search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flooding"

    • மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் பிரம்மா, விஷ்ணு ,சிவன் ஆகியோர் ஒருங்கே பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் உடுமலை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். மேலும் திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வருகின்றனர்.

    இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    கடந்த வாரம் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரு வாரம் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் நீர்வரத்து குறைந்ததும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    அமராவதி அணையில் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை நெருங்கியதால் ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று உடுமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பாலாற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக திருமூர்த்திமலை அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இதையடுத்து அங்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சலிங்க அருவிக்கு செல்லவும் தடை விதித்துள்ளனர். கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினர் வெள்ள நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர். 

    • மழை பெய்து வருவதால் ரம்யமான சூழல் நிலவுகிறது.
    • ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைய தொடங்கியுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடித்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் இரவு முழுவதும் இதமான குளிர் காற்று வீசியது. திற்பரப்பு அருவி பகுதியிலும் மழை பெய்து வருவதால் ரம்யமான சூழல் நிலவுகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மழை கொட்டி தீர்த்து வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

    அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் கோதை ஆறு, குழித்துறை ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறையத் தொடங்கியுள்ளது.

    திற்பரப்பு அருவியில் கடந்த 2 நாட்களாக குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்றும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 3-வது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.82 அடியாக உள்ளது. அணைக்கு 1061 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 582 கன அடி தண்ணீர் மதகு வழியாகவும், 256 கன அடி தண்ணீர் உபரி நீராகவும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.15 அடியாக உள்ளது. அணைக்கு 696 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து 460 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 15.43 அடியாக உள்ளது. அணைக்கு 163 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. நாகர்கோவில் நகரில் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு சூறைக்காற்று வீசியதால் மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் பரித விப்பிற்கு ஆளானார்கள்.

    • குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
    • போலீசாரால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி போலீசாரால் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    நேற்று முழுவதும் வெள்ளப்பெருக்கு நீடித்த நிலையில் இன்று காலையும் 3-வது நாளாக நீர்வரத்து சீராகாத நிலையில் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசாரால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை தொடர்கிறது.

    நேற்று இரவில் பழைய குற்றாலம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் அருவிக்கரைக்கு செல்லும் பகுதியில் அமைந்துள்ள கருப்பசாமி கோவில் பகுதியில் நின்றிருந்த 2 பனை மரங்கள் மற்றும் மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன.

    இதில் அருகில் இருந்த மின்கம்பங்கள் சேதம் அடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இன்று காலை மின்வாரிய ஊழியர்கள் வந்து துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.

    இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, சாரல் மழை சற்று குறைந்துள்ளதால் அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறைய தொடங்கி உள்ளது. அவ்வாறு குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    நாளை மொகரம் பண்டிகை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும் என எதிர்பார்த்த நிலையில் அருவிகளில் குளிக்க அனுமதியை எதிர்நோக்கி சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கின்றனர்.

    • குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • தென்காசி பகுதிகள் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலையில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக மலை அடிவாரத்தில் உள்ள அருவிகளான குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்றும் காலை முதலே குற்றாலம் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வரும் நிலையில், அருவிகளில் மேலும் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் ஆற்றுப்படுகையின் ஓரமாக யாரும் இறங்க வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

    மழை குறைந்து அருவிகளில் தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் பகுதி அருவிகளில் ஆனந்த குளிக்க முடியாததால் ஏமாற்றத்துடனே திரும்பி சென்றனர். இன்று காலை முதல் மழை நீடித்து வருவதால் தென்காசி பகுதிகள் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • நேற்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
    • மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறியது.

    மும்பை:

    மராட்டிய மாநிலத்தில் வழக்கமாக ஜூன் மாதம் 2-வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்திலேயே பருவமழை தொடங்கியது. ஆனாலும் மும்பை பெருநகர பகுதிகளை சுற்றியுள்ள மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இதன் காரணமாக மும்பை, தானே பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது.

    இந்த நிலையில் மும்பையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்ய தொடங்கியது. இன்று காலை வரை விடிய விடிய தொடர்ந்து கனமழை பெய்தது.

    மேலும் தானே, பால்கர், நவிமும்பை, ராய்காட், மட்டுங்கா, அந்தேரி, குர்லா, பாந்த்ரூப், கிங்ஸ் சர்கிள் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

    இன்று அதிகாலை நேரத்தில் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறியது. மும்பையில் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தாழ்வான அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் தேங்கி காணப்படுகிறது.

    வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    சாலைகளில் குளம் போல தண்ணீர் தேங்கி கிடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    வெளியூர்களுக்கு செல்லும் விரைவு ரெயில்கள் உள்பட 5 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் மின்சார ரெயில் சேவைகளும் முடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

    இன்று காலையில் தண்டவாளத்தில் தேங்கிய வெள்ளம் ஓரளவு வடிந்துள்ளதால் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. பாண்டுப், சியோன் பகுதிகளில் வெள்ளம் வடிந்துள்ளதால் அங்கு மீண்டும் ரெயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

    மேலும் பஸ் போக்குவரத்து சேவையும் முடங்கியுள்ளது. பல பஸ்கள் வாற்று வழிகளில் திருப்பிவிடப்பட்டன. சாலைகளில் வெள்ளம் தேங்கி கிடப்பதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

    பல சாலைகளில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் தத்தளிக்கிறார்கள்.

    மும்பை விமான நிலையத்துக்கு செல்லும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்களுக்கு செல்லும் பயணிகள், குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

    கனமழை காரணமாக மும்பையில் அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தேவையில்லாமல் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    பலத்த மழை காரணமாக மும்பையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சதாரா, சாங்லி, கோலாபூா் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை நீடித்து வருகிறது. தானே மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த ரிசாா்ட்டில் சிக்கியிருந்த 49 பேரை தேசிய பேரிடா் மீட்புப் படையினா் மீட்டனா்.

    தாதர் பகுதியில் சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் வாகன போக்குவரத்து முடங்கியது. மும்பை தானே பகுதியில் நேற்று முன்தினம் முதலே கனமழை பெய்வதால் அங்கு பாதிப்புகள் அதிகமாக உள்ளது.

    இடைவிடாத மழையால் மழைநீர் கால்வாய்கள் நிரம்பி வழிவதால் நகரில் ஆங்காங்கே தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை முதல் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை 1 மணி முதல் காலை 7 மணி வரை 6 மணி நேரத்தில் மும்பையில் 30 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    இதற்கிடையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் பெற்றுள்ளதால் வரும் 10-ந்தேதி வரை மழை தொடரும். குறிப்பாக மராத்வடா பகுதியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

    இதேபோல் வட மாநிலங்களிலும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் சிராவஸ்தி, குஷிநகா், பல்ராம்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக, கண்டக், சிராவஸ்தி, ரப்தி ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    பல கிராமங்களை வெள்ளநீா் சூழ்ந்துள்ள நிலையில், கிராம மக்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடா் மீட்பு படையினா், மாநில பேரிடா் மீட்பு படையினா் ஈடுபட்டுள்ளனா்.

    பீகாரில் கனமழை நீடித்து வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மின்னல் தாக்கி 10 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் கடந்த 2 நாள்களில் மின்னல் தாக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 வாரங்களில் 40 போ் உயிரிழந்து விட்டனா்.

    பீகார் மாநிலத்தில் பாயும் கோசி, மகாநந்தா, பாகமதி, கண்டக், கமலா உள்ளிட்ட ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்கிறது.

    தாழ்வான பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்துள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அசாம் மாநிலத்தில் கனமழை நீடித்து வரும் நிலையில், 29 மாவட்டங்களில் 24 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். துப்ரி மாவட்டத்தில் அதிகபட்சமாக சுமாா் 8 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.

    பிரம்மபுத்திரா உள்பட முக்கிய ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்கிறது. மழை வெள்ளத்தால் சாலைகள், பாலங்கள் ஆகியவை கடுமையாக சேதமடைந்துள்ளன.

    காசிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளத்தில் சிக்கி காண்டாமிருகங்கள் உள்பட 130 வனவிலங்குகள் உயிரிழந்துவிட்டன.

    • கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.
    • பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்கள், பெலகாவி உள்ளிட்ட வடகர்நாடக மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

    இதன் காரணமாக ஏற்கனவே பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளன.

    பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும் உள்ளன. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

    மேலும் கரையோர கிராமங்களையும், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை தீயணைப்பு படை வீரர்கள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் படகு, பரிசல், ரப்பர் படகு உள்ளிட்டவைகளில் சென்று மீட்டு வருகிறார்கள்.

    விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்து பயிர்களை மூழ்கடித்ததால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

    இதுஒருபுறம் இருக்க சார்மடி, சிராடி காட் உள்பட மாநிலத்தில் உள்ள பல மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதாலும், மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாலும் மலைப்பாதை வழியாக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    உத்தர கன்னடாவில் ஏற்கனவே கனமழையால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழையால் உத்தரகன்னடா மாவட்டத்தில் 92 வீடுகள் இடிந்துள்ள நிலையில் நேற்று கார்வார் தாலுகா சென்டியா கிராமத்தில் 4 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த 4 வீடுகளையும் சுற்றி 3 அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் தேங்கி நின்றது.

    உத்தரகன்னடா மாவட்டத்தில் இன்னும் 439 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், அதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு அரசு முகாம்களில் தங்க வைத்து இருப்பதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

    இதேபோல் பெலகாவி மாவட்டத்திலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பெலகாவி மாவட்டத்தில் ஓடும் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மேலும் விளைநிலங்களில் வெள்ளம் புகுந்து பயிர்களை மூழ்கடித்ததால் பல ஏக்கர் நெற்பயிர்கள் நாசமாகின. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
    • நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து, மேற்கு தொடர்ச்சி மலையில் காணும் இடமெல்லாம் வெள்ளியை உருகிவிட்டது போல ரம்மியமாக காட்சியளிக்கிறது.

    ஓடைகளில் நீர்வரத்து, அதிகரித்ததால் நேற்று முன்தினமும் நொய்யல் ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதியல் கன மழை கொட்டி தீர்த்தது.

    இதன் காரணமாக நொய்யல் ஆற்றுக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரித்தது. வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணை நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேறி, பேரூர் குளம், குறிச்சி குளம், சொட்டையாண்டி குட்டை உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.

    இதனால் குனியமுத்தூர் தடுப்பணை, சுண்ணாம்பு காளவாய் தடுப்பணை, புட்டுவிக்கி தடுப்பணைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மேலும் புதுக்குளம், உக்குளம், கோளராம்பதி, நரசாம்பதி, குமாரசாமி, செல்வ சிந்தாமணி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது.

    குளத்திற்கு செல்லும் ராஜவாய்க்கால், தடுப்பணைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆபத்தை உணராமல் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பது, செல்பி எடுப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் எங்கு செல்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டியது அவசியமாகும். போலீசாரும், நீர்நிலை பகுதிகளில் ரோந்து சென்று, ஆபத்தை உணராமல் தண்ணீரில் இறங்குபவர்களை தடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக, இங்குள்ள தடுப்பணைகள், குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் அலர்ட் செய்யப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 471 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    சின்கோனா 64

    சின்னக்கல்லார்-93

    வால்பாறை 72

    வால்பாறை தாலுகா-69

    சிறுவாணி அடிவாரம்-63

    • சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    கூடலூர்:

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது.

    இதேபோல் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்திற்கு ரெட்அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் அங்கு கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 4 அடி உயர்ந்துள்ளது. குறிப்பாக இன்று ஒரேநாளில் 2 அடி உயர்ந்துள்ளது. நேற்று காலை 119.90 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 121.80 அடியாக உயர்ந்துள்ளது.

    நேற்று 3579 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 5389 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1133 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2984 மி.கனஅடியாக உள்ளது.

    கூடுதல் தண்ணீர் திறப்பால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு 102 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 48.29 அடியாக உள்ளது. வரத்து 695 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 1778 மி.கனஅடி.

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. போதிய அளவு மழை இல்லாத காரணத்தால் கடந்த சில நாட்களாக ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வந்தது.

    கடந்த வாரம் ஆறு நீரின்றி முழுமையாக வறண்டு போனது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததன் காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆற்றில் லேசான நீர்வரத்து ஏற்பட்டது. இந்த நீர்வரத்து வருசநாடு கிராமத்துடன் நின்று போனது.

    இந்நிலையில் வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை பெய்ததால் வைகை ஆற்றில் மீண்டும் நீர்வரத்து ஏற்பட்டது. இந்த தண்ணீர் அய்யனார்புரம் கிராமத்தை கடந்து சென்றது. தொடர்ந்து வெள்ளிமலை வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    கனமழை காரணமாக சின்னசுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதியான மேகமலை வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதன்காரணமாக சின்னசுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்து பெய்வதால் சின்னசுருளி அருவியில் எந்த நேரத்திலும் வெள்ளம் ஏற்படலாம் என்ற நிலை உள்ளதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மழை குறைந்து அருவியில் சீரான நிலை ஏற்படும் வரையில் இந்த தடை உத்தரவு தொடரும் என்று மேகமலை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சின்னசுருளி அருவியில் வரும் நீர்வரத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இதேபோல் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியிலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    • வெள்ளப்பெருக்கின் காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.
    • சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று காலையிலும் சாரல் மழை பெய்து வந்த நிலையில் மதியம் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இதையடுத்து மலையோர கிராமங்களில் மக்கள் உஷார் படுத்தப்பட்டனர். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மலையோர பகுதியான குற்றியாறு, மோதிரமலை, தச்ச மலை பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் அங்குள்ள தரைபாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்றது. இதனால் 12 மலையோர கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். காளிகேசம் பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் டெம்போவில் வந்த தொழிலாளர்களை காட்டாற்று வெள்ளம் இழுத்துச்சென்றது. டெம்போவில் சிக்கி தவித்த தொழிலாளர்களை வனத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் கனமழை கொட்டியதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து நேற்று மாலை உபரிநீர் திறக்கப்பட்டது.

    இரு அணைகளில் இருந்தும் 4,008 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் குழித்துறை ஆறு, கோதை ஆறு, வள்ளியாறு, பரளி ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. குழித்துறை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.

    கோதை ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. திற்பரப்பு அருவியை மூழ்கடித்து தண்ணீர் கொட்டுவதால் அங்குள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் அருவியல் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.70 அடியாக இருந்தது.

    அணைக்கு 3,511 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து மதகுகள் வழியாக 636 கன அடி தண்ணீரும், உபரிநீராக 3,008 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.27 அடியாக உயர்ந்தது. அணைக்கு 2,123 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முக்கடல் அணை நீர்மட்டம் 20.90 அடியாக உயர்ந்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் அணைகளை கண்காணித்து வருகிறார்கள்.

    அணைகளுக்கு வரும் தண்ணீருக்கு ஏற்ப தண்ணீரை திறந்துவிட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் ஆற்றின் கரையோர பகுதி மக்கள் மறுஅறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்றும் 4 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 28.8,

    பெருஞ்சாணி 32.4,

    சிற்றார் 1-16.4,

    சிற்றார் 2-18.2,

    கன்னிமார் 6.2,

    கொட்டாரம் 3,

    மயிலாடி 4.8,

    நாகர்கோவில் 5.4,

    பூதப்பாண்டி 12.4,

    முக்கடல் 10.4,

    பாலமோர் 52.4,

    தக்கலை 10,

    குளச்சல் 5,

    இரணியல் 6,

    அடையாமடை 21,

    குருந்தன்கோடு 3.8,

    கோழிப்போர்விளை 12.4,

    மாம்பழத்துறையாறு 6.4,

    களியல் 18.6,

    குழித்துறை 12.4,

    புத்தன் அணை 29.2,

    சுருளோடு 6.2,

    ஆணைக்கிடங்கு 5,

    திற்பரப்பு 14.8,

    முள்ளங்கினாவிளை 14.8.

    • குற்றாலம் அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • சுற்றுலாப் பயணிகள் சிறிது நேரம் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சுற்றுலா தலமான குற்றாலம் அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலையில் தென்காசி, செங்கோட்டை, புளியரை, மேலகரம், இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்து பெய்தது.

    மலைப்பகுதிகளிலும் மழை பெய்ததன் காரணமாக குற்றாலம் அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அபாய ஒலி எழுப்பப்பட்டு மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இன்று காலையில் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் சிறிது நேரம் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் தொடர்ந்து பெய்த சாரல் மழையால் அங்கு தண்ணீர் மேலும் அதிகரித்ததால் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் போலீசாரால் உடனடியாக அப்புறப்படுத்தப் பட்டனர்.

    மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிற்றருவி மற்றும் புலியருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    பிரதான அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். 

    • ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்ததன் காரணமாக ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    பின்பு வெள்ளப்பெருக்கு குறைந்ததால் மாலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் இரவில் பெய்த மழையின் காரண மாக ஐந்தருவி, மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அபாய ஒலி எழுப்பப்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

    இன்று காலையில் ஐந்தரு வியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கும் பழைய குற்றால அருவியிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இந்நிலையில் மெயின் அருவியில் தொடர்ந்து பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி குளிக்கத் தடை விதித்துள்ளனர்.

    காலை முதல் குற்றாலம், செங்கோட்டை, கட்டளை குடியிருப்பு, குத்துக்கல் வலசை, இலஞ்சி, வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் அருவிகளில் குளிப்பதற்கு காலை முதலே சுற்றுலாப் பயணிகள் குவிந்த நிலையில் மெயின் அருவியில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அருவி கரையில் நின்று தண்ணீர் விழுவதை பார்த்து சுற்றுலாப் பயணிகள் ரசித்து செல்கின்றனர்.

    மெயின் அருவியில் தண்ணீர் வரத்து சற்று குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிப்ப தற்கு அனுமதி வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • தமிழக எல்லை பகுதியான பிழிகுண்டுளுவில் நீர்வரத்து படிப்படியாக அடியாக அதிகரித்து வருகிறது.
    • ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன.

    ஒகேனக்கல்:

    தமிழக கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுளுவில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் தமிழக எல்லை பகுதியான பிழிகுண்டுளுவில் நீர்வரத்து படிப்படியாக அடியாக அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பெய்த மழையால் நேற்று வினாடிக்கு 1500 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது அதிகரித்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர் வந்து கொண்டு இருக்கிறது. மேலும் ஒகேனக்கல் உள்ளிட்ட வனப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த நீர்வரத்தால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன.

    ×