search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Monsoon"

    • 10 அடி உயரம் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்காக ஓடுகிறது.
    • நல்லம்மன் கோவில் முழுவதும் நொய்யல் ஆற்று நீரால் சூழப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்தின், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் உருவாகும் நொய்யல் ஆறு கிழக்கு நோக்கி பேரூர், குனியமுத்தூர், வெள்ளலூர், இருகூர், சூலூர், மங்கலம் கடந்து திருப்பூர், ஒரத்துப்பாளையம் என சுமார் 180 கிலோ மீட்டர் வந்து கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது.

    இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வழக்கத்திற்கு மாறாக 10 அடி உயரம் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்காக ஓடுகிறது.

    இதனால் திருப்பூர் நல்லம்மன் தடுப்பணை நிரம்பி தண்ணீர் கொட்டுகிறது. அணைப்பாளையம் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் மேம்பாலம் வழியாக வாகனங்கள் செல்கிறது.

    ஆனாலும் தரைப்பாலத்தையும் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகிறார்கள். தண்ணீர் அதிகம் செல்வதால் தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் வைத்து போலீசார் வாகன போக்குவரத்தை நிறுத்தி உள்ளனர்.

    நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஈஸ்வரன் கோவில் வீதியில் பாலத்துக்காக அமைக்கப்பட்ட கான்கிரீட் தூண்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகம் பாய்வதால் நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள மக்களிடம் பாதுகாப்பாக இருக்குமாறு, வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர் மங்கலம் அருகே நொய்யல் ஆற்றில் நல்ல ம்மன் கோவில் உள்ளது. நல்லம்மண் தடுப்பணை கட்டும்போது ஏற்பட்ட இடையூறு காரணமாக தன் உயிரை தியாகம் செய்ததால் நல்லம்மன் என்ற சிறுமிக்கு அங்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கோவில் பலருக்கும் குலதெய்வ கோவிலாக இருந்து வருகிறது. இந்தநிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக நல்லம்மன் கோவில் முழுவதும் நொய்யல் ஆற்று நீரால் சூழப்பட்டுள்ளது.

    இதனால் கோவிலுக்கு செல்லும் பாதை தடைபட்டதால் கோவிலுக்கு பக்தர்கள் செல்வது தடைபட்டுள்ளது. மேலும் திருப்பூரில் பெய்து வரும் சாரல் மழையால் குளு, குளு சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • மழை பெய்து வருவதால் ரம்யமான சூழல் நிலவுகிறது.
    • ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைய தொடங்கியுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடித்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் இரவு முழுவதும் இதமான குளிர் காற்று வீசியது. திற்பரப்பு அருவி பகுதியிலும் மழை பெய்து வருவதால் ரம்யமான சூழல் நிலவுகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மழை கொட்டி தீர்த்து வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

    அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் கோதை ஆறு, குழித்துறை ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறையத் தொடங்கியுள்ளது.

    திற்பரப்பு அருவியில் கடந்த 2 நாட்களாக குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்றும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 3-வது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.82 அடியாக உள்ளது. அணைக்கு 1061 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 582 கன அடி தண்ணீர் மதகு வழியாகவும், 256 கன அடி தண்ணீர் உபரி நீராகவும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.15 அடியாக உள்ளது. அணைக்கு 696 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து 460 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 15.43 அடியாக உள்ளது. அணைக்கு 163 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. நாகர்கோவில் நகரில் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு சூறைக்காற்று வீசியதால் மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் பரித விப்பிற்கு ஆளானார்கள்.

    • சில நாட்களாகவே மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • பலர் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாரல் மழையும் பெய்கிறது. இந்த பருவ நிலை மாற்றம் காரணமாக சென்னையில் வசிக்கும் பலர் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதையடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    வழக்கமாக மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளை விட தற்போது 2 மடங்கு நோயாளிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையில் சமீபகாலமாகவே பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் பலத்த மழையும் பெய்கிறது. இதனால் பொதுமக்கள் பலர் சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், தனியார் கிளீனிக்குகள் போன்றவற்றில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பருவ நிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் காரணமாக சென்னை முழுவதுமே காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    வெளியில் உணவு வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதன்மூலம் பருவநிலை காரணமாக பரவும் காய்ச்சல் பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.
    • வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்தது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.

    அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால் இன்று காலையில் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் குடை பிடித்த வாறு பள்ளிக்கு சென்றனர். தொடர்ந்து மழை பெய்த தால் அரசு மற்றும் தனியார் அலுவலகத்திற்கு சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இருசக்கர வாகனங்களில் நனைந்தவாறு அலுவலகங்களுக்கு சென்றனர்.

    கன்னிமார், கொட்டாரம், மயிலாடி, நாகர்கோவில், பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை, சுருளோடு, முள்ளாங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலையிலும் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசி வருகிறது.

    மலையோரப்பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது.

    பாலமோரில் அதிகபட்சமாக 28.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக ரம்யமான சூழல் நிலவுகிறது.

    அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருவதால் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.76 அடியாக இருந்தது.

    அணைக்கு 475 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 481 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.22 அடியாக உள்ளது. அணைக்கு 401 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 360 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 15.25 அடியாகவும், சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 15.35 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 15.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 47.82 அடியாகவும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 22.20 அடியாக உள்ளது.

    • காய்ச்சல் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.
    • டெங்கு காய்ச்சலுக்கு 225 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்குவதற்கு முன்னதாகவே டெங்கு, மலேரியா, பன்றி மற்றும் எலிக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவத்தொடங்கின.

    தற்போது பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.

    தினமும் ஆயிரக்கணக்கானோர் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். நேற்று ஒரே நாளில் காய்ச்சல் பாதித்த 13 ஆயிரத்து 756 பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என்று கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. டெங்கு காய்ச்சலுக்கு மாநிலம் முழுவதும் 225 பேர் பாதிக்கப் பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கேரளாவில் வழக்கமான காய்ச்சல்கள் மட்டுமின்றி மேற்கு நைல் உள்ளிட்ட அரியவகை காய்ச்சல்களும் பரவியுள்ளது. மேலும் மூளையை திண்ணும் அமீபா தொற்று நோயான அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பும் அங்கு இருந்து வருகிறது.

    தேங்கிக்கிடக்கும் அசுத்தமான தண்ணீரில் குளிப்பதன் மூலமாக அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று மூக்கு மற்றும் காதுமடல் வழியாக பாதிக்கிறது.

    அமீபிக் மூளைக்காய்ச்ச லுக்கு கோழிக்கோட்டை சேர்ந்த 12 வயது சிறுவன், மலப்புரத்தை சேர்ந்த 5 வயது சிறுவன், கண்ணூரை சேர்ந்த 13 வயது சிறுமி என 3 சிறுவர்கள் பலியாகி விட்டதால் மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

    மாநிலத்தில் 3 பேருக்கு மட்டுமே அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் மேலும் ஒரு சிறுவன் பாதிக்கப்பட்டான்.

    அவன் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்ற வரும் நிலையில், மேலும் ஒரு சிறுவனுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. திருச்சூர் மாவட்டம் படூர் பகுதியை சேர்ந்த அந்த சிறுவனுக்கு 12 வயது ஆகிறது.

    கடந்த மாதம் காய்ச்சலுக்கு ஆரம்ப சுகாதார நிலையததில் சிகச்சை பெற்ற வந்த அந்த சிறுவன், தற்போது திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.

    புதுச்சேரியில் உள்ள ஆய்வு மையத்தில் செய்யப்பட்ட பரிசோதனையில் அமீபிக் மூளைக் காய்ச்சல் தொற்று பாதிப்பு அந்த சிறுவனுக்கு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சிறு வனையும் சேர்த்து கேரளா மாநிலத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று பாதிப்பு 5 ஆக உயர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பருவ கால முடி உதிர்தல் டெலோஜென் எப்லூவியம் என்றும் அழைக்கப்படுகிறது.
    • பருவ கால மாறுபாட்டின்போது வெப்பம் அதிகமாக வெளிப்படும்.

    கோடை காலம் முடிவடைந்து நாட்டின் பல பகுதிகளில் பருவ மழை காலம் தொடங்கி இருக்கும் நிலையில் கால நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தால் பெண்கள் பலர் முடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொள்வார்கள்.

    இத்தகைய பருவ கால முடி உதிர்தல் டெலோஜென் எப்லூவியம் என்றும் அழைக்கப்படுகிறது. வானிலையில் ஏற்படும் மாற்றமும், மாறும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப உடலில் ஏற்படும் மாற்றமும் முடி உதிர்தலுக்கு வித்திடும்.

    பொதுவாகவே குறிப்பிட்ட அளவு முடி உதிர்வது இயல்பானது. முடி வளர்ச்சி அடைவதற்காக இயற்கையாக நடைபெறும் சுழற்சியின் ஒரு அங்கமாக முடி உதிரும். ஆனால் அதிகம் முடி உதிர்வது பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.

    பருவ கால முடி உதிர்வுக்கான காரணங்கள்

    ஈரப்பதம்

    ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள் உச்சந்தலையின் ஈரப்பத சமநிலையை பாதிக்கலாம். முடி வறட்சி அடையவோ அல்லது அதிகப்படியான எண்ணெய் உற்பத்திக்கோ வழிவகுக்கலாம். இவை இரண்டுமே முடி உதிர்தலுக்கு முக்கிய பங்கு வகிக்கும்.

    சூரிய ஒளி

    தலை முடியில் சூரிய கதிர்வீச்சு அதிகம் படும்போது முடியின் மயிர்கால்கள் சேதமடையக்கூடும். முடி உடைவதற்கும் காரணமாகிவிடும்.

    வெப்பநிலை மாற்றம்

    பருவ கால மாறுபாட்டின்போது சில சமயங்களில் வெப்பம் அதிகமாக வெளிப்படும். சில சமயங்களில் மேகக்கூட்டங்கள் ஒன்று திரண்டு மந்தமான காலநிலையை ஏற்படுத்தும். வெப்பநிலையில் ஏற்படும் இந்த திடீர் மாற்றங்கள் உச்சந்தலை முடிக்கு அழுத்தம் கொடுக்கலாம். இதுவும் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.

    தடுக்கும் வழிகள்

    * தலைமுடி, கெரட்டின் என்னும் ஒரு வகை புரதத்தால் ஆனது. பால், பன்னீர், தயிர், முட்டை, கோழிக்கறி, மீன், சோயா மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றில் போதுமான அளவு புரதங்கள் உள்ளன. அவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

    * உண்ணும் உணவில் போதுமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவையும் முடி வளர்ச்சிக்கும், முடி வலிமைக்கும் உதவிடும். கொழுப்பு நிறைந்த மீன், செறிவூட்டப்பட்ட பால் பொருட்கள் மற்றும் சூரிய ஒளி போன்றவற்றில் வைட்டமின் டி நிரம்பியுள்ளது.

    முட்டை, நட்ஸ் வகைகள், முழு தானியங்களில் வைட்டமின் பி காணப்படுகிறது. இறைச்சிகள், கீரைகள், பருப்பு வகைகளில் இரும்புச்சத்து உள்ளடங்கி இருக்கிறது. நட்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் துத்தநாகம் உள்ளடங்கி இருக்கிறது. இவைகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் கூந்தல் நலனை மேம்படுத்தலாம்.

    * தலைமுடி மற்றும் உச்சந்தலையை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.

    * ஷாம்பு பயன்படுத்துவது கூந்தலை பாதுகாக்கும் இயற்கை எண்ணெய்கள் உச்சந்தலையில் இருந்து நீங்க வழிவகுக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் முடி வகைக்கு ஏற்ற மென்மையான ஷாம்புவை பயன்படுத்த வேண்டும். நீண்ட நேரம் தலைமுடியை அலசுவதை தவிர்க்க வேண்டும். முடி வறட்சி அடைவதற்கும், முடி உடைவதற்கும் அது வழிவகுக்கும்.

    * ஒவ்வொரு முறை தலைக்கு குளித்த பிறகும் கண்டிஷனரை பயன்படுத்துங்கள். இதனால் தலைமுடியை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், முடி உடைவதை குறைக்கவும் முடியும்.

    * உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தைத் தூண்டுவதற்கும், மயிர்க்கால்களை மேம்படுத்துவதற்கும் தலையில் தவறாமல் மசாஜ் செய்ய வேண்டும்.

    * உச்சந்தலையில் படிந்திருக்கும் இறந்த சரும செல்களை நீக்குவதும் முடி வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உண்டாக்கும்.

    * சூரிய வெப்பத்தில் இருந்து தலை முடியை பாதுகாக்க, தொப்பி அணியலாம்.

    * நீச்சல் குளம் மற்றும் கடலில் குளித்தால் உடனே நல்ல தண்ணீரில் தலைமுடியை அலசிவிட வேண்டும்.

    • மேற்கு வங்க மாநிலத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் மால்டா மாவட்டத்தில் இன்று (மே 16) மாலை மின்னல் தாக்கியதில் மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துக்ள்ளனர்.
    • இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை உயிரிழந்த 11 பேரில் 3 பேர் குழந்தைகள் ஆவர்.

    மேற்கு வங்க மாநிலத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் மால்டா மாவட்டத்தில் இன்று (மே 16) மாலை மின்னல் தாக்கியதில் மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துக்ள்ளனர்.

    இன்று மதியம் முதல் மால்டா பகுதிகளில் கடுமையான இடி மின்னலுடன் மழை பெய்து வரும் நிலையில் மின்னல் தாக்கி மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை உயிரிழந்த 11 பேரில் 3 பேர் குழந்தைகள் ஆவர்.

     

    நகர் பகுதியைக் காட்டிலும் அம்மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சோபாநகர் கிராமப்பகுதியில் நெல் அறுவடைப் பணிகளை முடித்துவிட்டு மரத்தின் அடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

     

    இதுபோன்று பல்வேறு பகுதிகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கையை மாவட்ட நிர்வாகம் கணக்கிட்டு வருகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் மால்டா அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

    • பத்து நாட்களில் பருவக்காற்றுக்கு முந்திய மழை பெய்யும்.
    • வழக்கத்தை விட அதிகளவு மழை பெய்யக்கூடும்.

    கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அரபிக் கடலில் தென்மேற்கு பருவக்காற்று வீச தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இன்னும் பத்து நாட்களில் பருவக்காற்றுக்கு முன்னரே மழை பெய்யத்துவங்கும்.

    இதனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்க வாய்ப்புள்ளாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகளவில் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

    கடந்த ஆண்டு அரபிக் கடலில் நிலவிய காற்று சுழற்சி காரணமாக பருவமழை தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

    • நேற்று அரைமணிநேரம் கோடை மழை கொட்டித்தீர்த்தது.
    • பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் வழக்கமாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை (700மி.மி), அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை (300 மி.மி), ஏப்ரல்-மே மாதங்களில் கோடை மழை (250 மி.மி) வீதம் பெய்யும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.

    மேலும் அக்னி நட்சத்தி ரம் தொடங்குவதற்கு முன்பாகவே நீலகிரி பகுதியில் வழக்கத்தைவிட அதிகமாக, சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதால் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வந்தனர்.

    இதற்கிடையே ஏப்ரல் முதல் வாரத்தில் நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று அரைமணிநேரம் கோடை மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் ஆறாக வழிந்தோடியது.

    மேலும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. நீலகிரியில் வெளுத்து வாங்கிய கோடை மழையால் அங்கு நீண்ட நாட்களாக நீடித்து வந்த அனல் வெப்பம் தணிந்து தற்போது மீண்டும் குளுகுளு காலநிலை திரும்பி உள்ளது. இதனால் அங்கு சுற்றுலா வந்திருந்த பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    மேலும் அவர்கள் கொட்டும் மழைக்கு மத்தி யில் பூங்காவில் குழந்தை களுடன் சேர்ந்து விளையாடி யதை காண முடிந்தது. ஊட்டி பகுதியில் நேற்று பகல் நேரத்தில் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், காற்றில் 73 சதவீதம் ஈரப்பதமும் நிலவியது.

    கேரளா, கர்நாடகா, தமிழகம் ஆகிய 3 மாநில ங்கள் இணையும் கூடலூர், மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த கோடை மழையால் அங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அனல் வெயில்-புழுக்க த்தால் தவித்துவந்த மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். மேலும் கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் ஆகியோரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    • இனி வரும் நாட்களில் மாங்காய் வரத்து படிப்படியாக அதிகரித்து மார்ச் மாத இறுதியில் அதிக அளவில் மாங்காய்கள் வரத்து இருக்கும்
    • பூக்கள் குறைவாகவே பூத்துள்ளது. இதனால் மாம்பழ வரத்து கடந்த ஆண்டை விட குறைவாகவே இருக்கும்.

    சேலம்:

    சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது தித்திக்கும் சுவையுடய மாம்பழங்கள் தான், அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உற்பத்தி யாகும் மாம்ப ழங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.

    குறிப்பாக சேலம் மாவ ட்டத்தில் வாழப்பாடி, ஆத்தூர், குப்பனூர், காரிப்பட்டி அயோத்தியாப்பட்டனம், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, எடப்பாடி பகுதிகளில் அதிக அளவில் மாமரங்கள் உள்ளன. இந்த மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படும்,

    மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கு விளையும் மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு என்பதால் உலகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் அதனை போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.

    சேலம் மார்க்கெட்டுகளுக்கு வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில் மாம்பழ சீசன் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை மாம்பழங்கள் வரத்து இருக்கும், இந்தாண்டு பருவம் தவறிய மழை பெய்ததால் மாம்பழம் வரத்து 20 நாட்கள் காலதாமதமாகி உள்ளது.

    தற்போது தான் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழ வரத்து தொடங்கி உள்ளது. குறிப்பாக இமாம்பசந்த், சேலம்-பெங்களூரா, சேலம் குண்டு, கிளிமூக்கு பழங்கள் மா ர்க்கெட்டுகளுக்கு வரதொடங்கி உள்ளன. தற்போது நாள் ஒன்றுக்கு 2 டன் வரை மாங்காய்கள் சேலம் மார்க்கெட்களுக்கு வரத்தொடங்கி உள்ளது. இனி வரும் நாட்களில் மாங்காய் வரத்து படிப்படியாக அதிகரித்து மார்ச் மாத இறுதியில் அதிக அளவில் மாங்காய்கள் வரத்து இருக்கும், அப்போது குறிப்பாக சேலம் சின்ன கடை வீதி, பெரிய கடை வீதி, ஏற்காடு ரோடு, செவ்வாய்ப்பேட்டை, கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை உள்பட பல பகுதி களில் மாம்பழங்கள் கடைகளிலும் தள்ளுவண்டிகளிலும் வைத்து விற்கப்படும். இதனால் எங்கு பார்த்தலும் மாம்பழ மனம் வீசும்.

    தற்போது கடை வீதி மற்றும் சேலத்தில் உள்ள மார்க்கெட்டுகள், உழவர் சந்தைகள், பழக்கடைகள், தள்ளுவண்டி கடைகளில் மாங்காய்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த மாம்பழங்கள் ஒரு கிலோ 100 முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. இனி வரும் நாட்களில் மாம்பழ வரத்து படிப்படியாக அதிகரிக்கும்.

    இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், நடப்பாண்டில் காலம் கடந்து பெய்த மழையால் 20 நாட்கள் காலதாமதமாக மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது. இன்னும் 20 நாட்களில் மாம்பழ சீசன் உச்சம் பெறும். ஆனாலும் வழக்கத்தை விட இந்தாண்டு மாந்தளிர் தான் அதிகம் உள்ளது. பூக்கள் குறைவாகவே பூத்துள்ளது. இதனால் மாம்பழ வரத்து கடந்த ஆண்டை விட குறைவாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதமான தற்போதே வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • மழை பெய்யாவிட்டால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட நடப்பாண்டில் 6 சதவீதம் அளவுக்கு குறைவாக பெய்திருந்தது. இதனால் தற்போதே மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டு வருகின்றன. இதனால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சேலம் மாவட்டத்தில் வழக்கமாக மார்ச் மாதம் 15-ந் தேதிக்கு மேல் கோடை வெயில் அதிக அளவில் இருக்கும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயில் உச்சத்தை அடையும், அப்போது மதிய நேரங்களில் அனல் பறக்கும், இதனால் பொது மக்கள் சாலைகளில் நடமாட்டம் குறைந்து வீட்டில் முடங்குவார்கள்.

    ஆனால் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதமான தற்போதே வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக சேலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக சேலத்தில் 96.8 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. படிப்படியாக வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து வருகிறது.

    இதனால் பொது மக்கள் குடை பிடித்த படியும், துணிகளால் முகத்தை மூடிய படியும் செல்கிறார்கள். இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். நேற்று வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. மாலை 5.30 மணி வரை வெயில் வாட்டி வதைத்ததால் பொது மக்கள் வீடுகளில் முடங்கினர்.

    வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கம்பங்கூழ், மோர், தர்பூசனி, இளநீர் மற்றும் குளிர்பானங்களை வாங்கி பருகி பொது மக்கள் வெப்பத்தை தணித்து வருகிறார்கள். இதனால் குளிர்பான கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது.

    சேலம் சத்திரம் உள்பட பல பகுதிகளில் திண்டிவனம் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் தர்பூசனி பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்களும், வியாபாரிகளும் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.

    இது குறித்து வானிலை அதிகாரிகளிடம் கேட்ட போது, வழக்கத்தை விட இந்தாண்டு முன்கூட்டியே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தற்போது பனிப்பொழிவு இருப்பதால் சற்று வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தாலும் இனி வரும் நாட்களில் வெயிலின் உக்கிரம் மேலும் அதிகரிக்கும், மழை வந்தால் மட்டுமே வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. மழை பெய்யாவிட்டால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிகனமழையிலும் தண்டவாள பராமரிப்பு பணியை ஊழியர்கள் மேற்கொண்டனர்
    • செல்வகுமார் உரிய நேரத்தில் தகவல் தந்ததால் ஸ்ரீவைகுண்டத்தில் ரெயில் நிறுத்தப்பட்டது

    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழை பெரும் சேதத்தை விளைவித்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 17, 18 அன்று அதிகனமழை பெய்தது. ரெயில் தண்டவாளங்களில் நீர் நிரம்பி ஓடியதால் ரெயில் போக்குவரத்து முற்றிலுமாக செயலிழந்தது.

    ஆனால் அதிகனமழையிலும் இருப்பு பாதையின் பராமரிப்பை தண்டவாள பராமரிப்பு ஊழியர்கள் ஆய்வு செய்து வந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மண் அரிப்பினால் ரெயில் தண்டவாளம் சேதம் அடைந்தது. இதனை கண்ட தண்டவாள பராமரிப்பாளர் உரிய நேரத்தில் தகவல் அளித்ததால் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.

    அந்த ரெயிலில் சுமார் 800க்கும் மேற்பட்ட பயணிகள் வெவ்வேறு இடங்களில் இறங்கும் நோக்கில் பயணித்து வந்தனர்.

    துரிதமாக செயல்பட்டு தனது கடமையை சிறப்பாக செய்து 800 உயிர்களை காப்பாற்றிய பராமரிப்பாளர் செல்வகுமாரை ரெயில்வே நிர்வாகம் பாராட்டி உள்ளது.

    அத்துடன் அவருக்கு ரூ.5000 கவுரவ பரிசாகவும் ரெயில்வே துறை அளித்துள்ளது.

    செல்வகுமாரை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வரும் வேளையில், 800 உயிர்களை காப்பாற்றியவருக்கு வெறும் ரூ.5000 என்பது ஒரு உயிரின் மதிப்பு ரூ.6.25 என்பது போல் உள்ளதாக விமர்சித்து, செல்வகுமார் ஆற்றிய நற்செயலுக்கு உரிய சன்மானம் வழங்க வேண்டியது ரெயில்வே துறையின் கடமை எனவும் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    ×