search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bathing ban"

    • மழை பெய்து வருவதால் ரம்யமான சூழல் நிலவுகிறது.
    • ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைய தொடங்கியுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடித்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் இரவு முழுவதும் இதமான குளிர் காற்று வீசியது. திற்பரப்பு அருவி பகுதியிலும் மழை பெய்து வருவதால் ரம்யமான சூழல் நிலவுகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மழை கொட்டி தீர்த்து வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

    அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் கோதை ஆறு, குழித்துறை ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறையத் தொடங்கியுள்ளது.

    திற்பரப்பு அருவியில் கடந்த 2 நாட்களாக குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்றும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 3-வது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.82 அடியாக உள்ளது. அணைக்கு 1061 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 582 கன அடி தண்ணீர் மதகு வழியாகவும், 256 கன அடி தண்ணீர் உபரி நீராகவும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.15 அடியாக உள்ளது. அணைக்கு 696 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து 460 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 15.43 அடியாக உள்ளது. அணைக்கு 163 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. நாகர்கோவில் நகரில் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு சூறைக்காற்று வீசியதால் மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் பரித விப்பிற்கு ஆளானார்கள்.

    • குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
    • போலீசாரால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி போலீசாரால் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    நேற்று முழுவதும் வெள்ளப்பெருக்கு நீடித்த நிலையில் இன்று காலையும் 3-வது நாளாக நீர்வரத்து சீராகாத நிலையில் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசாரால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை தொடர்கிறது.

    நேற்று இரவில் பழைய குற்றாலம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் அருவிக்கரைக்கு செல்லும் பகுதியில் அமைந்துள்ள கருப்பசாமி கோவில் பகுதியில் நின்றிருந்த 2 பனை மரங்கள் மற்றும் மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன.

    இதில் அருகில் இருந்த மின்கம்பங்கள் சேதம் அடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இன்று காலை மின்வாரிய ஊழியர்கள் வந்து துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.

    இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, சாரல் மழை சற்று குறைந்துள்ளதால் அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறைய தொடங்கி உள்ளது. அவ்வாறு குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    நாளை மொகரம் பண்டிகை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும் என எதிர்பார்த்த நிலையில் அருவிகளில் குளிக்க அனுமதியை எதிர்நோக்கி சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கின்றனர்.

    • குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • தென்காசி பகுதிகள் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலையில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக மலை அடிவாரத்தில் உள்ள அருவிகளான குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்றும் காலை முதலே குற்றாலம் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வரும் நிலையில், அருவிகளில் மேலும் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் ஆற்றுப்படுகையின் ஓரமாக யாரும் இறங்க வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

    மழை குறைந்து அருவிகளில் தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் பகுதி அருவிகளில் ஆனந்த குளிக்க முடியாததால் ஏமாற்றத்துடனே திரும்பி சென்றனர். இன்று காலை முதல் மழை நீடித்து வருவதால் தென்காசி பகுதிகள் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்ததன் காரணமாக ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    பின்பு வெள்ளப்பெருக்கு குறைந்ததால் மாலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் இரவில் பெய்த மழையின் காரண மாக ஐந்தருவி, மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அபாய ஒலி எழுப்பப்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

    இன்று காலையில் ஐந்தரு வியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கும் பழைய குற்றால அருவியிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இந்நிலையில் மெயின் அருவியில் தொடர்ந்து பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி குளிக்கத் தடை விதித்துள்ளனர்.

    காலை முதல் குற்றாலம், செங்கோட்டை, கட்டளை குடியிருப்பு, குத்துக்கல் வலசை, இலஞ்சி, வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் அருவிகளில் குளிப்பதற்கு காலை முதலே சுற்றுலாப் பயணிகள் குவிந்த நிலையில் மெயின் அருவியில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அருவி கரையில் நின்று தண்ணீர் விழுவதை பார்த்து சுற்றுலாப் பயணிகள் ரசித்து செல்கின்றனர்.

    மெயின் அருவியில் தண்ணீர் வரத்து சற்று குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிப்ப தற்கு அனுமதி வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • திற்பரப்பு என்று அழைக்கப்படும் அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு தடுப்பணைகளை தாண்டி ஓடியது.
    • அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டமும் உயரத் தொடங்கி உள்ளது.

    கூடலூர்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரம் அடைந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் குறிப்பிட்ட சில இடங்களில் லேசான மழை மட்டுமே பெய்து வந்தது.

    இதனிடையே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான குரங்கணி, ஊத்தாம்பாறை, கொட்டக்குடி, பிச்சாங்கரை போன்ற பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது.

    மேலும் போடியின் திற்பரப்பு என்று அழைக்கப்படும் அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு தடுப்பணைகளை தாண்டி ஓடியது.

    ஆண்டிபட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் விட்டு விட்டு கன மழை பெய்தது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    ஏற்கனவே சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்காக கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டமும் உயரத் தொடங்கி உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் நேற்று 48.10 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 48.39 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று 292 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 877 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 472 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1790 மி. கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.65 அடியாக உள்ளது. வரத்து 621 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 2024 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.40 அடி. வரத்து 280 கன அடி. இருப்பு 328 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 3-வது நாளாக முழு கொள்ளளவை எட்டி 126.28 அடியில் உள்ளது. இதனால் அணைக்கு வரும் 88 கனஅடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.

    சோத்துப்பாறை அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வராகநதிக்கரையில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திற்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கும்பக்கரை, மேகமலை, சுருளி அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது விடுமுறை நாட்கள் என்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அருவிகளில் நீராட வந்து வனத்துறை கட்டுப்பாட்டால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    பெரியாறு 9.6, தேக்கடி 21.8, கூடலூர் 3.6, உத்தமபாளையம் 4.8, சண்முகாநதி அணை 4.4, போடி 3.2, வைகை அணை 74.8, மஞ்சளாறு 21, சோத்துப்பாறை 31, பெரியகுளம் 4.6, அரண்மனைபுதூர் 1.8, ஆண்டிபட்டி 25.4 மி.மீ. மழை அளவு பதிவானது.

    • தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. நெல்லை சந்திப்பு, டவுன், வண்ணார்பேட்டை, பேட்டை, சமாதானபுரம், கே.டி.சி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் விடிய விடிய மழை பெய்தது.

    மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயினருவியில் இரவில் அதிக அளவு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதனால் இரவில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவிகளில் மிதமான தண்ணீர் விழுந்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலை, கோவில்பட்டி, கடம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. ஓட்டப்பிடாரத்தில் நேற்று மாலையில் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 17 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தூத்துக்குடியில் பெய்த மழையால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரையிலான தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலை கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி

    களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.இதனால் அணைக்கரை தரைப்பாலம் மூழ்கியது.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மூணாம்சேத்தி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சந்திரசேகர் நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது பெய்த கனமழையால் மேற்கூரையின் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததில் சந்திரசேகர் பலத்த காயம் அடைந்தார்.

    திருச்சி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. மாலையில் வானம் மப்பும் மந்தார முமாக காணப்பட்டது. பின்னர் இரவில் மழை பெய்யத் தொடங்கியது. திருச்சி மாநகரில் விடிய விடிய சாரல் மழை பெய்தது.

    தஞ்சை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், திருவோணம், பேராவூரணி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நாகை, வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து இன்று காலையிலும் மழை இடைவிடாமல் பெய்தது.

    தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்தது. நேற்று 105 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 113.16 அடியாக உயர்ந்துள்ளது.

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ராமேசுவரம் கோவில், அப்துல்கலாம் மணி மண்டபம், பஸ் நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

    ராமேசுவரத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை பெரியார் பஸ் நிலையம், சிம்மக்கல், கோரிப்பாலையம், புதூர், ஒத்தக்கடை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வில்லாபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

    சேலம் ஆத்தூர், நத்தக்கரை, சங்ககிரி, கரியகோவில், மேட்டூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்தது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் கிராமத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் வேருடன் சாய்ந்தது. புதுச்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று காலை முதல் சாரல் மழைபெய்து வருகிறது.

      விழுப்புரம்:

      விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக கன மழை பெய்து வருகிறது இதனால் விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டிவனம், வானூர், மற்றும் கோட்டக்குப்பம் ஆரோவில்,ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் கடல் மிகவும் சீற்றமாக காணப்படுகிறது. குறிப்பாக மரக்காணம், கோட்டக்குப்பம், கூனி மேடு, மஞ்சக்குப்பம் பொம்மையார்பாளையம் ஆரோவில், ஆகிய பகுதிகளில் கடல் மிகவும் சீற்றமாக காணப்படுகிறது.

      இதன் காரணமாக மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களது படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். அது மட்டும் அல்லாமல் ஆரோவில் கடற்கரைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு கடற்கரையில் குளிக்க காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

      பராமரிப்பு பணிகள் காரணமாக கும்பக்கரை அருவியில் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
      பெரியகுளம்:

      தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கொடைக்கானல், அடுக்கம் பகுதிகளில் மழை பெய்தால் கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து இருக்கும்.

      இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமில்லாது பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சபரிமலை சீசன் காலத்தில் பக்தர்கள் நீராடி செல்கின்றனர். தற்போது அருவியில் சீரான நீர்வரத்து உள்ளது.

      இருந்தபோதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுழலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டதால் வனத்துறையினர் பராமரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிக ஆழம் உள்ள இடங்கள் பாறைகள் ஆகிய இடங்களில் தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவ்வப்போது சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.

      தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்க்க, குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு பணிகள் நடைபெறும். அதன் பின்னர் அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

      இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

      மாமல்லபுரம், கோவளம் கடலில் குளிக்க நாளை முதல் 17-ந் தேதி வரை போலீசார் தடை விதித்துள்ளனர்.
      மாமல்லபுரம்:

      பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. 17-ந் தேதி காணும் பொங்கலையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களிலும் பயணிகளின் கூட்டம் குவியும் முக்கியமாக கோவளம், திருவிடந்தை, வடநெம்மேலி, பட்டிபுலம், தேவநேரி, மாமல்லபுரம் கடற்கரையில் குவியும் பயணிகள் கடலில் குளிப்பார்கள்.

      கடந்த ஆண்டுகளில் இப்பகுதியில் ராட்சத அலை, புதைமணல்களில் சிக்கி 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க நாளை முதல் 17-ந் தேதி வரை போலீசார் தடை விதித்துள்ளனர்.

      மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே 700 மீட்டர் தூரத்திற்கு சவுக்கு மர தடுப்புகள் கட்டப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பெயரில் மாமல்லபுரம் டி.எஸ்.பி சுப்பாராஜு, இன்ஸ்பெக்டர்கள் சிரஞ்சீவி, ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இன்று முதல் ஈடுபட உள்ளனர்.



      கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
      பெரியகுளம்:

      தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கொடைக்கானலில் மழை பெய்யும் போது கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இந்த அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

      கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மற்றும் பெரியகுளம் மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

      எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். தற்போது காலாண்டு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வந்திருந்தனர். தடைவிதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

      தொடர் மழை காரணமாக கும்பகரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
      கூடலூர்:

      தேனி மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது.

      தென்மேற்கு பருவமழை காரணமாக தேனி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து வரத்தொடங்கி உள்ளது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.90 அடியாக உள்ளது. வரத்து 270 கன அடியாகவும், திறப்பு 52 கன அடியாகவும் உள்ளது.

      வைகை அணையின் நீர்மட்டம் 36.61 அடியாக உள்ளது. வரத்து 6 கன அடியாகவும், திறப்பு 60 கன அடியாகவும் உள்ளது. மஞ்சளாறு நீர்மட்டம் 41 அடி. வரத்து 34 கன அடி. திறப்பு 10 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி வரத்து மற்றும் திறப்பு 3 கன அடி.

      பெரியாறு 3.4, தேக்கடி 2.8, கூடலூர் 1.5, சண்முகாநதி அணை 1, உத்தமபாளையம் 1.2, வீரபாண்டி 18, வைகை அணை 5.4, மஞ்சளாறு 4, மருதாநதி 22, கொடைக்கானல் 28.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

      பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழையால் 26 கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தொடர் மழை காரணமாக கும்பகரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

      தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
      ×