும் 83 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.10 அடி. வரத்து 57 கன அடி. சண்முகாநதி அணை நீர்மட்டம் 43.10 அடி. வரத்து 17 கன அடி. திறப்பு 14.17 கன அடி.

    • பஞ்சலிங்க அருவியில் குளிக்க வந்த சுற்றுலாப்பயணிகள், ஐயப்ப பக்தர்கள் தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
    • அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான குருமலை, குழிப்பட்டி, ஜல்லி முத்தான் பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பஞ்சலிங்க அருவியில் இன்று காலை நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    பஞ்சலிங்க அருவியில் இன்று காலை குளிக்க வந்த சுற்றுலாப்பயணிகள், ஐயப்ப பக்தர்கள் தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

    மேலும் தொடர் மழையால் 90 அடி உயரமுள்ள உடுமலை அமராவதி அணை நீர்மட்டம் 75 அடியை நெருங்கி உள்ளது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இதே போல கல்லாபுரம் வாய்க்கால்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நேரடி பாசன வசதி பெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

    தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையும் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரையும் அமராவதி அணைக்கு நீர் வரத்து இருக்கும்.

    அமராவதி அணை ஏற்கனவே நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு காரணமாகவும் தென்மேற்கு பருவமழை முடிவடைந்ததாலும் நீர்மட்டம் குறைந்து வந்தது. 70 அடிக்கும் கீழ் நீர்மட்டம் சென்ற நிலையில் வடகிழக்கு பருவ மழை பெய்ய துவங்கியதும் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது.

    தற்போது படிப்படியாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது . மேற்கு தொடர்ச்சி மலையில் மிதமான அளவு மழை பெய்து வருகிறது.

    அணையில் இன்று நீர்மட்டம் 74.37 அடியாக உள்ளது. 672 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 25 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் அமராவதி அணை முழு கொள்ளளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அமராவதி அணை நீர்மட்டம் 75 அடியை எட்டியதால் பொதுமக்கள்-விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தென்காசி, குற்றாலம் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் சாலைகளில் ஆறாக ஓடியது.
    • விவசாயிகள் நெல் நாற்று நடவு செய்யும் பணிகளை மகிழ்ச்சியுடன் செய்து வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளமாக தண்ணீர் விழுகிறது.

    இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

    அதன்படி கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. சாலைகளில் எதிரில் வந்த வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு வெளிச்சம் குறைவாக இருந்தது. பெரும்பாலான வாகனங்கள் பகல் வேளையிலேயே முகப்பு விளக்கை எரிய விட்டவாறு இயக்கப்பட்டன. தொடர்ந்து பெய்த பலத்த மழையினால் அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் விழுகிறது.

    இதையடுத்து பாதுகாப்பு கருதி மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். தற்போது இந்த தடை 5-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி, குற்றாலம் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் சாலைகளில் ஆறாக ஓடியது. குற்றாலம் மெயின் அருவியில் விழுந்த வெள்ளம் குற்றாலம் குற்றா லநாத சுவாமி கோவில் வளாகம் மற்றும் சன்னதி பஜார் பகுதிகளில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்கள் நடமாட போலீசார் தடை விதித்தனர்.

    தென்காசி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    மேலும் தென்காசி, செங்கோட்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடைய நல்லூர், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய பாசன குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து குளங்கள் நிரம்பும் நிலையில் உள்ளது. எனவே விவசாயிகள் நெல் நாற்று நடவு செய்யும் பணிகளை மகிழ்ச்சியுடன் செய்து வருகின்றனர்.

    • கரையோரம் இருப்போர் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது
    • கன்னியாகுமரி வந்த சுற்றுலாப் பயணிகளும் சூரிய உதயம் காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    நாகர்கோவில்:

    தென் கடலோர மாவட்டங்களை வடகிழக்கு பருவமழை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் உருவாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழையின் தாக்கம் தீவிரமடையும் என்று வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த சூழலில் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை இடைவிடாது பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு வரும் நீரின் வரத்து அதிகமாக உள்ளது. முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவி பகுதி வெள்ளப்பெருக்காக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நேற்றும் மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் வீடுகளில் இருந்து கடை மற்றும் பல்வேறு பணிகளுக்கு வெளியில் வந்தவர்கள் சிரமத்திற்குள்ளானார்கள். பகலில் பெய்த மழை இரவிலும் நீடித்தது. விடிய விடிய சாரல் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    மாவட்டத்தின் மலையோர பகுதிகள் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. பேச்சிப்பாறையில் 37.6 மில்லி மீட்டரும், சிற்றாறு-1 அணை பகுதியில் 32.6 மில்லி மீட்டரும் பாலமோரில் 31.6 மில்லி மீட்டரும் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக குழித்துறை தாமிரபரணி ஆறு, கோதையாறு, பரளியாறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குழித்துறை சப்பாத்து பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருக்கிறது. நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பயன்படுத்தும் இந்த சப்பாத்து பாலத்தின் இரண்டு புறங்களிலும் தடுப்பு வேலி அமைத்து பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அது போன்று ஆற்றின் கரையோரம் இருப்போர் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது

    திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடிப்பதால் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதேபோல் கன்னியாகுமரி வந்த சுற்றுலாப் பயணிகளும் சூரிய உதயம் காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். பெரும்பாலானவர்கள் வெளியில் எங்கும் செல்லாமல் விடுதி அறைகளிலேயே முடங்கினர்.

    இந்த சூழலில் இன்று காலையும் மாவட்டத்தில் மழையின் தாக்கம் இருந்தது. காலை 8 மணியில் இருந்து பல பகுதிகளில் சாரல் மழையும் சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்குச் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் ஓட்டமும் நடையுமாக வீதிகளில் சென்றனர். மழை காரணமாக பல்வேறு மாவட்டங்க ளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் குமரி மாவட்டத்தில் விடுமுறை எதுவும் விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மாவட்டம் முழுவதும் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கொட்டாரம் 17, மயிலாடி 14.2, நாகர்கோவில் 10.2, கன்னிமார் 10.6, ஆரல்வாய்மொழி 16.2, பூதப்பாண்டி 18.2, முக்கடல் அணை 13.2, பாலமோர் 31.6, தக்கலை 7.8, குளச்சல் 3.6, இரணியல் 6, அடையாமடை 15.4, குருந்தங்கோடு 11.6, கோழிப்போர்விளை 16.2, மாம்பழத்துறையாறு 18.2, ஆணைக்கிடங்கு 17.8, சிற்றாறு 1-32.6, சிற்றாறு 2- 26.2, களியல் 25.2, குழித்துறை 10.2, பேச்சிப்பாறை 37.6, பெருஞ்சாணி 16.8, புத்தன்அணை 15.6, சுருளகோடு 15.4, திற்பரப்பு 18, முள்ளங்கினாவிளை 12.8.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.51 அடி யாக இருந்தது. அணைக்கு 1404 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையில் இருந்து 240 கன அடி நீர் மதகுகள் வழியாகவும், 1008 கன அடி நீர் உபரியாகவும் திறக்கப்பட்டுள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 68.15 அடியாக இருந்தது. அணைக்கு 623 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    சிற்றார்1அணை நீர்மட்டம் 11.02 அடியாகவும், சிற்றார் 2 அணையின் நீர்மட்டம் 11.12 அடியாகவும், நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 22.2 அடியாகவும் உள்ளது.

    • குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
    • மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து திடீரென்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

    அதன்படி, நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. நேற்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு குளிர்ச்சியான சூழலும் நிலவியது. மதியம் 12 மணியளவில் நெல்லை மாவட்டம் அம்பை, ராதாபுரம், நாங்குநேரி மற்றும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. மாநகர பகுதியான நெல்லை டவுன், சந்திப்பு, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மாலையிலும் பல்வேறு இடங்களில் மழை கொட்டியது.

    இதேபோல் தென்காசி மாவட்டம் குற்றாலம், தென்காசி, பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், மேக்கரை, மத்தளம்பாறை, இலஞ்சி, குத்துக்கல்வலசை, வல்லம், ஆய்க்குடி, சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக செங்கோட்டையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

    இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

    குற்றாலத்தை ஒட்டி அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் வனப்பகுதிக்குள்ளும் கனமழை பெய்தது. இதன் காரணமாக நேற்று காலையில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. மாலை மெயின் அருவியில் சற்று தண்ணீர் அதிகரித்ததால் அங்கு குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப்பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களை பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றி, குளிக்க தடை விதித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து திடீரென்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று 2-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • சங்கராபரணி ஆற்றில் செல்லும் நீர் காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
    • செஞ்சி பகுதியிலுள்ள ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதால் 2,411 கன அடி நீர் சங்கராபரணி ஆற்றில் நிமிடத்திற்கு செல்கிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த கனமழையின் காரணமாக சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருகரைகளையும் வெள்ள நீர் சூழ்ந்து ஆர்ப்பரித்து செல்கின்றன.

    சங்கராபரணி ஆற்றில் செல்லும் வெள்ள நீரால் நெடிமோழியனூரில் உள்ள கலிங்கல் பகுதியில் ஆற்றின் நடுவே செல்லும் நீர் அருவி போல் கொட்டி செல்வதால் திண்டிவனம், விக்கிரவாண்டியை சேர்ந்த மக்கள் அந்த பகுதிகளுக்கு சென்று குளித்தும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    செஞ்சியில் உருவாகும் இந்த ஆறானது வீடுர் வழியாக சென்று புதுச்சேரியில் கடலில் கலக்கின்றன. செஞ்சி பகுதியிலுள்ள ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதால் 2,411 கன அடி நீர் சங்கராபரணி ஆற்றில் நிமிடத்திற்கு செல்கிறது.

    சங்கராபரணி ஆற்றில் செல்லும் நீர் காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இதே போன்று தென்பெண்ணை ஆற்றில் செல்லும் வெள்ள நீரால் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு பகுதியில் இருகரைகளையும் சூழ்ந்து ஆர்பரித்து செல்லும் வெள்ள நீரை காண பொதுமக்கள் வந்து அணைக்கட்டு மேல் நின்று செல்பி எடுத்து செல்கின்றனர்.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.80 அடியாக உள்ளது.
    • வருசநாடு பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர்மழையால் முல்லை பெரியாறு, போடி கொட்டக்குடியாறு, மூல வைகையாறு, வராகநதி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் கடந்த 18ம் தேதி நீர்மட்டம் 62.66 அடியாக இருந்தது. தொடர்மழை காரணமாக நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது.

    நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடும் அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக 69.13 அடியாக நிலைநிறுத்தி கண்காணித்து வருகின்றனர். அணையில் நீர்வரத்து 3463 கனஅடியாக உள்ளது. ஆற்றின் வழியாகவும், பாசனத்திற்கும், குடிநீருக்காகவும் என மொத்தம் அணையிலிருந்து 3073 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 5605 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.80 அடியாக உள்ளது. 201 கனஅடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. தொடர்ந்து பெய்து வரும் மழையால் சோத்துப்பாறை அணை கடந்த 2 நாட்களுக்கு முன்பு முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் 252.37 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ கூடாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    சண்முகாநதி அணையும் அதன் முழு கொள்ளளவான 52.50 அடியில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 16 கனஅடி நீர் உபரியாக திறக்கப்படுகிறது.

    கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இன்றும் 12-வது நாளாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால் தடை தொடரும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் 5வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் ஆண்டிபட்டி அருகே வருசநாடு பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆண்டிபட்டி 12, அரண்மனை புதூர் 7.6, வீரபாண்டி 7.6, பெரியகுளம் 9.2, மஞ்சளாறு 12.6, சோத்துப்பாறை 8.2, வைகை அணை 13.2, போடி 16.2, உத்தமபாளையம் 6.8, கூடலூர் 3.8, பெரியாறு அணை 4.2, தேக்கடி 3.6, சண்முகாநதி 9.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • மதுரை சிம்மக்கல் தரைப்பாலம்-விரகனூர் செல்லும் இணைப்பு சாலையில் இருகரைகளை உரசியவாறு தண்ணீர் செல்கிறது.
    • பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மதுரை:

    வடகிழக்கு பருவமழையால் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக நேற்று முன்தினம் 71 அடி உயரமுள்ள வைகைஅணை 69 அடி வரை எட்டியதால் அணையில் இருந்து விநாடிக்கு 3,600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் நேற்று காலை மதுரை வந்தடைந்தது. இதனையொட்டி வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வைகை ஆறு பாய்ந்தோடும் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையானது விடுக்கப்பட்டு உள்ளது.

    இதனால் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ள நிலையில் வைகை ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மதுரை சிம்மக்கல் தரைப்பாலம்-விரகனூர் செல்லும் இணைப்பு சாலையில் இருகரைகளை உரசியவாறு தண்ணீர் செல்கிறது.

    இதனையடுத்து மதுரை வைகையாற்று பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் கால்நடைகளை பாதுகாப்பாக பராமரிக்கவும், கால்நடைகளை ஆற்றில் இறக்கிவிட வேண்டாம் எனவும், நீர்நிலைகளின் அருகில் கால்நடைகளை கட்டிவைக்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தீபாவளி விடுமுறை என்பதால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வைகை ஆற்றில் இறங்கி குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். 

    • நோணாங்குப்பத்தின் ஆற்றின் இருகரையோரங்களில் இருப்பவர்களுக்கு புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • ஆற்றில் இறங்குவது மீன்பிடிப்பது, விளையாடுவது, நீந்துவது, செல்பி எடுப்பது போன்ற எந்தவிதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வீடூர் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி 28 அடியை எட்டியது. மேலும் தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையொட்டி சங்கராபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் புதுச்சேரியை சேர்ந்த மணலிப்பட்டு, கொடாத்தூர், செட்டிப் பட்டு, கூனிச்சம்பட்டு, சுத்துக்கேணி, கைக்கிலப்பட்டு, தேத்தாம்பாக்கம், குமாரப்பாளையம், வம்புப்பட்டு, செல்லிப்பட்டு, பிள்ளையார்குப்பம், கூடப்பாக்கம் (கோனேரிக்குப்பம்), வில்லியனூர் (ஆரியப்பாளையம், புதுநகர் பிளாட்-2) பொறையாத்தமன் நகர், கோட்டைமேடு, மங்கலம், உறுவையாறு, திருக்காஞ்சி, ஒதியம்பட்டு மற்றும் புதுச்சேரி தாலுகாவில் இருக்கும் என்.ஆர்.நகர், நோணாங்குப்பத்தின் ஆற்றின் இருகரையோரங்களில் இருப்பவர்களுக்கு புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நேரத்தில் ஆற்றில் இறங்குவது மீன்பிடிப்பது, விளையாடுவது, நீந்துவது, செல்பி எடுப்பது போன்ற எந்தவிதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்றும் விட்டு விட்டு மழைக்கொட்டி தீர்த்து வருகிறது.
    • கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குடிநீர் செல்லும் முக்கிய குழாய்கள் உடைந்து சேதம் அடைந்தன.

    வருசநாடு, அக்.18-

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தேனி, திண்டுக்கல் உள்பட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.

    வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை தொடங்கி விடிய விடிய கன மழை பெய்தது. இதேபோல் போடியில் உள்ள முக்கிய நீர்பாசன குளங்களான பங்காறுசாமி குளம், செட்டிக்குளம், சங்கரப்பன்கண்மாய், மீனாட்சியம்மன் கண்மாய் ஆகியவற்றில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் அதிக அளவு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. போடி மெட்டு, குங்கரணி, பீச்சாங்கரை, ஊத்தாம்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் கொட்டக்குடி ஆறு, கொம்புதூக்கி ஆறு ஆகிய பகுதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது.

    கடந்த சில மாதங்களாக போதிய மழையின்றி வறண்டு கிடந்த தடுப்பணை பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்வதால் பொதுமக்கள் அங்கு செல்ல வேணடாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தொடர் விடுமுறை காரணமாக சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் தடுப்பணை பகுதிக்கு செல்லகூடும் என்பதால் அங்கு தடுப்புகள் வைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்றும் விட்டு விட்டு மழைக்கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று இரவு வைகை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, மேகமலை, அரசரடி, பொம்மராஜபுரம், வருஷநாடு உள்ளிட்ட சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இதன் காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஆற்றில் கரைபுரண்டு வந்த வெள்ள நீர் தேனி வருசநாடு சாலையில் பல்வேறு இடங்களில் புகுந்தது. இதனால் அந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் தேங்கி இருந்த தண்ணீர் சிறிதளவு வடியத் தொடங்கியதும் வாகனங்கள் தண்ணீருக்குள் மெதுவாக சென்றது.

    இது தவிர வருஷநாடு முதல் கண்டமனூர் வரையிலான வைகை ஆற்றங்கரையோரம் உள்ள பல்வேறு தோட்டங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் விளைநிலங்கள் அனைத்தும் தண்ணீரால் நிரம்பி காட்சியளித்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    மார்க்கையன்கோட்டை செல்லும் சாலையில் முல்லையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் டிரான்ஸ்பார்மர், குடிசை வீட்டை சூழ்ந்த வெள்ளம்.

     

    வடகிழக்கு பருவமழை தொடங்கிய 2 நாட்களிலேயே வைகை ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இனி வரும் நாட்களில் மழை அதிகரித்து வைகை ஆற்றில் அதிக அளவு வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேகமலை அருவியில் இருந்து செல்லும் தண்ணீர் மேகமலை, சிங்கராஜபுரம், குமணன்தொழு ஆகிய 3 ஊராட்சிகளை சேர்ந்த 64 கிராமங்கள் பயன் அடைந்து வருகின்றனர்.

    கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குடிநீர் செல்லும் முக்கிய குழாய்கள் உடைந்து சேதம் அடைந்தன. இதனால் 64 கிராம மக்கள் குடிநீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை நின்றபிறகுதான் குழாய்கள் சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. எனவே அதுவரை குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வைகை அணைக்கு நேற்று 1319 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் இன்று காலை 12589 கன அடி நீர் வருவதால் இருகரைகளையும் தொட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. ஒருசில இடங்களில் கரையோரம் உள்ள வயல்களுக்குள்ளும் தண்ணீர் சென்று விட்டது.

    71 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 62.47 அடியாக உள்ளது. அணைக்கு 12 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வருவதால் விரைவில் முழு கொள்ளளவை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 68 அடியை எட்டியவுடன் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். இதனால் அணைக்கு வரும் நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • மேகமலை சின்னசுருளி அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
    • தற்போது மழை ஓய்ந்ததால் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது

    தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழைபொழிவு இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. தேனி, பெரியகுளம், ஜெயமங்கலம், மேல்மங்களம், குரங்கணி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.

    கடமலைக்குண்டு சுற்று வட்டார பகுதிகளிலும் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து அய்யனார்புரம், பாலூத்து, துரைச்சாமிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக அய்யனார்புரம் பகுதியிலுள்ள ஓடைகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கனமழை காரணமாக மேகமலை சின்னசுருளி அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மழை ஓய்ந்ததால் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்று விடுமுறை தினம் என்பதால் தேனி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மழை பெய்தால் மூல வைகை ஆற்றிலும் நீர் வரத்து அதிகரிக்கும். எனவே இதனை நம்பியுள்ள விவசாயிகள், பொதுமக்கள் மழையை எதிர்பார்த்துள்ளனர்.

    இதேபோல் கும்பக்கரை, சுருளி அருவியிலும் தண்ணீர் அதிக அளவு சென்ற போதிலும் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

    ×